Saturday 17 October 2015

தமிழ் சினிமா கதாநாயகர்கள் சிறுவர்களிடையே புகைத்தலை தூண்டுகிறார்களா?

தென்னிந்தியாவிலிருந்து வரும் திரைப்படங்கள் மூலம் இலங்கையில் தமிழ் சிறார்கள் மத்தியில் புகைத்தல் பழக்கம் தூண்டப்படுவதாக அடிக் என்ற மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தன்னார்வ தொண்டுநிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.
 
 
தமிழ்த் திரைப்பட கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும் காட்சிகளால் தூண்டப்பட்டு பல சிறார்கள் முதலில் புகைக்கத் துவங்கியதாக கூறியிருந்ததை மேற்கோள்காட்டியே அந்த நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது.
 
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தங்களின் போதைப் பழக்கத்தை சிகரெட்டிலிருந்தே ஆரம்பிப்பதாகவும் அடிக் நிறுவனம் தெரிவித்திருந்தது.
 
பெரும்பாலானவர்கள் தங்களின் சிகரெட் பழக்கத்தை அவர்களின் பதின்ம பருவத்திலேயே துவங்குவதாக அடிக் நிறுவனத்தின் பணிகளில் பங்கெடுத்திருந்த உளவியல் மருத்துவர் எம். கணேஷன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
உதாரண புருஷர்களை பின்பற்றுகின்ற வழக்கம் சிறார்கள் மத்தியில் இருப்பதால், சினிமா கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும்போது அவர்களை பின்பற்ற நினைக்கும் சிறார்களும் புகைத்தலுக்கு தூண்டப்படுகிறார்கள் என்றும் மருத்துவர் கணேஷன் தெரிவித்தார்.
 
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சிகரெட்டுக்கு விளம்பரம் செய்யமுடியாத நிலை இருப்பதால் சிகரெட் நிறுவனங்கள் புகைத்தல் காட்சிகளை ஊக்குவிப்பதற்காக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் கணேஷன் குற்றம்சாட்டினார்.
 
நேரடி விளம்பரம் இல்லாமல் பொருளை காட்சிப்படுத்துவதன் மூலம் மறைமுக விளம்பரம் செய்யும் முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இதனிடையே, ஆசியாவில் புகைத்தல் பழக்கம் குறைந்து வரும் ஒரே நாடு இலங்கை தான் என்று கூறிய மருத்துவர் கணேஷன், ஆனால் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புகைத்தல் பழக்கம் அதிகரித்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.

ஆதரவு கேட்கப் போய் சேதாரமானவர்கள்

பாம்புக்கு தலையும், தவளைக்கு வாலும் ஒரே நேரத்தில் டிஸ்பிளே செய்தால் மட்டுமே இந்த கலியுகத்தில் பிடித்து நிற்க முடியும்.

அதுவும் டாப்பில் இருப்பவர்களின் நிலைமை, கொஞ்சம் பேலன்ஸ் தவறினாலும் தொபுக்கடீர்தான். 
 
உச்சத்தின் ஆதரவு கிடைத்தால் மிச்சத்தை நாமே பார்த்துக் கொள்ளலாம் என நடிகர்களின் இரு அணிகளும் கணக்குப் போட்டு அவரை சந்தித்தன. போட்டிபோட்டு உச்சத்துக்கு சொந்தமான மண்டபத்தில் கூட்டத்தையும் நடத்தினர்.
 
இலவசமாக இடம் கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு, லட்சங்களில் வந்த பில் கரண்டை கையில் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. அட, டிஸ்கவுண்ட்கூட தரலையாம் உச்சம்.
 
மாங்காய்னு நினைச்சு தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதைதான்.

Monday 12 October 2015

தெலுங்கு திரையுலகத்தை அதிரவைத்த அனிருத்!

தனுஷ் நடிப்பில் 3  படத்தின் ஓய் திஸ் கொலவெறிடி பாடலின் மூலம் உலகளவில் முதல் படத்திலேயே ஹிட் கொடுத்து தமிழில் முன்னனி இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதை தொடர்ந்து தெலுங்குத் திரையுலகில் கால் பதிக்கவிருக்கிறார் அனிருத். தெலுங்கில் தேவிஸ்ரீபிரசாத், தமன் இருவரின் பாடல்களே ஹிட் அடிக்கும் நிலையில் இவர்கலுக்கு போட்டியாக கலத்தில் குதிக்கிரார் அனிருத்.



ஒவொவ்வொரு முரயும் தேவிஸ்ரீ பிரசாத்துடன் கை கோர்க்கும் இயக்குநர் த்ரிவிக்ரம் இந்த முறை அனிருத்தை அவர் படத்திற்கு ஓகே செய்திருக்கிறார். நிதின், சமந்தா நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு அ… ஆ… ( அனுஷ்யா ராமலிங்கம் VS ஆனந்த் விகாரி ) என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு 1.5 கோடி சம்பளம் அனிருத்திற்குத் தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கில் இதுவரை இசையமைத்த தமன் 60 முதல் 80 லட்சம் வரையிலும், தேவி ஸ்ரீபிரசாத் 1கோடி வரையிலுமே சம்பளம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முலம் தெலுங்குப் பட உலகில் அனிருத் அனைவருக்கும் போட்டியாக இருப்பார் என்று தெலுங்கு வட்டாரம் கிசுகிசுக்கிறது.

மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1943ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.



குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது. நடிப்பு, பாட்டு, வசன உச்சரிப்பு, நடனம் என்று அனைத்திற்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.

வைரம் நாடக சபா உள்ளிட்ட தொழில்முறை நாடக நிறுவனங்கள் பலவற்றில் நடித்துக்கொண்டிருந்த மனோரமாவை மேடை நாடகக் கலைஞராக பெரிய அளவில் அடையாளம் காட்டியது திராவிட இயக்கத்தின் பிரச்சார நாடகங்கள்தான்.

திமுக நிறுவனர் அண்ணா, மு. கருணாநிதி, எஸ் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி திராவிட இயக்கத்தலைவர்களுடன் அவர் மேடை நாடகங்களில் நடித்தார். அவரது தெளிவான வசன உச்சரிப்பும், உச்சஸ்தாயியில் அநாயாசமாக பாடும் வல்லமையும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன.

மாலையிட்ட மங்கையாக திரைப்படத்துறைக்குள் வந்தார்
நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவியரசு கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958 ஆம் அண்டு வெளியான “மாலையிட்ட மங்கை” என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.

மனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் “கொஞ்சும் குமரி”. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம்.

அதேசமயம் மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முதல் திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள் படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.

அந்த திரைப்படத்தின் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாரமணி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார் மனோரமா.

ஜில் ஜில் ரமாமணியாக சிரிக்கவைத்தார்

ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாக மனோரமா புகழ் பதித்த பல திரையுலக பாத்திரங்களில் முக்கியமானதாக இன்றுவரை பேசப்படுகிறது.

அரை நூற்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகின் கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருக்கு ஈடுகொடுத்து நடித்து புகழ் பெற்றவர் மனோரமா.

அவர் திரைத்துறையில் அறிமுகமானபோது தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் துவங்கி கமல், ரஜினி படங்களில் அவர்களுக்கு போட்டி போட்டு நடித்தவர், நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், கவுண்டமணி எனப் பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தவர், பாக்கியராஜ், சத்யராஜ் என்று பலதரப்பட்ட நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்

மனோரமா.நகைச்சுவையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் மனோரமாவின் நடிப்பு முத்திரை பதித்தது. தனித்துவம் வாய்ந்தது.

நகைச்சுவைக்கு மட்டுமல்ல நவரசங்களுக்கும் நாயகி என பாராட்டப்பட்டார்
நகைச்சுவை நடிப்போடு அவரது தனித்துவமான குரலில் பாடிய பாடல்களும் இன்றளவும் நினைவில் நிற்கின்றன. மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். மகளே உன் சமத்து என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.

பொம்மலாட்டம் படத்தில் வி.குமாரின் இசையில் ‘வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டேன்” என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல்; கருந்தேள் கண்ணாயிரம் படத்தில், ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே..” என்று அவர் பாடிய பாடல்; பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே‘ என்ற பாடல்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், ‘மெட்ராஸை சுத்திப்பார்க்கப் போறேன்‘ என்கிற பாடல் என மனோரமாவின் கம்பீரமான குரலில் ஒலித்தபாடல்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றன.

ஆயிரம் படங்களைத்தாண்டிய ஆச்சி

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா. அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு அதிகம். உலகின் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நாடகங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தியவர் அவர்.

பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளுடன் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான இந்திய தேசிய விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.

தமிழ் திரைப்படத்துறையில் கலைவாணரில் தொடங்கி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு.

ஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை. நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

ஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். அரை நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக அசைக்கமுடியாத நடிகையாக தமிழ்த் திரையுலகில் நிலைத்திருந்தவர் ஆச்சி என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா. அவரின் புகழ் அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

Sunday 4 October 2015

விமர்சனங்களையும் மீறி வசூலைக்குவிக்கும் புலி

தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சரித்திர காலத் திரைப்படமாக வெளிவந்துள்ள படம் ‘புலி’. படம் வெளிவந்த நாள் முதல் இப்படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருந்தது.



இருந்தாலும் அதையெல்லாம் மீறி கடந்த மூன்று நாட்களாக படம் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் தெரிவிக்கிறார்கள்.

சினிமா பார்க்க வருபவர்களிள் குறைந்த சதவிகிதத்தினரே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். தியேட்டர்களுக்கு அதிகமாக வந்து படம் பார்ப்பவர்கள் சாதாரண ரசிகர்களே என பிரபல வினியோகஸ்தர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முந்தைய விஜய் படங்கள் அளவிற்கு இந்தப்படம் ஆக்ஷன் படமாக இல்லையென்றாலும் கடந்த மூன்று நாட்களில் சராசரியாக சுமார் 30 கோடி முதல் 35 கோடி வரை வசூலித்திருக்கும் என்கிறார்கள்.

தமிழ்நாடு தவிர கர்நாடகா, கேரளாவில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை விட கொஞ்சம் குறைவாக வசூலானாலும் மோசமான வசூல் இல்லை என்றே சொல்கிறார்கள்.

அமெரிக்காவிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.

விமர்சனங்களையும் மீறி படம் வசூலைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்ற பேச்சு தான் கோலிவுட்டில் அடிபட்டு வருகிறது. தெலுங்கில் ஒரு நாள் தள்ளி வெளியானதால் வசூல் குறைவாக உள்ளதாம். இருந்தாலும் ‘விஷுவல் ட்ரீட்’டாக இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ளது என்ற பாராட்டு எழுந்துள்ளது.

இருந்தாலும் படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இன்னும் பிரமாதமான ஒரு படத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் மீது தான் பலரின் விமர்சனம் உள்ளது. இன்றுடன் படம் எப்படியும் 50 கோடியைத் தொட வாய்ப்புள்ளதாகவே திரையுல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.