Saturday 26 September 2020

பன்முகத் திறன் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியன் பற்றிய சில முக்கிய தகவல்கள்...

 1.ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம் தந்தை இசைக்கலைஞர். காலஹஸ்தி பள்ளியில் எஸ்எஸ்எல்சியும் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யூ.சி முடித்தார். பாலசுப்பிரமணியம் தனது இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.




2.தெலுங்கு சங்கம் நடத்திய பாட்டுப்போட்டி 3 ஆண்டுகள் முதல் பரிசு வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் பாலசுப்பிரமணியம் முதல் பரிசைப் பெற மூன்றாம் ஆண்டு வெற்றி பெற்றால் வெள்ளிக் கோப்பை கொடுக்க வேண்டி வரும் என வேண்டுமென்றே இரண்டாவது பரிசை அறிவித்தனர். ஆனால் அப்போட்டியில் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகியான எஸ் ஜானகி பாலசுப்பிரமணியம் தான் அனைவரையும் விட நன்றாகப் பாடினார் என வாதாடி முதல் பரிசைப் பெற்றுக் கொடுத்தார்.

3.சென்னை பொறியியல் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்காததால் தொழில் கல்வியை பயின்றார். 1966ஆம் ஆண்டு கோதண்டபாணி இசைத்த தெலுங்கு படத்தில் பாலசுப்ரமணியம் முதன்முதலாக பாடினார். அதனைத் தொடர்ந்து பல பாடல்களை அவர் பாடத் தொடங்கினார்.

4.தமிழில் இவர் முதன்முதலாக பாடல் பாடியது சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் தான். ஆனால் அத்திரைப்படம் வெளிவரும் முன்னரே எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த அடிமைப்பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளி வந்துவிட்டது.


5.ஏராளமான வாய்ப்புகள் குவிய இளையராஜா, எம் எஸ் விஸ்வநாதன், யுவன்சங்கர், எஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.




6.கர்நாடக இசையை முறையாக பயிலாத பாலசுப்பிரமணியம் சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களை மிகவும் சிறந்த முறையில் பாடி உலகம் முழுவதிலும் பிரபலமானவர் ஆனார் அத்திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.


7.தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் எந்த மொழியில் பாடல் பாடினாலும் இயல்பான உச்சரிப்புடன் பாடுவதே இவரது சிறப்பு அம்சம்.

8.40 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக பாடி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்தவர். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்றவர்.

9.கர்நாடக தமிழக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கியவர்.





10.1981 ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்த ரெக்கார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 21 கன்னட பாடல்களை இசையமைப்பாளர் உபேந்திர குமார் என்பவருக்காக பாடி சாதனை புரிந்தார். 19 பாடல்களை தமிழில் ஒரே நாளில் பாடிய சாதனையும் இவருக்கு உண்டு. ஆறு மணி நேரத்தில் 16 ஹிந்தி பாடல்களை பாடியவர் இவர்.

11.ரஜினி கமல் பாக்யராஜ் உட்பட பலருக்கும் பல மொழி படங்களில் பின்னணி குரல் கொடுத்தவர் பாலசுப்ரமணியம்.





12.தென்னிந்திய மொழிகளில் 70க்கும் அதிகமான படங்களில் தனது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளார் கன்னடம் தெலுங்கு தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் 45க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

13.நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை சேரும். 


திரையுலகம் முதல் இசை ரசிகர்கள் வரை அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துவிட்டு, தற்போது மீளா துயில் கொண்டிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவரைப் பலரும் அறியாத 5 தகவல்களை தற்போது பார்க்கலாம்..

அந்த 5 தகவல்கள் :-

1. ரஜினியின் துடிக்கும் கரங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் எஸ்.பி.பி.

2. இசையில் மட்டுமில்லாது, கிரிக்கெட்டிலும் எஸ்.பி.பி-க்கு மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இதன்காரணமாக, சச்சின் தான் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை, எஸ்.பி.பி-க்கு பரிசளித்திருக்கிறார்.

3. இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் முதல் மரியாதை. இந்த படத்தில், சிவாஜிக்கு பதில் நடிக்க வேண்டியவர் எஸ்.பி.பி தான். கால்ஷீட் பிரச்சனை காரணமாக, நடிக்க முடியாமல் போனது.

4. பாடுவதில் மட்டும் தான் SPB வல்லவர் என்று அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், புல்லாங்குழல் வாசிப்பதிலும், ஓவியம் வரைவதிலும் மிகுந்த திறமைக்கொண்டவர் எஸ்.பி.பி.

5. எஸ்.பி.பியின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்பம் முதல் இன்றுவரை அவருடன் இருக்கிறார். எஸ்.பி.பியின் கால்ஷீட், உணவு, உடல்நலம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பார்த்துக்கொள்பவர் அவர் தான்.

உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகளை நடத்திய எஸ்.பி.பி, ரஷ்யாவில் மட்டும் தான் ஒரு முறை கூட கச்சேரியை நடத்தவில்லை..


சுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..

ஆரம்பத்தில் எஸ்.பி.பி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டுமே பாடல்களை பாடி வந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான், எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது…

எம்.ஜி.ஆர் படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்காக, ஸ்டுடியோ ஒன்றில் எஸ்.பி.பி பாடிக்கொண்டு இருந்தார். அப்போது, எஸ்.பி.பியின் குரலைக் கேட்ட எம்.ஜி.ஆர், தனது அடுத்த படத்தில் எஸ்.பி.பி பாட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

இதையடுத்து, எஸ்.பி.பி பற்றி இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். பிறகு எஸ்.பி.பி வீட்டிற்கு சென்ற கே.வி. மகாதேவன், சின்னவர் ( எம்.ஜி.ஆர்) தனது படத்தில் நீங்கள் பாட வேண்டும் என விரும்புகிறார் என்று கூறியிருக்கிறார்.

உடனே, மகிழ்ச்சியடைந்த எஸ்.பி.பி, எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தாலும் பிறகு சுசீலாவுடன் இணைந்து ஆயிரம் நிலவே வா பாடலை பாடிப் பயிற்சி எடுத்தார். பாடலை ஒலிப்பதிவு செய்வதற்குள் எஸ்.பி.பி-க்கு டைஃபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டதால், பாடலை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்ய முடியவில்லை.

ஒரு வாரத்தில் அந்த பாடலுக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதால், எஸ்.பி.பி மிகவும் வருந்தியுள்ளார். எம்.ஜி.ஆர் படத்தில் பாட இருந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன் என்று நினைத்திருக்கிறார். மீண்டும் உடல் நலம் தேறிய பிறகு, எஸ்.பி.பிக்கு அழைப்பு வந்துள்ளது.

அதில், மீண்டும் பாடல் பாட வாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள். இதனைக்கேட்டு ஆச்சரியமடைந்த எஸ்.பி.பி, அந்த பாடலை பாடிக்கொடுத்தார். பிறகு அவர் பாடியதைக் கேட்டு எம்.ஜி.ஆரும் பாராட்டியுள்ளார். ஆர்வம் தாங்காமல் இந்தப் பாடலைத் தன்னையே பாட வைத்தது ஏன் எனக் கேட்டுள்ளார் எஸ்.பி.பி.

இதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர், என்னுடைய படத்துக்குப் பாடுகிறேன் என நண்பர்களிடம் சொல்லியிருப்பீர்கள்.

இப்போது உங்களுக்குப் பதிலாக வேறொரு பாடகரைப் பாட வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? எனக்கு உங்களின் குரல் பிடிக்கவில்லை என்பதால் தான் பாடகரை மாற்றிவிட்டேன் என வெளியே செய்தி வரும். இந்தத் துறையில் நீங்கள் முன்னேறுவதற்கு அது தடையாக அமையும்.

எனவே தான் நீங்கள் தேறி வரும் வரை படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இதைக் கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார் எஸ்.பி.பி.

SPB பெற்ற விருதுகள் என்னென்ன..? ஓர் பார்வை..!


பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மைக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 16 மொழிகளில், இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர், கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார். இதுவரை 6 முறை தேசிய விருது வென்ற இவர், பல்வேறு என்னனெற்ற விருதுகளை பெற்றிருக்கிறார். அந்த விருதுகள் பற்றிய முக்கிய தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

எஸ்.பி.பி பெற்ற முக்கியமான விருதுகளின் தொகுப்பு..

இந்திய அரசின் முக்கிய விருது :-

1. பத்மஸ்ரீ விருது – 2001-ஆம் ஆண்டு

2. பத்ம பூஷன் – 2011-ஆம் ஆண்டு

தேசிய விருது :-

1. சங்கராபரணம் – தெலுங்கு – 1979 ஆம் ஆண்டு

2. ஏக் துஜே கேலியே – இந்தி – 1981 ஆம் ஆண்டு

3. சாகார சங்கமம் – தெலுங்கு – 1983 ஆம் ஆண்டு

4. ருத்ரவீணா – தெலுங்கு – 1988 ஆம் ஆண்டு

5. சங்கீத சாகரா கணயோகி பஞ்சக்ஷரா காவாய் – கன்னடா – 1995 ஆம் ஆண்டு

6. மின்சார கனவு – தமிழ் – 1996 ஆம் ஆண்டு

தமிழக அரசு விருது :-

1. அடிமைப்பெண், சாந்தி நிலையம் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1969 ஆம் ஆண்டு

2. நிழல்கள் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1980 ஆம் ஆண்டு

3. கேளடி கண்மணி – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1990 ஆம் ஆண்டு

4. ஜெய் ஹிந் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1994 ஆம் ஆண்டு

5. ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 1981-ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார்.

அஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..! குட்டியாக ஒரு பிளாஷ்பேக்..!


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குறித்து பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஜித் நடிப்பதற்கு SPB காரணமாக இருந்த விஷயம் பற்றிய குட்டி பிளாஷ்பேக்கை பார்க்கலாம்..

நடிகர் அஜித் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்ப்புகளை தேடி வந்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போது, சில விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், அஜித்திற்கு ஹேமா என்ற விளம்பரப்பட ஒருங்கிணைப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டது. இவ்வாறு நடந்துக்கொண்டிருக்க, ஒரு நாள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பார்க்க சென்ற ஹேமா, தல அஜித்தின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.

“என்னுடைய நண்பர் தான் இவர். சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு ஏதேனும் இருந்தால் கூறுங்கள்” என்று கேட்டிருக்கிறார் ஹேமா. “சரி” என்று புகைப்படத்தை கையில் வாங்கிக்கொண்டார் எஸ்.பி.பி. அடுத்த நாள், தனது நண்பரும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளருமான பூர்ணசந்திர ராவை சந்திக்க சென்றார் எஸ்.பி.பி.

அப்போது, “எனது புதிய படத்திற்கு ஹீரோ கிடைக்கவில்லை. பார்ப்பதற்கு மிகவும் அழகான முகமாக இருக்க வேண்டும். அப்படியொரு ஹீரோ இன்னும் கிடைக்கவில்லையே” என்று புலம்பியிருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.

இந்த சமயத்தில் தான் அஜித்தின் புகைப்படம் எஸ்.பி.பி-க்கு தோன்றியிருக்கிறது. அந்த தயாரிப்பாளரிடம் புகைப்படத்தை எடுத்துக்காட்டினார். உடனே பிடித்துப்போக, அஜித்தையே ஹீரோவாக மாற்றிவிட்டார் அந்த தயாரிப்பாளர். அந்த படம் தான், அஜித் அறிமுகமாகிய பிரம்ம புஸ்தகம்..

அந்த படத்தைத் தொடர்ந்து தான், அஜித் தமிழில் அமராவதி படத்தில் அறிமுகமாகினார். அஜித்தின் பல்வேறு பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உல்லாசம் என்ற படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.

Wednesday 9 September 2020

கமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’

 பொதுவாக  முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இருக்காது. இது சார்ந்த கிண்டல்களும் நமட்டுச்சிரிப்புகளும் ரசிகர்களிடையே நெடுங்காலமாக உண்டு.





நடுத்தர வயதைத் தாண்டியும் ‘கல்லூரி மாணவனாகவே’ முரளி நடித்த திரைப்படங்கள் ஏராளம். இந்த நோக்கில் ரஜினி மீதான கிண்டல்களுக்கு பஞ்சமேயில்லை. தெலுங்கு நடிகர்கள் இந்த விஷயத்தில் செய்ததெல்லாம் மாபெரும் பாதகம் என்றே சொல்லலாம். நடிப்பில் சாதனைகள் புரிந்த சிவாஜி கணேசன் கூட ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு கோட், சூட் அணிந்து ஸ்ரீதேவி போன்ற இளம் நடிகைகளுடன் மூச்சு வாங்க டூயட் பாடிய அநியாயமெல்லாம் நடந்தது.

இந்த வரிசையில் கமலும் விதிவிலக்கல்ல. நடுத்தர வயதைத் தாண்டியும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி, நாயகியுடன் மறைவில் சென்று உதட்டைத் துடைத்துக் கொண்டே வரும் அபத்தத்தை அவரும் செய்திருக்கிறார். ஆனால் ரஜினி போல தொடர்ந்து அடம்பிடிக்காமல் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்க அவர் தயங்கியதில்லை. ‘கடல் மீன்கள்’ ‘ஒரு கைதியின் டைரி’ போன்ற திரைப்படங்களில் வயதான தோற்றத்தில் நடித்த போது அவருடைய வயது முப்பதுக்கும் குறைவாகத்தான் இருந்தது.

தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை கமல்ஹாசன் ஏற்றாரா என்னும் நோக்கில், 2000-ம் ஆண்டிலிருந்து அவர் நடித்த திரைப்படங்கள், அதிலுள்ள சிறப்பம்சங்கள், தோல்விகள் போன்ற விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 
 
**
 
சராசரியான திரைப்படங்களைத் தாண்டி கலையம்சமுள்ள படங்களைத் தேடும் ரசிகர்களால் இன்றும் கூட சிலாகிக்கப்படுகிற “ஹேராம்’2000-ம் ஆண்டில் வெளியானது.

உடம்பு சுருங்கி இறுதிப் படுக்கையில் கிடக்கும் கிழவர் பாத்திரம், காதல் பொங்கி வழியும் கணவன், சாமியார் கோலத்தில் குற்றவுணர்வுடன் இரண்டாம் திருமணத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கும் ஆசாமி, முறுக்கு மீசையுடன் புது மனைவியுடன் ஐக்கியமாகத் துவங்கும் நபர், அனைத்தையும் துறந்து விட்டு பழிவாங்கப் புறப்படும் கோபக்காரர் என்று ஐந்து விதமான தோற்றங்களில் ‘சாஹேத்ராமனாக’ விதம் விதமாக அவதாரம் எடுத்தார் கமல்.

ஒப்பனை என்கிற சமாச்சாரம் வெறுமனே அழகைக் கூட்டுவதற்காக என்பது அல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை அதன் மூலம் எப்படியெல்லாம் வேறுபடுத்திக் காட்ட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு கச்சிதமான உதாரணம். அத்தனை தோற்றங்களிலும் கமல் ‘நச்’சென்று பொருந்தினார்.

இதே ஆண்டில்தான் ‘தெனாலி’ திரைப்படம் வெளியானது. போர் சூழல் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவராக கமல் நடித்திருந்தார். ஈழத்தமிழ் பேசி அவர் நடித்திருந்தது சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது. ‘எதைக் கண்டாலும் பயம்’ என்பதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் பலவீனம். ஆனால் அதன் நல்லியல்புகள் காரணமாக இதே பலவீனம்தான் அதன் பலமாகவும் பல காட்சிகளில் வெளிப்படுகிறது. இந்த சுவாரசியமான முரணை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் சுவாரசியமாக வெளிப்பட்டிருக்கும். இவற்றைத் தாண்டி இதுவொரு வணிகநோக்குத் திரைப்படமே.

கமலின் சில சிறந்த திரைப்படங்கள், தாமதமாகத்தான் அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும் என்றொரு பரவலான கருத்து உண்டு. அதற்கு பொருத்தமான திரைப்படங்களுள் ஒன்றான ‘ஆளவந்தான்’ 2001-ல் வெளியானது.

திடகாத்திரமும் மூர்க்கமும் மொட்டைத் தலையும் கொண்ட ‘நந்து’ பாத்திரம் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. சித்தியின் கொடுமையினால் பாதிக்கப்படும் ஒரு சிறுவன் பிறகு எப்படி மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பெண் வெறுப்பாளனாகவும் மாறுகிறான் என்பதை தனது மிரட்டலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் கமல்.

இதில் வரும் விபரீதமான காட்சியொன்றில், வன்முறையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்ட அனிமேஷன் வடிவில் படமாக்கப்பட்டது. இந்த உத்தியைப் பார்த்து பிரமித்து தன்னுடைய திரைப்படம் ஒன்றில் பயன்படுத்திக் கொண்டதாக ஹாலிவுட் இயக்குநர் க்வென்டின் டரான்டினோ ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஹாலிவுட் படங்களில் இருந்து கமல் நிறைய உருவியிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்த புகார்களுக்கு மாற்றாக நிகழ்ந்த விஷயம் இது.

பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற திரைப்படங்களை சாய்ஸில் விட்டுவிடலாம். அபாரமான நகைச்சுவைத் திரைப்படங்கள் என்பதைத் தாண்டி குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அவற்றில் எந்த வித்தியாசமும் நிகழ்வில்லை. 
 
 
**

2003-ல் வெளியான ‘அன்பே சிவம்’, கமலின் பயணத்தில் ஒரு முக்கியமான படம். ‘தன் அழகான தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க முன்வருபவனே சிறந்த நடிகன்’ என்று சிவாஜி அடிக்கடி கூறுவாராம். அந்த வகையில் ‘குணா’ முதற்கொண்டு பல பரிசோதனை முயற்சிகளை கமல் துணிந்திருக்கிறார். அன்பே சிவமும் அதில் ஒன்று. சோடாபுட்டி கண்ணாடி, தழும்புகளால் நிறைந்திருக்கும் அவலட்சணமான முகம், சார்லி-சாப்ளினை லேசாக நினைவுப்படுத்தும் உடை என்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். இதன் எதிர்முனையில் தோற்றத்திலும் சிந்தனையிலும் ஒரு நவீன இளைஞனை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இந்த முரண் படத்தின் சுவாரசியத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

படம் முழுக்க ‘வித்தியாசமான தோற்றத்திலேயே’ வந்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ என்கிற தயக்கம் எப்போதுமே நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் போல. எனவே பிளாஷ் பேக்கில் முறுக்கு மீசையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட தெரு நாடகக் கலைஞனாகவும் வந்து நாயகியுடன் ‘ரொமான்ஸ்’ செய்து இதை சமன் செய்தார் கமல். இந்த உத்தியை பல திரைப்படங்களில் காணலாம்.

2004-ல் வெளியான ‘விருமாண்டி’யும் கமலின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றியில் விபூதிப்பட்டை, குங்குமம், முரட்டு மீசை, அலட்சியமாக வாரப்பட்ட தலைமுடி, முன்கோபம் என்று தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை மிக கச்சிதமாக கண் முன்னால் நிறுத்தியிருந்தார் கமல். பல்வேறு கோணங்களில் வெளியாகும் வாக்குமூலங்களைக் கொண்டு ‘உண்மை என்பது எது? என்பதைத் தத்துவார்த்தமாக தேடிய ‘ரஷோமான்’ திரைப்பட உத்தி இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது. மதுரையின் வழக்கு மொழியை கமல் சிறப்பாக கையாண்டிருந்தார்.

2005-ல் வெளியான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ வணிகரீதியாக தோல்வியடைந்த படம் என்றாலும் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. ‘பிளாக் ஹியூமர்’ என்னும் அவல நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் சினிமா என்று இதை அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டும்.

‘சூப்பர் ஹீரோக்களுக்கு’ நிகரான ‘அந்தர்பல்டி’ சாகசங்களை இதர நாயகர்கள் செய்து கொண்டிருக்கும் போது, காது கேட்பதில் குறைபாடு உள்ள இயல்பான நடுத்தர வயது ஆசாமியாக இதில் வருவார் கமல். படம் முழுவதும் இம்சைகளை ஏற்படுத்தும் மென்மையான நகைச்சுவைக் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கும்.

ஒரு காவல்துறை அதிகாரிக்கு வைப்பாட்டியாக இருக்கும் இன்னொரு நடுத்தர வயதுள்ள பாத்திரம்தான் இந்தத் திரைப்படத்தின் நாயகி. பதினெட்டு வயதிற்கு குறையாத இளம் பெண்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் இதர நாயகர்களின் திரைப்படங்களுக்கு இடையில் இது வியப்பூட்டும் அம்சம் எனலாம். மூன்று அமெச்சூர் திருடர்கள், தவறுதலாக வேறொரு சிறுவனை கடத்தி வந்து விட்டு படும் பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். (இதே விஷயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படத்திலும் ஒரு பகுதியாக வரும்).

தனது பிரத்யேக ஸ்டைலில் திரைப்படங்களை உருவாக்குபவர் கெளதம் வாசுதேவ மேனன். ரொமான்ஸ் + ஆக்ஷன் என்பதுதான் இவரது பாணி. இவரும் கமலும் ‘வேட்டையாடு விளையாடு’ (2006) என்கிற திரைப்படத்தில் இணைந்த போது அது புதிய வண்ணத்தில் அமைந்தது. துப்பறியும் அதிகாரியை நாயகனாகக் கொண்டு பல ஹாலிவுட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் அப்படியொரு பாணியில் வந்த முயற்சியாக ‘வேட்டையாடு விளையாடு’ (2006) அமைந்தது.

கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஒரு பெண்தான் இதில் நாயகி. அந்தச் சூழலில் இருந்து அவரை விடுவித்து நாயகன் மறுமணம் புரிவார். பொதுவாக ஹீரோக்களுக்கு ஒவ்வாத இது போன்ற விஷயங்களையெல்லாம் கமல் இயல்பாகச் செய்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் ‘நவராத்திரி’யை தாண்டிச் செல்லும் நோக்கும் நோக்கத்திலோ, என்னவோ.. கமல் பத்து வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ (2008) ஒரு முக்கியமான முயற்சி. இதில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்யேகமான தோற்றங்களை உருவாக்கி, அதை திரையில் சித்தரிப்பதற்காக கமல் மிகவும் மெனக்கெட்டிருந்தார். ரங்கராஜ நம்பி, பல்ராம் நாயுடு, வின்செட் பூவவராகன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு வழக்கு மொழி, பாணி, பின்னணி என்று ரகளையாக நடித்திருந்தார் கமல். குறிப்பாக கிழவி பாத்திரத்தில் அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அபாரம்.

ஆனால் இவற்றை தனித்தனியாக பார்க்கிற போது சுவாரசியமாக இருந்ததே ஒழிய, ஒட்டு மொத்த சித்திரமாகப் பார்க்கிற போது பொழுதுபோக்கு சினிமா என்கிற அளவைத் தாண்டி இதில் விசேஷமாக எதுவும் இல்லை. ‘தன் திரைப்படங்களில் தன்னை மிகவும் முன்நிறுத்திக் கொள்வார்’ என்று கமல் மீது பொதுவாக சொல்லப்படும் விமர்சனத்தை ஆழமாக உறுதிப்படுத்துவதாக ‘தசாவதாரம்’ அமைந்தது. பத்து வேடங்களிலும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் செயற்கையாகத் தெரிந்தது.
 
 
**

இதர மாநிலங்களில் உருவான சிறந்த திரைப்படம் என்றால் அதை தமிழில் ரீமேக் செய்ய கமல் எப்போதும் தயங்கியதில்லை என்பதற்கு ‘குருதிப்புனல்’ முதற்கொண்டு பல உதாரணங்கள் இருக்கின்றன.  அந்த வகையில் 2009-ல் வெளியான திரைப்படம் ‘உன்னைப் போல் ஒருவன்’. மத தீவிரவாதத்தை அரசு இயந்திரமானது ஆதாய அரசியலோடும் மெத்தனத்தோடும் கையாளும் போது ஒரு சராசரி மனிதனுக்கு எழும் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். குறுந்தாடியுடன் ஒரு கல்லூரி பேராசிரியரின் நடுத்தரவர்க்க தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். அசல் வடிவத்தை ஏறத்தாழ சிதைக்காமல் தமிழில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இதிலும் அவரின் வயதுக்கேற்ற பாத்திரம்தான்.

2015-ல் வெளியான ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை, ஏறத்தாழ கமலின் Mini Bio-graphical version எனலாம். அந்த அளவிற்கு அவருடைய அசல் வாழ்க்கையின் தடயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் திரைப்படத்தில் நிறைந்திருந்தன. மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகன், அபத்தங்களால் நிறைந்திருந்த தன் அதுவரையான வாழ்க்கையை சிறிதாவது அர்த்தபூர்வமானதாக ஆக்க பாடுபடுகிறான். ‘மனோரஞ்சன்’ என்னும் நடிகனாக கமல் நடித்த சில காட்சிகள், அவர் எத்தனை திறமையான நடிகர் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தன.

‘Spy Thriller’ எனப்படும் வகைமையான அதுவரையான தமிழ் சினிமாவில் மிக அமெச்சூராகத்தான் கையாளப்பட்டது. இதை ஏறத்தாழ ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘விஸ்வரூபம்’ I & II. முதல் பகுதியில் இருந்த இடைவெளிகளுக்கான பதில்கள் இரண்டாம் பகுதியில் இருக்கும் அளவிற்கு அபாரமான திரைக்கதையால் கட்டப்பட்டவை. இந்திய உளவாளி ஒருவன் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்வதுதான் இதன் மையம்.

பெண்மையின் சாயல் கொண்ட விஸ்வநாதன், எரிமலையின் ஆற்றலோடு விஸாமாக வெளிப்படும் காட்சி, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆக்ஷன் காட்சிகளுள் ஒன்றாக இருக்கும். ‘படம் புரியவில்லை’ என்கிற பரவலான கருத்து இதன் மீது எழுந்தது. ஆனால் நிதானமாகப் பார்த்தால் எத்தனை நுட்பமான விஷயங்களை இவற்றில் அடுக்கியிருக்கிறார் என்பது புரியும்.

கமலின் ரீமேக் வரிசையில் இன்னொரு அபாரமான முயற்சி ‘பாபநாசம்’ (2015).  மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ தமிழில் திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டு வெளியானது. அன்பான மனைவி, இரண்டு மகள்கள் கொண்ட நடுத்தர வயது பாத்திரத்தில் ‘சுயம்புலிங்கமாக’ கமல் நடித்திருந்தார். இதில் அவர் வழக்கம் போல் தன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தாலும் மலையாளத்தில் மோகன்லால் செய்தததோடு ஒப்பிட்டால் கமல் சற்று பின்தங்கியிருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டூயட், காமெடி, ஆக்ஷன் என்று ஒரு தேய்வழக்கு திரைக்கதையுடன் நெடுங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் நிறத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருவதில் கமல்ஹாசனுக்கு பிரதான பங்குண்டு. அந்த வகையில் ‘தூங்காவனம்’ (2015) ஒரு அற்புதமான முயற்சி. பிரெஞ்சு திரில்லர் திரைப்படத்தின் ரீமேக். தமிழ் வடிவத்திற்காக அசட்டு மசாலாக்கள் எதுவும் திணிக்கப்படாமல் யோக்கியமாக உருவாக்கப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு முன்னணி நாயகனுக்குரிய தேய்வழக்குகளை கமல் கொண்டிருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இவற்றிலிருந்து அவர் தொடர்ந்து மீற முயற்சித்துக் கொண்டே இருப்பதை கவனிக்க முடியும்.

‘மகாநதி’ திரைப்படத்தில் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக நடிப்பதைக் கண்ட ஒரு சீனியர் நடிகர் ‘இவ்வாறெல்லாம் நடித்தால் உன் இமேஜ் போய்விடும்’ என்று எச்சரித்தாராம். ஆனால் கமலின் சிறந்த திரைப்படங்களை கணக்கெடுத்தால் ‘மகாநதி’ அதில் உறுதியாக இடம்பெறும் என்பதுதான் வரலாறு. இந்த தொலைநோக்குப் பார்வையும் துணிச்சலும் பாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் மெனக்கெடலும் கமலிடம் எப்போதும் இருந்திருக்கிறது.

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும்... T.சௌந்தர்

காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும்  பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார்.




பாடலின் வரியையும் அதன் மெட்டையும்  அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார்.  மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான். தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால்  தந்தையார் பேருவகையடைந்தார். தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக  வருவான் என்று  மனதில் நினைத்துக் கொண்டார்.

" சிந்துநதியின்மிசை நிலவினிலே " என்ற அந்த.பாரதிபாடலைப் பாடிய அந்த குழந்தை வேறுயாருமல்ல, இந்தக்கட்டுரையாளர்  தான்! இந்தப்பாடலின் வரிகளை இன்று கேட்டாலும்  சொல்ல முடியும் என்று சொல்லுமளவுக்கு மனதில் பதிந்துவிட்ட பாடல் அது.

இந்த சம்பவம் சாதாரணமானது என்றாலும் தமிழ் சினிமாஇசையின் மெல்லிசை மலர்ந்து கொண்டிருந்த காலமொன்றைச் சேர்ந்த இனிய பாடல் என்பதை நினைவுறுத்தும் பொருட்டு சொல்கிறேன்.மூன்று வயது பையன் ஒருவன் பாடலின் பொருள் தெரிந்தா பாடியிருப்பான்? பாடலின் இசைதான்அதை சாத்தியமாக்கியிருக்கும் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இங்கில்லை!

நமது   வாழ்க்கையோட்டத்தில்   மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியினரின் பாடல்கள் விதையாகி , செழித்து வளர்ந்தது இவ்விதமே.

கடந்து போன காலங்களை நினைக்கையில் இதயத்துடன் பிணைந்த  பாடல்களின் வாசம் நம் நெஞ்சங்களை நிறைக்கும். பிஞ்சுமனங்களில் வேரூன்றி, பற்றிப்படர்ந்து , நெஞ்சின் அடியாழத்தின்  உள்ளுறைகளில் புதைந்த பாடல்களை நம்மால் இலகுவாக மறக்கமுடிவதில்லை.

Music and Rythm find their way in to the secret places of the Soul - என்பார் பிளேட்டோ.

கடந்து கால  நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கு  இசை ஒரு இலகுவான சாதனம். பழைய பாடல்களைக் கேட்கும்  போது எந்தெந்தப்பாடல்களைக் எங்கெல்லாம் கேட்டோம், எந்தச் சூழ்நிலையில் அவற்றைக்கேட்டோம் என்பதெல்லாம் விரல் சொடுக்கில் வந்து விழுந்துவிடுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களிலும் , துக்ககரமான சம்பவங்களிலும் இசை கலந்தே இருக்கிறது.!

நினைவுகளின் ஓடையாக  இசை விளங்குகிறது. இசையுடன் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். ஒவ்வொரு பாடலும் நம்முடன் உரையாடல்களை நிகழ்த்தியே வந்துள்ளது. இசையின் முருகு இளம்வயது பருவத்தில் நம்மை ஆட்கொள்கிறது. இனிய வாத்திய இசையுடன் அதை பருகும் போது மனம்  எழிலடைகிறது. உணர்ச்சி நிறைந்த இசை உள்ளத்தில் சிறு பொறியைத் தோற்றுவித்து  நுண்ணறிவில்  சுவாலையை ஏற்படுத்துகிறது  இதனால் எழும் அறிவார்வத்திற்கு உயிர் கொடுக்கிறது.

வானலைகளில் நீந்தி ,காற்றுவெளியில் மிதக்கும் இசையலைகள் மனிதனின் காதுகளில் புகுந்து அவனோடு ரகசியம் பேசவும் , பலவித கற்பனைகளையும் ,உணர்வுகளையும் கிளர்த்துகின்றன.

காரண காரியங்கள் தெரியாமல் , காலகாலமாய் நாம் இசையைக் கேட்டு ரசித்து மகிழ்ந்திருக்கின்றோம். பிறந்து வளர்ந்த காலம் தொட்டு இசையில் லயித்து வந்த நாம் எங்களுக்குப் பழக்கமான பாடல்களைக் கொண்டாடியும்  வந்திருக்கின்றோம். இன்பம்  தரும் பல இசைவகைகளின் சுமைதாங்கியாகவும் நாம் இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த பாடல்கள் என்றால் அது திரையிசைப்பாடல்களே !   ஒலிப்பதிவு செய்யப்பட்ட இப்பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்க வழிவகுத்தன.

வாழையடி வாழையாய் வந்த ராகங்களில் அமைந்த பலவிதமான பாடல் வகைகள்   ,அவற்றில் மெல்லியதாய்  நுழைந்து , நமக்கு   அறிமுகமில்லாத இசைவகைகளையும் , வாத்தியங்களையும் இசையமைப்பாளர்கள் கலாபூர்வமாக இணைத்து  தந்த பாடல்களால்  நம் உணர்வுகள் கிளரப்பட்டிருக்கின்றன.

இவ்விதம் தமிழ் திரையிசைக்கு ஜீவசத்துமிக்க பாடல்களைத்தந்த முன்னோடிகளில் முதன்மையானவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்!

மரபு வழியின் தடம் பற்றி  திரையிசையின் மெல்லிசையில்  பரவசமும் , புதுமையும் ,உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகச் சிறந்த பாடல்களையும் தந்து மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

பழமைக்கும் புதுமைக்கும் நிகழ்ந்த போராட்டத்தில் புதுமையின் கை ஒங்க வைத்த பெருமை இவர்களையே சேரும். படத்திற்குப் படம் இனிமையான பாடல்களைப் பொழிந்தார்கள்.

அவர்கள் தந்த பாடல்களில் தான் எத்தனை உணர்வுகள் , எத்தனை பாவங்கள்..!

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே- வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே....

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலரும் விழிவண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த   கலையன்னமே

இந்தப்பாடல் வரிகளை வாசிக்கும் போதே எத்தனை பரவசம் ஏற்படுகிறது. பாடலின் ஒலிநயம் உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்த அதனுடன் இணைந்த இசையோ நம்மை நெகிழ வைக்கிறது.

அழகுணர்ச்சியையும் ,மன எழுச்சியையும் தூண்ட  நுட்பமும் ,செறிவும் ஒன்றிணைந்து கலாப்பூர்வமாக வெளிப்படும் கவிதை  அதை இனிதே எடுத்துச் செல்லும் தன்னிகரில்லாத இசை. இனிமையான குரல்களில்  வரும் இனிமையும்,  சோகமும் கலந்த அற்புதமான தாலாட்டு.

தங்களது குடும்பநிலை , உறவுகளின் பெருமை,மற்றும் பலவிதமான நிலை என  தாலாட்டு மரபின் அத்தனை அம்சங்களையும் உயர்வளித்து சொன்ன பாடல் அது!

இது போன்று  கதையின் சூழலை  கவிதையின் உயர்வான நடையில்  பல பாடல்களில் கேட்டிருக்கின்றோம்.

வானாடும் நிலவோடு கொஞ்சும் விண்மீன்கள் உனைக்கண்டு அஞ்சும் - எழில் வளமூட்டும் வினை மின்னல் உனைக்கண்டு அஞ்சும்

என்று கவிஞர் வில்லிபுத்தன்  எழுதிய " மாலாஒரு மங்கல் விளக்கு " பாடலை நாம் உதாரணமாக இங்கே தந்தாலும், அந்தப்பாடல் மிக அருமையான மெட்டமைப்பைக் கொண்ட பாடல் தானெனினும் , "மலர்ந்தும் மலராத" பாடல்  அளவுக்கு   வெகுமக்களிடம் சென்று வெற்றியடையவில்லை என்பதே உண்மை. மிகப்பெரிய வெற்றிப்படமான பாசமலர் படத்தின் வெற்றியும் இந்தப்பாடல் அதிக புகழ்பெற்றமைக்கான காரணமாகும்.

எனினும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த  இனிய மெட்டல்லவா அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது ! இது போன்ற பல இசைவார்ப்புகள் நம்மைக் கொள்ளை கொண்டு சென்றன. நெஞ்சை ஆட்சி செய்யும் வளமிக்க பாடல்கள் அவை !

இனிய இசையின் வெற்றி என்பதே இது தான்! அந்த இனிய இசைக்கு என்ன வரிகளை வைத்தாலும் இசை  வென்று விடும் என்பதே உண்மை.ஆனால் உயிர்த்துடிப்புமிக்க வரிகள் இணையும் போது நெஞ்சைப் பறி கொடுக்கும் ரசவாதம் பிறந்து விடுகிறது.

தமது அமரத்துவக் கானங்களால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் அழகுலகைக் காட்டியதில் பெரும் பங்கு தமிழ் திரையிசையமைப்பாளர்களுக்கு உண்டு.அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லதகுந்த தனித்தன்மை மிக்கவர்கள் தான்  மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத  எத்தனை வகை , வகையான, எண்ணற்ற  இனிய பாடல்களால் தமிழ் இசை ரசிகர்களை இன்பத்தில் திணறடிக்க   வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.

பின்னாளில் எத்தனையோ புகழாரங்களை மெல்லிசைமன்னர்கள் பெற்றாலும் , அதில் அதியுயர்  பாராட்டாக, அதே துறையில் யாரும் எட்டாத சிகரங்களைத்   தொட்ட  இசைஞானி இளையராஜா , மெல்லிசைமன்னர்களின் இசை எவ்விதம் தன்னை பாதித்தது என்பதை விளக்க  முனைந்தமை சிறந்த பாராட்டாக அமைந்தது

" நான் ஒரு இசைக்கலைஞனாக இந்த உலகத்தில் நடமாடிக்கொண்டிருப்பதன் முக்கியமான காரணம்  அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி அவர்களுமே !  ஏனென்றால் நான் பிறந்த கிராமத்திலே இசை கற்றுக் கொள்ள  விரும்பினாலும் அங்கே சொல்லிக் கொடுக்க யாருமில்லை. அந்தக் கிராமத்திலே அவர்களுடைய பாடல்கள்  ஒலிக்காத நாளெல்லாம் விடியாத நாள் என்று தான் எங்கள் பொழுதுகள் கழிந்தன......உணர்வுமயமான     அவர்களது நாதம் என்னுடைய நாடி , நரம்பில், இரத்தத்தில் உடம்பில் எல்லாம் ஊறிப்போனதால்   தான் !

இது தான் மெல்லிசைமன்னர்கள் பெற்ற அதியுயர் பாராட்டு என்பேன். அவர்களின் இசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பது அவர்களது இசை, ஒரு  மாபெரும் கலைஞனை உருவாக்குவதில் எவ்விதம் பங்காற்றியிருக்கிறது என்பதே!

பழைய பாடல்கள் என்றதுமே கருப்பு வெள்ளைப்  படங்களும் , வானொலிப்பெட்டியும் நம் நினைவுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாகும்.வானொலி நம்மை தன்னுடன் இறுக அணைத்துக் கொண்ட சாதனமாகும். இதயத்தோடு இணைந்த எத்தனையோ பாடல்களைத் தந்து உணர்வு மிகுதியில்  நம்மைத் திளைக்க வைத்ததிருக்கிறது.இசையில்நம்மை தாலாட்டி வளர்த்த தாய்வீடு வானொலியே என்று சொல்லி கொள்வதற்குக் காரணமாயிருந்தவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

விருது பெறுவதால் மட்டும் ஒருவரின் திறமை அளவிடப்படும் இன்றைய விசித்திர சூழ்நிலையில் , தனது திறமைக்கு கிடைக்க வேண்டிய குறிப்பிடத் தகுந்த விருதுகளும் பெறாமல் மறைந்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அவர் இசையமைத்த பாடல்கள் சில தேசிய அளவில்  விருதுகள் பெற்றாலும் அவருக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் விருதுகளுக்கு அப்பால் நல்லிசை  ரகிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பவர் தான்  எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் !

தனது படைப்புக்கள் பேசப்பட வேண்டும் என்றோ , விருகள் பெற வேண்டுமென்றோ முனைப்புக்காட்டாத அவர், மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சினிமா இசை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க  முடியும்  என்று நினைத்துப் பார்க்க முடியாத  காலத்து மனிதராக வாழ்ந்து மறைந்தார். ஆயினும் அந்த ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டுமிருக்கிறது."உழைக்கத் தெரிந்தது , பிழைக்கத் தெரியவில்லை" என்பார்!

கேரளாவில் பாலக்காடு  மாவட்டத்தில் இசைப்பாரம்பரியமற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்தை  நிகழ்த்திய மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன்.

தமிழின் சகோதர மொழியான  மலயாளம் தந்த ஈடு இணையற்ற இசையமைப்பாளனை தமிழ்த்திரையுலகம் தத்தெடுத்துக் கொண்டது.

அதற்கு கைமாறாக அவர் தந்த இசை, தமிழ்ப்பாடல்களை பிற மொழியினர் வியந்து பார்க்க வைத்தன. 1940 களிலேயே கொடிகட்டி பறந்த ஹிந்தியின் மெல்லிசை , அதன் ஈர்ப்பால் 1950 களில் வீசிய  தெலுங்கு மெல்லிசை அலை போல 1960 களில் தமிழில் வீசியடித்த மெல்லிசை வீச்சின் சொந்தக்காரர் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.

1952 இலிருந்து 1965 வரை ஒன்றிணைந்து இயங்கிய அவர்கள்   மனது மறக்காத பல பாடல்களைத்  தமிழ்மக்களுக்கு விட்டுச் சென்றார்கள். அழகியல் நோக்கில் பல இனிமையான பாடல்களைத் தந்தவர்களின் பிரிவு பற்றிய துல்லியமான காரணிகள் யாராலும் பேசப்படவில்லை. அவர்களும் அது குறித்து பேசியதில்லை. இசை வேட்கை மிகுந்த இரு மேதைகளின் பிரிவு தமிழ் திரை இசைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்பதை விட நல்லிசை ரசிகர்களுக்கு பேரிழப்பு என்பதே பொருத்தமானதாகும்.

மெல்லிசைக்கு புதுக்கட்டியங்   கூறிய இரட்டையர்களின் கூட்டு குறிப்பாக இறுதி 5 ஆண்டுகளில் [1960 - 1965] உச்சம் பெற்றது.ஒளிவீசிக் கொண்டிருந்த நட்சத்திரம் உதிரும் போது ஒளியைப் பாய்ச்சி  மறைவது போல , நல்ல பல பாடல்களை அள்ளிக் கொட்டியவர்கள் பிரிந்து சென்றனர்.

நம் வாழ்வின் நீண்ட பாதையில்  அவர்களது பாடல்களுடன் நாம் பயணித்திருக்கின்றோம்.

வானொலியில் பிறந்து காற்றலைகளில் மிதந்த அவர்களது பாடல்கள் நம் நெஞ்சங்களில் கலந்து நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.

ஆரம்பநாளில் மெல்லிசைமன்னர் இசையமைத்த "வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே " , "கூவாமல்  கூவும் கோகிலம் "  , "தென்றலடிக்குது என்னை  மயக்குது , "கண்ணில் தோன்றும் காடசி யாவும்" ,"கசக்குமா இல்லை ருசிக்குமா"   போன்ற பாடல்களை நினைக்கும் போதே மனம் ஒருவித போதையில் ஆழ்கிறது. நினைவு திரையில் மறைந்த உறவுகளும் , நினைவுகளும் , கழிந்து போன நாட்களும் நம்மை வருத்தம் தந்து வருடிச் செல்லும். மெல்லிசையில் ஒரு  துலக்கத்தை அந்தக் காலத்திலேயே காண்பித்திருப்பதையும்  அவரது திறமமையையும் எண்ணி வியக்கவும் வைக்கிறது .

மெல்லிசைமன்னர்கள் திரைப்படத்தில் நுழைந்து முன்னுக்கு வந்த காலத்தைக் கவனத்தில் எடுத்தல்  தேவையாகிறது. கர்னாடக செவ்வியலிசையின் கட்டுக்கள் தளர்ந்து மெல்லிசையின் துளிர்கள்  அரும்பிக்கொண்டிருந்த காலம் என்பதை திரையிசையை நோக்குபவர்கள் உணர்வார்கள். மெல்லிசைக்கான முகிழ்ப்புக்கு  , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய  மெல்லிசையையும் ஹிந்தி திரை இசையையும் ஆதர்சமாகக் கொண்டு   பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.


இந்திய சினிமாவில் அதிக செல்வாக்கு செலுத்திய ஹிந்தி திரைப்படப்பாடல்களுக்கு நிகராக,தமிழ் பாடல்களும் வரவேண்டும் என்று ஆரம்பகால இசையமைப்பாளர்கள் ஓரளவு முனைப்புக் காட்டினார்கள்.ஆயினும் அன்றிருந்த மரபிசையின் செல்வாக்கிற்குள் நின்று தான் அவர்களால் புதுமையைக்காட்ட முடிந்தது.அதில் அவர்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளையும் கண்டார்கள்.

ஆயினும் அவர்களில் வயதில் இளையவராக இருந்த சி.ஆர்.சுப்பராமன், மரபில் நின்றதுடன் புதுமை விரும்பியாகவும் தனது படைப்பை தர முயன்றார்.அவரது அகால மரணம், அவரது அடியொற்றி வந்த புதுமை நாட்டம் மிகுந்த ஒரு புதிய பரம்பரையினரை அரங்கேற்றியது. ஏ.எம்.ராஜா , டி.ஜி..லிங்கப்பா , டி.ஆர் .பாப்பா , எம்.எஸ்.விஸ்வநாதன் , டி.கே.ராமமூர்த்தி போன்றவர்கள் புதுமை காண விளைந்தனர். புதுமை சகாப்தம் சி.ஆர்.சுப்பராமனுடன் ஆரம்பித்தது என்பதை யாரும் ஏற்றுக்கொள்வர்.

மெல்லிசை உருவாக்கத்தில் தீவிர ஆர்வம் காட்டிய மெல்லிசைமன்னர்கள், ஹிந்தி திரையிசையை முன்மாதிரியாகக் கொண்ட அதே வேளையில் தங்கள் தனித்துவத்தைக் காண்பிக்கவும் , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய மெல்லிசையையும் ஆதர்சமாகக் கொண்டு பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.

1950 களில் வெளிவந்த திரைப்படங்களை அவதானிக்கும் பொழுது ஜி.ராமநாதன் , ஜி. கோவிந்தராஜுலுனாயுடு , எஸ்,வி.வெங்கட்ராமன் ,ஆர்.சுதர்சனம் , எஸ்.எம். சுப்பையா நாயுடு ,எம்.எஸ்.ஞானமணி , பெண்டலாயா , எஸ்.ராஜேஸ்வரராவ் ,எஸ்.தட்சிணாமூர்த்தி , கண்டசாலா , சி.ஆர் சுப்பராமன் , லக்ஷ்மன் பிரதர்ஸ் ,ஆதி நாராயணராவ் , வி.நாகைய்யா , கே.வீ மகாதேவன் ,சி.என்.பாண்டுரங்கன் , ஏ. ராமராவ் ,எம்.டி.பார்த்தசாரதி சி.எஸ்.ஜெயராமன் , களிங்கராவ் , எச்.ஆர் .பத்மநாபசாஸ்திரி என பல இசையாளுமைகள் வெற்றிகரமாகக்   களமாடிக்கொண்டிருந்ததை   அவதானிக்க முடிகிறது.

இவர்களுடன் புதிய சந்ததியினரான விஸ்வநாதனின் இளவட்ட சகபாடிகளான டி.ஜி..லிங்கப்பா , டி.ஆர்.பாப்பா , ஏ,எம்.ராஜா,டி.சலபதிராவ் ,ஆர்.கோவர்த்தனம் ,வேதா , பி.எஸ்.திவாகர் போன்ற பலரும் தனித்தனியான இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிக் கொண்டிருந்தார்கள்

1940 களில் ஏற்பட்ட வளர்ச்சியின் அடையாளமாக மரபு வழி வந்த நாடக இசையின் மைந்தர்களான ஜி.ராமநாதன் , எஸ்.வீ.வெங்கட்ராமன் , பாபநாசம் சிவன் , எஸ்.எம் சுப்பையாநாயுடு,ஆர்.சுதர்சனம் போன்றவர்கள் முன்னணிக்கு வந்துவிட்டார்களெனினும் நாடக இசையின் வட்டத்தைச் சார்ந்தும், அதிலிருந்து விடுபடவும் ஓரளவு முனைப்பு காட்டினர் 1950 களில்   தியாகராஜா பாகவதர் , பி.யு.சின்னப்பா காலத்து பாடும் பாணி மாறி புதிய மெல்லிசைப்போக்கின் பயணம் தொடங்கியது.

பாடி நடித்து பெரும்புகழ் பெற்ற தியாகராஜா பாகவதர் , பி.யூ.சின்னப்பா போன்றோருடன் அந்த சகாப்தம் நிறைவுற்றாலும் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை பாடி நடிப்பதை பிடிவாதத்துடன் கடைப்பிடித்தவர்கள் டி.ஆர். மகாலிங்கம் மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரே ! பாடும் ஆற்றல் வாய்ந்த எஸ்.வரலட்சுயும் இறுதிவரை ஆங்காங்கே பாடி நடித்தவர்களில் ஒருவர்.

பாடி நடிக்காத புதிய நடிகர்களான எம்.கே ராதா , ரஞ்சன் போன்றோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.நடிகர் ரஞ்சன் ஒரு சில பாடல்களை பாடினாலும் ஒரு பாடகர் என்ற அளவுக்குப் புகழ் பெறவில்லை.

எஸ்.எஸ்.வாசனால் பெரும் செலவில் எடுக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் , மங்கம்மா சபதம் போன்ற படங்களில் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர்கள் எம்.கே ராதா , ரஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களுடன் நடிகைகளான ருக்மணி [ நடிகை லட்சுமியின் தாயார்   ] , டி.ஆர்.ராஜகுமாரி போன்றோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.டி.ஆர்.ராஜகுமாரி பாடுவதிலும் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் ருக்மணியால் வெற்றிபெறமுடியவில்லை.ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் ருக்மணி பாடினார் என்றும் பின்னர் இனிமை குறைவு எனக் கருதி   பி.ஏ.பெரியநாயகியைப் பாட வைத்து   டப் செய்தார்கள் என்கிறார் ஆய்வாளர் வாமனன்.

இனிமையாகப்பாடுவதில் புகழடைந்த டி.ஆர்.மகாலிங்கம் அளவுக்கு இல்லை என்றாலும் பாடுவதில் கணிசமான அளவு வெற்றியடைந்தவர் "நடிப்பிசைப்புலவர்" என்று அழைக்கப்படட கே.ஆர் ராமசாமி. இவரது வெற்றிக்கு திராவிட இயக்கம் பெருமளவு உதவியது.சிறைவாசத்துடன் தொடங்கிய தியாகராஜபாகவதரின் வீழ்ச்சியை, ஏற்கனவே பாடி நடித்து புகழ் பெற்றுக்கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் , கே.ஆர் ராமசாமி போன்ற நடிகர்கள் நிரப்ப முனைந்தனர். ஆயினும் பாடி நடிக்கும் காலம் மெதுவாக மலையேறிக்கொண்டிருந்தது என்பதும் கவனத்திற்குரியது.

சி.ஆர்.சுப்பராமன் விட்டுச் சென்ற இசைப் பணிகளை முடித்துக்கொடுக்கும் வாய்ப்பு அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன் , ராம்மூர்த்தியினருக்கு கிடைத்தது.ஆயினும் தனது இசையார்வத்தால் சி.ஆர்.சுப்பராமன் உயிருடன் இருந்த காலத்திலேயே தனித்து இசையமைக்க முயன்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

வளரத் துடிக்கும் விஸ்வநாதனை தனது புதிய படத்தில் அறிமுகம் செய்ய விரும்பிய மலையாளபடத் தயாரிப்பாளர் ஈப்பச்சன், எம்.ஜி.ஆரை வைத்து ஜெனோவா என்ற படத்தை எடுத்தார்.புதிய இசையமைப்பாளர் விஸ்வநாதன் பற்றி எம்.ஜி ஆர் அறிந்த போது " ஆபீஸ் பையனாக இருந்தவனை இசையமைப்பாளனாகப் போட்டு என் படத்தை கெடுத்துவிடப் போகிறீர்கள் " என்று மறுக்க ,விஸ்வநாதன் தான் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக நின்ற தயாரிப்பாளர் " அவர் போடும் பாட்டுக்களைக் கேளுங்கள்,இல்லை என்றால் மாற்றிவிடலாம் " என்று கூற பாடல்களைக் கேட்ட எம்.ஜி.ஆர் நன்றாக இருக்கிறது,இன்னும் நன்றாக இசையமைக்க வேண்டும்,உனக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்று பாராட்டினார் " என மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் திரும்பிப்பார்க்கிறேன் என்ற ஜெயா டி.வி நிகழ்ச்சியில் தனது நினைவுகளை பகிர்கிறார்.

ஆனாலும் ஜெனோவா படத்தில் அக்கால இசையமைப்பாளர்களான எம்.எஸ்.ஞானமணி , டி.ஏ.கல்யாணம் போன்றோரும் இசையமைத்ததாக பட டைட்டில் தெரிவிக்கிறது.

காலமாற்றத்தின் விளைவாக திரைத்துறையில் வெவ்வேறு துறைகளிலும் புதியவர்களின் வருகையும் மெல்லிசைமன்னர்கள் அறிமுகமான காலத்தில் ஏற்படத்தொடங்கியது.

நடிப்பில் ......,,,,

எம்.ஜி.ஆர், [ராஜ குமாரி 1948 ,மந்திரி குமரி 1950 - மலைக்கள்ளன் 1953]

சிவாஜி, பராசக்தி [1952] ,,

பத்மினி ,வையந்திமாலா போன்றோரும்,

பாடகர்களில் ,,,

அபிமன்யூ [1948 ] படத்தில் திருச்சி லோகநாதன்

பாதாள பைரவி [1950 ] படத்தில் பி.லீலா

மந்திரி குமாரி [1950] படத்தில் டி.எம்.சௌந்தரராஜன்

மந்திரி குமாரி [1950] படத்தில் ஜிக்கி

சம்சாரம் [1951] படத்தில் ஏ.எம்.ராஜா

பெற்ற தாய் [1952] படத்தில் பி.சுசீலா

ஜாதகம் [1953] படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ்

பொன் வயல் [1954] படத்தில் சீர்காழி கோவிந்தராஜன்

போன்றோரும் ,இசையமைப்பில் மேற்குறிப்பிடட புதியவர்களும் அறிமுகமாகியிருந்தனர்.

பாடும் பாணியிலும் , இசையமைப்பிலும் புதிய முறை அரும்பிய காலம் என்பதை அக்காலப் பாடல்கள் சில நிரூபணம் செய்கின்றன.திரைப்படங்களில் சமூகக் கதையமைப்பு மாற்றமும் அதற்குத் தகுந்தற்போல இசையும் மெல்லிசைமாற்றம் பெறத் தொடங்கியது.பெரும்பாலும் அக்கால ஹிந்தி இசையை ஒட்டியே அவை அமைந்திருந்தன.

ஆயினும் ஹிந்திப்பாடல்களை தழுவாத வகையில் வாத்திய அமைப்பைக் கொண்ட பாடல்களும் ஆங்காங்கே வெளிவரவும் செய்தன.வலுவான ஹிந்தி இசையின் தாக்கத்தோடு போராடிய இசையமைப்பாளர்கள் காட்டிய சிறிய தனித்துவவீச்சுக்கள் தான் இவை என கருத வேண்டியுள்ளது.

ஆரம்ப காலத்தில் மெல்லிசைமன்னர்கள் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தவர்களாயினும் படைப்புத்திறனில் வீச்சைக் காண்பிக்க ஆர்வத்துடன் முனைந்து செயற்பட்டனர்.அபூர்வமான சில பாடல்களை அப்போதே தந்ததை இன்று அவதானிக்க முடிகிறது அவை இன்றும் ஆர்வத்துடன் கேட்கப்படுகிறது. எண்ணிக்கையில் குறைந்தளவு படங்களுக்கு இசையமைத்தமையும்,அதிக புகழ்பெறாமையும் இவர்களது தனித்துவம் வெளிப்படாத காலமும் இவையாகும்.

1950 களில் ஒருவகை மெல்லிசைப்போக்கு உருவாகியிருந்தது. பொதுவாக "மெல்லிசை " என இங்கு குறிப்பிடப்படும் இசை என்பது பாடலமைப்பில் , பிரயோகங்களில் எளிமை என்றே கருதப்படுகிறது.அவை வெவ்வேறு காலங்களில் வாத்திய அளவில் கூடியும் , குறைந்தும் பயன்படுத்தப்பட்டிருந்தன.மெல்லிசையில் வாத்திய இசையின் பங்கு அல்லது அடிப்படை என்பதே மெட்டின் இசைப்பண்பை வாத்திய இசையால் மெருகூட்டுவது எனக்கருதப்படுகிறது .இது காலத்திற்கேற்ப உயிர்த்துடிப்புமிக்க இசையை தர முனையும் இசையமைப்பாளர்களது ஆற்றலையும் , தனிப்பாதையையும் காட்டி நிற்கும்.மெல்லிசை என்பது   திரையிலும் ,வானொலியிலும் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாத்திய எண்ணிக்கையின் அளவிற்பார்பட்டதே என்பதையும் நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.

வானொலியில் எண்ணிக்கையில் குறைந்த வாத்திய அளவும் ,திரையில் அதிகமானஅளவிலும் பயன்பட்டிருக்கிறது என்பதும் அவதானத்திற்குரியது.

1953 இல் இசையமைக்க ஆரம்பித்த மெல்லிசைமன்னரின் சில பாடல்கள் சோடை போகவில்லை என்று சொல்லலாம்.அவர் அறிமுகமான ஜெனோவா படத்தில் வெளிவந்த சில பாடல்கள் அதற்கு சான்று பகர்கின்றன.

01 கண்ணுக்குள் மின்னல் காட்டிடும் காதல் ஜோதியே - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02 தேடியே மனம் ஓடுதே அன்பே என் ஆருயிரே - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன

03 துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில் - - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 எண்ணாமலே கண்ணே நெற்று - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:குழுவினர் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05 புதுமலர் வனம்தனை - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

06   பரலோக மாதா பரிதாபமில்லையா - படம்:ஜெனோவா 1952 - பாடியவர்கள்: பி.லீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

போன்ற பாடல்கள் இசைத்தட்டில் உள்ளன. இதில் "கண்ணுக்குள் மின்னல் காட்டும்" , மற்றும் "பரலோக மாதா பரிதாபமில்லையா" போன்ற பாடல்கள் இனிமையின் இலக்கை எட்டியிருக்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.

விஸ்வநாதனின் முன்னோடி இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றை இங்கே ஒப்பிட்டு பார்க்கும் போது மெல்லிசையின் இனிய தெறிப்புக்கள் பலவற்றை நாம் காண்கிறோம். ஜெனோவா படத்தில் பல பாடல்கள் இருப்பினும் " கண்ணுக்குள் மின்னல் காட்டும் " , " பரிதாபம் இல்லையா பரலோக மாதா " போன்ற பாடல்கள் இயல்பான நீரோடை போன்ற ஓட்டம் கொண்ட பாடல்களாக நம் நினைவில் நிலைத்து நிற்கின்றன.

அக்காலத்தில் வெளிவந்த திரைப்படப்பாடல்களோடு ஒப்பு நோக்கும் போது அதிபிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் காலத்தை ஒட்டிய இனிய பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை.

இத்தைய பின்னணியில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அறிமுகமான காலத்துக்கு முன்னர் வெளிவந்த பாடல்களை சற்று நோக்கினால் சிறந்த பல பாடல்கள் வெளிவந்ததை அவதானிக்கலாம்.

01 ஆகா ஆடுவேனே கீதம் பாடுவேனே   - படம்:அபூர்வ சகோதரர்கள் 1949   - பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.பானுமதி - இசை :எஸ்.ராஜேஸ்வரராவ் .

02 மானும் மயிலும் ஆடும் சோலை   - படம்:அபூர்வ சகோதரர்கள் 1949   - பாடியவர்கள்: பி.பானுமதி - இசை :எஸ்.ராஜேஸ்வரராவ்

03 பேரின்பமே வாழ்விலே - படம்:தேவகி 1952 - பாடியவர்கள்:திருச்சி லோகநாதன் + பி.லீலா - இசை :ஜி.ராமநாதன்

04 ஆசைக்கிளியை அழைத்து வாராய் தென்றலே - படம்:சின்னத்துரை 1951 - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + பி.லீலா - இசை :டி.ஜி.லிங்கப்பா

03 வானுலாவும் தாரை நீ இதயகீதமே - படம்:இதயகீதம் 1950 - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + டி.ஆர்.ராஜகுமாரி   - இசை :எஸ்.வி.வெங்கட்ராமன்

04 பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா   - படம்:சின்னத்துரை 1951   - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் - இசை :டி.ஜி.லிங்கப்பா

05 ஒ..ஜெகமத்தில் இன்பம் தான் வருவது எதனாலே   - படம்:சின்னத்துரை 1951   - பாடியவர்கள்:டி.ஆர்.மகாலிங்கம் + வரலட்சுமி   - இசை :டி.ஜி.லிங்கப்பா

05 சம்சாரம் சம்சாரம் சலகதர்ம சாரம்   - படம்:சம்சாரம் 1951   - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா   - இசை :ஈமானி சங்கர சாஸ்திரி

06 அழியாத காதல் வாழ்வின் - படம்:குமாரி 1950   - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா   - இசை :கே.வீ.மகாதேவன்

07 பேசும் யாழே பெண் மானே     - படம்:நாம் 1951   - பாடியவர்கள்:ஏ.எம்.ராஜா   - இசை :சி.எஸ்.ஜெயராமன்

08 ஆடும் ஊஞ்சலைப் போலே அலை - படம்:என் தங்கை 1952   - பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.லீலா - இசை :சி.என்.பாண்டுரங்கன்

09 காதல் வாழ்விலே கவலை தவிர்ந்தோம் - படம்:என் தங்கை 1952   - பாடியவர்கள்:டி.ஏ.மோதி + பி.லீலா - இசை :சி.என்.- இசை :சி.என்.பாண்டுரங்கன்

10 புது ரோஜா போலே புவி மேலே வாழ்வோமே -படம்: ஆத்ம சாந்தி [1952]- பாடியவர்கள் : டி.ஏ.மோதி + பி.லீலா - இசை :

தந்தை பெரியாரின் சீர்திருத்தக்கருத்துக்கள் புகழ்பெறத்தொடங்கிய இக்காலத்தில் அதன் ஆதிக்கம் சினிமாவிலும் எதிரொலித்தது. பொருளற்ற புராணப்படங்களைப் பார்த்து சலிப்படைந்த மக்களை பாடல்களால் சோபையூட்டிக்கொண்டிருந்த சினிமாவில் சமூகக்கதைகளை கொண்ட விழிப்புணர்வு கருத்துக்கள் தலையெடுக்கவும் தொடங்கின.எதற்கெடுத்தாலும் பாடிக்கொண்டிருந்த சினிமாவை உரையாடல் பக்கம் திருப்பியவர்கள் திராவிட கழகத்தினரே!

திராவிட இயக்கக் கருத்தோட்டம் முன்னணிக்கு வந்துகொண்டிருந்த இக்காலத்தில் ,அந்த இயக்கம் சார்ந்த கதாசிரியர்களான அண்ணாத்துரை , கருணாநிதி ,கண்ணதாசன் , நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் , கே.ஆர் ராமசாமி ,எம்.ஜி.ராமசந்திரன் , சிவாஜி கணேசன் ,எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் முன்னனிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

தங்கள் "இமேஜை " மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், தங்கள் பிரபல்யமாவதற்கும் திராவிட இயக்கக் கருத்தை ஏற்றார்கள்.அது போலவே வளர்ந்து வரும் நடிகர்களின் புகழைக் காட்டி தமது இயக்கத்தை வளர்த்துவிட முடியும் என்று அரசியல் தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள்.அவர்களுக்குச் சாதகமாக அமைந்த சினிமாத்துறையை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள் இன உணர்வு ,தமிழுணர்வு போன்றவற்றை பயன்படுத்தி வெற்றிபெறத் துடித்தனர்.

புராண ,இதிகாசப் படங்களுடன் ,கைநழுவிப் போய்க்கொண்டிருந்த நிலமானியக்கருத்துக்களை மையமாகக் கொண்ட உணர்ச்சிமிக்க கதைகள் கருப்போருளாகின.கதைகளுக்கேற்ற பாத்திர வார்ப்புகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் நடித்துக் கொண்டிருந்தனர்.

தங்கள் அரசியல் கருத்துக்களை அலங்கார வசனங்களைக் கொண்டு கட்டமைத்ததைப் போல , இசையிலும் கட்டமைக்க முயன்றனர்.திராவிடக் கருத்துக்களுக்கு சார்பான கவிஞர்களுள் பாரதிதாசன் பரம்பரைகவிஞர்கள் உருவானார்கள்.அவர்களில் உடுமலை நாராயணகவி முடியரசன் ,சுரதா , ஐயாமுத்து ,விந்தன் போன்றோர் 1950 களின் முன்னோடிக்கவிஞர்களாக விளங்கினர்

எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன்[1953] படத்தில் மக்களன்பன் எழுதிய " எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே " பாடல் தி.மு.க வினரின் அரசியல் கொள்கையை பிரதி பலித்தது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வசனகர்த்தாவாக வர விரும்பிய கண்ணதாசன் அதற்கு சரியான வைப்பு கிடைக்காததால் கன்னியின் காதலி [1949] படத்தில் பாடலாசியர் வாய்ப்பைப் பயன்படுத்தி அறிமுகமானார்.

பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கம்யூனிஸ்ட்கட்சி ஆதரவாளனாக தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.பாரதி , பாரதிதாசன் போன்ற பெருங்கவிகளின் கவிவீச்சைக் கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1954 இல் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் வளர்ச்சி மெதுவாகவே நகர்ந்தது.1952 ஆம் ஆண்டிலிருந்து 1959 வரையான காலப்பகுதியில் சுமார் இருபது படங்களுக்கு இசையமைத்தார்கள்.அவர்களின் சமகால இசையமைப்பாளர்கள் பல சிறந்த பாடல்களைத் தந்துகொண்டிருந்த வேளையில் தங்களையும் பேசவைக்குமளவுக்கு ஆங்காங்கே நல்ல பாடல்களையும் தந்தார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.அவர்கள் சிருஷ்டித்துத் தந்த பாடல்கள் சில இன்றும் நம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளுபவையாக விளங்குகின்றன.

சொர்க்கவாசல் [1954] படத்தில் சில பாடல்கள் :

01 "கன்னித் தமிழ் சாலையோரம் " என்று ஆரம்பமாகும் ஒரு பாடல் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்திருக்கிறது.இந்தப்பாடலில் திராவிட இயக்கக்கருத்துக்கள் முழுமையாக வெளிப்படுகின்றன.தமிழரின் பழம்பெருமையையும் சேரன் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை வைத்த பெருமையையும் பறைசாற்றும் இனிமையான இந்தப்பாடலை தேஷ் ராகத்தில் அமைத்து நம்மைக் கனிய வைத்திருக்கிறார்கள்.இப்பாடலைப் பாடியவர் நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி.

02 " நிலவே நிலவே ஆட வா நீ அன்புடனே ஓடிவா " என்ற பாடலையும் தேஷ் ராகத்தில் அமைத்து நெஞ்சில் இருக்க வைத்திருப்பார்கள்.குழந்தையை நிலவுக்கு ஒப்பிட்டு பாடுவதுடன் நிலவை விட குழந்தை அழகு என்பதாக அமைக்கப்பட்ட இந்தப்பாடலும் தேஷ் ராகத்திலேயே அமைக்கப்படுள்ளது.இப்பாடலைப் பாடியவர் கே.ஆர்.ராமசாமி.

03 " ஆத்மீகம் எது நாத்தீகம் எது அறிந்து சொல்வீரே " என்று ஆத்மா விசாரம் செய்யும் பாடல்

04 " மொழி மீது விழி வைத்தே முடிமன்னர் ஆண்ட தமிழ் நாடு " என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலும் தமிழ் பெருமையும் , திராவிட பெருமையும் பேசுகின்ற பாடல்.

05 " சந்தோசம் தேட வேணும் வாழ்விலே " என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு காதல்பாடல்.இனிமைக்கு குறைவில்லாமல் திருச்சி லோகநாதனும் டி.வி.ரத்தினமும் பாடிய பாடல்.

1955 இல் வெளிவந்த நீதிபதி படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :

01 " தாயும் சேயும் பிரிந்தைப் பார் சதியதனாலே " [ பாடியவர் :சி.எஸ்.ஜெயராமன் ] என்ற உணர்ச்சி

ததும்பும் துயர கீதம்.இந்தப்பாடலில் காலத்தை மீறியதாக, புதுமைமிக்க அமைந்த கோரஸ் பின்னணியில் ஒலிப்பதைக் கேட்கலாம்.

02 " உருவம் கண்டு என் மனசு உருகுது மனசு உருகுது " [பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + டி.எம்.சௌந்தரராஜன் ] என்று ஆரம்பிக்கும் நகைச்சுவைப் பாடல்.தங்குதடையற்ற நதியோட்டம் மிக்க பாடல்.கே.ஆர்.ராமசாமி , டி.எம்.சௌந்தரராஜன் இணைந்து பாடிய அபூர்வமான பாடல்.மெல்லிசைமன்னர்களின் இசையில் சௌந்தரராஜன் பாடிய இரண்டாவது பாடல் இது.

03 " பறக்குது பார் பொறி பறக்குது பார் " [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] இந்தப்பாடலும் திராவிட இயக்கக் கருத்தை பறை சாற்றும் பாடல்.

04 " வருவார் வருவார் என்று எதிர் பார்த்தேன் " [ பாடியவர்கள் : கே.ஆர்.ராமசாமி + ஏ.பி.கோமளா ] என்று தொடங்கும் நகைச்சுவைப்பாடல்.இருபக்க இசையாக ஒலிக்கும் இந்தப்பாடல் ஒரு இசைநாடகப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

1955 இல் வெளிவந்த குலேபகாவலி படத்தில் வெளிவந்த சில பாடல்கள் :

01 "வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே " [ பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் + பி.லீலா ] இந்தப்பாடல் பன்மொழியில் அமைந்த ராகமாலிகைப்பாடல்.

02 ஆசையும் என் நேசமும் [ பாடியவர் : கே.ஜமுனாராணி ] லத்தீனமெரிக்க இசையின் வீச்சையும் ,வாத்திய அமைப்பின் புதிய போக்கையும் , கோரஸ் இசையுடன் மிக அருமையாக அமைத்திருப்பார்கள்.

03 "சொக்கா போட்ட நாவாப்பு " - [பாடியவர் : ஜிக்கி ]

04 " கண்ணாலே பேசும் பெண்ணாலே " [பாடியவர் : ஜிக்கி ] மாயாலோகத்திற்கு அழைத்து செல்லும் உணர்வைத் தரும் கோரஸ் இசையுடன் அரேபிய இசையின் சாயலில் அமைக்கப்பட்டபாடலை ஜிக்கி வசீகர அதிர்வுடன் பாடிய பாடல்.

05 " அநியாயம் இந்த ஆட்சியிலே " [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] விஸ்வநாதன் இசையில் இவர் பாடிய முதல் பாடல் இதுவே.

06 " நாயகமே நபி நாயகமே " ;[ பாடியவர்கள்: எஸ்.சி.கிருஷ்ணன் + குழுவினர் ] இந்து - முஸ்லீம் ஒற்றுமை பற்றிய டைட்டில் பாடல்.எஸ்.சி.கிருஷ்ணன் உச்சஸ்தாயியில் அனாசாயமாகப் பாடிய பாடல்.

07 "மாயாவலையில் வீழ்ந்து மதியை இழந்து " [ பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் ] ஜி.ராமநாதன் பாணியில் அமைந்த இந்தப்பாடல் கரகரப்ரியா ராகத்தில் முதற் பகுதியும் நாட்டுப்புறப்பாங்கில் பிற்பகுதியும் நிறைவுறும் பாடல்

1956 தெனாலிராமன்

01 உலகெலாம் உனதருளால் மலரும் [ பாடியவர் :பி.லீலா ] டைட்டில்பாடல் , சிந்துபைரவி ராகப்பாடல்

02 சிட்டுப் போல முல்லை மொட்டு [ பாடியவர் :ஏ.பி.கோமளா ]

03 ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம்

04 கண்களில் ஆடிடிடும் ,,,,கன்னம் இரண்டும் மின்னிடும் [ பாடியவர்;பி.பானுமதி ] அரேபிய பாணி .

05 பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள் [ பாடியவர் : பி.பானுமதி ] சன்முகப்ப்ரியா நாட்டியப்பாடல்

06 புத்திலெ பாம்பிருக்கும் ,,,கோட்டையிலே ஒரு காலத்திலேயே [ பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரரராஜன் + வி.என்.நாகையா

07 உல்லாசம் தேடும் எல்லோரும் ஒரு நாள் [ பாடியவர் : கண்டசாலா ]

1955 போட்டர் கந்தன்

01 வருந்தாதே மனமே வீணே வருந்தாதே மனமே - [ பாடியவர் : எஸ்.சி.கிருஷ்ணன் ]

1957 குடும்ப கௌரவம் [1957] படத்தில் " சேரும் காலம் வந்தாச்சு " [பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + கே.ஜமுனாராணி ]

1957 இல் வெளிவந்த மகாதேவி படம் மெல்லிசைமன்னர்களுக்கு மிக முக்கிய படமாக அமைந்தது.

மரபு ராகங்களில் அலங்காரம் செய்வதை அழகு பார்த்த அக்காலத்தில் ,அதன் வடிவத்திற்குள் உணர்ச்சிபாவம் கொப்பளிக்கும் அற்புதமான பாடல்களையும்   தந்தார்கள்.

01 சிங்கார புன்னகை கண்ணாராக் கண்டாலே சங்கீத வீணையும் ஏத்துக்கம்மா- பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதி தேவி + குழுவினர்

" பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால் பேசாத சிற்பங்கள் ஏதுக்கமா" என்ற அருமையான கவி வரிகளை தாலாட்டில் அளித்த இந்தப்பாடல் தாலாட்டு மரபில் முன்பு வெளிவந்த பாடல்களை உடைத்து புதுமரபை ஏற்படுத்தியது.மென்மையும் , இனிமையும், தாய்மையும் ஒன்று குழைந்து வரும் இனிய குரல்களுடன் , மகிழ்வின் ஆரவாரத்தை வெளிக்காட்டிட கைதட்டல் போன்றவற்றை மிக லாவகமாகப் பயன்படுத்திய பாடல்..

கேட்கும் தருணங்களிலெல்லாம்   மெய்சிலிர்ப்பும் , நெகிழ்வும் தருகின்ற பாடல்.இப்பாடலின் வெற்றியால் பின் வந்த காலங்களில் தாலாட்டு என்றால் ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணம் அமைத்துக் கொடுத்த பாடல் எனலாம்.இந்த பாடலின் வெற்றி "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல " பாடல் உருவானதின் பின்னணியில் இருந்தது என்று கூறலாம்.

"ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஓட்டுவோம் -" பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர்

விவசாயிகள் பாடுவதாக அமைக்கப்பட்ட கொண்டாட்டமும் , களிப்பும் பொங்கும் பாடல்.பாடலில் கோரஸ், கைதட்டல் மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.பாடலின் நடுவே காதலர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பாங்கில் " மனசும் மனசும் ஒன்றா சேர்ந்தா மறக்க முடியுமா " என்ற வரிகளில் கனிவும் , இனிமையும் பொங்கி வர செய்யும் இசை மனதை பறித்துச் செல்லும்!

காதல் பாடல்களிலும் மென்மையைக் காண்பிக்கும் "கண்மூடு வேளையிலும் காலை என்ன கலையே" , "சேவை செய்வதே ஆனந்தம்" போன்ற அழகான பாடல்களையும் , பட்டுக்கோட்டை க்கல்யாணசுந்தரம் எழுதிய கருத்துக் செறிந்த தத்துவப்பாடல்களான " குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் ", " தாயத்து தாயத்து " போன்ற பாடல்களையும் அதனதன் இயல்புகளை வெளிப்படுத்தும் வகையில் அற்புதமாக இசையமைத்துள்ளார்கள்.

குறிப்பாக "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் " என்ற பாடலில் பட்டுக்கோட்டையாரின் அற்புதவரிகளை எழுச்சியுடனும் நெகிழ்சசியுடனும் இசைத்து உணர்ச்சியின் உச்சத்தை தொடுகிறார்கள். இந்தப்பாடலுக்கு அவர்கள்   தெரிந்தெடுத்த ராகம் அவர்களின் நுண்ணுணர்வைக் காட்டும்.

"காமுகர் நெஞ்சில் நீதியில்லை " என்று தொடங்கும் ஜமுனாராணி பாடிய நெஞ்சை உருக்கும் பாடல். படத்தின் நாயகி துயரத்தின் எல்லையில் நின்று பாடும் சோகத்தால் மனதை துருவித் துளைக்கும் பாடல்.

உணர்ச்சிமிக்க பாடல்களுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஜெ.பி.சந்திரபாபு பாடிய " தந்தானா பட்டு பாடணும் " , "உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு " போன்ற பாடல்களையும் நாம் கேட்கலாம்

ஆரம்ப காலங்களில் மெல்லிசைமன்னர்கள் ஒருசில படங்களுக்கு இசையமைத்தாலும் படைப்புத் திறனில் வீச்சைக் காண்பிக்க முனைந்து செயல்பட்டனர் என்பதை உணரக்கூடியதாகவே உள்ளது.

மெல்ல மெல்ல தங்கள் தனித்துவத்தை காட்ட தலைப்பட்டதை இக்காலங்களில் காண்கிறோம்.

1959 இலிருந்து அவர்களது இசைப்பயணம் மெல்லிசையின் புது வண்ணத் தேடல்களை நோக்கிப் பயணித்தது.புதிய வாத்தியங்களும் , அவற்றில் எழும் நுண்ணிய ஒலியலைகளை கலையழகுடன் துணிகரமாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.

மேலைத்தேய இசையின் தலையீடு ஏற்படத் தொடங்கியவுடன் சினிமா இசையிலும் புதிய புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.மேலைத்தேய இசையின் தாக்கம் உள்ளடக்கத்திலும் ம்மாற்றங்களை ஏற்படுத்தியது.ஆயினும் அவர்களது இசை மரபிசையின் பண்புகளுடனேயே இசைந்து வெளிப்பட்டது.

"பக்கமேளம்" என்று ஜி.ராமநாதனால் வர்ணிக்கப்பட்ட வாத்திய இசைச் சேர்ப்பு இவர்கள் காலத்திலேயே புதிய நிலையை எட்டியது.புதிய , புதிய வாத்தியக்கருவிகளின் தனித்துவக் கூறுகள் அக்கால வழக்கில் இருந்த ஒலியமைப்பிலிருந்து வேறுபடுத்திக்காட்டியது.

காலாவதியாகிப் போன மந்திர , மாயாஜாலக் கதைகளும் , புராணக்கதைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தமிழ்சினிமாவில் 1950 களில் சமூகக்கதைகள் அரும்பத் தொடங்கின.அவை துரிதகதியில் முன்னேறி 1950 களின் நடுப்பகுதியில் தீவிரம் பெற்று வளந்தது இக்கால திரையிசையை அவதானிப்பவர்கள் செவ்வியலிசையின் பாரிய தாக்கத்தையும் தயங்கி நின்ற மெல்லிசையையும் அவதானிப்பர்.

ஆயினும் ஐம்பதுகளில் அரும்பிய மெல்லிசை ஐம்பதுகளின் இறுதியில் பெருகி அறுபதுகளில் பெரும் பாய்ச்சலைக்காட்டுகிறது.இந்தப்போக்கின், புதிய வாரிசுகளாக மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினை நாம் கருதவேண்டியுள்ளது.மெல்லிசை இயக்கத்தை செயலில் காட்ட உத்வேகத்துடன் செயல்பட்டனர்.

இசை என்பது கலை என்ற அம்சத்தில் திரை இசையின் கலைப்பெறுமானம் முக்கியமானதாக நோக்கற்படவேண்டும் என்பதும் புதிய வாத்தியக்கருவிகள் கலையம்சத்துடன் பயன்படுத்த வேண்டும் என்கிற சீரியபார்வையும் இவர்களிடமிருந்தது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

ஹிந்தி திரையிசையின் நவீனமும் , இனிமையுமிக்க இசை இந்தியாவெங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் ,அது பற்றிப்பிடித்த வாத்திய இசைக்கோர்வைக்கு நிகராக தாங்களும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தததையும் மெல்லிசைமன்னர்களிடம் காண்கிறோம்.

இவர்களது முன்னோடி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன், சுப்பைய்யாநாயுடு, எஸ் .வி. வெங்கட்ராமன் மற்றும் அக்காலத்திலிருந்த , பல இசை ஜாம்பவான்கள் தந்த இனிய பாடல்களுக்கு மத்தியில் இவர்களது மெல்லிசை முயற்ச்சிகள் அரும்பின.

தமிழ் திரைப்படத்தின் பொற்காலப் பாடல்கள் என்று அக்காலத்திய பாடல்களைச் சிலர் சொல்லுமளவுக்கு தமிழ் செவ்விசை சார்ந்த மெல்லிசைப்பாடல்கள் வெளிவந்து கொண்டிருந்த காலமது.அவர்களின் ஆதிக்கத்தை எங்கனம் மீறினார்கள் என்பதும் சிந்திக்க வைக்கும் ஒன்றாகும்.

அக்காலத்தில் வெளிவந்த சில பாடல்களை நாம் உற்று நோக்கும் போது அப்பாடல்களின் வலிமையை நாம் உணரும் அதே நேரம் இவர்கள் எதிர் கொண்ட நெருக்கடியையும் விளங்கிக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு 1956 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள் :

பூவா மரமும் பூத்ததே   -படம்: நான் பெற்ற செல்வம் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி   - இசை :ஜி.ராமாநாதன்

இனிதாய் நாமே இணைந்திருப்போமே   -படம்: காலம் மாறிபோச்சு   [1956]- பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் + ஜிக்கி   - இசை :மாஸ்டர் வேணு

அழகோடையில் நீந்தும் இள அன்னம்   -படம்: கோகிலவாணி   [1956]- பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் + ஜிக்கி   - இசை :ஜி.ராமநாதன்

திரை போட்டு நாமே மறைத்தாலும் -படம்: ராஜா ராணி   [1956]- பாடியவர்கள் : ஏ .எம்.ராஜா + ஜிக்கி   - இசை :டி.ஆர் பாப்பா

ஆகா நம் ஆசை நிறைவேறுமா -படம்: தாய்க்குப் பின் தாரம் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.பானுமதி   - இசை :கே.வி மகாதேவன்

நாடகம் எல்லாம் கண்டேன் -படம்: மதுரைவீரன் [1956]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி   - இசை :ஜி.ராமாநாதன்

1956 ம் ஆண்டு வெளிவந்த, மெல்லிசைமன்னர்களின் சில பாடல்கள் :

1956 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் பாசவலை , தென்னாலிராமன் ஆகிய இரண்டு படங்களுக்கு மேல்லிசைமன்னர்கள் இசையமைத்தார்கள்.

பாசவலையில் " உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் ", " அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை ". போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் இணைந்த முதல் படம் பாசவலை ஆகும்.

தென்னாலி ராமன் படத்தில் இடம் பெற்ற " ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் " என்ற செவ்வியலிசைப்பாடலும், " உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் " என்ற பாடலும் , " அலை பாயும் கண்கள் அங்கும் இங்கும் " என்று பானுமதி பாடும் அரேபிய பாணியிலமைந்த பாடலும் , " சிட்டு போலே முல்லை மொட்டுப்போலே " என்று ஏ.பி.கோமளா பாடிய பாடலும் குறிப்பிடத்தக்கன.

1957 ம் ஆண்டு வெளிவந்த சில பாடல்கள்

*** வாடா மலரே தமிழ் தேனே -படம்: அம்பிகாபதி   [1957]- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.பானுமதி   - இசை :ஜி.ராமாநாதன்

*** ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா   -படம்: மக்களைப் பெற்ற மகராசி     [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ்   + சரோஜினி   - இசை :கே.வி. மகாதேவன்

*** கம கமவென நறுமலர் மணம் வீசுதே -படம்: சமய சஞ்சீவி   [1957]- பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + ஜிக்கி   - இசை :ஜி.ராமாநாதன்

*** தேசுலாவுதே தென் மலராலே -படம்: மணாளனே மங்கையின் பாக்கியம்   [1957]- பாடியவர்கள் : கண்டசாலா   + பி.சுசீலா   - இசை :ஆதி நாராயணராவ்

1957 ம் வருடம் வெளிவந்த இன்னும் சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாக இருக்கும்

** பூவா மரமும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே - படம் :நான் பெற்ற செல்வம் [1957] -இசை :ஜி.ராமாநாதன்

** இன்பம் வந்து சேருமா - படம் :நான் பெற்ற செல்வம் [1957] - இசை :ஜி.ராமாநாதன்

** இக லோகமே இனிதாகுமே - படம் :தங்கமலை ரகசியம் [1957] -டி.ஜி.லிங்கப்பா

** அமுதைப்பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ   - படம் :தங்கமலை ரகசியம் [1957]

** இதய வானிலே உதயமானது - படம் :கற்புக்கரசி [1957] - இசை :ஜி.ராமாநாதன்

** கனியோ பாகோ கற்கண்டோ   - படம் :கற்புக்கரசி [1957] - இசை :ஜி.ராமாநாதன்

** நிலவோடு வான் முகில் விளையாடதே   - படம் :ராஜா ராணி   [1957] - இசை :கே.வி. மகாதேவன்

** வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே - படம் :மல்லிகா [1957] -டி.ஆர்.பாபபா

** வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே   - படம் :கோமதியின் காதலன்   [1957] - இசை :ஜி.ராமாநாதன்

** மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி - படம் :கோமதியின் காதலன் [1957] - இசை :ஜி.ராமாநாதன்

மரபுணர்வு மேலோங்கிய இசையமைப்பாளர்களை ஒட்டியே மெல்லிசை மன்னர்களும் பாடல்களைத் தரமுனைந்ததை 1950 களின் இறுதிவரையில் காண்கிறோம்.கதையின் போக்கு மற்றும் பாத்திரங்களின் தன்மைகளுக்கு ஏற்ப வகைமாதிரியான பாடல்களைக் கொடுத்த முன்னையவர்கள் காட்டிய வழி தடத்திலேயே தங்கள் இசைப்பயணத்தை மேற்கொண்டு வாய்ப்புகளைத் தம் வசமாக்கினர்.

புதியவர்களுக்குரிய உத்வேகத்தையும் கற்பனை வீச்சையும் அக்காலப்பாடல்களில் நாம் காணவும் செய்கிறோம்.மரபு வழியில் நின்று கொண்டே தமது புதுமைக்கண்ணோடடத்தையும் மெதுவாக நகர்த்திய வண்ணமுமிருந்தனர்.



இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் :

செவ்வியல் இசை  சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது  முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அல்லது அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்று முனைப்பு காட்டும் வகையில் செவ்வியலிசை ராகங்களில் நேர்த்தியான பாடல்கள் தந்தமை  முக்கிய கவனம் பெறுகின்றன

அம்பிகாபதி படத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்த " வாடா மலரே தமிழ் தேனே " என்ற  புகழபெற்ற முகாரி ராகப்பாடலுக்கு இணையாக தம்மாலும் சோகம் ததும்பும் முகாரி ராகத்தில் " கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் " [ சிவகங்கைச் சீமை 1959] என்ற பாடலை அமைத்துக் காண்பித்தார்கள்.

"வாடா மலரே தமிழ் தேனே "பாடல் சோக ரசம் பொழியும் ராகத்தில் காதல் மகிழ்ச்சியை வெளிப்புத்தியது புதுமையாகப் பேசப்படட காலம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இவைமட்டுமல்ல ராகங்களின் அடிப்படையில் பாடல்கள் அமைப்பதிலும்  ராகங்களின் பிரயோகங்களிலும் ஆழமும் , நுண்மையும் காட்டும் வல்லமை தங்ளுக்கு உண்டு என்று காட்டித்  தம்மை நிலைநிறுத்திக் காண்பித்தார்கள்.அக்காலத்தில் பெருகியிருந்த  செவ்வியலிசை சார்ந்த பாடல்களைக் கொண்டு நாம்நோக்குதல் பொருத்தமாக இருக்கும்.

மெல்லிசைமன்னர்களின் முன்னோடிகளினதும் அவர்களது  சமகாலத்தவர்களினதும் பாடல்களுடன் ஒப்பிடுப்பார்த்தால் புரியும். சில எடுத்துக்காட்டுக்கள் :

எல்லாம் இன்ப மாயம் – படம்:மணமகள் [1951] – பாடியவர்கள் :பி.லீலா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.ஆர்.சுப்பராமன் நீயே கதி ஈஸ்வரி – அன்னையின் ஆணை 1958 – பாடியவர் : பி.லீலா – இசை : எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு

வேலன் வருவாரோடி வடிவேலன் – படம்: திருமணம் [1957] – பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி – இசை: எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு

ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயம் அருள் – படம்: ராணி லலிதாங்கி [1958] – பாடியவர்கள் :பி.லீலா + டி.பி.ராமசந்திரன் – இசை: ஜி.ராமநாதன்

தாயே உன் செயல் அல்லவோ – படம்: இரு சகோதரிகள் [1957] – பாடியவர்கள் :பி.லீலா + ML வசந்தகுமாரி – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்

நெஞ்சிருக்கும்வரைக்கும் நினைவிருக்கும் – படம்: ராணிசம்யுக்தா 1962 – பாடியர்: பி.சுசீலா – இசை : கே.வீ.மகாதேவன்- ராகம் சாருகேசி

ஆடும் அழகே அழகு – படம்:ராஜ ராஜன் [1956] – பாடியவர்கள் :சூலமங்கலம் சகோதரிகள் + பி .லீலா – இசை: கே.வீ.மகாதேவன்.

இது போன்ற செவ்வியல் இசைசார்ந்த பாடல்களுக்கு மெல்லிசைமன்னர்களும் ஈடு கொடுத்து இசைத்தார்கள் என்பது முக்கியமான அம்சமாகும்.

மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளியான செவ்வியலிசை சார்ந்த பாடல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்:

01  ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே- படம் : தென்னாலிராமன்[ 1956 ] - பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம்  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு - படம் :மகனே கேள் [1957] - பாடியவர்கள் : சீர்காகாழி கோவிந்தராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி -ராகம் :கல்யாணி

இரு பெரும் பாடகர்கள் "சவால்" என்று சொல்லத்தக்க வகையில் இணையில்லாமல் பாடிய பாடல்.பாலும் , தேனும் கலந்த இனிமை என்று சொல்வார்களே, அது தான் இந்தப்பாடல் என்று துணிந்து சொல்லிவிடலாம்.

பட்டுக்கோட்டையாரின் கவிநயம் மிக்க பாடல் வரிகளும்  கல்யாணி ராகமும் இணைந்த அசாத்திய பாடல் !

03  ஆடாத மனம் உண்டோ நடையாலங்காரமும் - மன்னாதிமன்னன் 1960 - பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : லலிதா

03  முகத்தில் முகம் பார்க்கலாம்  - தங்கப்பதுமாய்  1959 - பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :கல்யாணி

04  அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை - பாசவலை   1956- பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன்  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :கரகரப்ரியா

05  மோகனைப் புன்னகை ஏனோ  - பத்தினித் தெய்வம்   1956- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் ++ பி.சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :மோகனம்

06  வருகிறார் உனைத்தேடி மணவாளன் நானே என்று   - பத்தினித் தெய்வம்   1956- பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி  + சூலமங்கலம் ராஜலட்சுமி   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :அடானா

கற்பனையான அரசகதைகளும் சரித்திர மற்றும் புராண கதைகளும் வெள்ளப்பெருக்கென ஓடிய காலம் மாறி சமூகக்கதைகள் சார்ந்த திரைப்படங்கள் ஊக்கம் பெறத  தொடங்கியது 1950 களின் இறுதியிலேயேயாயினும்   அவற்றின் தொடர்ச்சி 1960 களிலும் சில  இடைச் செருகலாக ஆங்காங்கே வெளிவரவும் செய்தன என்பதையும்  மறுப்பதற்கில்லை.

உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில்  உயிரோட்டமாகப் படைப்பதில்  முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில்  கதாபாத்திரங்களின் மன உணர்வை  இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.

தங்கப்பதுமை படத்தில் , " வாய் திறந்து சொல்லம்மா " என்ற பாடலில் ஒரு மாறுதலாக ,மன எழுச்சி தரும் வகையில் உணர்ச்சிக்கு கொந்தளிப்பை ,மனதை கசக்கிப்பிழியும் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள்,

வாய் திறந்து சொல்லம்மா உன் மக்களின் கதை கேளம்மா - படம் :தங்கப்பதுமை [1959] - பாடியவர்: பி.லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. செம்பும் கல்லும் தெய்வமென்று நம்புவோர்கள் பித்தரென்று

சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ? சிற்பிகள் செதுக்கி வைத்த

சித்திரச் சிலைகளுக்குள் தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ? ,,,,

என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கடவுளை சீண்டும் சிந்தனை வரிகள் கொண்ட உணர்ச்சிமிக்க பாடல். தான் பாடிய பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்பாடல் தான் என்று , மகத்தான பால பாடல்களைப் பாடிய பி.லீலா குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில்  உயிரோட்டமாகப் படைப்பதில்  முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில்  கதாபாத்திரங்களின் மன உணர்வை  இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.

1950 களின் ஒரு போக்காக " ட டா , ட டா, ட டா .டாடடா " என்ற ஓசை பிரயோகம் பரவலாக பாடல்களில் பயன்படுத்தப்பட்டது.சில பாடல்களில் இசை கரடு முரடாகவும் இருந்தது என்பதும் ,குறிப்பாக 1950 களில் வந்த ஹிந்திப்பாடல்களின் மெட்டுக்களை நேரடியாகக் கொண்டமைந்த பாடல்களில் இத்தன்மையை நாம் காண்கிறோம்.

1950 களின் திரையின் மெல்லிசைப்போக்கை அவதானிப்பவர்கள் புதிய போக்கு ஒன்று அங்கொன்றும் , இங்கொன்றுமாகச் சில பாடல்கள் மூலம் மெதுவாக வளர்ச்சி அடைந்து வந்ததை அவதானிக்க முடியும்.

ஒருபக்கம் பழமையை உயர்த்திப்பிடித்த அதே நேரம் மறுபக்கம் புதுமையையும் ஆங்காங்கே  உயர்த்திப்பிடித்து அற்புதமான பாடல்களைத் தந்து இசைரசிகர்களைக் கிறங்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி !

அதன் சாட்சியாக சில பாடல்களை இங்கே உதாரணம் காட்டலாம்.

01  விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே-  படம்: புதையல் [1957] - பாடியவர்கள் :சி.எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

02  தென்றல் உறங்கிய போதும் -  படம்: பெற்ற மகனை விற்ற அன்னை  [1957] - பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா  + பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

03  துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் -  படம்: தலை கொடுத்தான் தம்பி [1957] - பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா  + பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி 04  கண்மூடும் வேளையிலும் கலை என்ன  கலையே  -  படம்: மகாதேவி  [1957] - பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா  + பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி 05  தங்க மோகன தாமரையே -  படம்: புதையல்   [1957] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

06  என் வாழ்வில்  புதுப்பாதை கண்டேன்  -  படம்: தங்கப்பதுமை   [1957] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

07  சின்னஞ்  சிறு கண்மலர்   -  படம்: பதி பக்தி    [1958] - பாடியவர்கள் :பி.சுசீலா - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

08  வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே   -  படம்: பதி பக்தி    [1958 - பாடியவர்கள் :டி.எம்.சௌந்தரராஜன்  - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

08  ராக் அண்ட் ரோல்     -  படம்: பதி பக்தி    [1958 - பாடியவர்கள் :ஜெ.பி.சந்திரபாபு + வி.என்.சுந்தரம்   - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி 09 மழை கூட ஒருநாளில்    -  படம்: மாலையிடட மங்கை     [1959] - பாடியவர்கள் :எம்.எஸ்.ராஜேஸ்வரி  - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

09 இல்லறம் ஒன்றே நல்லறம் என்றே     -  படம்: மாலையிடட மங்கை     [1959] - பாடியவர்கள் :பி.சுசீலா   - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

10 செந்ததமிழ் தென் மொழியாள்      -  படம்: மாலையிடட மங்கை     [1959] - பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம்   - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

11 நானன்றி யார்  வருவார்   படம்: மாலையிடட மங்கை     [1959] - பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம் + ஏ.பி.கோமளா    - இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி

செவ்வியல் இசையின் இறுக்கம் தளர்ந்து ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மெல்லிசைப் போக்கின் வேகத்தைச் சற்று அழுத்தம் கொடுத்து நகர்த்தியதுவே மெல்லிசைமன்னர்களின் பாரிய பங்களிப்பாக இருந்தமை இக்காலகடடத்தின் பங்களிப்பாக இருந்தது.

வெற்றிக்கனிகளைதட்டிப்பறிக்க விந்தைதரும் மாயாஜாலக் காடசிகளுடன் அமைந்த புராணக்கதைகள் மட்டுமல்ல சமகால சமூக வாழ்வை அழகுடன் சொன்னாலும் வெற்றியளிக்கும் என்பதை இயக்குனர் ஸ்ரீதர்  கல்யாணப்பரிசு [1959] படத்தின் மூலம் எடுத்துக்காட்டியமை தமிழ் திரை வரலாற்றில் புதிய உடைப்பை உண்டாக்கியது.அப்பாடத்தின் அபார வெற்றியும் , பாடல்களின் மெல்லிசை ஓங்கிய தன்மையும் மெல்லிசைக்கான புதிய பாதையை அகலத்திறந்து விட்டது எனலாம். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா புகழின் உச்சிக்கு சென்றார்கள்.ஏ.எம்.ராஜா சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளர் என்ற அடையாளமும் பெற்றார்.

கல்யாணப்பரிசு படத்தில்

" வாடிக்கை மறந்ததும் ஏனோ "

" ஆசையினாலே மனம்"

" உன்னைக்கண்டு நான்  ஆட"

" துள்ளாத மனமும் துள்ளும்

" காதலிலே தோல்வியுற்றான்"

போன்ற பாடல்கள் மெல்லிசையின் உயிர்த்துடிப்புகள் மேலோங்கி நிற்கும் சாகாவரம் பெற்ற பாடல்களாக இன்றும் விளங்குகின்றன.

"வாடிக்கை மறந்ததும்" ஏனோ பாடலில் சைக்கிள் மணி ஒலியும் ,"ஆசையினாலே மனம்"  பாடலில்  I see ,Really ,Sorry   ஆங்கில வார்த்தைகளை கல்லூரியில் படிக்கும் காதலர்கள் பாடுவதாக சமயோசிதமாக புதுமையாக ஆங்காங்கே பயன்படுத்திதுடன் ஹம்மிங்கையும் இணையாகப் பயன்படுத்திய பாடல்.

இயக்குனர் ஸ்ரீதர் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா கூட்டணியில் தொடர்ந்து வெளிவந்த தேன் நிலவு [1960] ,விடிவெள்ளி [1960] மற்றும் அன்புக்கோர் அண்ணி [1960] போன்ற படங்களில் மெல்லிசைப்பாடல்கள் விட்டுவிடுதலையாகிப் பறந்து கொண்டிருந்தன.

தேன்நிலவு படத்தில் " சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் " " நிலவும் மலரும் பாடுது " " காலையும் நீயே மாலையும் நீயே " " மலரே மலரே தெரியாதா " " ஊர் எங்கு தேடினேன் " " பாட்டுப் பாடவா"

விடிவெள்ளி படத்தில்

" எந்நாளும் வாழ்விலே " " பண்ணோடு பிறந்தது தாளம் " " இடை கையிரண்டில் ஆட " " நினைத்தால் இனிக்கும் சுப தினம் " " கொடுத்துப்பார் பார் பார் " " காரு சவாரி ஜோரு "

" நான் வாழ்ந்ததும் உன்னாலே "

அன்புக்கோர் அண்ணி படத்தில் " ஒருநாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும்"

ஆடிப்பெருக்கு படத்தில் " கண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா "

" பெண்களில்லாத உலகத்திலே "

" காவேரி ஓரம் கவி சொன்ன காதல் "

" கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தான் "

" அன்னையின் அருளே வா வா வா "

" புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது "

" தனிமையிலே இனிமைக்கான முடியுமா "

உற்று நோக்கினால் எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த  மெட்டுக்களில்  , எளிய நடையிலமைந்த பாடல் வரியும் , மேலைத்தேய இசையைத் தொட்டு செல்லும் இயல்பு குன்றாத காதல் உணர்வும்,  துயரத்தில்  மூழ்கடிக்கும்  சோகரச இலக்கணமுமிக்க பாடல்களை மெல்லிசையின் போக்கிலமைந்திருப்பதையும்  அவதானிக்கலாம்.

" ஏ.எம் ராஜா , திரையிசையில் ஒரு முன்னோடி.அவருக்கு முன்னிருந்த இசையை மாற்றி , வடநாட்டுப்பாணியை ஆரம்பித்து வெற்றியும் கண்டார்.ராஜாவின் சங்கீதம் மேன்மை , இனிமை , மென்மை ஆகிய மூன்றின் சங்கமம் "  என்பார் அவரது சமகாலப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.[ திரை இசை  அலைகள் -1 ,  வாமனன் ]

இக்காலங்களில் மெல்லிசைப்பாங்கை முன்னிறுத்திய முக்கிய இசையமைப்பாளராக முன்னணிக்கு வந்துகொண்டிருந்தவர்  மெல்லிசைமன்னர்களின் சமகாலத்தவரான டி.ஜி.லிங்கப்பா. 1950 களிலிருந்தே சிறந்த பல பாடல்களைத் தந்தவர் .அவர் இசையமைத்த சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாகும்.

ஓ ,,ஜெகமத்தில் இன்பம் தான் வருவதும் எதனாலே - [மோகனசுந்தரம் 1950]

பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா - [ மோகன சுந்தரம் 1950] மதுமலரெல்லாம் புதுமணம் வீசும் - [கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி 1954]

தென்றலே வாராயோ இன்ப சுகம் தாராயோ - ஒரு நாள் 1956]

அமுதை பொழியும் நிலவே - [ தங்கமலை ரகசியம் 1957]

இக லோகமே இனிதாகும்- [ தங்கமலை ரகசியம் 1957]

கானா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா 1958]

சித்திரம் பேசுதடி  எந்தன் சிந்தை மயங்கித்தாடி -  [சபாஷ் மீனா 1958] தென்றல் உறங்கிடக் கூடுமடி  எங்கள் சிந்தை உறங்காது - [ சங்கிலித் தேவன் 1960]

படிப்புத் தேவை முன்னேற படிப்புத் தேவை - [சங்கிலித் தேவன் 1960 ] தாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே [ முரடன் முத்து 1965] ஏ.எம்.ராஜா ,டி.ஜி.லிங்கப்பா போன்றவர்கள் மெல்லிசைமுன்னோடிகள் என்பதையாரும் மறுத்துவிட முடியாது.துரதிஷ்டாவசமாக ஏ.எம்.ராஜா  ஒதுக்கப்படடமையும் , அல்லது ஓதுங்கியமையும் , டி.லிங்கப்பா , இயக்குனர் பி.ஆர் .பந்துலுவால் கன்னடப்படங்களில்   சிறப்பாகப்  பயன்படுத்தப்படடமையாலும் தமிழ் சினிமா இரு மாபெரும் இசையமைப்பாளர்களின் இசையை இழந்தது.

இசையமைப்பாளர்களின் திறமை ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அளவுக்கதிகமான தலையீடும் இனிய இசை தரமுனைந்தவர்களுக்கு கொடுக்கப்படட இடையூறுகள் கசப்பாகவே  இருந்தததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.இது பற்றி இசை ஆய்வாளர் திரு.வாமனன் "திரை இசை அலைகள் " நூலில் பின்வருமாறு எழுதுகிறார்.

ஏ.எம்.ராஜா

" படித்து படம் பெற்ற ராஜா , கண்டிப்பும் கட்டுப்பாடும் மிக்கவர்.தன் பணியைக் குறித்து படு சீரியஸான  கண்ணோட்டம்  உடையவர்.தன்னுடன் பணியாற்றுபவர்களும் அப்படியே இருக்க  வேண்டும் என்று நினைப்பார்.சினிமா உலகின் நெளிவு சுழிவுகளும் , சினிமா நபர்களிடம் பழகும் போது காட்ட வேண்டிய  நீக்கு போக்குகளும் ராஜாவுக்கு கைவராத விஷயங்கள்.....தான் எதிர்பார்க்கிற சூழ்நிலை ஒரு இடத்தில் இல்லை என்றால் ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு விட்டு பேசாமல் வீட்டுக்கு சென்று விடக்கூடியவர் ராஜா."

டி.ஜி.லிங்கப்பா கல்யாணம்  பண்ணியும் பிரம்மச்சாரி படத்திற்கு இசையமைப்பதில் லிங்கப்பாவுக்கு ஒரு சங்கடம் இருந்தது.பந்துலுவுக்கு மெட்டுப் போட்டுக் காட்டுவார்.ஓகே ஆகும்.நீலகண்டன் அவற்றை நிராகரிப்பார்.வேறு மெட்டுக்கள் போடச்  சொல்வார். " நீலகண்டன் சொல்ற மாதிரிச் செய்திடு " என்று இயக்குனருக்கு வீட்டுக் கொடுத்தார் தயாரிப்பாளர் பந்துலு. " கர்நாடக பாணியில் லைட்டா கொடுத்தா  பந்துலுவுக்குப் பிடிக்கும், ஆனா நீலகண்டன் பாமரமான இசையைத் தான் கேப்பார்.

நீலகண்டனுக்கு இருந்த இன்னொரு பழக்கமும் லிங்கப்பாவிற்கு நெருடலாக இருந்திருக்கிறது.

லிங்கப்பா மெடட்டமைத்தவவுடன்  திரைப்படக் கம்பனியில் வேலை பார்க்கும் டிரைவர் ,ஆபீஸ் பையன் எல்லோரையும் கூப்பிட்டு " எப்படி இருக்கு " என்று இசையமைப்பாளரின் முகத்திற்கு நேரேயே கேட்பாராம் நீலகண்டன். " நான் சங்கீத பரம்பரையியிலிருந்து வந்தவன்யா ...என் ரத்தத்திலே  இசை ஓடுது .......நீ யார் யாரையோ கேட்டுக்கிட்டிருக்கே .!?

இது போன்ற ஒரு சம்பவத்தை மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்," நான் ஒரு ரசிகன் " என்ற விகடன் தொடரில்  தனக்கு நேர்ந்த அனுபவத்தை  மிகுந்த மரியாதையுடன் பின்வருமாறு எழுதுகிறார். "...கொஞ்ச நாட்கள் கழித்து வாசன் ஸாரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.நானும் ராமமூர்த்தி அண்ணாவும் அவரைப் பார்க்கச் சென்றோம்." வாருங்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களே !" என்னு வெளியில் வந்து எங்களை அவரே வரவேற்றார். உள்ளே அழைத்து உட்க்காரச் சொன்னார்  பெரியவர் என்ற மரியாதையுடன் நாங்கள் நின்றுகொண்டே இருந்தோம். " நான் உட்காரச் சொல்றேன் .. உட்காருங்க .." என்றார் அன்போடு.நாங்கள் உட்கார்ந்தோம்.

" நீங்கள் பல படங்களுக்கு இசையமைச்சு நல்ல புகழோடு இருக்கீங்க ..என்னோட அடுத்த தயாரிப்பு " வாழ்க்கைப்படகு "! இந்தப் படத்துக்கு உங்களைத்தான் மியூசிக் டைரக்டரா  போடணும்னு எனக்கு வேண்டியவங்க, டிஸ்ரிபியூட்டர்கள் , நடிகர்கள் ,, ஏன் என் வீட்டில்கூட சொல்லிட்டாங்க... நான் உங்களை ரொம்ப இம்சை பண்ணுவேன். நான் நிறைய ஆட்களை வைச்சிருக்கேன் . இது நொள்ளை அது நொள்ளை குற்றம் சொல்லிக்கிட்டிருப்பாங்க .." என்று வாசன் சார் சொன்னார்.எனக்கு ஒன்றுமே புரியலே.ராமமூர்த்தி அண்ணனோ தொடய்யக் கிள்ளி " என்ன ...விசு .. போயிடலாமா ?"னு கிசுகிசுத்தார்.முழுசாத்தான் கேட்டு தெரிஞ்சுக்குவோம்னு " ஏன் சார் அப்பாடிச் சொல்றீங்க?"னு நான் கேட்ட்டேன்.

" இங்கே நிறைய ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து வெச்சிருக்கேன் அபிப்பிராயம் சொல்றதுக்கு .. இவங்கள்லாம் ஏதாவது சொல்லணுமென்கிறத்துக்காக சொல்வாங்க.... உங்களை ரொம்ப " பன்ச் " பண்ணுவாங்க .."  பன்ச் " பண்ணுவாங்க ..இதையெல்லாம் நீங்க சகிச்சுப்பீங்களா ?னு  வாசன் சார் கேடடார் .

யோசிக்கிறதுக்கு இரண்டு நிமிட டயம் கேட்டேன். " நான் வேணும்னா வெளியே போய் இருக்கட்டுமா ?" ன்னார் அவர் ரொம்ப பெருந்தன்மையோட. நாங்க போறதா சொல்லிட்டு வெளியே வந்தோம்.

மெல்லிசைமன்னருடன் இறுதிக்காலம் வரை பணியாற்றிய கவிஞர் காமகோடியான் எம்.எஸ்.வி பற்றிய  ஒருசம்பவத்தை  பின்வருமாறு நினைவு கூறுவதை பாருங்கள்

காமகோடியன் : பார் மகளே பார் படத்திலே , கவ்ஞர் கண்ணதாசன் வந்தாச்சு ,ஒரு பாட்டு எழுதி முடிச்சாச்சு.எம்.எஸ்.வீ நல்லா விசில் பண்ணுவாரு,நீரோடும் வைகையிலே பாடலை விசிலிலேயே பண்ணிட்டிருக்கிராரு ..நால்லாயிருக்கேடா பல்லவி போட்டிடுவோம் என்கிறார் கண்ணதாசன் ! கவிஞரே உங்க வேலை இன்னகைக்கு  முடிஞ்சுது.நாளைக்கு உட்காருவோம்.இது வந்து full song விசிலிலேயே பண்ணப்போறேன்.டேய் ,டேய் நல்லாயிருக்கிடா டுயூன் ,வார்த்தை போட்டா நல்லாயிருக்கும்.இதை புதிசா பண்ணுவோமே, நாளைக்கு சந்திப்போம்! கண்ணதாசன்  எழுந்திரிச்சு போயி நேரா சிவாஜி வாகினியில் இருப்பதை அறிந்து அங்கே  வாகினியிக்கு கார் எடுத்திட்டு போயி [ரெக்கார்டிங் நடப்பது ஏ.வீ. எம்மில் ] சிவாஜி சாரை கூட்டிக்கிட்டு நேரே இங்கே வந்திட்டாரு! சிவாஜி எம் எஸ் வீயை பார்த்து " என்னமோ ஒரு டியூன்  போட்டியாமே , எங்கே ஒருக்கா வாசிச்சுக் காட்டு !இவ்வளவு அருமையான டுயூனுக்கு 4 நிமிஷம் விசிலே  அடிச்சா சனங்களுக்கு போய் சேருமா பாட்டு !? கவிஞர் எழுதட்டும்ன்னு சொல்லிட்டு போயிட்டாரு !

[Endrum Nammudan MSV - 16/08/2015 | SEG 01 ]

1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவன  பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி  தமிழ் திரையிசையை நகர்த்தியது.

கதைகளின் நாயகர்களாக நடிப்பது மாறி தாங்கள் அடைந்த புகழால் மட்டுமல்ல, தங்கள் அரசியல் இயக்கத்தின் பின்புலத்தோடும் தமிழ் திரையின் மிகப்பெரிய நாயகர்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னணிக்கு வந்தார்கள்.

கதைகளில் நடிப்பது என்பது மாறி இந்த நடிகர்களுக்காக செயற்கையாகக்  கதைகள் தயாரிக்கப்படும் புதிய கலாச்சாரம் தமிழ் திரையில் உதயமாக  இருநடிகர்களும் மூல காரணமாயினர்.

வீரதீர சாகசம் புரிபவராகவும் , தாயன்புமிக்கவராகவும் ,நேர்மை, வாய்மையாளனாகவும் ,ஏழைகளின் நண்பனாகவும் , காதலிகளால் மட்டும் காதலிக்கப்படும்  கதாநாயகனாகவும்  எம்.ஜி.ஆரும் , துன்பத்துயரில் தவிக்கும் கதாநாயகனாகவும் , சோகத்தை வாரிச்சுமக்கும், நாயகனாகச் சிவாஜியும் தங்களுக்கெனத் தனிப்பாதையில் வலம்வரத் தொடங்கிய காலம்.இந்நிலையில் படித்த சாதாரண மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாயகராக ஜெமினி கணேசனும் முன்னணிக்கு வந்தார் . 1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள்  பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவனம்  பெற்றார்கள் என்று சொல்லலாம்.புதையல் , பதிபக்தி  , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி  தமிழ் திரையிசையை நகர்த்தியது.

பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து , கவிஞர் கண்ணதாசனால் தயாரிக்கப்படட "மாலையிடட மங்கை " பட இசையால் மெல்லிசைமன்னர்கள் பெரும் புகழ் அடைந்தார்கள்

1950 களில் வீச ஆரமபித்த மெல்லிசைகாற்றில் ஆங்காங்கே புது புது நறுமணங்களை தூவி ரசிகர்களைக் கவர்ந்து புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்.

1950 களிலேயே தலைதூக்கிய தெலுங்கு திரையின் மெல்லிசை, பத்து வருடங்கள் முன்னோக்கியதாவே இருந்தமை  மெல்லிசைமன்னர்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கும் என நம்பலாம். தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் தெலுங்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்து சிறந்த பாடல்களையும் தந்து  கொண்டிருந்தார்கள்.தென்னிந்திய இசையுலகில் எழுந்த இசையலையின் போக்குகளையும் மெல்லிசைமன்னனர்கள் பற்றுக்கோடாகக் கொண்டிருப்பர் என்றும் கருதலாம். எனினும் தெலுங்கு திரையிசை மெல்லிசைக்கு மடைமாற்றம் பெற்ற வேகத்தில் நிகழாமல் , தமிழில் அதற்கான காலம் 1960 களில் கனியும் வரை பொறுத்திருக்க நேர்ந்தது.

தமிழ் திரையிசையின் முன்னோடிகளின் வழியில் சற்று விலகிவர முனைந்ததும்  ஹிந்தித் திரைப்பட இசையின் அதிர்வலையிலிருந்து மீள முயற்சி செய்ததுடன் அதற்கு நிகராக பாடல்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டினார்கள்.



பட்டுக்கோட்டையாருடனான   இணைவும் , வாழ்வியல் பாடல்களும் :

1950  களின் நடுப்பகுதியில்    மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !

மரபில் உதித்து , புதுமையில்   நாட்டம் கொண்ட  மெல்லிசைமன்னர்களின் இசையுடன் மரபில் நின்று கொண்டே சொல்லும் கருத்தில் புதுமையும் காட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இணைவும் புதிய அலையைத் தொடக்கி வைத்தது.

பாரதி, பாரதிதாசன் போன்ற மகாகவிகளின் தொடர்ச்சியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பாரதியின் அடியொற்றி பல கருத்துக்களை கூறியவர்   என்ற முறையில் அதற்குப் பொருத்தமான இசை வடிவம் கொடுத்த இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களுக்கும் தனியிடம் உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

பாட்டு என்பதை பாங்கோடு  தந்த பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்  சமூக நலன் , ,மக்கள் நலன் என்ற அடிப்படையில் நாட்டார் பாடலின் வேரில் முகிழ்த்தெழுந்தவையாகும்.மண்வளச் சொற்களை சினிமாப்பாடல்களில் அள்ளி,அள்ளிப் பூசியதுடன்,மண்ணின்  உணர்ச்சி ததும்பும் பாமரப்புலமையை பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் புனைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.  காவிய நடைகளிலிருந்து மாறி உயிர்த்துடிப்புள்ள பொதுஜனங்களின் மொழியில் பாடல்கள் பிறந்தன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பற்றி பின்வருமாறு விவரிக்கிறார் அறிஞர் நா.வானமாமலை.

"சமூக மாறுதல், சமூக உணர்ச்சிகளுக்கேற்ப பாடலைகளைத் தோற்றுவிப்பவன் நாட்டார்கவி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  போல.அவர்களுடைய உணர்ச்சிகள் , மதிப்புகள் நலன்களுக்கு ஏற்றார் போல அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தகுதியானவற்றை  அவர் பாடினார்.அது ஏற்றுக்கொள்ளப்பட்டு , நாட்டாரது போர் முழக்கமாயிற்று.அது  நாட்டார் ரசனைக்காக மட்டுமல்ல அது சினிமா பார்க்கிற எல்லா வர்க்கங்களுடைய அனுபவத்திற்காகவும் எழுதப்பட்டதால் , நாட்டார் பண்பாட்டுக்கருவை , நாட்டார் மொழியிலும் , சிறிதளவு இலக்கிய மொழியிலும் பாடினார்.நாட்டுப்பாடல் எழுத்தறிந்தவர் அனுபவிப்பதற்காக உருமாறுகிறது.இதுவும் நாட்டுப்பாடலே .கல்யாணசுந்தரம் பாடல்கள் நாட்டு மக்கள் உணர்வு , நாட்டு மக்கள் பண்பாடு மதிப்புக்கள் , அவர்கள் ஆர்வங்கள் இவற்றை வெளியிடுகின்றன." [தமிழர் நாட்டுப்பாடல் - பேராசிரியர் நா. வானமாமலை ]

தமிழ் திரையைப் பொறுத்தவரையில் உடுமலை நாராயணகவி, கம்பதாசன் , மருதகாசி , தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன்  போன்றவர்களை நாட்டுப்புறப் பாங்கில் பாடல்கள் புனைந்தவர்களில் முக்கியமானவர்களாகக்  கருதலாம்.ஆயினும் இவர்களில் புதிய சகாப்தத்தை, சாதனையை படைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் மிகையில்லை.அவரின் பாட்டுத்திறத்தை சரியான வழியில் மதிப்பிடுகிறார் கம்யூனிஸ்ட் தலைவரும் சிறந்த கலைஞருமான தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள். /// சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புக்களையும் மன அசைவுகள் உணர்ச்சிப் பெருக்குகளையும் எளிமையாக நேர்பாங்காக உயிர் துடிப்பாகச் சொல்லும் மரபே நாடோடி மரபு. இதில் சிக்கலான கருத்துக்களுக்கும், உருவங்களுக்கும் இடமில்லை. எளிய விவசாய நாகரிகத்தின் அடிப்படையான உணர்வுகளை வெளியிட்டு வந்திருப்பதையே இந்த மரபில் பார்க்கிறோம். சிக்கல் நிறைந்த நிகழ்கால வாழ்க்கைத் தோற்றத்தை மிகச் சாதாரண கண்ணோட்டத்தில் வைத்துக் கூறுவதும், கேட்பவரின் நெஞ்சை உடனடியாகக் கவரும் விதத்தில் நேரான வழி வழியான ஆற்றலோடு வெளியிடுவதும் நாடோடி மரபின் இரட்டைக் கூறுகள். .........சிந்து, காவடிச்சிந்து, கும்மி, குறவஞ்சி, பள்ளு, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு, கண்ணிகள் முதலிய பாடல் உருவகங்களின் தோற்றங்களும் சித்தர்கள், தாயுமானவர், இராமலிங்கனார், பாரதி, கவிமணி, பாரதிதாசன் போன்றோர் தத்துவ, சமய, லௌகிக, அரசியல், சமுதாயக் கருத்தோட்டங்களை வெளியிட மேற்படி உருவகங்களையெல்லாம் வளர்த்துப் பயன்படுத்திய முயற்சியும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கவை. ....... அவர் பாடல்களில் நான் மிகச் சிறந்த இரண்டு கூறுகளைக் காண்கிறேன். ஒன்று நாடோடிப் பரம்பரை,அதாவது வழிவழி மரபு மற்றொன்று நவீன முறையில் வெளியிடுதல்[ Modern எஸ்பிரஸின் ] வழிவழி மரபையும் நவீன உணர்வையும் இணைத்துப் பாட்டுத்திறம் காட்டுவது இன்று மிகமிக முக்கியத் தேவையாக அமைந்துவிட்டது.// என்று விளக்குகிறார் ப.ஜீவானந்தம் . அந்தவகையில் சிறப்பு மிக்க பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம் கும்மி , பள்ளு , காவடி சிந்து , உழவர் பாட்டு , லாவணி , விடுகதை , தத்துவம் , கதைப்பாடல்,தாலாட்டு என நாட்டுப்புற மரபின் அத்தனை அம்சங்களையும் கொண்டு மண்வாசனையுடன் வெளிப்பட்டிருக்கிறது.

சினிமாப்பாடல்களில் பெரும்பான்மையானவை மெட்டுக்கு   எழுதப்படும் வழமையில் ,அந்த மெட்டுக்களையும்   தாண்டி, பாடல் வரிகளை வாசிக்கும் போது,  பாடலின் கருத்தில் எளிமையும், சிக்கலின்றி புரிந்து கொள்ளும் தன்மையும், கருத்துத் தெளிவும் நிறைந்தவையாக இருப்பதை  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில்  மிக இயல்பாய் காணலாம்.

மேற்குறிப்பிடட  நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன.பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட  பாடல்கள் போலவே  திகழ்கின்றன.

மெல்லிசைமன்னர்களுடன் பட்டுக்கோட்டையாரின்  அறிமுகம்  பாசவலை படத்தில் ஏற்படுகிறது.

அந்தப்படத்திலேயே குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிக் கிட்டால் கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்.... என்று தொடங்கும் பாடலில் நாட்டுப்புற பழமொழியையும் ,

பாகப்பிரிவினை படத்தில் "புள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளை யாரு _ இந்தப் பிள்ளை யாரு?

என்ற பாடலில் லாவணி பாடலையும் , அமுதவல்லி படத்தில்  [1958] ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில் மேடை  கட்டி ஆடும் எழிலோ. என்ற பாடலில் காவடி சிந்து பாடலையும்,

பதிபக்தி படத்தில் சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர் சிந்திடும் மலரே ஆராரோ! வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே ஆரிரோ… அன்பே ஆராரோ!

என்ற தாலாட்டையும்,

தமிழ் நாட்டின் கும்மிப்பாடலை சின்னச் சின்ன இழைபின்னிப் பின்னிவரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி – நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி தய்யத் தய்யா தத்தத்தானா தய்யத் தத்தத்தானா...

என்ற பாடலை "புதையல் " படத்தில் தந்ததுடன்  , வேறு பல இனிய பாடல்களையும் இப்படத்தில் தந்தார்கள்.

தமிழ்திரையின் ஒப்பற்ற கவிஞனாகத் திகழ வேண்டிய மாகவிஞன்,  பாரதி,பாரதிதாசனுக்குப் பின்வாராது வந்த மாமணியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்  வாழ்வு மிக இளவயதில்   ஓய்ந்தது.

நாட்டார் பாடல்களின் வண்டலை  தந்த மாகவிஞனின்  எதிரொலி அவருக்கு முன்னிருந்த கவிஞர்களையும் அவர் போல எழுத வைக்குமளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியே ஓய்ந்தது.

என்னதான் சிறப்பாகப் பாடல் எழுதினாலும் இனிய இசை  இல்லையென்றால் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டு விடும்.லாவகமும் நுடபமும் ஒன்றுகலந்த அவர்களின் பாடல்கள் காலத்தை கடந்து நிற்கின்றன. இசையும் பாடலும் ஒன்றை ஒன்று பிரியாத அற்புத ஆற்றல்களின் இணைவு அதை சாதித்திருக்கிறது.அந்த இனிய இசையை தந்த  புகழ் எல்லாம் மெல்லிசைமன்னர்களுக்கே !

பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் பாடல்கள் பற்றி அதிகம் பேசப்பட்டிருக்கிறது.ஆனால் மெல்லிசைமன்னர்களுடனான அவரின் இணைவு குறித்தோ அவர்களது இணைவில் வந்த பாடல்கள் பற்றிய  குறிப்புக்களை மிக அரிதாவே காண்கிறோம்.அது குறித்து மெல்லிசைமன்னர்களும் அதிகம் பேசியதில்லை.

1959 ஆம் வருட இறுதியில் காலம் மாகவிஞனுக்கு  முற்றுப்புள்ளி வைத்தாலும் , தன் வசப்பட்ட காலத்தில் பலவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாடல்களை புனைந்தவர் பட்டுக்கோட்டையார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,மெல்லிசைமன்னர்கள் இணைந்து தந்த புகழபெற்ற சில பாடல்கள். காதல் பாடல்களையும்  அற்புதமாக எழுதும் ஆற்றல்மிக்கவர் என்பதை நிரூபிக்கும் சில பாடல்கள்: 01  கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு - மகனே கேள் [1965 ] 02  முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப்பதுமை[1959 ] 03  இன்று நமதுள்ளமே பொங்கும் - தங்கப்பதுமை[1959] 04  அன்பு மனம் கனிந்த பின்னே -படம்:  ஆளுக்கொரு வீடு ஆண்டு: 1960 05  கொக்கரக்கோ சேவலே  படம்: பதிபக்தி [1958 ] 06  ஆடைகட்டி வந்த நிலவோ  படம்: அமுதவல்லி [ 1959 ] 07  சலசல ராகத்திலே  படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு : 19607 08  உனக்காக எல்லாம்… படம்: புதையல் [1957 ] 09  சின்னஞ்சிறு கண்… படம்: பதிபக்தி[ 1958 ]   [தாலாட்டு]

தத்துவப்பாடல்களில் புகழ் பெற்ற சில பாடல்கள் :

01  தாயத்து… படம்: மகாதேவி | ஆண்டு: [1957 ] 02  குறுக்கு வழியில்… படம்: மகாதேவி :[ 1957 ] 03  உனக்கேது சொந்தம் - பாதாம் :பாசவலை 04  ஆறறிவில் ஓர் அறிவு அவுட்டு படம்: மகனே கேள் [1965 ]

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பாடலாசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக நாட்டார் பண்புகளை தந்தமை மட்டுமல்ல , திரைக்கதையின் சூழ்நிலைகளுக்கு  பொருத்தப்பாடான கருத்துக்களுக்கு , இயக்கப்போக்குகளுக்கு இசைந்து   நாட்டார்மரபிசையையும் , மெல்லிசையையும் இசைவேட்கையுடன் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்!

தமிழ்நாட்டு அரசியல்   தமிழ்திரையில் கடுமையாக எதிரொலித்துக்கொண்டிருந்த காலம் என்பதாலும் அதன்  சூழல், போக்கு மற்றும் வீச்சுகளுக்கு ஏற்ப அதற்கீடு கொடுத்து  உகந்ததொரு  இனிய இசையை   கொடுத்தார்கள்.

குறிப்பாக ,அக்கால திராவிட இயக்கத்தினரின் கருத்தோட்டப்  போக்கின் முதன்மையான உணர்வாக வீர உணர்ச்சி  வெளிப்பட்டது.அதன் இன்னுமொரு முக்கிய கூறாக தாலாட்டும் , தாய்பாசமும் அமைந்தது.தாலாட்டிலும் , வீர உணர்வு  பாடலிலும் எழுச்சி ஊட்டும் வண்ணம் பாடல்கள் அமைக்கப்படடன.இதனூடே அக்கால இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியூட்டிடலாம் என்ற திராவிட முன்னேற்றக கழகத்தினரின் கொள்கைக்கு மெல்லிசைமன்னர்களின் இசை மிக வலு சேர்த்தது என்றால் மிகையில்லை.

தமிழ்த்திரைப்படப் பாடல்கள் வாழ்நிலையின் உணர்ச்சிகளை  சித்தரித்தன என்ற வகையில் நோக்கும்  போது நாட்டுப்புறவியலாளர்கள் கூறும் கருத்துக்கு ஒப்ப  பாடல்கள் அமைந்திருப்பதையும் காண்கிறோம்.

மரியா லீச் [Maria Leach - [ 1892  - 1977  ]  என்கிற நாட்டுப்புறவியலாளர்  வகைப்படுத்தும் பாடல் வகைகள் போலவே திரையிலும் பாடல்கள்  அமைக்கப்படடன.

மரியா லீச் [Maria Leach]   நாட்டுப்புறப்பாடல்களை  பின்வருமாறு வகைப்படுத்துகிறார்

  1. உணர்ச்சிப்பாடல்கள் [ Emotional  ] 2. வாழ்வியல் பாட்டு [ Daily Life ] 3. வாழ்வின் முக்கிய  நிகழ்ச்சி பாடல்கள் [ Crucial Movement of  life ]

இதில் உட்பிரிவுகளாக

  1. பிறப்பு [ birth ] 02. மணம் [ marriage] 03. பிரிவு [parting]
  2. இறப்பு [death] 05. தாயக நாட்டம் [ nostalgia] 06. போர்ப்பாடல் [ war ]

போன்றவற்றை குறிப்பிடுகின்றார்.

நாட்டுப்புறப்பாடல்களை வெவ்வேறு நாட்டுப்புற ஆய்வாளர்களும் வெவ்வேறுவகையாக வகைப்படுத்துகின்றனர்.எனினும் பொதுப்படையில் மரியா லீச் [ 1892  - 1977 ] வகைப்படுத்தும் பாங்கு பொதுமையாக விளங்குகிறது.மனித உணர்வுகள் பொதுமையாக இருப்பதால் நமக்கும் அவை பொருந்திப் போகின்றன.

இவை   நாட்டுப்புற இசை சார்ந்த ஆய்வுகளே ஒழிய தமிழ் திரையிசையில் மெல்லிசைமன்னர்கள் தனியே நாட்டுப்புற இசைவடிவங்களில் தான் தமது பாடல்களை இசைத்தார்கள் என்று அர்த்தமல்ல.இந்தவகைப்படுத்தலில் அமைந்த பாடல்களை மெல்லிசைவடிவங்களிலேயே அமைத்து புதுமை செய்தார்கள்.நாட்டுப்புறப்பாங்கிலும் , செவ்விசைவடிவங்களிலும் ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு , ஆர்.சுதர்சனம் கே.வி.மஹாதேவன் போன்றவர்கள் ஏலவே இசைத்திருக்கிறார்கள்.

மரியா லீச் குறிப்பிடும் "வாழ்வியல் பாடல்" வகையிலே நாட்டுப்புற இசையின் அடிநாதத்தோடு , அவற்றை  மென்மையாகத் தழுவிக் கொண்டே, அவற்றில் மெல்லிசைச் சாயங்களைப் பூசி  ஜாலவித்தை காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள். அதில் புதிய வாத்தியங்களை இணைத்து தந்த இசைக்கோலங்கள் எத்தனை,எத்தனை என்று ஆச்சர்யத்துடன் வியக்கிறோம்.

மெல்லிசை மெட்டில் விழும் எளிமைமிக்க இனிய சங்கதிகள் செவ்வியலிசையின் உச்சங்களைத் தொடும் வண்ணம் அமைக்கப்படத்திலிருந்து அவர்கள் ராக இசையின்  ரசப்பிழிவுகளை தேவை கருதி பயன்படுத்தியதையும் காண்கிறோம்.

வாழ்வியல்பாடல்கள் என்ற பகுதியில் வரும் தாலாட்டு ,காதல் ,பிரிவு, திருமணம் , இறப்பு ,நாட்டுப்பற்று,வீர உணர்ச்சி போன்ற பலவிதமான உணர்வுகள் பாடல்களிலும் பிரதிபலித்தன.அதுமட்டுமல்ல ஒரு நிகழ்வின் பல படி நிலைகளுக்கும் பாடல்கள் பயன்படுத்தப்படடன.

தாலாட்டும் , வீரமும்

தாம் பெற்ற பிள்ளையை உறங்கவைக்க  பாடும் பாடல் தாலாட்டாகும்.உலகெங்கும் தாலாட்டு என்பது நாட்டார்பாடல் வகையில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாகும்.தமிழிலும் அவ்விதமே! தாலாட்டைப பாடாத கவிஞர்கள் கிடையாது என்று கூறிவிடலாம். பெரும்பாலும்  தாய்மார்கள் தாலாட்டை பாடுவது வழமையாக இருந்து வருகிறது.தாலாட்டுப் பாடும் தாய் தனது நிலையையும் , தன குடும்பத்து நிலைமையையும் , பெருமைகளையும் இணைத்துப் பாடுவது தமிழ்மரபு.

"தமிழ்நாட்டு பாமரர்பாடல்"  என்ற நூலை எழுதிய பேராசிரியர் நா.வானமாமலை தாலாட்டுப்பாடலுடனேயே தொடங்குகிறார்.அந்நூலில் வர்க்க வேறுபாடுகளுக்கு ஏற்ப தாலாட்டு மாறுவதை கூறிச் செல்லும் ஆசிரியர் உழைப்போர் கண்ணோட்டத்தில் தாலாட்டு எவ்வாறு அமைந்தது என்பதனை உதாரணங்களோடு விளக்குகிறார்.

தாலாட்டு பற்றி கூறும் தமிழண்ணல் " இருவர் கொள்ளும் காதலை விட , உடன்பிறந்தோர் கொள்ளும் வாஞ்சையைவிட,ஏன் உலகலக்கும் அருளினைவிட, பிள்ளைப்பாசமே ஆழமானது , வலிமைமிக்கது, உணர்ச்சிமயமானது. இத்தகைய தாயும் சேயும் என்ற உறவுப்பிணைப்பிலே இயற்கைக் கலைதான் தாலாட்டு " என்பார்.[ காதல் வாழ்வு - தமிழண்ணல் ]

பிள்ளைத் தமிழ்  என்பது தமிழிலக்கியத்தில் தனி இலக்கியவகையாகக் கருதப்படுகிறது "பழந்தமிழ் பாடல்களில் பிள்ளைத்தமிழ், உலா முதலிய பிரபந்தங்கள் தெய்வங்களை குழந்தையாகவும் , வீரர்களாகவும் பாடியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்." என்பார் பேராசிரியர் க.கைலாசபதி.[ இரு மகாகவிகள் ]

தாலாட்டுப்பாடலை மிகச் சிறந்த முறையில் தமிழ் சினிமாப்பாடல்கள் வெளிக்கொண்டுவந்திருக்கின்றன.அதிலும் மெல்லிசைமன்னர்கள்   உயிர்த்துடிப்பும் ,உணர்ச்சிப்பெருக்கும் , நெகிழ்சியுமிக்க சிறந்த  பாடல்களை  தமது தனித்துவ முத்திரையோடு அமைத்துத் தந்திருப்பது நம் கவனத்திற்குரியது.

தமிழ் திரையில் ஒலித்த தாலாட்டுப்பாடல்கள் என்றாலே அதில் எல்லோருக்கும் எடுத்த எடுப்பிலேயே நினைவுக்கு வருமளவுக்கு சில முக்கியமான பாடல்களைத் தந்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.இசைவளப்பெருமை வாய்ந்த பல பாடல்களை  புது லாகிரியுடன்  தந்திருப்பதையும் அவதானிக்கலாம்.  பழைய ராகங்களில்  நவீனத்தின் பண்புகளை இணைத்து திரையிசையைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டவர்கள்  மெல்லிசைமன்னர்கள்.

மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த தாலாட்டுப்பாடல்கள் சில :

01  சிங்காரப்புன்னகை   கண்ணாரக் கண்டாலே - படம்: மகாதேவி [1957] -  பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதிதேவி

அக்காலத்தில் வெளிவந்த   தாலாட்டுப் பாடல்களில் புதிய பாங்கில் வந்த பாடல்.மரபாக வரும் ராகங்களில் அல்லாமல் ஆபேரி ராகத்தில் அமைத்ததுடன் அதனுடன் கைத்தட்டு , கோரஸ் , ஹம்மிங் போன்றவற்றை இணைத்து புதுநெறிகாட்டிய பாடல்.அதுமட்டுமல்ல தாலாட்டில் வீரமும் ,பாசமும் இன்றிணைத்தோடும் கருணை , இனிமை பொங்கும் பாடல்.பின்னாளில் ஆபேரியில் தாலாட்டுப் பாடல்கள் வெளிவரும் புதிய நெறியை அமைத்துக் கொடுத்த பாடல்.

இந்தப்படத்தின் வசனத்தையும் , இந்தப்பாடலையும் எழுதியவர் என்ற ரீதியில் கவிஞர் கண்ணதாசன் தனது அன்றைய  தி.மு.க.அரசியல் சார்பான கருத்தியோட்டத்தையும் கதைக்கு பொருத்தமாக அமைந்துவிடும் நுடபத்தையும் காணலாம்.இப்பாடலில் காலத்திற்கேற்ற தனது அரசியல் போக்கின் தன்மையையும் காட்டுகிறார் கண்ணதாசன்.

தன்மானச் செல்வங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேதும் வீரன் போலவே மகனே நீ வந்தாய் மழலைச் சொல் தந்தாய் வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

02  மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம் - படம்: மகாதேவி [1957] -  பாடியவர்கள்: டி.எஸ்.பகவதி

-  மானத்தையும் வீரத்தையும் மிகுந்த உணர்ச்சிப்பாங்குடன் கூறும் தலை சிறந்தபாடல் இது.

"அபிமன்யூ போர்க்களத்தில் சாய்ந்துவிட்டான் "  என்று தொடங்கும் வரிகளில்  ஹிந்தோள ராகத்தில் பீரிட்டெழும் உணர்ச்சிக் கொந்தளிப்பை மெய்சிலிர்க்கும் வண்ணம்  மெல்லிசைமன்னர்கள் காண்பிப்பார்கள்.அதைத் தொடர்ந்து வரும்

" போதும் நிறுத்து ! பாண்டவர்கள் அழுது சோகம் கொண்டாடியிருக்கலாம் , கண்ணீர் வடிக்கும் கோழைப்பாட்டு எனக்குத் தேவையில்லை. என் மகன் வீரமரணத்திற்கேற்ற தாலாட்டு பாடு ! ".... மகாபாரதத்தின் அபிமன்யுவை தனது மகனுக்கு உவமையாக்கி பாடும் இப்பாடலில் இடையிடையே வரும் வசனங்களில் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.மெல்லிசைமன்னர்களின் இசையோ உயிரை வதைக்கிறது.

03  தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்கு பாடாதோ - படம்  சிவகங்கைச் சீமை [1959 ]- பாடியவர்கள் :எஸ்.வரலட்சுமி + டி.எஸ்.பகவதி

தாலாட்டுப்பு பாடலில் தனது நாட்டின் பெருமையையும் மன்னன் பெருமையையும் சோகம் பொங்க அமைக்கப்படட பாடல்.

வெள்ளியிலே தேர் பூட்டி மேகம் போல மாடுகட்டி அள்ளி அள்ளி  படியளக்கும் அன்பு நிலம் வாடுவதோ....

எனத் தங்கள் குடும்பத்தின் பெருமையை உணர்த்தி விட்டு , வரப்போகும் போரின் துயரத்தையும் அதன் விபரீதத்தையும்  நெகிழ்ச்சியுடன் கூறும் பாடல்.

தவளை எல்லாம் குரவையிடும் தாமரையும் பூ மலரும் குவளையெல்ல்லாம் கவி இசைக்கும் வந்து வந்து கூடும் வண்ண எழில் யாவும் அண்டி வரும் போர் புயலில் அழிந்து பட சம்மதமோ .......

ஆத்தாள் அருகினில் அம்மான் மடிதனிலே காத்திருக்கும் பாலகரும் கண்ணான மங்கையரும் போர் மேவி புறப்படுவார் பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்

யார் வருவார் யார் மடிவார் யார் அறிவார் கண்மணியே

என சோகத்தின் உச்சிக்கு நம்மை அழைத்து செல்லும் பாடலை மெல்லிசைமன்னர்கள் முகாரி ராகத்தில் அமைத்து உணர்ச்சியை பிரதானப்படுத்துகிறார்கள் பாடல் அமைப்பும் பாடிய பாடகிகள் [எஸ்.வரலட்சுமி + டி.எஸ்.பகவதி ] பாடிய பாங்கும் தாய்மையின் குரலை ஓங்கவைக்கிறது.  பாடல் வரியும் , இசையும் ஒன்றையொன்று தழுவி உயிர் பெறுகின்ற பாடல். முகாரி ராகத்தில் அமைந்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.

03   சின்னஞ் சிறு கண்மலர் செம்பவள வாய் மலர் - படம்: பதிபக்தி 1959  -  பாடியவர்:  பி.சுசீலா

04   ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ - படம்: பாகப்பிரிவினை 1959 -பாடியவர்:       டி.எம்.சௌந்தரராஜன் 05  மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் -படம்  மாலையிட்ட மங்கை [1959 ]- பாடியவர் :எம்.எஸ்.ராஜேஸ்வரி

06  காலமகள் கண் திறப்பாள் கண்ணைய்யா - படம்:ஆனந்த ஜோதி [1963 ]- பாடியவர் :பி.சுசீலா 07  நீரோடும் வகையிலே நின்றாடும் மீனே - படம்:பார் மகளே பார் [1963 ]- பாடியவர் :சௌந்தரராஜன் பி.சுசீலா 08  பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - படம்:பார்த்தால் பசி தீரும்  [1963 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன் 09  மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க -- படம்:பணம் படைத்தவன்  [1963 ]- பாடியவர் :பி.சுசீலா டி.எம். சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி

10  கண்ணன்  வருவான் கதை சொல்லுவான் - படம்:பஞ்சவர்ணக்கிளி  [1963 ]- பாடியவர் :பி.சுசீலா 11  அத்தைமடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா - படம்:கற்பகம்  [1964 ]- பாடியவர் :பி.சுசீலா

12  காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே - படம்:சித்தி [1967 ]- பாடியவர் :பி.சுசீலா

13  செல்லக்கிளியே மெல்லப்பேசு  - படம்:பெற்றால் தான் பிள்ளையா  [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்

14  காதலிலே பற்று வைத்தால் அன்னையடா - படம்:இதுசத்தியம்  [1963 ]- பாடியவர் :பி.சுசீலா

15  கண்ணன்  பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்  - படம்:பெற்றால் தான் பிள்ளையா  [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன் + பி.சுசீலா

16  செல்லக்கிளிகளாம் பள்ளியிலே   - படம்:எங்கமாமா   [1968]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்

தாலாட்டில் பலவகைப்பட்ட உணர்வுகளை பிரதிபலித்த பேராற்றலைக் காண்பித்த மெல்லிசைமன்னர்கள் வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களிலும் தங்கள் தனித்துவத்தைக் காண்பித்தார்கள்.

தமிழர் மரபில் தொன்றுதொட்டு வீரர்களின் பெருமை ,அவர்களுக்கு நடுகல் அமைத்துப் போற்றிய செய்திகளும் பழந்தமிழ் இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன.வீரர்களைக் கொண்டாடியது மட்டுமல்ல அவர்களை வழிபாடும் செய்தனர்.

இனக்குழு சமுதாய அமைப்பு மாறி பின் தோன்றிய நிலமானிய காலத்து பாடல்கள் வீரயுகப்பாடல்கள் என்பார் பேராசிரியர்.க.கைலாசபதி.

" முதியோள்   சிறுவன் படைத்தழிந்து மாறின  னென்று பல கூற மண்டமர்க் குடைந்த னாயினுண்டவென் முலை யறுத்திடு வென் "

புறநானூறு - 278

தனது மகனின் முதுகில் காயம்படவில்லை   என்று  தாய் பெருமைப்படும் பாடல். பெண்களும் வீரத்தில் சளைத்தவர்களில்லை ,போர்க்குணம் மிகுந்தவர்களாயிருந்தனர்  எனக் காட்டுகிறது புறநானூறு பாடல்.

வீரர்கள் பற்றிய புகழாரங்களை கூறும் இம்மரபை பின்னாளில் அரசியல் இயக்கங்கள்  சுவீகரித்து கொண்டன.குறிப்பாக தமிழ் தேசியத்தையும் , பிராமணீய எதிர்ப்பையும் மற்றும் சோஷலிஸக் கருத்துக்களையும் முழக்கமாகக் கொண்டு திரைப்படத்தை தங்கள்  பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியவர்கள்  அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக கழகத்தினர்.தங்களை  வீர தீரர்களாக காட்டிக்கொண்டிருந்த அன்றைய நிலையில்  கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றவும் தாம் உய்யவும் வழி தேடினர்.

திரைக்கதையில் மட்டுமல்ல பாடல்களிலும் அவை கணிசமாகவே வெளிப்பட்டன. மரபாக இருந்த போக்கை திரைக்கதை , இசை போன்றவற்றின் உறவுகளின் அடிப்படையிலும், திரைப்படத்தை வெற்றிபெற வைக்கும் உத்தியாகவும் வீர உணர்வை வெளிப்படும் பாடல்களை பயன்படுத்தினர்.

1950  களின் ஆரமபத்தில் திராவிட முன்னேற்றக கழக கொள்கை பிரச்சாரப்பாடல்கள் இறந்தகாலத்தின் மீதான பிரேமையும்,ஏக்கமும்  , அதோடு அதை  புளங்காகிதப்படுத்தி  புத்தாக்கம்  செய்யும் வகையில்  புனையப்பட்டதையும் காண்கிறோம்.

"தமிழன் என்றொரு இனமுண்டு " என்று தொடங்கும் மலைக்கள்ளன் [ 1954  ] பட டைட்டில் பாடலை திராவிட முன்னேற்றக கழகத்தினரின் அன்றைய கொள்கை விளக்கப் பாடல் என்று சொல்லுமளவுக்கு அமைத்திருந்தார்கள். அது மட்டுமல்ல அதே படத்தில் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே "   என்ற பாடலும் அதி உன்னதமான கருத்துக்களை அள்ளி வீசிய பாடலாகும்.

வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்கள்

01  பறக்குது பார் பொறி பறக்குது பார்  -- படம்:நீதிபதி  [1955 ]- பாடியவர் : கே .ஆர் . ராமசாமி

வீணரை வென்றுவந்த வீரராம் வென்று வந்த சேரராம்   - அந்த வீராதி வீரராய் போல் சிரிக்குது பாராய்

பாண்டியன் சபையினிலே பாய்த்தெழும் கண்ணகி போல் பறக்குது பார் பொறி பறக்குது பார்

"பறக்குது பார் பொறி"   பொறி என்று பூடகமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் பாடல் இது.

02  வாழ்வது என்றும் உண்மையே  -- படம்:ராஜா மலையசிம்மன் [ 1959  ] - பாடியவர் :சீர்காழி கோவிந்தராஜன்

வெற்றியின் பாதை தெரியுதடா வீணர்கள் கோட்டை சரியுதடா எட்டுத் திசையும் கொண்டாடவே எகிறிப் பாய்ந்து முன்னேறடா முன்னேறடா முன்னேறடா

03  எங்கள் திராவிட பொன்னாடே -- படம்:மாலையிடட மங்கை   [1959 ]- பாடியவர் : டி.ஆர் . மகாலிங்கம்

விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே.. எங்கள் திராவிடப் பொன்னாடே.

தி.மு.க இயக்கத்தின் கொள்கை விளக்கப்பாடல் என்ற அளவுக்கு புகழ் பெற்ற பாடல்.படத்தின் கதைக்கும் , இந்தப்பாடலுக்கும் ஏதும் தொடர்பில்லை.மக்களைக் கவர்வதற்கென்றே சேர்க்கப்படட பாடல் இது.

04  வீரர்கள் வாழும்  திராவிட நாட்டை  -- படம்:சிவகங்கை சீமை    [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன்

மன்றம் மலரும் முரசொலி கேட்கும் வாழ்ந்திடும் நம் நாடு  - இளந் தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும் திராவிடத் தீருநாடு வேலும் வாழும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது 05  அச்சம் என்பது மடமையடா -- படம்:மன்னாதிமன்னன்   [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன் விளங்கினார்.

ஆங்கிலப் படங்களில் வீரதீர நாயகனாக திகழ்ந்த ஏரோல் பிளைன் [Errol Flynn ] என்ற நடிகரைப் போல தானும் நடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கொண்டார்.குதிரை ஓட்டம், வாள்வீச்சு , கூட்டமாக வரும் வில்லனின் ஆட்களை அனாயாசமாக அடித்து வீழ்த்துவது , கொடியில் தாவி பாய்வது , உடையலங்காரம்  என Errol Flynn பாணியை முழுதாக பின்பற்றியதென்பது தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒன்றாக விளங்கியது.இவையெல்லாம் எம்.ஜி.ஆரை மிகப்பெரிய நட்ஷத்திரமாக வளர்ச்சி பெற உதவி புரிந்தன.

சாகசம் புரியும்   நாயகனுக்கு [ எம்.ஜி.ஆர்] திராவிட முன்னேற்றக கழக பாணி வார்த்தை வீச்சுக்களும் கைகொடுத்தன.அதோடு மெல்லிசைமன்னர்களின் புதியபாணி இசையும் புது ரத்தம் பாய்ச்சியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

திரைப்படத்தில்  கதாநாயகன் அறிமுகம் ஆகும் காட்சிக்கு  வகைமாதிரியான பாடல் எனபதற்கு முன்னுதாரணமாக அமைந்த பாடல் இது என்று துணிந்து கூறிவிடலாம்.

இந்தப்பாடலுக்கு முன்பே இது போலவே குதிரையில் அல்லது பயணம் செல்லும் போது பாடும்பாடல்கள் பல வெளிவந்த போதிலும் , அவை பயணத்தின் உல்லாசத்தில் எழும் இன்ப உணர்வை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்த நிலையில் ,1952 இல் வெளிவந்த தேவதாஸ் படத்தில் பயணத்தின் போது இயற்கையாக எழும் உற்சாகத்தை , ஊடுருவிச் செல்லும் இன்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல் " சந்தோசம் தரும் சவாரி போகும் " என்ற பாடலாகும்.இந்தப்பாடலையும் இசையமைத்தவர் மெல்லிசைமன்னர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஆயினும்  கதாநாயகனின் உள்ளத்து வேட்கையை ,புத்துணர்ச்சியை  அவனின் சமுதாயப்பார்வையை , அவனது இலட்சிய  ஆவலை  வெளிப்படுத்துவதாக   நீலமலைத் திருடன் [1957 ] படத்தில் கே.வி.மகாதேவன் இசையமைத்த " சத்தியமே லடசியமாய் கொள்ளடா " என்ற பாடல் ஒரு கொள்கை முழக்கமாக அமைந்த  முக்கியமான பாடல் என்று கூறலாம்.

இதே போலவே அரசிளங்குமரி [1961  ] படத்தில் " ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் " என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன் , சூலமங்கலம்  ராஜலட்சுமி இணைந்து பாடிய பாடலை ஜி.ராமநாதன் இசையமைத்தார்.

இந்தப்பாடலின் பாதிப்பு பின்னாளில் இது போன்ற பாடல்கள் மூலம் கதாநாயகர்களை படத்தின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்யும் வழமை உருவானது.

நாடகத்தில் முன்பாட்டு [ Entrance Song ] என்று அழைக்கப்பட்ட கதாநாயகர்கள் அறிமுகமாகும் காட்சி போல , தமிழ்திரையிலும் நாயகர்கள் இது போன்ற பாடல்களுடன் அறிமுகமாவது ஒரு புதிய போக்காக அமைய மெல்லிசைமன்னர்களின் பாடல்கள்  காரணாமாயிருந்தன.

வீரவுணர்ச்சி மட்டுமல்ல  வெற்றிக்களிப்பில் உண்டாகும் உற்சாகத்தை " ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஊட்டுவோம் " என்ற பாடலை மகாதேவி படத்தில் மெல்லிசைமன்னர்கள் அமைத்தனர்.

இதே போன்றே திருமணம் மற்றும் அதுதொடர்பான நிகழ்வுகளைச் சிறப்பித்து காட்டும் வண்ணம்  தமிழ் திரையிசை பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.திருமண பாடல் என்றதும் என் நினைவுக்கு வரும் முதல் பாடல் "வாராய் என் தோழி வாராயோ " என்ற பாசமலர் திரைப்படப் பாடலே !

திருமண வைபவங்களில் பாடல்களை ஒலிபரப்பரப்புபவர்களுக்கு உடனடியாக கைவரக்கூடிய பாடலாக இந்தப்பாடல் அமைந்திருந்தது அந்தளவுக்கு திருமணத்தை பாடல்களில் வடித்துக் கொடுத்த முதன்மை இசையமைப்பாளர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பது மிகையல்ல.

இதுமட்டுமல்ல மணமக்களை பல சந்தர்ப்பங்களிலும் வாழ்த்திப்பாடும் அற்புதமான பாடல்களையும் தந்திருக்கிறார்கள்.

சில எடுத்துக்காட்டுக்கள்.

01   வாராய் என் தோழி வாராயோ - படம்: பாசமலர் [1961 ] -[ மணப்பெண்ணை அழைத்துவரும் பாடல் ] 02   போய் வா மகளே போய் வா மகளே - படம்: கர்ணன் 1964 ] - [ பிள்ளைபெறுவதற்கு தாய் வீடு செல்லும் போது பாடும் பாடல்.] 03   வளையல் சூட்டி  - - படம்: கர்ணன் 1964 ] -[1964 ] -  [ வளைகாப்புப் பாடல் ] 04   குங்குமப்பொட்டு குலுங்குதடி - - படம்: இது சத்தியம்  [1964 ] - [ வளைகாப்புப் பாடல் ] 05   ஆயிரம் இரவுகள் வருவதுண்டு - - படம்: கற்பகம்  [1964 ] - [ முதலிரவு நேரம் தோழி பாடும் பாடல்] 06   கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு  - படம்: படகோட்டி  1964 ] - [ வளைகாப்புப் பாடல் ] 07   கெட்டி மேளம் கட்டுற   கல்யாணம் - படம்: சந்திரோதயம்  1967 ] 08    தங்கமணி பைங் கிளியும் தாயகத்து நாயகனும் -  படம்:சிவந்தமண்  [ 1970 ] [ மணமக்கள் வாழ்த்துப்பாடல் ] - [ இசைத்தட்டில் வெளிவராத பாடல்.] 09  புகுந்த வீடு இனிமையான மல்லிகை பந்தல் - படம்: புண்ணியபூமி   [1974 ] -

நாட்டார் பண்பியலில் அமைந்த சில பாடல்களை 1950 பாதிக் கூறிலிருந்து கொடுக்க முனைந்ததைக் காண்கிறோம்.நாட்டுப்புற இசையின் ஓசைநயங்களையும் தேவை கருதி அங்கங்கே மெல்லிசையில் இழைத்து வந்ததைக் காண்கிறோம்.

வீரம் , மானம்  உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது உணர்ச்சி கொந்தளிப்பையும் , தாலாட்டுப் பாடல்களில் தாயின் பாசத்தையும் , கண்ணீர் பெருக்கையும் , தாலாட்டின் வாய் மொழி ஓசையின்பத்தையும்  அத்தோடிணைந்த மெல்லிசையின் சுகந்தத்தையும் மிக இயல்பாய் கொடுத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.

எழுச்சியும் , கிளர்ச்சியும் மிக்க பாடல்களுடன் தங்களுக்கேயான,தனித்துவமிக்க  இசையுலகத்தை படைத்துக்காட்ட  1960  களுக்கு நகர்கிறார்கள்.

மரபும், வாத்திய இசைவார்ப்புகளும்

1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்திய  மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை, மாலையிட்ட மங்கை  பாடல்களால் தனிக்கவனம்  பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி  தமிழ் திரையிசையை முன்னோக்கி  நகர்த்தியது.

ஒப்பீட்டளவில் 1950 களைவிட 1960  களில்  சமூகக்கதைகள்  திரையில் இடம் பிடிக்க ஆரம்பித்ததும் பாடல்களிலும் , இசையமைப்பிலும் உணர்வுகளை  கதைகளுக்கு பொருத்தமாக வெளிப்படுத்தினார்கள்.காதல் , திருமணம், தாலாட்டு , பிரிவு ,வீரம்  போன்ற உணர்வுகள் என பலவிதமான சூழ்நிலைகளும் அக்காலப்  பாடல்களில் பிரதிபலித்தன.

தமிழ் திரையிசையின் முன்னோடிகளின் வழியிலிருந்து சற்று விலகிவர முனைந்ததும்  ஹிந்தித் திரைப்பட இசையின் அதிர்வலையிலிருந்து மீள முயற்சி செய்ததுடன் அதற்கு நிகராக பாடல்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டினார்கள்.

தமிழ்  திரையிசையின்   நவீனத்துவம் [ Modernity ] எனும் பண்பு சி.ஆர்.சுப்பராமன்,மற்றும் அதன் தொடர்ச்சியாக1950 களின் இறுதியில்   ஏ.எம்.ராஜா போன்ற இசையமைப்பாளர்களால் அறிமுகமானதெனினும் அதன்  முழுமை மெல்லிசைமன்னர்களாலேயே நிறைவானது.பழைய முறையை மாற்றி நவீன இசைக்கருவிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டு கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையில் வடித்தார்கள். எந்த ஒரு துறையிலும் மாற்றம் நிகழும் காலங்களில், அக்காலங்களின் இயல்புப்  போக்குகளையும் அனுசரிக்கும் தன்மை கொண்டதாக இருப்பதை அவதானிக்கலாம்.மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் இந்திய அளவில் ஹிந்தித் திரையிசையின் வல்லாதிக்கமும் , உலக இசையில் பொழுது போக்கு வணிக இசையாக வெற்றியளித்த லத்தீன் அமெரிக்க இசையின் வல்லாதிக்கமும், தமிழ் திரையில் செவ்வியல் இசையின் ஆதிக்கமும் நிலவியது என்பது நோக்கத்தக்கதாகும்.அவற்றின் நல்ல கூறுகளை எடுத்துக் கொண்டு புதுமை காண்பித்தார்கள் ஒழிய அவற்றை அப்படியே பிரதி எடுக்கவில்லை என்பது கவனத்திற்குரியது.

ஹிந்தித் திரையிசையமைப்பாளர்களும் மேலைத்தேய மற்றும்  லத்தீன் அமெரிக்க இசையால் கவரப்பட்டிருந்தனர்.1950 களில் புகழபெற்ற இசையமைப்பாளர் சி.ராமச்சந்திரா பெனி கூட்மன் [ Benny Goodman ] போன்ற மேலைத்தேய கலைஞரைப் பின்பற்றியதையும்,ஓ.பி.நய்யார், எஸ்.டி.பர்மன் போன்ற மூத்த இசையமைப்பாளர்களும் ஆங்காங்கே மேலைத்தேய பாணியை கையாண்டதையும் பார்க்கிறோம். அதனூடே ஹிந்தி பாடல்கள் புதிய மாற்றங்கள்  பெற்றதென்பதை   1950,1960 களில் வெளிவந்த படங்களில் காண்கிறோம். ஹிந்துஸ்தானி இசையில் பாடல்களை அமைத்துப் புகழ்பெற்ற இசைமேதையான நௌசாத் அலி கூட மேலை நாட்டு இசையால் பாதிப்படைந்திருக்கிறார் என்பதை அவர் இசையமைத்த Dulari [1949] படத்தின் ஒரு சில  பாடல்களில்  கேட்கிறோம்.

தங்களுக்கு  முன்பிருந்த இசையமைப்பாளர்கள் போலவே கர்னாடக இசை , நாட்டுப்புற இசை , ஹிந்துஸ்தானிய இசை ஆகியவற்றுடன் லத்தீன் அமெரிக்க இசையையும் பிரதானமாகப் பயன்படுத்தி மெல்லிசைமன்னர்கள்  வெற்றிகண்டார்கள்.ராகங்களின் அடைப்படையில் மட்டும் தான் பாடல்களைக் கொடுக்க முடியும் என்பதில் நம்பிக்கையற்றவர்கள் என்ற அடிப்படையிலும், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் என்ற வகையிலும்   " ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி " என்று தேவாரப்பாடல் கூறுவது போல, ராகங்களின் இயல்பான தன்மையையறிந்து , உரிய விதத்தில் பயன்படுத்தி கரையாத நெஞ்சங்களையும் இசையால் கரைய வைத்தார்கள்.நெஞ்சை உருக்கும் மரபு ராகதளங்களில் நின்று பாடல்களை உயர் நிலையில் அமைப்பது மாத்திரமல்ல , ஒரு பாடல் எப்படி எடுப்பாக ஆரம்பிக்கிறதோ அதே வேகம் தளராமல் ,  தொய்வில்லாமல் அதன் முடிவு வரை செல்வதை மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் காணலாம்.தமிழ் இசையுலகில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ராகங்களை விடுத்து ,தமது பாடல்களை புதுமையாகக் காட்ட விளைந்த அவர்கள் தமிழ் மக்கள் அறியாத ஹிந்துஸ்தானிய ராகங்களையும் அதிகமாய் பயன்படுத்தினர்.

பழமையின் இனிமை காட்டி அதற்குள்ளே அடங்கி நிறைவு காணாமல் அதிலிருந்து புதுமை நோக்குடன் இசையை அணுக முனைந்தனர்.பழைய தமிழ் ராகங்களுடன் அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களையும் எடுத்துக் கொண்டு நுண்மையுடன்  , இனிமையையும் குழைத்து தந்த பாடல்களில் ஜனரஞ்சகத்தன்மையும் வியத்தகு முறையில்  இணைந்திருந்தது.

ஆயினும் அவர்களின் வெற்றியின் அடிநாதமாக விளங்கியது ஹிந்துஸ்தானிய சங்கீதமும் , லத்தீன் அமெரிக்கசங்கீதமுமே என்பதை  தமிழ் திரையிசையின் பின்னணியை ஆராய்பவர்கள் அறியலாம்.திரைக்கதையின் போக்குக்குகேற்ப காடசிகளில் என்ன தேவையோ அதற்கேற்ற வகையில் பொருத்தமாக மேற்சொன்ன இரு இசையையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.எளிமையான பாடல் அமைப்பில் மெல்லிசை மிகைப்பைக் காட்டினார்கள்.

அவர்கள் ஆர்வம் காட்டிய ஹிந்தி திரையிசையும் , மேல்நாட்டிசையும் ஒன்று கலந்த புதிய கலப்பிசை, சொல் எளிமையும் இசையின்பமும் ஒன்று கலந்த புது இசைக்கு ஒரு புதிய நடையை உருவாக்கிக் கொடுத்தது.புதிய அழகியலிசையாக அது பிறந்தது. கதைமாந்தர்கள் வசனம் பேசி ஓய்ந்த காலம் முடிந்த பின், பாடல்களில் செந்தமிழ் கவித்துவம் அழுத்தாத எளிமைப்படுத்தப்பட்ட வரிகளுடன் இசை இடையூறில்லாமல் கைகோர்த்தது மெல்லிசைமன்னர்களின் காலத்திலேயே ! எளிமையான உருவத்தில் ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் ரசிகர்களையும் இலகுவாக இசையை நெருங்க வைத்தது.உணர்வுகளின் உயிரை எடுத்துச் செல்லும் ஒப்புயர்வற்ற சந்தங்களில் பாடல்வரிகள்  இலகுவாக அமர்ந்து கொண்டன.

பாடல் வரிகளுக்கு இடையூறில்லாத  இனிய வாத்திய இசை அழகுடன் இணைந்து கொண்டது.மெட்டுக்கள் கொடுத்த சௌகரியமான இடங்களில் பாடல் வரிகள் அமர்ந்து கொண்டன.இசையும் பாடல்களும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் இயல்பாய் அமைந்த பாடல்கள் உருவாகின. இனிமையும் பொருள் எளிதில் புரியும் எளிமைமிக்க பாடல்களை மெல்லிசைமன்னர்கள் உருவாக்கினார். இது 1960 களின் பொதுவான போக்காகவும்  அமைந்தது. இந்தப்பின்னணியிலிருந்து  பார்க்கும் போது மெல்லிசையை ஒரு இயல்பானதாக்கிய பெருமையும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமூர்த்தியினரையே சேருகிறது.மெல்லிசையில் எளிமையையும் இயல்பான போக்கையும்   அமைத்துக் காட்டி, இதனூடே இசையில் ஒரு இயற்பண்புவாதம் [ Naturalism ] என்று சொல்லும் வகையில் எளிய மக்களும் பாடும் வகையிலமைந்த பாடல்களை உருவாக்கினார்கள். இசையில் விடுபட்டுப்போன ,அல்லது தமிழுக்கு புதியதான சில நுணுக்கங்களை கூர்ந்து நோக்கி அதன் அழகியல் வசீகரங்களை வெளிக்கொணரும் வண்ணம்  இசையில் மாயங்கள் செய்யும் ஒலிகளை வெளிப்படுத்தினர்.

எல்லாம் நம்மிடம் இருக்கிறது கற்பனையை உடைத்து  நிஜத்தில் இல்லை என்பதை பறைசாற்றும் வண்ணம் இசையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தனர்.அதனூடே மெல்லிசையின் புதிய ஒலிகளையும், புதிய  ஒலிவண்ணத் சாயல்களையும்   பயின்று வந்தனர்.

பல்வேறு இசைமரபுகள் இணைந்த இசையால் விளைந்ததென்னவென்றால் ‘காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்’  என்ற கம்பன் வாக்குக்கு  அமைய பாடல்கள் பிறந்தன.

இசையின் தலையாய கடமை இனிமை என்பதும், புதுமை என்பது அது மரபை அறுத்துக் கொண்டெழுவதுமல்ல என்பதிலும்  தெளிவு கொண்டியங்கியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

அந்தவகையில் 1960 களின் திரையிசையை ஆக்கிரமித்த இசையமைப்பாளர்கள் என்றால் அது மெல்லிசைமன்னர்களே என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது.தமிழ்த்திரையின் வகைமாதிரிச் சூழலுக்கு நாடகபாணிப்பாடல்களை பொருத்துவது என்ற சலிப்பு நிலை தொடர முடியாத ஒரு சூழலை மெல்லிசையால் உருவாக்கி, புதுமை என்பது காலத்தின் கட்டாயம் என்று நிலைக்கு உயர்த்தியவர் மெல்லிசைமன்னர்களே.!

வழமையான சட்டகங்களில் மடக்கிப்பிடிபடாத வகையில் , அல்லது வழமையான ராகமடிப்புகளில் சிக்காத, நழுவி ஓடி இனிமை காட்டும்  ஒரு புதிய மெல்லிசை ஸ்தூலம் பெறுகிறது.மெல்லிசையில் புதிய அணுகுமுறைகள் தேவை என்பதை உணர்ந்து மெல்லிசையில் புதிய மரபை உருவாக்கினார்கள்.

மரபின் வளர்ச்சியையும் அதன் போக்கையும் இனம் கண்டு , புதிய வாத்திய இசையால் அதையூடுருவி  செழுமைப்படுத்திய பாங்கு மிக வியப்புக்குரியதாகவே உள்ளது.குறிப்பாக வாத்தியக்கருவிகளையும் , மனிதக் குரல்களையும் ,பின்னணி இசையாகவும் பயன்படுத்திய நூதனப்பாங்கு இசையின் புதிய அழகியலாக செம்மைபெற்றதுடன் , வாத்திய இசை  எவ்விதம்  அமைக்க வேண்டும் என்ற புதிய வழி காட்டுதலாகவும் அமைந்தது.

இதே போலவே அமெரிக்கத்திரைப்படங்களும்  புதியதொரு இசைவடிவத்தை 1930 களில்  வேண்டிநின்றன.16 . 17 ம் நூற்றாண்டுகளில்   ஐரோப்பிய நாடுகளில் பெருவளர்ச்சியடைந்த செவ்வியலிசையின் அம்சங்களை மேல்நாட்டுத்  திரையிசை உள்வாங்கி கொண்டது.மேலைத்தேய செவ்வியல்  இசையின் தாக்கத்தை 1930 ,1940  களில் வெளிவந்த    ஹொலிவூட் திரைப்படங்களில்  கேட்கலாம் . Erich Wolfgang Korngold ,Dmitri Tiomkin , Alfred Newman  போன்றோரின்  இசையமைப்பை இதற்கு உதாரணம் காட்டலாம். அமெரிக்க சினிமாவில் இவர்களது செவ்வியல் இசைப்பாணி புதிய பாச்சலை ஏற்படுத்தியது.மகத்தான வெற்றிப்படங்கள் என்று இன்று போற்றப்படுகின்ற பல படங்களின் வெற்றிக்கு பின்னணியில் இவர்களது இசையும் முக்கிய பங்காற்றியுள்ளது.

செவ்வியலிசையின் மூல வடிவம் படிமங்கள்  , புதியகாலவழிப்பட்ட திரைப்படம் எனும் நவீன கலைவடிவத்திற்கிசைய அவர்களது இசைப்புலமையாலும் , சிந்தனை ஆழத்தாலும் மேலைத்தேய செவ்வியலிசையின் புதிய பரிமாணங்களாக மாற்றமடைந்தன.

மொஸாட் ,பீத்தோவன் , ஹைடன் , பாக் போன்ற செவ்வியலிசைமேதைகளால்  செழுமை பெற்ற செவ்வியல் இசைமரபை கொண்டு சென்ற இளம் ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் ஹொலிவூட் திரையிசைக்கு புதிய பரிணாமம் கொடுத்தார்கள்.

ஐரோப்பிய செவ்வியலிசையில் உச்சம் பெற்ற வாத்திய இசையின் நிலைக்கு நாம் வந்தடைவதென்றால் குறைந்தது நூறு வருடமாவது செல்ல வேண்டும்.அந்தளவுக்கு ஏராளமான இசைப்படைப்புகளை அவர்கள் படைத்திருக்கிறார்கள்.ஒருவர் தன வாழ்நாளில் கேட்டுவிட முடியாத அளவுக்கு இசைத் தொகுதிகள் குவிந்து கிடக்கின்றன.

அந்த நோக்கில் வாத்திய இசையின் அவசியம்   குறித்த ஒரு சிறு பொறியை கொடுத்தது திரைப்படங்களே.இந்தியாவில் முன்னணி வகித்துக் கொண்டிருந்த ஹிந்தி திரையிசை வாத்தியத்திலும் சிறந்து விளங்கியது. 1950 களின் தமிழ் திரை இசையமைப்பாளர்களுக்கு இந்த விழிப்புணர்ச்சியற்று  இருந்த  நிலையை  1960 களில் வாத்திய இசையின் இனிமையை தங்களால் முடிந்தளவு நிவர்த்தி செய்ய அவற்றை  வெற்றிகரமாகப்பயன்படுத்தி சாதனை புரிந்தவர்கள் மெல்லிசைமன்னர்களே !

வாத்திய இசையின்  பற்றாக்குறையை புதுமையுடனும் பிரக்ஞைடனும் நிவர்த்தி செய்ய முயன்றமை மட்டுமல்ல , அதன் உயிர்த்துடிப்புகளை இனம் கண்டு மரபு ராகங்களில் அமைந்த மெட்டுக்களின் சுவைகளையும்  அதனுடன்  இரண்டறக்கலந்தனர்.இசைப்பாடலில் பல்லவி ,அனுபல்லவி , சரணம் போலவே, வாத்திய இசையிலேயே முன்னிசை , இடையிசை போன்றவற்றிலும் கவனம் செலுத்தினார்கள். மெட்டுக்கள் பிரதானம் என்ற நிலையில் , ஒரு பாடலுக்குக்கான மெட்டுக்களை அமைப்பதே இசையமைப்பாளர்களின் பிரதான கடமையாக இருந்த நிலையில் அதற்கான பின்னணி  இசை  அமைப்பதென்பது அக்கால இசையமைப்பாளர்களின் உதவியாளர்களாலும் நிறைவு செய்யப்பட்டு வந்தன என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.இந்த நிலை 1970  களின்   மத்தியில் இளையராஜாவின் வருகைவரை பின்னணி இசை குறித்த புரிதல் , விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்தது. நீடித்திருந்தது.1950, 1960 களில்  மெட்டுக்கள் தான் முக்கியம் அதற்கான பின்னணி இசை என்பது பிரதானமற்றது,என்பதுடன் குறிப்பிட்ட பாடல்களையே மெல்லிய வாத்திய இசையாக  இசைத்தால் போதும் என்ற நிலை  சினிமாக்காரர்கள் மத்தியிலும் , ரசிகர்கள் மத்தியிலும் ஒரு மனப்போக்காக வளர்ந்திருந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

வாத்திய இசை என்பது பாடப்படும் பாடலுக்கு பின் ஓடும் ஒரு சங்கதி என்றும், பாடகரை நிதானமாகப் பின்பற்றும் செயல்முறை எனவும் கர்னாடக இசைக்கச்சேரிகளில் உணடாக்கப்பட்ட ஓர் முறை போன்று  நினைக்கப்பட்ட காலம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.மேடை நாடகங்களில் இடைவேளைகளில் ஹார்மோனிய இசை இடைவெளிகளை நிரப்பப் பயன்டுத்தப்பட்டதையும் பொருத்திப் பார்க்கலாம்.

நாடக மரபிலிருந்து இந்த முறையைப் பின்பற்றி வந்த மெல்லிசைமன்னர்களுக்கு முன்பிருந்த ,அவர்களின் சமகாலத்து  தமிழ் திரை இசையமைப்பாளர்களுக்கும் இந்த விழிப்புணர்ச்சியற்ற நிலையை உள்ளிருந்து பார்த்தவர்கள் என்ற நிலையில்   1960 களில் தங்களால் முடிந்தளவு வாத்திய இசையின் இனிமையை புதுமையுடனும் பிரக்ஞைடனும் நிவர்த்தி செய்ய மிகுந்த சிரத்தை எடுத்தனர்.  1960 களில் இந்த நிலையை கணிசமான அளவு மாற்றியமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களே! ஓவியத்தில் கோடுகள், அதன் இயல்பான போக்கு ,வேகம், குறியீடுகள் மற்றும் வண்ணங்கள் அதன் பொருத்தப்பாடு ,அதனுடனிணைந்தெழும் தாள அசைவுகள் என பல்வகைப் பொருத்தப்பாடுகள் இணைந்து அழகு சேர்ப்பது போல இசையிலும் மெட்டு ,அதற்கு இசைவாகப் பயன்படுத்தப்படும் வாத்தியங்களின் ஒத்திசைவான இசை [ Harmony  ] , தாளம் மற்றும்  பாடகர்களின் குரல்களில் எழும் இசைக்கார்வைகள்  போன்றவை அழகுக்கு  அழகு சேர்ப்பனவையாகும்.

தங்கள் ரசனையின் அடிப்படையில் பாடல்களை அமைத்து தங்களுக்கானதாகவும் அதேவேளை மற்றவர்களுக்கானதாகவும் தந்து இசையின் உயிர் நிலையைக் காண்பித்தார்கள்.

பாடல்களில் மெல்லிசைமன்னர்கள் தந்த  ஜீவமகரந்தங்களை சுமந்த இசைக்கோர்வைகளைக் கேட்ட மூத்தசகபாடி இசையமைப்பாளர்கள் வியந்து பாராட்ட நேர்ந்தது.புதிய மரபை உருவாக்கிக்கிக் காட்டிய இவர்களை யாராலும் மறுக்கவும் முடியவில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.பழமை மாறாத முன்னையவர்களின்  இனிய தொடர்ச்சியாகவே அது இருந்தது!

மெல்லிசைமன்னர்களின் சமகாலத்தவர்களான எஸ்.எம்.சுப்பையாநாயுடு , ஆர்.சுதர்சனம் , கே.வி.மகாதேவன் போன்ற மூத்தசகபாடி இசையமைப்பாளர்களிடமும் இவர்களின்  தாக்கத்தை பார்க்கிறோம். ஈடற்ற செல்வமான மரபின் எழிலையும்,வனப்பையும் காட்டி தனது தனித்துவமான இசையால் கானமழை பொழிந்துகொண்டிருந்த இசைமேதை ஜி.ராமநாதனின் இசைமாளிகையிலும் இவர்களது இசை நுழைந்தது. ஜி.ராமநாதன்  இறுதிக்கால படங்களில் மெல்லிசைமன்னர்களின் வாத்திய இசையின் பாதிப்புக்களை, அதன் எதிரொலிகளை  நாம் கேட்கிறோம். குறிப்பாக அவர் இசையமைத்த தெய்வத்தின் தெய்வம் படப்பாடல்களை இதற்கு சிறந்த உதாரணமாக காட்டலாம்.புற யதார்த்தமாக இருந்த மெல்லிசைமன்னர்களின் பாதிப்பே அதன் காரணம் என்பதை நான் சொல்லித் தெரியத்தேவையில்லை.

இவர்களது இசை  முன்னவர்கள் தொடர்ச்சியின் பெருமிதமாகவே இன்று அதை நாம் நோக்க வேண்டியுள்ளது.இதே போன்றதொரு நிலையை இளையராஜாவின் வருகைக்கு பின்னர் வாத்திய இசையில் எழுந்த ஆச்சர்யங்களால் சமகால முன்னோடிகள் வாயடைத்துப் போனதும் ,அதை பெருமை பொங்க மெல்லிசைமன்னரே அங்கீரித்ததுமான ஒரு நிலையை ஒப்பிட்டு நோக்கலாம்.

வாத்திய இசையில் கவனம் செலுத்திய மெல்லிசைமன்னர்கள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தினார்கள் என்று சொல்லலாம்.எந்த வாத்தியமாய் இருந்தாலும் அவற்றை பட்டியில் அடைக்காமல் இசைவெள்ளத்தில் ஓட வைத்தார்கள்.

காலவரிசையில் வரிசைவரிசையாக அவர்கள் கொடுத்த வெற்றிப்பாடல்களின் வழியே அவற்றை  நோக்குதல் பயன்தரும்.அவை   காலத்திற்கு காலம் கண்சிமிட்டி விட்டு   மறையும் பாடல்கள் அல்ல என்பதையம்  காலம் கடந்து நிற்கும் இசைச் சிற்பங்களாக  அவை நிலைபெற்றதையும் காண்கிறோம்.

அக்காலத்தில் வெளிவந்த பல பாடல்களை இவர்களின் பாடல்களுக்கு அருகருகே   வைத்துப் பார்த்தால் மெல்லிசைமன்னர்கள் வாத்திய இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தமை புரியும்.பெரும்படியாக மெடுக்களிலேயே சிறப்புக் கவனம் செலுத்தப்பட்ட அன்றை சூழ்நிலையில் மெட்டுக்களை இசைக்கருவிகளால் மேம்படுத்த முனைந்த ஆர்வம் முன்னெழுவதையும் இவர்களிடம் காண்கின்றோம். வாத்திய இசையின் பாலபாடத்தை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர்கள் இவர்களே என்று கூட சொல்லலாம்.

இவர்கள் 1950 களில்   இசையமைத்த படங்களின்  சில பாடல்களைக்  கூர்ந்து நோக்கினால் வாத்திய இசையின் நெருங்கிய பிணைப்பையும்,  கவர்ச்சியையும், தனிநடையையும் எளிதில் காணலாம்.அவை  புதுமையின் துளிர் காலம்  என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.தமிழ் சினிமா இசைத்துறையில் புதிய அணி ஒன்று மரபைதழுவிக் கொண்டே புதிய பாதையும் வகுத்துக் கொண்டு முகிழ்த்த வரலாறு அங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.வாத்திய இசையின் வாசத்தை , அதன் செம்மையை காட்ட முனைந்த சில  பாடல்களை உதாரணமாகத் தருகின்றேன். பாடல்: 1

1954  இல் வெளிவந்த    வைரமாலை படத்தில் இடம்பெற்ற  " கூவாமல்  கூவும் கோகிலம் " என்ற பாடலின் பல்லவி முடிந்து வரும் இடையிசையில் இணக்கமும் இனிமையும் குழைந்த இனிய வாத்திய இசையையும் அனுபல்லவிக்கும் , சரணத்திற்குமிடையில் வரும் இசையிலும் இனிய குழைவையும் கேட்கிறோம்.

பாடல்: 2

"விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே "  என்கிற  பாடலிலும் [ புதையல் 1957 ] இந்தப்பாடலின் அழகான முன்னிசையிலும் இடையிசையிலும் மெல்லிசைமன்னர்களின்  முன்னோக்கிய பார்வையை நாம் அவதானிக்கலாம்.

பாடல்: 3

தென்றல் உறங்கிய போதும் [ பெற்ற மகனை விற்ற அன்னை 1957 ] உயிர்  தொடும் குழலிசையும் வயலின்களும் இணைந்து  அமுத நிலையை தரும் இசைவார்ப்பு நெஞ்சை அள்ளும் வகையில் , உணர்வு நிலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் இனிய இசை.இதயவானிலே ரீங்காரமிடும் ஆபேரி ராகத்தின் எழுச்சியைக்காட்டும் உயர் இசை.

பாடல்:4

தங்க மோகன தாமரையே - புதையல் [1957 ]

புதுமையான வாத்தியங்களுடன் கோரஸ் இணைக்கப்பட்ட இனிமையான பாடல் .  சைலபோன் [ xylophone] எனகிற வாத்தியத்தை மிக இயல்பாக பயன்படுத்தி இனிமை காட்டுகிறார்கள்.

பாடல்:5

இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே  -  பதிபக்தி  [1959 ]

விறுவிறுப்பான ,துள்ளும் நடையில் செல்லும் இந்தப்பாடலில்  சாரங்கி என்ற இசைக்கருவியையும் , புல்லாங்குழலிசையையும் மிக அருமையாக பயன்படுத்தினார்கள்.

பாடல்: 6

தென்றல் வந்து வீசாதோ தென்பாங்கு பாடாதோ [ சிவகங்கை சீமை 1959 ] தாலாட்டின் மென்மைக்கு சாமரம் வீசும் மென்மையான இசைக்கோர்வையால் வியக்க வைக்கும் வாத்திய பிரயோகங்கள்.ஆச்சர்ய இசையமைப்பு.நம்மை புதிய கற்பனையில் மிதக்க வைக்கும் ஆற்றல்மிக்க வாத்திய பிரயோகங்கங்கள்.எத்தனை முறை பாராட்டினாலும் போதாது.அபாரமான இசை!

பாடல் 7 ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ [ பாகப்பிரிவினை 1959]

மனதைப்பிழியும் சோகப்பாடல்.எவ்வளவு துயரம்! எவ்வளவு உணர்ச்சிமிக்க இசை !கேட்கும் போதெல்லாம் என் மனதை கரைய வைக்கும் பாடல்.மெதுவாக ஆரம்பிக்கும் இப்பாடலின் உச்சம் முதலாவது சரணத்திற்கு [ கை கால்கள் விளங்காத கணவன் குடிசையில் " என்ற வரிகளுக்கு முன் வரும் ] வாத்திய இசை உச்சம் காட்டி நெஞ்சை நெகிழ வைக்கிறது.தனது இயலாமையின் கையறு நிலையை நொந்து கொள்ளும் வகையில் பாடல் வரிகள் அமைத்து விட இசையோ எழுச்சியில் உச்சம் தந்து மனதை நோகடிக்கிறது.இது தான் பாடலின் உச்சம் என்று சொல்லலாம்.அதோடு நின்று விடவில்லை பாடலின் இரண்டாவது சரணத்திற்கு [ மண் வளர்த்த பெருமை எல்லாம் ]  முன் வரும் இசையோ    , தனது மனைவியின் பெருமையை கூறும் போது கனிவு பொங்கி அணைத்து ஆறுதல் தருகிறது.வாத்தியங்களின் பிரயோகம்  அதியற்புதமானவை !

1960 களில் வெளிவந்த தமிழின் மெல்லிசைமுறையின் வெற்றிப்பெருமிதம் என்றாலே  மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணையினரே என்பதை பாடல்கள் நிரூபணம் செய்தன.

கலையம்சமும்   , கேட்கக்கேட்கத் திகட்டாத தெள்ளமுதமாகவும்,வார்த்தையால் வணிக்கமுடியாத இனிமையுடனும்    விளங்குகின்ற பாடல்கள் தான் எத்தனை எத்தனை ! இசையில் புதிய சௌந்தர்யத்தை அலுக்காத வண்ணம் கொடுத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்! தமிழுக்கு இளமைமிக்க இசை  இவர்களால் கரையேறியது.மரபுடன் சம்போகம் செய்து களித்துப் பிறந்த இசை சுண்டியிழுக்கும் தாளத்தின் ஞானாலயத்துடன் சமநிலையில் வியாபித்துப் பரந்தன.

ப,பா வரிசையில்  இயக்குனர் பீம்சிங் இயக்கிய தொடர் வெற்றிப்படங்களிலும், அதற்கு முன்பே 1950 இல்  வெளிவந்த ஒரு சில படங்களிலும் புதிய இசையின் நறுமணங்களை, புதிய வாசனைச் சேர்க்கைகளை நுகரச் செய்தார்கள். 1960 இல் நான்கைந்து படங்களுக்கு   இசையமைத்தாலும் அதிலும் மெல்லிசையின் ரஸத்துளிகளைத் தரத் தவறவில்லை.உதாரணத்திற்கு சில பாடல்கள்.

பாடல் 1

படிக்கப்படிக்க நெஞ்சிலினிக்கும்  பருவம் என்ற காவியம்  -  இரத்தினபுரி இளவரிசி [1960]

டி.ஆர்.மகாலிங்கத்தின்  முத்திரையுடன் கூடிய பாடல் என்று கருதப்படும் அந்தப்பாடலில்

தடுத்தவர் வெல்வதில்லை சரித்திரமே சொல்லும் அடுத்தவர்கள் அறியாமல் ரகசியமாய் செல்லும் காதல் ரகசியமாய் செல்லும் ...

என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் வயலின் இசை நெஞ்சில் அலைகளை மிதக்க வைக்கிற இனிமையில் தங்கள் முத்திரையை பதிக்கிறார்கள்.அதுமட்டுமல்ல பாடலில் புல்லாங்குழலிசை பயன்படுத்தப்பட்ட முறையும் வியந்து பேசவைப்பதாய் உள்ளது.எஸ்.ஜானகியின் குரலையும் வாத்தியத்திற்கு இணையாக பயன்படுத்தியதோ அபாரம்.

பாடல்: 2

குறிப்பாக "கவலையில்லாத மனிதன்"  [ 1960 ] படத்தின்  டைட்டில் இசையிலேயே அப்படத்தின் பல  பாடல்களையும்  இசைமாலையாக இசையமைத்து புதுமை காட்டினார்கள்.அதுமட்டுமா அப்படத்தின் பெரும்பாலான பாடல்களிலும் வசீரம் மிகுதியாகவே உள்ளன.

"காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும் "  என்ற பாடலில் பெண்கள் குரல்களையும் , ஆண்களை குரல்களையும் வெவ்வேறு  விதங்களிலும் ,அவற்றுடன் புல்லாங்குழல் இசையையும் பயன்படுத்திய பாங்கும் ,அதை நாட்டுப்புறப்பாணியில் தந்ததும்  அதிஉச்சம் என்றே வேண்டும்.

பாடல்:3 கூடிவாழ்ந்தால் கோடி நன்மை [ 1960 ] படத்தில் குழலிசையை சிறப்பாக பயன்படுத்திய  "துணிந்தால் துன்பமில்லை சோர்ந்துவிட்டால் இன்பமில்லை " என்ற பாடல்  இசையின் சிறப்பை எடுத்துக்காட்டும் இசைச்சிற்பமாகும்.

"பகைமை நீங்கிவிடும் பாட்டாலே - பெரும் பசியும்  நீங்கிவிடும் கேட்டாலே

கசப்பான வாழக்கையை இனிப்பாக்குவது பாட்டு என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை மேலும் அழகாக்கி விடுகிறார்கள் மெல்லிசைமன்னர்கள்.

பாடல்: 4 அதுபோலவே " சலசல ராகத்திலே தம்மோ டும்மோ காலத்திலே "  [ பாடியவர்: பி.சுசீலா] என்ற பாடலும் அழகுக்கு அழகு சேர்த்த பாடலாகும்.இப்பாடலில் குழலிசையும் , வயலிகளின் இனிய உரசல்கள் பீறிட்டுக் கிளம்புவதையும் காதாரக் கேட்கலாம்.

பாடல்:5 "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " [ பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி + குழுவினர்  ]என்று தொடங்கும் பாடலில் இனிமையுடன் கலந்து இழையும் புதுவிதமான குரலிசையையும் [Chorus ] ,விறு விறுப்பான தாள அசைவையும் கேட்கலாம்.

பாடல்: 6 ஏழைப்பெண் பாடுவதாய் அமைந்த   "எங்க வாழ்க்கையிலே உள்ள சுவையைப் பாருங்க மனமுள்ள முதலாளி " [ பாடியவர்கள் : பி.சுசீலா.கே.ஜமுனாராணி + குழுவினர் ] என்ற பாடல் கடம் தாளவாத்தியத்துடன் எளிமையாக ஆரம்பித்து , பின் பணக்கார்கள் கொண்டாட்டமாகப் பாடுவதாக லத்தீன் அமெரிக்க இசைப்பாணியில் , அதன் தாளலயத்தையும் ,வாத்தியபரிவாரத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் பாடல்.இருவேறு உலகங்களை இசையால் வெளிப்படுத்தும் இனியபாடல்.

பாடல்: 7

அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் வேண்டுமா [ ஆளுக்கொரு வீடு [ 1960 ] மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்த சாரங்கி  , வயலின் ,சித்தார் போன்ற வாத்தியங்களை மிக இயல்பாக நூலிழைகளைப் போல இழைத்து வியக்க வைக்கிறார்கள்.இதன் மூலம் பட்டுக்கோட்டையாரின் உயிரோட்டமான வரிகளை நம் நெஞ்சங்களில் நீக்காதவண்ணம் விதைத்துவிடுகிறார்கள்.

இவ்விதம் பல்வேறு விதமான இனிய வாத்தியக்கலவைகளை 1950 களில் வெளிவந்த பாடல்கள் சிலவற்றில் காண்பிக்கிறார்கள். 1960  களில் அவர்களின் இசையாளுமை கட்டறுத்து ஓடுவதைக் காண்கிறோம். ஆரோக்கியமான சவாலாக பல பரிசோதனைகளை இக்காலத்தில் நிகழ்த்துகிறார்கள் என்று சொல்லத்தூண்டுகிறது.  தங்களுக்கு கிடைத்த இசைக்களத்தை வாத்திய இசைக்கலவைகளால் மரபாக ஒட்டி உறவாடி வந்த முறைகளிலும் ,அதனை மீறியும் புதுமையுடன் பயன்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்கள்.


அமெரிக்க ஹொலிவூட் திரைக்கு சிறப்பான இசைமரபைக் கொண்ட ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் கிடைத்தது போல தமிழ் திரைக்கு பழமை மீறி  புதுமை பாய்ச்சும் இசைக்கலைஞர்கள் கிடைக்கவில்லை.  இசையின் மீது தீராக்காதலும்    , திரையிசை குறித்த நற்கனவுகளையம் கொண்ட மெல்லிசைமன்னர்கள் அந்த பாரிய பொறுப்பை சுமக்க முனைந்தனர். 1950  மற்றும் 1960    களின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் பின்னணி இசையின் ஒரு விதமான போக்கு நிலவியதை நாம்  காணலாம்.

அக்காலப்படங்களின் பின்னணி இசையை கூர்ந்து கவனிக்கும் ஒருவர் , பின்னணி இசை என்பது ஏலவே வந்த ஒரு பிரபல்யமான பாடலை பின்னணியில் வாசித்து விடுவதையும்  ,அல்லது அந்தப்படத்திலேயே வந்த ஒருபாடலை மீண்டும் வாசித்துவிடுவதையும் அவதானிக்கலாம்.காட்சிகளின் சூழலுக்கு ஏற்ப அமைந்த புகழபெற்ற வேறு திரைப்படப் பாடல்களையும்   வாசிப்பது ஒரு வழமையாகக் கூட இருந்தது.உதாரணமாக ,காதல் காட்சியென்றால் புகழ்பெற்ற ஒரு காதல் பாடலையும் ,நகைச்சுவைக்காட்சியென்றால் ஒரு நகைச்சுவைப் பாடலையும் வாத்திய இசையாக வாசித்திருப்பதை அவதானிக்கலாம்.குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.ராமநாதனின் படங்களில் இந்நிலையை அதிகமாகக்  காணலாம்.பெரும்பாலும் எல்லா இசையமைப்பாளர்களும் இதே முறையைப் பயன்படுத்தினார்கள்  என்பதும் கவனத்திற்க்குரியது. இந்த நிலை  1970கள்  வரையும் ஆங்காங்கே மிகக்குறைந்த அளவில்  தொடர்ந்ததையும் அவதானிக்கலாம்.

சிறப்பான செவ்வியல் இசைமரபை நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் தமிழ் இசையுலகில் , பிறநாடுகளைப்போல ஒரு வாத்திய இசைக்குழு [ Symphony Orchestra ]    இன்றுவரை இல்லை என்பதும் கவனத்திற்குரியது. வெளிநாடுகளில் ஒவ்வொரு  சிறிய நகரத்தில் கூட அதற்கென ஒரு இசைக்குழு இருப்பதை நாம் காண்கிறோம். அந்த நோக்கில் வாத்திய இசையின் அவசியம்   குறித்த ஒரு சிறு பொறியை கொடுத்தது திரைப்படங்களே.

ஐரோப்பிய இசையுலகில் ஓபரா இசையில் வாத்திய இசையையும் இணைத்து புதுமை நிகழ்த்திய ரொமான்டிக் கால இசைக்கு ஒப்பாக 1950 களில் தமிழ்திரையிசையில் நாடகப்பாணி மெட்டுக்களுக்கு இடையிசையாக பல வாத்தியங்கள்  பயன்படுத்தப்பட்டன.

அந்த வகையில் 1950  களில் தமிழ் நாடகமரபோடு ஒட்டி வந்த இசைப்போக்கின் சற்று  மேம்பட்டு   நின்ற இசையாக இருந்து வந்த திரையிசையை ஹிந்தித் திரைப்படங்களுக்கு நிகராக  நவீனப்படுத்த வேண்டிய அவசியம் மெல்லிசைமன்னர்களுக்கு இருந்தது.தமிழ் திரையில் அதிகம் பயன்படுத்தப்படாத பல வாத்தியக்கருவிகள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கின.மரபோடு ஒன்றியைந்து வரக்கூடியதும் ,ஆதனூடே புதிய மரபையும் உருவாக்கிக்க்காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

தங்கள் இசையை முன்னவர்கள் போல அமைப்பதும் அதன் கட்டுனமானங்களை  குலைக்காமல் அதனோடியைந்த புதுமையை  தங்களுக்கே உரிய தனித்தன்மையுடனும்   புகுத்தினார்கள்.வாத்திய இசையில் புதிய உத்திகளும், சோதனை முயற்சிகளும் செய்தனர்.வாத்திய இசையின் நுண்மையான அலைவீச்சை பரந்த கற்பனையில் புதுவர்ணக்கலவையாய் தந்தனர்.மின்னி ,மின்னி ஜாலம் காட்டி இசையின் உயிர்ப்புகளை ஒளிரவைக்கும் ஒலிநயங்களை வெவ்வேறு வாத்தியங்களில் புதிய தரிசனத்துடன் தந்தார்கள். பாடல்களின் ஒலித்திரளில் கண நேரம் வந்து போகும்  வாத்திய கோர்வைகளால்    இனபத்தையும் , குதூகலத்தையும் பேராவலையும் ,களிப்பையும் சுருக்கமாகச் சொன்னால் வாழ்வின் நாடகத்தை இதயத்தின் ஆழத்தில் புதைத்து விட வாத்தியங்களை பொருத்தமான இடங்களில் அணி  அணியாய்   அமைத்து நயக்க வைத்தார்கள்.

இவர்களின் ஆததர்சமாக இருந்த ஹிந்தி திரையிசையின் வீச்சுக்கு நிகராக பாடல்கள் அமைக்க புதிய வாத்தியங்களை அறிமுகம் செய்ய முனைந்ததுடன் .மேலைத்தேய வாத்தியங்களான  பியானோ,கிட்டார் , சாக்ஸபோன், ட்ரம்பெட் ,பொங்கஸ்,  சைலோபோன் மட்டுமல்ல அவற்றுடன் வட இந்திய இசைப்பாரம்பரியத்திலிருந்து வந்த சித்தார் ,செனாய் , சாரங்கி ,சந்தூர் போன்ற இசைக்கருவிகளையும் இணைத்து பெரும்சாதனை புரிந்தார்கள்.கடின உழைப்பும் ,வாத்தியங்கள் குறித்த நுண்ணறிவும் அவர்களது புதிய முயற்சிகளுக்குத் துணையாய் நின்றன.அவைமட்டுமல்ல  ஹோரஸ், விசில் , மிமிக்கிரி போன்ற பல்வேறு சப்த ஒலிகளையெல்லாம் வெற்றிகரமாகச்  செயற்படுத்தினர். சுருக்கமாகச்  சொல்வதானால் இசையை புதுப்பித்து புதுநிர்மாணம்  செய்தார்கள்.

தமிழ்த்திரையிசையின் புது இசைப் பிரவேசமாக இதனை நாம் நோக்க வேண்டும். அந்த இசை  வீச்சும் , ஆழமும், பன்முகத்தன்மையும் கொண்டதாக விளங்கிது.இதுவரை சேகரத்திடலிருந்த இசையறிவின் புதுவளர்ச்சியாக உருவாக்கம் செய்தார்கள்.சாதாரண இசைரசிகர்களை மனதில் கொண்டதாகவும் , அவர்களது இசைரச உணர்வை தூண்டுவதாகவும் அமைந்தது.

புதுப்புது வாத்தியங்களை சலனமின்றி அறிமுகம் செய்த மெல்லிசைமன்னர்கள் வட இந்திய இசைக்கருவியான  செனாய் வாத்திய இசைக்கருவியை பயன்படுத்திய பங்கு விதந்துரைக்கத் தக்கது.ஏற்கனவே இந்தித்திரையிசையில் வேரூன்றி விருத்தி பெற்ற இக்கருவியை  ஆங்காங்கே ஒரு சில பாடல்களிலும் ,பெரும்பாலும் சோகக்காட்சிகளிலும் பிற இசையமைப்பாளர்களும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

மூத்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் எளிமையான உத்திகளை பயன்படுத்தி இசையமைப்பதில் வல்லவர்.அவர் செனாய் இசையை மகிழ்ச்சிப்பாடல்களில் வைத்த மூலவர்களில் ஒருவர்.

வீரபாண்டிய கட்டப்பொம்மன் [1958]  படத்தில் சுசீலா குழுவினர் பாடும்  " அஞ்சாத சிங்கம் என் காளை " என்று தொடங்கும் பாடலிலும் , அரசிளங்குமரி [1960] படத்தில்  சௌந்தரராஜன் , சூலமங்கலம் ராஜலட்சுமி    பாடும் " ஊர்வலமாக மாப்பிள்ளை சேர்ந்து வ்ருகிறார் " என்ற பாடலிலும் செனாய் வாத்தியத்தில் கிராமிய மணம் கமழ வைத்துக் காட்டினார்.

சோகத்தை எதிரொலிக்க வைத்த பாடல்களில்  தெய்வத்தின் தெய்வம் [1962] படத்தில் சுசீலா பாடும் " பாட்டுப் பாட வாய் எடுத்தேன் " என்ற பாடலில்  ஜி.ராமநாதனும் ,மாமன் மகள் [1959]  படத்தில் ஜிக்கி பாடும்  " ஆசை நிலா சென்றதே " என்ற பாடலை எஸ்.வெங்கட்ராமனும்  மிக அற்புதமாக  தந்து சென்றுள்ளனர்.

தமிழ் சூழலில் செனாய்  சோக உணர்வை தரும் வாத்தியமாக கருத்தப்பட்டுவந்த சூழ்நிலையில் அபூர்வமாக ஒரு சில பாடல்களும் வெளிவந்தன அந்நிலையில் "சோகக்காட்சியா" ? கொண்டுவா செனாய் வாத்தியக்கருவியை " என அன்றிருந்த ஒரு காலகட்டத்தில்  அந்த வாத்தியத்தை அதிகமான மகிழ்ச்சிப்பாடல்களிலும் வைத்துக்காட்டி பெருமை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்றால் மிகையில்லை.

இன்ன வாத்தியம் இன்ன உணர்வைத்தான் பிரதிபலிக்கும் என்ற வரையறைகளைத் தாண்டி ,"அவற்றின் எல்லை இது தான் "    என்று முன்   சொல்லப்பட்ட கருத்துக்களை மீறி புதிய கோணங்களில் பயன்படுத்தினர். இன்னொருமுறையில் சொல்வதென்றால் தலைகீழ் விகிதத்திலும் பயன்படுத்தினார்கள் எனலாம் .

செனாய் வாத்தியத்தை காதல்பாடல்களில் மட்டுமல்ல ,பலவிதமான பாடல்களிலும் புதுமுமையாகப் பயன்படுத்தி வியக்க வைத்த சில பாடல்களை இங்கே பார்ப்போம்.

மெல்லிசைமன்னர்களின் மகிழ்ச்சிப்பாடல்களில் செனாய்:

பாடல்: 1

--------------

"ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்" - பாலும் பழமும் [1961]

இந்தப் பாடலின் இசையில், அதன் இனிமையில் செனாய் பயன்பட்டிருப்பதை பலரும் கவனித்தருக்க மாட்டார்கள்.அதை உற்று நோக்கிக் கேட்கும் போது மட்டுமே அதன் இன்பத்தை   நாம் அனுபவிக்கலாம்.பாடலின் பல்லவியின் முடிவிலும் , சரணத்திலும்  செனாய் வாத்தியத்தின் குழைவையும், இனிமையும் வியக்கலாம். பாடலின் பல்லவி முடிந்தவுடன் காலையை குளிர்ச்சியுடன் வரவேற்கும் செனாய் இசையை இன்பப்பெருக்காகத் தருகிறார்கள்.

இப்பாடலின் முடிவில் "அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் " வரிகளை தொடரும் வயலின் இசையும் , புல்லாங்குழல் இசையும் சம்போகம் செய்து இன்பமாய்ப் புலரும் இனிய  கலைப்பொழுதை இதமாக வருடிக் கொடுக்கின்றன.காலைப்பொழுது இருக்கும்வரை இந்தப்பாடல் இருக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இருக்க முடியாது.

பாடல் :2

-------------

" மதுரா நகரில் தமிழ் சங்கம் " -பார் மகளே பார் [ 1963 ]

இந்தப் பாடலிலும் செனாய் இசையை  வாஞ்சையுடன் தருகிறார்கள்.காதலின் அன்புக்கனிவுக்கு   அச்சாரமாக  பாடலின் முன்னிசையிலேயே செனாயின் மதுரத்தை,, அதன் ஜீவஒலியை  அள்ளித்தரும் அதிசயத்தைக் காண்கிறோம்.பாடலின் முன்னிசையிலும் , தொடரும் இடையிசைகளிலும் நம்மை இன்பம்   தெறிக்கும் செனாய் இசையின் உபாசகர்களாக்கி விடுகிறார்கள்.செனாய் இசை இன்பப் பெருக்காய் பாயும் பாடல் இது.

பாடல்: 3

-------------

செனாய் இசையுடன் கரைந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நாம தவிர்க்க முடியாத பாடல் ஒன்றுள்ளது.அது தான் கலைக்கோயில் [ 1963 ] படத்தில் இடபெற்ற " தங்கரதம் வந்தது வீதியிலே " [ பாடியவர்கள்: பாலமுரளி கிருஷ்ணா + சுசீலா ] தொடங்கும் பாடல்.

இப்பாடல் பெரும்தச்சர்களின் கைவண்ண நேர்த்தியுடன் செதுக்கப்பட்ட உயிர்த்துடிப்புமிக்க இசைச்சிற்பம் என்று சொல்லலாம்.மரபார்ந்த ராகமான ஆபோகி ராகத்தில்  தோய்ந்த அழகிய மெல்லிசையில் மெல்லிசைமன்னர்களின் மனஎழுச்சியையும் , மன ஓசையையும் செனாய்  வாத்திய இசையில் கேட்கிறோம்.நவீனங்களை மரபு வழியில் நின்று தரும் இசைலட்ஷணங்களை இந்தப்பாடலில் தரிசிக்கிறோம்.நமது மனங்களில் தைல வண்ணமாக இசை  வழிந்து செல்லும் அற்புதஅனுபவத்தை ,செனாய் வாத்தியத்தின் மதுர இசையில் காதலின் இன்பநிலையை அமுதமயமாகத் தருகிறார்கள்.செனாய் இசை விரவி ஆட்கொள்ளும் புதுஅனுபவம் பாடலின் முடிவில் விஞ்சி நிற்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.கேட்கக் கேட்க  இன்புற வைக்கும் இப்பாடல் காலத்தை விஞ்சி நிற்கிறது

இந்தப்பாடலை மிகச் சிறப்பாகப்பாடும் என் தந்தையாரையும் நான் இக்கணத்தில் நினைத்துப்பார்க்கிறேன்.அவர்  மூலமே இப்பாடலை நான் அறியும் வாய்ப்பு கிடைத்தது.

பாடல்: 4

-------------

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே [ கர்ணன் ]

பாடலின் பல்லவி முடிந்து வரும் இடையிசையில் இன்பப்பெருக்கை அள்ளித்தரும் விதத்தில் இசைக்க வைக்கப்பட்டுள்ளது.அனுபல்லவி முடித்து வரும் இசைப்பகுதியில் அந்த இசை, கோரசுக்குப்பதிலாக சாரங்கி  வாத்திய இசையில் வருகிறது.கோரஸ் இசையுடன் குழைந்து வரும் தேனமுதாக கலந்து இசையில் புதிய போதனை காட்டியது அன்றைய நிலைக்கு  நேரெதிராகவே இருந்தது.

சுத்ததன்யாசி ராகத்திற்கு மெல்லிசைமன்னர்கள்  புதிய முகவரியைக் கொடுத்த பாடல்.பாடிய விதமோ அபாரம்.

பாடல்: 5

-------------

கேள்வி பிறந்தது அன்று [ பச்சை விளக்கு ]

எத்தனை, எத்தனை  வாத்தியப்பரிவாரங்கள்  என்று வியக்கவைக்கும் பாடல்.றம்பட, ட்ரம்ஸ்,எக்கோடியன்,வயலின், குழல்,விசில் , ரயில் சத்தம் என வினோதமான இசைக்கலவை.உலக மனிதனின் கண்டுபிடிப்புகளை வியந்து பாடும் இந்த  பாடலில் அத்தனையையும் கலந்து கொடுத்து வியக்க வைக்கிறார்கள்.

உலக விஷயங்களின் பெருமைகளை வியந்து பாடும் போது வானம் தொட்டுச் சென்ற இசை, இப்பாடலின் இனிய திருப்பம், வீடு பற்றி பாடும் போது உள்ளக்கிளர்ச்சி தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாடலின் சரணத்தில் புதிய தினுசாக , புதிய திருப்பமாக அதைக் கையாண்ட மெல்லிசைமன்னர்களின் ஆற்றலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.உணர்ச்சிப் பெருக்கும் , மெய்சிலிர்ப்பும் தரும் அந்த இசைக்கு மெல்லிசைமன்னர்கள் பயபடுத்திய வாத்தியம் செனாய் ஆகும்.அதுமட்டுமல்ல அதன் பின்னணியில் ஒலிக்கும் பொங்கஸ் தாளம் பெரும் மனவெழுச்சி   தருகிறது.

குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும்

என்ற வரிகளுக்கு முன்பாக வரும் சிலிர்ப்பூட்டும் செனாய் இசை 10 செக்கன்கள் மட்டுமே ஒலிக்கிறது.இயற்கையோடிசைந்த வாழ்க்கை போல பாடலின் உணர்வுக்கும் இசைவாய் அமைக்கப்பட்ட அற்புதமான இசை படக்காட்சியையும் தாண்டி தனியே இசை கேட்பவர்களையும்  பரவசப்படுத்தி நிற்கிறது.இசையின் மகோன்னதம் இதுவல்லவா !

பாடல்: 6

-------------

சிங்காரத் தேருக்கு சேலை கட்டி [ இது சத்தியம் ]

மலைவாழ் தொழிலாளர்கள்   பாடும் பாங்கில் அமைந்த இந்தப்பாடலில், கேட்போரை குதூகலமடையச் செய்யும் வண்ணம் செனாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.குழல் ,சந்தூர் , கோரஸ் பரிவாரங்களும் அருமையாக இணைக்கப்பட்ட பாடல்.பின்னாளில் ஹிந்தி சினிமாவில் புகழ் பெற்ற ஹேமமாலினி நடனமாடும் பெண்கள் குழுவில் முன்வரிசையில் ஆடுவதை இந்தப்பாடல் காட்சியில் காணலாம்.

பாடல்:7

-------------

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது - [பச்சை விளக்கு ]

நாதஸ்வர இசையுடன் ஆரம்பிக்கும் ஒரு இனிய பாடலில் செனாய் இசை எப்படி இணையும் ? என்று ஆச்சர்யப்பட வைக்கும் பாடல்.நாதஸ்வரம், செனாய் இரண்டு மகோன்னதமான இசைக்கருவிகள்.மாபெரும் இசைக்கலைஞர்களால் பயன்படுத்தப்பட்ட உயர் ரக இசைக்கருவிகள் ! மனோதர்ம இசையில் உச்சம் தருகின்ற வாத்தியங்கள்.இவை மெல்லிசைவடிவங்களின் இசைக்குறிப்புகளில் அடங்கி நிற்குமா என்ற ஐயம் எழாமல் இருக்க முடியாது.

உணர்வு நிலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் இவ்விரு மேதகு வாத்தியங்களை ஒரே பாடலில் ஒருங்கிசையாத தந்த மெல்லிசைமன்னர்களின் இசைஞானத்தை இப்பாடலில்   தரிசிக்கின்றோம்.இனிய நாதஸ்வர இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலின் அனுபல்லவியில்

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த நாயகன் தானும் வானில் இருந்தே பூமழை பொழிகின்றான்

என்ற பாடல் வரிகளைத் தொடர்ந்து வரும் இடையிசையில் புல்லாங்குழலுடன் நாதஸ்வர இசையை இணைத்து  தருகிறார்கள்., மீண்டும் சரணத்தில் , அதே மெட்டில் "குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே " என்ற வரிகளைத் தொடரும் இசையில் நாதஸ்வரத்திற்குப் பதிலாக  குழலுடன் செனாயைப் பயன்படுத்தி எழுச்சியூட்டுகின்றனர்.

வெவ்வேறு ஒலிக்கலவைகளை கலந்து மெல்லிசையைத் தளிர்த்தோங்க வைத்து புதுமை காட்டுகிறார்கள். பாடல்: 8

-------------

வாரத்திருப்பாளோ வண்ணமலர் கண்ணன்  அவன்  - [பச்சை விளக்கு ]

இது சந்தித்துப் பேசும் வாய்ப்பு பெற்ற காதலர்கள் பாடும் விரகதாபப்பாடல். பொதுவாக விரகதாபம் சந்திக்க முடியாத சூழ்நிலையிலேயே அமைவது வழக்கம்.ஒரே வீட்டில் இருந்தும் தங்கள் விருப்பை வெளியிட முடியாத கட்டுப்பாட்டில் இருந்து பாடப்படும் பாடல்.

தனியே பாடலைக்கேட்பவர்கள் மிதமிஞ்சிய சோகப்பாடல் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு உருக்கம் நிறைந்த செனாய் வாசிப்பு சோக  உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.கட்டுப்பாட்டுடன் அருகில் நிற்கும் காதலனைப்பார்த்து "பக்கத்தில் பழமிருக்க பாலோடு தேன் இருக்க உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னன் அவன் "

என்ற வரிகளின் பின்னணியில் ஒலிக்கும் செனாய் இசை ,  காதலனின்   இதய வேதனையை வெளிப்படுத்துகிறது.

அனுபல்லவியின் மெட்டிலேயே வரும் சரணத்தில்  [ கல்வியென்று பள்ளியிலே ] காதலின் பாடும் வரிகளுக்கு பின்னால் செனாய் இசைக்கபடவில்லை.

இந்தப்பாடலில் செனாய் காதலனின் இதயதாபமாக  ஒலிக்கிறது.

இன்னுமொரு முக்கிய திருப்பமாக பாடலின் சரணத்திற்கு [ கல்வியென்று பள்ளியிலே ] முன்பாக வரும் இடையிசை உற்சாகத்தில் குதித்தெழுந்து பாய்கிறது.அந்த உற்சாகமிகுந்த இசை பழைய ஹிந்திப்பாடலின் இடையிசையை மேற்கோள் காட்டுவது போல பாய்ந்து சென்று நெஞ்சை நெகிழ வைக்கிறது.இது போன்ற இனிய இசைத்திருப்பங்களை மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் ஆங்காங்கே காணலாம.பாடல் காட்சியும் மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது

பாடல்: 9

-------------

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் [ ஆனந்தி] பாடியவர் பி.சுசீலா.

மூன்றரை நிமிடங்களில் ஒலிக்கும் இந்தப்பாடல்  காலப்பெருவெளியில் மறைந்து கிடைக்கும்  ஞாபகத்தடயங்களை கிளறி உணர்ச்சிப்பெருவெள்ளத்தில் ஆழ்த்தும் ஆற்றல் பெற்றது.நம் மனங்களை உருக வைத்து வாழ்வை அர்த்தப்படுத்தும் பாடல்!

காதலின் உச்சத்தில் நின்று பாடப்படும் இந்த மகிழ்ச்சிப்பாடலில் இனம்புரியாத சோகத்தையும் உள்ளிணைக்க செனாய் வாத்தியத்தைப் பயன்படுத்தி உணர்வின் உள்ளொளியைக் காட்டும்  மெல்லிசைமன்னர்களின் இசை மேதைமையைக் காண்கிறோம்.   பல்லவியைத்  தொடரும் இடையிசையில் அன்பின் ததும்பலாக சந்தூர் வாத்தியத்தின் இனிய சிதறல்களை காட்டுகிறார்கள்.

பிள்ளையோ உன்  மனது இல்லையோ ஓர் நினைவு

என்ற வரிகளைத் தொடர்ந்து வரும்  இடையிசையில் செனாய் தரும் மதுர இசையைத் தொடர்ந்து எக்கோடியன் சுழன்றடித்து அனுபல்லவியை அபாரமாக எடுத்துக்கொடுக்கிறது.அன்பின் முருகிய நிலையை முழுமையாய் தரும் பாடல்.எனது பால்யவயதின் நினைவலைகளை மீட்டும் பாடல்.

பாடல்: 10

-------------

இரவும் நிலவும் மலரட்டுமே [கர்ணன் ]

மெல்லிசை இயக்கத்தின்   புத்திரர்கள் கொடுத்த கலையழகு குன்றாத கைநேர்த்தியை இந்தப்பாடலில் கேட்கலாம்.குழல் ,சாரங்கி ,சந்தூர் போன்ற வாத்தியங்களுடன் அணி சேர்த்து செனாய் இசையின் இனிமையை இன்பத்தின் தித்திப்பாய்த் தந்து தனிச்சுவை காட்டி நிற்கும் பாடல்.வட இந்திய இசைக்கருவிகளை வைத்து ஹிந்துஸ்தானிய இசைப்படிமங்களை தமிழில் கலந்த புது மெருகு இந்தப்பாடல்.

பாடல்: 11

பொன்னொன்று கண்டேன்  - படித்தால் மட்டும் போதுமா - திருமணமாகாத அந்நியோன்யமான சகோதரர்கள் பாடும் பாடலாக அமைந்த இந்த அற்புதமான பாடலில் கனிவும் , நெகிழ்ச்சியும் ததும்பி நிற்கிறது. கதையின் போக்கில் பின்னர் நிகழப்போகும்  துயரத்தின் அறிவிப்பாய் ஒலிப்பது போல செனாய் கரைந்து செல்கிறது.

சோக ரசத்தில் மிளிரும் ஒரு அற்புத இசைக்கருவியை மகிழ்ச்சி கரைபுரண்டோடும் ,உணர்ச்சி ததும்பும் பாடல்களிலும் வைத்த நுட்பம்,லாவண்யம், விழிப்புணர்வு தூண்டும் புதுமை தவிர வேறென்னவாக இருக்க முடியும்!

செனாய் வாத்தியம் என்பது துயரத்தை அறிவிக்கும் ஒரு இசைக்கருவி என்ற தப்பான கருத்து தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.இதுமாதிரியான ஒரு அடையாளத்தை சினிமாவும் ,வானொலிகளும் கொடுத்திருந்த என்பது மறுக்க முடியாததாகும்.குறிப்பாக வானொலிகளின் அஞ்சலி நிகழ்வுகள் செனாய் வாத்தியமின்றி இடம்பெறாமையும் இதுமாதிரியான ஒரு தோற்றப்பாங்கு ஏற்படக்காரணமாகின.

குறிப்பாக ஈழத்து தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு மரண இசைக்கருவி என்று கூறுமளவுக்கு மரணஅஞ்சலி நிகழ்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட   வாத்தியம் ஆகும்.

வடஇந்திய இசைக்கருவியாக செனாயின்   உள்ளார்ந்த இயல்பில்  சோகம் கவிந்திருந்தாலும் ,மகிழ்ச்சியிலும் பூரண இன்பத்தில் திளைக்க வைக்கக்கூடியதாகும்.வட இந்தியத் திருமணங்களில்  மங்களவாத்தியம் செனாய் !

மெல்லிசைமன்னர்களின்  பாடல்களில் செனாய் வாத்திய இசையில்  மகிழ்ச்சி ஓங்கி நிற்கும் பாடல்களுக்கு மேலும் சில உதாரணங்ககளை கீழே தருகின்றேன்.

கண்களும் காவடி சிந்தாகட்டும் - எங்கவீட்டுப்பிள்ளை

தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் [வாழ்க்கைப்படகு]

துள்ளித் துள்ளி விளையாட துடிக்குது மனசு- [மோட்டார் சுந்தரப்பிள்ளை ]

தென்றல் வரும் சேதி தரும் - [ பாலும் பழமும் ]

போய் வா மக்களே போய் வா - கர்ணன் என் உயிர் தோழி கேளடி சேதி - கர்ணன்

தித்திக்கும் பால் எடுத்து - [ தாமரை நெஞ்சம் ]

தேடித் தேடி காத்திருந்தேன் - [பெண் என்றால் பெண் ]

வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோவிலிலே [இருமலர்கள் ]

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் [ பெற்றால்  தான் பிள்ளையா ] பொட்டு வைத்த முகமோ [சுமதி என் சுந்தரி ] உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் [ அவளுக்கென்றோர் மனம்]

தீர்க்க சுமங்கலி வாழகவே [தீர்க்க சுமங்கலி ] திருப்பதி சென்று திரும்பி வந்தால் [ மூன்று தெய்வங்கள்]

சோகப்பாடல்களில் மிக  இயல்பாய் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வாத்தியக்கருவியை மகிழ்ச்சிப்பாடலிலேயே எவ்வளவு அற்புதமாகத் தந்தார்கள் என்றால் அதன் இயல்பிலேயே சோகம் கொட்டும் இசைக்கருவியை வார்த்தையால் வர்ணிக்கமுடியாத வகையில் உணர்ச்சி பீறிட்டுப்பாயும் வகையில் தந்து இசைரசிகர்களைக் கிற்ங்கடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் தவறேதுமில்லை.அந்தளவுக்கு சோகரசம் ததும்பும்  பாடல்களிலும் அள்ளித்தந்திருக்கின்றார்கள்.

சோகப்பாடல்கள்:

மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த பாடல்களில் எனக்கு அதிகம் பிடித்த சோகப்பாடல்களில் அதியுன்னதமான சில பாடல்களைத் தருகிறேன்.வார்த்தையால் வர்ணிக்கமுடியாத பாடல்கள் என்று நான் கருதும் இப்பாடல்களை குறிப்பிடாமல் இக்கட்டுரை நிறைவடையாது என்பதாலும் அதை குறிப்பிடாமல் என்னாலும் இருக்க முடியாது என்பதாலும்  அவற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன்.

இந்தப்பாடல்களை கண்ணீர்வராமல் என்னால் கேட்கமுடிவதில்லை.இப்பாடல்களில் என்னை அதிகம் கவர்ந்தது இசைதான்  என்பதும் பாடலின் வரிகள் அதனோடு மாற்றொணாவண்ணம் பின்னிப்பிணைந்து இருப்பதால் பாடல் உயர் நிலையை எய்திநிற்கின்றமையாலும்  கூடுதல் மதிப்பு ஏற்படுகிறது.

மெல்லிசைமன்னர்கள் , கண்ணதாசன் , சுசீலா  இந்தக் கூட்டணியில் வந்த அனைத்துப் பாடல்களும் வெற்றியின் உச்சங்களைத்

தொட்டவையாகும்.குறிப்பாக 1960 களில் வெளிவந்த பாடல்களை பற்றி சொல்லவே தேவையில்லை.அதில் சோக உணர்வில் உச்சம் தொடும் பாடல்களில் சில.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் [ பாக்கியலட்சுமி 1961 ] நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு [ ஆனந்த ஜோதி 1963 ] எட்டடுக்கு மாளிகையில்  [ பாத காணிக்கை 1962  ]

பாடல்:1

மாலைப்பொழுதில் மயக்கத்திலே - [ பாக்கியலட்சுமி ]

நன்றாகக் பாடக்கூடிய தனது சிநேகிதியிடம் பாடல் பாடும்படி கேட்கும் போது , தனது மனதில்   இருப்பதை பூடகமாக வெளிப்படுத்தும் பாடல்.

வீணை இசையுடன் மகிழ்ச்சியாக ஆரம்பமாகும் இந்தப்பாடல் ,நாயகியின் துயரத்தை வெளிப்படுத்துவதாயும் அமைக்கப்பட்டுள்ளது.இப்பாடலில் செனாய் வாத்தியம் துயரத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்படுவதுடன் அமைக்கப்பட்ட ஹிந்தோள  ராகத்தின் உயர்வையும் , மேன்மையையும் உச்சத்தில் வைத்து நம்மை சிலிர்க்க வைக்கிறது.

பல்லவி முடிந்ததும் அருமையான வீணை மீட்டலும் ,தாவிச் சென்று பாடலுக்குள் கரைக்கும் வயலின் இசையும் ஒன்றிணைய அனுபல்லவி ஆரம்பிக்கிறது.

அனுபல்லவியில்..

மணம் முடித்தவர் போல் அருகினில் ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார்  தோழி...

என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் செனாய் உருக்கமும், நெகிழ்ச்சியும் தந்து நம்மைக் கரைய வைக்கிறது.

அனுபல்லவியைத் தொடர்ந்து பொங்கி வரும் வயலின்களும் ,அதற்கு அணைகட்டி ஆற்றுப்படுத்தும்  வீணையிசையும் அதைத் தொடர்ந்து வரும் செனாய் இசையும்  பாடலின் உச்சக்கட்டமாக  துயரத்தின் உச்சத்தை தொட்டு கனிந்து  குழைய   சரணம் ஆரம்பிக்கிறது.

கனவில் வந்தவர் யார் எனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி .... கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி ..

கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் செனாய் இசை ,நெகிழ்ந்து, கனிந்து   கரைந்து துயரத்தின் வடிவாய் நிற்கும் நாயகியின் சோகத்தை நம்முடன் இணைத்துவிடுகிறது.

வீணை இசையுடன் மகிழ்ச்சியாய் ஆரம்பிக்கும் பாடல் துயரத்தின் துளிகளை நம்முள் சிந்திவிட்டு முடிகிறது. புகழபெற்ற ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா குரசேவா கூறிய  “There is nothing that says more about its creator than the work itself.”    என்ற புகழபெற்ற வாசகம் மெல்லிசைமன்னர்களுக்கு சாலவும் பொருந்தும்.

ஆணிவேரான மரபு ராகங்களில் சஞ்சரித்து புதிய ரசனைகளைத் திறந்துவிட்ட, உணர்வின் புதிய எல்லைகளைத் தொட்டு படைப்பூக்கத்தில் சாகசம் காட்டிய மகாகலைஞர்களின் அற்புதப்படைப்பு இந்தப் பாடல்.காலத்தால் மென்றுவிட முடியாத பாடல்.

பாட்டு :2

எட்டடுக்கு மாளிகையில்  [ பாத காணிக்கை 1962 ]

இந்தப்பாடல் அவலச்சுவையின் உச்சம்.

வாத்தியக்கலவையில் அதிமேதமைகாட்டும் இந்தப்பாடலில் செனாய் இசையுடன் நாதஸ்வரம் ,தவில் , குழல்  இசையையும் கலந்த அற்புதத்தை எப்படி எழுதுவது !?

இசைப்  பேராளுமையுடன் திரையின் காட்சியை கண்முன் நிறுத்துகிறார்கள்.

பல்லவி முடிந்து வரும் இசையில் நாதஸ்வரமும் ,செனாயும் ஓங்கி ஒலித்து ,இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று கலந்து தர     அனுபல்லவி [ "தேரோடும் வாழ்வில் என்று "] ஆரம்பிக்கிறது.

அந்த வரிகளின் இடையிலும் [ "போராட வைத்தானடி, கண்ணில் நீரோட்ட விடடானடி    "  ] செனாய் ஒலித்து நம்மை நெகிழ வைக்கிறது.

தேரோடும் வாழ்வில்  என்று ஓடோடி வந்த என்னை போராட வைத்தானடி - கண்ணில் நீரோட விட்டானாடி

என்ற வரிகளுக்கு பின்னால் ஒலிக்கும் செனாய் இசையை  முதல் முறையும் , மீண்டும்  அதே வரிகளை பாடும் போது இரண்டாவது முறையாக குழலையும் பயன்படுத்தி சிலிர்க்க வைக்கிறார்கள் மெல்லிசைமன்னர்கள்.

பின்னர் அதை தொடரும் இடையிசையில் [ "கையளவு  உள்ளம் வைத்து " என்ற வரிகளுக்கு முன்பாக வரும் இசையில் ] உணர்ச்சி  பெருக்கெடுக்கும் வண்ணம் ,அது கனிந்து கனிவு தரும் இசையாக ஓங்குகிறது.அந்த கனிவின் நிறைவை கண்ணதாசன் தனது வரிகளால் அழகாக நிறைவுசெய்கிறார்.வழமை போல பாடலின் மென்மையான சோகத்தை

கையளவு  உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாடச் சொன்னானடி

என்ற வரிகளிலும் பாடலின் உச்சத்தை நாதஸ்வர  , செனாய் இசைகளின் ஒன்றிணைவில் ஓங்கி ஒலிக்க வைத்து பெருஞ் சோகத்தில் ஆழ்த்துகிறார்கள்.

காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் -இந்த காதல்  வர வேண்டாமடி - எந்தன் கோலம் வர வேண்டாமடி

என்ற வரிகளை பாடும் போது  அந்த சோகம் நமக்கு வந்தது போன்ற உணர்வைத் தருகிறார்கள்.பாடலின் நிறைவில் மீண்டும் வரும்  பல்லவியில் செனாய் உருக்கமாக ஒத்தூதுகிறது. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு  - ஆனந்த ஜோதி [1963]

வீடு நோக்கி ஓடி வந்த என்னையே [ சோகப்பாடல்] - பதிபக்தி

இந்த நாடகம் அந்த மேடையில் - பாலும் பழமும் என்னையார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் - பாலும் பழமும்

நிலவே என்னிடம் நெருங்காதே [ ராமு ] தேரேது சிலையேது திருநாள் ஏது - பாசம் உனக்கு மட்டும் உனக்கு - மணப்பந்தல் மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் - பாசமலர் -டி.எம்.எஸ் ஆத்தோரம் மணல் எடுத்து - தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி - ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் - சாந்தி பல்லாக்கு வாங்கப் போனேன் - பூச்சூடும் நேரத்திலே போய் விட்டாயே அம்மா - பார் மக்களே பார் நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு இதயம் இருக்கின்றதே தம்பி - பழனி கண்ணன்  வருவான் கதை சொல்லுவான் - பஞ்சவர்ணக்கிளி ஒருவனுக்கு ஒருத்தி என்று - தேனும் பாலும் நல்ல மனைவி நல்ல பிள்ளை சுமை தாங்கி சாய்ந்தால்

அடி என்னடி ராக்கம்மா [பட்டிக்காடா பட்டணமா ] மலர்களைப்போல் தங்கை - [பாசமலர்] உனக்கு மட்டும் உனக்கு மட்டும் [ மணப்பந்தல்]

காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் [ வாழ்ந்து காட்டுகிறேன் ]

ஒருநாள் இரவு பகல் போல் நிலவு [ காவியத்தலைவி ]

கல்யாணப்பந்தல் அலங்காரம் [ தட்டுங்கள் திறக்கப்படும் ]

சைலோபோன்   [ xylophone ]

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி ,17 ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க அடிமைகளால் மத்திய அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.மரக்கட்டைகளால் உருவான இந்த வாத்தியம் தாள ஒலியுடன் இணைந்து காதுக்கு இனிய ஒலியை தரும் இயற்கையான,ஆபிரிக்க நாட்டுப்புற இசைக்கருவியாகும்.

காலனி காலத்தில் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கநாடுகளில் புகழபெற்ற இந்த வாத்தியம் சில நாடுகளில் பிரதான வாத்தியமாகப் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக குவாட்டமாலா நாட்டின் தேசியவாத்தியம் என்று சொல்லும் அளவுக்கு பெயர்பெற்று விளங்குகிறது. இந்நாடுகளில் இதனை Marimbo என்று அழைக்கின்றனர்.

மெக்சிக்கோவில் சிலமாற்றங்களை பெற்ற இந்த வாத்தியம், மத்திய அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது..லத்தீன் அமெரிக்க வாத்தியம் என அறிமுகமாகி , பின் வட அமெரிக்காவில் [USA] மேலைத்தேய இசையில் பயன்பட தொடங்கியது.

மத்திய அமெரிக்காவின் வீதியோர இசைக்கருவியாக மட்டுமல்ல, பெரிய இசை நிகழ்ச்சிகளிலும், பின் 1940களில் ஐரோப்பிய உயர் இசையான "சிம்பொனி "இசை வரையும் பாவனைக்கு வந்துவிட்டது.

1960 களில் தமிழ் திரையில் பயன்பாட்டுக்கு வந்த இந்த இசைக்கருவியை அதிகம் பயன்படுத்தி காதுக்கு இனிமையான பாடல்களைத் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்  என்று துணிந்து கூறலாம்.

சைலோபோன்   [ xylophone ] பயன்படுத்தப்பட்ட பாடல்கள் சில:

-------------------------------------------------------------------------------------------------------------------------

01  தங்க மோகனத் தாமரையே - புதையல்  1957

மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த ஆரம்ப காலப்பாடலான இந்தப்பாடலில் மிகத்தெளிவாக சைலபோன் இசையை கேட்டு வியந்து போகிறோம்.1957லேயே  சைலபோன் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டு ,அவரின் இசைத்தேடலையும் வியக்கிறோம்.

02  மதுரா நகரில் தமிழ் சங்கம்

இந்தப்பாடலின் ஆரம்ப இசையிலேயே , குழலுடன் இணைத்து Xylophone ஐ மிக அருமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.பாடலின் இனிப்புக்கு முத்தாய்ப்பாக இந்த வாத்தியத்தையும் இணைத்து தருகிறார்கள்.

03  கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - ஆலயமணி இந்தப்பாடலின் ஆரம்பத்திலும் இந்த வாத்தியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.வாசிப்பு முறையில்  வானத்தில் பறப்பது போன்ற உணர்வையும்  கனவில் மிதப்பது , அமானுஷ்ய ,அதீத உணர்வுகளையும்   வெளிப்படுத்தும் பாங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

04  சிட்டுக் முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே- புதியபறவை 1963

மலைவாழ் மக்களை பிரதிபலிக்கும்  ஆரம்பத் தாளத்தையடுத்து வரும்  ஒரு கணநேர சைலபோன் இசையைத் தொடர்ந்து பாடல் ஆரம்பிக்கிறது.பாடலின் இடையிடையேயும் ஜலதரங்கம்  சந்தூர் , குழல், வயலின்  இசையுடன் இயைந்து துலாம்பரமான எடுப்பும் , பொலிவும்  , சைலபோணை மிக லாகவமாகக்  கலந்த செம்மையின் அழகு இந்தப்பாடல்.இடையிடையே கலந்த வரும் பி.சுசீலாவின்  கம்மிங்  பாடலின் கம்பீரத்தையும் , இனிமையையும் ,பரவசத்தையும் தருகிறது.இனிமை இழையோடும் இந்தப்பாடல் கால எல்லையைக் கடந்து நிற்கும் குளிர்ந்த காற்று .

05  அம்மம்மா கேளடி தோழி - கறுப்புப்பணம் சந்தூர் , ரம்பட் ,குழல் ,சைலபோன் பொங்கஸ், சாக்ஸ் கிட்டார் என பலவகை இசைக்கருவிகள் ஹார்மோனியுடன் பயன்படுத்தப்பட்ட பாடல்.பல்லவி முடிந்து வரும் இடையிசையில் சைலபோன் ஒரு சில கணங்கள்  ஒலித்த பின் அனுபல்லவி [ பிஞ்சாக நானிருந்தேனே ] மிக அருமையாக ஒலிக்கிறது.

06  கண்ணுக்கு குலமேது - கர்ணன் இதைப்பாடலிலும் சரணத்திற்கு முன்னர் " கொடுப்பவர் எல்லாம் மேலாவார் " என்ற வரிகளுக்கு முன்னாக சந்தூர் , குழல் இனிமையுடன் சைலபோன் இனிமைக்கு மறைந்திருந்து இனிமை கொடுக்கிறது.

07  பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் - பணம் படைத்தவன் அமானுஷ்ய உணர்வைத் தரும் இந்தப்பாடலில் எல்.ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங் மற்றும் சைலபோன் இயைந்து இனிமையூட்டுகிறது.

08  கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - ஆலயமணி தந்திக்கருவிகளின் சலசலப்பை தென்னங்கீற்றாய் பொலிவுடன் தரும் அமானுஷ்யப்பாடல்.அலையலையாய் பொங்கி பெருகி மறைந்து மீண்டும் எழுந்து  வரும் இனிமை பொங்கும் ஹம்மிங் இந்தப்பாடலுக்கு சைலபோன் நிறைவையும் பொலிவையும் தருகிறது.ஆகாயத்தில் மிதக்கும் உணர்வை தந்த பாடல்.

09  நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் - வாழ்க்கை வாழ்வதற்க்கே வைரமாக மின்னும் சந்தூர் ஒலியுடன் குதூகலமாக ஆரம்பமாகும் இந்தப்பாடலில் , மிதந்து வரும் குளிர்ந்த காற்றின் இதத்தை சைலபோன் மறைந்து நின்று பாடலின் இனிமையை உயர்த்துகிறது.

10  எங்கே நிம்மதி எங்கே நிம்மதி - புதிய பறவை நிம்மதியில்லாத  நாயகன் கனவிலும் தவிப்பது போன்றமைந்த இந்தப்பாடலில் ஆச்சரியமான இசைக்கலவைகளை அமைத்திருப்பார்கள்.அன்றைய காலத்தில் அதிகமான வாத்தியக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல் என்ற பெருமை இந்தப்பாடலுக்கு உண்டு.

பாடலுக்கு தேவையான உணர்வுகளை மிக அற்புதமாக ,அசாத்தியமாக இசையமைப்பாளர்கள் வெளிப்படுத்தியிருக்கும் இப்

பாடலின் ஆரம்பம்  சைலபோனுடன் தான் ஆரம்பிக்கிறது .அதுமட்டுமல்ல பாடலின் பல்லவி முடிந்து வரும் இடையிசையில் [ எனது கைகள் மீட்டும் போது ,,,,என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் ] சைலபோன் இசையைக் கேட்கலாம்.

கோரஸ் ,வயலின்,குழல் , பொங்கஸ் என வாத்தியங்கள் பெரும் அணி தங்குதடை இல்லாமல் பிரவகித்து ஓடும் பாடல்.

11  புதிய வானம் புதிய பூமி - அன்பே வா இந்தப்பாடலின் ஆரம்பத்திலும் இந்த வாத்தியத்தின் மதுர ஒலியை துல்லியமாக  நாம் கேட்கலாம்.

12  ஒரு ராஜா ராணியிடம் - சிவந்தமண்

வெளிநாட்டு காட்சிகள் கொண்ட  இப்பாடலில் மிகக்கச்சிதமாக பயன்படுத்தப்பட்ட சைலபோன் இசை  ஒளிந்திருந்து ஜாலம் காட்டுகிறது.

13  பொங்கும் கடலோசை  - மீனவ நண்பன் 1960களில் மென்மையான முறைகளில் இந்த வாத்தியத்தைக் கையாண்ட மெல்லிசைமன்னர் தனியே இசையமைத்த இந்தப்பாடலில் மிக துல்லியமாகத் தெரியும் வண்ணம் , தெளிவான தாள நடையில் , அதை தனியே தெரியும் வண்ணம் கொடுத்த முக்கியமான ஒரு பாடல்.

14  யாதும் ஊரே யாவரும் கேளிர் - நினைத்தாலே இனிக்கும்

இந்தப்பாடலிலும்  துல்லியமாக சைலபோன் இசையை கேட்கலாம்.

இவை மட்டுமல்ல , பொதுவாக வெளிநாடுளில் படப்பிடிப்பு செய்யப்பட்ட காட்சிகளின் பின்னணியிலும் இந்த வாத்தியம் பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் [ உலகம் சுற்றும் வாலிபன் ,சிவந்தமண் போன்ற படங்களில் ] அவதானிக்கலாம்.

செனாய் வாத்திய இசையின் இனிமையை  அதன் தன்மையறிந்து அசாதாரண சூழ்நிலைகளுக்கு பயன்படுத்தியதையும் , சைலபோன் என்ற தென் அமெரிக்க வாத்தியத்தை ,அதன் இனிமையை மற்ற வாத்தியங்களுடன் மறை பொருளாக இணைத்து இசையின் மதுரத்தை தேனாகத் தந்த புதுமையைக் காண்கிறோம்.

மரபோடிணைந்த இசையின் வாரிசுகளாக அறிமுகமானாலும் தமக்கு வெளியே உள்ள இசைவகைகளை இனம் கண்டு கொண்டதுடன் , அதற்கு மாறான எதிர் நிலையில் உள்ளதென அறியப்பட்ட இசைவகைகளை படைப்பூக்கத்துடன் பயன்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

இவர்களது சமகால ஹிந்தி திரையிசையமைப்பாளர்கள் முன்மாதிரியான பாடல்களைத் தந்து சென்றதை மிக நுணுக்கமாகக் அவதானித்து தங்களுக்கேயுரிய பாங்கில் தனித்துவம் காட்டி  மக்கள் மீது அதிக செல்வாக்கு செலுத்தும்   சினிமா இசையைத் தம் பக்கம் திருப்பிய பெருமை மெல்லிசைமன்னர்களுக்கு உண்டு.

இசை நுட்பங்களை வெளிநாடுகளிலிருந்து அறிந்தார்கள் என்பதைவிட சமகாலத்து ஹிந்தி இசையமைப்பாளர்கள் வழிமுறையைப் பின்பற்றியவர்கள் என்றே எண்ணத் தோன்றுமளவு ஹிந்தி இசை தாக்கம் விளைவித்துக் கொண்டிருந்தது என்றே சொல்லத்தூண்டுகிறது. மெல்லிசைமன்னர்  பல்வகை வாத்தியங்களை விதந்து பாராட்டும் வண்ணம்  தனது பாடல்களில் பயன்படுத்தியிருப்பதை நாம் காண்கிறோம்.பியானோ , எக்கோடியன் , ரம்பட் , சாக்ஸபோன்,,ஹார்மோனிக்கா , ஆர்மோனியம் , மவுத் ஓர்கன் , கிட்டார் , மேண்டலின் , பொங்கஸ், பிரஸ் ட்ரம்ஸ் , போன்ற மேலை வாத்தியங்களும் , சந்தூர் , சாரங்கி  , சித்தார், செனாய்  போன்ற மைய நீரோட்ட வட இந்திய வாத்தியங்களை வைத்து புது உலகைக் காட்டி படைப்பூக்கத்தில் உன்னதங்களை நிகழ்த்திக்காட்டினார்கள்.

மேற்குறித்த   வாத்தியங்களில் அமைந்த பாடல்கள் சிலவற்றை பறவைப்பார்வையில் பார்ப்போம்.


இனிய வாத்தியக்கலவைகளும் , பல்வகை ஒலிநயங்களும்.

மரபிசையோடு இயைந்த மெட்டுக்களை சிறப்பாக அமைக்கக்கூடிய முன்னோடிகளான ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு ,வி. வெங்கட் ராமன் , கே.வி.மகாதேவன் போன்றவர்களின் பாடல்களிலிருந்து மெல்லிசைமன்னர்களின் வித்தியாசமானதாக , புதுமையாக இருப்பதை நாம் காண்கிறோம்.முன்னோடிகளின் மெட்டுக்கள் இனிமையாக இருப்பினும் வாத்திய அமைப்பில் போதாமையையும் காண்கிறோம்.

மெல்லிசைமன்னர்களின் இசை வசீகரத்தின் ஆதாரமே புதிய, புதிய இசைக்கருவிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியது தான் என அடித்துக் கூறலாம்.எளிமையும் ,கவர்ச்சியும் வனப்பும் ,கனிவும் மிக்க மாயக்கலவையாக அவர்களது இசை இருந்தது.

"தேடு கல்வி இல்லாதொரு ஊரைத் தீக்கிரையாக மடுத்தல் " எனும் பாரதியின் வாக்குக்கு அமைய

தாம் கேட்டு  அனுபவித்த இசைவகைகளை  எளிமையாக மாற்றி தர முனைவதும், அதில் இருந்து புதிதாய் ஒன்றைக் கண்டடைய  முயன்றதையும் அவர்களது இசையமைப்பில் காண்கிறோம்.

அதுமட்டுமல்ல சிக்கலான இசை  நுட்பங்களை ,ஒன்றோடொன்று தொடர்பற்ற இசை போல தெரியும் இசைவகைகளிலிருந்து எளிமையான  மெட்டுக்களை உருவாக்கி அவற்றை தமிழ் சூழலுக்குகேற்றவகையில் தகவமைக்கும் ஆற்றலையும்  எண்ணி வியக்கின்றோம்.வெவ்வேறு இசைவகைகளிலிருக்கும் எல்லைக் கோடுகள் ,இடைவெளிகளை அழித்து  பெரிய மாற்றத்தை தோற்றுவித்து ,இசையால்  ரசிகர்களை உயிர்ப்பூட்டும் புதிய முயற்சிக்கு தயார்படுத்தினார்கள்.

தேனீக்கள் போல சேகரித்தவைகளை செம்மையாகவும் ,துல்லியமாகவும் வெளிப்படுத்தும் பாங்கில் இசைவும் தெளிவும்  இருந்தது.இதனூடே பாடல்களிலும் உள்நுழையும் வாத்தியங்களை கூர்ந்து கேட்கையில்  அவர்களது இசையின் தாகத்தையும் வேட்கையையும் உணர முடிகிறது.

வாத்திய இசைகளின் அடர்த்தியில் இயைந்து  செல்லும் பாடல்களைக் கேட்கும் போது ஆனந்த நிலைகளில் அசைந்து செல்லும் குதூகலங்களும், பழமையின் இனிய நினைவுதுளிர்ப்பும்  , உயிர்ப்பின் சிலிர்ப்பும் நம்மை ஒன்றாகத் தாக்குகின்றன.

வாத்தியங்களின் இசைக்கலவைகளையும் ,அவற்றின் துல்லியத்தையும் ஒன்று கலந்து தேவையான உணர்வுகளுக்கு அதன் கட்டமைவுகளுக்கு அடிப்படையான இசையை ,பாடல்களை வழங்கினார்.அக்கால சூழ்நிலையின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் பொது அவை புத்திசையின் பள்ளியெழுச்சி என்று கூறலாம்.ஆச்சர்யமிக்க படைப்பூக்கத்துடன் பாடல்களைத் தந்த மெல்லிசைமன்னர்கள் இசையின் மீது காதல் , மயக்கம் கொண்ட நாடோடிகளாகவும் தெரிகின்றனர்.

எளிமையான மெட்டுக்களில் நுட்பமான இசையொலி இழைகளை வைத்து  அவற்றை வீணே  பலியாக்காமல் ,அதனுடன் விரிநுணுக்கக் கூறுகளையும் இணைத்து உள்ளமுவக்கும் பாடல்களைத் தந்து சென்றிருக்கிறார்கள்.மேம்போக்காக நாம் கேட்டு கேட்டு ரசித்த பல பாடல்களில் அவர்கள் இணைத்துத் தந்திருக்கும் வாத்திய இசைக்கோர்வைகளை  மீண்டும் நுணுகிக் கேட்கும் போது,நாம் முன்பு சுவைத்ததற்கும் மாறான வேறுபாட்டையும், புதிய அனுபவத்தையும் பெறுகிறோம்.

அவர்களுடன் நெருங்கிப்பழகிய இசைக்கலைஞர்கள் ,தயாரிப்பாளர்கள் ,நடிகர்கள் போன்றோர் தாம் பங்குகொண்ட பாடல்களின் ஒலிப்பதிவு மற்றும் நுட்பங்கள் குறித்துத் தரும் தகவல்கள் மெல்லிசைமன்னர்களின் திறனுக்கு சான்று பகர்வதுடன் இசைரசிகளையும் பாடல்களை துருவித் துருவி ஆராயும் மனப்போக்கை வளர்க்க உதவுவவும் செய்கின்றன.

மெல்லிசைமன்னர்களின் மெட்டுக்களின் இனிமையிலும் , அவை தரும் உணர்வில் மயங்கும் அல்லது மனம் பறிகொடுக்கும் ரசிகர்கள் பாடலின் ஒரு  பகுதியைத் தான் ரசிக்க முடியும் என்ற நிலையைத்தாண்டி அதில் இணைந்திருக்கும் வாத்திய இசையை நுணுகிக் கேட்பதும், அவற்றின் நுணுக்கங்களை கேட்டு அனுபவிப்பது என்பது புதிய அனுபவம் என்பதும் மகிழ்ச்சி தருவதும் எழுதுபவர்களுக்கும் பயன்படக்கூடியவையுமாகும்.

அவர்களது இசையில் வாத்திய இசையின் பங்களிப்பை அறிய முனைபவர்கள் என்னென்ன வாத்தியங்களை அவர்கள் தங்கள் பாடல்களில் இணைத்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுமாயின் அவர்களது பாடல்களின் வழியே உள்நுழைந்து வருவதைத் தவிர வேறு வழியில்லை.

அந்த வகையில் பியானோ ,ட்ரம்பட் , ட்ரம்ஸ் ,எக்கோடியன் , கிட்டார் ,ஹார்மோனிக்கா போன்ற மேலைத்தேய வாத்தியங்களை மட்டுமல்ல  வட இந்திய இசைக்கருவிகளான சாரங்கி ,சந்தூர் ,சித்தார் போன்ற  இசைக்கருவிகளை சுவீகரித்து திறமையுடன் வழி வழியாக வந்த இசையோடு, தங்களுக்குரிய ஆர்வத்தோடு,ஒருங்கிசைவுடன் தந்த அழகை, அமுதாகக் கலந்து தந்த பாடல்கள் சிலவற்றை இங்கே நோக்கலாம்.

01 பியானோ: [Piano]

--------------------------------

17 ம் நூற்றாண்டில் இத்தாலியில்  கிறிஸ்டிபோறி [ Cristifori  ] என்பவரால்  கண்டுபிடிக்கப்பட்ட இசைக்கருவி பியானோ. பிளூஸ், ஜாஸ், ரோக் மற்றும் மேலைத்தேய செவ்வியல் இசையிலும் அதிக பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி. மிக நுண்ணிய, இசைவான  சுரங்களையும் வாசிக்க ஏதுவான இசைக்கருவி.

தற்போது மேலைத்தேய நாடுகளில் பல்வகை இசைகளிலும் விஸ்தாரமாகப் பயன்படும் இக்கருவியை செவ்வியல் இசையில் வியக்கத்தக்க அளவில் ஜோகன் செபஸ்டியா பாக் [Johann Sebastian Bach   ] , மொஸாட் போன்றோர் பயன்படுத்தி வெற்றிகண்டனர். ஜாஸ் இசையிலும்  உச்சங்களைத் தொட்ட  Duke Ellington, Nat King Cole,Errol Garner  போன்ற  எண்ணற்ற கலைஞர்களையும் நாம் இங்கே நினைவூட்டலாம்.

பியானோ இசை மேலைத்தேய செவ்வியல் இசையிலும் அதிகம் பயன்பட்டாலும் மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் வணிக மற்றும் பொழுதுபோக்கு [ Entertaining ] இசையின் உச்சமாகத் திகழ்ந்த ஜாஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க இசையைத்தான் தங்கள் ஆதர்சமாகக் கொண்டார்கள்.குறிப்பாகப் பியானோ இசையை அந்த பாங்கிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஜாஸ் இசை என்று பொதுவாக  நாம் இங்கே குறிப்பிட்டாலும் அதிலுள்ள Stride Piano ,Boogie - Woogie போன்ற நுணுக்கங்களையும் பயன்படுத்தினர்.

காலத்தால் முந்திய Ragtime Piano என்பது ஜாஸ் இசைக்கு வெளியே பயன்படுத்தப்பட்ட பியானோ இசையாகும்.Ragtime Piano என்பது Scot Joplin [1868-1917 ] என்ற கறுப்பினக் கலைஞரால் சிகாகோவில் உருவாக்கப்பட்டது.இசைக்குறிப்புகள் கொண்ட ,மனோதர்ம வாசிப்பு இல்லாத , கனதியற்ற வாசிப்பு முறை கொண்ட இசையாகும். இந்த இசையில் தேர்ச்சிபெற்ற இசைக்கலைஞரான Jelly  Roll Morton [ 1890 - 1941 ] என்பவரே ஜாஸ் இசையின் பிதாமகன் எனக்கருதப்படுகிறார்.

Stride Piano  என்பது மனோதர்ம [ Improvisation ] முறையில் வாசிப்பதை அடிப்படையாகக் கொண்டது.இது நீண்ட அடியிட்டுத் தாவிச்செல்லும் வேகமான வாசிப்பு முறையைக் கொண்டதாகும்.James P Johnson [ 1891 - 1955 ]என்ற கலைஞர் father of the Stride Piano எனக் கருதப்படுகிறார்.இவரை அடியொற்றி பியானோ இசையில் அதிக தாக்கம் விளைவித்து பாரிய பங்காற்றிய கலைஞர்களாக Thomas "Fats" Waller , Art Tatum போன்றோர் ஜாஸ் இசையில் அதிக தாக்கம் விளைவித்தவர்களாவர்.

Boogie - Woogie என்ற ஜாஸ் இசைப்பாணி 1930 களில் உருவான முறையாகும்.மெலோடியின் உருவத்தை தாளத்தின் நளினத்தோடு வெளிப்படுத்துவதோடு ,தாள் அமைவுகளின் கலை நுணுக்கப்பற்றார்வத்தையும் வெளிப்படுத்தும் ஓர் முறையாகும்.இருவர் ஒரு பியானோவை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் , இசை குறிப்புக்களை வாசிக்க முடியாதவர்களும் ,தாளநடைக்கு ஏற்ப வாசிக்க தெரிந்தவர்களும் வாசிக்க முடியும் என்பது  இதன் சிறப்பம்சமாகும்.Boogie - Woogie இசையிலிருந்து ஜாஸ் இசையின் பல பிரிவுகள் பிறந்ததென்பர்.

மெல்லிசைமன்னர்கள் இசையில் Boogie - Woogie  என்ற இசைவகையில் அமைந்த சில பாடல்கள்:

01  மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும் - வெண்ணிற ஆடை  [1964 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

02  அல்லிப்பந்தல் கால்கள் எடுத்து  - வெண்ணிற ஆடை [1964 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி- விஸ்வநாதன் ராமமூர்த்தி.

03  என்ன என்ன வார்த்தைகளோ   - வெண்ணிற ஆடை   [1964 ] - பாடியவர்: பி.சுசீலா  - விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  ஆடவரெல்லாம் ஆட வரலாம்  - கறுப்புப்பணம்  [1964 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி- விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  யாரோ ஆடாத தெரிந்தவர் யாரோ  - குமரிப்பெண்  [1965 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி - விஸ்வநாதன்

ஜாஸ் இசை என்று இங்கே குறிப்பிடும் போது அதனுடன் இணைந்து பிரஷ் ட்ரம்ஸ் [Brush drums ],"வுட் பாஸ்" [Wood Bass ], Snare Drum ,  Bangos ,Accordian ,Mouth Organ , குழல், வயலின்,ட்ரம்பட்  போன்ற பிற வாத்தியக்கருவிகளையும் இணைத்து சாகசம் புரிந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்!

பொதுவாக துள்ளல் இசையில் வைக்கப்படும் பியானோ இசைக்கருவியின் அத்தனை இசைச் சாத்தியங்களையும் தங்களின் பாடல்களில் வைத்து பாடலின் உணர்வுகளைத் ததும்ப வைத்தார்கள்.அவை  கிராமிய பாடல் ,காதல் பாடல் ,சோகப்பாடல் ,வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல், நகைச்சுவைப்பாடல் எதுவாக இருப்பினும் அதன் ஒத்திசைவுக்கு ஏற்ப பாடல்களை அமைத்து படைப்பாற்றலின் அதீதங்களைக் காட்டினார்கள்.

பியானோ கருவியுடன் இணைத்து ட்ரம்பெட் ,ட்ரம்ஸ் ,கிட்டார் , சாக்ஸபோன்,எக்கோடியன் , பொங்கஸ் எனப் பலவகை இசைக்கருவிகளையும் இணைத்து அவர்கள் தந்த எண்ணற்ற பாடல்கள் உள்ளன. மெல்லிசைமன்னர் இணைந்தும் பின் தனியே பிரிந்து சென்று இசையமைத்த பாடல்களில் சில:

06  பாட்டொன்று கேட்டேன் - பாசமலர்   [1961 ] - பாடியவர்: கே.ஜமுனாராணி  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

07  வரவேண்டும் ஒரு பொழுது - கலைக்கோயில் [1964 ] - பாடியவர்: எல் ஆர்.ஈஸ்வரி -விஸ்வநாதன் ராமமூர்த்தி.

08  உன்னை ஒன்று கேட்பேன்   - புதிய பறவை   [1963 ] - பாடியவர்: பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி.[ ட்ரம்பெட் ,ட்ரம்ஸ் ]

09  விஸ்வநாதன் வேலை வேணும்   - காதலிக்க நேரமில்லை  [1964 ] - பாடியவர்: PBS + குழுவினர்.- விஸ்வநாதன் ராமமூர்த்தி.

10  கண்ணிரண்டும் மின்ன மின்ன  - ஆண்டவன் கட்டளை  [1961 ] - பாடியவர்: BPS + எல் ஆர்.ஈஸ்வரி - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

11  காற்று வந்தால் தலை சாயும்   - காத்திருந்த கண்கள் [1962 ] - பாடியவர்: BPS + சுசீலா  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

12  வண்ணக்கிளி சொன்ன மொழி   - தெய்வத்தாய் [1962 ] - பாடியவர்: TMS + சுசீலா  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

13  மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - சுமைதாங்கி    [1962 ] - பாடியவர்: PBS  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

14  மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க - பணம் படைத்தவன்   [1962 ] - பாடியவர்: TMS + சுசீலா  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

15  கண்ணென்ன கண்ணென்ன -பெரிய இடத்துப் பெண் - [1963 ] - பாடியவர்: TMS  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

16  கண் போன போக்கிலே கால் போகலாமா -பணம் படைத்தவன் [1965 ] - பாடியவர்: TMS + குழு  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

17  நான் நன்றி சொல்வேன் -குழந்தையும் தெய்வமும் - [1965 ] - பாடியவர்: சுசீலா + MSV  - விஸ்வநாதன்

18  ஓ லிட்டில் பிளவர் -  நீலவானம் 1966 - பாடியவர்: TMS - விஸ்வநாதன் [பியானோ ,எக்கோடியன் , ட்ரம்ஸ்,கிட்டார் ,குழல் ]

19  தேடினேன் வந்தது- ஊட்டிவரை உறவு 1967 - பாடியவர்: சுசீலா- விஸ்வநாதன் [பிரஸ் ட்ரம்ஸ் ,பியானோ ,ட்ரம்பெட் ,குழல்,வயலின் ]

20  என்ன வேகம் சொல்லு பாமா -குழந்தையும் தெய்வமும் 1965 - பாடியவர்: TMS + குழு  - விஸ்வநாதன்

21  அவளுக்கென்ன அழகிய முகம்  - சர்வர் சுந்தரம்  - [1967 ] - பாடியவர்: TMS + + எல் ஆர்.ஈஸ்வரி  - விஸ்வநாதன்

22  தொட்டுக்க காட்ட வா - அன்பே வா   [1967 ] - பாடியவர்: TMS + ராகவன் + குழு - விஸ்வநாதன்

23  நாடோடி நாடோடி - - அன்பே வா   [1967 ] - பாடியவர்: TMS + ராகவன் + குழு - விஸ்வநாதன்

24  பால் தமிழ்ப்பால் -- ரகசிய போலீஸ் 115 [1968] - பாடியவர்: TMS + ஈஸ்வரி  - விஸ்வநாதன்

25  செல்லக்கிளிகளாம் பள்ளியிலே  - எங்க மாமா  [1968] - பாடியவர்: TMS  - விஸ்வநாதன்

26  அத்தானின் முத்தங்கள்- உயர்ந்த மனிதன்   [1968] - பாடியவர்: P சுசீலா  - விஸ்வநாதன்

27  தைரியமாகச் சொல் நீ - ஒளிவிளக்கு - [1968] - பாடியவர்: TMS  - விஸ்வநாதன்

28  மெழுகுவர்த்தி எரிகின்றது -கவுரவம்1974 - பாடியவர்: TMS  - விஸ்வநாதன்

பியானோ இசையை பிரதானப்படுத்தி இசையமைக்கப்பட்ட இப்பாடல்களில் முக்கியமான, புதுமையான கலப்பாக செய்யப்பட்ட பாடலாக கீழ் வரும் இரண்டு பாடல்களை  இங்கே குறிப்பிடலாம்.

**** கண்ணென்ன கண்ணென்ன -பெரிய இடத்துப் பெண் - [1963 ] - பாடியவர்: TMS  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

நாட்டுப்புறத்தான் பாடும் ஒரு பாடலாக அமைந்த இந்தப்பாடலில் விறுவிறுப்பையும் , ஏளனத்தையும் காண்பிக்க பியானோவை பயன்டுத்தி,பாடலின் பின்பகுதியில்  நாட்டுப்புற தாளத்திற்கு இசைவாக்கிய தன்மையையும் குறிப்பாகக் சொல்லலாம்.

**** மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க - பணம் படைத்தவன்   [1962 ] - பாடியவர்: TMS + சுசீலா  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

உருக்கமும் ,மிக எழுச்சியும் மிக்க ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்த பாடலில் பியானயோவை தாளகதியாக வைத்துக் கொண்டு மூன்று குரல்களை [ TMS +சுசீலா + ஈஸ்வரி ] இணைத்து மிக அருமையான  தாலாட்டாக அமைத்திருக்கின்றார்கள்.இந்தப்பாடலில் தான் எத்தனை உணர்வு ,எத்தனை பாவம்! கேட்கக்கேட்கத் திகட்டாத பாடல்.

பலவிதமான உணர்வுகளை கிளரும் இந்தப்பாடலில் மேலைத்தேய இசையில் துள்ள இசைக்குப் பயன்படும் பியானோ இசையுடன் செனாய் வாத்தியத்தையும் அதில் கிராமியத் தன்மையையும் இணைத்து முற்றிலும்மாறுபாடான வாத்தியங்களை வைத்து உணர்வின் ஆழங்களைக் காண்பித்து புது விதியை உருவாக்கினார்கள்.

02  ட்ரம்பெட்: [ Trumpet ]

----------------------------------

உற்சாகமும் எழுச்சியும் தரும் குழல் வாத்தியங்களில் முக்கியமான இடம் ட்ரம்பட் [ Trupet ] என்ற வாத்தியத்திற்கு உண்டு.ஆதிகாலத்தில் போர்களிலும் ,வேட்டை ஆடும் நேரங்களிலும் பயன்டுத்தப்பட்டு வந்த கொம்பு எனும் கருவியின்  நவீன வடிவமே ட்ரம்பட் வாத்தியம்.

நவீன உருவாக்கத்தில் செப்பு உலோகத்தால் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள இந்தக்கருவி ஐரோப்பிய செவ்வியலிசையில் நுழைந்தது 15 ம் நூற்றாண்டிலேயே! பின்னர் ஜாஸ் இசையிலும் தனித்துவமான இடம் பிடித்த இந்த வாத்தியம் ஜாஸ் இசையின் அடிப்படையான வாத்தியமாகவும் கருதப்படுகிறது.

மொஸாட் , ஹைடன் , பாக்ஹ் மற்றும் பல ஐரோப்பிய செவ்வியலிசையாளர்கள் கணிசமான பயன்படுத்தி செழுமைப்படுத்தினர் எனலாம். குறிப்பாக பராக் [ Barok ] கால இசையில் இந்த வாத்திய இசையை அதிகம் கேட்கலாம்.

அமெரிக்க உள்நாட்டுப் போரில் ராணுவவீரர்களாகப் பங்கு பற்றிய கறுப்பினமக்கள் இந்த வாத்தியத்தை தங்களுக்கேயுரிய தனித்திறத்துடன் பயன்படுத்தி வந்தததால் ஜாஸ் இசைக்கான வாசிப்பு முறை உருவானது.கறுப்பின மக்களின் அடிப்படை இசையான மனோதர்ம இசையின் வீச்சுக்களில்  20 ம் நூற்றாண்டின் தலை சிறந்த கறுப்பின இசைக்கலைஞர்கள் புதிய ஒலியலைகளை மிதக்கவிட்டு சாதனை புரிந்தார்கள்.ஜாஸ் இசையில் மிக உயர்ந்த இடத்தை தொட்டவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் ஆம்ஸ்ட்ரோங்  1901 - 1971   [ Louis Daniel Armstrong ]. இவரைப் போல பலர் பின்னே உருவானார்கள்.

1950  களிலேயே ஹிந்தி திரையிசையில் ட்ரம்பட் கணிசமான அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.அக்காலத்தில் புகழபெற்றிருந்த எல்லா இசையமைப்பாளர்களும் துணிந்து பயன்படுத்தினார்கள் என்று சொல்லத்தக்கவகையில் பாடல்கள் உள்ளன. குறிப்பாக ஷங்கர்  ஜெய்கிஷன் .எஸ்.டி. பர்மன் , ஓ.பி.நய்யார்  போன்றோர் பாடல்களில் மட்டுமல்ல , பின்னணி இசையாகவும் மிக வெற்றிகரமாக பயன்படுத்தினார்கள்.

1950 மற்றும் 1960 களிலேயே ஹிந்தி திரையிசைமைப்பாளர்கள் தந்த பாடல்கள் சில:

01  Tirchi Nazar Hai Patli Kamar Hai  - Baarsat 1948 - Lata + Mukesh - Music : Shankar Jaikihan

02  Haal Kaisa Hai Janaab Ka  - Chalti Ka Naam Gaadi 1958 - Kishore Kumar + Asha Bosley - Music :S D Burman

03  Teri Dhoom Har Kahin - Kaala Bazar 1960 - Rafi - Music :S D Burman

04  Matwali Ankhowakle - chotte Nawab  1961 - Rafi - Music: R.D.Burman

05  Baar Baar dekho - china Town 1962 - Rafi - music: Shankar Jaikishan

ஹிந்தித் திரையிசையை ஆழ்ந்து அவதானிதத்தவர்கள் என்ற வகையில்,அவற்றால் உந்துதல் பெற்று உள்ளக்கிளர்ச்சியுடனும்,  ஈர்ப்புடனும் ,படைப்பாற்றலின் நுட்பத்துடணும் பயன்படுத்தி வெற்றிகண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள் .தங்கள் இசையனுபவத்தின் வழியே மிக நேர்த்தியுடன்,அழகுடன் இந்த வாத்தியத்தின் பல்வேறு ஒலியமைப்புகளை கலைநயத்துடன் பயன்படுத்தினார்கள்.

ட்ரம்பெட்  என்ற வாத்தியம் அடிப்படையில் போர்க்கருவியின் சந்ததியாக இருப்பதால் அந்த வாத்தியத்தின் முழக்கத்தின் அதிர்வை , உணர்வுகளைத் தட்டி  எழுப்பி உற்சாகம் தரும் பாடல்களாக்கித் தந்திருக்கும் பாடல் சிலவற்றைக் காண்போம்.

01  அதோ அந்தப்பறவை போல  - ஆயிரத்தில் ஒருவன்  [1965] - பாடியவர்: TMS + குழு  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

சுதந்திர உணர்வின் குறியீடாக ஒலிக்கும் இப்பாடலில் ட்ரம்பெட் ,  ,ட்ரம்ஸ் ,கோரஸ் ,வயலின் ,குழல் போன்ற இசைக்கருவிகளை வைத்து ஒரு சித்து விளையாட்டு காட்டியிருக்கிறார்கள் மெல்லிசைமன்னர்கள் என்று தான் சொல்ல முடியும்! பாடலின் மெட்டுக்கு மெருகூட்டும் ட்ரம்பட் இசை சுதந்திரத்தின் அசரீரியாக ஒலித்து உணர்வு பொங்கச் செய்கிறது.பாடியவரின் குரல் கனகச்சிதமாக எழுச்சியூட்டி ஆர்ப்பரிக்கிறது.

02  நான் ஆணையிட்டால் - எங்க வீட்டுப்பிள்ளை 1963  - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி

அறைகூவல் விடும் இப்பாடலில் சவுக்கடியின் ஒலியுடன் எழுச்சிக் குறியீடாக  ட்ரம்பட்  ஒலிக்கிறது.

03  கேள்வி பிறந்தது அன்று - பச்சை விளக்கு 1964 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி

பகுத்தறிவை பறைசாற்றும் இந்தப்பாடல் விசில்சத்தத்துடன்ஆரம்பிக்கிறது.ட்ரம்பட் ,ட்ரம்ஸ் ,செனாய் ,

எக்கோடியன் ,பொங்கஸ் ,குழல் என வாத்தியங்களின் ஒத்திசைவையும் ,புத்தெழுச்சியையும் அழகுடன் வெளிப்படுத்தும் அற்புதத்தை காண்கிறோம்.பாடலின் சரணத்திலோ உயிர்வதை செய்யும் செனாய் வாத்தியத்தின் மூலம் உள்ளத்தைக் கனிய வைக்கின்றார்கள்.எழுச்சிமிக்க ட்ரம்பட் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல் உள்ளத்தைக் கனிய வைக்கும் செனாய் இசையுடன் நிறைவடைகிறது.

04   பார்த்த ஞாபகம் இல்லையோ-புதிய பறவை 1963 - P சுசீலா  - விஸ்வநாதன் ராமமூர்த்தி

பொங்கஸ் தாளத்துடன் ஆரம்பிக்கும் இப்பாடலில் ட்ரம்பட்,எக்கோடியன்,பொங்கஸ்,குழல் ,வயலின் , கோரஸ் என எத்தனை பரிவாரங்கள் ! அத்தனை வைத்தாலும் மிக இனிமையுடன் மன எழுச்சியையம்  ஒரு பாடலில் கொடுக்க முடியும் என நிரூபிக்கும் பாடல் இது.

05  அவளுக்கென்ன அழகிய முகம்- சர்வர் சுந்தரம் 1964  - TMS + ஈஸ்வரி - - விஸ்வநாதன் ராமமூர்த்தி

ட்ரம்பெட் ,கிட்டார் ,குழல் ,பொங்கஸ் ,வயலின் ,பியானோ,கிட்டார் என வாத்திய  பரிவாரங்களை வைத்து முழக்கமிடும் லத்தீன் அமெரிக்க இசைவிருந்து.

06  வீடுவரை உறவு வீதி வரை மனைவி  -பாதகாணிக்கை - [1962 ] - பாடியவர்: TMS + ஈஸ்வரி  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

மன விரக்தியிலும்,சோகத்திலும் தத்துவம் பேசும் இந்தப்பாடலில் பலவிதமான சேர்க்கைகளாக பாடலை அமைத்திருக்கின்றனர்.கிராமிய மணத்தை தாலாட்டாக ஹம்மிங்கிலும் ,ட்ரம்பெட் ஒலியை மேலைத்தேய பாணிக்கும் பயன்படுத்தி வாத்தியங்களின் குறியீட்டுத் தன்மையையும் செவ்வையான கலவையாக தந்து வியக்க வைக்கின்றார்கள்.

07  மன்னவனே அழலாமா  - கற்பகம்    [1964 ] - பாடியவர்:  சுசீலா  - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

காணும் இடங்களிலெல்லாம் இளவயதிலேயே மறைந்து போன தனது மனைவியை  "ஆவியாகக்"  காணும் கணவன் ,அவளது துயரக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைவதும்   அமானுஷ்ய உணர்வை பெறுவதுமான ஒரு உணர்வை வெளிப்படுத்துவதாகவும் ஆரம்பிக்கிறது இந்தப்பாடல்.

மனைவியின் இதய ஓலமாக சுசீலாவின் ஹம்மிங்கும் ,நாயகன் அடையும் பேரதிர்ச்சியைக் காண்பிக்க ட்ரம்பட் இசையின் அதிர்வையும் ,மனித மனங்களில் ஆழமாகப் பதிந்து கிடக்கும்  தொன்ம [ Myth ] நம்பிக்கைகளை,வியப்பு கலந்த சோகத்தை , அமானுஷ்ய உணர்வுகளை இசையில் காண்பிக்கும் அற்புதத்தை இப்பாடலில் கேட்கின்றோம்.

இடையிசையில் ஹம்மிங்குடன் ட்ரம்பட் இசையையும் இணைத்து வார்த்தையில் வர்ணிக்க முடியாத அமானுஷ்ய உணர்வை காட்டுகிறார்கள்.பலநதிகள் ஒன்றிணைந்து கரைந்து ஒன்றாக ஓடுவது போல வாத்தியங்கள் கரைந்து பாடலின் உணர்வுக்கு வலுசேர்க்கின்றன. பாடலின் மெட்டு தன்னைத்தான் நொந்து கொள்கிற உணர்வைத் தரும்  கீரவாணி ராகத்தில் மிகப்பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது.இது மெல்லிசைமன்னர்களின் சாதனைப்பாடல்களில் ஒன்று என்று அடித்துக் கூறலாம்.

08  இது வேறு உலகம்     - நிச்சய தாம்பூலம்  1962 - TMS + ஈஸ்வரி + ஜமுனாராணி  - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

நைட் கிளப்பில் பாடும் ஒரு பாடலாக அமைந்தப் பாடலில் நாயகனின் உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. கவலையை மறந்திட கண்ணாடி விளிம்பைத் தேடுவார் என்று மது போதையில் மயங்கும் நாயகன் நிலையையும்    மனைவியும் மக்களும் பொய்யடா நாம் இருக்கிற உலகம் மெய்யடா எனவும் அழகாக வெளிப்படுத்தும் இந்தப்பாடல் லத்தீனமெரிக்க இசைப்பாணியில் அமைந்திருக்கும்.

09  பார்த்த ஞாபகம் இல்லையோ [புதிய பறவை 1963] - சுசீலா - இசை : விசுவநாதன் ராமமூர்த்தி

இந்தப்பாடல் நைட் கிளப்பில் பாடப்படும் ஒரு பாடல் தான்.இனம்புரியாத உணர்வலைக் கிளர்த்தும் இந்தப்பாடல் லத்தீன் அமெரிக்க இசைப்பாணியில் அமைந்த பாடலாகும்.சுசீலாவின் குரலால் அமரத்துமிக்க பாடலாகி விட்டதொரு பாடல் என்றால் மிகையில்லை.

10  அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு [ வெண்ணிற ஆடை ]  சுசீலா - இசை : விசுவநாதன் ராமமூர்த்தி .

குற்றால அருவில் குளிக்கும் சுகத்தை பாடலில் தரும் அதிசயப்பாடல்.இப்பாடலைக் கேட்கும் போது எழும் ஆனந்தத்தை வார்த்தையால் வர்ணிக்கத்துவிட முடிவதில்லை." நீரில் நின்று தேனும் தந்தது அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ " என்று கண்ணதாசன் இந்த மெட்டைத்தான் குறிப்பிடுகிறாரோ அல்லது பாடிய சுசீலாவின் குரலைத்தான் குறிப்பிடுகிறாரோ என எண்ண வைக்கின்ற பாடல்.

அம்மம்மா ... என்று பாடலில் வரும் சொல்லை சுசீலா கூவியழைப்பதின் சுகமே சுகம்.எக்கோடியன் ,வயலின் ,குழல் வாத்த்தியங்களின் இணைப்பும் அலாதியானவை.

11  சொந்தமுமில்லை பந்தமுமில்லை - ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார்  1962 - GK வெங்கடேஷ்  + குழுவினர்   - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

12  கல்யாண நாள் பார்க்க  சொல்லலாமா [ பறக்கும் பாவை ] எக்கோடியன் , ட்ரம்பெட் ,குழல் ,வயலின்.ட்ரம்ஸ்

பாடலின்  சரணத்தில் வரும் வரிகளில் [சந்திரனை தேடி சென்று ] உச்சம் தரும் ட்ரம்பெட் இசையை நாம் எப்படி ரசிக்காமல் போவது!?

03  மியூட் ரம்பட்:  Mute Trumpet :

-------------------

Mute Trumpet என்கிற இசைக்கருவி மனித குரலுக்கு மிக நெருக்கமானதென்பர். MuteTrumpet என்பது  நுட்பமிக்க இசையை  வாசிப்பதற்கு அதிக திறமையைக் கோரும் ஒரு இசைக்கருவியாகும்.  ஜாஸ் இசையில் பயன்படும் ட்ரம்பட் கருவியுடன் இணைக்கப்பட்ட Stem என்ற மூடும் கருவியும் ஒன்றாக இணைத்து இயக்கப்படுவதன்  மூலம் புதிய ஒலியை தரும்  ஒரு முறையாகும்.அதில் Harmon Mute என்பதும் ஒருவகை.

Stem பொருத்தப்பட்டு இசைக்கப்படும் Trumpet இல் பிறக்கும் ஒலிகளின் மூலம் பலவகை உணர்வுகளை பிரதிபலித்து காட்சிகளை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.சினிமாக்களில் இக்கருவியை நகைச்சுவைக் காட்சிகளில்  பயன்படும் வாக் வாக் [ Wah Wah ] முறையைக் குறிப்பிடலாம்.1940 களில் Walt Disney தனது காட்டூன்  பாத்திரங்களுக்குப் பயன்படுத்தி வெற்றிகண்டவராவார்.

மியூட் ரம்பட்டை Harmon என்கிற கருவியுடன் இணைத்து வாசிக்கும் போது வாக் வாக் [ Wah Wah ]என்று ஒலிப்பது போன்ற   ஒலி உண்டாகும்.காட்டூனில்இந்த வகையான ஒலி யை மட்டுமல்ல பின்னணியாக உறுமல் ,  பதைபதைப்பு ,ஒழுங்கற்ற அசைவுகள் , உறுமல் .சிறகடிப்பு , முனகல் மெதுவாக நகர்தல் என பல்வேறு விதமான உணர்வுகளை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.

காட்டூன் மட்டுமல்ல பின்னாளில் திரையிசையிலும்   இந்த நுடபம் பயன்படுத்தப்பட்டது.ஹிந்தி திரையிசையில் 1952 இல் வெளிவந்த AAN படத்தில் நகைச்சுவைக் காட்சியில் இசையமைப்பாளர் நௌசாத்தும் , சாரதா [ ஹிந்தி 1960 ] படத்தில் சி.ராமச்சந்திராவும்  பயன்படுத்தியதைக் குறிப்பிடலாம்.

தமிழ் திரையிசையில் நாகேஷ் வரும் நகைச்சுவைக் காட்சிகளில் Wah Wah இசையை கேட்கலாம்.

மிக நுண்ணிய உணர்வுகளைக் காண்பிக்கக் கூடிய Mute Trumpet கருவியை மிக அருமையாகக் காதல் பாடலிலும் வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்!.

01  அத்தான் என் அத்தான் - பாவமன்னிப்பு 1961 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்தப்பாடலில் அனுபல்லவியின் ,"ஏன் அத்தான்" என்ற வரிகளுக்கு முன்னர் எக்கோடியனை அடுத்து வரும் Mute Trumpet வாத்தியத்தை  மிக நேர்த்தியாகப் பயன்படுத்திருக்கின்றனர். அதே போலவே சரணத்திலும் காட்டிச் செல்கின்றனர்.

Trumpetஇசைக்கருவியை மிகப் பொருத்தமான இடங்களில் பலவிதமான கோணங்களில் பின்னணி இசையாகவும்  பயன்படுத்தியுமிருக்கின்றார்கள்.கலாட்டாக் கல்யாணம்   போன்ற படங்களில் Title இசையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

04  எக்கோடியன்: [Accordion ]

ஐரோப்பிய வாத்தியமான எக்கோடியன் உலகம் முழுவதும் பரவியிருக்கிற மிகப்பிரபலமான வாத்தியங்களில் ஒன்று.நாட்டுப்புற இசையில் சரளமாகப்  பயன்படும் இந்த இசைக்கருவி மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் நாம்  எளிதில் காணக்கூடிய இசைக்கருவியாகவும் , குறிப்பாக தெருவோர இசைக்கலைஞர்கள் கைகளில் காணப்படும் இசைக்கருவியாகவும் விளங்குகிறது.

நாட்டுப்புற இசைக்கு முக்கியத்துவம் வழங்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பயன்படும் இக்கருவி முன்னாள் யூக்கோஸ்லாவாக்கியா நாட்டின் தேசிய வாத்தியமாகவும் கருதப்படுகிறது.செக்கோஸ்லாவாக்கியா நாட்டின் புகழபெற்ற போல்கா [Polka] நடனத்திற்குரிய இசையில் அதிகம் பாவனையில் இந்த இசைக்கருவி பயன்பட்டு ஏனைய நாடுகளுக்கும் பரவியது.ஜிப்ஸி இசையிலும் முக்கியத்துவம்  வாய்ந்த கருவி எக்கோடியன்.நாட்டுப்புற இசையில் அதிகம் பயன்பட்ட இக்கருவி வேறு பல இசைவடிவங்களிலும் பயன்படுகிறது.  மேலைத்தேய செவ்வியலிசையிலும் பயன்பாட்டில் உள்ளது.ரஷ்ய நாட்டு செவ்வியல் இசையாளர் சைக்கோவ்ஸ்க்கி யின்  [ Pyotr Ilyich Tchaikovsky  ] Song of Autum என்ற இசைப்படைப்பு இதற்கு சான்றாக உள்ளது.

அமெரிக்க இசையிலும் புகழபெற்ற இந்த வாத்தியம் ,லூசியானா பகுதியில் வாழ்ந்த ஆபிரிக்க அடிமைகளால் உருவாக்கப்பட்ட புளூஸ் இசை ,மற்றும் புளூஸ் தாளத்துடன் இணைந்த இசையாகவே வடிவம் பெற்றுள்ளது. Zydeco என்றழைக்கப்படும்  ஒரு பிரிவு  இசையாகக் கருதப்படும் இந்த இசை  பிரஞ்சு குடியிருப்பாளார்களின் கரோல் மற்றும் ஸ்பானிய இசையுடன் கலந்ததொரு இசையாகும். குடும்பங்கள் ஒன்றாகச் சந்திக்கும் வேளைகளில் இசைக்கப்படும் இவ்விசையில் Waltz , Blues, Rock and Roll, Country Western போன்ற இசைக்கூறுகள் இணைந்ததாக உள்ளது.

1930 களில்  ஜாஸ் இசையில் எக்கோடியன் இசை  பயன்படுத்தப்பட்டு புகழ்பெற்றது.அமெரிக்க Country Music மற்றும் ஐரோப்பிய ஜாஸ் இசையிலும் இதன் பயன்பாடு பரவலாக்கப்பட்டு புகழ் பெறத்  தொடங்கியது.குறிப்பாக டியாங்கோ ரெயின்காட் [ Dijango Reinhardt ] என்ற புகழ்  வாய்ந்த ஜிப்ஸி இனக்கலைஞர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகளில் பிரெஞ்சு எக்கோடியன் கலைஞர் Gus Viseur கலந்து சிறப்பித்தார்.

1930 மற்றும் 1940 களிலேயே புகழபெற்ற எக்கோடியன் கலைஞர்கள்  என  Andonis 'Papadzis' Amiralis  [Greek],Tony Muréna  [Italy] , Pietro Frosini [Italy], Louis Ferrari [Italy] , William Quinn [Irish ] , Emile Vacher [France] ,Tony Murena [France] , Émile Carrara [france]  போன்ற ஐரோப்பிய எக்கோடியன் இசைக்கலைஞர்களை   உதாரணம் காட்டலாம்.

அமெரிக்க பொழுதுப்போக்கு இசையாக வளர்ந்து ,அக்கால விறுவிறுப்புமிக்க நவீன இசையாக மலர்ந்த ரோக் அன்ட் ரோல் [ Rock and Roll] ,அதன் கவர்ச்சி ,மற்றும் அவற்றின் வாத்தியஅமைப்பு,அந்த  இசையின் வர்த்தக விரிவாக்கத்தோடு எக்கோடியன் இசைக்கருவியும்  உலகம் முழுவதும் பரவியது.

இதன் தாக்கம் ஹிந்தித் திரையிசையிலும் தாக்கம் விளைவித்தது.வாத்திய இசையின் சாத்தியங்களை பயன்படுத்தி முன்மாதிரியாக விளங்கிய ஹிந்தி திரையிசையமைப்பாளர்கள் ஆர்மோனியம் என்கிற இசைக்கருவியைப் போலவே எக்கோடியனையும் பயன்படுத்த தொடங்கினர். அக்கால புகழின் உச்சியிலிருந்த இசையமைப்பாளர்களான S.DBurman, Shankar Jaikishan , O.P.Nayyar , Madhan Mohan ,Salil Chowtry போன்ற பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தங்கள் பாடல்களிலும் பின்னணி இசையில் அதிகம் பயன்படுத்தினார்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர்களின் ஆதர்சமான வாத்தியம் எக்கோடியன் என்று கூறுமளவுக்கு அசாத்தியமான திறமையுடன் கையாண்டார்கள் என்பதற்கு சான்றாகச் சில பாடல்களை தருகிறேன்.

01  Awaara Hoon - Awaara [1951] - Music: Shankar Jaikishan

02  Aye Mere Dil Kahin Aur Chal - [Daag 1952] -Music:  Shankar Jaikishan

03  Yaad Kiya Dil Ne- Patita [1953 ]  - Music:  Shankar Jaikishan

04  Duniya mein chaand suraj kitni haseen - Kathputli [1957] Music: Shankar  Jaikishan

05  Dekhke Teri Nazar - Howrah Bridge 1958 - Music: O.P.Nayyar

06  Beqarar Karke Humein - Bees Saal Baad - 1960 - Music: Hemant Kumar

07  Chhote Se Ye Duniya - Rangoli 1962  - Music: Shankar Jaikishan

08  Dheere Dheere Chal Chand - Love Marriage  1959 - Music:  Shankar  Jaikishan

09  Kahe Jhoom Jhoom Raat Yeh Suhani -  Love Marriage 1959 - Music: Shankar  Jaikishan

10  Har Dil Jo Pyar Karega - Sangam [1964] - Music: Shankar  Jaikishan

11 Sab Kuch Seeka Humne - Anari [1959] - Music: Shankar  Jaikishan

12  Har Dil Jo Pyar Karega  - Sangam 1964 - Mugesh + Lata  -  Shankar Jaikishan

இந்தப்பாடல் காட்சியில் நாயகன் எக்கோடியன் வாசிப்பது போலவே அமைந்திருக்கும்.

.

மெல்லிசைமன்னர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்திய  இசைக்கருவிகளில் முக்கியமானதொன்று எக்கோடியன்.பாடல்களின் உணர்வுகளுக்கு ஏற்ப உணர்ச்சி பெருக்குடனும் ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் இழைத்து, இழைத்து பாடலின் அழகில் கரைத்து தங்கள் படைப்பை அர்த்தப்படுத்தியிருக்கின்றார்கள்.

இங்கே எக்கோடியன் இசை வரும் பாடல்களைக் குறிப்பிடும் போது தனியே எக்கோடியனில் மட்டுமல்ல வேறு பல வாத்தியங்கள் இணைந்த தேன் அமுதக்கலவையாய் வருவதை நாம் அவதானிக்க வேண்டும்..பாரதிதாசன் தனது கவிதை ஒன்றில்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய   தேனும் ....

என்ற  வரிகளை இவர்களின் இசைக்கும் பொருத்திக் கூறலாம்.

எக்கோடியன் இசையுடன்  காஸ்ட் நெட் ,குழல் ,சைலபோன் ,சேனை ,பொங்கஸ்,ட்ரம்ஸ் என பலவிதமான  இசைக்கருவிகளையும் ,அவற்றின் இயல்புகளை தேனாகக் குழைத்தெடுத்த அற்புதங்களையும் கேட்கிறோம்.எதிர்மறையான வாத்தியங்கள் என்று சொல்லத்தக்க இசைக்கருவிகளை வைத்து  தங்கள் இசையலங்காரங்களால் தமிழ் சினிமாப பாடல்களை புதிய தளத்திற்கு உயர்த்திக் சென்றனர்.

எக்கோடியனுடன் மேற்குறிப்பிடட வாத்தியக்கருவிகளைத் தேனாக, மதுரமாகக் குழைத்தெடுத்த சில  பாடல்கள்.

01  தென்றல் வரும் சேதி  வரும் - பாலும் பழமும் 1961 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  போனால் போகட்டும் போடா    - பாலும் பழமும் 1961 - TMS  - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  அத்தான் என் அத்தான் - பாவமன்னிப்பு 1961 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  பறக்கும் பந்து பறக்கும்    - பணக்காரங்க குடும்பம் 1963 - TMS + சுசீலா  - இசை விஸ்வநாதன்

05  வெண் பளிங்கு  மேடைகட்டி   - போஜய்க்கு வந்த மலர்  1965 - சீர்காழி + ஈஸ்வரி  - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் - நெஞ்சில் ஓர் ஆலயம்  1962 - BPS   - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  இது வேறு உலகம்     - நிச்சய தாம்பூலம்  1962 - TMS + ஈஸ்வரி + ஜமுனாராணி  - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

08 தமிழுக்கும் அமுதென்று பேர் - பஞ்சவர்ணக்கிளி  1965 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

[குழல் ,சந்தூர் ,எக்கோடியன் ஜாலம்].

09  காதல் என்றால் ஆணும்    - பாக்கியலட்சுமி  1961 - AL ராகவன் + சுசீலா   - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

10  கண்ணிலே அன்பிருந்தால்    - ஆனந்தி  1965 - சுசீலா   - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

11  கண் போன போக்கிலே  - பணம் படைத்தவன்   1965- TMS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

12  அழகுக்கும் மலருக்கும்   - நெஞ்சம் மறப்பதில்லை  1963 - BPS + ஜானகி  - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

13  பாவை யுவ  ராணி பெண்ணோவியம்   -சிவந்தமன்    1969 - TMS  - இசை விஸ்வநாதன்

14  ஒரு ராஜா  ராணியிடம்   -சிவந்தமன்  1969 - TMS + சுசீலா   - இசை விஸ்வநாதன்

15  ஒரு நாளிலே உருவானதே    -சிவந்தமன்    1969 - TMS + சுசீலா   - இசை விஸ்வநாதன்

16 போகப்  போக தெரியும்  - சர்வர் சுந்தரம்   1965 - BPS  +சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

17  காற்று வாங்க போனேன்   - கலங்கரை விளக்கம்   1965 - TMS  - இசை விஸ்வநாதன்

18  நினைத்தால் சிரிப்பு வரும் [பாமா விஜயம் ] [எக்கோடியன் காஸ்ட் நெட் ,குழல் ,சைலபோன் ,குழல்,பொங்கஸ்,ட்ரம்ஸ் ]

19  கல்யாண நாள் பார்க்க  சொல்லலாமா [ பறக்கும் பாவை ] [எக்கோடியன் , ட்ரம்பெட் ,குழல் ,வயலின்.ட்ரம்ஸ்]

பாடலின்  சரணத்தில் [சந்திரனை தேடி சென்று ] உச்சம் தரும் ட்ரம்பெட் இசையை நாம் கேட்கிறோம்.

20  நான் ஆணையிட்டால் [ எங்க வீட்டுப் பிள்ளை ]        [எக்கோடியன் ,பொங்கஸ் , ட்ரம்பெட் ,கிட்டார் ]

21  குயிலாக நானிருந்தென்ன    - செல்வ மகள்   1967 - TMS + சுசீலா  - இசை விஸ்வநாதன் [செனாய் ]

22  நேற்று வரை நீ யாரோ     - வாழ்க்கைப் படகு  1961 - BPS   - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

23 நான் ஒரு குழந்தை   - படகோட்டி   1964 - TMS  - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் , சந்தூர். ,குழல் ,மேண்டலின்

24 பாட்டு வரும் பாட்டு வரும்    - நான் ஆணையிட்டால்  197 - TMS + சுசீலா  - இசை விஸ்வநாதன்

பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் , சந்தூர். ,குழல் ,மேண்டலின், கிட்டார்

25 கொடுத்ததெல்லாம் கொடுத்தான்  - படகோட்டி   1964 - TMS  - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலுக்குக்கிடையே இழையோடும் எக்கோடியன் , சந்தூர். ,குழல்

26 உலகம் பிறந்தது எனக்காக  - பாசம்  1962 - TMS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழல் ,சந்தூர் ,எக்கோடியன் ஜாலம்.

27 எனக்கொரு மகன் பிறப்பான்  - பணம் படைத்தவன்  1965 - TMS +சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழல் ,சந்தூர் ,எக்கோடியன் ஜாலம்.

28 நாணமோ இன்னும் நாணமோ   - ஆயிரத்தில் ஒருவன்   1965 - TMS +சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் இடையில் ஆங்காங்கே பாடலுக்கு உயிர் கொடுக்க எக்கோடியன்.

08 கண்ணே கனியே முத்தே   - ரகசியாய்ப் போலீஸ்  1965 - TMS +சுசீலா - இசை விஸ்வநாதன்

சந்தூர் ,ட்ரம்ஸ் ,எக்கோடியன் குழல்

29  உன்னைத்தானே   ஏய் உன்னைத்தானே   - பறக்கும் பாவை    1970 - TMS + சுசீலா  - இசை விஸ்வநாதன்

30 என்னைத் தெரியுமா  - குடியிருந்த கோயில்   1965 - TMS - இசை விஸ்வநாதன்

எக்கோடியன் , பியானோ ,ட்ரம்ஸ் கோரஸ்

31  ஒரு தரம் ஒரே தரம்     - சுமதி என் சுந்தரி    1970 - TMS + சுசீலா  - இசை விஸ்வநாதன்

சித்தார் , ட்ரம்ஸ் ,வயலின் , குழல்

32  பாவை பாவை தான்    - எங்கமாமா 1970 - சுசீலா  - இசை விஸ்வநாதன்

பொங்கஸ் , எக்கோடியன் ,கிட்டார் ,ட்ரம்ஸ் ,சாக்ஸ் ,ட்ரம்பட்

33  மின் மினியைக் கண்மணியாய்   - Kannan என் காதலன்   1969 - TMS + ஈஸ்வரி   - இசை விஸ்வநாதன்

எக்கோடியன் ,மேண்டலின் ,சந்தூர்  , ட்ரம்ஸ் ,வயலின் , குழல்

34  இயற்கை என்னும் இளைய கன்னி      - சாந்தி நிலையம் 1969 -SPB + சுசீலா  - இசை விஸ்வநாதன்

சந்தூர்  , பொங்கஸ் ,வயலின் , குழல் ,ட்ரம்பட் ...சரணாத்த்திற்கு முன்னரும் எக்கோடியவ் வரும்.

35  கண்டேன் கல்யாண பெண் போன்ற  மேகம்   - மேயர் மீனாடசி  1976 - SPB + சுசீலா  - இசை விஸ்வநாதன்

36  மௌனம் தான் பேசியது  - எதிர்காலம் 1971 - LR ஈஸ்வரி     - இசை விஸ்வநாதன்

37 கன்னி  வேண்டுமா கவிதை வேண்டுமா - பச்சை விளக்கு 1964 - PBS + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

38 சத்தியம் இது சத்தியம்  - இது சத்தியம்  1963 - TMS  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

39  தூக்கம் உன்  கண்களை தழுவட்டுமே - ஆலயமணி  1963 - S ஜானகி

மெல்லிசைமன்னர்களின் நாதக்கலவை எனும் விருந்தை நாம் முழுமையாக விவரிப்பதென்றால் செழுமை நிறைந்து விரிந்து பரந்திருக்கும் நதிக்கரையின் தீரத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்திற்கப்பால்  மறைந்திருக்கும் கரைய பார்ப்பது போன்றதாகும்.

இசையில் நவீனத்தை அடையத் துடித்த மெல்லிசைமன்னர்கள் தங்கள் வேகத்தை , ஆர்வத்துடிப்பை ஆங்காங்கே  விசிறியடித்துக் காட்டினாலும் ,இரண்டாயிரம் ஆண்டு செழுமை பெற்ற நமது இசையையும் அதன் அடையாளங்களையும் உதறிச் சென்றவர்களில்லை என்பதையும் நிரூபித்த வண்ணம் பெரு நதியாக நடைபோட்டார்கள்.

அந்தவகையில் வட இந்திய மரபு இசையில் பயன்படுத்தப்பட்ட வாத்தியங்களையம்  பயன்படுத்தி  இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும் வண்ணம் இசைவெள்ளத்தில் தமிழ்ப்பாடல்களை ஊறவைத்தார்கள்.அந்தவகையில் சந்தூர் ,சாரங்கி வாத்தியங்களையும் பயன்படுத்தி அசத்தினார்.

05  ட்ராம்போன்

01  ஒரு ராஜ ராணியிடம்    - சிவந்தமண்  1969 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன்

02  வெள்ளிக்கிண்ணம் தான்     - உயர்ந்த மனிதன் 1969 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன்

06  சந்தூர் [ Santoor ]

---------------------------------

காஸ்மீரின்  தேசியவாத்தியம் சந்தூர். வீணை குடும்பத்தைச் சேர்ந்த இக்கருவி நாட்டுப்புற இசையிலும் செவ்வியலிசையிலும் பரிமளிக்கக்கூடிய தந்தி வாத்தியக்கருவி சூபி [Sufi ]இசையிலும் பாவனையில் உள்ள இசைக்கருவியாகும். இவ்விசைக்கருவியின் மூலாதார இசைக்கருவி மத்திய கிழக்கு ,குறிப்பாக ஈரான் நாட்டின் பூர்வீக இசைக்கருவி எனக் கருதப்படுகிறது.

சந்தூர் இசைக்கருவியின் ஒலியை நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். துளித் துளியாக அமுதங்களைப் பொழிந்து இனம் புரியாத உணர்வுகளைக் கிளர்த்தும் இசைக்கருவி. காற்றில் சிதறாத மழைத்தாரைகளின் அணிவகுப்பை காண்பது போல மனதில் பரவசமூட்டி ரீங்காரமிட வைக்கும்  இதமான ஒலியலைகளை எழுப்பவும் , காற்றில் அலைந்து நுண்ணீர்துளிகளாய் விழும் தூவானங்களை இசையில் மனக்காட்சி விரிவாய் ராகங்களின் ஆலாபனைகளில் ஏற்றி, வாசிப்பின் வேகத்தின் அளவுகளால்   அதி நுண்திரட்சிகளை ஆழ்ந்தும் ,விரித்தும் பரவிப்பாய்ந்தும், பரவி சிதறும் திவலை தூவல்களை ,இசையால்   மனக்கண்  நிறுத்தும்  வல்லமை இந்த இசைக்கருவிக்கு உண்டு.

ஹிந்துஸ்தானிய செவ்வியலிசையில் சந்தூர் இசையின் வசீகத்தை கலைஞர் சிவகுமார் சர்மாவின் வாசிப்பை  மணிக்கணக்கில்  மெய்மறந்து நாம் கேட்கலாம்.

விழிகளின் நுண் இமையசைப்பின் அபிநயத்தை  திரையில் காண்பிக்கும் வல்லமை கொண்ட சினிமா இவ்வாத்தியத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது.பின்னணிக்காட்சிகளில் மட்டுமல்ல பாடல்களிலும் திகைக்க வைக்குமளவுக்கு பயன்படுத்தி திரை இசையமைப்பாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.முன்னோடிகளான  ஹிந்தி சினிமா இசையமைப்பாளர்கள் எல்லோரும் தங்கள் பாடல்களில் வியப்பு மேலோங்கும் அளவுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர் என்று துணிந்து கூறலாம்.

மெல்லிசைமன்னர்கள் ஒன்றாக இணைந்து இசையமைத்த காலங்களிலும் , பின்னர் விஸ்வநாதன் தனியே பிரிந்து இசையமைத்த போதும் ஏனைய வாத்தியகளுடன் ஒத்திசைவாய் நிறையவே பயன்படுத்திய   இசைக்கருவி சந்தூர்.உதாரணமாக சில பாடல்கள்

01  ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - பழனி 1963 - TMS + PBS + சீர்காழி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02   கண்களும் காவடி சிந்திக்கட்டும்    -எங்கவீட்டு பிள்ளை   1963 - T ஈஸ்வரி   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  சித்திர பூவிழி வாசலில் வந்து   - இதயத்தில் நீ  1968 - ஈஸ்வரி  + சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி  [  + குழல்  ]

04  நேற்றுவரை நீ யாரோ  - வாழ்க்கைப்படகு  1962 - PBS - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + எக்கோடியன் ]

05  இந்த மன்றத்தில் ஓடிவரும்  - போலீஸ்காரன் மக்கள்  1963 -  PBS + ஜானகி  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  செந்தூர் முருகன் கோவிலிலே  - சாந்தி  1963 - PBS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  பச்சை மரம் ஒன்று  - ராமு  1966 - சுசீலா - இசை: விஸ்வநாதன்

08  முத்து சிப்பி மெல்ல மெல்ல   - ராமு  1966 - சுசீலா - இசை: விஸ்வநாதன்

08  விழியே விழியே உனக்கென்ன வேலை  - புதிய பூமி  1966 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் [ட்ரம்பட்]

09  வெற்றி மீது வெற்றி வந்து   - தேடி வந்த மாப்பிள்ளை  1968 - TSPB  - இசை: விஸ்வநாதன்

10  கண்ணே கனியே முத்தே அருகில் வா   - ரகசிய போலீஸ் 115 1966 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் [ சந்தூர் + எக்கோடியன் ]

11 பொன் எழில் பூத்தது புது வானில்   - கலங்கரை விளக்கம்   1965 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் [+ எக்கோடியன் ]

12  பாட்டு வரும் உன்னை பார்த்து கொண்டிருந்தால்   - நான் ஆணையிட்டால்  1966 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் [ + எக்கோடியன் + கிட்டார் + குழல்  ]

13  குங்கும பொட்டின் மங்களம்    - குடியிருந்த கோயில்  1968 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் [ + சாரங்கி   + குழல்  ]

14  சிரித்தாள் தங்கப்பதுமை    - Kannan என் காதலன்   1967 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் [ + எக்கோடியன் + கிட்டார் + குழல்  ]

15  சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ  - சந்திரோதயம்   1968 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் [ + எக்கோடியன்   + குழல்  ]

16  நீயே தான் எனக்கு மணவாட்டி  - குடியிருந்த கோயில்  1968 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் [ + சாரங்கி   + குழல்  ]

17 எங்கிருந்தோ ஆசைகள்   - சந்திரோதயம்  1968 - TMS + சுசீலா  - இசை: விஸ்வநாதன் [ + சந்தூர் + குழல்  ]

07  சாரங்கி:

இந்திய சங்கீதத்தின் மிக நுட்பமான சுரங்களை மனிதக் குரல்களை போல வெளிப்படுத்தும் முதன்மையான இசைக்கருவி வீணை ஆகும்.

ஹிந்துஸ்தானி இசையில் புகழபெற்ற தந்தி இசைக்கருவியான சாரங்கியும்   மனிதக்குரலுக்கு நெருக்கமான வாத்தியமாகும். இந்த வாத்தியமும் ஈரான் ,ஆபிகானிஸ்தான் போன்ற நாடுகளின் வேர்களைக் கொண்ட வாத்தியமாகும்.

ஹிந்துஸ்தானி போன்ற செவ்வியலிசை அரங்குகள் மட்டுமல்ல  ஹிந்தித் திரையிசையிலும் கணிசமானளவில் பய்னபடுத்தப்பட்டிருக்கும் ஒரு அருமையான இசைக்கருவி.

ஹிந்துஸ்தானிய இசையில் புகழபெற்ற சாரங்கி நேபாளம் ,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நாட்டார் இசையிலும் பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி ஆகும் சந்தூர் இசைக்கருவி போலவே இதன் பூர்வீகம் ஈரான் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

துயரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, உறவுகளிலிருந்து அந்நியப்பட்டு  தனது வேதனையை தானே நொந்து அனுபவிக்கும் ஒருவரின் சோக இருள் கவிந்த மனநிலையை ,அவ்வுணவர்வின் ஆழத்தை  ஒரு இசைக்கருவியால் வெளிப்படுத்த முடியும் என்றால் அதற்கு மிகவும் பொருத்தமான வாத்தியம் சாரங்கி என்றால் மிகையாகாது.

ஹிந்தி திரையிசையில் பல்வேறு சூழ்நிலைக்கும் பொருத்தமாக மிக இனிமையான பாடல்களில் பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கின்றார்கள்.தமிழ் திரையைப் பொருத்தவரையில்  1960களில் இந்த இசைக்கருவியை அதிகமாகப் பயன்படுத்தியவர்கள்  மெல்லிசைமன்னர்கள் என்று கூறலாம்.

தெளிவின்மை , மௌனம் சூழ்ந்த வார்த்தையால் வெளியிட முடியாத துயரத்தை  ,மெலிதான சோகம் தழுவிய உணர்வுகளை மட்டுமல்ல பல்வேறு மனநிலைகளுக்கும் பொருத்தமாக பாடல்களில் வைத்த பெருமை மெல்லிசைமன்னர்களுக்கு உண்டு.

01  இரை போடும் மனிதருக்கே - பதிபக்தி  1959 -  சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  நான் கவிஞனுமில்லை    - படித்தால் மட்டும் போதுமா 1963 - TMS  + PBS  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  ஒரு நாள் இரவில்   - பணத்தோட்டம்  1963 - சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி [ + குழல் + ஜலதரங்கம்  ]

04  மனிதன் என்பவன் தெய்வமாகலாம்   - சுமைதாங்கி   1962 -  PBS  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  ராதைக்கேற்ற கண்ணனோ   - சுமைதாங்கி   1963 - ஜானகி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  என் அன்னை செய்த பாவம்   -  சுமைதாங்கி   1963 - ஜானகி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே      - பார் மக்களே பார்   1963 - TMS +  சுசீலா - இசை: விஸ்வநாதன்

08 அத்தை மகனே போய் வரவா   - பாத காணிக்கை  1962 - சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

09  என்னுயிர் தோழி கேளொரு  சேதி - கர்ணன் 1964 - சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

10 யார் அந்த நிலவு     - சாநதி  1968 - TMS  - இசை: விஸ்வநாதன்

11 என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு    - காவியத் தலைவி  1972 - சுசீலா   - இசை: விஸ்வநாதன்

குழல்.

மெல்லிசைமன்னர்களின் இசையில் தனிச் சிறப்புடனும் அழகுடனும் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான காற்று வாத்தியங்களில் ஒன்று புல்லாங்குழல்.குழலுக்கு மயங்காத மனிதன் உண்டோ?எந்த சூழ்நிலைகளுக்கும் பயன்படக் கூடிய , தேனருவியாய் பொழிகின்ற குழலிசையை தமிழ் சினிமாவில் அவர்களது சமகால, முன்னோடி இசையமைப்பாளர்களும் மிக அற்புதமாகப் பயன்படுத்திருக்கின்றனர்.

கீழே தந்திருக்கும் பாடல்களில் குழலை பிரதானமாகப் பயன்படுத்திருப்பதையும் ,இனிமையான குழலுடன்  சந்தூர் , எக்கோடியன் ,மேண்டலின் போன்ற பல இசைக்கருவிகளையும் இணைத்து தந்திருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.பாடலின் இயங்கு நிலைக்கும் ,உயிர்ப்புக்கும்   இனிமைக்கும் பொருத்தமாக இணைத்து பாடலில் கரைத்துவிடும்   மேதமை மெல்லிசைமன்னர்களின் சிறப்பம்சமாகும்.

வாத்திய கருவிகளின் பாவனை குறைந்த காலத்தில் இசையமைப்பாளர்களுக்கு  உற்ற நண்பனாய் இருந்த வாத்தியம் புல்லாங்குழல் என்றால் மிகையில்லை.குழலின்றி அமையாது உலகு என்று கூறுமளவுக்கு திரையிசையில் பயன்படுத்தப்பட்ட வாத்தியம் குழல்.

01   தாழையாம் பூ முடித்து  - பாகப்பிரிவினை  1960 - TMS + பி.லீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் ஆரம்பத்திலேயே ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் குழலிசை பாடல் முழுவதும் இழையோடும் அழகை நாம் ரசிக்கலாம்.

02   காதலிலே பற்று வைத்தாள்  அன்னையடா    - இது சத்தியம்  1963 - சுசீலா  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் உணர்வுக்கு ஏற்ப கரைந்துருக்கும் குழல் வாசிப்புடன் செனாய் வாசிப்பின் மேன்மையையும் ரசிக்கும் நாம் ஆங்காங்கே விறுவிறுப்பான குழல் விரைந்த வாசிப்பையும் ,  இவை ஒன்று கலந்து தேனமுதமாக வரும் இசையையும் ரசிக்காமல் இருக்கமுடியாது.

03   வா என்றது உருவம்     - காத்திருந்த கண்கள்   1962 - சுசீலா  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழலின் குளுமையும் இனிமையும் இந்தப்பாடலில் கேட்கலாம்.

04   ஓடம் நதியினிலே     - காத்திருந்த கண்கள்   1962 - சீர்காழி   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

உணர்ச்சிமயமான இந்தப்பாடலில் பெங்காலி மக்களின் படகு பாட்டான "பாட்டியாளி"  எனப்படும் இசைப்பண்பை தரிசிக்கின்றோம்.பாடலின் இசையமைப்பும் அசாத்தியமான சங்கதிகளும் அதனைப் பாடிய பாங்கும் தன்னிகற்றற்றவை.நாயகியின் விரகதாபத்தை ஒரு ஆண் குரலில் வெளிப்படுத்தும் அனாயாசமாக பாடல்.நாயகியின் உணர்வலைகளை சீர்காழியார் தனது குரலின் இனிமையால் அசாத்தியமான சங்கதிகளை அநாசாயமாக வெளிப்படுத்தும் பங்கு வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை.மெல்லிசைமன்னரின் அபிமான இசையமைப்பாளரான நௌசாத் வியந்து பாராட்டிய பாடல் இது.

05   பாலும் பழமும்      - பாலும் பழமும்   1961 -TMS  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

வயலின் , குழல் இசையுடன் குழைந்து ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் குழல் மனதை தேற்றும் மருத்துவன் போல ஆற்றுபடுத்துவதாயும்  அமைக்கப்பட்டிருப்பதை கேட்கிறோம்

06  ஆறோடும் மண்ணில் எங்கும்      - பழனி  1963 - TMS + சீர்காழி + BPS  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

மூவர் இணைந்து பாடும் இந்த அழகான பாடலில் குழலிசையை கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை கேட்கலாம்.

07 என்னை எடுத்து தன்னைக் கொடுத்து - படகோட்டி - பாடியவர்: சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

மனதை இதமாக வருடும் இந்தப்பாடலில் வன்மையாக ஒலிக்கும் குழலிசையையும் , அபாரமான ஹம்மிங்கையும் இணைத்து அழங்கான சங்கதிகளால் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயமான இசையமைப்பை கேட்க்கிறோம்.குறிப்பாக இந்தப்பாடலில் வரும் " வந்தாலும் வருவாண்டி " என்ற சொற்களில் எத்தனை விதமான சங்கதிகள் வைத்து ஆச்சர்யப்படுத்துகிறார் மெல்லிசைமன்னர்.ஹம்மிங்கை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.

08 கட்டோடு குழலாட ஆட   - பெரிய இடத்து பெண்  1963 - TMS  + சுசீலா + குழு   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழலின் இனிமையை  இந்தப்பாடலில் கேட்கலாம்.

09  செல்லக்கியே மெல்ல பேசு [ சோகம் ] - பெற்றால் தான் பிள்ளையா  1967 -  சுசீலா    - இசை : விஸ்வநாதன்

சித்தார்:

01   சொன்னது நீதானா - நெஞ்சில் ஓர் ஆலயம்   1963 -  சுசீலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02   நம்பினார் கெடுவதில்லை -  பணக்காரங்க குடும்பம் 1963 -  சுசீலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

நாதஸ்வரம்

01  வாராய் என தோழி வாராயோ - பாசமலர் 1961  - எல்.ஆர்.ஈஸ்வரி + குழுவினர் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  பூ முடிப்பான் இந்த பூங் குழலி - நெஞ்சிருக்கும் வரை 1966 -  TMS - இசை: விஸ்வநாதன்

03  எட்டடுக்கு  மாளிகையில் - பாதகாணிக்கை 1962  - சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  ஒளிமயமான எதிர்காலம்  - பச்சை விளக்கு 1963  - TMS - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

வீணை:

01 அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்- - பஞ்சவர்ணக்கிளி  1965 -  சுசீலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02   மனமே முருகனின் மயில் வாகனம் -- மோட்டார் சுந்தரம்பிள்ளை  1966 -  ராதா ஜெயலட்சமி     - இசை : விஸ்வநாதன்

03   மழைப் பொழுதின் மயக்கத்திலே - பாக்கியலடசுமி 1961 -  சுசீலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

மவுத் ஓர்கன்:

ஹார்மோனிகா [harmonica ] என்று மேலைநாடுகளிலும், மவுத் ஓர்கன் [Mouthorgan ] என்று கீழை நாடுகளில் அறியப்படும் இந்த வாத்தியம்  ஐரோப்பிய இசையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்துள்ளது.இலகுவாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த கையடக்கமான இசைக்கருவி வியன்னா நகரில் தோன்றிய காற்று இசைக்கருவியாகும்.

அமெரிக்க கவ்போய் [ Cowboy ]திரைப்படங்கள் என்றதும் திரை ரசிகர்கள் மனதில் தோன்றுவது சார்ள்ஸ் பிரவுன்சன் மற்றும் கிளின்ட ஈஸ்டவுட் நடித்த cowboy பாணியிலமைந்த தொடர் படங்களே!

இத்திரைப்படங்களில் நாயகர்கள் மவுத் ஓர்கன் வாசிக்கும் இசைத்துணுக்குகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.  Once Upon A Time in the West , The Good the  Bad And the Ugly போன்ற படங்களின் பின்னணியில் ஒலிக்கும் இசை மரண பயத்துடன் பல்வகை உணர்வுகளையும் ஒளி சிந்த வைத்து மறைந்து விடும் விநோதமிக்கவையாகும்.சுழலும் துப்பாக்கிகளும் , மரத்தில் தொங்கும் பிணங்களை ,மரணவாசலில் நிற்கும் மனிதனும் என வெளிப்பட்டு  நிற்கும் காட்சிகளில்  மவுத் ஓர்கன் இசையும் கலந்து பீதியூட்டும்.

மவுத் ஓர்கன்அல்லது  ஹார்மோனிக்காவை ஹொலிவூட் திரைப்படங்களில் வைத்து சாகசம் புரிந்தவர் இத்தாலிய இசையமைப்பாளரான   என்னினோ  மார்க்கோனி ஆவார்.

திரையில் மட்டுமல்ல ஜாஸ் இசையிலும் பயன்படும் இசைக்கருவியாகும்.ஜிப்ஸி இசையின் ஜாம்பவான் என்று புகழப்படும் டியாங்கோ   ரெயின்காட் [Django Reinhard  ] என்ற இசைக்கலைஞர் தனது ஆதர்ச கலைஞர் என்று பிரஞ்சு இசைக்கலைஞரான Jean Thielemans என்பவரைக் குறிப்பிடுகிறார். " He is one of the greatest musicians of our time " என   Quincy Jone கூறியது குறிப்பிடத்தக்கது.இவரது மனோகரமான வாசிப்பை The  Soul Of Toots Thielemans , The Soul Of Jazz Harmonica [1959 ]  போன்ற இசை அல்பங்களில் கேட்கலாம்.

மவுத் ஓர்கன் கருவியை தமிழில் மெல்லிசைமன்னர் வியக்கத்தக்கமுறையில் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தினார்.

01  முத்து சிப்பி மெல்ல பிறந்து வரும் - - நெஞ்சில் ஓர் ஆலயம்   1963 -  சுசீலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02 பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - பார்த்தால் பசி தீரும் 1963 -  TMS   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  கண்ணன் வருவான் கதை சொல்லுவான் -பஞ்சவர்ணக்கிளி 1964 -  சுசீலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

இவை போன்ற மரபு சார்ந்த வாத்தியங்களை மட்டுமல்ல கைத்தட்டு ஒலி, விசில் , ஜுடீலிங் ,மவுத் ஓர்கன் , ஜலதரங்கம் ,மணி ஒலிகள் என பல்வகை ஒலிகளையும் தங்கள் பாடல்களில் வைத்து படைப்பூக்கத்துடன்  கலைப்படைப்பாகத் தந்து இசையில் புதுப்பித்து படிமங்களை தந்து ஆச்சர்யப்படுத்தி சென்றார்.

கைத்தட்டு ஒலி  அமைந்த பாடல்கள் சில.

01   குங்குமப்பொட்டு குலுங்குதடி   - இது சத்தியம்  1963 - சுசீலா + ஜானகி  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02   தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன்   - வாழ்க்கை படகு   1963 - சுசீலா + குழு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03   குங்குமப்பொட்டு குலுங்குதடி   - இது சத்தியம்  1963 - சுசீலா + ஜானகி  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04   தொட்டால் பூ மலரும்    -படகோட்டி   1964 - TMS + சுசீலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05   சிங்கார புன்னகை     - மகாதேவி   1957 - பாலசரஸ்வதி தேவி   +எம்.எஸ்.ராஜேஸ்வரி    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

06    ஆடவரெல்லாம் ஆடவரலாம்     -கலைக்கோயில் 1962- எல்.ஆர்.ஈஸ்வரி  + குழுவினர்   - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி

07   சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ    -ரகசிய போலீஸ் 115  1967- சுசீலா  + குழுவினர்   - இசை : விஸ்வநாதன்.

08   பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்    -சாந்தி நிலையம்   1967- TMS + குழுவினர்   - இசை : விஸ்வநாதன்.

09   கெட்டவரெல்லாம் பாடலாம்     -தங்கை    1967- TMS + குழுவினர்   - இசை : விஸ்வநாதன்

10   கல்யாண வளையோசை கொண்டு    -ஊருக்கு உழைப்பவன்   1967- TMS  + சுசீலா    - இசை : விஸ்வநாதன்.

11   எங்கேயும் எப்போதும் சங்கீதம்     - நினைத்தாலே இனிக்கும்    1967- SPB  + ஈஸ்வரி     - இசை : விஸ்வநாதன்.

விசில் சத்தத்தை பயன்படுத்தி அமைத்த பாடல்கள்.

01   வந்த நாள் முதல்     - பாவமன்னிப்பு 1961- TMS    - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி

02   நீரோடும் வகையிலே - பார் மக்களே பார்  1963- TMS  + சுசீலா   - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி

03   கேள்வி பிறந்தது அன்று      - பச்சை விளக்கு  1964  - TMS    - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி

04   நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா- காதலிக்க நேரமில்லை  1961- ஜேசுதாஸ் + சுசீலா + ஈஸ்வரி     - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி

05   எந்தன் பருவத்தின் கேள்விக்கு      - சுமைதாங்கி  1962 - BPS + ஜானகி - இசை : விஸ்வநாதன்ராமமூர்த்தி

06   நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்  - சாந்தி  1966- சுசீலா     - இசை : விஸ்வநாதன்

07   கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே - நான் ஆணையிட்டால் 1966- TMS    - இசை : விஸ்வநாதன்

ஜலதரங்கம் மற்றும் மணி ஒலிகள்:

ஜலதரங்கம் மற்றும் , பலவிதமான மணி ஒலிகளையும் வியக்கத்தக்க முறையில் மெல்லிசைமன்னர்கள் தங்கள் காலத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டார்கள்.குறிப்பாக குழந்தைகள்  மற்றும் தாலாட்டுப் பாடல்களில் மிக நுணுக்கமாக மணி ஒலிகளை இணைத்து பல பாடல்களை தந்திருக்கிறார்கள்.இந்த மாதிரியை வைத்துக் கொண்டு பின்னால் வந்த இசையமைப்பாளர்களும் குழந்தைகள் பாடல்களில் வைப்பதற்கான முன்மாதிரியாக  அமைந்திருக்கிறது.

01   இதழ் மொட்டு விரிந்திட   - பந்தபாசம்  1963  - BPS + சுசீலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02   அத்தைமடி மெத்தையடி     - கற்பகம்  1964- சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03   மாலையும் இரவும் சந்திக்கும்   - பாசம்  1962   - BPS + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04   மலர்ந்தும் மலராத   - பாசமலர்  1961   - TMS + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05   மலர்களை போல் தங்கை    - பாசமலர்  1961   - TMS    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  வளர்ந்த கலை மறந்து விட்டால்    - காத்திருந்த கண்கள்   1962   - BPS + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  கண்ணன் வருவான் கதை சொல்லுவான்    - பஞ்சவர்ணக்கிளி   1964   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  அழகன் முருகனிடம்    - பஞ்சவர்ணக்கிளி   1964   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  அம்மா அம்மா கவலை வேண்டாம்     - பாக்கியலக்ஸ்மி   1961   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை   - பணத்தோட்டம் 1963   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  பிள்ளைக்குத் தந்தை ஒருவன்    - பார்த்தால் பசிதீரும்    1962   -  TMS   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  பூஜைக்கு வந்த மலரே வா     - பாதகாணிக்கை   1964   - BPS + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

09  மயங்குகிறாள் ஒரு மாது    - பாசமலர்    1961   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

10  தங்கத்தில் ஒரு குறை இருந்தாலும்     - பாகப்பிரிவினை    1961   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

11  முத்தான முத்தல்லவோ     - நெஞ்சில் ஓர் ஆலயம் 1963   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

12  காலங்களில் அவள் வசந்தம்     - பாவமன்னிப்பு  1961   -  PBS   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

12   பச்சைமரம் ஒன்று  [சோகம்] -ராமு    1966 - PBS + சுசீலா    - இசை : விஸ்வநாதன்

13   முத்துச் சிப்பி மெல்ல மெல்ல  -ராமு    1966 - PBS + சுசீலா    - இசை : விஸ்வநாதன்

14  ஆடிவெள்ளி தேடி உன்னை    -மூன்று முடிச்சு    1975   -  ஜெயச்சந்திரன் - வாணி ஜெயராம்    - இசை : விஸ்வநாதன்

இயற்கை ஒலிகள் மற்றும் மிமிக்கிரி ஒலிகள்:

01  போனால் போகட்டும் போடா  - பாலும் பழமும் 1961   -  TMS   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  எங்கிருந்தாலும் வாழ்க   - நெஞ்சம் மறப்பதில்லை  1963 -  ராகவன்    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  தத்தை நெஞ்சம் முத்தத்தில்        - சர்வர் சுந்தரம் 1964   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  பறக்கும் பந்து பறக்கும்   - பணக்காரகுடும்பம்  1963   -  TMS + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் - அன்பே வா    1966   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன்

06  நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்        - சாந்தி   19678   -  சுசீலா   - இசை : விஸ்வநாதன்

07  முத்தமோ மோகமோ        - பறக்கும் பாவை    1967   - TMS + சுசீலா   - இசை : விஸ்வநாதன்

செனாய் , சந்தூர் ,சாரங்கி ,சித்தார் ,வீணை ,நாதஸ்வரம்,குழல்,கைத்தட்டு ,விசில் ,ஜலதரங்கம்,மணி ஒலிகள் ,பியானோ,எக்கோடியன் , ட்ரம்பட் , மியூட் ட்ரம்பட் , கிட்டார் போன்ற இசைக்கருவிகளை குறிப்பிட்டாலும் அவற்றுடன் பிரிக்கவொண்ணாத வண்ணம்  அவற்றுடன் இணைத்து பல்வறு வாத்தியங்களை இணைத்து அனாயாசமாகப் பயன்படுத்திய பலவகைப்பாடல்களை பார்த்தோம்.

மேற்சொன்ன வாத்தியங்களைப் பயன்படுத்தி அமைத்த பாடல்கள் என்று மேலே தந்த பாடல்களில் மரபுசார்ந்த வாத்தியங்களை  பயன்படுத்துவது மட்டுமல்ல எல்லைகளற்றபடைப்பாற்றலின் அடையாளமாக அவற்றுடன் கையில் கிடைக்கும் கருவிகளை எல்லாம் மிகையில்லாமல் துணிவுடன் பயன்படுத்தி புதுமையை பழமையை அரவணைத்து செல்லும் வண்ணம் படைத்தளித்தனர்.

பல்வகை வாத்தியங்களையும் , விதம்,விதமான ஒலிநயங்களையும் கலந்து  உணர்வில் பேரலைகளை வீச  வைக்கும் பாடல்களைத் தந்து   தங்கள் இசைவல்லமையை 1960 களிலேயே நிரூபித்தார்கள். தமிழ் மண்ணின் சடங்கு முறையை வெளிப்படுத்தும் ஒரு பாடலில் , அந்த கணத்தில்  எழும் மனிதநுண்ணுர்வு சிலிர்ப்புகளை   நான்கு நிமிடங்களில்  வெளிப்படுத்திய மேதமையை பாசமலர் (1961) படத்தில் இடம்பெற்ற "வாராய் என் தோழி வாராயோ " பாடலில் காண்கிறோம.

வாத்தியங்களை அவ்வச் சூழநிலைக்கு ஏற்றவாறு கையாண்ட பக்குவத்தால் அந்த வாத்தியத்தின் சிறப்பும் அதை வாசித்த கலைஞர்களின் ஆற்றலும் பெருமை பெற்றன.எளிமையான வாத்தியங்களும் மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலால் மேன்மை   பெற்றுத் திகழ்ந்தன.தனியேயும் ,ஒன்றுபட்டு ஒலிக்கும் அந்த இனிய நாத ஒன்றிசைவின் இனிமையை ,நமது உள்ளங்களை ஊடுருவிப்பாயும் இனிமையையும்  நுணுகி  கேட்க கேட்க இன்பமளிப்பவையாகும்.

ஒரு பாடலில் இன்ன வாத்தியம் பயன்பட்டிருக்கிறது என்று சில எடுத்துக்காட்டுகளைக் கூறினாலும் எல்லாவிதமான வாத்தியங்களும் சிறிய பங்களிப்பை இசை முழுமைக்கும் மெல்லிசைமன்னர் பயன்படுத்தியிருப்பதை நுனித்து கேட்பவர்கள் கண்டு அதிசயிக்கலாம்.இது அவரின் படைப்பாற்றலை எண்ணி திகைக்க வைக்கும் ஒரு விஷயமாகும்.

மெல்லிசைமன்னர்களின்  படைப்பாற்றலின் திறமைக்கு ஈடுகொடுத்து , உயிர் கொடுத்து அதை வெளிப்படுத்தும் அற்புதமான கலைஞர்கள் கிடைத்தமை மெல்லிசைமன்னர்களின் வெற்றிக்கு மிக முக்கியகாரணமாகும்.என்னதான் இசையமைப்பாளரின் கற்பனையில் ஒரு இசைவடிவம் உருப்பெற்றாலும் சரியான உணர்ச்சி வாசிப்பின்றி அவை உருப்பெறாது.இசையமைப்பாளர்களின் இசைஜாலங்களை பிறர் உள்ளங்களில் ஏற்றி வைப்பவர்கள் திறமை வாய்ந்த வாத்தியக்கலைஞர்களே!

மெல்லிசைமன்னர்களின் இசைக்குழுவின் பங்காற்றிய இசைக்கலைஞர்கள் பலரும் அவ்வவ் வாத்தியக்கருவிகளைக் கையாளுவதில் தங்கள் மேதைமையைக் காண்பித்தார்கள் என்று அவர்களின் ஆற்றலை கண்டவர்கள் கூறுகிறார்கள்.ஏன் அவர்கள் வாசிப்பில் வெளிவந்த பாடல்களை கேட்கும் நாமும் உணர்கிறோம்.

பிலிப் [பியானோ ] , கோபாலகிருஷ்ணன் [ பொங்கஸ்,மிருந்தாங்கம் மற்றும் தாளவாத்தியங்கள் ], நியோல் கிராண்ட் [ ட்ரம்ஸ் ], நஞ்சப்பா [ குழல்], சத்தியம் [ செனாய் ] , ஷ்யாம் [வயலின்] அந்தந்த வாத்தியங்களில் மேதமைக்காட்டும் தரமிக்க இசைவாணர்களும்  கிடைத்தார்கள்.இவர்களுடன் மீசை முருகேசு [ பல்வகை ஒலிகளை எழுப்பும் திறமையுள்ள தாள வைத்தியக்கலைஞர் ] ,மேண்டலின் ராஜு [ விசில்,கொன்னக்கோல் வல்லுநர் ] சதன் [ மிமிக்கிரி வல்லுநர் .நகைச்சுவை நடிகர் ] சாயிபாபா போன்றவர்களும் மிகச் சிறந்த கலைஞர்களாகத் திகழ்ந்தார்கள்.

அதுமட்டுமல்ல  கர்நாடக இசையில் சுரஞானமிக்க உதவியாளர்களாக, மிகச் சிறந்த இசையமைப்பாளரான ஆர்.கோவர்த்தனம். ஜி.எஸ்.மணி போன்றோரும் பின்னாளில் இசையமைப்பாளாராய் விளங்கிய ஜி .கே.வெங்கடேஷ் , மேலைத்தேய இசையில் ஆற்றல்மிக்க ஹென்றி டானியல் , ஜோசப் கிருஷ்ணா போன்றோரின் ஆற்றலையும் தகுந்த விதத்தில் பயன்படுத்தி வெற்றிகண்டார்கள்.


பேஸ் குரலின் சுகந்தம்:

ஒரு பாடகரை அறிமுகம் செய்த இசையமைப்பாளரை  [ஈமனி   சங்கரசாஸ்திரி ] பார்த்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகிறார். " நல்ல பின்னணிப்பாடகரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்: இவர் பாட வேண்டாம்,ஹம் செய்தாலே போதும் கல்லும் உருகும்! "

உற்றுக்கேட்டால்  வண்டின் இனிய ரீங்காரம் போல் தான் அந்த குரலிலும் அதிசயக்கத்தக்க பேஸ் குரலின் அதிர்வும், மென்மையும்  இருக்கும்.இந்த ரீங்காரத்தை தான் அந்தப் பாடகரை அறிமுகப்படுத்திய அந்த  இசையமைப்பாளரும்  கேட்டிருப்பார் போலிருக்கிறது . அதனால் தான்” இவர் பாட வேண்டாம், ஹம்செய்தாலே போதும் கல்லும் உருகும்! "“என்றார் தயாரிப்பாளர்.அந்தப் பாடகர் தான் பி.பி.ஸ்ரீனிவாஸ்.  தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் .

ஓங்கி குரல் எடுத்துப்பாடிய சௌந்தர்ராஜனை மென்மையான மெல்லிசைப்பாடல்களில் பயன்படுத்திய மெல்லிசைமன்னர்கள் ,இயல்பிலேயே மென்மையான  குரல்வளம் கொண்ட பி.பி.ஸ்ரீனிவாஸ் என்ற பாடகரை அற்புதமாகப் பயன்டுத்தி வெற்றி கண்டனர்.

கீழசுருதியில் பாடினாலும் இனிக்கும் என்ற புது மரபை ஏ.எம்.ராஜா ,பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர்உருவாக்கிக் காட்டினார்கள்.அதிகமான பிருக்காக்கள் போட்டு அசத்துவது ஒரு விதமென்றால்  , மெல்லிய சங்கதிகளை வைத்தும்  பாடல்களை இனிமையாகக் கொடுக்கலாம் என்று நிறுவியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

பொதுவாக பாடலின் சூழ்நிலை ,நடிக்கும் நடிகர்கள் ,அவர்களுக்கேற்ற பின்னணிப்பாடகர்கள் என அன்று இருந்த ஒரு சூழலில் பி.பி.ஸ்ரீனிவாஸ் மூன்றாவது நிலையிலிருந்த ஜெமினி கணேசன், மற்றும் கல்யாணகுமார், முத்துராமன், பாலாஜி போன்ற நடிகர்களுக்கு பொருத்தமானவர் என கருதத்தப்பட்டு பயன்படுத்தப்படடவர்.

பலவிதமான சுருதிகளில் பாடும் ஆற்றல்மிக்க சௌந்தர்ராஜனை எப்படி பயன்டுத்தினார்களோ அதுபோலவே, தாழ்ந்த சுருதியில் இனிக்க பாடும் ஸ்ரீநிவாஸையும் அதற்கேற்ப,அவரின் குரலின் தன்மையறிந்து,பாடல்களை இசையமைத்துப் பாடவைத்தார்கள்.பெரும்பாலும் இவர் பாடிய பாடல்கள் காதல்பாடல்களாகவும் ,சில சோகப்பாடல்களாகவும்   இருந்ததை நாம் நினைவில் கொள்ளலாம்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பெரும்பான்மையான பாடல்கள் காதல்பாடல்கள்,சோகப்பாடல்கள் என்ற வகையில் மென்மையும் ,இனிமையுமிக்க மெட்டுக்கள் மட்டுமல்ல ,அதற்கேற்ப வாத்திய இசையிலும் மென்மையைக் கையாண்டார்கள்.அங்கங்கே மெல்லிசைமன்னர்களுக்குரிய வேகமும்,தாள அமைப்பில் விறுவிறுப்பும் காட்டினாலும் அவற்றையெல்லாம் தனது மென்மையும், வசீகரமும், ரீங்காமுமிக்க மந்திரக்குரலால் ஆற்றுப்படுத்திவிடுவார்.பின் அது ஸ்ரீனிவாஸ் பாடலாகி விடும்!

இந்திய திரையிசையில் ஒரு பாடகர் பாடிய அத்தனை பாடல்களும் சிறப்பானவை என்று சொல்ல முடியாது.ஆயினும் இந்தக்கருத்து ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்களுக்கு பொருந்தாது என்று சொல்லும் வகையில் இவரது அத்தனை பாடல்களும் சிறப்பாக இருக்கும்.

1950 களின் நடுப்பகுதியில் ஆங்காங்கே பல்வேறு இசையமைப்பாளர்களிடமும்  மிக நல்ல பாடல்களை பாடினார்.அவற்றில் சில மிக அருமையான மெல்லிசைப்பாடல்களாகவும் அமைந்திருந்தன.

ஜி.ராமநாதன் இசையிலும் நல்ல பாடல்களைப் பாடினார்.அவற்றுள் முக்கியமான பாடல்கள் சில :

01  கனியோ பாகோ கற்கண்டோ - கற்புக்கரசி - பி.பி.ஸ்ரீனிவாஸ் + எம்.எல்.வசந்தகுமாரி - இசை.ஜி.ராமனாதன்

பொதுவாக இசையமைப்பில் தனது தனித்துவத்தைக் காண்பிக்கும் வல்லமையும் ,உயர்ந்த சுருதியில் பாடிக்காட்டும் வல்லமையும் வாய்ந்த ஜி.ராமநாதன் , பி.பி.ஸ்ரீனிவாசுவுக்காக,அவரது சுருதிக்கேற்ப  கொஞ்சம் அடக்கி இசையமைத்த பாடல் இது என்று சொல்லலாம். இன்னுமொரு சிறப்பு எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைந்து பாட வைத்தது.இது போன்ற இணைகள் தமிழ் சினிமாவில் அரிதாகவே நிகழ்ந்துள்ளன.பாடலின் பல்லவி போலவே கனியும், பாக்கும் இணைந்த இரு மதுரக்குரல்களின் சுநாதத்தை இந்தப்பாடலில் நாம் கேட்கலாம்.

02  கம கமவென நறுமலர்  - சமயசஞ்சீவி 1957 - பி.பி.ஸ்ரீனிவாஸ் + ஜிக்கி   - இசை.ஜி.ராமனாதன்

ஜிக்கியுடன் இணைந்து பாடிய இந்தப்பாடல் ராமநாதனின் கம்பீர இசைக்கு ஓர் எடுத்துக்காட்டு.ஜிக்கியுடன் மிகச் சில பாடல்களையே ஸ்ரீனிவாஸ் பாடியிருக்கிறார்.

கலைமதியும் வானுடன் விளையாடுதே " என்று ஜிக்கி உயர்த்தி பாடும் போது " என் கண்ணும் கருத்தும் உன் அழகில் ஆடுதே " என்று மென்மையாக உயர்த்தி அதற்கு ஈடு கொடுத்திருக்கும் பங்கு அருமையாக இருக்கும்.

03  காற்றுவெளியிடை கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன்-பி.பி.ஸ்ரீனிவாஸ்+பி.சுசீலா  - இசை.ஜி.ராமனாதன்.

கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன.உண்மையைச் சொன்னால் பாரதிக்கு ஓர் இசை அஞ்சலி ஜி.ராமநாதனால் செய்யப்பட்டுள்ளது என்று சொல்ல கூடிய அளவுக்கு அத்தனை பாடல்களும் தலைசிறந்த முறையில் இசையமைக்கப்பட்டுள்ளன.பாரதி பாடல்களை இத்தனை இனிமையாக இதற்கு முன் யாரும் இசையமைக்கவில்லை என்று துணிந்து கூறும் வகையில் அத்தனை பாடல்களும் அந்தந்த உணர்ச்சிகளுக்கேற்ப அருமையாக இசையமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடல்கள் என்று சிலவற்றை நாம் தெரிவு செய்யின் " காற்று வெளியிட கண்ணம்மா" என்ற இந்தப் பாடலுக்கும் ஓர் இடமிருக்கும்.

04  இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - வீரபாண்டிய கட்டபொம்மன் - பி.பி.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா - இசை i: ஜி.ராமநாதன்

வேறு பல இசையமைப்பாளர்களிடமும் இவர் பாடிய பாடல்கள் நினைவு கூறத்தக்கன.அவற்றுள் சில.

01  ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா - மக்களை பெட்ரா மகராசி   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ யு.சரோஜினி   - இசை: கே.வி.மஹாதேவன்

02  ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்   - சாரதா   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  - இசை: கே.வி.மஹாதேவன்

03  கன்னிப்பருவம் அவள் மனதில்  - கப்பலோட்டிய தமிழன்-பி.பி.ஸ்ரீனிவாஸ்+ சூலமங்கலம் ராஜலக்ஸ்மி  - இசை: சி.என்.பாண்டுரங்கன்

04  கனிந்த காதல் இன்பம் என்றாலே   - அழகர்மலைக் கள்ளன் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா- இசை: பி.கோபாலன்

05  தென்னங்கீற்று ஊஞ்சலிலே - பாதை தெரியுது பார் -  பி.பி.ஸ்ரீனிவாஸ் + எஸ்.ஜானகி - இசை: எம்.பி.ஸ்ரீனிவாஸ்

06  மாலையில் மலர்ச்சோலையில் – – அடுத்த வீட்டுப் பெண்- பி.பி.ஸ்ரீனிவாஸ் - இசை:

07  கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே – அடுத்த வீட்டுப் பெண் – பி.பி.ஸ்ரீனிவாஸ்- இசை:

08  ஏன் சிரித்தாய் என்னை பார்த்து – பனித்திரை – பி.பி.ஸ்ரீனிவாஸ்- இசை:கே.வி.மகாதேவன்

ஏற்கனவே பல இனிய பாடல்களை பாடிய ஸ்ரீநிவாஸை தங்கள் மெல்லிசை வெள்ளத்தில் கலக்க வைத்து அதிக புகழ்  பெற வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்களே!!

மெல்லிசைமன்னர்களின் இசையில் இவர் பாடிய அனைத்து  பாடல்களும் சிறப்பானவை என்று சொல்லிவிடலாம்.

01   அழகே அமுதே - ராஜா மலையசிம்மன் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ சூலமங்கலம்ராஜலக்ஸ்மி  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

மெல்லிசையின் சுகம் வீசும் இனிய பாடல்.

 02   அன்பு மனம் கனிந்த பின்னே - ஆளுக்கொரு வீடு 1960 - பி.பி.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்த அருமையான காதல் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது பலருக்குத் தெரியாது.ஏன் இதைப்பாடிய ஸ்ரீனிவாஸ்," இது கண்ணதாசன் எழுதியதென்று எண்ணியிருந்தேன்;பின்னாளில் தான் கல்யாணசுந்தரம் பாடல் எனத்  தெரிந்து கொண்டேன் " என்று கூறியிருந்தார்.

03   நீயோ நானோ யார் நிலவே  - மன்னாதி மன்னன் 1960 - பி.பி.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா+ ஜமுனாராணி -விஸ்வநாதன் ராமமூர்த்தி

மனதை வருடும் மென்மையாக சோகத்தைப் பூசிய இனிய பாடல்.பாடலின் தன்மையில் இரவும்,நிலவும் வீசும் சுகத்தை நாம் உணரலாம்.சுகத்திற்கு சுவையூட்டும் இனிய குரல்கள் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது.இப்பாடலில் மேலைத்தேய  மியூட் ரம்பெட் என்ற வாத்தியக்கருவியின் இனிய ஒலியை மிகக்கச்சிதமாக பயன்டுத்திய பங்கு மெல்லிசைமன்னர்களின் ஆராவத்தை வெளிப்படுத்தும்.

பூவிரிச் சோலையில் மயிலாடும்

புரிந்தே குயில்கள் இசைபாடும்

காவிரி அருகில் நானிருந்தாலும்

கண்ணே என்மனம் உன்னை நாடும்

என்ற வரிகளுக்கு பின்வரும் மியூட் ரம்பெட் இசையை நாம் மிகவும் ரசிக்கலாம்.

இது போன்ற  சில பாடல்களை மெல்லிசைமன்னர்களின் இசையில் ஆரம்பத்தில் பாடினார் எனினும் பின்னர் வந்த காலங்களில் அதிகம் பாடும் வாய்ப்பைப் பெற்றார். அத்தனையும் நம் மனதுக்கு கரும்பானான பாடல்கள் என்றால் மிகையில்லை.இன்னாருக்கு இன்னார் பாடுவது என்ற பாங்கில் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஜெமினி கணேசனுக்கு அதிகம் பாடும் வாய்ப்பை பெற்றார்.அந்த வகையில் " காலங்களில் அவள் வசந்தம் " என்ற பாடல் மூலம் ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்டார்.

காலங்களில் அவள் வசந்தம் பாடல் என்னுடைய வாழ்வில் வசந்தம் தந்த பாடல் என்று அவரே பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்.

1960 களின் திருநாட்களாய் அமைந்த மெல்லிசைமன்னர்கள்  விஸ்வநாதன் ராமமூர்த்தி இனியின் இசையில் இவர் ஏனைய பின்னணிப்பாட,பாடகிகளுடன் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் இனிமையின் உச்சங்களைத் தொடும் பாடல்களே !

மெல்லிசைமன்னர்களின் லாகிரி இசையில் புது ,புது அனுபவ எழுச்சி தரும் பாடல்கள்.குறிப்பாக பி.சுசீலா ,எஸ்.ஜானகி போன்றோருடன் இவர் பாடிய பாடல்கள் வார்த்தையில் விளக்க முடியாத நாதக் கோலங்களாகும்.

பி.சுசீலாவுடன் இணைந்து பாடல்கள்.

01  நாளாம்  நாளாம் திருநாளாம்  - காதலிக்க நேரமில்லை  -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்தப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது.

திலங் ராகத்தில் அதுவரை யாரும் எண்ணிப்பார்க்க முடியாத புதிய கோணத்தில் அமைக்கப்பட்ட இனிய பாடல்.

02  அனுபவம் புதுமை   - காதலிக்க நேரமில்லை  -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

லத்தீன் அமெரிக்க பாணியில் அமைந்த இந்தப்பாடலில் சைலபோன் ,பொங்கஸ்,குழல் ,கிட்டார் ,விசில்,எக்கோடியன்  ,வயலினிசை என ஆர்ப்பரிக்கும் பாடல். " பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே" என்ற வரிகளில்  1940 களில் வெளிவந்த Bésame Mucho" [Kiss me a lot] என்ற பாடலின் தாக்கம் துல்லியமாகத் தெரியும் பாடல். காதலர்களின் புதிய காதல் அனுபவத்தை வெளிப்படுத்தும் பாடல்.

சிங்காரத் தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம் - ஆகா

சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம் -  என்ற இடங்களை ஸ்ரீனிவாஸ் பாடும் போது அவ்வளவு கனிவு ,குழைவு!

அதே போல "

ஒரு தூக்கமில்லை ஒரு ஏக்கம் இல்லை

பிறர் பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை

பிரிவும் இல்லை .....

என்ற இடங்கள் சுசீலாவிவின் குரலில் மேட்டின் சுகம் அதிஅற்புதமாக வெளிப்பட்டு நிற்கும்.

03  யார்யார் யார் அவள்  - பாசமலர் 1961 - பி.பி.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி

மலையிலிருந்து வரும்  குளிர்காற்றின் இதம் இந்தப்பாடல்.அருமையான ஹம்மிங்குடன் சுசீலா தேனாக ஆரம்பிக்க ஸ்ரீனிவாஸ் வண்டாய் உறுமும் இனிமை அற்புதம்.தேனும் பாலும் கலந்த இனிமையை " ஊர் பேர் தான் தெரியாதோ என்று சுசீலா கூவ ...என்ன ஒரு அருமை!

மலையிலிருந்து வரும் இசை என்று அர்த்தப்படுகிற "பகாடி " என்ற ராகத்தில் அமைக்கப்பட்ட பாடலை மலைகளின் பின்னணியில் படமாக்கியது தற்செயலான செயலல்ல என்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.

04  நெஞ்சம் மறப்பதில்லை   - நெஞ்சம் மறப்பதில்லை    -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தலைப்புக்கேற்ற பாடல்.தமிழ் சினிமாப் பாடல்களில் எத்தனையோ ஹம்மிங் வந்திருக்கின்றன.ஆனால் இது போல உயிரை வதைக்கும் ஒரு ஹம்மிங் இதுவரை வரவில்லை என்று சொல்லுமளவுக்கு அத்தனை ,கனிவும்,குழைவும்,ஏக்கமும் ஒன்று சேர்ந்த ஒரு ஹம்மிங் இது!

நெஞ்சம் மறப்பதில்லை ..... என்று சுசீலா இழுத்துப்பாடுவதும்,

இது சோதனையா நெஞ்சின் வேதனையா - உன்

துணையே கிடைக்கவில்லை

உன் துணையே கிடைக்கவில்லை ...

என்ற இடங்களில் மெட்டு நம் நெஞ்சை உருக  வைக்கிறது. அது போலவே

ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்

உயிரால் இணைந்திருப்பேன்

அதை இறப்பினிலும் மறுபிறப்பினிலும் -நான்

என்றும் நினைத்திருப்பேன்  ...

என்று ஸ்ரீனிவாஸ் பாடும் போது பாடல் உச்சம் பெறுகிறது.நெஞ்சம் மறப்பதில்லை என்ற வரிகளை பல சங்கதிகளில்  பாட வைத்திருப்பது மெல்லிசைமன்னர்களின் இசைத்திளைப்பையும்,ஆற்றலையும் காட்டுகிறது.

எத்தனை சந்ததிகள் மாறி மாறி வந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டால் மறப்பார்களா என்று சொல்ல முடியாது.

05  மதுரா நகரில்  தமிழ் சங்கம்  - பார் மகளே பார்   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  போக போக தெரியும்   - சர்வர் சுந்தரம்    -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

07 பால் வண்ணம் பருவம்   - பாசம் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  என்னைத் தொட்டு   - பார்மகளே பார்  -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

09  காற்று வந்தால்  - காத்திருந்த கண்கள்   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

10  இதழ் மொட்டு விரிந்திட   - பந்தபாசம்   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா    - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

11  நான் உன்னை சேர்ந்த செல்வம்    - கலைக்கோயில்      -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ சுசீலா  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

எஸ்.ஜானகியுடன்  இணைந்து பாடிய பாடல்கள்.

12  பூஜைக்கு வந்த மலரே வா   - பாதகாணிக்கை    -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

என்ன ஒரு ஆர்ப்பரிப்பான ஆரம்பம்,குதூகலம்! என்ன ஒரு மென்மையான பாடல் எடுப்பு! பாடலுக்கான வாத்திய அமைப்பு , கோரஸ்,பாடிய முறை அத்தனையும் அற்புதம்.மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளிவந்த அதி உச்சிப்பாடல்களில் ஒன்று இந்தப்பாடல்!

13  இந்த மன்றத்தில் ஓடிவரும்   - போலீஸ்காரன் மகள்   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

14  பொன் என்பேன்   - போலீஸ்காரன் மக்கள்   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

15  அழகுக்கும் மலருக்கும்    - நெஞ்சம் மறப்பதில்லை   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

16  ஆண்டொன்று போனால்    - போலீஸ்காரன் மகள்   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

17  சித்திரமே சொல்லடி     - காதலிக்க நேரமில்லை    -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

******

நான் உன்னை சேர்ந்த செல்வம்   - கலைக்கோயில்     -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்த மன்றத்தில் ஓடிவரும்   - போலீஸ்காரன் மகள்   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

மோகனராகத்தில் அமைந்த இந்த இரண்டு பாடல்களும் கேட்பவர்களை எப்போதும் மெய்மறக்கச் செய்கின்ற பாடல்கள்.

*****

எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய பாடல்கள்

18  கன்னி வேண்டுமா   - மோட்டார் சுந்தரம்பிள்ளை   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர் ஈஸ்வரி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 19  கண்ணிரண்டும் மின்ன மின்ன    - மோட்டார் உந்தரம்பிள்ளை   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர் ஈஸ்வரி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 20  சந்திப்போமா  - சித்தி   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை: விஸ்வநாதன் 21  கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்  - சித்தி   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை: விஸ்வநாதன் 22  ராஜ  ராஜ ஸ்ரீ  ராஜன்  - சித்தி   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை: விஸ்வநாதன்

ஏனைய பாடகர் ,பாடகிகளுடன்   இணைந்து பாடல்கள்.

23  ஆதி மனிதன் காலத்தாலும் பின்    - பாழே பாண்டியா   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ கே.ஜமுனாராணி   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

24  அத்திக்காய் காய்   - பலேபாண்டியா  -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா + டி.எம்.எஸ்.+ கே.ஜமுனாராணி  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 25  காதல் என்பது இதுவரை - பாதகாணிக்கை    -பி.பி.ஸ்ரீனிவாஸ் + சந்திரபாபு  + சுசீலா  + ஏ.ஆர்.ஈஸ்வரி    - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 26  காலம் செய்த கோமாளித்தனத்தில்      - படித்தால் மட்டும் போதுமா    -பி.பி.ஸ்ரீனிவாஸ் + ஏ.எல்.ராகவன் + ஜி.கே.வெங்கடேஷ் குழு     - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 27  அவள் பறந்து போனாலே     - பார் மக்களே பார்   -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ்.  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 28  பொன் ஒன்று கண்டேன்    - படித்தால் மட்டும் போதுமா  -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ்.  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 29  நல்லவன் எனக்கு நானே     - படித்தால் மட்டும் போதுமா  -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ்.  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 30  றிடும் மண்ணில் எங்கும்     - பழனி   -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ் + சீர்காழி  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 31  மழை கொடுக்கும் கொடையும்     - கர்ணன்   -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ் + சீர்காழி + திருச்சி லோகநாதன்   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 32  விஸ்வநாதன் வேலை வேண்டும்      - காதலிக்க நேரமில்லை    -பி.பி.ஸ்ரீனிவாஸ் + குழு   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 33  வாழ்ந்துபார்க்க வேண்டும்      - நெஞ்சிருக்கும் வரை    -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ்   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

தனியே பாடிய சில பாடல்கள்.

34  காலங்களில் அவள் வசந்தம்   - பாவமன்னிப்பு   -பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 35  நிலவுக்கு என் மேல்  - போலீஸ்காரன் மக்கள்   -பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 36  இளமைக் கொலுவிருக்கும்  - ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார்    -பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 37  சின்ன சின்ன கண்ணனுக்கு   - வாழ்க்கைப்படகு    -பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 38  நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ  - வாழ்க்கைப்படகு    -பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 39  கண்படுமே பிறர் கண்படுமே   - காத்திருந்த கண்கள்    -பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 40  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்   - நெஞ்சில் ஓர் ஆலயம்     -பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 41  உடலுக்கு உயிர் காவல்     - மணப்பந்தல்    -பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 42  மனிதன் என்பவன்   - சுமைதாங்கி      -பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 43  உன்னழகைக் கண்டு கொண்டால் - கொடிமலர் - பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன் 44  நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு  - பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை: விஸ்வநாதன்

கஸல் சங்கீதத்தில் அலாதி பிரியமும் பாடும் ஆற்றலுமிக்க ஸ்ரீனிவாஸ் இனிய சங்கதிகளை மிக லாவகமாகப்பாடுவதில் வல்லவமை பெற்றவர்.அவர் பாடிய அத்தனை பாடலிலும் இத்தன்மையை நாம் காணலாம் எனினும் ஒரு சில பாடல்களை உதாரணம் கூறலாம்.

"துள்ளித் திரிந்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் இன்று "  [காத்திருந்த கண்கள் 1962 ] பாடலில்

"சொல்லி வைத்து வந்தது போல்

சொக்க வைக்கும் மொழி எங்கே “

என்ற வரிகளை பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் போது கவனித்து பாருங்கள்.நழுவி ஓடும் அருமையானதும் , இலகுவாகத் தோற்றம் தருவதுமான ,ஆனால் பாடுவதற்கு மிகவும் நிதானம் கோரக்கக்கூடிய சங்கதியை மிக அருமையாக, அனாயாசமாக  பாடியிருப்பார் என்பதை கவனித்துக் கேட்டால் அவரது ஆளுமை புரியும்.

" இளமை கொலுவிருக்கும் " [ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் 1962 ] பாடலில் "அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ ஓ.. ஓ.. ஓ.." என்ற வரிகளை பாடும் போது என்னே கனிவு ,சுகம்!

**   கண்படுமே பிறர் கண்படுமே [ [காத்திருந்த கண்கள்] பாடலில் " ஆடவர் எதிரே செல்லாதே ,அம்பெனும் விழியால் கொல்லாதே ..தே...தே …." என்ற வரிகளும்..

**  யார் யார் யார் அவள் யாரோ [ பாசமலர்] பாடலில் "அவள் யாரோ ...ஓ...ஓ.." ,,அதுமட்டுமல்ல " சலவைக்கல்லு சிலையாக தங்கப்பாளம் கையாக மலர்களிரண்டும் விழியாக " என்ற இடத்திலும் என்னே ஒரு இதமான குழைவு ! குறிப்பாக "அவள் யாரோ ...ஓ...ஓ " அந்த வரிகளை இறுதியிலும் பாடும் பாங்கு மிக அருமை!

1960 களில் தான் பாடிய பாடல்கள் குறித்து பின்னாளில் அவர் பின்வருமாறு கூறினார்.

"எனக்குப் பிடித்தது இதமான ,மிதமான ,இனிமையான இசை.அந்தமாதிரி இசை திரையில் அநாதரைக்கு ஒலித்தது என்னுடைய அதிஷ்ட்டம்.அப்படிப்பட்ட பாடல்களை பாடக்  கிடைத்த வாய்ப்பு என் பாக்கியம் "

அந்தக்காலத்து ஜேசுதாஸ் ஆன பி.பி.ஸ்ரீநிவாஸின் பேஸ் குரல் இனிமையை கச்சிதமாகப் பயன்டுத்தியது போல

" வெண்கலக் குரலோன் " சீர்காழி கோவிந்தராஜனையும் உயிர்ப்புமிக்க பாடல்களில் பயன்படுத்தினர்.


வெண்கலக்குரலின் அசரீரி:

தமிழ் சினிமாவில், ஒருகாலத்தில் பெரும்பாலும் கர்னாடக இசை நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் பாட முடியும் என்றொரு நிலை இருந்தது.கர்நாடக இசை தெரிந்தவர்கள் அல்லது அதில் கொஞ்சமாவது பரீட்சயமிருந்தவர்களே நன்றாகக் பரிமளிக்கவும்  முடிந்தது.அதன் பயிற்சிக்களனாக அன்றைய நாடக மேடை இருந்தது.பாட முடியாதவர்கள் கூட அதில் ஆர்வம் காட்டும் அளவுக்கு இசை  முக்கியமாகக் கருதப்பட்டது.தொழில்முறைப்பாடகர் என்ற வகையில் இல்லாவிட்டாலும் பாடும் ஆற்றலைக் கொண்டவர்களுக்கு உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.பாடும் ஆற்றல் மிக்கவர்கள் மீதான பிரமிப்பும் அதனால் தான் ஏற்பட்டது.நாடக மேடை மட்டுமல்ல, பின்னர் முறையான இசைப் பயிற்சியும் பெற்ற ஒரு இசைக்கலைஞனாக வளர்ந்தவர் தான் சீர்காழி கோவிந்தராஜன்.

1940 களின்  சினிமாவில் கர்னாடக இசை என்பது கர்நாடக இசைக்கலந்த மென் இசையாக [ Semi Classical ] இருந்ததென்பதே உண்மையாகும்.செவ்வியலிசை தெரிந்தவர்கள் அதை அற்புதமாகப் பாடினார்கள்.1940 களில் தொடங்கிய அந்த இசைப்பாணி  1950 களின் இறுதியிலும் தொடர்ந்தது. அந்தவகையில் கர்னாடக இசையில் விதிமுறைப்பயிற்சி பெற்ற சீர்காழி கோவிந்தராஜன் தனது வெண்கலக்குரலால் தனக்கென ஓர் தனியிடத்தைப் பிடித்துக்கொண்டார்.

செவ்வியல்  இசையிலும் சினிமா இசையிலும் சரிசமமாக தனது  திறமையைக் காண்பித்த முன்னோடிப்பாடகர்களில் ஒருவர்.இசையின் போக்கு மாறிய,வாய்ப்புகள் குறைந்த  ஒரு காலத்தில் மிக அருமையான  பக்திப்பாடல்களையும் ,இசை நிகழ்ச்சிகளையும் நடாத்தி தனக்கென தனியிடம் பிடித்த இணையற்ற பாடகர்.

1962 இல் ராமநாதன் இசையில் வெளிவந்த தெய்வத்தின் தெய்வம் படத்தில், திருமண நிகழ்வொன்றில் சீர்காழியின் இசை நிகழ்ச்சி நடைபெறும் காட்சி இடம்பெற்றுள்ளது.அப்படத்தின் டைட்டிலில் "இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் இசை நிகழ்ச்சி " என்று தனித்து காட்டப்பட்டிருப்பது அவரது குரலுக்கும் ,பாடும்  இனிமை ,ஈர்ப்புகளுக்குக் கிடைத்த தவிர்க்க முடியாத அங்கீகாரமாகும்.

தமிழ் இசைவெளியில் கலந்த குரல்களை பற்றி சிந்திக்கும் போது நாடகப்பண்பாடு சார்ந்தெழுந்த குரல்கள் நம் கவனத்துக்கு வருகின்றன.அவற்றை உற்று நோக்கி கவனித்ததில் அவை தமிழ் மண்ணுக்குரிய குரல்களோ [!] என்ற எண்ணம் மேலோங்குவதை தவிர்க்க முடியவில்லை.தமிழ் நாடக மரபின் வேர்களில் துளிர்த்து வளர்ந்த குரல்கள்அவை !

அந்த மரபின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க குரல்களாக எஸ்.ஜி.கிட்டப்பா,கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜபாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன் ,எஸ்.சி.கிருஷ்ணன்,டி.எம்.சௌந்தரராஜன் என்ற வரிசையை நாம் வந்தடைவோம்.

அப்படியான தமிழ் குரலுக்கு சொந்தக்காரர் தான் சீர்காழி கோவிந்தராஜன்.சிறுவனாக பாய்ஸ் கம்பனியில் நாடகப் பயிற்சி பெற்று ,மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கம்பனியில் வளர்ந்தவர்.தனது பாடும் ஆற்றலால் ஒரு காலத்தில் அந்த நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த ஜி.ராமனாதனால் பாராட்டு பெற்றவர்.முறையாக தமிழ் மொழியின் உச்சரிப்பு இவரது சிறப்பு.மணியோசையின் சுகம் இவரது குரல்.மங்கலமும் , வெண்கலமும் இணைந்த தனித்துவமிக்க குரல்! செவ்வியல் இசைக்கு ஏற்ற குரலும்,உயர்ந்த சுருதிகளில் அனாயசமாக பாய்ந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த  குரல்வளம் கொண்ட பாடகர்.

1952 ல் வெளிவந்த பொன்வயல் படத்தில்  "சிரிப்புத்தான் வருகுதைய்யா " என்ற பாடல் மூலம் அறிமுகமாகியவர்.அதைத்தொடர்ந்து 1952 களில்  புகழ் பெற்ற இசையமைப்பாளர்களிடமும் பல இனிமையான பாடல்களை பாடினார் .

குறிப்பாக,  கம்பீரமும்,அழகும், உயர்ந்த சுருதியிலும் ,அனாயாசமான சங்கதிகளை அள்ளி வீசி, இசையமைப்பில்  மரபு மாறாத இனிமையை வகை , வகையாக கொட்டிய ஜி.ராமநாதனின் இசையமைப்பில் பல அற்புதமான பாடல்களை செவ்வியலிசை சார்ந்தும்,நாட்டுப்புறம்  சார்ந்தும் சீர்காழி  கோவிந்தராஜன்  பாடினார்.

01   சரச மோகன சங்கீதாம்கிருத    - கோகிலவாணி 1955 - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன் 02   வானமீதில் நீந்தி ஓடும்  - கோமதியின் காதலன் 1956 - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன் 03   மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி  - கோமதியின் காதலன் 1956 - சீர்காழி + ஜிக்கி - இசை:ஜி.ராமநாதன் 04   அன்பே என் ஆரமுதே  வாராய்  - கோமதியின் காதலன் 1956 - சீர்காழி + ஜிக்கி - இசை:ஜி.ராமநாதன்

05   மாலையிலே மனா சாந்தி தந்து  - கோகிலவாணி 1955  - சீர்காழி  - இசை:ஜி.ராமநாதன்

06   பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் - சித்தூர் ராணி பத்மினி - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

07   ஓகோ..நிலாராணி  - சித்தூர் ராணி பத்மினி - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

08   எல்லையில்லாத இன்பத்தில்  - சக்கரவர்த்தித்த திருமகள் - சீர்காழி + பி.லீலா - இசை:ஜி.ராமநாதன்

09   திருவே என் தேவியே வாராய்  - கோகிலவாணி  - சீர்காழி+ ஜிக்கி  - இசை:ஜி.ராமநாதன்

10   வனமேவும் ராஜ குமாரி  -ராஜா தேசிங்கு   - சீர்காழி+ ஜிக்கி  - இசை:ஜி.ராமநாதன்

11   மலையே உன் நிலையை நீ பாராய்  - வணங்காமுடி - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

12   காதலெனும் சோலையிலே ராதே ராதே   - சக்கரவர்த்தித்த திருமகள்  - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

13   அன்பொளி வீசி உயிர் வரித்தாடும்    - கோகிலவாணி   - சீர்காழி - இசை:ஜி.ராமநாதன்

14   அழகோடையில் நீந்தும் இள அன்னம்     - கோகிலவாணி   - சீர்காழி + ஜிக்கி  - இசை:ஜி.ராமநாதன்.

இது போன்ற பல இனிய பாடல்களை பிற இசையமைப்பாளர்களிடமும் பாடியிருக்கிறார் எனினும் கே.வி.மகாதேவன் இவரை மிக அருமையாக பாட வைத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர்.

கே.வி மகாதேவன் மற்றும் பிற இசையமைப்பாளர்களின் இசையில் சீர்காழி பாடிய பாடல்கள்:

01   அமுதும் தேனும் எதற்கு   - தை பிறந்தால் வழி பிறக்கும்    - சீர்காழி - இசை:கே.வி மகாதேவன்

02   எங்கிருந்தோ வந்தான்   - படிக்காத மேதை    - சீர்காழி - இசை:கே.வி மகாதேவன்

03  அன்னையின் அருளே வா வா    - ஆடிப்பெருக்கு    - சீர்காழி - இசை:ஏ.எம்.ராஜா

04   சமரசம் உலாவும் இடமே    - ரம்பையின் காதல்    - சீர்காழி - இசை:டி.ஆர்.பாப்பா

05   விழி வாசல் அழகான மணி மண்டபம்   - பெண் குளத்தின் பொன் விளக்கு  1956 - சீர்காழி + சுசீலா    - இசை:மாஸ்டர் வேணு 06   என்னை விட்டு ஓடிப்போக முடியுமா   - குமுதம்  1959 - சீர்காழி + சுசீலா    - இசை:கே.வி.மகாதேவன்

இவை போன்ற பல புகழபெற்ற பாடல்களை சீர்காழியார் பாடினாலும் மெல்லிசைமன்னர்களின் இசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ,தனித்துமிக்க பாடல்களையும் பாடினார்.அவரது குரலின் ரீங்காரம் , அதிர்வு போன்றவற்றை சரியாக கணித்து அளந்தது போல பாடல்களை இசையமைத்து தமது ஆற்றலையும் சீர்காழியின்  குர லின் ஆற்றலையும் வெளிப்படுத்தினார்கள்.

மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலின் முக்கிய ஒரு அம்சமாக விளங்குவது வெவ்வேறு விதமான குரல்களுக்கேற்ப,அவர்களின் குரல்,பாடும் தன்மையறிந்து இசையமைப்பது என்பதாகும்.  எந்தவிதமான குரல்களாக இருந்தாலும் அந்தந்தக் குரல்களுக்கேற்ப மெட்டமைப்பதும் அதற்கு தனித்துவமான அடையாளங்களைக் கொடுப்பதுமாகும்.

செவ்வியல் இசை சார்ந்து பாடுகின்ற முறை மறைந்து மெல்லிசை வளர்ந்த காலத்தில் செவ்வியல் இசையில் பட்டொளி வீசும் குரல்களுக்கு மௌசு குறைய ஆரம்பித்தது.அது மட்டுமல்ல கதாநாயகர்களுக்கு சில பாடகர்கள் தான் பாட முடியும் என்ற நிலையும் சில பாடகர்களுக்கான வாய்ப்புகளைக் குறைத்து விட்டிருந்தது.

இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்ற  போலியான ஒரு வீண்  கோதாவில் பலியாக்கப்பட்ட பாடகர்கள் பலர்.இந்த நிலைமை மெல்லிசைமன்னர்கள் உச்சத்திலிருந்த காலத்திலேயே நிலைபெற்றது.அதற்கு அவர்களும் முக்கிய காரணமாயின என்றே சொல்ல வேண்டும்.

நாடகத்தன்மையற்ற ஹிந்தி திரை இசையை பின்பற்றிய மெல்லிசைமன்னர்கள் சிவாஜியின் மிகை நடிப்புக்கு ஏற்ப அபிநயிக்கும் ஒரு நாடக பாணி இசையை சிவாஜிக்காக உருவாக்கினார்கள் என்பதும் ,அது எழுபதுகள் வரை சென்று சகிக்கமுடியாத நிலைக்கு  வந்ததும்  தமிழ் சினிமாவின் வரலாற்றுள் அடங்குவதே !

பாடி நடிக்கும் மரபு மறைந்து போனதும் ,பாடத் தெரியாத நடிகர்களுக்கு சிலர் பின்னணி பாடுகிறார்கள் என்ற "பரம ரகசியம்"   ஊர் அறிந்த உண்மையாக இருந்ததும் ,அதை சினிமா வட்டாரம் போலியாக பின்றியதும் வேடிக்கையாகும்.

இதில் பலியாக்கப்பட்ட முக்கியமானவர்களில்  திருச்சி லோகநாதன்,ஏ.எம்.ராஜா ,சி.எஸ்.ஜெயராமன் போன்ற முக்கியமான பாடகர்களை கூறலாம்.ஆயினும் அதில் ஓரளவு தப்பித்தவர் சீர்காழி கோவிந்தராஜன் என்று கூறினாலும் அவரையும் ஓரமாகவே வைத்துக்கொண்டனர்.

"இன்னாருக்கு இன்னார் தான் பாட முடியும்" என்ற ஒரு போலியான முறையை நடிகர்களும் .தயாரிப்பாளர்களும் சப்பை காட்டு கட்டிய காலத்தில் ஆணா, பெண்ணா என்று சந்தேகம் கொள்ளும் குரலுக்கு சொந்தக்காரரான அன்றைய   எஸ்.பி.பாலசுப்ரமணியம் எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுக்கு பாட வைத்தது மிகப்பெரிய கோமாளித்தனமாகும்.

சுமதி என் சுந்தரி படத்தில் " பொட்டு வைத்த முகமோ " என்ற பாடலுக்கு சிவாஜியின் ஒப்புதல் கேட்ட போது யார் பாடினாலும் அதற்கேற்ப நான் நடிப்பேன் என்றாராம்.எஸ்.பி.பி. இயற்கை என்னும் ஆயிரம் நிலவே வா. இளைய கன்னி , ஆயிரம் நிலவே வா, வெற்றி மீது வெற்றி வந்து   போன்ற பாடல்களை முறையே அன்றைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர் ,ஜெமினி போன்றவர்களுக்கு பாட வைக்கப்பட்டார் என்பது.நடிகர்களைத் தாண்டி அப்பாடல்கள் ரசிகர்கள் ரசித்தார்கள் என்பதும் அவை வெற்றி பெற்றன என்பதும் நாம் அறிந்ததே! ஆக இந்த  " இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் " வாதத்தில் எந்தவித தர்க்க நியாயமுமில்லை என்பது வெளிப்படை! தங்களுக்கு பிடித்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கினார்கள் என்பதும் , ரசிகர்களுக்கு யார் பாடுகிறார் என்ற அதியுன்னதமான கருத்துக்கள் இருக்கவில்லை என்பதும் எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ஜெமினிக்கு பல்வேறு பாடகர்கள் பாடிய பாடல்களும் வெற்றி பெற்று புகழடைந்தன என்பதையும் நாம் காண்கிறோம்.அவர்களுக்கு நடிகர்களே முக்கியம்.குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இசையமைப்பாளர்கள் கூட முக்கியமில்லை.

சினிமா இசையை விட்டால் பெரும்பாலான இசைரசிகர்களுக்கு வேறு கதியில்லை என்று இருந்த ஒரு காலத்தில் சினிமாவில் என்ன பாடினாலும் ரசிக்கும் மனநிலை இருந்தது.இன்னாருக்கு இன்னார் என்ற கோதாவில் இசையமைப்பாளர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய நியாயமான புகழ் எல்லாவற்றையும் சினிமா நடிகர்களுக்குத் தாரை வார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது மகா விஸ்வரூபம் எடுத்து நின்ற சினிமா என்ற காலை வடிவத்தின் வினோதமான  இன்னொரு முகமாகும்.

எம்.ஜி.ஆர் ,சிவாஜி போன்ற நடிகர்களுக்கு ஏலவே மிக அருமையான பாடல்களை பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.

சிவாஜிக்காக அவர் பல புகழபெற்ற பாடல்களை பாடினார்.

01   மலையே உன் நிலையை நீ பாராய் - படம்: வணங்காமுடி 1957 - இசை: ஜி.ராமநாதன்

02   பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்  - படம்: சித்தூரராணி பத்மினி  1957 - இசை: ஜி.ராமநாதன்

03   ஓகோ..நிலாராணி   - படம்: சித்தூரராணி பத்மினி  1957 - இசை: ஜி.ராமநாதன்.

எம்.ஜி.ஆருக்காகவும்  அவர் பல புகழபெற்ற பாடல்களை பாடினார்.

01   ஒன்றல்ல இரண்டல்ல தம்பி  - படம்: தாய் மகளுக்கு கட்டிய தாலி  1956 - இசை: டி.ஆர்.பாப்பா

02   ஆடி வரும் ஆடகர் பொற் பாவையடி நீ    - படம்: தாய் மகளுக்கு கட்டிய தாலி  1956 - இசை:  டி.ஆர்.பாப்பா

03   உழைப்பதிலா உழைப்பைப்  பெறுவதிலா   - படம்: நாடோடிமன்னன் 1959 - இசை: ஜி.ராமநாதன்

04   சிரிக்கிறாள் இன்று    - படம்: நல்லவன் வாழ்வான்  1960 - இசை: டி.ஆர்.பாப்பா

05   ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்     - படம்: நல்லவன் வாழ்வான்  1960 - இசை: டி.ஆர்.பாப்பா

இது போன்ற பல  பாடல்களைப் பாடினார்.அப்போது இந்த இரண்டு நடிகர்களின் புகழுக்கு எந்த விதமான களங்கமும் நடக்கவில்லை.ரசிகர்களும் அவர்களது படங்களை வெற்றியடையவே வைத்தனர்.

குங்குமம் படத்தில் "சின்னஞ் சிறிய வண்ணப்பறவை " என்ற செவ்வியலிசையில் அமைக்கப்பட்ட பாடலை கே.வி.மகாதேவன் அருமையான சங்கதிகளை போட்டு இசையமைத்து கோவிந்தராஜனையும் பாடவைத்தார்.

"அவரும் மிக  அருமையாகப் பாடியிருந்தார்” என டி.எம் சௌந்தர்ராஜன் பின்னாளில்  கூறியிருந்தார்.பின்னர் சிவாஜி தலையிலிட்டு “எனக்கு டி.எம்.எஸ் பாடினால்தான்   நன்றாக இருக்கும்”  எனக் கூறியதால் டி.எம்.எஸ். அதை மறுத்த நிலையிலும் பாட வைக்கப்பட்டார். தனக்கு  யார் பின்னணி  பாடினாலும் அதற்கேற்ப  நடிக்கும் வல்லமை எனக்குண்டு என்று வழமையாகக் கூறும் சிவாஜி ,தனது  நடிப்பை விட   பாடலில் நம்பிக்கை வைத்தது இசையின் வ்லிமையன்றி வேறென்ன? டி.எம்.எஸ். தான் பாட வேண்டும் என்ற சிவாஜி  பின்னாளில் பெண்மை நிரம்பிய குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பி யின் குரலுக்கு அபிநயித்தது மிகவும் வேடிக்கையானது.

இது குறித்து சீர்காழியார் சிவாஜியிடம் " அண்ணே ..மத்தவங்களுக்கு சாப்பாடு போடுங்க , ஆனால் எச்சில் இலையில் போடாதீங்க " என்று சூடு வைத்ததும் வரலாறு.

சினிமா நடிகர்கள் தங்களது செல்வாக்கை வைத்து மற்றவர்களை மட்டம் தட்டுவது ஒரு புறம் என்றால் ,அந்த நடிகர்களுக்கு பின்னால் தொங்கும் ஜால்றா கும்பல்,,அவர்கள் ஒத்துக் கொண்டாலும் ,அவர்களுக்குப் "பின்பாட்டு பாடுவதன் வதன் மூலம்  அவர்களையும் சும்மா இருக்க விடுவதில்லை என்பதை  சிவாஜி பற்றி தனது கருத்தைக் கூறிய சந்திரபாபுவும் பதிவு செய்திருக்கின்றார்.இன்று வரையும் சிவாஜி ,எம்.ஜி.ஆர் க்காகவே பாடல்களை ரசிக்கும் ஜால்றா கும்பல்கள் இருந்து கொண்டேதான்  இருக்கிறது. அதிலும் தம்மை “அறிவுஜீவிகள் ", "முற்போக்குவாதிகள் "என்று சொல்லிக் கொள்ளும் கலை,இலக்கியத்  துறையிலிருக்கும் சிலரிடமும் இந்த கோமாளித்தனம் இருப்பதே அதிக நகைசுவை ஆகும். சிவாஜிக்காகவே மெல்லிசைமன்னர் விஸ்வநாதனை ரசிக்கும் பாமரத்தனமிக்க ரசிகர்கள் சிலர் இப்போதும் உண்டு.

தமிழ் இசை மரபின் தனித்த கூறு கொண்ட குரலுக்குச் சொந்தக்காரரான சீர்காழி கோவிந்தராஜனின்   இனிய குரலை எப்படி பயன்டுத்துவது என்ற வகையில் மரபின் ரசமும் ,புதுமையின் பரிமாணமும் அறிந்த மெல்லிசைமன்னர்கள் ஏதோ ஒருவகையில் தொடர்ச்சியாக பயன்படுத்தியே வந்துள்ளனர். மெல்லிசைமன்னர்கள் பிரிந்த போதும் ,விஸ்வநாதன்,ராமமூர்த்தி  தனித்து,தனித்து  இசையமைத்த போதும் சீர்காழியாரை தொடர்ந்து தங்கள்  இசையில் பாட வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மெல்லிசைமன்னர்களின் இசையில் சீர்காழியார் பாடிய சில பாடல்கள்.

01 கலைமங்கை உருவம் கண்டு   - மகனே கேள் - சீர்காழி + எம்.எல்.வசந்தகுமாரி  - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

02  ஓடம் நதியினிலே    - காத்திருந்த கண்கள்      - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

03  மழை கொடுக்கும் கொடையும்    -  கர்ணன்  - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

04  உள்ளத்தில் நல்ல உள்ளம்    - கர்ணன்   - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

05  மரணத்தை எண்ணி கலங்கும்     - கர்ணன்   - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

06  ஆறோடும்  மண்ணில் எங்கும்    - பழனி       - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

07  எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்- கறுப்புப்பணம் -சீர்காழி+எல்.ஆர்.ஈஸ்வரி-இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

08  கண்ணான கண்ணனுக்கு  - ஆலயமணி - சீர்காழி + பி.சுசீலா -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

09  தங்கச்சி சின்ன பொண்ணு  - கறுப்புப்பணம்- - சீர்காழி + பி.சுசீலா -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

10  தேவன் கோயில் மணியோசை   - மணியோசை  - சீர்காழி  -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

11  சிங்காரத் தேருக்கு சேலை கட்டி - இது சத்தியம்  - சீர்காழி+எல்.ஆர்.ஈஸ்வரி-இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

12  வெண்பளிங்கு மேடை கட்டி  - பூஜைக்கு வந்த மலர்   - சீர்காழி+எல்.ஆர்.ஈஸ்வரி-இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

13  கண்ணிலே நீர் எதற்கு  - போலீஸ்காரன் மக்கள்  - சீர்காழி+எஸ்.ஜானகி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

14  பணமிருந்தால் போதுமடா  -  நம்ம வீட்டு லட்சுமி   -  சீர்காழி -இசை:விஸ்வநாதன்

*** ஓடம் நதியினிலே    - காத்திருந்த கண்கள்      - சீர்காழி   - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

ஒரு தலைக்காதலின் தத்தளிப்பை தண்ணீரில் மிதக்கும் ஓடத்தின் தளும்பலுக்கு ஒப்புவமையாக சொல்வது போல அமைக்கப்பட்ட பாடல்.முற்றுமுழுதாக பாடகரின் குரலை நம்பி அல்லது அவரின் குரலுக்கு ஏற்ப இசைமைக்கப்பட்ட பாடல்! அதனுடன் குழலையும் இணைத்து இசையின் கற்பனை எல்லைகளை இசையமைப்பாளர்கள் தொட்டுவிடுகின்றனர்.இந்தப் பாடலை வேறு ஒரு பாடகர் கற்பனையே செய்ய முடியாது.

"மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் "

படத்தில் வெவ்வேறு நிலைகளில் பாடப்படுகின்ற இந்தப்பாடல் ,ஒலித்தட்டில் சீர்காழியாரின் பாடலுடன் தான் ஆரம்பிக்கிறது.பத்து செக்கன்கள் மட்டுமே  ஒலிக்கும் அவரின் அந்த ஹிந்தோள ராக ஆலாபனையின் எத்தனை அதிர்வு ,எத்தனை குழைவு ! உயிர் ததும்பும் அந்த ஹமிம்மிங்கின் அசரீரியில் பாடல் ஓடக்கம் அமைக்கப்பட்டு ரசிகர்களை மெய்மறக்க வைக்கின்றார்கள் மெல்லிசை மன்னர்கள்! அதன் மூலம் மற்ற பாடகர்களின் பாடலையும் ரசிக்க வைக்க வைக்கும் உத்தியாக அமைத்துள்ளனர்.இது போல உயிரின் இன்னிசையை வேறு பாடல்களில் நாம் கேட்கவில்லை என்று சொல்லி விடலாம் என்பது மட்டுமல்ல வேறு எந்த பாடகரையும் நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாத சிறப்பையும் செய்து விடுகின்றனர்.

பல படங்களில் கதாநாயகர்களுக்கு பாட வைக்க முடியாவிட்டாலும் திரையில் பின்னணியாக ,அல்லது அசரீரியாக ஒலிக்கும் பாடல்களில் சீர்காழியாரை மிக அற்புதமாகப் பயன்படுத்தினர்.தங்களுடன் பயணித்த ஒரு அற்புதமான கலைஞரை அவரது திறமையறிந்து தம்மால் முடிந்த வாய்ப்புக்களை மெல்லிசைமன்னர்கள் கொடுத்தார்கள்.

திரைக்கதைகளுக்கு ஏற்ப சில அசரீரிப் பாடல்களை மெல்லிசைமன்னர்கள் இவரின் குரலுக்கு ஏற்ற வகையிலேயே உருவாக்கினார்கள் என்பது அவர்களின் படைப்பாற்றலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

15  ஒற்றுமையாய் வாழ்வதால்  - பாகப்பிரிவினை    -  சீர்காழி + எல்.ஆர்.ஈஸ்வரி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

16  தேவன் கோயில் மணியோசை  - மணியோசை  -சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

17  வேங்கைக்கு குறி வைத்து   -  பாசம்  -சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

18  காற்றடிக்கும் திசையினிலே    -  திக்குத் தெரியாத காட்டில்   -சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

19  நித்தம் நித்தம் மாறுகின்ற - பந்தபாசம்   -  சீர்காழி -இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி.

20  நல்ல மனைவி நல்ல பிள்ளை  - நம்ம வீட்டு லட்சுமி   -  சீர்காழி -இசை:விஸ்வநாதன்

21  கண்களால்   பேசுதம்மா      -  தெய்வமகன்      -  சீர்காழி  - இசை:விஸ்வநாதன்

22  மேகங்கள் இருந்து   வந்தால்  -  நான் ஆணையிட்டால்    -  சீர்காழி + சுசீலா  - இசை:விஸ்வநாதன்

உதாரணமாக திரையில் டைட்டில் , நகைச்சுவை ,நாடகப்பாடல் ,நாட்டியபாடல் என பலவகையில் பலபாடல்களில் பயன்படுத்தினார் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.

23  கண்ணன்  வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்   -  ராமு   -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன்

24  குற்றால மலையிலே     -  உயிரா மானமா     -  சீர்காழி + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை:விஸ்வநாதன்

25  கண்ணன்  வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்   -  ராமு   -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன்

டைட்டில் ப்பாடல்  , நகைச்சுவைப்பாடல் ,நாடகப்பாடல் ,நாட்டியபாடல் என்ற வகையில் சில பாடல்கள் : நகைச்சுவைப்பாடலாக:

26  காதலிக்க நேரமில்லை    -  காதலிக்க நேரமில்லை   -  சீர்காழி  - இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி 27  காசிக்கு போகும் சந்நியாசி         -  ராமு   -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன் -இசை:விஸ்வநாதன்

நாடகப்பாடலாக :

28  சங்கே முழங்கு   - சங்கே முழங்கு      -  சீர்காழி + குழு  - இசை:விஸ்வநாதன் 29  புதியதோர் உலகம் செய்வோம்    -  சந்திரோதயம்    -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன்.

டைட்டில்பாடலாக :

30  வெற்றியை நாளை சரித்திரம்     -  உலகம் சுற்றும் வாலிபன்    -  சீர்காழி  - இசை:விஸ்வநாதன் 31  நீங்கநல்லாயிருக்கணும்     -  இதயக்கனி     -  சீர்காழி + TMS - இசை:விஸ்வநாதன்

இதுபோன்ற பாடல்கள் மூலமும் சீர்காழி கோவிந்தராஜனை பயன்படுத்தினர்

பாடல் வகைகள் என்ற ரீதியில் பல்வேறு நிலைகளில் சின்ன , சின்ன பாடல்களிலும் கவனம் செலுத்தினார்கள் என்பதை தொடர்ச்சியாக மெல்லிசைமன்னர்களின் இசையில் கேட்கிறோம்.சின்ன ,சின்ன பாடல்களிலும்  மிக அருமையான பாட்டின்பங்களைத் தந்திருக்கிறார்கள்.


தொகையறாவும்  சிறிய பாடல்களும்.

மரபிசையின் தொடர்ச்சி நாடகத்தினூடாக வளர்ந்ததெனினும்,தமிழ் சினிமாவில் அதன் தொடர்ச்சியாயும், பிரதிநிதிகளாயும்   ஜி.ராமநாதன் , எஸ்.எம்.சுப்பையாநாயுடு , சி.ஆர்.சுப்பராமன் ,எஸ்.வி.வெங்கடராமன் போன்ற முன்னோடி இசையமைப்பாளர்கள்  இருந்தார்கள்.அவர்களின் தொடர்ச்சியாகவும்,புதுமையாகவும், அமைந்த மெல்லிசைமன்னர்களின் இசை,கதைப்போக்கின் நிகழ்வுகளை தெளிவாக்குவதும்,இசைரசனையை ,அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாய் அமைந்தது.

அந்தக்காலங்களில் கதைப்போக்கின் சில முக்கிய அம்சங்களை  சின்ன ,சின்ன பாடல்கள் மூலம் விளக்கும்  யுத்தியை கைக்கொண்டனர். அதற்கு விருத்தம் ,தொகையறா போன்றவை சிறந்த முறையில்  பயன்படுத்தப்பட்டன

ஜி.ராமநாதன் இசையமைத்த அம்பிகாபதி  போன்ற படங்களில் இவற்றை அதிகமாக கேட்க முடியும்.

கவியரசர் கம்பனின் மகனான அம்பிகாபதி பற்றிய கதை என்பதால் அப்படத்தில் பல தொகையறாக்கள் கம்பன் ,ஒட்டக்கூத்தன்,அம்பிகாபதி பாடுவதாக அமைந்துள்ளன. அரச சபையில் இக்கவிஞர்கள் மூவரும் மாறி ,மாறிப் பாடுவதாக அமைந்த காட்சிகளில் செவ்வியல் ராகங்களில் அமைந்த அருமையான மெட்டுக்களில் இவற்றை நாம் கேட்கலாம்.கம்பருக்காக வி.என்.சுந்தரமும், ஒட்டக்கூத்தருக்காக சீர்காழி கோவிந்தராஜனும் ,அம்பிகாபதிக்காக டி.எம்.சௌந்தர்ராஜனும் அப்பாடல்களை பாடியிருக்கின்றனர்.

01  சோறு மணக்கும்   சோநாடா  - அம்பிகாபதி 1957  - வி.என்.சுந்தரம் - இசை :ஜி.ராமநாதன்

02  வெல்க நின் கோட்டம் மன்னா   - அம்பிகாபதி 1957  - சீர்காழி கோவிந்தராஜன்- இசை :ஜி.ராமநாதன்

03  வரும் பகைவர் படை கண்டு   - அம்பிகாபதி 1957  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

இதுமட்டுமல்ல ,படத்தில் அம்பிகாபதி தன்னெழுச்சியாக கவிதை பாடும் இடங்களிலெல்லாம்  இது போன்ற பல பாடல்கள் இடம்  பெற்றுள்ளன.

04  இட்ட அடி நோக்க எடுத்த அடி   - அம்பிகாபதி 1957  - வி.என்.சுந்தரம் - இசை :ஜி.ராமநாதன்

05  அம்புலியைக் குழம்பாக்கி    - அம்பிகாபதி 1957  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

06  ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்   - அம்பிகாபதி 1957  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

07  சற்றே சரிந்த குழலே துவள   - அம்பிகாபதி 1957  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்.

தொகையறா தனியே பாடப்படாமல் பாடல்களுக்கு முன்பாக அமைந்த புகழ் பெற்ற பாடல்கள் சில .

01 கண்டால் கொல்லும் விஷமாம்

கட்டழகு மங்கையரை-நான்

கொண்டாடித் திரியாமல்

குருடாவ தெக்காலம்?

பாடல் : பெண்களை நம்பாதே - தூக்குத் தூக்கி   1955  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

02  உபகாரம் செய்தவர்க்கே

அபகாரம் செய்ய எண்ணும்

முழு மோசக்காரன் தானே

முடிவில் நாசமாவான்

பாடல் : அன்னம் இட்ட வீட்டிலே -  மந்திரிகுமாரி  1950  - டி.எம் சௌந்தரராஜன்  - இசை :ஜி.ராமநாதன்

03  பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்

பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்

பாடல் : அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை-  அன்னையின் ஆணை 1958  - டி.எம் சௌந்தரராஜன்

எஸ்.எம்.சுப்பையாநாயுடு

இது போன்ற இன்னும் பல பாடல்களை எடுத்துக்காட்டாக நாம் கூறலாம்.

பாடலுக்கு முன்பாக மட்டுமல்ல பாடல்களுக்கு நடுவிலும் மிக அருமையாக தொகையறாவை , ஹம்மிங்கை புதிய பாங்கில் வைத்து ஜாலம் காட்டினார்கள். அதிலும் மெல்லிசைமன்னர்கள் முன்னோடிகளாகவே இருந்தனர்.

01 மின்னலால் வகிடெடுத்து

மேகமாய் தலை முடித்து

பாடல் : பாட்டுக்கு பாட்டெடுத்து - படம்: படகோட்டி   1964 - டி.எம் சௌந்தரராஜன்- இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

02 ஆரிரோ ஆரி

ஆரிரோ ஆரிரோ

பாடல் : வீடுவரை உறவு - படம்: பாதகாணிக்கை   1962 - டி.எம் சௌந்தரராஜன்- இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03 ஆரி ஆரிரோ ஆராரிரோ

ஆரி ராரோ ஆராரிராரோ

பாடல் : மாணிக்கத்தொட்டில்   - படம்: பணம் படைத்தவன்   1963 - டி.எம் எஸ்.+சுசீலா எல்.ஆர்.ஈஸ்வரி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல்கள் என்பது  தவிர்க்க முடியாது என்பதற்கப்பால் திரைக்கதையின் உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துகிற பல்வேறு நிலைகளூடாக ,ஆங்காங்கே சின்னச்,சின்ன பாடல்களிலும் திரையில் பின்னணி இசைக்கு பதிலாக ,பார்வையாளர்களின் உணர்வாகவும்,பல சமயங்களில் இயக்குனரின் கருத்தாகவும்  வெளிப்படும் வண்ணம் அருமையான பாடல்களை மெல்லிசைமன்னர்கள்  தந்துள்ளார்கள் என்பதும் நமது கவனத்திற்குரியது.

அக்காலத்தில் சின்ன,சின்ன பாடல்களை படத்தின் அவசியம் கருதி வைப்பதும் ஒரு பழக்கமாகவே இருந்தது.படத்தின் மையக் கருத்தை அது இன்பமானாலும் ,துன்பமானாலும் இறுதிக்காட்ச்சியில் வசனமாகவோ ,பாடலாகவோ வெளிப்படுத்துவதுமுண்டு.

இறுதிக்காட்சிகெனவே தனியே இசையமைக்கப்பட்ட சிறிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.அந்தவகையில் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் படத்தில் " கடமையிலே உயிர் வாழ்ந்து கண்ணியமே கொள்கையென மடிந்த வீரா "   என்ற பாடலும், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் " வீரத்தின் சின்னமே விடுதலைப் போருக்கு வித்தாக உருவெடுத்தாய் " என்ற இரு பாடலையும் கூறலாம்.

வேறு சில படங்களின் இறுதிக்காட்சியில்  ஏற்கனவே அந்தப்படங்களில் உள்ள பாடல்களின் சில பகுதிகள் மட்டும் ஒலிக்கும்.

படத்தின் இறுதியில் மட்டுமல்ல இடையிலும் குறிப்பாக சில விஷயங்களை தனித்துவமாகக் காண்பிக்கும்  காட்சிகளில் சின்ன சின்ன பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன.அதிலும் மெல்லிசைமன்னர்கள் மிகக்கவனம் செலுத்தி நல்ல பாடல்களை தந்திருக்கின்றனர்.

திரையில் அங்கங்கே ஒலிக்கும் சிறிய  பாடல்கள் பெரும்பாலும் இசைத்தட்டில்  வருவதில்லை.அதனால் வானொலிகளுக்களிலும் இவற்றைக் கேட்க முடியாது. அவற்றை  படத்தில் மட்டுமே கேட்கமுடியும்.ஆனாலும் இது போன்ற பாடல்கள் இசையைத் துருவித் துருவி  ரசிக்கும் ரசிகர்களுக்கு பெரிதும் விருந்தளிப்பவை.

அதே போலவே வெளிவந்து புகழ்பெற்ற சில பாடல்கள் இசைத்தட்டில் ஒருவிதமாகவும் ,திரைப்படத்தில் வேறு விதமாகவும் தணிக்கைக்குழுவின் கெடுபிடிகளால் மாற்றப்பட்டதும் உண்டு.

குறிப்பாக வெளியில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் திரையில் சிறிய வடிவில் மாற்றப்படுவதும் ,வெவ்வேறு   வடிவங்களில் அவற்றை மாற்றுவதும் [Musical Variations], புதிய குரலில் பாட வைப்பதும், இனிய வாத்தியங்களை இணைத்தும், புதிய திருப்பங்களைத்  தந்து  ரசனையைத் தூண்டுவதும் மெல்லிசைமன்னர்களின் தனிச் சிறப்பாகும்.இது போன்ற பாடல்கள் மூலம் இசையின் பல பரிமாணங்களை தெளிவாக காட்டிய முன்னோடிகள் என்று துணிந்து கூறலாம். வசனங்களை விட இசை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனபதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

1950 களின் ஒரு போக்காக அமைந்த தொகையறா பயன்பாட்டைத் தமது இசையிலும் மெல்லிசைமன்னர்கள் வைக்க வேண்டிய காலமாக அவர்களது ஆரம்பகாலம் இருந்தது.அதுமட்டுமல்ல அந்த மரபின் தொடர்ச்சியை அவரது பிந்தைய காலப் பாடல்களிலும் நாம் கேட்கலாம்.

அந்தவகையில் மெல்லிசைமன்னர்கள் அமைத்த சில பாடல்கள்:

தொகையறாவில் மட்டும்  அமைந்த சிறிய பாடல்கள்

01  மலரோடு விஷ நாகம் பிறப்பதால்    - பாசவலை 1956 - பாடியவர்: பி.பி.ஸ்ரீனிவாஸ்    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

02  யாருக்குத் தீங்கு செய்தேன் நான்     - பாசவலை 1956 - பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்     - இசை : விஸ்வநாதன். ராமமூர்த்தி

03  வானம் பொய்யாது   - தங்கப்பதுமை 1959  - பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

04  விதி எனும் குழந்தை கையில்    - தங்கப்பதுமை 1959  - பாடியவர்: சீர்காழி    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

05  பூமாலை போட்டு  போன      - தங்கப்பதுமை 1950 - பாடியவர்:எஸ்.சி.கிருஷ்ணன் + ரத்னமாலா    - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

06  தங்கமணி பைங்கிளியும் தாயகத்து நாயகனும் மங்கலத்தில் ஒன்றுபட்டார் கையேடு

- படம் - சிவந்த மண் 1969  - சீர்காழி- இசை: எம்.எஸ் விஸ்வநாதன்.

07 நித்திரையில் வந்து நெஞ்சில் – ராமு 1966 - பி.சுசீலா - இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

பொதுவாக பழைய மரபில்  செவ்வியலிசையில் கனதி ராகங்களில் வருகின்ற தொகையறாவை தமது மெல்லிசைக்கு இசைவாக மாற்றியும், மாறாததும் போல,கனிந்த படிநிலையை மெல்லிசைமன்னர்கள் உருவாக்கிக் காட்டினார்கள்.

தொகையறாக்களைக் கொண்ட புகழ் பெற்ற  பாடல்கள்:

01  பதறி சிவந்ததே நெஞ்சம் ...

பாடல் : கண்கள் இரண்டும் என்றும் உன்னைக்கண்டு  - படம் - மன்னாதிமன்னன் 1960 - பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  பாலும் பழமும் என ஒன்றாக சேர்த்தாயே  ...

பாடல் : இந்த நாடகம் அந்த மேடையில்   - படம் - பாலும் பழமும் 1961- பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  சத்தியம் சிவம் சுந்தரம்

சரவணன் திருப்புகழ் மந்திரம்

பாடல் : அழகன் முருகனிடம்    - படம் - பஞ்சவர்ணக்கிளி 1965 - பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  ஒன்றையே நினைத்திருந்து

ஊருக்கு வாழ்ந்திருந்து

பாடல் : ஒருவர் வாழும் ஆலயம்     - படம் - நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  காலம் பல கடந்து

அன்னை முகம் கண்டேனே

பாடல் : சிலர் சிரிப்பார்  - படம் - பாவமன்னிப்பு 1961  - டி.எம்.எஸ்   - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

06  மந்தரையின் போதனையால்

மனம் மாறி கைகேயி மஞ்சள் குங்குமம் இழந்தாள்

பாடல் : ஒற்றுமையாய் வாழ்வதால் - படம் - பாகப்பிரிவினை 1959  - சீர்காழி  + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  தங்கை உயிர் எண்ணி

தன்னுயிரை வைத்திருந்தான்

பாடல் : மலர்களை போல் தங்கை  - படம் - பாசமலர் 1961  - டி.எம்.எஸ்    - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

08  வானகமே வையகமே

வளர்ந்து வரும் தாயினமே

பாடல் : மலருக்குத் தென்றல் பகையானால்    - படம் - எங்க வீட்டு பிள்ளை 1965  - சுசீலா _ ஈஸ்வரி     - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

09  ஆடிய ஆட்டம் என்ன...

பாடல் : வீடு வரை உறவு   - படம் - பாதகாணிக்கை  1962 -  டி.எம் சௌந்தரராஜன் - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

10  இறைவா உன் மாளிகையில் ...

பாடல் : ஆண்டவனே உன் பாதங்களை - படம் - ஒளிவிளக்கு 1968  - பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

11  பால் போலவே வான் மீதிலே

யார் காணவே நீ காய்கிறாய்

பாடல் : நாளை இந்த வேலை பார்த்து  - படம் - உயர்ந்தமனிதன் 1968 -பி. சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

12  ஓடி வந்து மீட்பதற்கு  ...

பாடல் : மேகங்கள் திரண்டு வந்தால்  - படம் - நான் ஆணையிட்டால் 1966  -சீர்காழி +பி.சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

13  தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்  ...

பாடல் : நீங்க நல்லாயிருக்கணும்    - படம் - இதயக்கனி 1973 - சீர்காழி- இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

வானொலிகளிலும் ,இசைத்தட்டுக்களிலும் முழுமையாகக் கேட்ட சில பாடல்கள் புதிய வரிகளைத் தாங்கி சிறிய பாடல்களாக்கப்பட்டு ,வேறு ஒரு பாடக/ பாடகிகள் குரலிலும் பயன்படுத்தப்பட்டு வருவதை திரைப்படம் பார்க்கும் போது மட்டும் கேட்கின்றோம்.அவற்றுள் சில படத்தின் டைட்டில் பாடலாகவும், சில படத்தின் முடிவுக்காட்சிகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அதில் சில பாடல்கள் ,ஒரு சிறிய பாடலாக இல்லாமல் , முழுமையான வடிவில் ஒரு தனிப்பாடல் ஒலிக்கும் நேர அளவிலும் அமைந்திருக்கும்.

01  பார் மகளே பார் பரந்த உலகினைப்பார் - பார் மகளே பார் 1963- பாடியவர்: எஸ்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

டி.எம்.சௌந்தரராஜன் சோகமாகப் பாடி அதிகம் கேட்கப்பட்ட "நீயில்லாத மாளிகையை பார் மகளே   பார் " என்ற பாடலின் அதே மெட்டில் பல்லவியை மட்டும்  அமைத்துக் கொண்டு மெல்லிசைமன்னரே மிக அழகாகப் பாடுகிறார்.இனிய திருப்பங்களைக் கொண்ட இந்தப்பாடலில் மென்மையான சோகத்தையும் கேட்கலாம்.

02  துயில் கொண்டாள் கலங்காது அமைதி கொண்டாள்  - பார் மகளே பார்1963 - பாடியவர்: பி.சுசீலா  - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

இரு பிள்ளைகளில் ஒரு பிள்ளை தனதில்லை என்ற குழப்பத்தில் தந்தை.இதை உணர்ந்து தனது தந்தையின் / பெற்றாரின் குழப்பத்தை தீர்க்க எண்ணும் ஒரு மகள் வீட்டை விட்டு போவதாக முடிவெடுத்து பிரியும் சமயத்தில் பின்னணியாக ஒலிக்கும் பாடல். இரவில் பிரியும் தருணத்தில் ஒவ்வொருவரிடமும் விடைபெறுவது போல பாடல்  காட்சி அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மட்டுமே தியாகம் செய்தால் போதும் தந்தை

உள்ளத்திலே அமைதி கொஞ்சம் சேரும்

தியாகம் செய்ய இரும்பு நெஞ்சம் வேண்டும் - அது

சிலரிடம் தான் சில சமயம் தோன்றும்.

என்று சகோதரியிடமும்

உண்மையினை நீயறிவாய் தாயே - இருந்தும்

ஒரு குறையும் வைத்ததில்லை நீயே

கண்மணி போல காத்து வளர்த்தாயே - உன்னைக்

கடந்து செல்ல துணித்து விட்டேன் தாயே.

என்று தாயிடமும்

வந்தாள் இருந்தாள் வந்தவள் தான் பிரிகின்றாள்

தந்தையே  உங்கள் தங்க மனம்  அமைதி கொள்க.

என்று தந்தையிடமும் விடைபெறுவதாக அமைந்த பாடல்.

03 கானகத்தைத் தேடி இன்று போகிறாள் – கொடிமலர் 1967 - சீர்காழி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 ஓடம் நதியினிலே - காத்திருந்த கண்கள் 1962 - சீர்காழி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

" ஓடம் நதியினிலே " இந்த பல்லவியைக் கொண்ட இந்தப்பாடல் ,சற்று மாற்றப்பட்டு ..

காதல் வழியினிலே காத்திருந்த கண்களினால்

போய் வருவீர் என்று சொன்னால் புன்னகையால் முடிவிலே ..

என்ற வரிகளைக் கொண்ட இந்தப்பாடலுடன் காத்திருந்த கண்கள் படம் நிறைவு பெறும்.

05 இன்பமும் காதலும் இயற்கையின் நீதி - படம் - பாவமன்னிப்பு 1961  - ஜி.கே.வெங்கடேஷ் - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

இது  " வந்த நாள் முதல் இந்த நாள் வரை " என்ற டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடலின் சோக வடிவம். வாத்தியங்களால் மாற்றியமைக்கப்பட்டதுடன் மெல்லிசைமன்னர்களின் உதவியாளராக இருந்த ஜி.கே.வெங்கடேஷ் மிக அருமையாகவும் பாடிய பாடல்.

06 நினைவில் வந்த நிம்மதி நேரில் வந்ததில்லையா- படம் - நீல வானம் 1965- சுசீலா - இசை: எம்.எஸ் விஸ்வநாதன்

இது சொல்லடா வை திறந்து அம்மா என்று என்ற பாடலின் சோக வடிவம்.

07  அன்னைமடி மெத்தையடி   - படம் - கற்பகம் 1964 -  பி.சுசீலா  - இசை: எம்.எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி

அத்தைமடி மெத்தையடி என்ற பாடலின் மாற்றப்பட்ட வடிவம்.

08   நா ..நா ..நானா...  நினைத்தாலே இனிக்கும்  - நினைத்தாலே இனிக்கும் 1979  -பாடியவர்: SPB.+ ஜானகி  - இசை : விஸ்வநாதன்

09  What a waiting...[காத்திருந்தேன் காத்திருந்தேன்]  - நினைத்தாலே இனிக்கும் 1980  -பாடியவர்: SPB  - இசை : விஸ்வநாதன்.

10  சொல்லத்தான் நினைக்கிறேன்   - சொல்லத்தான் நினைக்கிறேன் 1973  -பாடியவர்: விஸ்வநாதன்+ எஸ்.ஜானகி - இசை : விஸ்வநாதன்.

திரைத்துறையினர் தங்களது கதையில் ,நடிப்பில் ,இயக்கத்தில் நம்பிக்கை வைத்திர்களோ இல்லையோ இசையமைப்பாளர்களிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை சிறிய பாடல்களையோ,பெரிய பாடல்களையோ  தயங்காமல் தமது படங்களில் பாவித்ததிலிருந்து தெரிகிறது.அதுமட்டுமல்ல இசையில் அவர்களது ரசனையும் வெளிப்படுகிறது.அவை கதாபாத்திரங்கள் பாடுவதாக மட்டுமில்லை திரையின் பின்னணியில்  அசரீரியாகவும் ஒலிக்க வைத்தார்கள். இவற்றைப் பாடகர்கள் பலரும்  பாடி  செழுமைப்படுத்தினர்.

இவர்களுடன் இன்னுமொரு முக்கியமான பாடகரின் குரல் அசரீரிக்கும் அழகாகப் பயன்பட்டது.


பாடகர் விஸ்வநாதன்: புதுமையான ஆண்குரல் ஹம்மிங்.

திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்த சிலர் பட இயக்குநர்களானதும் வசனம் எழுத வந்தவர்கள் பாடலாசியர்களானதும் ,நடிகராக வேண்டும் என வந்தவர்கள் இயக்குநர்களானதும் ,நல்ல பாடகர்களாக இருந்தவர்கள் திறமைமிக்க இசையமைப்பாளர்களானதும் தமிழ் திரையின் வரலாற்றுள் அடங்குவனவே.

அதே போலவே நல்ல இசையமைப்பாளர்களாக இருந்த சிலர் நல்ல பாடல்களை பாடியதையும் , பாடகர்கள் என்று பெயர் எடுக்காவிட்டாலும்,அருமையான பாடல்களைப் பாடிச் சென்றிருப்பதையும் காண்கிறோம். தமது பாடும் திறத்தால் ,சொல்லிக்கொடுக்கும் ஆற்றலால் பாடகர்களை புடம் போடும் இசையமைப்பாளர்கள் ,பாடகர்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் வண்ணம் சொல்லிக் கொடுத்து பாட வைக்கின்றனர்.

இசையமைப்பாளர்களில் மூன்று வகை உண்டு.

01 வாத்தியங்களில் வாசித்துக் காட்டும் இசையமைப்பாளர்கள்.. 02 உதவியாளர்களை வைத்து சொல்லிக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள். 03 தாங்களே பாடிக்காட்டும் இசையமைப்பாளர்கள்.

வாத்தியக்கருவியில் வாசித்துக் காட்டும் இசையமைப்பாளர்களை விட,பாடும் ஆற்றல்மிக்க இசையமைப்பாளர்களிடம் பாடுவதே இலகுவானது என்பது பெரும்பாலான பாடகர்களின் கருத்தாகும்.பாடும் ஆற்றமிக்கவர்களால் தான் தாம் என்ன நினைக்கின்றோம் என்பதை துல்லியமாக சொல்லிக் கொடுக்க முடியும்.

இசையமைப்பாளர்களிடம் பாடலுக்கு அமரும் தயாரிப்பாளர்கள் ,இயக்குநர்கள் இசையமைப்பாளர்களின் பாடும் ஆற்றலில் மயங்கி இதை நீங்களே பாடி விடுங்கள் என்று சொல்லி அவர்களை பாட வைத்த சம்பவங்களும் உண்டு.அவர்களின் திருப்திக்காக சில பாடல்களை அவர்களே பாடியுமுள்ளனர்.

நடிகராக வேண்டும் என்ற விருப்புடன் சினிமாவுக்கு வந்த விஸ்வநாதன் இசையமைப்பாளராக நுழைந்து , ஒரு பாடகராகவும் ஒன்றாய் வார்ப்பாகி பரிணமித்தார்.அது கூட அவரது முன்னோர்களை பின்பற்றிய செயலாகவே அமைந்தது.

பாடுவதும் ,இசையமைப்பதும் ,ஓவியம் வரைவதும் ,சிற்பம் செய்வதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கலைகளாகும்.இதில் ஈடுபடும் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் ஈடுபாடு இருப்பது இயல்பானதாகும். அந்த வகையில் இசையமைப்பாளர்கள் பாடுவது என்பதும் இயல்பான ஒன்றேயாகும்.

தாம் அமைக்கும் மெட்டுக்களை குழைத்து ,குழைத்து ,புதுப்புது சங்கதிகளை போட்டு மெருகேற்றி பாடகர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் இசையமைப்பாளர்களின் இசையில் மெய்மறந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அப்படிப் பாடிக்காட்டும் இசையமைப்பாளர்களையே பாடவும் வைத்தனர்.

நான் கேட்ட வரையில் , ஜி.ராமநாதனின் பாடும் முறையில் இதை அனுபவித்திருக்கிறேன்.

மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் சொல்லிக் கொடுக்கும் சங்கதிகளை உள்வாங்கி அவரளவுக்கு பாடமுடியால் ,சுசீலா அழுது கொண்டே ஸ்டுடியோவை விட்டு வெளியே போன பாடல் தான் " ஒரு நாள் இரவில் கண்ணுறக்கம் பிடிக்கவில்லை" [படம் : பணத்தோட்டம்].

இதை மெல்லிசை மன்னரே ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.அதுமட்டுமல்ல அவரிடம் உதவியாளராக இருந்த ஜி.எஸ்.மணி என்பவர் “மெட்டு போடும் போதே கணம் தோறும் விதம்,விதமான சங்கதிகளைப் போட்டு நம்மை திகைக்க வைப்பார்: நமக்கு எதைத் தெரிவது திகைப்பு வரும். “ என்று பல நிகழ்சசிகளில் பதிவு செய்திருக்கின்றார்.

அந்தவகையில் பாடும் ஆற்றல்மிக்க முன்னோடி இசையமைப்பாளர்களில் எஸ்.ராஜேஸ்வரராவ், ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,எஸ்.வி.வெங்கடராமன்,எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி,கே.வி.மகாதேவன் போன்றோர் முக்கியமானவர்கள்.

தமிழ் திரை இசையமைப்பாளர்கள் வியந்து பார்த்த ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர்கள் சிலரும் அருமையான பாடகர்களான விளங்கினார்கள். சி.ராமச்சந்திரா , ஹேமந்த் குமார், எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் மதன் மோகன் திரையில் பாடா விட்டாலும் பாடும் ஆற்றல் கொண்டவராகவே விளக்கியதும் ,பாடகரான கிஷோர்குமார் சில படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்ததும் நாம் அறிந்ததே!

பாடலின் ஜீவனாக இருக்க வேண்டிய உணர்வு நிலையை நன்கு பிரதிபலிக்கக்கூடிய, வகையில் தங்களின் பாடும் ஆற்றலால் அதற்கு நியாயம் செய்யும் வகையில் அற்புதமாகவே பாடியுமுள்ளனர். பின்னாளில் இனிய குரல்வளமிக்க பாடகர்கள் தோன்றியதும் ,தாம் பாடுவதைக் குறைத்து தொழில்முறைப் பாடகர்களையே முதன்மையும் படுத்தினர்.

பாடும் ஆற்றல்மிக்க ஏ.எம்.ராஜா .கண்டசாலா போன்றவர்கள் இசையமைப்பாளர்களுக்கு நிகராக இசையமைக்கவும் முடியும் என்று நிருபித்த பெரும் ஆற்றலாளர்காளாக விளங்கினார்.

இசையமைப்பில் மட்டுமல்ல பாடும் ஆற்றலுமிக்கவர் என்ற வரிசையிலும் இடம் பெறுபவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

மெல்லிசைமன்னரைப் பொறுத்தவரையில் எடுத்த எடுப்பில் பாடாமல் ஹம்மிங்கில் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். அதில் எத்தனை,எத்தனை அற்புதங்களை செய்து காட்டினார் என்பதை நாம் இன்றும் கேட்டு வியக்கின்றோம். பாடல் மெட்டுக்கு பாடலாசிரியர்கள் உயிர் கொடுத்தனர் என்றால் பாடகர்களோ சொற்களுக்கு உயிர் கொடுத்தனர். ஆனால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனோ மெட்டுக்களின் ஜீவனுக்கு தனது ஹம்மிங்கால் ஜீவன் கொடுத்தார். ஹம்மிங்கில் புதிய மாஜிக் உருவாக்கிக் காட்டினார்கள் மெல்லிசைமன்னர்கள்!

Humming என்ற ஆங்கில சொல் தமிழில் பாடுவதற்கு முன்பாக, " ம் ..ம் .. ம்.. " என்று குரலைத் தயார்படுத்திக் கொள்ள அல்லது பாடுவதற்கு தயாரிப்பு செய்வது என்ற ஓர் நிலையையும், சொற்கள் இல்லாமல் குறித்த ஒரு மெட்டுக்கான ராகத்தின் அல்லது அதற்கிசைந்த இசை அசைவுகளை ,அதன் சுவைகளுக்கேற்ப இழுத்துப்பாடும் ஓர் முறையாகவும், இன்னுமொரு வகையில் சொன்னால் ஒரு குறுகிய ஆனால் பலவிதங்களில் வரும் சிறிய ஆலாபனையாகவும் அமையும் ஒன்றாகும்.

செவ்வியலிசையில் ஒரு குறிப்பிட்ட ராகத்தினை சொற்களில்லாமல் அசைத்து ,அசைத்து நீண்ட நேரம் ஆலாபனை செய்வது வழமையாகும்.சினிமாப்பாடல்கள் மிகக்குறுகிய கால எல்லை கொண்டவையாக இருப்பதால் அதன் எல்லைக்குள் நின்று எளிமையாகவும் ,குறுகிய நேரத்திலும் இந்த ஹம்மிங் அல்லது "குட்டி ஆலாபனையை" நிகழ்த்த வேண்டிய நிர்பந்தம் இசையமைப்பாளர்களுக்கு உண்டாகிறது.

தமிழ் செவ்வியல் இசையில் மட்டுமல்ல நாட்டார் இசையிலும் அதிகமாகப் பயன்படும் முறையும் இதுவாகும். நாட்டார் இசையில் " தென்னானே ... தென்னானே " அல்லது " தன்னானே.. தன்னானே " என்று தொடங்கும் முறை பழைய நாட்டுப்புற மரபாகும். செவ்வியலிசையில் " ம்...ம்... ம்..ம்.. " என்று சுருதி மீட்டுவதையும் ஹம்மிங் என்று சொல்லலாம். இது நமது இசைக்கு மட்டுமல்ல உலகெங்கும் உள்ள இசைக்கும் இது பொது முறையுமாகும்.

மேலைத்தேய இசையில் இந்த ஹம்மிங் பற்றிய வகைப்பாடுகள் உள்ளன. அவை Legato - Staccato - Vibrato என மூன்று விதமாக அழைக்கப்படுகிறது.

Legato - என்பது ஒரு சுரத்தை கொஞ்சம் நீட்டி பாடுவது அல்லது இழுத்துப் பாடுவது. " ஆ ............ ஆ ............ ஆ ............ " என அசைத்துக் கொள்வது.

Staccato - என்றால் மேல் சொன்னதையே கொஞ்சம் குறுக்கி பாடுவது. " ஆ ....ஆ ....ஆ .... " என குறுக்கி இசைப்பது.

Vibrato - என்பது அதிர்வு எனப்படும். அசைவுகளில்லாமல் நீண்ட அல்லது குறிப்பிட்ட அளவு தூரம் சுரத்தை இசைப்பது. பாடுபவரின் குரல் தன்மைக்கு ஏற்ப இது மாறுபடும்.

" ஆ ........................ ஆ ............ " என நேராக , அசைவுகளைத் தவிர்த்து தொடர்ச்சியாக ,விடாமல் இசைத்துச் செல்வது ஒன்று!

இதையே ஒரு சுரத்தை நீண்ட நேரம் " ஆ ............ " என்றே இசைத்துக் கொண்டு அதில் வித்தியாசமான ,பல்வகை அசைவுகளை இசைத்து ,அதிர்வுகளை ஏற்படுத்திக் காட்டும் முறையும் இருக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் " நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவு இழப்பதில்லை " என்ற பாடலுக்கு முன்பாக வரும் ஹம்மிங்கை குறிப்பிடலாம்.

இந்த நுட்பங்களை எல்லாம் மெல்லிசைமன்னர்கள் மிக அற்புதமாகத் தங்கள் பாடலில் வைத்து பிரமிக்க வைத்தார்கள். மேலே குறிப்பிட்ட ஹம்மிங் இசை நுட்பங்கள் எல்லாம் லத்தீன் அமெரிக்க இசையில் 1950 ,1960 களில் ஒரு எழுச்சியாக எழுந்த போஸா நோவா [ Bossa Nova ] என்ற புதிய இசையலை வடிவமாகும். போஸனோவா என்றால் New Trend என்ற அர்த்தமாகும்.இதை samba, ஜாஸ் இசைகளில் கேட்கலாம்.

பாடல்களில் ஹம்மிங்கை மிக இயல்பாக வைத்து ,அதில் பல்வகை நுட்பங்களை மெல்லிசைமன்னர்கள் காட்டினார்கள். குறிப்பாக பெண் பாடகிகளில் எல்.ஆர்.ஈஸ்வரியை தனியே தெரியும்படி மிக அருமையாகப் பயன்படுத்திய மெல்லிசைமன்னர்கள் , பாடல்களின் போக்கிலேயே மிக இயல்பாகவும் ,அழகுணர்ச்சி மிக்கதாகவும் ,அது துருத்திக் கொண்டு வெளியே தெரியாத வண்ணமும் ஹம்மிங்கை பயன்படுத்தி புதுமை செய்தார்கள்.

பெரும்பாலான ஹம்மிங்கை அவர்களின் ஆதர்ச இசையாக இருந்த லத்தீன் அமெரிக்க இசைக்கூறுகளிலிருந்து எடுத்தாண்டார்கள் என்பதை அவர்களது பாடல்களில் தெளிவாகக் காணலாம். எப்படி பொங்கஸ் தாள வாத்தியத்தை எழுச்சிக்காகக் கையாண்டார்களோ ,அதே போலவே ஹம்மிங்கையும் மிகமிக அருமையாகப் பயன்படுத்தி ஒரு சகாப்தத்தைப் படைத்தார்கள்.

பெண்பாடகிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி எவ்விதம் தனித்துவமான ஹம்மிங் நிகழ்த்திக்காட்டினாரோ ,அதே போல ஆண் குரல்களில் தனிச்சிறப்புமிக்க ஹம்மிங்கை துவக்கி வைத்தவர் இசையமைப்பாளரும் ,பாடகருமான விஸ்வநாதன் என்பது ஆச்சர்யம் தரும் உண்மையாகும். இதன் மூலம் தனக்குப்பின் வரக்கூடியவர்களுக்கு பலமான வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்று செல்லலாம்.

ஒரு இசையமைப்பாளர்களாக மெல்லிசைமன்னர்கள் உருவாக்கிய பாடல்களில் ஹம்மிங் எப்படி பின்னிப்பிணைந்து,நெருக்கமாக உறவு கொண்டிருப்பதை சில பாடல்கள் மூலம் உதாரணம் காட்டலாம். இவற்றை நுனித்து நுட்பமாய்ப் பார்த்தாலன்றி மெட்டுக்கள் தரும் மயக்கத்தில் நாம் புரிந்து கொள்ள முடியாமல் போகும்.

மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த பாடல்களில் மிக இயல்பாக ஹம்மிங் வருகின்ற பாடல்கள் சிலவற்றை பார்ப்போம்.

Legato - சற்று நீண்ட ஹம்மிங் :

01 பருவம் போன பாதையிலே - தெய்வத் தாய் 1960 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. இந்தப்பாடலில் ,பாடலின் நடுவில் எழுச்சியாக வைத்து உச்சம் தொடுகின்றார்கள்.அது அற்புதமாக இருக்கும்.பாடலில் " இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல் என்னைக் கொடுத்துவிட்டேன்" என்ற வரிகளைத் தொடர்ந்து ..ஆகா ,, ஆகாகா என்று நெருடாத ஹம்மிங்கை கேட்கலாம்.

02 மீனே மீனே மீனம்மா - என்கடமை 1964 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. இந்தப்பாடலின் பல்லவி முடிந்து," என் பாட்டுக்கு ஒருவன் இசையானான் "என்ற அனுபல்லவிக்கு முன்பாக வருகின்ற ஹம்மிங்.

03 தேனொடும் தண்ணீரின் மீது - என்கடமை 1964 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. இந்தப்பாடலில் இரண்டாவது நிமிடத்தில் ஆகா ,,,,ஆகா கா என்ற ஹம்மிங்கைக் கேட்கலாம்.

04 பக்கத்து வீட்டு பருவ மச்சான் - karbagam 1964 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ம்….ம்….ம் என்ற அருமையான ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் நான்காவது நிமிடத்தில் ஆகாகா.....ஓகோகோ ……. என்ற எழுச்சி ஹம்மிங்கைக் கேட்கலாம்.

05 அழகுக்கும் மலருக்கும் - நெஞ்சம் மறப்பதில்லை 1962 - பாடியவர் : ஸ்ரீனிவாஸ் + ஜானகி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. இந்தப்பாடலில் பல்லவி ,அனுபல்லவி முடிவிலும் ஹம்மிங்கைகேட்கலாம்.

06 வாழ நினைத்தால் வாழலாம் - பலே பாண்டியா 1962 - பாடியவர் : டி. எம்.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. இந்தப்பாடலின் ஆரம்பத்திலேயே ஹம்மிங்கை கேட்கலாம்.

Staccato - குறுகிய ஹம்மிங் :

01 பார்த்த ஞாபகம் இல்லையோ - புதியபறவை 1963 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 02 என்ன என்ன வார்த்தைகளோ -வெண்ணிற ஆடை 1964 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 03 இளமைக்கு கொலுவிருக்கும் - ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் 1963 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 04 வா என்றது உருவம் - காத்திருந்த கண்கள் 1962 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 05 கண்ணான கண்ணனுக்கு - ஆலயமணி 1962 - பாடியவர் : சீர்காழி+பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 06 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு - கற்பகம் 1964 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

Vibrato - அதிர்வு தரும் ஹம்மிங் :

ஆ.... .....ஆ ............ ஆ ..... என நீட்டி இசைக்கும் ஹம்சிங்கின் இடையை புதிய ,புதிய அசைவுகளைக் கொடுத்து பாடும் ஹம்மிங் !

01 நெஞ்சம்மறப்பதில்லை -நெஞ்சம்மறப்பதில்லை 1963 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. தமிழ் சினிமாப்பாடல்களில் அமைக்கப்பட்ட அதிஉன்னதமான ஹம்மிங்கில் ஒன்றாக இந்தப்பாடல் திகழ்கிறது. பாடலின் ஜீவன் முழுவதும் அந்தக் ஹம்மிங்கிலேயே அமைந்திருக்கிறது என்று சொல்லிவிடலாம்.

02 பார்த்த ஞாபகம்இல்லையோ -புதிய பறவை 1964 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. மெல்லிசைமன்னர் ஒரு பாடகராக பாடிய சில பாடல்கள் . மெட்டமைப்புகளில் மட்டற்ற ஆர்வம் மட்டும்மல்ல ஹம்மிங்கிலும் புரட்சி என்று சொல்லுமளவுக்கு மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் புத்தெழுச்சி தரும் ஹம்மிங் அமைத்து பாடி வியக்கவைத்தார்.

01 தாழையாம் பூ முடித்து - பாகப்பிரிவினை 1960 - பாடியவர் : டி.எம்.எஸ் + லீலா + எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. அபாரமான ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் இடையிடையேயும் அற்புதமான ஹம்மிங் நாட்டுப்பாங்காக அமைக்கப்பட்டுள்ளது.

02 என்னை எடுத்து - படகோட்டி 1964 - பாடியவர் :சுசீலா + எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி முற்றுமுழுதாக ஹம்மிங்கின் ஆளுகைக்குட்பட்ட பாடல் இது. பாடிய சுசீலாவை சொல்வதா ஹம்மிங்கை பாடிய விஸ்வநாதனை சொல்வதா , புல்லாங்குழல் வாசித்த நஞ்சப்பாவைவைச் சொல்வதா ?

03 போனால் போகட்டும் போடா - பாலும் பழமும் 1961 - பாடியவர் :டி.எம்.எஸ் + எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி விஸ்வநாதனின் ஹம்மிங் திறமையை இந்தப்பாடல் துல்லியமாகக் காட்டும்.

மெல்லிசைமன்னர் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு ஹம்மிங்கில் தன்னை மறைத்துக்கொண்டது போல ம் ..ம்....ம்….ம். என்று அருமையாக, புதுதினுசாகப் பாடி அசத்திய பாடல்கள்.

01 பாலிருக்கும் பழமிருக்கும் - பாவமன்னிப்பு 1961 - பாடியவர் :சுசீலா + எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 வந்த நாள் முதல் - பாவமன்னிப்பு 1961 - பாடியவர் :டி.எம்.எஸ் + எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 அத்தை மகனே போய் வரவா - பாதகாணிக்கை 1962 - பாடியவர் :சுசீலா-எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 04 நான் நன்றி சொல்வேன் - குழந்தையும் தெய்வமும் 1965 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் 05 கொடுக்க கொடுக்க - நான் ஆணையிட்டால் 1967 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன்

ஹம்மிங் மட்டுமல்ல பாடுவதிலும் தனது திறமையை காட்டிய எம்.எஸ்.விஸ்வநாதன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள் பலவுண்டு. சில எடுத்துக்காட்டுகள்.

01 அன்பு மலர் ஆசைமலர் - பாசமலர் 1961 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 நேரான நெடுஞ் சாலை - காவியத்தலைவி 1970 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 03 அன்னை பூமி என்று - சவாலே சமாளி 1971 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 04 தாய் பிறந்தாள் - தாய் 1971 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 05 கார் மேகம் மனசு வச்சால் - சொந்தம் 1973 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 06 யாருக்கும் வாழ்க்கை உண்டு - தாய் வீட்டு 1971 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 07 இத்தனை மாந்தருக்கு - உண்மையே உன் விலை என்ன 1976 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 08 எனக்கொரு காதலி - முத்தான முத்தல்லவோ 1970 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் + எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் 09 திருப்பதி மலையில் ஏறுகிறாய் - வாழ்வு என் பக்கம் 1976 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 09 உப்பை தின்னவன் - ஒரு கோடியில் இரு மலர்கள் 1976 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 10 வசந்த கால நதிகளில் [ மண வினைகள் ] - மூன்று முடிச்சு 1976 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 11 ஆயிரம் பொண்ணை பூமியில் - அவன் ஒரு சரித்திரம் 1970 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 12 அல்லா அல்லா நீ இல்லாத - முகம்மது பின் துக்ளக் 1972 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 13 எதற்கும் ஒரு காலம் உண்டு - சிவகாமியின் செல்வன் 1974 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 14 பயணம் பயணம் பயணம் - பயணம் - 1976 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன் 15 எனக்கொரு காதலி - நிலவே நீ சாட்சி 1961 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் + எஸ்.பி.பி. - இசை : விஸ்வநாதன் 16 கண்டதைச் சொல்லுகிறேன் - சில நேரங்களில் சில மனிதர்கள்1976 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன். 17 பெண் என்றால் பெண் - பெண் என்றால் பெண் 1967 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன்

17 சம்போ சிவா சம்போ - நினைத்தாலே இனிக்கும் 1978 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : விஸ்வநாதன்.

சிறந்த குரல்வளம் இல்லையென்றாலும் உணர்ச்சி பாவத்துடன் அற்புதமாக பாடுவதில் தனித்தும் காட்டியதால் பிற இசையமைப்பாளர்களும் மெல்லிசைமன்னர் விஸ்வநாதனைத் தமது படங்களில் பாட வைத்து தமக்குப் பெருமை சேர்த்துக்கொண்டனர்.

01 உனக்கென்ன குறைச்சல் - வெள்ளிவிழா 1972 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : வி.குமார் . 02 ஆண்டவனே உன்னை வந்து - உருவங்கள் மாறலாம் 1983 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : இளையராஜா 03 நல்ல காலம் பிறக்குது - கருவேலம் பூக்கள் 1997 - பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை : இளையராஜா


தனி ராஜ்ஜியமும்  திறமைவாய்ந்த சில புதியவர்களும்

கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பணம் [1952] படத்தின் மூலம்  அறிமுகமானார்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. தமக்கு ராமமூர்த்தி விஸ்வநாதன் என வைத்துக் கொண்ட பெயரை மாற்றி தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. என மாற்றி வைத்ததற்கு நல்ல காரணமும் சொன்னார் ,விஸ்வநாதா நீ இளையவன் ,நீ வீழ்ந்தால் வயதில் மூத்த ராமமூர்த்தி தாங்குவான்; அதைவிட இப்படி சொல்வதே நன்றாகவும் உள்ளது என்றும் கூறினார்.

முன்னணிக்கு வந்து கொண்டிருந்த பழம்பெரும் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் இசைக்குழுவில் ஹார்மோனியம் வாசிப்பவராக விஸ்வநாதனும் ,வயலின் வாசிப்பவராக ராமூர்த்தியும் இருந்தனர். ராமமூர்த்தி தனது தந்தையிடம் முறையாக இசை  பயின்ற இசைப்பாரம்பரியத்திலிருந்து வந்தவர். வயலின் கலைஞராகவே இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்.ஆனால் விஸ்வநாதன் இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆவல் மிகுந்தவர்.ராமமூர்த்தி தன்னுடன் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தவர். சங்கீதத்தின் சங்கதிகள் நன்கு அறிந்த ராமமூர்த்தி திரையுலகின் இங்கிதங்கள் கைவரப்பெறாதவர்.

இருவரும் இசையமைப்பாளராக இணைந்து கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு  மேல் இசையமைத்து புகழின் உச்சியிலிருந்து போது பிரிந்தனர். பிரியக்கூடாத நேரத்தில் பிரிந்து முப்பது வருடத்தின் பின் [1995] மீண்டும் இணைந்தனர்.

விஸ்வநாதன் தொடர்ச்சியாக பல வாய்ப்புகளைப் பெற்று களத்தில் தனது ராஜ்ஜியத்தை அமைத்துக்கொண்டார்.தமிழ் திரையுலகினரின் அதி மூடத்தனத்தின் விளைவாக ஓரம்க ட்டப்பட்ட திறமைசாலிகளில் ஒருவரானார் ராமமூர்த்தி. விஸ்வநாதன் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களை இசையமைத்துப் புகழ் பெற்றாலும் அவரின் சிறந்த பாடல்கள் எவை என்று ரசிகர்களிடம் கேட்டால் அவர் ராமமூர்த்தியுடன் மெல்லிசைமன்னர்களாக இருந்த காலத்தின் ப, பா வரிசைப்படப்பாடல்களையே கண்மூடிக் கொண்டு கூறுவர். ப,பா வரிசைப்படப்பாடல்களில் அமைந்த வாத்தியங்களின் சேர்ப்பு , இனிமை ,அதனால் உண்டான இசை லயம்  சிறப்பாக இருந்ததே அதன் காரணமாகும். வாத்தியங்களை தகுந்தபடி ஒழுங்கமைப்பதில் அதிக கவனம் செலுத்தியவர் மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி.

மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அவ்வப்போது சில பாடல்களை பாடியது போல மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி  அவ்வப்போது தனியாக வயலின் வாசித்து தனது  திறமையை வெளிப்படுத்தினார். அவரது தனி வாசிப்பை இரு பாடல்களில் நாம் கேட்கலாம்.

01  வந்த நாள் முதல்  - பாவமன்னிப்பு 1961 - டி.எம்.சௌந்தரராஜன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02  கண் போன போக்கிலே   - பணம் படைத்தவன்  1961 - டி.எம்.சௌந்தரராஜன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்த இரண்டு பாடல்களின் நடுவே வரும் அற்புதமான தனி வயலினை இசைத்தவர் மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி.

இந்தக்காலகட்ட தமிழ்ச்சினிமாவில்   பல புதிய முகங்கள் அறிமுகமாயினர். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரு மாபெரும் நட்சத்திரங்களுடன்  பல இளைய நடிக, நடிகையர்கள் நுழைய ஆரம்பித்தனர். சினிமா நடிகர்களைத்  தாண்டி , கதையமைப்பிலும், படமாக்கும் உத்திகளிலும் புதுமைகளை செய்தார் இயக்குனர் ஸ்ரீதர், தனக்கென  ஓர் அந்தஸ்தையும் உருவாக்கி தமிழ் சினிமாவை ஒரு புதிய தளத்திற்கு நகர்த்த முனைந்து கொண்டிருந்தார். முக்கோணக்காதல் என்ற என்றொரு   வட்டத்தை தாண்டாத ஸ்ரீதரின் புதுமைக்கும் ஓர் எல்லையிருந்தது.

நடுத்தர வயதைத்தாண்டியும் இளைஞர்களாக வேஷம் கட்டிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி,ஜெமினி  போன்றோருக்கு மத்தியில் நிஜமான இளைஞர்களான ரவிசந்திரன், ஜெய்ஷங்கர் ,ஏ.வி.எம்.ராஜன், சிவகுமார், ஜெயலலிதா, நிர்மலா ,கே.ஆர்.விஜயா  போன்றவர்கள் அறிமுகமானாலும் ,முன்னவர்கள் செய்ததையே இவர்களும் செய்ய நேர்ந்தது.

மெல்லிசைமன்னர்கள் பிரிந்த இக்காலத்தில் நடிகர்கள்  மட்டுமல்ல , இசையமைப்பாளர்களில் ஏற்கனவே இருந்த கே .வி.மகாதேவன்,  வேதா,கோவர்தனம் , வி.தட்க்ஷிணாமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்பார்த்தசாரதி, பி.எஸ்.திவாகர்  போன்ற  இசையமைப்பாளர்களுடன் புதுப்புது இசையமைப்பாளர்களும் அறிமுகலாயினர். அவர்களில் வி.குமார் , சங்கர் கணேஷ் , ஜி.தேவராஜன் , ரமணன் , குன்னக்குடி வைத்தியநாதன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் இசை 1970 களின் இறுதிவரையில் ,   1980 களின் ஆரம்பம் வரையிலும் இசை தந்தார்கள்.

பிரிவுக்குப் பின் ராமமூர்த்தியைப் போலல்லாது விஸ்வநாதன் அதிக படங்களுக்கு இசைமைக்க முடிந்தமைக்கான காரணம் தரமாகவும், வேகமாகவும்  இசையமைக்கும் ஆற்றலே! இக்காரணத்தாலேயே எம்.ஜி.ஆர் சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுக்கு மட்டுமல்ல பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இசையமைக்கும் ஓர் நட்சத்திர இசையமைப்பாளராக,  இசைக்கலைஞனாக  அவரால் வளர முடிந்தது. தமிழ்த்திரை வரலாற்றில் ஓர் நட்சத்திர இசையமைப்பாளர்களாக செல்வாக்கு பெற்றவர்கள் மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன்  ராமமூர்த்தி இணையினர் என்பது மிகையான கூற்றல்ல. பின்னர் இந்தப்படம் விஸ்வநாதனுக்குரியதாக அமைந்துவிட்டது.

1960 ம் ஆண்டிலிருந்து ,ஆண்டுக்கு சராசரி  50 படங்கள் வெளிவந்த காலத்தில் ஆண்டுக்கு 5 படங்களுக்கு இசையமைத்த மெல்லிசைமன்னர்கள் 1962 இல் 15 படங்களுக்கும் இசையமைக்கும் உச்சநிலைக்கு சென்றார்கள். 1965 ம் ஆண்டு பிரிவுக்குப் பின்னர் சராசரியாக விஸ்வநாதன் தனியே வருடத்திற்கு 15 படங்களுக்கு இசையமைத்தார். ஒரு இசையமைப்பாளனாக அதிக எண்ணிக்கையில் விஸ்வநாதனாலேயே இசையமைக்க முடிந்ததன் காரணம் அவரது அசாத்தியமான இசையமைப்பு வேகமே ஆகும்.

வேகமாக , விரைவாக  இசைமைத்தாலும் மெட்டமைப்பில் அழகும் , வலிமையையும் , உணர்ச்சி செறிவும் மிகுந்திருந்தது என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். அதே போல இக்காலங்களில் இசையமைத்துக் கொண்டிருந்த இசையமைப்பாளர்களின் பெயர் பட்டியலையும் ,அவர்கள் இசைமைத்த பாடல்களையும் எண்ணிப் பார்க்கும் போது இவர்களையும் தாண்டிய தனித்தன்மை   விஸ்வநாதனின் இசை உத்வேகம் நம்மை பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலும் எதை எடுத்தாலும் வெற்றி பெற வைக்கும் நட்சத்திர அந்தஸ்துமிக்க இருபெரும் திலகங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் விஸ்வநாதன் என்பதும் அக்கால நிலையாகவே இருந்தது. அதுமட்டுமல்ல புதுமுக நாயகர்களான ஜெய்சங்கர் , ரவிசந்திரன் போன்ற நடிகரின் படத்திலும் சிறப்பான பாடல்களை விஸ்வநாதன் கொடுத்தார்.

1960  களின்  மத்தியில் அறிமுகமான புது இசையமைப்பாளர்களான வி.குமார் , சங்கர் கணேஷ் , குன்னக்குடி வைத்தியநாதன்  போன்றோருடன்  ஏலவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இசையமைத்துக் கொண்டிருந்த கோவர்தனம் , வி.தட்க்ஷிணாமூர்த்தி , ஜி.கே.வெங்கடேஷ் , டி.ஆர்.பாப்பா , மலையாளத்தில் புகழ் பெற்றிருந்த ஜி.தேவராஜன் தமிழ்திரைப்படத்தில் இசையமைக்க அதிக வாய்ப்புகளை பெற்றார்கள்.

இவர்களில் முக்கியமானவராக வி.குமார் தனியிடம் பிடித்து நல்ல , நல்ல பாடல்களைத் தந்தார். எளிமையும் , இனிமையுமிக்க பாடல்களைத்தந்த வி.குமாரின் இசையமைப்பில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் இசைவாடையும் இருந்ததது என்பதை அவரது பாடல் அமைப்புக்களில் நாம் கேட்கலாம். செவ்வியல் இசைமீதான இவரது ஆர்வம் நாணல் படத்தில் " குயில் கூவி துயில் எழுத்துப்ப " என்ற பாடலின் அருமையை கேட்கலாம்.

கவிஞர் வாலி ஒருமுறை சொல்லியது போல " தமிழ் நாட்டில் திருக்குறளைத் தவிர மற்றதெல்லாம் கண்ணதாசன் எழுதினார் என்றே நினைக்கின்றார்கள்." என்பது போல இளையராஜா வரும்வரையில் எல்லாப்பாடல்களையும் விஸ்வநாதன் இசையமைத்தார் என்ற எண்ணம் ஒருசில தீவிர இசைரசிகர்களைத்தவிர பரவலான மக்களிடமும் இருந்தது.

புதிதாக வருபவர்களிடம் புத்தூக்கம் இருப்பது இயல்பாயினும் தமக்கும்  முன்பிருந்தவர்களின் தாக்கமும்   இயல்பாக இருப்பது வழமையாகும் என்ற வகையில் வி.குமாரிடம் விஸ்வநாதனின் தாக்கம் அதிகமுண்டு என்பது அவரது பாடலிலேயே நன்கு தெரியும். அதற்கு உதாரணமாக 1960 களின் மத்தியில்  வெளிவந்த சிலபாடல்கள்.

வி.குமார்:

01  ஒரு நாள் யாரோ  - மேஜர்  சந்திரகாந்த்  1967 - பி.சுசீலா  - வி.குமார் 02  கல்யாணச் சாப்பாடு போடவா   - மேஜர்  சந்திரகாந்த்  1967 - டி.எம்.எஸ்   - வி.குமார் 03  நேற்று நீ சின்னப்பாப்பா    - மேஜர்  சந்திரகாந்த்  1967 - டி.எம்.எஸ்   - வி.குமார் 04  நானே பனி நிலவு   - மேஜர்  சந்திரகாந்த்  1967 - பி.சுசீலா  - வி.குமார் 05  நல்ல நாள் பார்க்கவா   - பொம்மலாட்டம்   1967 - பி.சுசீலா  - வி.குமார் 06  அடுத்தாத்து அம்புஜத்தை    - எதிர்நேச்சல்   1967 - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - வி.குமார் 07  தாமரைக்கன்னங்கள்     - எதிர்நேச்சல்   1967 1967 - பி.பி.ஸ்ரீனிவாஸ் + சுசீலா   - வி.குமார் 08  வெற்றி வேண்டுமா  - மேஜர்  சந்திரகாந்த்  1967 - சீர்காழி   - வி.குமார் 09  புலவர் சொன்னதும் பொய்யே   - ஆயிரம் பொய் 1969 - டி.எம்.எஸ் + பி.சுசீலா  - வி.குமார் 10  தில்லையிலே  சபாபதி    - ஆயிரம் பொய் 1969 - பி.சுசீலா  - வி.குமார் 11  விளக்கே நீ கொண்டஒளி நானே  - நிறைகுடம்  1969 - டி.எம்.எஸ்  - வி.குமார் 12  கண் ஒரு பக்கம்   - நிறைகுடம்  1969 - டி.எம்.எஸ் + பி.சுசீலா    - வி.குமார் 13  புன்னகை மன்னன்   - இரு கோடுகள் 1969 - ஜமுனாராணி  + பி.சுசீலா - வி.குமார் 14  நான் ஒரு  குமாஸ்தா    - இரு கோடுகள் 1969 - டி.எம்.எஸ்  - வி.குமார் 15  நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன்  - நூற்றுக்கு நூறு  1969 -  பி.சுசீலா - வி.குமார் 16  நித்தம் நித்தம் ஒரு   - நூற்றுக்கு நூறு  1969 -  டி.எம்.எஸ்  - வி.குமார் 17  எங்கெல்லாம்  வளையோசை    - வெகுளிப்பேன்  1969 -  டி.எம்.எஸ்  - வி.குமார் 18  காதோடு தான் நான் பேசுவேன்   - வெள்ளிவிழா 1969 -  எல்.ஆர்.ஈஸ்வரி - வி.குமார் 19  கை நிறைய சோழி   - வெள்ளிவிழா 1969 -  பி.சுசீலா+எல்.ஆர்.ஈஸ்வரி - வி.குமார் 20  விண்ணுக்கு மேலாடை    - நாணல் 1969 -  டி.எம்.எஸ் +பி.சுசீலா - வி.குமார் 21  உன்னைத் தொட்ட காற்று வந்து    -நவக்கிரகம்  1969 -  எஸ்.பி.பி + பி.சுசீலா - வி.குமார்.

வி.குமார் மட்டுமல்ல 1960களின் மத்தியில் அறிமுகமான சங்கர் கணேஷ் இரட்டையர்கள் மெல்லிசைமன்னர்களை போலவே தாமும் வரவேண்டும் என்று வந்தவர்கள். மெல்லிசைமன்னர்களின் இசைக்குழுவில் இருந்தவர்கள் என்பதுடன் கவிஞர் கண்ணதாசன் பரிந்துரையில் தயாரிப்பாளர் தேவர் என்பவரால் செல்வாக்குடன் அறிமுகமானவர்கள். " கவிஞர்   வழங்கிய  தேவரின் சங்கர் கணேஷ் " என்று திரைப்படங்களின் டைட்டிலிலேயே தங்கள் பெயரை பதிவு செய்தவர்கள்.  விஸ்வநாதன், கண்ணதாசனின் செல்லப்பிள்ளைகள்! சங்கர் என்பவர் விஸ்வநாதன் உதவியாளராக இருந்த மாபெரும் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் கூடப்பிறந்த தம்பி ! கணேஷ் பொங்கஸ் மற்றும் தளவாத்தியக்கலைஞராக இருந்தவர். சங்கர் கணேஷ் மெல்லிசைமன்னர்களின் இசையமைப்பை ஆசைதீர நேரடியாகக் கண்டு அனுபவித்தவர்கள். அதில் ஊறியவர்கள்.அவர்களை போலவே வர வேண்டும் என்று துடித்தவர்கள். அவர்களது இசையில் மெல்லிசைமன்னர்களின் பாதிப்பு மிகவும் இயல்பானதாகும்.

01  நினைத்தால் மணக்கும்    -நான் யார் தெரியுமா   1967 -  டி.எம்.எஸ்  + பி.சுசீலா - இசை : சங்கர் கணேஷ். 02  விடியும் மட்டும் பேசலாம்    -நான் யார் தெரியுமா   1967 -  டி.எம்.எஸ்  + பி.சுசீலா - இசை : சங்கர் கணேஷ் 03  வா காதல்  செய்து பார்ப்போம்   - சிரித்த முகம்  1967 - ஏ.எல்.ராகவன்   + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : சங்கர் கணேஷ் 04  பூவிலும் மெல்லிய பூங் கொடி - கண்ணன் வருவான் 1967 - டி.எம்.எஸ். - இசை : சங்கர் கணேஷ் 05  நிலவுக்குப் போவோம்   -  கண்ணன் வருவான் 1967 -  டி.எம்.எஸ்  + பி.சுசீலா - இசை : சங்கர் கணேஷ். 06  பூமியைப் படைத்தது சாமியா   -  கண்ணன் வருவான் 1967 -  டி.எம்.எஸ்   - இசை : சங்கர் கணேஷ்.

1970   களுக்குப்பின் சங்கர் கணேஷ் பல படங்களுக்கு இசையமைத்து தங்கள் தனித்துவத்தைக் காட்ட முனைந்தனர்.

ஜி.தேவராஜன்:

ஜி.தேவராஜன் மலையாள சினிமாவின் முக்கியமானதொரு இசையமைப்பாளர். 1960  களில் முன்னேறிக்கொண்டிருந்த மலையாள சினிமாவுக்கென தனித்துவமான மண் வாசனையுடன் உருவாகிக் கொண்டிருந்த இசையை வளம் செய்த முன்னோடி இசையமைப்பாளர். கம்யூனிச இயக்க நாடக மேடைகளில் வளர்ந்து பின் திரைக்கு   வந்தவர். வெற்றிபெற்ற  மலையாளப்படங்கள் சில தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது அப்படங்களின்  இசையை வழங்கியவர். தனது இசை மூலம் தனித்துவம் காட்டியவர். அதன் மூலம் பின் 1970 களில் சிலவாய்ப்புகளை பெற்று நல்ல பாடல்களைத் தந்தவர்.

01  பூஞ் சிட்டு கன்னங்கள்   - துலாபாரம் 1969 - டி.எம்.எஸ் + சுசீலா  - ஜி.தேவராஜன் 02  காற்றினிலே பெரும் காற்றினிலே    - துலாபாரம் 1969 - ஜேசுதாஸ்   - ஜி.தேவராஜன் 03  சங்கம் வளர்த்த தமிழ்   - துலாபாரம் 1969 - டி.எம்.எஸ் + சுசீலா  - ஜி.தேவராஜன் 04  கடலோரம் வீடு கட்டி கற்பனையால்  - கஸ்தூரி திலகம்  1970 - டி.எம்.எஸ் + சுசீலா  - ஜி.தேவராஜன் 05  வானமெனும் வீதியிலே    - அன்னை வேளாங்கன்னி  1971 - ஜேசுதாஸ் + மாதுரி    - ஜி.தேவராஜன் 06  நீலக்கடலின் ஓரத்தில்     - அன்னை வேளாங்கன்னி  1971 - டி.எம்.எஸ்    - ஜி.தேவராஜன் 02  வெள்ளி ரதங்கள் அழகு மேகம்   - பருவராகம்   1974 - மாதுரி   - ஜி.தேவராஜன் 03  ஞாயிறு ஒளிமழையில்    - அந்தரங்கம்  1974 - கமலஹாசன்    - ஜி.தேவராஜன் 04  புதுமுகமே  சிறு மதுகுடமே     - அந்தரங்கம்  1974 - ஜேசுதாஸ் + சுசீலா     - ஜி.தேவராஜன்.

டி.ஆர்.பாப்பா

மிகச் சிறந்த இசையமைப்பாளர். நல்ல பட வாய்ப்புகள் வந்த போதும், அவற்றை ஏற்காமல் , சினிமாவை விட சம்பளம் குறைந்த  வானொலியில் வயலின் கலைஞராக  சேர்ந்த செவ்வியல் இசைக்கலைஞர். பின்னாளில் சீர்காழியார் பாடிய அற்புதமான பக்திப்பாடல்களுக்கு இசையமைத்த திறமைசாலி ! 72 ராகங்களில்  அபிராமி அந்தாதியை இசையமைத்து சீர்காழியைப் பாட வைத்த இசைவல்லுனர். இவர் தொடர்ச்சியாக சினிமாவில் இருந்திருந்தால் மெல்லிசைமன்னர்களுக்கும் , கே.வி.மகாதேவனுக்கும் சவாலாக இருந்திருப்பார். சினிமாவைவை விட்டு போனது சினிமா இசை ரசிகர்களுக்கு பெரும் இழப்பென்றே சொல்ல வேண்டும்.ஆயினும் பின்னாளில் பக்தி பாடல்களினால் அதை நிவர்த்தி செய்தவர்.

சினிமாவில் பல புகழ்பெற்ற பாடல்களை தந்தவர்.குறிப்பாக 1950 மற்றும் 1960 களில் தனக்கு கிடைத்த படங்களில் நல்ல பாடல்களைத் தந்த சிறப்பான இசையமைப்பாளர்.  டி.ஆர்.பாப்பாவின்  புகழ் பெற்ற பாடல் சில.

01  வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே  - மல்லிகா 1957- ஏ.எம்.ராஜா + சுசீலா    - இசை :டி.ஆர்.பாப்பா 02  உள்ளத்திலே உரம் வேணும்டா    - விஜயபுரிவீரன்  1960- ஏ.எம்.ராஜா     - இசை :டி.ஆர்.பாப்பா 03  இசைபாடும் தென்றலோடு     - விஜயபுரிவீரன்  1960- ஏ.எம்.ராஜா + ஜிக்கி      - இசை :டி.ஆர்.பாப்பா 04  சின்னஞ்சிறு   வயது முதல்    - தாய் மகளுக்கு கட்டிய தாலி  1959- டி.எம்.எஸ் + ஜிக்கி   - இசை :டி.ஆர்.பாப்பா.

டி.ஆர்.பாப்பா  1960  களில்  இசையமைத்த பாடல்கள்.

01  இரவும் வரும் பகலும் வரும்  - இரவும் பகலும் 1965- டி.எம்.எஸ்.   - இசை :டி.ஆர்.பாப்பா 02  மாலை நேரம் ஒருத்தி வந்தால்   - இரவும் பகலும் 1965- டி.எம்.எஸ் + சுசீலா    - இசை :டி.ஆர்.பாப்பா 03  உள்ளத்தின் கதவுகள் கண்களடா   - இரவும் பகலும் 1965- டி.எம்.எஸ்.   - இசை :டி.ஆர்.பாப்பா 04  இறந்தவனைச் சுமந்தவனும்   - இரவும் பகலும் 1965- எஸ்.ஏ.அசோகன்    - இசை :டி.ஆர்.பாப்பா 05  முத்தமா கை முத்தமா     - விளக்கேற்றியவள்  1965 - டி.எம்.எஸ்.+ சுசீலா    - இசை :டி.ஆர்.பாப்பா 06  இரவு நடக்கின்றது     - பந்தயம் 1967 - டி.எம்.எஸ்.+ சீர்காழி     - இசை :டி.ஆர்.பாப்பா 07  அம்மா என்பது தமிழ் வார்த்தை   - டீச்சரம்மா   1968- சுசீலா  - இசை :டி.ஆர்.பாப்பா 08  ஏடி பூங்கொடி   - மறுபிறவி    1972 - எம்.ஆர்.விஜயா    - இசை :டி.ஆர்.பாப்பா 09  சொந்தம் இனி உன் மடியில்    - மறுபிறவி    1972 - எஸ்.பி.பி + சுசீலா   - இசை :டி.ஆர்.பாப்பா 10  மேலாடை காற்றாட    - காதல் படுத்தும் பாடு    1966- சுசீலா  - இசை :டி.ஆர்.பாப்பா 11  வெள்ளி நிலா வானத்திலே    - காதல் படுத்தும் பாடு   1966- சுசீலா  - இசை :டி.ஆர்.பாப்பா 12  இவள் ஒரு அழகிய பூஞ் சிட்டு    - காதல் படுத்தும் பாடு   1966- டி.எம்.எஸ்.+ சுசீலா- இசை :டி.ஆர்.பாப்பா 13  வெண் நிலா நேரத்திலே வேணுகானம்    - அவசரகல்யாணம் 1972- சுசீலா  - இசை :டி.ஆர்.பாப்பா.

எஸ்.கோவர்தனம்:

சிறந்த சுரஞானம் மிக்க இசையமைப்பாளர். புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனத்தின் சகோதரர். பல இசையமையமைப்பாளர்களின் உதவியாளராக இருந்தவர். 1950 களிலேயே நல்ல பல பாடல்களைத் தந்தவர். 1960 களிலும் சில படங்களுக்கு இசையமத்த போதும் நினைவில் நிற்கும் நல்ல  பல பாடல்களைத் தந்தவர்

01  அழகைப் பாட வந்தேன்   - பொற்சிலை   1968 - டி.எம்.எஸ்.+ சுசீலா - எஸ்.கோவர்தனம் 02  அக்கரையில் அவனிருக்க    - பொற்சிலை   1968 - சுசீலா - எஸ்.கோவர்தனம் 03  எண்ணம் போல கண்ணன் வந்தான்    - பூவும் பொட்டும்   1968 - சுசீலா - எஸ்.கோவர்தனம் 04  நாதஸ்வர ஓசையிலே     - பூவும் பொட்டும்   1968 - டி.எம்.எஸ்.+ சுசீலா - எஸ்.கோவர்தனம் 05  உன் அழகைக்  கண்டு கொண்டால்  - பூவும் பொட்டும் 1968 - பி.பி.ஸ்ரீனிவாஸ்  - எஸ்.கோவர்தனம் 06  முதல் என்பது தொடக்கம்  - பூவும் பொட்டும் 1968 - டி.எம்.எஸ்  - எஸ்.கோவர்தனம் 07  அந்த சிவகாமி மகனிடம்   - பட்டணத்தில் பூதம்  1967 - டி.எம்.எஸ்.+ சுசீலா  - எஸ்.கோவர்தனம் 08  கங்கை நதியோரம்    - வரப்பிரசாதம்  1975 - ஜேசுதாஸ் + வாணி   - எஸ்.கோவர்தனம்.

1965 இல் பிரிந்த விஸ்வநாதன் 1966 இல் இசையமைத்த படங்கள்.

1966 : நீ, சாந்தி .அன்பே வா  - கொடிமலர் - எங்க பாப்பா - குமரிப்பெண் - கௌரி கல்யாணம் - சித்தி - தட்டுங்கள் திறக்கப்படும் - நம்ம வீட்டு லட்சுமி - நாடோடி - தட்டுங்கள் திறக்கப்படும் - பறக்கும் பாவை -பெற்றால் தான் பிள்ளையா - ராமு - மோட்டார் சுந்தரம்பிள்ளை.

மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியுடனான பிரிவின் பின்  இத்தனை படங்களில் வெளிவந்த பாடல்களைக் கேட்கும் போது அவற்றில் பல பாடல்கள்  நம்முடைய காதுகளில்   மிக இலவுவாக நுழைந்த பாடல்களாக இருப்பதை நாம்  அவதானிக்கலாம். அந்த அளவுக்கு அவை வானொலிகளில் ஒளிபரப்பாகி புழபெற்றன எனலாம்.

அவற்றை சில பாடல்கள் சினிமாவின் தேவைற்ற வர்த்தக உத்திகளுக்கென உருவாக்கப்பட்ட செயற்கைத்தனங்களுக்காக அமைக்கப்பட்ட பாடல்களும் அடக்கம். பாடல்களின் உத்திகளில் உலக இசையின் தாக்கத்தை  , குறிப்பாக மேலைநாட்டு இசையின் தாக்கத்தை இக்காலங்களிலிருந்தே தமிழ் சினிமா அதிகம் உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கியது எனலாம்.

மேற்கு நாடுகளின் கலாச்சாரத்தில் மிக இயல்பாக இருக்கும் காபரே பாடல்கள் வலிந்து அரைகுறை உடைகளுடனான படங்களாக அரங்கேறத் தொடங்கியது. தமிழ் சினிமாவை கலைப்பக்கம் திரும்பவிடாமல் செய்ததில் கிஞ்சித்தும் கலை ரசனை இல்லாத படத்தயாரிப்பு வியாபாரிகள் முக்கியமாக விளங்கினர்.

காபரே பாடல்களை வைப்பதென்பது ரசிகர்களை வரவழைக்கும் ஒரு யுத்தியாகவும் , மேலைநாட்டுக் கலாச்சாரத்தை விட நம் நாட்டு கலாச்சாரம் மேன்மையானது என எண்ண வைக்கும் ஒரு போக்காகவும் அமைக்கப்பட்டு மேலைத்தேய இசை  என்றாலே அரைகுறை உடுப்புகளுடன் ஆடுவது என்றும் மேலைத்தேய இசை என்பதும் தரக்குறைவானது,  இசையில்லாதது என்பது மாதிரியான உளவியலை ஏற்படுத்தவும் பயன்பட்டது. பெண்களில் நாயகிகள் கற்பில் சிறந்தவர்களாகவும், காபரே நடனம் ஆடுபவர்கள் வில்லிகளாகவும் , சதிகாரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். காபரே பாடலைப் பாடுவதற்கென்றே சில பாடகிகளும் வடிவமைக்கப்பட்டனர். ஹிந்தியில் ஆஷா போஸ்லே, உஷா உதுப் போன்றவர்களும் தமிழில் எல்.ஆர்.ஈஸ்வரியும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.

இவர்கள் பாடிய பாடல்களை இசைத்தட்டுகளில் ரசிக்கும் நாம் திரையில் பார்க்க முடியாத ஒரு நிலையும் ஏற்படுகின்றது. திரை இசையமைப்பாளர்களை பொறுத்தவரையில் உலக இசைவடிவங்களில்  எல்லாம் ஓர் பொது தன்மை உண்டென்பதையும் ,ஒரே மூலத்தின் பல்வேறு வடிவங்கள் என்ற புரிதல் இருந்திருக்கிறதென்பதையும் , எந்தமாதிரியான இசை என்றாலும் அதை  அவர்கள் ஈடுபாட்டுடன்  தந்தார்கள் என்பதையும் இப்போது நம்மால் உணர முடிகிறது.

திரைப்படத்திற்கு இசை வழங்குவதென்பது எந்த விதியுமற்ற பரந்த வெளியாக இருந்ததால் அது குறித்த கட்டுப்பாடுகள் இல்லாததாலும் இசையமைப்பாளர்கள் தமது ரசனைக்கு ஏற்பவே இசையமைக்க முடிந்தது. இவர்களுக்கு முன்மாதியாக ஹிந்தி திரை இசை ஆக்கிரமிப்பு செய்ததும் தமிழ் திரையிசையமைப்பாளர்கள் அவர்களை நோக்குவதும் ,அவர்களைத் தவிர்க்க முடியாத ஒரு நிலையும் தொடர்ந்து கொண்டிருந்ததால் இவர்களும் அந்த அலையில் மோதிப்புரண்டு அடிபட்டுக் கொண்டிருந்தனர்.

அந்தவகையிலேயே கபெரே நடனம் இசையுடன் உள்நுழைந்தது.

1960 களில் மெதுவாக ஆரம்பித்த " காபரே " நடனக்காட்சிகள் ,அதற்கான பாடல்கள் 1965களில் அதிக வீச்சுடன் பரவ ஆரம்பித்தது. கண்ணகி,கற்பு என பேசிக்கொண்டு வியாபார ஊக்கு நெறியாக காபரே நடனக்காட்சிகளும் இடைச் செருகல்களாக புகுத்தப்பட்டன. அதற்கும் முன்னோடியாக ஹிந்தி திரைப்படங்களே காரணமாயிருந்தன. விதைகளுக்கு ஏற்ப மரம் முளைப்பது போல இவ்வகையான பாடல்களும் உருவாகின.

காபரே என்பது ஐரோப்பாவில் தோன்றிய இசை கலந்த பொழுது போக்கு நாடக வடிவமாகும். இது பெரும்பாலும் மது பரிமாறப்படும் உணவகங்களிலும் , மதுச்சாலைகளிலும் , இரவுவிடுதிகளிலும் , சூதாட்டசாலைகளிலும் இசையுடன் கூடிய தனிநபர் மற்றும் சிறுகுழுவினரின் நடனத்துடனும் நிகழ்த்தப்பட்ட வயதுவந்தோர்களுக்கான   களியாட்ட அம்சமாகும். பின் அமெரிக்கா சென்று விஸ்தாரம் பெற்று நிழல் உலகத்தின் ஒரு முக்கிய அம்சமாகவே இருந்தது.

ஜாஸ் இசையுடன் இணைந்த காபரே அமெரிக்காவில் அதற்கான இசைக்கலைஞர்களையும் உருவாக்கியது. அவர்களில்   Nina Simone, Eartha Kitt , Peggy Lee , Lorette Hildegarde போன்றோரைக் குறிப்பிடலாம். இந்த வகை இசையை பொறுத்தவரையில் ஜாஸ் இசையில் 1930௧ளிலும்,1940௧ளிலும் புகழ் பெற்றிருந்த Benny Goodman சில பாடல்களை வாத்திய இசையில் அமைத்து பொழுதுபோக்கு இசைக்கு முக்கிய பங்காற்றினார். அந்தவகையில் அவர் வாத்திய இசையில் அமைத்த இசை அக்கால ஜாஸ் இசையுடன் ஆடல்காட்சிகளிலும் இடம் பிடித்தன. அவர் இசையில் 1930களில் வெளிவந்த " Sing, sing, sing, " என்ற வாத்திய இசைவடிவம் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.

ஹிந்தி திரையிசையில் மேற்கத்திய இசைவடிவத்தை அறிமுகம் செய்தவர் என அறியப்படும் சி.ராமச்சந்திரா Benny Goodmanனின் இசையமை முன்மாதிரியாகக் கொண்டவர் என்பது வரலாறு.

காபரே ஒரு கலை என்ற ரீதியில் தனியே ஒரு கலைஞர் , மற்றும் சிறுகுழுவினர் என பலவகையில் ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்டு வந்தது. ஒருவரின் இசை கலந்த நடிப்புடனும் , ஆடலுடனும் ,முக்கியமாகப் பாடலுடனும் இணைந்திருந்தது என்று வகையில் இந்தப்பாடல் முறையையும் இந்திய சினிமா  ,குறிப்பாக வி.குமார்

முதலில் இந்தி சினிமாவும் அதைப்பின்பற்றி தமிழ் சினிமாவும் தமக்கான முறைகளில் பயன்படுத்திக் கொண்டனர்.

குறிப்பாக மதுச்சாலைகளிலும் , திருடர்கள் கூடும் இடங்களிலும் ,அந்த இடங்களில் கதாநாயகர்கள் மாறுவேடங்களில் சென்று கிரிமினல் கூட்டங்களை கண்டுபிடிக்கும் காட்சிகளிலும் இது போன்ற காட்சிகளை அமைத்து பாடல்களையும் தந்தார்கள்.

உண்மையில் இது ஒன்று புதுமையான முறையல்ல என்றே தோன்றுகிறது. ஆணின் காமம் சார்ந்த வடிகாலாக விளங்கிய தேவதாசிகளிடம் செல்லும் ஒரு நீண்ட வரலாறு நம்மிடம் உண்டு என்ற வகையில் பல பாடல்கள் நாடகங்களிலும் பின்னர் திரைப்படங்களிலும் இடம்பெற்றன.

சங்கரதாஸ் சுவாமிகள் நாடங்களில் கூட இந்நிலைகள் வெளிப்பட்டிருக்கின்றன. புராண இதிகாசங்களின் கதைகளை அவர் இசைக்கலந்த நாடகமாக்கியதன் விளைவுகள் இவை. கோவலன், சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகப்பாடல்களில் இவற்றை நாம் காணலாம்.

"காமி சத்யபாமா கதவைத் திறவாய் " [சத்தியவான் சாவித்திரி]

" மனோரம்மிய மயிலே மதிவதனி " [ பாமா விஜயம்]

தாசிகளிடம் சென்று பாடுவதாக அமைக்கப்பட்ட நாடகப்பாடல்கள் இவை.

பின்னர் இதுவே " கதவைச் சாத்தடி , கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் " [ரத்தக்கண்ணீர் ] மற்றும் பராசக்தி [1952] படத்தில் " ஓ..ரசிக்கும் சீமான் வா " என்ற பாடல்களும் , பின்னர் காதல் தோல்வியால் மனம் குழம்பிய தேவதாஸை அவனது நண்பன் மனநிம்மதிக்காக தாசியிடம் கொண்டு செல்லும் காட்சியில் " சந்தோசம் வேணுமென்றால் இங்கே கொஞ்சம் என்னை பாரு காண்ணா "   என்ற பாடலையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

"சந்தோசம் வேணுமென்றால் " தேவதாஸ் படப்பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்பது குறிப்பித்தக்கது.

தமிழ் திரைப்படங்களில் கால மாறுதல்களுக்கேற்ப ஏற்ப இதுமாதிரியான சூழ்நிலைகளுக்கு பாடல்கள் வெளிவந்துள்ளன என்பதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் 1965 களிலும் அதைத்தொடர்ந்து காலங்களிலும் காபரே பாடல்கள் அதிகம் இடம் பெறத்தொடங்கின.

ஜாஸ் இசையுடன் ஒன்றிக்கலந்த காபரே நடன இசையை மனநிம்மதி தேடும் நாயகன்/ நாயகி செல்லுமிடமான மதுச்சாலையில் பாடும் பாடல்கள் சிலவற்றை 1960 களின் முற்பகுதியிலேயே மெல்லிசைமன்னர்கள் தந்தார்கள்   என்பதற்கு சான்றாக கீழ்கண்ட இரு பாடல்களைக் கூறலாம்.

01 இது வேறு உலகம் தனியுலகம் - நிச்சயதாம்பூலம் 1962 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி -இசை : விஸ்வநாதன்   ராமமூர்த்தி

02 அம்மம்மா கேளடி தோழி - கறுப்புப்பணம் 1963 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்   ராமமூர்த்தி

காபரே பாடல்களை வைப்பதென்பது ரசிகர்களை வரவழைக்கும் ஒரு யுத்தியாகவும் , மேலைநாட்டுக் கலாச்சாரத்தை விட நம் நாட்டு கலாச்சாரம் மேன்மையானது என எண்ண வைக்கும் ஒரு போக்காகவும் அமைக்கப்பட்டு மேலைத்தேய இசை  என்றாலே அரைகுறை உடுப்புகளுடன் ஆடுவது என்றும் மேலைத்தேய இசை என்பதும் தரக்குறைவானது, இசையில்லாதது என்பது மாதிரியான உளவியலை ஏற்படுத்தவும் பயன்பட்டது. பெண்களில் நாயகிகள் கற்பில் சிறந்தவர்களாகவும், காபரே நடனம் ஆடுபவர்கள் வில்லிகளாகவும் ,சதிகாரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். காபரே பாடலைப் பாடுவதற்க்கென்றே சில பாடகிகளும் வடிவமைக்கப்பட்டனர். ஹிந்தியில் ஆஷா போஸ்லே, உஷா உதுப் போன்றவர்களும் தமிழில் எல்.ஆர்.ஈஸ்வரியும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.

01 ஆடவரெல்லாம் ஆடவரலாம்   - கறுப்புப்பணம் 1963 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்   ராமமூர்த்தி.

02 அடடா என்ன அழகு - நீ 1965 - எல்.ஆர்.ஈஸ்வரி -இசை : விஸ்வநாதன்

03 பளிங்கினால் ஒரு மாளிகை   - வல்லவன் ஒருவன்   1966 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : வேதா

04 அந்த அறையினில் ஒரு ரகசியம்     - சி.ஐ.டி சங்கர் 1966 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : வேதா

05 You keep saying you have something - மூன்றெழுத்து   1966 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : மெல்லிசைமன்னர் டீ.கே.ராமமூர்த்தி

06மம்மா ..கன்னத்தில் கன்னம் வைத்து   - வல்லவன் ஒருவன்   1966 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : வேதா

07 பொன்னாலே வாழும் - அன்னையும் பிதாவும் 1969 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

08 கோட்டை மதில் மேலே   - திருடன் 1969 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

இந்தப் பாடல்களை இசைத்தட்டுகளில் ரசிக்கும் நாம் திரையில் பார்க்க முடியாத ஒரு நிலையும் ஏற்படுகின்றது.

திரை இசையமைப்பாளர்களை பொறுத்தவரையில் உலக இசைவடிவங்களில்  எல்லாம் ஓர் பொது தன்மை உண்டென்பதையும் , அவை ஒரே மூலத்தின் பல்வேறு வடிவங்கள் என்ற புரிதல் இருந்திருக்கிறதென்பதையும் , எந்தமாதிரியான இசை என்றாலும் அதை  அவர்கள் ஈடுபாட்டுடன்  தந்தார்கள் என்பதையும் இப்போது நம்மால் உணர முடிகிறது.

படங்களுக்காக இவை போன்ற சில பாடல்கள் அமைந்தாலும், இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்கள் பலவற்றையும் தந்திருக்கிறார்கள். குறிப்பாக மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வேகமும் அதில் அவர் காட்டிய நாதமும் மிகவும் சிறப்பு மிக்கதாகும்.

பிரிவுக்குப் பின்னர் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படங்களில் வெளிவந்த பாடல்களை நோக்கும் போது அடுத்து வருகின்ற பத்தாண்டுகளும் இசைரசிகர்களின் பேராதரவை பெறப் போவதை கட்டியம் கூறின.

ஒவ்வொரு படத்திலும் எத்தனைவிதமான இனிய பாடல்கள் என்பதற்கு   1966 ல் வெளிவந்த பாடல்களே உதாரணமாக விளங்குகின்றன.

இந்தக்காலங்களில் வெளிவந்த சில முக்கிய பாடல்கள்.

1965 கலங்கரை விளக்கம்

01 பொன் எழில் பூத்தது புது வானில் - கலங்கரை விளக்கம் 1965 - டி.எம்.எஸ் +பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02 என்னை மறந்ததேன் - கலங்கரை விளக்கம் 1965 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03 காற்று வாங்கப் போனேன்   - கலங்கரை விளக்கம் 1965 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

1965   நீ

01  வெள்ளிக்கிழமை விடியும் வேளை - நீ 1965  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

1965 சாந்தி

01  செந்தூர் முருகன் கோவிலிலே - சாந்தி  1965  - பி.சுசீலா + பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்  - சாந்தி  1965  - பி.சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  யார் அந்த நிலவு  - சாந்தி  1965  - டி.எம்.எஸ்   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966  எங்க பாப்பா 01  ஒரு மரத்தில் குடியிருக்கும்  - டி.எம்.எஸ்.+ எம்.எஸ்.ராஜேஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். 02  புது வீடு வந்த நேரம்     - டி.எம்.எஸ்.+ சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  சொந்த மாமனுக்கு    - டி.எம்.எஸ்.+ சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

1966  அன்பே வா 01  உள்ளம் என்றொரு கோவிலிலே  - டி.எம்.எஸ். - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். 02  ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்     - டி.எம்.எஸ்.+ சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  நான் பார்த்ததில் அவள் ஒருத்தியை தான்    - டி.எம்.எஸ்.+ சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

04 Love Birds Love Birds    - சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

1966 கொடிமலர் 01  மலரே மலரே நீ சொல்ல ஒரு மொழியுமில்லை   - சுசீலா . - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். 02  மௌனமே பார்வையால்      - பி.பி.ஸ்ரீனிவாஸ்    - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  சிட்டாகத் துள்ளி துள்ளி வா     - டி.எம்.எஸ்.+ சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். 04  கண்ணாடி மேனியடி   - பி.சுசீலா = எல்.ஆர்.ஈஸ்வரி . - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966 குமரிப்பெண் 01  தேன் இருக்கும் மலரினிலே  - குமரிப்பெண்  1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீ ராஜா  - குமரிப்பெண் 1966- பி.பி.ஸ்ரீனிவாஸ்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  யாரோ ஆடாத தெரிந்தவர் யாரோ   - குமரிப்பெண் 1966- எல்.ஆர்.ஈஸ்வ்ரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  நடந்தது என்னவென்று நீயே சொல்லு  - குமரிப்பெண் 1966- பி.பி.ஸ்ரீனிவாஸ் + எல்.ஆர்.ஈஸ்வ்ரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966   கௌரி கல்யாணம் 01  ஒருவர் மனதை ஒருவர் அறிய  - கௌரி கல்யாணம் 1966  - டி.எம்.எஸ்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  வெள்ளைக் கமலத்தில்  - கௌரி கல்யாணம் 1966  - சூலமங்கலம்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  திருப்புகழை பாடப் பாட  - கௌரி கல்யாணம் 1966 - பி.சுசீலா + சூலமங்கலம் - 04  வரணும் வரணும் மகாராணி - கௌரி கல்யாணம் 1966 - டி.எம்.எஸ்  பி.சுசீலா-

1966   சித்தி 01  காலமிது காலமிது  -  சித்தி - 1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  சந்திப்போமா இன்று  -  சித்தி - 1966  - பி.பி.ஸ்ரீனிவாஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  தண்ணீர்  சுடுவதென்ன  - - சித்தி - 1966  - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966   தட்டுங்கள் திறக்கப்படும் 01  கல்யாணப்பந்தல் அலங்காரம்   -  தட்டுங்கள் திறக்கப்படும்  - 1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  கண்மணி பாப்பா   -  சித்தி - 1966  - ஜே.பி.சந்திரபாபு   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966   நாடோடி 01  நாடு அதை நாடு   -  நாடோடி  - 1966  - டி.எம்.எஸ். + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  அன்றொரு நாள் இதே நிலவில்  -  நாடோடி  1966  - டி.எம்.எஸ். + பி.சுசீலா  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  உலகமெங்கும் ஒரே மொழி   - நாடோடி  1966  - டி.எம்.எஸ். + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  அன்றொரு நாள் இதே நிலவில்  - நாடோடி  1966  - எல்.ஆர்.ஈஸ்வரி . + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 05  பாடும் குரல் இங்கே   - நாடோடி  1966  -  பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 06  ரசிக்கத்தானே இந்த அழகு    - நாடோடி  1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 07  கடவுள் செய்த பாவம்     - நாடோடி  1966  - டி.எம்.எஸ்  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 06  திரும்பி வா ஒளியே     - நாடோடி  1966  - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966   நம்ம வீட்டு லட்சுமி 01  நல்ல மனைவி நல்ல பிள்ளை    -  நம்ம வீட்டு லட்சுமி 1966  - சீர்காழி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  அலங்காரம் கலையாமல்   -  நம்ம வீட்டு லட்சுமி  1966  - ஜேசுதாஸ்  + எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  பணமிருந்தால் போதுமடா   - நம்ம வீட்டு லட்சுமி  1966 - சீர்காழி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  வழி வழியே வந்த தமிழ் பண்பாடு   - நம்ம வீட்டு லட்சுமி 1966  - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966   பறக்கும் பாவை 01  கல்யாண நாள் பார்க்க  - பறக்கும் பாவை 1966  - டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  முத்தமோ  மோகமோ     - பறக்கும் பாவை   1966  - டி.எம்.எஸ். +  எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  சுகம் எதிலே      - பறக்கும் பாவை   1966  -  டி.எம்.எஸ். + ஜேசுதாஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  உன்னைத்தானே ஏய்   - பறக்கும் பாவை   1966 -  டி.எம்.எஸ். +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 05  நிலவென்னும் ஆடை கொண்டாளோ  - பறக்கும் பாவை   1966  -  டி.எம்.எஸ் +  சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 06  யாரைத்தான் நம்புவதோ   - பறக்கும் பாவை   1966  -   சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966   பெற்றால்  தான் பிள்ளையா 01  செல்லக்கியே மெல்லப் பேசு     - பெற்றால்  தான் பிள்ளையா  1966 - டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  கண்ணன்  பிறந்தான் எங்கள்    - பெற்றால்  தான் பிள்ளையா  1966 - டி.எம்.எஸ். +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  நல்ல நல்ல பிள்ளைகளை - பெற்றால்  தான் பிள்ளையா  1966  - டி.எம்.எஸ். + எல்.ஆர்.ஈஸ்வரி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  சக்கரைக்கட்டி ராசாத்தி    -  பெற்றால்  தான் பிள்ளையா   1966 -  டி.எம்.எஸ். +  சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966   ராமு 01  நிலவே என்னிடம் நெருங்காதே   -  ராமு 1966 -  டி.எம்.எஸ். +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  கண்ணன் வந்தான் எங்கள்   - ராமு 1966  -  டி.எம்.எஸ். +  சீர்காழி    - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  பச்சை மரம் ஒன்று  -  ராமு 1966 -  ஸ்ரீனிவாஸ் . +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04  முத்து சிப்பி மெல்ல மெல்ல    -  ராமு 1966 -  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1966   மோட்டார் சுந்தரம்பிள்ளை 01  மனமே முருகனின் -  மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966 -  ராதா ஜெயலட்சுமி  - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 02  காத்திருந்த கண்களே  -  மோட்டார் சுந்தரம்பிள்ளை1966 -  ஸ்ரீனிவாஸ் . +  சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03  துள்ளித் துள்ளி விளையாட   -  மோட்டார் சுந்தரம்பிள்ளை1966 -  சூலமங்கலம் +  சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியுடனான பிரிவுக்கு பின் ,அடுத்த ஆண்டிலேயே இத்தனை கற்பனை வளம் எல்லாம் கொட்டி விட்டால் அடுத்தடுத்த ஆண்டுகளில் என்னாகும் என்ற எண்ணம் இந்தப்பாடல்களைக் கேட்கும் யாவருக்கும் இருக்க முடியாது.

தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் ஆண்டுக்கு சராசரியாக 10 திரைப்படங்களுக்கு இசைவழங்கிய மெல்லிசைமன்னரின் படைப்பில் பல இனிய பாடல்கள் வெளிவந்தன. எத்தனை,எத்தனை விதமான உணர்ச்சி பாவங்கள் !!

தனியே இசையமைப்பதில் உள்ள அவரது திறமையும் ,மிகுதியான தன்னம்பிக்கையும் , திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அசாத்தியமானது.

1965 முதல் 1969 வரை அவர் இசையமைத்த படங்கள்:

1967 : அனுபவி ராஜா அனுபவி - அனுபவம் புதுமை - காவல்காரன் - செல்வமகள் - தங்கை - நெஞ்சிருக்கும் வரை - பெண் என்றால் பெண்.

.1968 :  அன்புவழி  உயர்ந்த மனிதன் - உயிரா மணமா - என் தம்பி - கலாட்டா கல்யாணம் - தாமரை நெஞ்சம் - நீயும் நானும் - நிமிர்ந்து நில் - ரகசிய போலீஸ் 115  - லட்சுமி கல்யாணம்- குடியிருந்த கோயில்.

1969 :  அன்பளிப்பு -அன்னையும் பிதாவும் - அத்தை மகள் - ஓடும் நதி - கண்ணே பாப்பா  - கன்னிப்பெண் - சாந்தி நிலையம் - சிவந்த மண் - திருடன் - நில் கவனி  காதலி  - பால்குடம் - பூவா தலையா.

1965 முதல் 1969 வரை அவரது படைப்பின் வீச்சு சற்றும் குறையவில்லை என்பதை அவரது பாடல்களில் இசைந்து வரும் இயல்பான இசையும் , அதீத கற்பனை வளமும் ,இயல்பான இசையோட்டமும் நிரூபிக்கின்றன.

1966 – 1969 வரை இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சில முக்கிய பாடல்களை பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

01 முத்துக் குளிக்க வாரீகளா - அனுபவி ராஜா அனுபவி   1967 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி

- இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02 கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்   - அனுபவம் புதுமை 1967 - பி.பி.ஸ்ரீனிவாஸ் . + சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03 மெல்லப்போ மெல்லப்போ - காவல்காரன் 1967 - டி.எம்.எஸ். + எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04 குயிலாக நானிருதென்ன   - செல்வமகள் 1966 - டி.எம்.எஸ். + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

05 கேட்டவரெல்லாம் பாடலாம் - தங்கை 1967 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06 பூ முடிப்பாள் இந்த   - நெஞ்சிருக்கும் வரை 1967 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07 கேட்டவரெல்லாம் பாடலாம் - தங்கை 1967 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

08 சிரித்தாலும் கண்ணீர் வரும் - பெண் என்றால் பெண் 1967 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

09 அந்த நாள் ஞாபகம்     - உயர்ந்த மனிதன் 1968 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

10 நாளை இந்த வேளை பார்த்து   - உயர்ந்த மனிதன் 1968 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

11 வெள்ளிக்கிண்ணம் தான் - உயர்ந்த மனிதன்1967 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

12 கொடியில் இரண்டு மலர் - உயிரா மானமா 1968 - டி.எம்.எஸ் + suseelaa - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

13 முத்து நகையே உன்னை   - என் தம்பி 1968 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

14 நல்ல இடம் நீ வந்த இடம்   - கலாட்டா கல்யாணம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

15 தித்திக்கும் பால் எடுத்து   - தாமரை நெஞ்சம்   1968 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

16 ஆலயம் என்பது வீடாகும்   -   தாமரை நெஞ்சம் 1968 - பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

17 தேடி வரும் தெய்வ சுகம் - நிமிர்ந்து நில்   1968 - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

18 உன்னை எண்ணி என்னை மறந்தேன் -   ரகசிய போலீஸ் 115   1968 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

19 கண்ணில் தெரிகின்ற வானம்   -   ரகசிய போலீஸ் 115   1968 - டி.எம்.எஸ் + ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

20 என்ன பொருத்தம்   -   ரகசிய போலீஸ் 115   1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

21 பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் -   லட்சுமி கல்யாணம் 1968 - பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

22 ராமன் எத்தனை ராமனடி   -   லட்சுமி கல்யாணம் 1968 - பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

23 தேரு வந்தது போலிருந்தது   - அன்பளிப்பு 1969 - டி.எம்.எஸ் +பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

24 வள்ளிமலை மான் குட்டி   - அன்பளிப்பு 1969 - டி.எம்.எஸ் +பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

25 காலமகள் மடியினிலே ஓடும் நதி- ஓடும் நதி 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

26 குன்றத்தில் கோயில் கொண்ட   - ஓடும் நதி 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

27 மலரும் மங்கையும் ஒரு ஜாதி   - அன்னையும் பிதாவும் 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

28 கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா   - கண்ணே பாப்பா   1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

29 தென்றலில் ஆடை பின்ன   - கண்ணே பாப்பா   1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

30 பௌர்ணமி நிலவில்   - கன்னிப்பெண் 1969 - எஸ்.பி.பி + எஸ்.ஜானகி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

31 ஒளி பிறந்த போது   - கன்னிப்பெண் 1969 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

32 கடவுள் ஒரு நாள் உலக்கைக் காண - சாந்தி நிலையம் 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

33 இயற்கை என்னும் இளையகன்னி - சாந்தி நிலையம் 1969 - எஸ்.பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

34 ஒரு ராஜா ராணியிடம் - சிவந்த மண் 1969 - டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

35 பட்டத்து ராணி பார்க்கும் பார்வை - சிவந்த மண்1969 - எஸ்.பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

36 பார்வை யுவராணி கண்ணோவியம்   - சிவந்த மண்1969 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

37 முழு நிலவின் திருமுகத்தில் - பால்குடம் 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

38 ஆடலுடன் பாடலைக் கேட்டு - குடியிருந்த கோயில் 1968 - டி.எம்.எஸ் +பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1960களிலே புத்தெழுச்சியாக ஆரம்பித்த மெல்லிசைமன்னர்களின் இசை பின் வந்த பலருக்கு ஆதர்சமாக விளங்கியது. ஹிந்தி திரை இசையின் வாத்திய இசைக்கோர்வைகளுக்கு நிகராகவும் வளர்ந்தது.

தமிழில் 1960 களின் மத்தியில் அறிமுகமான புதிய சில இசையமைப்பாளர்களின் இசையிலும் நல்ல பல பாடல்கள் வெளிவந்தாலும் ,அவற்றிலும் விஸ்வநாதனின் நிழல் படிந்திருந்தன்றால் மிகையில்லை என்று சொல்லலாம். புதியவர்கள் தொடர்ந்து இசை தந்தாலும் விஸ்வநாதனே தொடர்ந்து முன்னிலையிலிருந்தார். படைப்பாற்றலில் அவருக்கு நிகராக யாராலும் வரமுடியவில்லை என்பதே யதார்த்தமாக இருந்தது.

என்னதான் அதீததிறமை இருந்தாலும் கால மாற்றத்திற்கேற்ப தனது இடத்தைத் தக்கவைக்க தன்னை புதுப்பிக்க வேண்டிய நிர்பந்தம் மெல்லிசைமன்னர் விஸ்வநாதனுக்கு நேர்ந்தது. அதையும் அவருக்கேயுரிய சமயோசித மதிநுட்பத்துடன் நிலைநாட்டினார் என்றே சொல்ல வேண்டும். அந்த புதிய அலையை 1970 களில் உருவாக்கிக் காட்டினார்.


முதுமை தட்டாத இசையும் புதிய பாடகர்களும் :

எம்.ஜி .ஆர் ,சிவாஜி ,ஜெமினி கணேசன் போன்றோர்கள் முன்னணியில் திகழ்ந்த வேளையில் புதியவர்களான முத்துராமன் ,ஜெய்சங்கர் ,ரவிசந்திரன், ஏ.வி.எம்.ராஜன் , போன்ற நடிகர்கள் அறிமுகமானாலும் ,அவர்களும் அறிமுகமாகி ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும் ,முன்னையவர்களே   முன்னணியிலிருந்த வேளையில் ஏலவே சொல்லப்படட கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு ஒரு விதமான சலிப்பு தன்மை கதைகளில் இருந்தது. பழைய நடிகர்களின் வகைமாதிரியான நடிப்பும் ,கதைகளின் தொய்விற்கும் இசையால் மட்டும் எப்படி புதுமை சேர்க்க முடியும். பாடல்களில் ,இசையில் தொய்வு என்று 1970 களின் பாடல்களை பற்றி பேச்சு மெதுவாகக் ஒலிக்கத்தொடங்கியது. இது குறித்து மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி " புதியவர்களை சினிமா உலகம் புகவிடாமல் இருப்பது தான் காரணம் " என கருத்து கூறியது கவனத்திற்குரியது.

மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி கூறிய கருத்து புது இசையமைப்பாளர்கள் உருவாக்கவில்லை என்பதாகவே நாம் நினைக்க வழி வகுக்கிறது. இதை நிரூபிப்பது போல ஹிந்தி சினிமாவில் பல புதிய இசையமைப்பாளர்கள் உருவாக்கி வந்த காலமும் அதுவாக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.ஆனாலும் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் இசையில் வெளிவந்த அக்காலப் பாடல்களை நோக்கும் போது அவரது படைப்பாற்றல் அந்த மந்த நிலையைக் கடக்க முயன்றதாகவே தெரிகிறது.

மிஸ்ஸியம்மா , பிரேமபாசம், மனம் போல மாங்கல்யம் போன்ற புகழபெற்ற படங்களுக்கு இசையமைத்த   பழம்பெரும் இசையமைப்பாளரான எஸ்.ராஜேஸ்வரராவ் ஒரு படத்தின் இசையமைப்பில் போது படத்தின் இயக்குனர் "புதுமையான இசை வேண்டும் " என்று கோரிக்கை வைக்க " என்னய்யா இது , இருபது வருடத்திற்கு முன் இருந்த அதே கதாநாயகன் ,அதே மாதிரியான பழைய கதை , அதற்கு ஏன் புதிய இசை ; பழைய இசையே இதற்கு போதும் " என்று கூறினாராம்.

குறிப்பாக 1970 முதல் 1973 வரை வெளிவந்த வழமையாகப் பாடிவந்த பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் அவ்வப்போது பாடிவந்த எஸ்.ஜானகி போன்ற பாடகர்களுடன் பி.வசந்தா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற புதிய பாடகரையும் பாட வைத்தார்.இக்காலங்களில் வெளிவந்த பாடல்களில் மெல்லிசையின் வசீகரங்களை இயல்பாக இழையோடும் இனிமையுடன் இணைந்திருப்பதைக் காண முடியும். அங்கே மெல்லிசையின் வலிமையையும் ,ஆறாகப் பெருக்கெடுக்கும் படைப்பாற்றலையும் காண்கிறோம்.அலுக்காமல் ,சலிக்காமல் தனி ஒருவராக அவர் நிகழ்த்திய இசையமைப்பு இன்று கேட்டும் போதும் நம்மை பெரு வியப்புக்குள்ளாக்குகிறது.பாடல்களில் தான் எத்தனை எத்தனை இனிய இசைவுகள்!

பகட்டும் ,போலித்தனமும் மிகுந்த ,ஒரே வகைமாதிரியான போலிக் புனைவுகளாக அமைக்கப்பட்ட ,செயற்கைத்தனமான கதைகளுக்குக்கூட ஆன்மா தழுவும் பாடலைத் தந்து தனது அடிமன பேரரசையை இசையாக அள்ளி வீசியிருக்கின்றார். அற்ப காட்சிகளுக்கு ஜீவன் ததும்புகிற,உள்ளக் கிளர்ச்சிகளை உண்டாக்குகிற , வாத்தியஇசையின் தனித்துவம் மிக்க மீட்டல்களை அபரிமிதமாகத் தந்து கேட்கும் போதெல்லாம் நினைவுகளைக் கிளறிவிடும் பாடல்களுக்கு நம்மை அடிமைப்படுத்தி சென்றிருக்கின்றார்.

குறிப்பாக பி.சுசீலாவை வைத்து அவர் நிகழ்த்திக்காட்டிய மெட்டுக்கள் கட்டறுத்து சென்ற இசை வெள்ளம் போன்றதாகும்.எத்தனை ,எத்தனை பாவங்கள்..எத்தனை விதமான பாடல்கள்!!

01 காதல் காதல் என்று பேச - உத்தரவின்றி உள்ளே வா 1971 - பி.சுசீலா + எம்.எல்.ஸ்ரீகாந்த் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02 ஒரு நாள் இரவு பகல் போல நிலவு     - காவியத் தலைவி 1970 - பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03 வசந்தத்தில் ஓர் நாள் - மூன்று தெய்வங்கள்     1971 -பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04 மலர் எது என் கண்கள் தானென்று   - அவளுக்கென்றோர் மனம் 1971 -பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

05 இறைவன் வருவான்   - சாந்தி நிலையம் 1971 -பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06 செல்வங்களே தெய்வங்கள் வாழும்   - சாந்தி நிலையம் 1971 -பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07 கடவுள் ஒருநாள் உலகைக்காக்க - சாந்தி நிலையம் 1971 -பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

08 ஓராயிரம் நாடகம் ஆடினாள் - சுமதி என் சுந்தரி 1971 -பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

09 ஒரு நாள் இரவு பகல் போல நிலவு     - காவியத் தலைவி 1970 - பி. சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

10 சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி 1970 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

11 கையோடு காய் சேர்க்கும் காலங்களே     -   காவியத்தலைவி   1971 - எஸ் .பி.பி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

12 நிலவே நீ சாட்சி   - நிலவே நீ சாட்சி 1970 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

13 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - அவளுக்கென்றோர் மனம் 1971 - எஸ்.ஜானகி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

14 கண்ணன் எந்தன் காதலன்   - ஒரு தாய் மக்கள்   1971 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

15 ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்     - ஒரு தாய் மக்கள்   1971 - டி.எம்.எஸ் +பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

16 மஞ்சளும் தந்தாள்   - தேனும் பாலும்   1971 - ஜிக்கி + எஸ்.ஜானகி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

17 தன்னந்தனிமையிலே உடல் - ஸ்கூல் மாஸ்டர்   1971 -பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

18 மௌனம் தான் பேசியது - எதிர்காலம்   1973 -எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

19 கண்ணே பாப்பா   - கண்ணே பாப்பா 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

20 தென்றலில் ஆடை பின்ன   - கண்ணே பாப்பா 1969 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

21 மன மேடை மலர்களுடன் தீபம் - ஞானஒளி 1972 - பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

இப்படி எத்தனை வகை,வகையான இசைப்பாடல்களை மெல்லிசைமன்னர் தந்தார் என்பது நம்மை வியக்கவைக்கிறது. பாடலுக்குப் பாடல் புதிய ,புதிய தங்குதடையற்ற இசையோட்டங்ககளும் அதில் உண்டாகும் மன எழுச்சியும் நம்மை தட்டி எழுப்பிச் செல்கின்றன. கணத்திற்கு கணம் மாறிச் செல்லும் எத்தனை விதம்விதமான அருமையான ஒலியலைகள்!

மேலே குறிப்பிட்ட பி.சுசீலா பாடிய அத்தனை பாடல்களிலும் தெளிந்த நீரோட்டம் இருக்கும்.அது தான் மெல்லிசைமன்னர்களின் இசையின் தனி சிறப்பாகும்.

தமிழ் சினிமாவின் வர்த்தக சூத்திரத்தின் "ஹிட் " என்ற சொற்பதத்திற்கும் ,அதற்கப்பாலும் பாடல் கலைவடிவம் என்பதற்கேற்ப முன்னணிப்பாடகரான டி.எம்.சௌந்தரராஜன் ,சுசீலா பாடிய பல பாடல்கள் இன்றும் நாம் கேட்கும் வகையில் உள்ளன. தங்கள் பாடல்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்று எண்ணும் இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்களை தயங்காது இசையமைத்தால் அவை அக்காலங்களையும் கடந்து ரசிக்கப்படும் என்பதற்கு மெல்லிசைமன்னரின் பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

"ஹிட் " என்று கருதப்படுகிற தற்காலிக வெற்றிப்பாடல்கள், குறிப்பாக தாளத்தை முன்னிறுத்தி போடப்படும் பல பாடல்கள் காலவெள்ளத்தில் மறைந்து விடுகின்றன. ஆனாலும்   மெலோடியில் அமைக்கப்பட்ட பாடல்கள் அக்காலத்தில் சில வேளைகளில் வெற்றி பெற முடியாவிட்டாலும் காலம் தாழ்ந்தும் பிற்காலங்களில் ரசிக்கப்படுகின்றன.அதிகமாகப் புகழபெற்ற பாடல்கள் மட்டுமல்ல ,அதிகமாக் கேட்கப்படாத சில பாடல்களும் இனிமையில் முன்நிற்பதை நாம் மெல்லிசைமன்னரின் பாடல்களில் கேட்கலாம். பெரும்பாலும் மெல்லிசைமன்னரின் பாடல்கள் இனிமையில் அக்கால கட்டங்களில் முன்னணியிலேயே இருந்திருக்கின்றன.

01 ஒரு ராஜா ராணியிடம் -சிவந்த மண்1971 - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02 ஒரு நாளிலே உருவானதே - சிவந்த மண் 1971 - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03 செல்லக்கிளிகளாம் பள்ளியிலே - எங்கமாமா 1970 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04 ஒரே பாடல் உன்னை அழைக்கும் - எங்கிருந்தோ வந்தான் 1970 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

05 அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு - ராமன் எத்தனை ராமனடி 1970 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06 தங்கப்பதக்கத்தின் மேலே - எங்கள் தங்கம்   1970 - டி.எம்.எஸ் +பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07 இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - பாபு 1971 - டி.எம்.எஸ்   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

08 நிலாவைப்பார்த்து வானம் சொன்னது - சவாலே சமாளி 1971 - டி.எம்.எஸ்   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

09 எங்கே அவள் என்றே மனம் - குமரிக்கோட்டம் 1971 - டி.எம்.எஸ்   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

10 நாம் ஒருவரை ஒருவர் - குமரிக்கோட்டம் 1971 - டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

11 கன்னி ஒருத்தி மடியில் - நீரும் நெருப்பும் 1971 - டி.எம்.எஸ் + சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

12 எதையும் தாங்குவேன் - தங்கைக்காக 1971 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

13 அழகிய தமிழ் மகள் இவள் - ரிக்சாகாரன்   1971 - டி.எம்.எஸ் + சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

14 கடலோரம் வாங்கிய காற்று - ரிக்சாகாரன்   1971 - டி.எம்.எஸ்   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

15 ஆணையிட்டேன் நெருங்காதே - புன்னகை 1971 - எஸ்.ஜானகி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

16 சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து - பிராப்தம் 1971 - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

17 சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் - பிராப்தம் 1971 - டி.எம்.எஸ் + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

18 இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப்புதல்வன் 1972- டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

19 சிலர் குடிப்பது போல -சங்கே முழங்கு 1972 -டி.எம்.எஸ்.+ எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

20 என்னடி ராக்கம்மா பல்லாக்கு - பட்டிக்காடா பட்டணமா1972 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

21 மூன்று தமிழ் தோன்றியதும் -பிள்ளையோ பிள்ளை 1972 - டி.எம்.எஸ் +பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

22 தேவனே என்னை பாருங்கள் - ஞானஒளி 1972 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

23 அம்மாக்கண்ணு சும்மா சொல்லு -ஞானஒளி 1972 - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

24 அழகிய தமிழ் மகள் இவள் - ரிக்சாகாரன் 1972 - டி.எம்.எஸ் + சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

இவ்விதம் பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் முன்னணிக்குக் கொண்டுவரப்பட்ட முக்கியமான இளம் பாடகர்களில் ஒருவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஏற்கனவே தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழிகளில் சில பாடல்களை பாடிய அவரை தமிழில் அதிகமாகப் பாட வைத்தவர்களில் விஸ்வநாதன் , கே.வி.மஹாதேவன் ,வி.குமார் போன்றோர் முக்கியமானவர்கள். குறிப்பாக மெல்லிசைமன்னரே அவரின் பாடும் ஆற்றல் தெரிந்து அதற்கேற்ப மெட்டுக்களை அமைத்துக் கொடுத்து அவரை முன்னணிக்கு கொண்டுவந்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மிக இளம் வயதில் பாடகராக அறிமுகமானவர்.அவரது முதல் பாடல் , 1967 ம் ஆண்டு வெளிவந்த "மரியாத ராமண்ணா" என்ற தெலுங்குப் படத்தில் , இசையமைப்பாளர் கோதண்டபாணி என்பவருடைய இசையில் "ஏமி ஈ விந்த மோகம் " என்று தொடங்கும் பாட ல் பி.சுசீலாவுடன் இணைந்து பாடி வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் அவரது உறவினரான எம்.ரங்காராவ் என்ற இசையமைப்பாளர் மூலம் அறிமுகமானார்.அவருடைய பாடல் முறை ஆந்திராவின் புகழ்பெற்ற பாடகரான கண்டசாலாவின் நகலாகும். ஆரம்பத்தில் அவர் போல பாடினாலும் பின்னாளில் அதிகம் பாடி தனது தனித்துவத்தைக் காண்பித்தார்.தனது அபிமான பாடகர்களாக முகமது ரபி ,ஜேசுதாஸ் போன்றோரை குறிப்பிடுகின்றார்.

மெல்லிசைமன்னர் இசையில் சாந்தி நிலையம் படத்தில் "இயற்கை என்னும் இளைய கன்னி " என்ற பாடலை பி.சுசீலாவுடன் பாடி தமிழில் புகழ் பெற்றார்.அதைத் தொடர்ந்து தமிழில் எம்.ஜி.ஆர். அவரது அடிமைப்பெண் படத்தில் " ஆயிரம் நிலவே வா " என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார்.எடுத்த எடுப்பிலேயே புகழபெற்ற நடிகர்களுக்கு பாடும் அதிர்ஷ்டம் பெற்றார்.இனிமையான குரல் வளம் கொண்டவராகவும் ,இசையமைப்பாளர்கள் சொல்லிக் கொடுக்கும் மெட்டை விரைவில் கிரகித்துப்பாடும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்குபவர்.

இவரது குரல் வளம் மத்யதாயியில் பாடுவதற்கு மிகவும் இயல்பாகவும் ,சில சமயங்களில் உச்சஸ்த்தாயியிலியும் சோபிக்கக்கூடிய தன்மை கொண்டது. குரலில் ஆழமில்லை .அதனால் கீழ் சுருதியில் இவரது குரல் அவ்வளவாக சோபிக்காது. கேள்வி ஞானத்தில் பாடுபவர். இவர் முறையாக இசை பயின்றவர் அல்ல.சினிமாவில் பாட முறையான பயிற்சி அவசியமில்லை என்பதும் இசையமைப்பாளர் சொல்வதை கிரகித்து பாடினால் போதும் என்பதும் உண்மையே. திறமை என்பதற்கப்பால் இவரது சமுதாய பின்னணியும் இவருக்கு இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க காரணம் என்று சொல்லலாம்.

அன்றைய நாளில் இரண்டாம் நிலையிலிருந்த கதாநாயகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். பாடும் வாய்ப்புகள் குறைந்து போன பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இழந்த வாய்ப்புகள் பெரும்பாலும் பாலசுப்ரமணியத்தால் நிரப்பப்பட்டன. இரண்டாம் நிலைகளிலிருந்த கதாநாயகர்களின் குரலாக எஸ்.பி.பி. மாறினார்.

"ஒரு கால கட்டத்தில் மார்க்கெட் இழந்து ஸ்டுயோக்களில் சும்மா சுற்றிக்கொண்டிருந்தார் என்பது சினிமாவின் அபத்த சூழல்" என்று பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்   பற்றி எழுத்தாளர் R .P .ராஜநாயஹம் குறிப்பிடுவார்.

தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் அதிகமான பாடல்களை பாடிய இவர் ஹிந்தியிலும் கே.பாலசந்தர் இயக்கிய ஏக் துஜே கேலியே [1982] படத்தில் பாடல்களை பாடி புகழ் பெற்றதுடன் அடந்தப்படத்தில் இவர் பாடிய "தேரே மேரே பீச்சுமே" என்ற பாடலுக்கான தேசிய விருதையும் பெற்றார். ஹிந்தி இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் இவரது ஹிந்தி உச்சரிப்பில் அதிருப்தி கொண்ட போதிலும் ,படத்தின் இயக்குனரான பாலசந்தரின் பிடிவாதத்தால் பாட வைக்கப்பட்டார். பின் அப்படப்பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து ஹிந்தியிலும் அதிகம் பாடினார்.

மெல்லிசைப்பாடல்களைப் பாடுவதில் தனித்தன்மை காட்டும் இவர் எல்லாவிதமான பாடல்களையும் பாடும் ஆற்றல் கொண்டவர். தனது பாடும் முறை குறித்து அவ்வப்போது   சுயவிமர்சனமும் செய்து கொள்பவர்.. மெல்லிசை மன்னரிடம் முதல் பாடலை பாடிய இவர் ,அவரது இசையமைப்பில் மிக ஆரம்பத்திலேயே பல இனிய பாடல்களை பாடும் வாய்ப்பையும் பெற்றார்.

மகிழ்சிப் பாடல்களை பாடுவதற்கேற்ற இவரது குரலில் பெண்மை நிறைந்திருந்தாலும் மென்மையான காதல் பாடல்களில் சோபிக்கும் பல பாடல்களை மெல்லிசைமன்னர் இவருக்கென்றே மெட்டமைத்தது போல சீரான ஓட்டத்திலும் ,விறுவிறுப்பிலும் அமைத்து கொடுத்து பாட வைத்திருப்பார். அதை அவரும் நன்றாகவே பாடியுமுள்ளார் .

விஸ்வநாதன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சில ஆரம்பக்கால டூயட் பாடல்கள்.

01 இயற்கை என்னும் இளையகன்னி - சாந்தி நிலையம் 1969 - எஸ்.பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02 பௌர்ணமி நிலவில் கடற்கரை மணலில் - கன்னிப்பெண் 1969- எஸ் .பி.பி + எஸ்.ஜானகி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03 மாதமோ ஆவணி -உத்தரவின்றி உள்ளே வா 1971- எஸ்.பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04 மங்கையரில் மகாராணி - அவளுக்கென்றோர் மனம் 1971 - எஸ்.பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

05 உன்னைத் தொடுவது புதியது -உத்தரவின்றி உள்ளே வா 1971 - எஸ்.பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06 முள்ளில்லா ரோஜா - மூன்று தெய்வங்கள் 1971 - எஸ்.பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07 ஆரம்பம் இன்றே ஆகட்டும் - காவியத்தலைவி 1971 - எஸ்.பி.பி.+ எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

08 என்ன சொல்ல என்ன சொல்ல - பாபு   1971 - எஸ்.பி.பி.+ எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

09 கொட்டிக் கிடந்தது கனியிரண்டு - வாழ்ந்து காட்டுகிறேன் 1975 - எஸ்.பி.பி.   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

10 கல்யாண ராமனுக்கும் - நவாப் நாற்காலி1971 - எஸ் .பி.பி + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

10 யமுனா நதி எங்கே - கவுரவம் 1972 - எஸ் .பி.பி + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

11 நான் என்றால் அது அவளும் நானும் - சூரிய காந்தி 1973 - எஸ் .பி.பி + ஜெயலலிதா     - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

12 ஓடம் கடல் ஓடும் அது சொல்லும் கதையென்ன - கண்மணி ராஜா 1974- எஸ் .பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

13 காதல் விளையாட கட்டில் இது கண்ணே - கண்மணி ராஜா 1974- எஸ் .பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

14 கேட்டதெல்லாம் நான் தருவேன் - திக்குத் தெரியாத காட்டில்   1971 - எஸ் .பி.பி + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

15 ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான் - மிஸ்டர் சம்பத் 1971 - எஸ் .பி.பி + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

16 கல்யாண ராமனுக்கும் - நவாப் நாற்காலி 1971 - எஸ் .பி.பி + பி.சுசீலா   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

17 யமுனா நதி எங்கே - கவுரவம் 1972 - எஸ் .பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

18 நான் என்றால் அது அவளும் நானும் - சூரிய காந்தி 1973 - எஸ் .பி.பி + ஜெயலலிதா     - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

19 ஓடம் கடல் ஓடும் அது சொல்லும் கதையென்ன - கண்மணி ராஜா 1974- எஸ் .பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

20 காதல் விளையாட காட்டில் இது கண்ணே   - கண்மணி ராஜா 1974- எஸ் .பி.பி + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய புகழ்பெற்ற சில தனிப்பாடல்கள்:

01 பொட்டு வைத்த முகமோ - சுமதி என் சுந்தரி 1971 - எஸ் .பி.பி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02 அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன் 1973 - எஸ்.பி.பி.   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03 தென்றலுக்கு என்றும் வயசு - பயணம் 1976 - எஸ்.பி.பி.   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04 அன்பு வந்தது என்னை ஆழ வந்தது - சுடரும் சூறாவளியும் 1971 - எஸ்.பி.பி.   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

05 ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு - அவளுக்கென்று ஓர் மனம் 1973 - எஸ்.பி.பி.   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06 பொன் என்றும் பூ என்றும் - நிலவே ஈ சாட்சி 1973 - எஸ்.பி.பி. - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07 அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன் 1973 - எஸ்.பி.பி. - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

08 வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை 1973 - எஸ்.பி.பி. - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

09 கடவுள் அமைத்து வைத்த மேடை - அவள் ஒரு தொடர்கதை 1974 - எஸ்.பி.பி. - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

இவ்விதம் பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

1971 தொடக்கம் 1980 கள் வரை படத்திற்கு படம் குறைந்தது ஒரு பாடலாவது பாடும் வாய்ப்பை விஸ்வநாதன் எஸ்.பி.பி க்கு கொடுத்தார். எஸ்.பி.பி யின் குரலுக்கேற்ற பாடல்களை அமைத்ததுடன், பழமை படிந்த இசையிலிருந்து மீள்வதற்கான ஒரு வழிமுறையாக புதியவர்களுடன் இனிய மெட்டுக்களையும் இணைத்துக் கொடுக்க முனைந்தார்.

இக்காலத்தில் மெல்லிசைமன்னர் செவ்வியிசையில் நன்கு பரீட்சயமிக்க நல்ல பாடகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.அவர்களில் மூவர் மிக முக்கியமானவர்கள்.


இசையாற்றலும் புதிய குரல்களும் 

திரைப்படங்களில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்களிடம் வாத்தியங்கள் வாசித்தவர்களும் , இசையமைப்பில் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் பலர் தாங்களும் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்ததையும் நாம் அறிவோம். அந்தவகையில் இந்திய திரைவானில் முதல் இரட்டையர்களாக உருவாகிப் புகழபெற்றவர்கள் சங்கர் ஜெய்கிஷன் இணை! இந்த இரட்டையர்கள் இசைக்கலைஞர்களாக இருந்து இசையமைப்பாளர்களானவர்கள்.

நவுசாத்,சி.ராமச்சந்திரா,எஸ்.டி.பர்மன் போன்ற புகழ்மிக்க இசையமைப்பாளர்கள் கோலோச்சிய 1950களிலேயே மிக இளைஞர்காளாக இருந்த போதே மிகப்பெரிய வெற்றிப்பாடல்களைக் கொடுத்தவர்கள் சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர்கள்.

தமிழில் “அவன்” என்ற என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படப்பாடல்கள் இவர்களின் மெலோடி இசைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த இரட்டையர்களை பின்பற்றி கல்யாண்ஜி - ஆனந்தஜி போன்றவர்களும் இவர்களிடம் உதவியாளர்களாக இருந்த லட்சுமிகாந் - பியாரிலால் போன்றோரும் உருவாகினர்.

மெலோடி யுகத்தில் கொடிகட்டிப்பறந்த ஹிந்தி திரையிசையில் அவ்வப்போது புதிய இளம் இசையமைப்பாளர்களும் அறிமுகமாகிக் கொண்டிருந்தனர். புதியவர்களும் தங்கள் இசையால் ஹிந்தி திரையிசையை இளமையாக வைத்துக் கொண்டனர். மூத்த இசையமைப்பாளார்களின் இனிய இசைக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் பாடல்களை,இனிய மெல்லிசைகளை அவர்களும் கொடுத்துக்கொண்டே வந்ததை நாம் அவதானிக்கலாம். இந்த இளம் இசையமைப்பாளர்களின் இசையும் , மூத்த இசையமைப்பாளார்களின் இசையும் பின்னிப்பிணைந்து , ஒருவருக்கொருவர் சவால் என்று சொல்லும் வகையில் இனிய மெலோடியும் , நவீன வாத்திய இசையின் பின்னல்களும் என ஹிந்தி இசையை புதுமையுடனும் , இளமையுடனும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தன. இந்த நிலை 1980களின் இறுதிவரை தொடர்ந்தது.

ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளார்களின் பெயர்களை வரிசைப்படுத்தி, நினைவூட்டிப்பார்த்தால் ஆச்சர்யம் மேலோங்கும்! கேம்சந்பிரகாஷ், நௌசாத் , எஸ்.டி.பர்மன், சி.ராமச்சந்திரா, வசந்த்தேசாய் , எஸ்.என்.திருப்பதி, அனில் பிஸ்வாஸ்,ரோஷன்,குலாம்கைடர்,ஓ.பி.நய்யார், மதன்மோகன், சலீல்சௌத்ரி, சங்கர் ஜெய்கிஷன், ஹேமந்த்குமார், ரவி, கல்யாண்ஜி ஆனந்தஜி , ஜெயதேவ் , ஆர்.டி.பர்மன் , ரவீந்திரஜெயின் , லஷ்மிகாந்த் பியாரிலால்,ராஜேஷ் ரோஷன் , நதீம் ஸ்ராவன் என இந்த வரிசை நீண்டு செல்லும்.

ஹிந்தியில் புதிது புதிதாக அறிமுகமாகி கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் போலவே புதிய நடிகர்களும் அறிமுகமாகிக் கொண்டிருந்தனர் என்பது மட்டுமல்ல, பழைய நடிகர்களும் புகழபெற்ற படங்களிலும் நடித்துக் கொண்டுமிருந்தனர். திலீப்குமாரைத் தொடர்ந்து 1960களின் மத்தியில் அறிமுகமாகி புதிய அலையை உண்டாக்கிய ராஜேஷ்கண்ணா ஹிந்தி திரையின் புதிய சூப்பர் ஸ்டார் ஆகி, பின் அவரைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் அறிமுகாகி புகழ் பெற்றார். அந்த வகையில் ஹிந்தி சினிமா புதிய , புதிய மாற்றங்களைக் கண்டு வந்தது.

ஹிந்தி இசையைப்பொறுத்தவரையில் 1940களில் இசையமைத்துப் புகழ பெற்ற நௌசாத் ,எஸ்.டி.பர்மன் போன்றவர்கள் தொடர்ந்து 1960 , 1970களிலும் இசை வழங்கிக் கொண்டிருந்தார்கள். மென்மையான காதல் நாயகனாக கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்த ராஜேஷ் காண்ணாவின் படங்களுக்கு எஸ்.டி.பர்மன் தனது 70 வயதுகளில் இளமைமிக்க இசைவழங்கிக் கொண்டிருந்தார். ஆராதனா , மிலி , அபிமான், ஷர்மிலி போன்ற படங்களின் பாடல்கள் எவ்வளவு தாக்கம் விளைவித்தன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனது 10 வயதுப் பருவங்களில் எங்கள் குக்கிராமத்தில் [கம்பர்மலை , வல்வெட்டித்துறை ] ஒலித்த ஆராதனா படப்பாடல்கள் எஸ்.டி. பர்மனின் சாதனையையும் சினிமா இசையின் வல்லமையையும் நிரூபிக்க போதுமானவை. அந்தக் காலங்களில் அவை என்ன மொழியில் பாடுகிறார்கள் என்று கூட எனக்குத் தெரியாது.ஆனால் அத்தனை பாடல்களின் மெட்டும் மனப்பாடமாக இருக்கிறது. அதே போலவே மலையாளப்படமான செம்மீன் படப்பாடல்களும் அமோகமாக நமது ஊர்களில் எல்லாம் ஒலித்தன.

ஹிந்தித்திரைப்படங்களின் இந்தியாவிற்கு வெளியேயான செல்வாக்கு .அதன் வர்த்தக விரிவாக்கம் போன்றவற்றால் புதிய ,புதிய உத்திகள் அனுமதிக்கப்பட்டன. குறிப்பாக திரைப்பட வர்த்தகத்தில் இசையின் பங்கு அதிகம் என்பதால் பாடல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு ,பரிசோதனைகள் தாராளமாக அனுமதிக்கப்பட்டன.மேலைத்தேய பாப் இசையின் போக்குகள் முன்மாதிரியாகக் கொள்ளப்பட்டன.இந்தப் போக்கை லஷ்மிகாந்த் பியாரிலால் ,ஆர்.டி.பர்மன் போன்ற அன்றைய இளவட்ட இசையமைப்பாளர்களின் இசையில் நாம் கேட்கலாம். குறிப்பாக ஆர்.டி.பர்மனின் பாடல்களும் ,அவரது பாடல்களில் பயன்படுத்தப்பட்ட வாத்தியங்களில் எழுந்த ஒலிகளும் ,அதைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்ற ஒளிப்பதிவின் தரமும் ஒன்றுசேர்ந்து புதிய இசையின் குறியீடுகளாக அமைந்தன. ஹிந்தி திரை இசையின் புதுமை நாயகனாக ஆர்.டி.பர்மன் பெயர் புகழ் பெற்றது. இக்காலங்களில் ஆர்.டி.பர்மன் இசையில் வெளியான பாபி , ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போன்ற படப்பாடல்கள் அதிக புகழ் பெற்றன.

ஆனால் தமிழ் திரைப்படங்களின் செல்வாக்கு ஓர் குறிப்பிட்ட எல்லைகளுக்குட்ப்பட்டிருந்தலும் அது ஒரு பிராந்திய சினிமாவாகவே கருத்தப்பட்டிருந்ததாலும் அதன் எல்லையும் மட்டுப்பட்டிருந்தது. அதனாலேயே புதுமையும் புகமுடியாமலிருந்து. அதுமட்டுமல்ல அது குறித்த விழிப்புணர்வும் இருக்கவில்லை.

1970களில் தமிழ் திரையில்.எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்ற நடிகர்களின் வல்லாதிக்கம் அதிகமிருந்ததெனினும் ,கே.பாலசந்தர் போன்ற இயக்குனர்களின் புகழ் மெதுவாகக் கசியத் தொடங்கியது. பாலசந்தர் வங்காள கதைகளை தமிழில் மாற்றிக் கொடுத்து சில மாற்றங்களை உருவாக்க முனைப்புக்காட்டிக்கொண்டிருந்தார். காவியத்தலைவி ,அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்கள் இதற்கு சான்று பகரும். அதைத்தொடர்ந்து மத்தியதரவர்க்கத்தின் உள்ளக்குமுறல்கள் உந்தித்தள்ளப்பட்ட ஆரம்பித்தது.

ஆனால் 1970களின் இசையைப் பொறுத்தவரையில் ஒரு சில இசையமைப்பாளர்கள் அறிமுகமானாலும் அவர்கள் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் இசையின் சாயலில் இசை வழங்கிக் கொண்டிருந்தனர் என்றே சொல்ல வேண்டும். ஹிந்தியில் புதிய இசையமைப்பாளர்கள் தங்களின் இசையால் ,பழமையைப் புதுமையால் மெருகேற்றிக் கொண்டே இருந்தனர். அத்தனை பேரும் தங்களது தனித்துவங்களை காண்பித்து மிகச் சிறந்த பாடலைகளைக் கொடுத்துள்ளனர்.

ஹிந்தி இசையமைப்பாளர்கள் தங்களது இசையில் புது,புது வாத்திய இசைக்கோர்வைகளால் புதுமை செய்து கொண்டிருந்தாலும் 1950 களிலேயே புகழபெற்றிருந்த திறமையும்,அனுபவமும் மிக்க முகமது ரபி,கிஷோர் குமார் ,முகேஷ் ,மன்னாடே ,லதா மங்கேஸ்கர் ,ஆஷா போஸ்லே போன்ற பாடக,பாடகிகளையே பயன்படுத்திய வண்ணமே சாதனை செய்து காட்டினார்கள்.

குறிப்பாக 1970களில், பழம்பெரும் இசையமைப்பாளரான எஸ்.டி.பர்மன் இசையில் வெளிவந்த பாடல்கள் மெல்லிசையின் சிகரங்களைத் தொட்டன. வாத்திய இசைச் சேர்ப்பிலும் இனிமையிலும் கொடிமுடிகளைத் தொட்டன. அவரது வசீகரமிக்க அக்கால பாடல்களில் குறிப்பாக ஆராதனா படப்பாடல்களில், வாத்திய இசையில் அவரது மகனும் புகழபெற்ற இசையமைப்பாளருமான ஆர்.டி.பர்மனின் பங்களிப்பு இருந்தது என்ற கருத்தும் உலாவின! தந்தையின் அழகுமிக்க மெலோடிகளுக்கு உயிர்த்துடிப்பு மிக்க வாத்திய இசை வழங்கி சாகாவரம் வரம்பெற்ற பாடல்களைத் தந்தார்கள். சிலர் அந்தப்பாடல்களை ஆர்.டி பர்மன் தான் இசையமைத்தார் என சிலர் சொல்வதுண்டு.

திரை இசையில் இது போன்றதொரு சம்பவம் என்றென்றும் நிகழ்ந்ததில்லை. 1940 மற்றும் 1950 களின் மிக ஆரம்ப காலத்தில் ஒரு படத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இசையமைப்பாளர்கள்   தங்கள் , தங்கள் பாணியில் இசையமைத்திருக்கிறார். ஒருவர் போடும் மெட்டுக்கு இன்னொருவர் பின்னணி இசை வழங்கவில்லை. ஒருவர் பாடல்களுக்கு இசையமைக்க வேறு ஒருவர் படத்தின் பின்னணி இசையை அமைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் திரை இசையில் அப்படி ஒரு சூழ்நிலை மெல்லிசைமன்னருக்கு நிகழ்ந்தது. சி.ஆர்.சுப்பராமனுடன் ஆரம்பித்த தமிழ் திரையின் மெல்லிசைப்பரம்பரையில் வந்த இரண்டாவது பரம்பரையான விஸ்வநாதன் போடும் மெட்டுக்களுக்கு வாத்திய இசை கோர்வைகளை அமைக்கும் வாய்ப்பை அந்த மரபில் வந்த மூன்றாவதும் நிறைவானதுமான பரம்பரையைச் சார்ந்த இசைஞானி இளையராஜா பெற்றார்.

அந்த நிகழ்வு மெல்லத் திறந்தது கதவு [1986] என்ற படத்தில் நிகழ்ந்தது. இன்று அந்தப்பாடல்களை ரசிக்கும் பலர் அவை இளையராஜாவால் இசையமைக்கப்பட்ட பாடல்கள் என்றே கருதுவதை நாம் அறிவோம். உண்மை என்னவென்றால் அந்தப்பாடல்களின் மெட்டுக்களை மெல்லிசைமன்னர் போட்டார், அதற்கு பின்னணி இசையை மட்டுமே இசைஞானி அமைத்தார். ஆனால் அந்த வாத்திய இசை விஸ்வநாதன் அமைத்த மெலோடியின் ஆழமான உந்துவிசையில் பிறந்த எழுச்சி இசை என்று சொல்லலாம். மெல்லிசைமன்னரின் இனிய மெட்டுக்களுக்கு அதற்கிசைந்த [ Harmony ] வகையில் அமைத்து அப்பாடல்களை என்றென்றும் இளமையாக்கியவர் இளையராஜா. மெல்லிசையின் ஞானப் பரம்பரையின் இணைவு அது. " அது ஒரு ஆத்மார்த்த இணைவு ; அப்படி யாருடனும் நான் இணைந்து   செய்ததில்லை " எனப் பின்னாளில் மெல்லிசைமன்னர் கூறினார்.

1970களின் கால கட்டத்தை நாம் உற்றுநோக்கும் போது ஹிந்திப்பாடல்களின் ஆதிக்கம் அதிகமிருந்ததை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். வித்தியாசமான இசையை ரசிப்பது மனித சுபாவங்களில் ஒன்று தான். நான் மேலே குறிப்பிடட ஆராதனா, செம்மீன் வகைப்படங்களில் வெளிவந்த இனிய பாடல்கள் ரசிக்கப்பட்டாலும் , தமிழ் பாடல்களை இசைரசிகர்கள் ஒதுக்கி விடவில்லை என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும். இலங்கை தமிழ் வானொலியில் அரை மணி நேரம் தவிர்ந்த மற்ற நேரங்களில் தமிழ்பாடல்களே ஒலித்துக் கொண்டிருந்தன.

வானொலி தாண்டி ஒலிபெருக்கி உரிமையாளர்களால் சமூக நிகழ்வுகளில் ஹிந்திப்பாடல்கள் சரளமாக ஒலித்துக்கொண்டிருந்தன என்பதற்கப்பால் , தாம் ஹிந்திப்பாட்டு மட்டும் தான் கேட்போம் என்று சொல்லக்கூடிய தம்மை "வித்தியாசமானவர்கள் " எனக் காட்டிக்கொள்ள ஆசைப்பட்டவர்களும் இருந்தார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். இப்படியானவர்கள் எப்போதும் எக்காலத்திலும் இருப்பவர்கள் தான்!

பொதுவாக இசைக்குமட்டுமல்ல எல்லாக்கலைகளுக்கும் ஒரு எல்லைக்கப்பால் நெருக்கடிகள் வருவது இயல்பான ஒன்றே.ரசனையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.அந்தவகையில் மெல்லிசைமன்னருக்கு 1970கள் ஒருவகையில் நெருக்கடியான காலகட்டமே !

1970 களின் ஆரம்பத்திலிருந்து மெல்லிசைமன்னரின் இசை ,தன்னைச் சுற்றியுள்ள இசைப்போக்குகளை அனுசரித்தகாவே தெரிகிறது. ஹிந்தி இசையமைப்பாளர்கள் , ஹிந்தி திரையுலகிலும்,அதற்கப்பாலும் பெற்ற முன்னுரிமை போல தமிழில் இல்லையென்றாலும் தனது இசைப்பணிக்கு நியாயம் செய்தவர் விஸ்வநாதன்.

மெல்லிசைமன்னரின் இசையில் எத்தனை எத்தனை இனிய மெட்டுக்கள் ! தனது படைப்பு வேகத்திற்கு ஜீவ எழுச்சி தரும் மெட்டுக்களை தொய்வில்லாத ,தெளிந்த ,சீரான நீரோட்டமிக்க பாடல்களைத் தந்தார். அதில் ஹசல்,கர்நாடகம், ஜாஸ் மற்றும் இவையெல்லாம் இசைப் பிரவாகத்தில் குழைத்தெடுக்கப்பட்டவை சில சமயங்களில் ஒன்றை ஒன்று மருவி செல்லும் , ஒன்றை ஒன்று தொட்டு கணத்தில் மறையும் மற்றும் ஆழமிக்க ராகங்களில் மெல்லியதாகத் தொட்டு இசையின் இன்பங்களை இசைவீச்சுகளாய் விதந்துரைக்கும் வகையில் பாடல்களைத் தந்தார்.

ஹிந்தி திரையில் பல புதிய இசையமைப்பாளர்கள் தோன்றி , பழைய ,தேர்ந்த பாடகர்களையே வைத்துக் கொண்டு இசையை நவீனமாக்கினார்கள் என்றால் தமிழில் மெல்லிசைமன்னர் புதிய குரல்களை வைத்து தனது இசையைப் புத்தாக்கம் செய்தார். இக்காலத்தில் தான் பின்னாளில் அதிகம் புகழ்பெற்ற சிந்தசைசர் என்ற வாத்தியத்தின் ஆரம்ப இசைக்கருவியான காம்போ ஓர்கன் [ Combo organ ] போன்ற எலக்ட்ரோனிக் இசைக்கருவி அறிமுகமாகியது.

இக்காலங்களில் மெல்லிசைமன்னர் [1970 களின் ஆரம்பத்திலும், நடுவிலும்] புதிய பாடகர்,பாடகிகளை அறிமுகம் செய்தார்.குறிப்பாக ஜேசுதாஸ் , வாணி ஜெயராம் , ஜெயசந்திரன் , பாலசுப்ரமணியம் போன்றோர் முன்னணிக்கு வந்தனர்.

1970 முதல் 1973 வரை வெளிவந்த படங்களில் புதியவர்களின் குரல்களில் சிலபாடல்கள் வெளிவர ஆரம்பித்தன. குறிப்பாக வாணி ஜெயராம்,ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாட ஆரம்பித்தனர். ஆனாலும் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் வாணிஜெயராம்,ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் ,பாலசுப்ரமணியம் போன்றவர்களை 1974 ஆம் ஆண்டிலிருந்து அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

ஜேசுதாஸ் குரல்: உயிர்க்குழலின் வசீகரம்

இசையில் முதுமை தட்டிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய மெல்லிசைமன்னர் புதுக்குரல்களை பயன்படுத்தினார். இசையில் செயற்கையான நடிப்பு கலந்த நீர்த்துப்போன தன்மையை உதறி இசையின் தனி ஆற்றலை செறிவாகக் காட்ட முனைந்த போது ஜேசுதாஸ் தவிர்க்க முடியாதவரானார்.

குரலில் வசீகரமும் , ஆண்மையும், ஆழமும் ,மென்மையும் ,கனமும், கம்பீரமும் ,தெய்வீக உணர்வைக் கிளரவும் செய்யும் ஒரு விசித்திர குரலுக்கு சொந்தக்காரர் ஜேசுதாஸ். இரண்டுக்கட்டை சுருதிக்குட்டபட்ட குரல் தன்மை கொண்டவர்.கீழ் சுருதியில் பாடினால் எல்லோரையும் பிரமிக்க வைக்கும் அவர் தேவைப்படின் மேலேயும் பாடும் ஆற்றல் கொண்டவர்.

இந்திய சினிமாவில் பின்னணிப்பாடகர்களில் செவ்வியல் இசையில் முழுநேர இசைக்கச்சேரி நிகழ்த்தக்கூடியவரும் , சினிமா சங்கீதம் என்று சொல்லப்படும் மெல்லிசையிலும் சரிநிகராக ,அதை கலந்து பாடாமல் ,அவற்றின் தனித்தன்மைகளை அறிந்து பாடும் ஆற்றல் மிக்க ஒரே பாடகர் ஜேசுதாஸ்.

தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த குரலாக கே.ஜே .ஜேசுதாசின் குரல்வளம் அமைந்தது. மலையாள சினிமாவிலும் ஹிந்தி சினிமாவிலும் பாடி புகழபெற்ற அவர் குரல் வளத்திலும் ,இசை வளத்திலும் சிறந்து விளங்குபவர்.

பாடும் முறையில் புதிய சகாப்தம் ஒன்றை உருவாக்கி தனது வசீகரமான குரலால் , பாடல் என்பது இசைமட்டுமல்ல குரல்வளம் என்பது அதுவே தனி அனுபவநிலை தரக்கூடிய ஒன்று என்று பரவலான மக்களை உணரவைத்தவர் ஜேசுதாஸ். மலையாளத்தில் பாட ஆரம்பித்த இவரை தமிழில் அறிமுகம் செய்தவர் வீணை வித்துவான் எஸ்.பாலசந்தர்.பொம்மை படத்தில் " நீயும் பொம்மை நானும் பொம்மை " என்ற பாடலைப்பாடினாலும் உடனடியாக பல பாடல்களை பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

1950 களில் மெதுவாக ஆரம்பித்து 1960 களில் வளர்ந்து கொண்டிருந்த மலையாள சினிமாவில் தங்கள் தனித்துவத்தை பேணும் புதியதொரு இசைப்பாணியை மலையாள இசையமைப்பாளர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஜி.தேவராஜன் ,ராகவன் ,வி.தக்ஷிணாமூர்த்தி,எம்.எஸ்.பாபுராஜ் போன்றவர்கள் அதன் வழிகாட்டிகளாகத் திகழ்ந்தனர். இவர்களின் ஆதர்ச பாடகராக வளர்ந்து வந்தவர் ஜேசுதாஸ். ஜேசுதாஸ் ஒரு நிலையான இடம்பிடிக்கும் வரை ஏ.எம்ராஜா , புருசோத்தமன், கோழிக்கோடு அப்துல்காதர் ,பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் சிரேஷ்ட்ட பாடகர்களாக விளங்கினர்.

தமிழில் 1960 களிலேயே ஒரு சில பாடல்களை பாடும் வாய்ப்பை ஜேசுதாசுக்கு சிலர் வழங்கினர்.அதில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. மெல்லிசைமன்னர்கள் இசையில் 1964 தொடக்கம் 1970 கள் வரையான காலப்பகுதியில் அவ்வப்போது சில பாடல்களைப்பாடினார்.

01 நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா- காதலிக்க நேரமில்லை [1964] - ஜேசுதாஸ் +சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி - இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

02 என்ன பார்வை உந்தன் பார்வை - காதலிக்க நேரமில்லை [1964] - ஜேசுதாஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03 சுகம் எதிலே - பறக்கும் பாவை [1966] - டி.எம்.எஸ் + ஜேசுதாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04 அலங்காரம் கலையாமல்   - நம்ம வீட்டு லட்சுமி [1968] - ஜேசுதாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

1960 களில் தமிழில் சில படங்களில் பாடினாலும் 1970 களின் ஆரம்பத்திலேயே மலையாளத்திலும் விஸ்வநாதன் இசையில் குறிப்பிடத்தகுந்த பாடல்களை ஜேசுதாஸ் பாடினார். அதற்கு எடுத்துக்காட்டான சில பாடல்கள் இங்கே..

01 ஈஸ்வரன் ஓரிக்கல் - லங்காதகனம் 1971 - கே.ஜே.யேசுதாஸ்   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02 வீணை பூவே குமாரன் ஆசாண்டே - ஜீவிக்கான மாருன்னு போய ஸ்த்ரீ   1971 - கே.ஜே.யேசுதாஸ்   - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03 ஸ்வர்க்க நந்தினி – லங்காதகனம் 1971 - கே.ஜே.யேசுதாஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04 ஆ நிமிசத்தின் நிர் விருதியில் - சந்திர காந்தம் 1974 - கே.ஜே.யேசுதாஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

1960 களின் நடுப் பகுதிகளிலேயே தனது ஆற்றலால், மலையாளத்தில் தனக்கென ஓர் தனியிடத்தைப் பிடித்துக் கொண்ட ஜேசுதாஸ் 1970 களின் முன்னணிப்பாடகராக விளங்கினார்.தேசிய விருது பெற்ற , புகழ்பெற்ற செம்மீன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமான சலீல் சௌத்ரி இசையில், ஜேசுதாஸ் பாடிய "கடலின் அக்கரை போனோரே" அதிக புகழ் சேர்த்தது. இப்படப்பாடல்கள் இலங்கையிலும் ,ஹிந்திப்பாடல்களுக்கு நிகராக குக்கிராமங்கள் எங்கும் ஒலித்தன.

சலீல் சௌத்ரி ஹிந்திப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த மிகப்பெரிய இசையமைப்பாளர்.அவர் இசையமைத்த Madhumathi, Do Bigha Zamin   போன்ற பல படங்களில் அவரது சாகாவரம் பெற்ற பாடல்களைக் கேட்கலாம். அக்காலத்தில் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கலை அமைப்பான   IPTA [Indian Peoples Theater Association] என்ற அமைப்பைச் சேர்ந்தவர்.

செம்மீன் படத்தின் இயக்குனாரான ராமு காரியத் , ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கடசியின் கேரளா பிரிவின் கம்யூனிஸ்ட் கலைக்குழுவான [ K.P.A.C.] Kerala People's Arts Club என்ற அமைப்பை சார்ந்தவர். அந்த தொடர்பால் சலீல் சௌத்ரி மலையாள படமான செம்மீனுக்கு இசையமைத்தார். ஜேசுதாஸின் பாடும் ஆற்றலை வியந்து அவரை ஹிந்தித் திரையில் அறிமுகம் செய்தார் சலீல்.

ஜேசுதாஸின் குரல்வளம் பற்றிய பிரமிப்பு பரவலான இசைரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல இசையமைப்பாளர்கள் மத்தியிலும் இருந்தது என்பதை சலீல் சௌத்ரியின் கூற்று வெளிப்படுத்தியிருக்கிறது..

முகமது ரபி , முகேஷ் , கிஷோர் குமார் ,மன்னாடே போன்ற ஜாம்பவான்களளைத் தனது இசையில் பாட வைத்த சலீல் சௌத்ரி ஜேசுதாஸின் குரல் பற்றி கூறியது மிகவும் முக்கியமான கருத்தாகும். 1980 களில் Filmfare என்ற ஆங்கில சினிமா இதழில் ஜேசுதாஸ் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்தது. அக்கட்டுரை , சலீல் சௌத்ரி கூறிய அந்தக்கருத்தையும் குறிப்பிட்டு எழுதியிருந்தது . அதை எனது நினைவிலிருந்து எழுதுகிறேன்.அந்த கட்டுரையின் மறுபக்கத்தில் முழுப்பக்கத்திலும் ஜேசுதாஸ் ,ஜெய்சந்திரன் ,இவர்களுக்கு நடுவில் வாணிஜெயராம் நின்ற வண்ணம் பாடுவதாக உள்ள படமும் இருந்தது.

சலீல் கூறிய கருத்தின் சாரம் இது தான்.

" நாம் ஹிந்தியில் செவ்வியல் இசை சார்ந்த பாடல்கள் என்றால் பாடகர் மன்னாடே யை பாடவைப்போம். மெல்லிசை சார்ந்த பாடல்கள் என்றால் ரபி ,கிசோர் போன்றோர் பாடுவார்கள். ஆனால் செவ்வியல் இசை பாடுவதிலும் குரல் வளத்திலும் இவர்களையெல்லாம் விஞ்சியவர் ஜேசுதாஸ். அதனால் தான் இவரை Unimitable Singer என்று சொல்கிறேன்.”

ஜேசுதாஸ் பற்றி சலீல் சௌத்ரி சொன்ன விஷயம் சாதாரண விஷயமல்ல. அவரது குரல்வளம் பற்றிய பிரமிப்பும்,பெருமையும் கேரளமக்கள் மத்தியில் அதிகம் உண்டு. கேரளாவில் ஜேசுதாஸ் நடிகர்களை விட அதிக புகழ் பெற்று விளங்குபவர். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு பாடகனுக்கு இத்தையதொரு நிலை கிடைக்குமா என்றால் சந்தேகமே ! சினிமா மெல்லிசை பாடுவது மட்டுமல்ல கர்நாடக இசையிலும் தனது திறமையை ஒன்றுசேரக் காண்பிக்கும் வல்லமை ஜேசுதாஸிடம் உண்டு. ஒன்றின் சாயல் பிறிதொன்றில் விழாமல் கச்சேரிகள் செய்யும் ஆற்றல் எல்லரையும் வியக்கவைப்பதாகும்.

ஜேசுதாஸின் குரல்வளம் பற்றிய பிரமிப்பு இலங்கையிலும் சாதாரண ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது.1980 ஆம் ஆண்டு இலங்கையில் ஜேசுதாஸ் இசைநிகழ்ச்சிசெய்ய வந்ததையொட்டிய காலத்தில் அவரது பாடல் முறை,குரல்வளம் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. எங்கள் ஊரில் ஒரு ரசிகர் அவரின் குரல் பற்றிய வியப்பை பின்வருமாறு கூறினார்." மற்றப்பாடகர்கள் எல்லோரும் சாதாரண மைக்கில் பாடுகிறார்கள் ; ஜேசுதாஸ் ஒரு ஸ்பெஷலான செப்பு கோனில் [ Copper Cone] பாடுவதால் தான் இவ்வளவு சிறப்பாக இருக்கிறது " என்றார். அவர் கூறிய அந்தக் கருத்து நம்மை சிரிக்க வைத்தது.நாம் ஏதோ ஒரு சிறிய கிராமத்தில் இசை ரசிகர்கள் என்ற சாதாரண நிலையில் பேசுவதாக அப்போது நினைத்தோம்.

இது போன்றதொரு கேள்வி நமது ஊரைத் தாண்டியும் இருந்தது என்பதை இலங்கை வானொலியும் நிரூபித்தது. இலங்கை வானொலிக்காக அவரைப் பேட்டி கண்ட திரு.பி.எச் .அபதுல்ஹமீத் கேட்ட கேள்விகளில் அவரது குரல்வளம் பற்றியதும் இருந்தது.அதன் தொடர்ச்சியாக " உங்கள் குரலை நான் கேட்டிருக்கிறேன் ,அது இயல்பானது தானா என்பதை நமது நிலைய ஒலிவாங்கியிலும் கேட்க விரும்புகின்றேன்" என்று கூறி, ஜேசுதாஸ் பாடிக் காண்பித்த பின் "ஆமாம் இயல்பான குரல்தான் என்பதை ரசிகர்களும் உணர்வார்கள் " என்று முடித்தார். இந்தவிதமான நிலைமை தமிழ் நாட்டிலும்   இருந்தது.

தென்னிந்திய சினிமாவில் வெங்கடேஸ்வரா ராவ் என்ற இயற்பெயர் கொண்ட பாடகர் அவரது கனமான குரலுக்காகவே " கண்டசாலா " என்று புகழ் பெற்றார். அவர் கீழ் சுருதியில் அவர் பாடினாலும் மிக நன்றாக இருக்கும். கனமான குரலுக்கு எடுத்துக்காட்டாக கண்டசாலா பெயர் பாவிப்பது வழமையான நிலையில் கனமான ,ஜேசுதாஸ் குரலும் அவருக்கு இணையாக பேசப்பட்டது.

இரு குரல்களும் இனிமையிலும் ,கனத்திலும் வெவ்வேறானவையே. இரு பாடகர்கள் முறித்த ஒப்பீடு சாதாரண ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது. அது குறித்து குமுதம் இதழிலும் “லைட்ஸ் ஒன்” என்ற பகுதியில் "கண்டசாலா - ஜேசுதாஸ் எந்த குரல் கனம்" என்ற கேள்விக்கு ,குமுதம் வழமையான பாங்கில் " கண்டசாலா குரல் கதிரையை தூக்கும் ; ஜேசுதாஸ் குரல் யானையைத் தூக்கும் " என்று பதிலளித்தது.

1960 படங்களில் ஒருவகை இசை; 1970 படங்களில் ஒருவகை இசை; 1980 படங்களில் ஒருவகை இசை என மெல்லிசைமன்னர் தனது இசைப்பாணிகளை மாற்ற முனைப்புக்காட்டினார். அவற்றின் அடிப்படியாக ,அதன் உந்துணர்வாக மெல்லிசை இருந்தது அதன் அடிப்படை உந்துணர்வாக மெல்லிசை தான் இருந்தததெனினும், புதிய குரல்களிலும் ,புதிய சில வாத்திய சேர்க்கைகளாலும்,தொனிகளிலும் வித்தியாசமாக ஒலித்தன. இக்காலகட்டத்தில் எலக்ட்ரோனிக் கருவியான ஆர்கன் காம்போ என்கிற சிந்தசைசர் கருவியின் முன்னோடியான வாத்தியக்கருவி அறிமுகமானது. புதிய பாடகர்களின் குரல்களின் தன்மைகளுக்கேற்ப தனது மெட்டுக்களை அமைப்பதன் மூலம் மாறுபாடுகளைக் காண்பித்தார். மெல்லிசைமன்னரின் இசைக்கு புதிய அணிகலனாக ஜேசுதாஸ் குரல் அமைந்தது.

தமிழிலும் சில பாடல்களை பாடிக்கொண்டிருந்த ஜேசுதாஸ் மெல்லிசைமன்னரின் இசையில் அதிகமாகப் பாடத்தொடங்கினார். குறிப்பாக எம்.ஜி.ஆர் தனது படங்களில் ஜேசுதாஸ் பாட வேண்டும் என்று தீவிரம் காட்டினார். எம்.ஜி.ஆர் படத்தில் ஜேசுதாஸ் நல்ல பல பாடல்களை பாடினார்.

எம்.ஜி.ஆர் படங்களில் ஜேசுதாஸ் பாடிய தனிப்பாடல்கள்.

01 இந்த பச்சைக் கிளிக்கொரு - நீதிக்கு தலை வணங்கு 1975 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

செல்வந்த வீட்டு இளைஞன் தான் செய்த தற்செயலான குற்ற மனஉளைச்சலால் வீட்டை விட்டு வெளியேறி ,பணக்கார வீடொன்றில் வேலைக்காரனாக சேர்கிறான்.அந்த வீட்டுப்பெண் ஒரு பாட்டு பாடும்படி கேட்கும் போது தனது தாய் தனக்குப் பாடிய தாலாட்டு பாடலை அடியொற்றி தனது சோகத்தையும் ,அவளுக்கு புத்திமதி சொல்லும்படியாகவும் ,வாழ்வின் அனுபவத்தையும் சேர்த்து சொல்லும் பாடல்..

பாத்திரத்தின் உணர்வை நேரடியாக வெளிப்படுத்தும் அலங்காரமற்ற அற்புதமான மெட்டு, அதுனுடன் பாடுபவரின் மென்சோககுரல் என இணைந்து இதயத்தைப் பிணிக்கும் ரசவாதப் பாடல்.

02 என்னைவிட்டால் யாருமில்லை - நாளை நமதே 1973 - ஜேசுதாஸ்- இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

03 பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஊருக்கு உழைப்பவன் 1974 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 இரவுப் பாடகன் ஒருவன்     - ஊருக்கு உழைப்பவன்   1974 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05 நாளை உலகை ஆழ வேண்டும்   - ஊருக்கு உழைப்பவன்   1974 - ஜேசுதாஸ்- இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

எம்.ஜி.ஆர் படங்களில் ஜேசுதாஸ் பாடிய ஜோடிப்பாடல்கள்.

01 தங்கத் தோணியிலே - உலகம் சுற்றும் வாலிபன் 1973 - ஜேசுதாஸ்+ பி.சுசீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02 நீல நயனங்களில் - நாளை நமதே 1973 - ஜேசுதாஸ்+ பி.சுசீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

03 விழியே கதை எழுது - உரிமைக்குரல் 1973 - ஜேசுதாஸ்+ பி.சுசீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 காதல் என்பது காவியமானால் - நாளை நமதே 1973 - ஜேசுதாஸ்+ பி.சுசீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05 அழகெனும் ஓவியம் இங்கே - ஊருக்கு உழைப்பவன் 1974 - ஜேசுதாஸ்+ பி.சுசீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

06 தென்றலில் ஆடும் கூந்தலைக் கெண்டேன் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1976 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

07 இது தான் முதல் ராத்திரி - ஊருக்கு உழைப்பவன் 1974 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

07 தங்கத்தில் முகம் எடுத்து - மீனவ நண்பன் 1974 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏனைய நடிகர்களின் படங்களில் ஜேசுதாஸ் பாடிய பாடல்கள்.

01 அதிசய ராகம் ஆனந்த ராகம் - அபூர்வ ராகங்கள் 1975 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

03 மனைவி அமைவதெல்லாம் - மன்மதலீலை 1975 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 தெய்வம் தந்த வீடு   - அவள் ஒரு தொடர்கதை   1975 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05 தானே தனக்குள் ரசிக்கின்றாள் - பேரும் புகழும் 1975 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

06 கண்ணனின் சன்னதியில் - ஒரு கோடியில் இரு மலர்கள் 1975 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

07 இறைவன் உலகத்தை படைத்தானா - உனக்காக நான்   1975 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

08 வீணை பேசும்   - வாழ்வு என்பக்கம் 1975 - ஜேசுதாஸ் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

மெல்லிசைமன்னரின் இசையில் ஜேசுதாஸ் , புகழ் பெற்ற பாடகிகளான சுசீலா ,எஸ்.ஜானகி போன்றோருடன் இணைந்து நல்ல பாடல்களை பாடினார். காலமாற்றத்துடன் வந்த இளமைக்குரலான வாணி ஜெயராமுடன் இணைந்து பாடிய பாடல்கள் மூலம் புதிய ஜோடிப் பாடகர்கள் எனக் கவனமும் பெற்றனர். இருவரும் தேனும் பாலும் இணைந்தது போல பல இனிய பாடல்களை பாடினர்.

01 செண்டுமல்லி பூ போல - இதயமலர் 1975 - ஜேசுதாஸ் + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02 தென்றலில் ஆடும் கூந்தலை - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1976 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

03 இது தான் முதல் ராத்திரி - ஊருக்கு உழைப்பவன் 1974 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 தங்கத்தில் முகம் எடுத்து - மீனவ நண்பன் 1974 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05 ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் - பயணம் 1976 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

06 அந்தமானைப் பாருங்கள் அழகு - அந்தமான் காதலி 1975 - ஜேசுதாஸ் + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

07 நினைவாலே சிலை செய்து - அந்தமான் காதலி 1976 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

08 இது இரவா பகலா - நீல மலர்கள் 1978 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

09 கண்ணனை நினைத்தால்   - சுப்ரபாதம்1976 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

10 கங்கை ஜமுனை இங்குதான் - இமயம் 1976 - ஜேசுதாஸ்+ வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

11 மலரே குறிஞ்சி மலரே   - டாக்டர் சிவா 1975 - ஜேசுதாஸ்+ எஸ்.ஜானகி   - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

இது போன்ற பாடல்களை மெல்லிசைமன்னரின் இசையில் பாடிப் புகழ் பெற்ற ஜேசுதாஸ் - வாணி ஜோடி பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி புகழ் பெற்றனர்.

நல்ல பாடல்களைக் கொடுத்துக்கொண்டிருந்த மெல்லிசைமன்னர் விஸ்வநாதனுக்கும் ,பாடகர் ஜேசுதாசுக்கும் அவ்வப்போது மோதல்களும் நடைபெற்றதாக பத்திரிகைகள் எழுதின." "விஸ்வநாதன் இசையில் நான் இனி பாட மாட்டேன்" என்று ஜேசுதாஸ் கூறியதாக 1970களின் இறுதிகளில் குமுதம் பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பூட்டியது.இருதரப்பு நியாகங்களும் பேசப்பட்டன. வாத்தியம் வாசிப்பவர் ஒருவர் போதையில் தவறாக வாசித்ததால் எழுந்த சர்ச்சையே விரிசலுக்கு காரணமாகியது. ஆனாலும் சில கால இடைவெளிகளுக்குப்பின் இருவரும் இணைந்து நல்ல பாடல்களைத் தந்தனர்.

பி.ஜெயசந்திரன்:

தமிழ் திரைப்படங்களில் அதிகமாக இல்லையென்றாலும் ,பாடிய அனைத்துப் பாடல்களும் சிறப்பானவை என்று சொல்லத்தக்க வகையில் பாடல்களை பாடிய இருவர் பெயரைக் குறிப்பிட்டு சொல்லலாம். ஒருவர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ; மற்றவர் பி.ஜெயசந்திரன். மலையாள திரைப்படங்களில் ஏலவே பாடிக்கொண்டிருந்த ஜெய்சந்திரனை தமிழில் அறிமுகம் செய்தவர் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.அவரது இசையில் நல்ல பல மலையாள பாடல்களையும் ஜெயசந்திரன் பாடினார்.

குரல் வளத்தில் ஜேசுதாஸின் சாயல் கொண்டவர். பாடும் போது தேவையில்லாத மிமிக்கிரி காட்டாமல் திறந்த குரலில் மிக இயல்பாகப் பாடுபவர். கேட்போரைப் பரசவப்படுத்தும் குரலுக்குச் சொந்தக்காரர்.

முகமது ரபி மற்றும் ஜேசுதாஸை தனது அபிமானப் பாடகர்களாகக் கருதுபவர். ஜேசுதாஸின் மிகத் தீவிரமான ரசிகர். ஜேசுதாஸ் பாடிய ஆரம்பகால மலையாள பாடலை ஒன்றைக் கேட்க 24முறை ஒரு படத்தை தியேட்டரில் பார்த்ததாகக் கூறியிருக்கின்றார். மிகச் சிறந்த இசைரசிகன். தான் ரசித்த மற்றப் பாடகர்களின் பாடல்களையும் பாடிக்காண்பிப்பவர். பெண் பாடகிகளில் சுசீலாவை தனது அபிமானப்பாடகி என்பவர்.

ஜேசுதாஸ் பயின்ற இசைக்கல்லூரியில் மிருதங்கம் பயின்றவர். கல்லூரி இசைப்போட்டி ஒன்றில் பாடலுக்கான விருதை ஜேசுதாசும், அதே ஆண்டில் மிருதங்கப் போட்டியில் ஜெய்சந்திரனும் முதல் பரிசு பெற்றவர்கள்.

1960களில் தான் பாடிய பாடல் பதிவு ஒன்றிற்காய் ஜேசுதாஸ் இவரை அழைத்துச் சென்று இவருக்கு இசை ஆர்வத்தை தூண்டினார். மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜன், பாபுராஜ் மூலம் பல வாய்ப்புகள் பெற்று நல்ல பாடகனாக வளர்ந்தவர்.

இசையமைப்பாளர்களில் விஸ்வநாதனுக்கு இணையில்லை என்று கருதும் பி.ஜெயசந்திரன் அவரது தீவிர ரசிகருமாவார்.

மலையாளத் திரைப்படங்களில் 1960 களின் இறுதியிலும் 1970 களின் ஆரம்பத்திலும் மெல்லிசைமன்னரின் இசையில் பாட ஆரம்பித்த இவர் மெல்லிசைமன்னரின் இசையில் மலையாள சினிமாவின் சாகாவரமிக்க பாடல்களையும் பாடிய பெருமைக்குரியவர்.அவற்றுள் சில பாடல்கள்.

01 சுப்ரபாதம் … நீல கிரியுட சகிகளே - பணிதீராத்த வீடு 1973 - பி.ஜெயசந்திரன் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02 சொர்ண கோபுர நர்த்தகி சில்பம் - திவ்வியதர்சனம் 1973 - பி.ஜெயசந்திரன் + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

03 கிலுக்காதே கிலுக்கும்ன கிலுக்கம்பட்டி - மந்ரகொடி 1972 - பி.ஜெயசந்திரன் + பி.சுசீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

04 ராஜீவை நயன் நீ உறங்கு - சந்த்ரகாந்தம்1974 - பி.ஜெயசந்திரன் + பி.சுசீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

மெல்லிசை மன்னரால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் தமிழிலும் பல இனிய பாடல்களை பாடியுள்ளார். முக்கியமான சில பாடல்கள்.

01 தங்க சிமிழ் போல் இதழோ - மணிப்பயல் 1973- பி.ஜெயசந்திரன் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02 பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள்19 73 - பி.ஜெயசந்திரன் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

03 எத்தனை மனிதர்கள் உலகத்திலே - நீதிக்குத் தலை வணங்கு   1974 - பி.ஜெயசந்திரன் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

04 மந்தார மலரே மந்தார மலரே - நான் அவனில்லை 1974 - பி.ஜெயசந்திரன் + எல்.ஆர்.ஈஸ்வரி   - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05 அமுதத் தமிழில் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்   1976 - பி.ஜெயசந்திரன் + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

06 வசந்த கால நதிகளில் - மூன்று முடிச்சு 1976 - பி.ஜெயசந்திரன் + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

07 கண்ணனின் சன்னதியில் - ஒரு கொடியில் இரு மலர்கள் 1976 - பி.ஜெயசந்திரன் + பி.சுசீலா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

08 கலைமகள் அலைமகள் - வெள்ளிரதம் 1976 - பி.ஜெயசந்திரன் + பி.சுசீலா   - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

09 அன்பே உன் பேர் என்ன ரதியோ - இதயமலர் 1975 - பி.ஜெயசந்திரன் + வாணி   - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

10 கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள் 1982 - பி.ஜெயசந்திரன் + எஸ்.ஜானகி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

11 தென்றலது உன்னிடத்தில் - அந்த ஏழு நாட்கள் 1982 - பி.ஜெயசந்திரன் + எஸ்.ஜானகி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

வாணி ஜெயராம்:

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் முன்னணிக்கு கொண்டுவரப்பட்ட முக்கியமான தமிழ் பாடகி வாணி ஜெயராம். கர்நாடக இசை , ஹிந்துஸ்தானி இசை போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவரான இவர் ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளாரான வசந்த் தேசாய் என்பவரால் ஹிந்தி Guddi [1971] என்ற திரைப்படத்தில் பின்னணிப்பாடகியாக அறிமுகமானவர். அந்தப்படத்தில் " போலெ ரீ பப்பி ஹாரா " என்ற பாடலைப் பாடி புகழ் பெற்றார். ஹிந்தி மட்டுமல்ல இந்தியாவில் பல மொழிகளிலும் பாடும் வாய்ப்புப் பெற்ற பன்மொழிப்பாடகி என்ற பெயரும் பெற்றார்.

பி.சுசீலா ,லதா மங்கேஷ்கர் போன்றோரின் பாடல்களைக் கேட்டு சினிமா இசையில் ஆர்வம் கொண்டதாகவும் ,குறிப்பாக தனது இசை ஆர்வத்தை வளர்ப்பதில் இலங்கை வானொலியும் ஒரு காரணம் என்று பின்னாளில் வாணி ஜெயராம் கூறியது குறிப்பிடத்தக்கது.

அவர் பாடிய முதல் ஹிந்தி பாடலே அதிக புகழ் பெற்றதால் இந்திய அளவில் அறிமுகமானார் வாணி ஜெயராம். இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை வந்த வாணி ஜெயராம். தமிழ் சினிமாவில் பாடும்வாய்ப்பையும் பெற்றார்.

வாணி ஜெயராமின் முதல் பாடலான "ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது " என்று தொடங்கும் பாடலை சங்கர் கணேஷ் இசையில் , 1973 இல் வெளிவந்த " வீட்டுக்கு வந்த மருமகள் " படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து பாடினார். தமிழ் சினிமாவில் வாணி ஜெயராம் பாடிய முதல் பாடல் இதுவே ! அதற்கு முன்னே "தாயும் சேயும்" என்ற வெளிவராத படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடினார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடிய முதல் பாடல் "சொல்லத்தான் நினைக்கிறேன் " [1973 ] படத்தில் " மலர் போல் சிரிப்பது பதினாறு   " என்ற பாடலே ! பலர் நினைப்பது போல " மல்லிகை என் மன்னன் மயங்கும் " என்ற பாடலோ அல்லது " ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் " என்ற பாடலோ அல்ல. இந்த இரண்டு பாடல்களும் வெற்றி பெற்றதால் பலரும் அவ்வாறு நினைக்க ஏதுவாயிற்று.

என்னவிதமான பாடல்களையும் அனாயாசமான முறையில் பாடும் குரல் வளமும் ,இசைவளமும் பெற்ற வாணி ஜெயராமை மிக அருமையான இனிய சங்கதிகளை வைத்து, அழகான இயல்பான ஓட்டமிக்க விதம்,விதமான பாடல்களை கொடுத்து பாட வைத்து தனது கற்பனை வளத்தை வெளிப்படுத்தியவர் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.

இக்காலங்களில் மெல்லிசைமன்னரின் இசை அனுபவம், இசைமெருகின் வீச்சுகளாக அமைந்ததையும், அவரின் மட்டற்ற படைக்கும் ஆர்வத்தை விரிவாக்கம் செய்வதாகவும், புதுமையின் ஊற்றுக்களாகவும் இனிய புதுக் குரல்கள் பயன்பட்டிருப்பதையும் காண்கிறோம்.

**மெல்லிசைமன்னரின் இசையில் வாணி ஜெயராம் பாடிய தனிப்பாடல்கள் சில:

01 மலர் போல்சிரிப்பது பதினாறு - சொல்லத்தான் நினைக்கிறேன் 1973 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02 மல்லிகை என் மன்னன் மயங்கும் - தீர்க்க சுமங்கலி 1973 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

03 ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் - அபூர்வ ராகங்கள் 1975 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 கேள்வியின் நாயகனே - அபூர்வ ராகங்கள் 1975 - வாணி ஜெயராம் + சசிரேகா - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05 நாதமெனும் கோவிலிலே - மன்மதலீலை 1975 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

06 காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் - வாழ்ந்து காட்டுகிறேன் 1975 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

07 எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது - அவன் தான் மனிதன் 1973 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

08 மல்லிகை முல்லை பூப்பந்தல் - அன்பே ஆருயிரே 1976 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

09 சந்திர பிறை பார்த்தேன் - கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 1976 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

10 பொங்கும் கடல் ஓசை - மீனவ நண்பன் 1974 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

11 கந்தனுக்கு மாலையிட்டாள்   - ஊருக்கு உழைப்பவன் 1976 - வாணி ஜெயராம் - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

வாணி ஜெயராம் ஜேசுதாஸுடன் இணைந்து பாடிய பாடல்கள்

/ செண்டுமல்லி பூ போல - இதயமலர் 1975 –

/ தென்றலில் ஆடும் கூந்தலைக் கெண்டேன் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1976

/ இது தான் முதல் ராத்திரி - ஊருக்கு உழைப்பவன் 1974 –

/ தங்கத்தில் முகம் எடுத்து - மீனவ நண்பன்1974

/ ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் - பயணம் 1976 –

/ அந்தமானைப் பாருங்கள் அழகு - அந்தமான் காதலி 1975

/ நினைவாலே சிலை செய்து - அந்தமான் காதலி 1976 –

/ இது இரவா பகலா - நீல மலர்கள் 1974 -

/ கங்கை ஜமுனை இங்குதான் - இமயம் 1976 -

*வாணி ஜெயராம் ஜெய்சந்திரனுடன் இணைந்து பாடிய பாடல்கள்:

01 அமுதத் தமிழில் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்   1976 - பி.ஜெயசந்திரன் + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02 வசந்த கால நதிகளில் - மூன்று முடிச்சு 1976 - பி.ஜெயசந்திரன் + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

03 அன்பே உன் பேர் என்ன ரதியோ - இதயமலர் 1975 - பி.ஜெயசந்திரன் + வாணி   - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 மழைக்காலமும் பனிக்காலமும் - சாவித்திரி 1976 - பி.ஜெயசந்திரன் + வாணி   - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

05 திருமுருகன் அருகினில் வள்ளிக்கு குறத்தி - சாவித்திரி 1976 - பி.ஜெயசந்திரன் + வாணி   - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

06 கண்ணன் முகம் காண - சாவித்திரி 1976 - பி.ஜெயசந்திரன் + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

வாணி ஜெயராம்எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன்   இணைந்து பாடிய பாடல்கள்

01 மேடையில் ஆடிடும் மெல்லிய - வண்டிக்காரன் மகன் 1976 - எஸ்.பி.பி + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

02 இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது 1978 - எஸ்.பி.பி + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

03 நேரம் பௌர்ணமி நேரம் - மீனவ நண்பன்   1974 - எஸ்.பி.பி + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

04 பாரதி கண்ணம்மா - நினைத்தாலே இனிக்கும்   1978 - எஸ்.பி.பி + வாணி - இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

ஒவ்வொரு காலத்திலும் சில மாறுதல்கள் வருவது தவிர்க்க முடியாதவை.ஒவ்வொரு கட்டத்திலும் விளைகின்ற மாற்றம் தாக்கங்கள் விளைவித்தாலும் நமக்கான சில பண்புகள், மரபுகள் நம்மையறியாமல் தொடர்வது போல இசையிலும் அது நிகழ்ந்திருக்கிறது. பாடல்களில் உள்ளுறையாக இருக்கும் ராகங்களும்,அவற்றை பயன்படுத்தும் பாங்கும்,இசையமைப்பும் அவ்விதமே மாறி வந்திருக்கின்றன.சினிமா என்ற வரம்புக்குள் அவற்றைப் புது தினுசாக ராகங்களையும் கையாண்ட வல்லாளர்களில் மெல்லிசைமன்னர்கள் முக்கியமானவர்கள்.


இசையமைப்பும் இராகங்களும்: தமிழ் ராகங்கள்.

ஒரு பாடலுக்கான இசையமைப்பு என்பது படத்தின் இயக்குனர் ,தயாரிப்பாளர் ,நடிகர்கள் ,பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் சம்பந்தப்பட்ட ஓர் நிகழ்வாகும்.

படத்தின் சூழ்நிலையை ஒட்டி இசை அமைக்கப்படுவதால் இவர்கள் அனைவரதும் சங்கமம் நிகழ்கிறது. தமிழ் சினிமாவில் அவரவர் பெற்றிருக்கும் அந்தஸ்த்துக்குத் தக்கவாறு அங்கு தலையீடுகள் வெளிப்படும். கலைஞர்கள் நாடுவது முழுமையான சுதந்திரம்.அது எல்லா நேரமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் பணபலம் கொண்ட தயாரிப்பாளர்களும் , புகழ்பலம் கொண்ட நடிகர்களும் தங்கள் தகுதியை மீறி தேவையற்ற அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஒருமுகப்படுத்தி நிற்கவேண்டிய இசையமைப்பாளர்களது ஒருமுகச்சிந்தனை பலதிசையிலும் சிதைக்கப்பட்டது. அது பரிசோதனை முயற்சிகளை எண்ணிப்பார்க்க முடியாத சோதனையான காலம் என்று சொல்லலாம். இது போன்ற தடங்கல்களை ஒருவிதமான பொறுமையோடு தான் அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.கலைத்துறையாயினும் , தொழில்நுட்பத் திறனாயினும் மேல் சொன்னவர்களுக்குக் கீழ்ப்படிந்தே செயல்பட நேர்ந்தது. இசையைப் பொருத்தவரையில் ஒருவிதமான தத்தளிப்பே நியதியாக இருந்தது.

இசையமைப்பில் போது மேலெழும் அசாதாரண அகஎழுச்சியலை, வினோதமான, கற்பனை வளமற்ற தயாரிப்பாளர்கள் ,நடிகர்களின் குறுக்கீடுகளால் அதன் ஜீவ ஓட்டம் குலைக்கப்பட்டன. அதை மீறமுடியாத இசைக்கலைஞன் தயாரிப்பாளர்கள், நடிகர்களைக் குசிப்படுத்தும் ஒரு முறையைக் கையாண்டு, அவர்கள் ஏற்கனவே கேட்ட இசைமாதிரிகளை ஜாடைகாட்டி தற்காலிக விடுதலை பெற்றுவிடுகிறான். சினிமாவின் வணிகம் சார்ந்து எழும் நிர்பந்தங்கள் இசையமைப்பளர்களை அடிபணிய வைத்திருக்கிறது.

நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் என அவரவர் செல்வாக்கு,புகழுக்குத் தக்கவாறு அந்தத் தலையீடுகள் வெற்றியும் பெறும். இசை என்றால் பாடல்கள் என்ற நிலையில் அவை இருந்தன. படைப்புத்திறனை அழிக்கும் இந்தத் தலையீடுகளை அன்றைய இசையமைப்பாளர்கள் சகித்துக் கொண்டார்கள்.

இசையமைப்பு என்பது இசையமைப்பாளரின் பொறுப்பு என்ற ரீதியில் அவர்களுக்கான சுதந்திரம் மிக முக்கியமானதொரு அம்சமாக இருக்கிறது. மேற்சொன்ன யாரோ ஒருவரது தலையீடு அவர்களின் படைப்புச் சுதந்திரத்திற்கு குறுக்கே வந்து விழுந்துவிடுகிறது. இந்தக் குறுக்கீடுகளுக்கிடையே தங்கள் பணியைச் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு இசையமைப்பாளர்கள் ஆளாக நேர்ந்தது. ஆயினும் அதையும் தாண்டி இனிய பல பாடல்களை அவர்கள் உருவாக்கினார்கள் என்பது ஆச்சர்யமான ஓர் விடயமாகும்.

தங்களது இசையின் தார்மீக பலத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்துக் கொண்டதுடன் ,தங்களுக்குரிய ராஜ தந்திரத்துடன் இந்த தடைகளையெல்லாம் கடந்தும் வந்திருக்கின்றனர். போட்டி போடும் நடிகர்களுக்கு ஒரே விதமான மெட்டுக்களை வெவேறு விதங்களில் மாற்றி கொடுத்ததையும் நாம் காண்கிறோம்.நடிகர்கள் தங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளில் இசையமைப்பாளர்களையும் அதற்குள் இழுப்பதும், மற்றவருக்கு நல்ல பாடல்களை அமைப்பதாகவும் கூறி அவர்களை குற்றவாளிகள் போலவும் நடத்தி வேலை வாங்கியிருக்கின்றனர்.

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை

இந்தப்பாடல் வெளிவந்த பொது " விசு ,நீயும் அண்ணனான எம்.ஜி.ஆறும் மலையாளிகள் எனபதால் அவருக்கு நல்ல பாடல்கள் கொடுக்கிறாய் ! எனக்கு ஏன் இப்படிப்பாடல்கள் தருவதில்லை ? " என்று சிவாஜி சீண்டிய போது ..மெல்லிசைமன்னர் உங்களுக்கு எதுவுமே புரியவில்லை; அந்தப்பாடலை நான் எழுதவில்லை , நீங்கள் எழுதியவரைத்தான் போய் கேட்கவேண்டும் ; நான் மெட்டு மட்டும் தான் போட்டேன் " என்றாராம்.இதைக்கூறியவர் அந்தப்பாடலை எழுதிய கவிஞர் புலமைப்பித்தன்.

படைப்பு நிகழ்கின்ற போது கிடைக்க வேண்டிய சீரான ஓட்டம், அமைதி இந்தக் குறுக்கீடுகளால் அது தடைபடுகிற போது அவர்களது கலைத்திறன் பிரகாசமற்றுப் போகிறது. இசையமைப்பாளர்களது சுதந்திரம் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் பாடல்களும் பிரகாசமான உந்துதலைப் பெறும். தலையீடுகளற்ற கலையே உயரங்களைத் தொடுகின்ற ஆற்றலை பெறுகிறது.

இத்தகைய தடைகளையெல்லாம் தாண்டியே மெல்லிசைமன்னர்கள் மிக அருமையான பாடல்களையெல்லாம் தந்தார்கள். சலிப்பு தந்து கொண்டிருந்த பழைய போக்குகளை மாற்றவும் ,புதிய புதிய வாத்தியங்களை , புதிய இசைக்கோர்வைகளை நிகழ்த்திக்காட்டும் தாகமும் இசையின் மீதான தீவிர பிடிப்பும் மிக்க அவர்களால் குறுகிய காலத்திலேயே ஓர் புதிய அலையை உருவாக்க முடிந்தது. அது 1960 களில் அத்தனை வீரியத்துடனும் ,வேகத்துடனும் நடைபெற்றது.

பாரம்பரியமான ராகங்களையும் குறிப்பிட்ட ஒரு சில வாத்தியங்களையும் வைத்துக் கொண்டு நிகழ்த்தப்பட்ட திரையிசைக்கு மாறாக , பழைய ராகங்களுடன் மெல்லிசைமன்னர்கள் புதிய ,புதிய ராகங்களை குறிப்பாக ஹிந்துஸ்தானி இசை ராகங்களையும் கட்டவிழ்த்து விட்டனர். அவைமட்டுமல்ல குறிப்பிட்ட ராகங்களின் இனிய பகுதிகளை அதன் உச்சநிலையை பின்புலமாக வைத்துக் கொண்டு அல்லது மறைபொருளாக வைத்துக் கொண்டு அவற்றின் நாத அலைகளையும் எடுத்துக்காட்டினார்கள்.

தமிழ் செவ்வியல் இசையின் கனதியான இராகங்களை எடுத்துக்கொண்டு அதன் அடர்த்தியை மெல்லிசை என்னும் நீரில் கரைத்தார்கள். நீலமாய்க் காட்சி தரும் கடல் நீரை கையால் அள்ளிப்பார்க்கும் போது நீலம் தெரியாமல் இருப்பது போல ராகங்களின் சாயல்களை சில இடங்களில் மறைத்தும் ,சில இடங்களில் மறையாமலும் மெல்லிசை ஜாலம் காட்டினார்கள்.

நமது பண்பாட்டில் இசை என்பது இராகங்களை அடிப்படையாகக் கொண்ட கலையாகவும் , உலக அரங்கில் தனித்துமிக்கதாகவும் விளங்குகின்றது. உலக மக்கள் யாவரும் இசைக்கலையில் ஈடுபடுகிறார்கள் என்றாலும் இசைக்கு ஓர் இலக்கணத்தை முதன் முதலில் மிகப் பழங்காலத்திலேயே அமைத்தவர்கள் தமிழர்கள். எந்த ஒரு பாடல் வடிவத்தை நாம் எடுத்தாலும் அவை ஏதோ ஒரு ராகத்தின் அடிப்படையிலோ அல்லது ஓர் ராகத்தின் சாயலிலோ அமைந்து விடுவதையும் காண்கிறோம். நமது இசையில் ராகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிடுகிறது.

திரை இசையைப் பொறுத்தவரையில் இராகம் தெரிந்தால் தான் இசையமைக்க முடியும் என்ற நிலை இல்லை என்பதை பல இசையமைப்பாளர்களை உதாரணம் காட்டி கூறிவிடலாம்.ஹிந்தி திரையில் மிக முக்கியமான இசையமைப்பாளராக விளங்கிய ஓ.பி.நய்யார் என்பவர் " எனக்கு "ச " வும் தெரியாது " ப " வும் தெரியாது என ஓர் தொலைக்காட்ச்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

திரை இசையமைப்பாளர்கள் சங்கீத வித்துவங்களல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சங்கராபரணம் பாடல்கள் செவ்வியலிசைப் பாடல்களா என்ற சர்ச்சை வந்த போது தனக்கு ஒரு சில ராகங்கள் தான் பரீட்சயம் " என்று கே.வி.மகாதேவன் கூறினார். இசையமைப்பாளர்களுக்கு ராகம் தெரியாவிட்டாலும் தங்களுக்குத் தேவை ஏற்படும் போது அதனை அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். பலருக்கு நல்ல இசைத்தெரிந்த உதவியாளர்கள் இருப்பதையும் நாமறிவோம்.

இசையமைப்பாளர்களுக்கு ராகங்கள் தெரியாவிட்டாலும் ,தேவை ஏற்படும் பொது அது பற்றிய ஞானம் உள்ளவர்களை வைத்து சீர் செய்வதையும் வழமையாகக் கொண்டார்கள்.பழைய இசையமைப்பாளர்கள் தங்களுக்கன்று உதவியாளர்களை வைத்திருப்பது வழமையாக இருந்தது. மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையரில் விஸ்வநாதன் மெட்டுக்களை உருவாக்குவதில் திறமையும் ,ஆற்றலுமிக்கவர். ராமமூர்த்தி கர்நாடக இசை தெரிந்த நல்ல வயலின் கலைஞரும் மெட்டுக்களை அமைப்பதிலும் வல்லவர். விஸ்வநாதன் , ஒரு சமயம் தங்களது இசையமைப்புப் பற்றி பின்வருமாறு கூறினார்.

" ஒரு டைரக்டர் பாடல் சூழ்நிலையைச் சொல்லும் போது நாம் அதற்கு என்ன ராகம் பொருந்தும் என சிந்திப்போம்.ராமமூர்த்தியண்ணா சில ராகங்களை தனது வயலினில் அதன் வடிவத்தை வாசித்துக் காட்டுவார். அதிலிருந்து அந்த ராகங்களின் தன்மை என்பதை அறிந்து, அதை அடிப்படையாக வைத்தும் பாடல்களை அமைத்திருக்கின்றோம்."

மெல்லிசைமன்னர்களுக்குப் பல திறமைவாய்ந்த உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களில் கோவர்த்தனம்,ஜி.எஸ்.மணி, ஜி.கே.வெங்கடேஷ் ,ஹென்றி டானியல், ஜோசப் கிருஷ்ணா எனப் பலர் இருந்தனர். இரட்டையர்களாக இருந்த போதும் ,பின்னர் இருவர் பிரிந்த போதும் இவர்கள் உதவியாளர்களாகத் தொடர்ந்தனர். இவர்களில் ஜி.எஸ்.மணி என்பவர் ஒரு கர்னாடக இசைக்கலைஞர். 1950 ,1960 களிலேயே மெல்லிசைமன்னர்களின் உதவியாளராக இருந்தவர். விஸ்வநாதன் அமைக்கும் மெட்டுக்களை அதன் வேகத்திற்கு உடனுக்குடன் சுரப்படுத்தி எழுதுவது அவரது வேலை. ஒரு மெட்டை சுரப்படுத்தி எழுதிவிட்டால் பின் பாடகர்களுக்கு எந்த நேரத்திலும் சொல்லிக் கொடுக்கும் வசதி கிடைத்துவிடும். ஆர்.கோவர்தனம் என்பவரும் மிகச் சிறிய வயதிலேயே சுரஞானம் மிக்கவராக இருந்தார். பின்னாளில் ஒரு நல்ல இசையமைப்பாளராக மாறி. " அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி " " கங்கை நதியோரம் ராமன் நடந்தான் " நல்ல பல பாடல்கள் தந்தவர். மெல்லிசைமன்னர்களின் முக்கியமான உதவியாளர்களில் ஹென்றி டானியல், ஜோசப் கிருஷ்ணா முக்கியமானவர்கள். இருவரும் மேலைத்தேய இசையில் ஆர்வமிக்கவர்கள். ஜி.ராமநாதன் இசையமைத்த " யாரடி நீ மோகினி " என்ற உத்தமபுத்திரன் படப்பாடலின் பின்பகுதியில் வரும் Rock And Roll இசை ஹென்றி டானியல் அமைத்தார் என்பார்கள்.

சமீபத்தில் பாரதியாரின் பூட்டனான ராஜ்குமார் பாரதி எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்தும் ,அவரது பெருமை பற்றியும் பேசும் போது அவரிடம் தான் பாடிய அனுபவத்தை விவரித்தார். அவர் தனக்கு சொல்லிக் கொடுத்த குறிப்பிட்ட பாடலில் அந்த ராகத்தின் சில இடங்களில் வேறு ராகத்தின் சாயலிருந்ததாகவும் அதுபற்றி தான் அவரிடம் கூறிய போது , “திருத்திவிடலாம்” எனக் கூறி ,அவருடன் எப்போதும் இருக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவரை அழைத்து இதைப்பார் எனக்கூறியதும் அவர் அதைத் திருத்தினார் என்றார். ராஜ்குமார் பாரதி ஒரு கர்னாடக இசை வித்துவான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போலவே அவரிடம் மேலைத்தேய வாத்தியங்கள் வாசித்த இசைக்கலைஞர்கள் " இது D " , " இது C " என்று மேலைத்தேய இசைநுணுக்கங்களைப் பற்றி சொல்லும் போது கேட்டுத் தெரிந்து கொள்வார் என்று கூறுகின்றனர். சிலர் அவரின் "அடக்கம்" என்று இவற்றை கூறுவர். பின், அடடா அவரை அப்படி சொல்லிவிட்டோமே என்பதை மறைப்பது போல “அந்த இசை குறித்து அவருக்கு எல்லாம் தெரியும் ; ஆனால் தெரியாதது போல கேட்பார் “ என்பார்கள். மெல்லிசைமன்னர் எம் .எஸ்.விஸ்வநாதனிடம் வாத்தியம் வாசித்த சில கலைஞர்கள் ,அவர் பற்றிய நினைவு நிகழ்ச்சிகளில் இவ்விதம் உளறியதை நாம் பார்த்திருக்கின்றோம்.

தனது முன்னோர்களின் சில குறைபாடுகளையெல்லாம் தெரிந்தே இளையராஜா தான் அமைக்கும் மெட்டுக்களை சுரப்படுத்தவும் அல்லது மேலைத்தேய பாணியில் நோட்ஸ் எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார். எல்லாவற்றையும் தனியாக செய்யும் ஆற்றலை அவர் வளர்த்துக் கொண்டார்.

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி பலரும் குறிப்பிடும் முக்கிய அம்சம் என்னவெனில் அவரது இசையார்வம் மற்றும் அவரது இசையமைக்கும் ஆற்றல் ஆகும். பொதுவாகவே இசையமைப்பு என்பது தனிக்கலை. ஏனைய கலைகளை போலவே தன்னெழுச்சியாக வரக்கூடிய கலையே இசையமைக்கும் கலை! எந்த ஒரு இசையையும் ஒருவர் கற்று தேறலாம், வாத்தியக்கருவி வாசிக்கலாம்,பாடலாம்! ஆனால் அவர்களெல்லாம் இசையமைப்பாளர்கள் ஆகிவிட முடியுமா என்பது சந்தேகம் தான்.அனால் பாடத்தெரியாத ஒருவர் , வாத்தியம் வாசிக்கும் ஒருவர் அல்லது வாசிக்கத்தெரியாத ஒருவர் கூட இசையமைப்பாளர் ஆகிவிட முடியும்.

இசையமைப்பதென்பது தனிக்கலை. பழந்தமிழர்கள் இதை பாடலமுதம் என்று அழைத்தனர். வாத்தியக்கலையில் பாண்டித்தியமிக்க சில கலைஞர்கள் இசையமைப்பில் ஈடுபாடு காட்டினார்கள் என்பதற்கு வட இந்தியாவில் சித்தார் மேதை ரவிசங்கர், புல்லாங்குழல் கலைஞர் சௌராசையா , சந்தூர் கலைஞர் சிவகுமார் சர்மா போன்றோரையும் குறிப்பிடலாம். இந்த மூவரும் மேலைநாட்டிலும் அறியப்பட்ட கலைஞர்கள். வங்காள திரைப்பட இயக்குனரான சத்யஜி ரெயின் உலகப்புகழ் பெற்ற தொடர்படமான " பாதர் பாஞ்சாலி " படத்திற்கு இசையமைத்தவர் ரவி சங்கர்.

" பாதர் பாஞ்சாலி " படத்திற்கு பின்னர் தனது படங்களுக்கு வேறு சில வாத்தியக்கலைஞர்களை பயன்படுத்திய சத்யஜித் ரே தனது படங்களுக்குத் தானே இசையமைத்தார். அவர் எடுத்த படங்களுக்கு வட இந்திய செவ்வியலிசைக்கு அப்பாற்பட்ட இசையின் தேவை இருந்ததால் மேலைத்தேய சங்கீதத்தில் ஈடுபாடுமிக்க ரே தானே இசையமைப்பாளராக மாறினார். அவர் தொடர்ந்து செவ்வியல் இசை வித்துவான்களை படத்தின் பின்னணி இசைக்கும் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டார்.

ஹிந்துஸ்தானிய சங்கீத வித்துவான்கள் இசையமைத்த படங்களின் பாடல்களை விட சாதாரண இசையமைப்பாளர்களின் பாடலிகளில் தெளிந்த நீரோட்டமிக்க வாத்திய இசையும் நாம் காணலாம்.

உலக இசையரங்குகளில் நல்ல வயலின் வாத்தியக்கலைஞர்களாகப் பெயர்பெற்ற எல்.சுப்பிரமணியம், எல்.சங்கர் போன்ற கலைஞர்கள் சினிமாவில் இயங்காதவர்கள். ஆனாலும் கர்னாடக இசையில் பாண்டித்தியமிக்க கலைஞர்கள் சினிமாவில் அதிகம் வெற்றி பெறவில்லை என்ற பழியைக் கொஞ்சம் போக்கியவர்களாக டி.ஆர்.பாப்பா , குன்னக்குடி வைத்தியநாதன், எல்.வைத்தியநாதன், ஷ்யாம் போன்றோர் இருந்தனர். பழம்பெரும் இசையமைப்பாளரான டி.ஆர்.பாப்பா அதிக வருமானம் தரும் சினிமாத்துறையை விட்டு வானொலியில் வயலின் கலைஞராக தனது வாழ்வை நிறைவு செய்தவர்.

குன்னக்குடி வைத்தியநாதன் அகத்தியர் ,ராஜராஜ சோழன் போன்ற படங்களுக்கும் எல்.வைத்தியநாதன் ஏழாவது மனிதன் மற்றும் விருதுகள் பெற்ற சில படங்களுக்கும் இசையமைத்தார்கள்.தமிழ்நாட்டில் வாத்தியக்கலைஞர்கள் சினிமாவிலும் ஓரளவு வெற்றி பெற்றதில் குன்னக்குடி வைத்தியநாதன் , ஷ்யாம் , எல்.வைத்தியநாதன் ,வி.நரசிம்மன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

புகழ்பெற்ற வயலின் வித்துவான் லால்குடி ஜெயராமன் " தில்லானா " என்ற பெயரில் வாத்திய இசைகளோடு [Orchestra] மிக அருமையான ஒரு இசைத் தொகுப்பை வெளியிட்டார். அந்த இசைவடிவத்தை செம்மைப்படுத்தியவர் திரைப்பட இசையமையமைப்பாளரான ஷ்யாம் என்பவர்.

சினிமா இசையை பார்ப்பன சனாதனிகள் தீண்டக்கூடாத இசையாகக் கருதியதும், செவ்வியலிசையை தங்கள் சொத்து எனச் சொந்தம் கொண்டாடிக் கொண்டதும் , ஆனாலும் அதிக வருமானம் தருகின்ற தொழிலாக இருப்பதாலும் அது குறித்த இரண்டும் கெட்டான் மனநிலையிலும் அதை தள்ளி வைக்கவே முனைந்தனர். சிலர் ஆர்வத்தால் இசை பற்றிய பழமை பேசும் பண்பாட்டை உதறி துணிந்து ஈடுபட்டு வந்தனர்.

ஆனாலும் சினிமா இசையமைப்பாளர்கள் செவ்வியல் இசை ராகங்களில் நல்ல பாடல்களைக் கொடுக்கும் போது அவற்றை மட்டம் தட்டவும் , கேலி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டார்கள். காலமாற்றத்தில் ஊடே சில நெகிழ்வுகள் இருந்தாலும் சிலரது போக்கில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் சினிமா இசையைக் கொண்டாடினர். இந்த ஆற்றலை உணர்ந்த சில கர்நாடக இசை வித்துவான்கள் சினிமாவில் பாட முனைந்தனர்.அவர்களில் பாலமுரளி கிருஷ்ணா , மதுரை சேஷ கோபாலன் ,மதுரை சோமு போன்றோர் முக்கியமானார்கள். பின்னாளில் பல கர்னாடக இசைப்பாடக ,பாடகிகளும் படையெடுத்தனர். 1990களில் சந்தானம் என்ற புகழ்பெற்ற கர்னாடக இசை வித்துவான் மெல்லிசை மன்னருடன் இணைந்து சங்கமம் என்ற இசை நிகழ்ச்சி நடத்தும் நிலையும் வந்தது.

உண்மையில் சினிமா இசையமைப்பு என்பதும் கர்னாடக இசை அல்லது செவ்வியலிசைப் பயிற்சி என்பதும் வேவேறுவிதமான பயிற்சி முறைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காலதிகாலமாக தமிழ் மக்கள் செவ்வியலிசையையும் , மெல்லிசையையும் போற்றியே வந்திருக்கின்றனர். இதில் ஆதிக்க மனப்பான்மை வரும் போதே பிரச்சனையாகிறது.

யார் எதை பேசினாலும் இசையமைப்பாளர்கள் தங்கள் பணியில் கண்ணாயிருந்தனர். சினிமாவுக்கு என்னவிதமான பாடல்களையும் கொடுக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தனர்.தேவைப்படும் போதெல்லாம் கர்னாடக இசைவல்லுனர்கள் வியக்கும் வண்ணம் ராகங்களில் பாடல்களை அமைத்தும் காட்டினர்,

மெல்லிசைமன்னர்கள் அறிமுகமான காலங்களிலேயே செவ்வியலிசை சார்ந்த பாடல்களை மரபு மாறாமல் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார்கள். அவற்றுள் சில பாடல்கள் இங்கே :

01 ஆடும் கலை எல்லாம் பருவ - படம் : தென்னாலிராமன்[ 1956 - பாடியவர் : பி.லீலா -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி காம்போதி ராகம் - 02 கலைமங்கை உருவம் கண்டு- படம் :மகனே கேள் 1957 - பாடியவர்கள் : சீர்காகாழிகோவிந்தராஜன் + எம்.எல்.வி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி -ராகம் :கல்யாணி 03 ஆடாத மனம் உண்டோ - மன்னாதிமன்னன் 1960 - பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : லலிதா 04 முகத்தில் முகம் பார்க்கலாம் - தங்கப்பதுமாய் 1959 - பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் + பி.லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :கல்யாணி 05 அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை - பாசவலை1956- பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் :கரகரப்ரியா 06 மோகனைப் புன்னகை ஏனோ - பத்தினித் தெய்வம்1956- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் :மோகனம் 07 வருகிறார் உனைத்தேடி - பத்தினித் தெய்வம்1956- பாடியவர்கள் : எம்.எல்.வி + சூலமங்கலம் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் :அடானா

ராகங்களில் பாட்டமைப்பதையென்பது ஒரு குறிப்பிட்ட ராகங்களையே சுற்றி வந்தன என்பதை பழைய பாடல்களைக் கேட்கும் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகும்.குறிப்பாக மோகனம்,கல்யாணி, காம்போதி ,சிந்துபைரவி ,சிவரஞ்சனி போன்ற ராகங்களைக் குறிப்பிடலாம். பல ராகங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. 1940 மற்றும் 1950 களில் நேரடியாக அல்லது மிக தெளிவாகத் தெரியும்படியான விதத்தில் பழையபாணியில் பாடல்கள் இசையமைக்கப்பட்டன. அன்றைய நாடகமேடைகளின் பாதிப்பாகவும் அவற்றின் எதிரொலியாகவும் அவை அமைந்தன. காலமாற்றத்தினால் ஏற்பட்ட ஒரு தேக்க நிலையும் மெல்லிசையின் வற்றிய தன்மையை போக்கும் விதத்தில் மெல்லிசைமன்னர்கள் மெல்லிசைபாடல்களை தாம் ஏற்கனவே நன்கு அறிந்த ராகங்களிலும் , புதிய ராகங்களிலும் தர முனைந்து செயற்பட்டனர். ராகங்களின் பொதுவான தன்மைகளையும் ,அதன் விசேஷ குணங்களையும் புரிந்து கொண்டே தங்களது தனித்துவத்தையும் காண்பிக்கும் விதமாக ராகங்களின் உயிர்நிலைகளை எடுத்துக் கொண்டு , கிளர்ச்சியும் எழுச்சியும் ஊட்டக்கூடிய விதத்தில் பாடல்களை அமைத்தார்கள். அவர்களுக்கு முன்னிருந்த ஹிந்தி இசை தந்த பாதிப்பினால் மரபு ராகங்களைத் தொட்டுக்கொண்டே புதுக்குறியீடுகளாக எண்ணற்ற பாடல்களை தந்தனர்.

தங்கள் காலத்திற்கேற்ற புதுமை நாடிய கலைஞர்களாக விளங்கிய மெல்லிசைமன்னர்கள் படைத்த இசை யில் மரபு ராகங்களை மட்டுமல்ல ,புதிய ராகங்களையும் குறியீடுகளாக வைத்துக் கொண்டு அதில் புதுப்புது அழகுகளைக் காட்டினர். அதில் பலவிதமான மனவெழுச்சிகளையும் புதுப்புது மெட்டுக்களையும் அள்ள, அள்ள குறையாத புதையலாக படைத்தளிக்க ராகங்களை பயன்படுத்தினர்.

ஒவ்வொரு ராகத்திலும் அத்தனைவிதமான உணர்ச்சி பாவங்களையும் மனதை ஊடுருவும் பாடல்களாக்கித்தர இசைஇலக்கணங்களைச் சார்ந்தும், மீறியும் படைப்பின் எல்லைகளைத் தொட்ட சாதனைகள் வியக்க வைப்பவை.

இதிலிருந்து மெல்லிசைமன்னர்களின் ஆழமான ரசிப்பும் ,இசை குறித்த நுணுக்கமான பார்வையும் வெளிப்படும். ஓரளவு இசைஞானமிக்கவர்களையும் ராகங்களை நுணுக்கரிய நோக்கில் கேட்க தூண்டியது மட்டுமல்ல , ராகங்களின் நுண்ணலகுகளை, உள்ளொருமைகளையும் விரித்து காட்டி வியக்க வைத்தார்கள்.அதுமட்டுமல்ல, ராகங்கள் என்றால் எல்லோரும் தள்ளி நிற்கிற நிலையில் மலைக்க வைக்கும் விதத்தில் ஒரு பாமரனும் தைரியமாக அடையாளம் காணும் எளிமையான விதத்தில் கொடுத்த எளிமையும் உயர்ந்து நிற்கிறது. இனி ஒவ்வொரு ராகத்திலும் எத்தனை விதமான பாடல்களை மெல்லிசைமன்னர்கள் தந்தார்கள் என்பதை பார்ப்போம். எத்தனை, எத்தனை பாவங்கள், இனிமைகள்! எதை எடுப்பது ,எதை விடுவது என்று திகைக்கவும் வைத்து விட்டார்கள்!!

01. ராகம் : கல்யாணி 01 நான் என்ன சொல்லிவிட்டேன் - பலே பாண்டியா 1962 - பாடியவர் : டி.எம்.எஸ். - இசை : விஸ்வநாதன் ராம்மூர்த்தி : ராகம் : கல்யாணி 02 சித்திரை மாதம் - ராமன் எத்தனை ராமனடி 1970 - பாடியவர் : பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி 03 நிலவே நீ சாட்சி - பவானி 1967 - பாடியவர்: பி.சுசீலா -- இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி 04 தித்திக்கும் பால் எடுத்து - தாமரை நெஞ்சம் 1968 - பாடியவர்: பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி 05 தானே தனக்குள் ரசிக்கின்றாள் - பெரும் புகழும் 1976 - பாடியவர்: ஜேசுதாஸ் - இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி 06 அழகெனும் ஓவியம் இங்கே - ஊருக்கு உழைப்பவன் 1974 - பாடியவர்: ஜேசுதாஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி

02. ராகம் : மோகனம் 01 ஆலயமணியின் ஓசையை - பாலும் பழமும்1961 - பாடியவர்: பி.சுசீலா. - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மோகனம் 02 வந்த நாள் முதல் - பாவமன்னிப்பு 1961 - பாடியவர்: டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மோகனம் 03 வெள்ளிக்கிழமை விடியும் வேலை - நீ 1965 - பாடியவர்: பி.சுசீலா -- இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனம் 04 வெள்ளிமணி ஓசையிலே - இருமலர்கள் 1968 - பாடியவர்: பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனம் 05 தங்க தோணியிலே - உலகம் சுற்றும் வாலிபன் 1973 - பாடியவர்: ஜேசுதாஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனம் 06 ஒரு ராஜா ராணியிடம் - சிவந்த மண் 1971 - பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனம்

03. ராகம் : மோகனகல்யாணி 01 நான் உன்னை சேர்ந்த செல்வம் - கலைக்கோயில் 1961 - பாடியவர்: பி.பி.எஸ்.+பி.சுசீலா. - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மோகனகல்யாணி 02 புன்னகையில் ஒரு பொருள் - பவானி 1966 - பாடியவர்: டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மோகனகல்யாணி 03 தித்திக்கும் பால் எடுத்து - தாமரை நெஞ்சம் 1968 - பாடியவர்: பி.சுசீலா -- இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனகல்யாணி 04 சிரித்தாள் தங்கப்பதுமாய் - கண்ணன் என் காதலன் 1968 - பாடியவர்: டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனகல்யாணி 05 சிரித்தாலும் கண்ணீர் வரும் - பெண் என்றால் பெண் 1968 - பாடியவர்: டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனகல்யாணி

04. ராகம் : சிவரஞ்சனி 01 நான் பேச நினைப்பதெல்லாம் – பாலும் பழமும் 1961 – பாடியவர்: டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி- :ராகம் : சிவரஞ்சனி 02 வேண்டும் வேண்டும் உந்தன் உறவு – வசந்தத்தில் ஒரு நாள் 1982– பாடியவர்: எஸ் .பி.பி +வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி 03 பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த – நினைத்ததை முடிப்பவன் 1975 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி 04 ஆண்டவனே உன் பாதங்களை நான் – ஒளிவிளக்கு 1968 – பாடியவர்: பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி 05 ஆனந்தம் விளையாடு வீடு – சந்திப்பு [1983] – பாடியவர்: டி.எம்.எஸ் +பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி 06 சோதனை மேல் சோதனை – தங்கப்பதக்கம் 1974 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி

05. ராகம் : சாருகேசி 01 அம்மம்மா கேளடி தோழி – படம் கறுப்புப் பணம் 1964 : – பாடியவர் : எல்.ஆர்.ஈஸ்வரி இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி :ராகம் : சாருகேசி 02 ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு – படம் : எங்க பாப்பா 1966 – பாடியவர்: டி. எம்.எஸ் + எம்.எஸ்.ராஜேஸ்வரி -இசை : விஸ்வநாதன்:ராகம் : சாருகேசி 03 தென்றலில் ஆடை பின்ன – படம் கண்ணே பாப்பா 1972 : – பாடியவர்: பி.சுசீலா இசை : விஸ்வநாதன் :ராகம் : சாருகேசி 04 அழகிய தமிழ் மகள் இவள் – படம் ரிக்ஸாக்காரன் 1972 : – பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.சுசீலா இசை : விஸ்வநாதன்:ராகம் : சாருகேசி 05 சந்திர திசை பார்த்தேன் தோழி – படம்: கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 1981 – பாடியவர்:வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சாருகேசி

06. ராகம் : சிந்துபைரவி 01 என்னை யாரென்று எண்ணியெண்ணி – படம் : பாலும் பழமும் 1961 – பாடியவர் : டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : சிந்துபைரவி 02 ராமன் எத்தனை ராமனடி – படம் : கௌரிகல்யாணம் 1967 – பாடியவர் : பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் - ராகம் : சிந்துபைரவி 03 தரை மேல் பிறக்க – படம் : படகோட்டி 1964 – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : சிந்துபைரவி 04 எங்கே நீயோ நானும் அங்கே – படம் :நெஞ்சிருக்கும் வரை 1967 – பாடியவர்: பி..சுசீலா – இசை : விஸ்வநாதன் - ராகம் : சிந்துபைரவி

07. ராகம் : சுத்ததன்யாசி 01 நீயே எனக்கு என்றும் – பலே பாண்டியா 1962 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சுத்ததன்யாசி 02 தொட்டால் பூமலரும் – படகோட்டி 1964– பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி- ராகம் : சுத்ததன்யாசி 03 கண்கள் எங்கே – கர்ணன் 1964 – பாடியவர்: பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சுத்ததன்யாசி 04 இனியவளே என்று பாடி வந்தேன் – சிவகாமியின் செல்வன் 1974 – பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சுத்ததன்யாசி 05 நம்ம ஊரு சிங்காரி சிங்கபூர் – நினைத்தாலே இனிக்கும் 1978 – பாடியவர்: எஸ்.பி.பி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சுத்ததன்யாசி

08. ராகம் : நடபைரவி 01 விண்ணோடும் முகிலொடும் – புதையல் 1957 – பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - ராகம் : ராகம் : நடபைரவி 02 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – படகோட்டி 1964– பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : நடபைரவி 03 பார்த்த ஞாபகம் இல்லையோ – புதிய பறவை 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : நடபைரவி 04 நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு – ஆனந்த ஜோதி 1962– பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : ராகம் : நடபைரவி 05 பாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாலும் பழமும் 1961– பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : நடபைரவி 06 ஓடம் கடலோடும் – கண்மணிராஜா 1975 – பாடியவர்: எஸ்.பி.பி + சுசீலா – இசை: விஸ்வநாதன் - ராகம் : நடபைரவி

09. ராகம் : பகாடி 01 அத்தை மகனே – பாதகாணிக்கை 1957 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : பகாடி 02 யார் யார் யார் அவள் – பாசமலர் 1961– பாடியவர்: பி.பி .எஸ் + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : பகாடி 03 வான் மீதிலே இன்பத்தேன்மாரி – சண்டிராணி 1953 – பாடியவர்: கண்டசாலா + பி.பானுமதி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : பகாடி 04 கண்ணுக்கு குலமேது – கர்ணன் 19642– பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : பகாடி 05 கண் படுமே பிறர் கண் படுமே – காத்திருந்த கண்கள் 1962– பாடியவர்: பி.பி .எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : பகாடி 06 ஒரு நாள் இரவில் – பணத்தோட்டம் 1963– பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : பகாடி

10. ராகம் : ஆபேரி 01 தென்றல் உறங்கிய போதும் – பெற்ற மகனை விற்ற அன்னை 1957 – பாடியவர்: ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - ராகம் : ஆபேரி 02 சிங்காரப்புன்னகை – மகாதேவி 1957 – பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி- ராகம் : ஆபேரி 03 மலர்ந்தும் மலராத – பாசமலர் 1961– பாடியவர்: டி.எம்.எஸ். + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : ஆபேரி 04 செல்லக்கிளியே மெல்லப்பேசு – பெற்றால் தான் பிள்ளையா 1967 – பாடியவர்: டி.எம்.எஸ். + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி- ராகம் : ஆபேரி 05 பொன்னென்ன பூவென்ன கண்ணே – அலைகள் 1973 – பாடியவர்: ஜெயச்சந்திரன் – இசை: விஸ்வநாதன் - ராகம் : ஆபேரி 06 செண்டுமல்லிப் பூ போல் – இதயமலர் 1976 – பாடியவர்: ஜேசுதாஸ் + வாணி – இசை: விஸ்வநாதன் - ராகம் : ஆபேரி 07 தென்றலுக்கு என்றும் வயது – பயணம் 1976– பாடியவர்: எஸ்.பி.பி – இசை: விஸ்வநாதன் - ராகம் : ஆபேரி. 08 கவிதை அரங்கேறும் நேரம் – அந்த ஏழு நாட்கள் 1982 – பாடியவர்: ஜெயச்சந்திரன் + ஜானகி – இசை: விஸ்வநாதன் - ராகம் : ஆபேரி 09 ராகங்கள் பதினாறு – தில்லு முல்லு 1982– பாடியவர்: எஸ்.பி.பி – இசை: விஸ்வநாதன் - ராகம் : ஆபேரி

11. ராகம் : தேஷ் 01 சிந்து நதியின்மிசை நிலவினிலே – கை கடுத்த தெய்வம் 1963 – பாடியவர்: டி.எம்.எஸ். + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி - ராகம் : தேஷ் 02 கண்ணனை நினைத்தால் – சுப்ரபாதம் 1974 – பாடியவர்: ஜேசுதாஸ் + வாணி – இசை: விஸ்வநாதன் - ராகம் : தேஷ் 03 இதுதான் முதல் ராத்திரி – ஊருக்கு உழைப்பவன் 1975– பாடியவர்: ஜேசுதாஸ் + வாணி – இசை: விஸ்வநாதன் - ராகம் : தேஷ் 04 நானென்றால் அது அவளும் நானும் – சூரியகாந்தி 1973 – பாடியவர்: எஸ்.பி.பி. + ஜெயலலிதா – இசை: விஸ்வநாதன் - ராகம் : தேஷ்

பாரம்பரியமாக கேட்டு ரசித்த பிரபல ராகங்களை மட்டுமல்ல கேட்டுப் பழக்கமில்லாத புதிய ,புதிய ராகங்களையும் கலந்து தந்து அவற்றுடன் ஹிந்துஸ்தானி இசை ராகங்களையும் இணைத்து இசைரசிகர்களின் மனதில் ஆழப்பதியும்வண்ணம் தந்த அதிசயத்தையும் காண்கிறோம்.


ஹிந்துஸ்தானி ராகங்கள்.

மெல்லிசைமன்னர்கள் தமது காலத்தின் சமகால இசைப்போக்குகளுடன் மட்டுமல்ல, நாம் கேட்டு ரசித்த சில முக்கிய ராகங்களையும், அவற்றுடன் அதிகம் கேட்காத சில ராகங்களையும், முக்கியமாக ஹிந்துஸ்தானி ராகங்களையும் பயன்படுத்தி தங்கள் பாடல்களை வளப்படுத்தினார்கள்.

குறிப்பாக ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தித் தங்கள் பாடல்களை புதுமையாக காட்டினர். சில பாடல்களைக் கேட்கும் போது அவை நமக்குத் தெரிந்த ராகங்களின் சில சாயல்களை சார்ந்து இருப்பதும், அதில் சில வித்தியாசங்கள் இருப்பதையும் உணர்கிறோம். சில பாடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ராகங்களை நினைவூட்டவும் தவறுவதில்லை. கேட்டு அனுபவிக்கும் போது அது குறித்த சிந்தனை நமக்குள் எழுகிறது. தமிழில் மரபாக பயன்படுத்தப்பட்டு வரும் ராகங்களை பயன்படுத்தி பாடல்களை அமைப்பதிலும் பார்க்க ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தும் போது பாடல்கள் மிகவும் வித்தியாசமான தொனிகளைத் தருவதால் அவை புதுமையாக இருக்கும் என்பதாலும் மெல்லிசைமன்னர்கள் அந்த ராகங்களில் அதிகமான பாடல்களைத் தந்திருக்கின்ற உத்தி சிறப்பானதாகும்.

தமிழ் இசையும் ஹிந்துஸ்தானி இசையும் அடிப்படையில் ஒன்றாக இருந்த போதும் பாடும் முறையில் வித்தியாசங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக ராகங்களில் ஒரே மாதிரியான அமைப்பு காணப்படினும் ,அவற்றிலும் பல வகைகள், நுட்பம், மற்றும் நுண்கூறுகளில் , சாயலில், மெல்லியதான நுட்ப வேறுபாடுகளிலுமமைந்த பல ராகங்களும் இரு இசைகளிலும் காணப்படுகின்றன. ஆயினும் ஹிந்துஸ்தானி இசையில் சுதந்திரமான இனிய கலவைகளைக் கொண்டதாக புதிய, புதிய ராகங்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பல மெல்லிசைக்கு உகந்ததாகவும் விளங்குகின்றன.

அதிஸ்ரவசமாக சினிமா இசையமைப்பாளர்கள் தனியே ராக இலக்கணங்களுக்குள் நின்று சுழலாமல் அதிலிருந்து உணர்வின் வெளிப்பாடுகளை கட்டுப்பாடற்ற முறையில் தருவதற்காக , சுவைக்காக வேறு ராகங்களையும் சில இடங்களில் கலந்து மக்களைக் கொள்ளை கொண்டார்கள்.

பொதுவாக இசையில் ராகங்களில் தூய்மைவாதம் பேசப்படுவது வழமைஎந்த ஒரு கலைவடிவமும் பழமை பேசிக் கொண்டுபயன்படாமல் இருந்தால் அவை காலத்தால் மறக்கப்பட்டு வழக்கொழிந்து போய்விடும்இவை மனித சமூகத்தின் அனுபவமாக உள்ளனராகங்களை பற்றி விரிவாக ஆராய்ந்த அறிஞர் ஆப்ரகாம் பண்டிதர் ஆதிகாலத்தில் தமிழ் மக்கள் ராகங்களை உருவாக்கும் முறை குறித்து நன்கு அறிந்து வைத்திருந்ததாகவும்அந்த முறைப்படி 12,000 ராகங்கள் பயன்பாட்டில் இருந்ததாகவும்அவை வர வரக் குறைந்து இன்று சில நூறு ராகங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று விளக்குகிறார்.

பழந்தமிழர்கள் ராகங்களை உருவாக்கிய முறையை கண்டுபிடித்த ஆப்ரகாம் பண்டிதர் ஆரோகணமாக வரும் 1800 ராகங்களையும்அவரோகணமாக வரும் 1800 ராகங்களையும் ஒன்றோடுடொன்றாகச் சேர்க்க வரும் ராகங்களை விபரிக்கின்றார். 1800 x 1800 = 32 ,40,000 என்றும் அவை விக்ருதிகளை ஏற்காத ,அதாவது மாற்றங்களை ஏற்காத சுத்தமான ராகங்கள் எனவும் அதனுடன் 72 விக்ருதிகளை ஏற்கும் பொழுது அதாவது மாற்றங்களை ஏற்கும் பொழுது அவை 32,40,000 x72 = 23,32,80,000 ராகங்கள் உருவாக்குகின்றன என்கிறார் பண்டிதர்!  

இன்று சில நூறு ராகங்களை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு ஏகப்பட்ட குழப்பங்களுக்கு உள்ளாகியிருக்கும் இசை இத்தனை ஆயிரம் ராகங்களை தொடர்ந்து பயன்படுத்தாமல் அவை பற்றிய தெளிவு இல்லாமலும் இருப்பதற்கு யார் பொறுப்பு?

ராகங்கள் குறித்து பழமை பேசுவதும்தூய்மை பேசுவதும் , மாற்றங்களை மறுக்கும் போக்குகளால் ஒருவிதமான தூய்மைவாதம் நிலைநாட்ட சிலர் முனைகின்றனர்இந்த தூய்மைவாதம் என்பது பாசிசத்தன்மை அடைகின்றதுபல இனமக்கள் கலப்பதால் அவர்களிடையே புதிய அழகு பிறப்பது போல ராகங்களில் கலப்புகள் என்பது நல்ல இனிமையானபுதுமையான ராகங்களை தந்துள்ளனபலவிதமான மக்கள் கலந்தது போலவே மக்களால் இசையிலும் மாற்றங்கள் வந்தனஇவை எல்லாம் கடவுள்கள் உருவாக்கிக் கொடுத்தவையல்லமக்களால் உருவானவைமக்கள் அவற்றைப் பயன்படுத்தும் போது அவை சில மாறுதல்களுக்கும் உட்பட்டு உயிர் பெறுவதுடன் பழையமரபின் புதிய வடிவமாகவும் தொடர்கிறது.

கர்னாடக இசை போல இறுக்கமிக்கதாக அல்லாமல் இனிமையாலும், எளிமையாலும் கேட்போரை உள்ளிழுக்கும் தன்மைமிக்கதாகவும் ஹிந்துஸ்தானி இசை இருந்து வருகிறது. பெரும்பாலும் ராக ஆலாபனைக்கு அங்கே முக்கியத்தும் வழங்கப்பட்டு வருவதும், ஆலாபனைகளை விரித்து, விரித்துப் பாடுவதாலும் பல இனிய சங்கதிகளைக் கேட்க முடியும். இந்திய இசையின் உயிர் ராகம் பாடுவதில் தான் உள்ளது என்பதையே பல அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் பாடும் முறையும், அவர்களது குரல்வளமும் கேட்போரை வியக்க வைக்கும் படியாக இருக்கும். ஹிந்துஸ்தானிபாடகர்கள் பற்றி பாரதி தனது கட்டுரை ஒன்றில் வியந்து பின்வருமாறு எழுதுகிறான்.

// சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீ காசியில் வாஸஞ் செய்தேன். அங்கே, பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம் நேர்த்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிரமற்றப்படி பொதுவாக வித்வான்களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் வியப்புண்டாயிற்று. ஒன்று போல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங் குறைந்தும்இருப்பதன் காரணமென்ன? இதைப்பற்றிச் சில வித்வான்களிடம் கேட்டேன். "வட நாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிறார்கள்: புளியும் மிளகாயும் சேர்ப்பதில்லை; இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிறோம். அதனாலே தான் தொண்டை கேட்டுப் போகிறது" என்றனர். பின்னிட்டு, நான் யோசனை செய்து பார்த்ததில், 'மேற்படி காரணம் ஒரு சிறிது வாஸ்தவம் தான்' என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய், கர்ஜனை செய்யவேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்க வேண்டும்.//

கர்நாடக இசைப் பாடகர்களின் நசிந்த குரல் குறித்த பாரதியின் கவலையை தமிழ் சினிமா போக்கியது என்பதை நாம் கண்டோம்.

தனது இசையமைப்பில் காலத்திற்கு காலம் வித்தியாசங்களைக் காட்ட முனைந்த விஸ்வநாதன் காலநகர்வில் மெதுவாக வந்தடைந்த இடம் ஹிந்துஸ்தானி இசையாகும். பொதுவாக அவர் பாடும் முறையும் பயன்படுத்தும் சங்கதிகளும் அந்த இசையில் அவருக்கிருந்த ஆழந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் காட்டுவதாக இருப்பதை காணமுடியும்.

1960 களில் அதிகமாக லத்தீன் அமெரிக்க இசையில் அதிக கவனம் செலுத்திய விஸ்வநாதன், ராமமூத்தியை விட்டு பிரித்த பின்னர் தனியே இசையமைத்த படங்களில் ஹிந்துஸ்தானி இசையை அதிகமான அளவில் பயன்படுத்த தொடங்கினார். ஹிந்துஸ்தானி இசையின் இனிமைமிக்க ராகங்கள், அதன் எளிமை இசையமைப்பிற்கு வளமான களமாக இருந்தது, அதன் மூலங்களிலிருந்து மன எழுச்சிகளை உண்டாக்கும் வியக்கத்தக்க பாடல்களையும் தந்தார்.  

மெல்லிசைமன்னர்கள் தீவிரமான ஹசல் இசை ரசிகர்களாகவும், அதில் தீவிர ஈடுபாடு காட்டியவர்களாகவும் இருந்தனர். அந்தரீதியில் அவர்களது இசை தமிழ் எல்லைகளைக் கடந்து செல்லத் தயங்கவில்லை. இனிமையும், எளிமையுமிக்க பாடல்களைத் தர முனைந்த அவர்கள் தங்களது இசைக்கான அகத்தூண்டுதலாக ஹிந்திப்பாடல்களையும் முன்னுதாரணமாகக் கொண்ட அதேவேளையில், ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் பாதிப்பிலும் பாடல்களை உருவாக்கினார்கள்.

கதாபாத்திரங்களின் உணர்வுக்கு நேரடியாக எளிமைமிக்க பாடல்களை வழங்கிய அவர்களது இசையில் சங்கீதவித்துவத்தனம் குறுக்கிடவில்லை. ராகங்களின் ஜீவன்களைத் தொட்டுக்கொண்டு, காற்று படப் பட ஓங்கிவளரும் தீ போல ஒவ்வொரு பாடலிலும் இனிய சங்கதிகளை ஊதி, ஊதி ராகத்தின் உயிர்நிலைகளை விரித்து, விரித்து இசைக் கோலங்களாக்கினார்கள். ராகங்களின் தன்மைகளை யாரும் எதிர்பார்க்க்காத வண்ணம் பல கோணங்களில், பலதிசைகளிலும் அமைத்து இசையில் மாயவித்தை காட்டினார்கள்.

ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை என இரு இசையிலும் சில ராகங்கள் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருப்பதும், சில ராகங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடியும். அதனால் பலருக்கு மயக்கங்களும் உண்டாகின்றன.

வெவ்வேறு பெயர்களைக் கொண்ட ஒரே ராகங்கள்:

பைரவ் = மாயாமாளவகௌளை

பைரவி = சிந்துபைரவி

யமன் = கல்யாணி 

பூபாலி, பூப் = மோகனம்

அசாவேரி = நடபைரவி

பீம்பிளாசி = ஆபேரி

ஒரே பெயர்களைக் கொண்ட ராகங்கள் :

தேஷ் = தேஷ்

கீரவாணி = கீரவாணி

மாண்டு = மாண்டு

ஹிந்துஸ்தானி இசையில் உள்ள சில ராகங்களை கேட்கும் போது, சில ராகங்கள் நமக்கு கர்நாடக இசையின் சில நெருக்கமான சாயல்களை நினைவூட்டுவதை உணர்கிறோம். ஆனாலும் மிக உன்னிப்பாகக் கவனிக்கு போது அவற்றில் உள்ள மிக துளித்தெடுப்பு [Fractional] நுண்கூறுகளைக் காண்கிறோம். உதாரணமாக கர்னாடக இசையில் பயன்படும் ஹிந்துஸ்தானி ராகமான ஜோன்புரி என்ற ராகத்தை எடுத்துக்கொண்டால் அதைப்பாடும் முறை மிகுந்த மாறுபாடு கொண்டதாய் இருப்பதைக் காண்கிறோம். அதே ராகத்தை ஹிந்துஸ்தானி இசையில் கேட்கும் போது மென்மையான சிந்துபைரவி ராகத்தின் மெல்லிய வாசத்தை அனுபவிக்கிறோம். ஏன் சில சமயங்களில் முற்றுமுழுதாக அது சிந்துபைரவி ராகம் தானோ என்ற சந்தேகம் வருமளவுக்கு அதன் தொனி அமைந்துவிடுகிறது. ஹிந்துஸ்தானி இசையில் கேட்கும் போது சிலவேளைகளில் கானடா ராகத்தின் சாயலையும் கேட்கமுடியும். இதை எளிதாகி சில பாடல்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கிறேன்.

நடபைரவி:

தமிழில் நடபைரவி என்றொரு ராகம் இருக்கிறது. நடபைரவி ஒரு மேளகர்த்தா ராகம். அதாவது ஒரு தாய்ராகம்!

ஒருகாலத்தில் அந்த ராகமும் அதிகம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் அதனை தனது நாதஸ்வரத்தால் பிரபலப்படுத்தியவர் இசைச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. வட இந்திய இசையில் மேளகர்த்தா என்பதை " தாட் " என அழைப்பர். இந்த நடபைரவி என்கிற ராகத்தை வட இந்தியாவில் அசாவரி என அழைக்கின்றனர். ஹிந்துஸ்தானி இசையில் அசாவரி என்பது தாய் ராகம். இந்த ராகத்தில் பல இனிய பாடல்களை மெல்லிசைமன்னர்கள் தந்தார்கள். இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த ராகத்தின் ஜன்ய ராகங்களிலும் பாடல்களை தந்துள்ளார்கள்.

ராகம் சந்திரகௌன்ஸ்:

தமிழில் ஹிந்தோளம் என்ற ராகம் ஹிந்துஸ்தானி இசையில் மால்கௌன்ஸ் ராகத்திற்கு நிகரானது. ஹிந்தோளராகத்திற்கு மிக நெருக்கமான ராகம் சந்திரகௌன்ஸ்!

“மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி "– என்ற தமிழின் தலை சிறந்த பாடலை மெல்லிசைமன்னர்கள் இந்த ராகத்திலேயே தந்தார்கள்.

ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் B R..Deodhar [1901 – 1990] என்பவரால் இந்த ராகம் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது..அவர் ஹிந்தோள ராகத்தில் வரும் சிறிய ” நி ” க்கு பதிலாக பெரிய ” நி ” பயன்படுத்தினார் என்பர்.

 

ராகம் ஜோன்புரி:

"அசாவரி தாட்" ட்டின் [அசாவரி = நடபைரவி] ஜன்ய ராகங்களில் ஒன்று தான் ஜோன்புரி. [தாட் என்றால் மேளகர்த்தா என்று அர்த்தம்.]

நடபைரவி அதுமட்டுமல்ல தர்பாரி கானடா, மற்றும் கானடா குடும்ப ராகங்கள் இதன் ஜன்யமாகக் கருதப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசையில் இந்த ராகத்தை கேட்கும் போது கானடா, ஜோன்புரி, மென்மையான சிந்துபைவி ராக சாயலும் தென்படுவதை அவதானிக்க முடியும். ஆயினும் நேரடியாக ஹிந்துஸ்தானி இசையில் இந்த ராகத்தின் ஆலாபனையைக் கேட்பவர்கள் மெல்லிசைமன்னர்களின் பாடல்களின் சாயல்களை அடையாளம் காண முடியும்.

தமிழில் ஜோன்புரி ராகத்தில் அமைந்த " சர்பகோண போதன் " [ தியாகராஜ பாகவதர்] , " நாடகமெல்லாம் கண்டேன் " [மதுரை வீரன் ] , " நிறைவேறுமா எண்ணம் நிறைவேறுமா " [ காத்தவராயன் ], " நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் " [ நான் பெற்ற செல்வம் ] போன்ற பாடல்களையும் இதே ராகத்தில் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த " சொன்னது நீதானா " [ நெஞ்சில் ஓர் ஆலயம் ] பாடலையும் ஒப்பிட்டு பார்த்தால் மெல்லிசைமன்னர்கள் ராகத்தை மறைத்து மெட்டமைத்தது போன்ற உணர்வைத் தருகிறது. ஆனாலும் இந்தப்பாடலில் சிந்துபைரவி ராகத்தின் வாசம் வீசுவதை அனுபவிக்கிறோம்.

" சொன்னது நீதானா " [ நெஞ்சில் ஓர் ஆலயம் ] என்ற பாடல், என்ன ராகம் என்று அறியும் முனைப்பை தூண்டிய பாடல்! மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த தலை சிறந்த பாடல்களில் ஒன்று. இந்தப்பாடலில் சிந்துபைரவி ராகத்தின் சாயல் தென்படுவதை காணலாம். " சொன்னது நீதானா " [ நெஞ்சில் ஓர் ஆலயம் ] என்ற மெல்லிசைமன்னர்களின் இனிய பாடல் அருமையான ஜோன்புரி ராகத்தில் அமைந்த பாடல் எனபது குறிப்பிடத்தக்கது.

ராகம் : ராகேஷ்ஸ்ரீ [ Rageshsree ]

இந்த ராகம் அசப்பில் திலங் ராகத்தின் சாயல் கொண்டது. திலங் என்ற ராகம் கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானி இசையிலும் ஒரே பெயர் கொண்டே அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசையில் ராகேஷ்ஸ்ரீ என்கிற ராகம் அதிகமான புழக்கத்தில் இருக்கின்ற ராகம். "கமாஜ் தாட்" டைச் சேர்ந்த ராகம். தமிழிலும் திலங் ஹரிகாம்போதியின் ஜன்ய ராகம்.

ராகேஷ்ஸ்ரீ, மற்றும் திலங், ஜோக், தேஷ், திலக் காமோத், சரஸ்வதி, கோரா கல்யாணி, சம்பகலி , கமாஜ் போன்ற ராகங்கள்   "கமாஜ் தாட்" ராகங்கள் வகையைச் சார்ந்தவையாகும்.

இந்த ராகேஷ்ஸ்ரீ ராகம் சாயலில் பாகேஸ்வரி ராகத்தின் லேசான தன்மையையும் கொண்டிருப்பதை சில பாடல்களில் கேட்க முடியும். பொதுவாக கர்னாடக இசையில் மட்டும் பாடல்களைக் கேட்டு பழகியவர்களுக்கு சினிமாவில் இந்த ராகத்தை ஹிந்துஸ்தானி பாணியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பாடல்களைக் கேட்கும் போது பலவிதமான, நுட்பமான மனநிலை அசைவுகளையும் உண்டாக்கும் பலவிதமான ராகங்களின் வாசனைகள் ஒன்று கலந்து வீசுவது போன்ற உணர்வு வரலாம்.

ஓவியத்தில் நீர் வண்ணக்கலவையால் ஓவியம் வரையும் போது தாளில் படரும் நீரிலே மென்மையாக, வித்தியாசமான நிறங்களைத் தொட்டு ஆங்காங்கே மெதுவாகப் படரவிட்டு வர்ணங்களின் இயல்பான ஓட்டத்தில் தனது நோக்கத்தை பூர்த்தி செய்யும் ஓவியன் போல் இசையிலும் வெவேறு சாயல்களை தன்னகத்தே கொண்ட ராகங்களையும் பயன்படுத்தி மெல்லிசைமன்னர்கள் இசையோவியங்களைப் படைத்துக்காட்டினார்கள்.

ஹிந்துஸ்தானி இசையில் கலைத்துவமிக்க அழகுடன் பல்வேறு விதங்களிலெல்லாம் நுண்மையுமிக்க பாடல்களாகவும், அவற்றை அந்தந்த உணர்வுகளின் குறியீடுகளாக்கவும் தாமே அவற்றை புதிதாய்ப் படைத்துக்காட்டவும் மெல்லிசைமன்னர்கள் தயங்கவில்லை என்பதையும் அவர்கள் நமக்கு தந்த அருமையான பாடல்களில் கேட்கிறோம். ராகேஷ்ஸ்ரீ ராகத்திலமைந்த சில பாடல்களைக் கேட்கும் போது உள்ளத்தில் எத்தனை, எத்தனை அற்புத உணர்வுகள் மேலெழுகின்றன என்பதை வார்த்தையால் வர்ணிக்க முடிவதில்லை. கர்னாடக இசை கேட்டு பழகியவர்கள் கீழ்வரும் பாடல்கள் பாகேஸ்வரி ராகத்தின் சாயலோ என்ற எண்ணமும் எழலாம்.

ராகேஷ்ஸ்ரீ ராகத்தின் அடிப்படையில் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த சில பாடல்கள்:

01 நாளாம் நாளாம் திருநாளாம்   - காதலிக்க நேரமில்லை 1964 - பாடியவர்: பி .பி.எஸ் + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

02 நான் ஒரு குழந்தை - படகோட்டி 1964 - பாடியவர்: டி. எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

03 மாம்பழத்து வண்டு - பந்தபாசம் 1963 - பாடியவர்: பி .பி .எஸ் + ஜானகி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

04 மல்லிகை முல்லை பூப்பந்தல் - மன்னவன் வந்தானடி 1974 - பாடியவர்: வாணி - இசை : விஸ்வநாதன் : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

05 பாரதி கண்ணம்மா - நினைத்தாலே இனிக்கும் 1978 - பாடியவர்: எஸ்.பி .பி + வாணி - இசை : விஸ்வநாதன் : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

06 பொன் எழில் பூத்தது   - கலங்கரை விளக்கம் 1965 - பாடியவர்: டி. எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

இந்தப்பாடல்கள் அனைத்தும் ஒன்று மாறி ஒன்றாகத் தொடர்ச்சியாக பாடிக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக இருக்கும்.

ராகம்: திலங்

01 பல்லவன் பல்லவி பாடட்டுமே   - கலங்கரை விளக்கம் 1965 - பாடியவர்: டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் : ராகம் : திலங்

02 இது உந்தன் வீட்டு கிளி தான்   - ஷங்கர் சலீம் சைமன் 1978 - பாடியவர்: வாணி - இசை: விஸ்வநாதன்: ராகம்: திலங்

03 அபிநய சுந்தரி ஆடுகிறாள்   - மிருதங்க சக்ரவர்த்தி 1983 - பாடியவர்: சீர்காழி சிவசிதம்பரம் + வாணி - இசை: விஸ்வநாதன்: ராகம்: திலங்

04 நல்லதோர் வேனை செய்தே   - வறுமையின் நிறம் சிவப்பு 1982 - பாடியவர்: எஸ்.பி. பி   - இசை : விஸ்வநாதன்   : ராகம் : திலங்

ராகம் : சுமனீச ரஞ்சினி / சமுத்ரபிரியா

01 மதுரா நகரில் தமிழ் சங்கம்   - பார் மகளே பார் 1963 - பாடியவர்பி.பிஎஸ் + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : சுமனீச ரஞ்சினி

02 நான் பாடிய பாடலை   - வாழ்க்கை வாழ்வதற்கே   1963 - பாடியவர்: பி.பி.எஸ் + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : ஜனசமோகினி

03 அந்தமானைப் பாருங்கள் அழகு   - அந்தமான் காதலி   1975 - பாடியவர்ஜேசுதாஸ் + வாணி - இசை : விஸ்வநாதன் : ராகம் : சுமனீச ரஞ்சினி

ராகம் : ஜனசமோகினி

01 கேள்வி பிறந்தது அன்று   - பச்சை விளக்கு 1964 - பாடியவர்டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : ராகம் : ஜனசமோகினி

02 தத்தி செல்லும் முத்து கண்ணன் - தங்கப்பதக்கம்   1973 - பாடியவர்சுசீலா   - இசை : விஸ்வநாதன்   : ராகம் : ஜனசமோகினி

கலாவதி , வலஜி போன்ற ராகங்கள் நெருக்கமான சாயல்களைக் கொண்டவை.

ராகம் : கலாவதி

01 உன்னை எண்ணி என்னை மறந்தேன் - ரகசிய போலீஸ்115   1968 - பாடியவர்சுசீலா   - இசை : விஸ்வநாதன் : ராகம் : கலாவதி

ராகம் : வலஜி

01 உன்னை ஒன்று கேட்பேன் - புதிய பறவை   1963 - பாடியவர்சுசீலா   - இசை : விஸ்வநாதன்   : ராகம் : வலஜி

02 பொட்டு வைத்த முகமோ     - சுமதி என் சுந்தரி   1971 - பாடியவர்எஸ்.பி.பி + வசந்தா   - இசை : விஸ்வநாதன் : ராகம் : வலஜி

03 சுமைதாங்கி சாய்ந்தால் - தங்கப்பதக்கம்   1973 - பாடியவர்டி.எம்.எஸ்   - இசை : விஸ்வநாதன்   : ராகம் : வலஜி

ராகம் : திலக் காமோத்

இந்த ராகம் தேஷ் ராகத்தின் சாயலை கொண்டது. இந்த ராகத்தை ரவிசங்கர் பிரபலப்படுத்தினார்.

01 அன்று வந்ததும் இதே நிலா - பெரிய இடத்து பெண் 1963 - பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் : ராகம் :திலக் காமோத்

02 மௌனமே பார்வையால் - கொடிமலர் 1966 - பாடியவர்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - இசை :விஸ்வநாதன் : ராகம் : திலக் காமோத்

03 தண்ணீரிலே தாமரைப் பூ - தங்கை 1971 - பாடியவர்: டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்: ராகம் : திலக் காமோத்

04 ஆயர்பாடி மாளிகையில் - பக்திப்பாடல் - பாடியவர்: எஸ்.பி.பி. - இசை: விஸ்வநாதன்: ராகம் : திலக் காமோத்

05 இறைவன் உலகத்தை படைத்தானாம் - உனக்காக நான் 1974 - பாடியவர்: ஜேசுதாஸ் - இசை: விஸ்வநாதன்: ராகம்: திலக் காமோத்

ராகம் : காளிங்கரா /

இந்தராகம் மாயாமாளவ கௌளை ராகம் போல ஒலிக்கும். ஒரே சுரங்களைக் கொண்ட ராகம்

01 பொன் மகள் வந்தாள் - சொர்க்கம்   1971 - பாடியவர்:   டி.எம்.எஸ்     - இசை : விஸ்வநாதன்   : ராகம் : திலக் காமோத்

02 நினைத்தேன் வந்தாய் நூறு வயது - காவல்காரன்   1968 - பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா     - இசை : விஸ்வநாதன்   : ராகம் : திலக் காமோத்

ராகம் : மிஸ்ர மாண்டு

01 நெஞ்சம் மறப்பதில்லை     - நெஞ்சம் மறப்பதில்லை 1963 - பாடியவர்பி.பி.எஸ் + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மிஸ்ர மாண்டு

02 அழகே வா அறிவே வா   - ஆண்டவன் கட்டளை 1963 - பாடியவர்பி.பி.எஸ் + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மிஸ்ர மாண்டு

03 குமரிப்பெண்ணின் உள்ளத்தில்   - எங்க வீட்ட பிள்ளை 1963 - பாடியவர்டி .எம்.எஸ் + சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மிஸ்ர மாண்டு

ராகம் : ஜோன்புரி

01 சொன்னது நீதானா - நெஞ்சில் ஓர் ஆலயம்   1963 - பாடியவர்சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : ஜோன்புரி

ராகம் : காளிங்கரா

01 நினைத்தேன் வந்தாய் - காவல்காரன் 1967 - பாடியவர்டி .எம்.எஸ் + சுசீலா   - இசை : விஸ்வநாதன்   : ராகம் : காளிங்கரா

02 பொன்மகள் வந்தாள்   - சொர்க்கம் 1964 - பாடியவர்டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்   : ராகம் : காளிங்கரா  

ராகம் : மாரு பெஹாக்

கல்யாணி ராக குடுமபத்தைச் சேர்ந்த ராகம் என்பதால் கல்யாணி ராகத்தின் சாயல் மாரு பெஹாக் என்கிற இந்த இனிமையான ராகத்தில் இருப்பதை நாம் கேட்கமுடியும்.

01 பாவாடை தாவணியில்   - நிச்சய தாம்பூலம் 1963 - பாடியவர்: டி .எம்.எஸ்   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   : ராகம் : மாரு பெஹாக்

ராகம் : பிலஸ்கானி தோடி

01 எட்டடுக்கு மாளிகையில்   - பாதகாணிக்கை 1962 - பாடியவர்சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   : ராகம் : பிலஸ்கானி தோடி

02 கண்ணிலே அன்பிருந்தால் - படம்ஆனந்தி 1965 - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   - ராகம் : பிலஸ்கானி தோடி

03 என்னை மறந்ததேன் - கலங்கரை விளக்கம் 1965 - பாடியவர்சுசீலா   - இசை : விஸ்வநாதன் : ராகம் : பிலஸ்கானி தோடி

ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் - சாந்தி 1969 - பாடியவர்சுசீலா   - இசை : விஸ்வநாதன் : ராகம் : பிலஸ்கானி தோடி

05 அன்னமிட்ட கைகளுக்கு - இருமலர்கள் 1967 - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் - ராகம் : பிலஸ்கானி தோடி

சில ராகங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமானதாகவும் ,மிக நுண்ணிய வேறுபாடுகளையும் கொண்டிருப்பதையும் காண முடியும்.குறிப்பாக ராகேஷ்ஸ்ரீ என்கிற ராகம் பாகேஸ்வரி யாகத்திற்கு நெருக்கமானதாக இருப்பதையும் காண முடியும்இந்த இரண்டு ராகங்களும் கலந்ததொரு இனிய ராகமாக மால்குஞ்சி என்று ஒரு ராகம் காணப்படுகிறது.அழியாத கோலங்கள் திரைப்படத்தில் சலீல் சௌத்ரியின் இசையில் " நான் என்னும் பொழுது " என்ற பாடல் மால்குஞ்சி ராகத்தில் இம்மிந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

அது போலவே " முத்துக்களோ கண்கள் " என்ற பாடல் மத்யமாவதி ராகம் என்றும் பிருந்தாவனசாரங்கா ராகம் என்றும் சிலர் இது "மல்கர்ராகம் என்றும் ,சிலர் "மேக் மல்கர்ராகம் என்றும் கூறுகின்றனர் . இந்த ராகங்கள் எல்லாம் மிகமிக நெருக்கனான ராகங்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே போலவே ஆரபி ராகம் பாடும் போது ஒருகணம் தவறின் சுத்த சாவேரி ராகத்தின் சாயல் தென்படுவதும் , மத்யமாவதி ராகத்தில் பிருந்தாவனசாரங்க சாயல் வருவதும் என பல ராகங்கள் மிக நெருக்கமானமுறையில் பின்னிப்பிணைந்துள்ளன.

சினிமா இசையை பொறுத்தவரையில் மெல்லிசை அமைப்பு மற்றும் வாத்திய இசையின் கலப்பால் அது ஓர் புதிய இசைவடிவமாக உருவெடுத்துள்ளதுஇந்திய சினிமா இசை என்பது உலக இசைக்கு ஒரு புது இசை என்று சொல்லலலாம்அதுமாத்திரமல்ல இந்த இசைவடிவம் என்பது வெகுமக்கள்  சார்ந்துள்ளதும்காலங்காலமாக இசைமறுக்கப்படட சாதாரணர்கள் சினிமாவிற்குள் நுழைய வாய்ப்பு பெற்றார்கள்மக்களின்   இசைவளங்களை அறிந்தவர்கள் உள்நுழைந்தது மட்டுமல்ல வெளியிசையை அனுபவித்தவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

பெரும்பாலான சினிமா   இசையமைப்பாளர்கள் முறைசார்ந்த கல்விக்கூடங்களிலிருந்து வந்தவர்களல்ல என்பதும் நாடக மரபிலிருந்துமக்கள் இசை வழக்குகளைஅவர்களது ரசனைகளை நன்கு அறிந்தவர்காளாக இருந்தனர்இவையே அவர்களுக்கு எல்லை கடந்த எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு கலக இசையை உருவாக்குபவர்களாக வந்தார்கள்.

பெரும்பாலும் வாத்திய இசையைக் கேட்டு பழக்கமற்ற தமிழ் மக்கள் சினிமாவின் புண்ணியத்தால் இசைக்குழு [ Orchestra ] வாசிக்கும் சினிமா இசையைக் கேட்கும் படியானது.குறிப்பாக ராகங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பாடல்களில் வாத்தியங்களின் இணைவு புதிய கோணங்களில் உருவாகவும்அதன் மூலம் மக்கள் மத்தியில் புதிய ரசனையையும் உருவாக்கியதுமுனையளவும் மாற முடியாது என்றிருந்த தமிழ் இசையுலகில் திரையிசை மக்கள் திரளின் கொண்டாட்ட இசையானது!

பொதுவாக ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தினார்கள் என்று கூறியதும் பெரும்பாலானோர் உடனடியாகவே கர்ணன் படப்பாடல்களையே கூறுவது வழக்கம். வட இந்தியப் புராணக்கதை என்பதால் அப்படத்தில் அவர்கள் அதிகமான ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தியது உண்மை எனினும் வேறு  படங்களிலும் பல ராகங்களை பயன்படுத்தி இனிய பாடல்களைத் தந்து புதுமை படைத்தார்கள்.

கர்ணன் பாடல்களும் ராகங்களும்:

01 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது = ராகம் : ஆஹிர் பைரவி // 02 போய் வா மகளே போய் வா = ராகம்ஆனந்த பைரவி.

03 இரவும் நிலவும் வளரட்டுமே = ராகம்சுத்த சாரங்கா //  04 மகாராஜன் உலகை ஆளுவான் ராகம் : கரஹரப்ரியா // 05 என்னுயிர் தோழி கேளொரு சேதி = ராகம்ஹமீர் கல்யாணி //  06 கண்ணுக்கு குலம் ஏது = ராகம்பஹாடி

07 ராக மாலிகை - 1

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்ஹிந்தோளம் / நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் = கானடா / என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்ஹம்சானந்தி / ஆயிரம் கரங்கள் நீட்டி = ராகம் : ரேவதி

08 ராக மாலிகை - 2 [ மஞ்சள் முகம் நிறம் மாறி ]

மஞ்சள் முகம் நிறம் மாறி = காபி / மலர்கள் சூட்டி = சுத்தசாவேரி

09 ராக மாலிகை – 3 [மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா]

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா = நாட்டை : / என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் = சஹானா ; / புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் =மத்யமாவதி

10 குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ = மாயா மாளவ கௌளை

11 பரித்ராணாய சாதூனாம் =மத்யமாவதி

ஏனைய இசையமைப்பாளர்கள் அதிக கவனம் செலுத்தாத அபூர்வ ராகங்களில் தமது தனித்துவமான இசைநடைகளை பயன்படுத்தி, மறைந்திருக்கும் இனிமைகளை தேடிக்கண்டு பிடித்து இசையின்ப அனுபவத்தை புத்தாக்கம் செய்தார்கள். தனியே ராகங்களில் மட்டுமல்ல ராகமாலிகை அமைப்பிலும் வியக்கத்தக்க பாடல்களை அமைத்து தந்து ஆற்றலை வெளிப்படுத்தியவர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி!

01 வில்லேந்தும் வீரர் எல்லாம் – படம்: குலேபகாவலி [1955] – பாடியவர்: லோகநாதன் + பி.லீலா – இசை :விஸ்வநாதன் -ராமமூர்த்தி

அமைந்த ராகங்கள்: கமாஸ் + கல்யாணி + மத்யமாவதி +ஸ்ரீராகம் + சுத்தசாவேரி +மோகனம்

02 காளிதாஸ மகாகவி காவியம் - எங்கிருந்தோ வந்தான் 1971 - பாடியவர்: சீர்காழி + லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : ரேவதி + சாகேசி + சுத்தசாவேரி

03 மழை கொடுக்கும் கொடையும் - கர்ணன் 1964 - பாடியவர்: சீர்காழி + டி. எம் எஸ் + லோகநாதன் =+ பி.பி.எஸ்   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : ஹிந்தோளம் + கானடா + ஹம்சானந்தி ராகம் +ரேவதி

04 மஞ்சள் முகம் நிறம் மாறி - கர்ணன் 1964 - பாடியவர்: சுசீலா   - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி: ராகம்: காபி + சுத்தசாவேரி

05 மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா - கர்ணன் 1964 - பாடியவர்: சீர்காழி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் := நாட்டை + சஹானா + மத்யமாவதி

06 உலகின் முதல் இசை - தவப்புதல்வன் 1973 - பாடியவர்: டி.எம்.எஸ் + ஸ்ரீனிவாஸ்   - இசை : விஸ்வநாதன் : ராகம் : ஸ்ரீராகம் + பகாடி + சிந்துபைரவி.

07 ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் – படம்: அபூர்வ ராகங்கள் [1975] – பாடியவர்: வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பந்துவராளி, ரஞ்சினி, சிந்துபைரவி, காம்போதி

08 அதிசய ராகம் ஆனந்த ராகம் – படம்: அபூர்வ ராகங்கள் [1975] – பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

மகதி + பைரவி

மெல்லிசைமன்னர் இசையமைத்த பாடல்களில் மேலும் சில தமிழ் ராகங்கள்:

ராகம் : ஆரபி

01 உதடுகளில் உனது பெயர் - தங்கரங்கன் 1978 - பாடியவர்ஜெயசந்திரன் + சுசீலா   - இசை : விஸ்வநாதன் : ராகம் : ஆரபி

02 எங்க வீட்டு ராணிக்கு இப்போ - கிரகப்பிரவேசம் 1978 - பாடியவர்டி.எம்.எஸ் + சுசீலா   - இசை : விஸ்வநாதன் : ராகம் : ஆரபி

ராகம் : செஞ்சசுருட்டி

01 தமிழுக்கும் அமுதென்று பேர்   - பஞ்சவர்ணக்கிளி 1965 - பாடியவர்பி.சுசீலா   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி      : ராகம் : செஞ்சசுருட்டி

02 கட்டோடு குழலாட ஆட   - பணக்காரக்குடும்பம் 1965 - பாடியவர்டி.எம்.எஸ் + பி.சுசீலா + ஈஸ்வரி   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   : ராகம் : செஞ்சசுருட்டி

03 ஒருவர் வாழும் ஆலயம்     - நெஞ்சில் ஓர் ஆலயம் 1965 -  பாடியவர்டி.எம்.எஸ் + ஈஸ்வரி   - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   : ராகம் : செஞ்சசுருட்டி

04 ஒரே பாடல் உன்னை அழைக்கும்     - எங்கிருந்தோ வந்தான்   1971 - பாடியவர்டி.எம்.எஸ்   - இசை : விஸ்வநாதன்   : ராகம் : செஞ்சசுருட்டி

05 நான் பாடிக் கொண்டே இருப்பேன் - சிறை 1984 - பாடியவர்: வாணி - இசை : விஸ்வநாதன் : ராகம் : சாமா

06 மௌனத்தில் விளையாடும் - நூல்வேலி 1982 - பாடியவர்: பாலமுரளி - இசை : விஸ்வநாதன் : ராகம் : சாமா

07 வேண்டும் வேண்டும் உந்தன் உறவு   - வசந்தத்தில் ஓர் நாள் 1982 - பாடியவர்: எஸ்.பி.பி +வாணி - இசை : விஸ்வநாதன் : ராகம் : சிவரஞ்சினி

08 காஞ்சி பட்டுடுத்தி   - வயசுப் பொண்ணு 1979 - பாடியவர்: ஜேசுதாஸ் - இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணவசந்தம்

09 நான் கடவுளைக் கண்டேன்   - கல்லும் கனியாகும்   1967 - பாடியவர்டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்   : ராகம் : மத்யமாவதி

10 கை விரலில் பிறந்தது     - கல்லும் கனியாகும்   1967 - பாடியவர்டி .எம் .எஸ் - இசை : விஸ்வநாதன்   : ராகம் : மிஸ்ர சிவரஞ்சனி

11 தீர்க்க சுமங்கலி வாழ்கவே   -   தீர்க்க சுமங்கலி 1973 - பாடியவர்வாணி - இசை : விஸ்வநாதன் : ராகம் : ரேவதி

இதுபோல பல பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பொதுவாக தமிழ் ராகங்களையும்ஹிந்துஸ்தானி ராகங்களையும் ஒப்பிட்டு பேசுபவர்கள் அவற்றின் நெருக்கத்தையும் , வேறுபடும் தன்மைகளையும் அறிந்தாலும் சில பாடல்களின் அமைப்பு பற்றிய குழப்பத்தால் வெவ்வேறு கருத்துக்களைக் கூறுவதை பார்த்திருக்கின்றோம்.சில பாடல்கள் பல ராகங்களின் பிரயோகங்களைக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுவர்!

அந்தவகையில் சில குழப்பங்களைத் தரும் பாடல்களை இசையமைத்தவர் அவை என்ன ராகத்தில் அமைக்கப்பட்டன என்று கூறினால்தான் உண்மையை அறிய முடியும். அந்த வகையில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதனிடம் அவை என்ன ராகம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அது " சினிமா ராகம் " என்று கூறி அதை தவிர்ப்பதையும்அப்படி சில சமயங்களில் சிலர் அது “இந்த ராகம் தானே” என ஒரு ராகத்தைக் குறிப்பிட்டு கேட்கும் போது “ஆம்” என்று தலையாட்டி நகர்வதையும் கண்டிருக்கின்றோம்இந்த விஷயத்தை அவர் தவிர்த்து வந்ததாகவே தெரிகிறது.

ஹிந்துஸ்தானி ராகங்களில் மெல்லிசைமன்னருக்கு இருந்த ஈடுபாடு என்பதை அவரது பாடல்களில் வரும் சங்கதிகளிலும் நாம் துல்லியமாகக் கேட்க முடியும்சங்கீத வித்துவான்கள் செவ்வியலிசையில் நுட்பமான சங்கதிகளை அதிகம் பிரயோகிப்பது வழக்கமாக இருந்த நிலையில் மெல்லிசையிலேயே அசாத்தியமான இனிய சங்கதிகளையும்ஓசைநயங்களையும் தரமுடியும் என விஸ்வநாதன் நிரூபித்தார்கேட்ட ராகங்களையே கேட்டுகேட்டு பழகிய நிலையில் புதிய , புதிய ராகங்களில் ஆனந்திக்கத்தக்க புதிய ,புதிய சங்கதிகளிலும் பாடல்களை மெருகேற்றினார்.


ஓசைநயங்களும் இனிய சங்கதிகளும்:

"நீரின்றி அமையாது உலகுஎன்று நீரின் மேன்மையை வள்ளுவர் சொல்கிறார்அது போல இனிய ஒலியின்றி நல்ல பாடல்கள் அமையாது என்பதற்கு அமைய பாடல்கள் தந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள்இசைக்கு மட்டுமல்ல மொழிக்கும் அடிப்படையே ஒலிதான்!

மொழியுடன் தொடர்புடைய ஒலி பற்றிய செய்திகளை தொல்காப்பியம் உடம்படுமெய் ஒலிகள் என எழுத்ததிகாரம் பகுதியில் விபரிக்கின்றதுநூற்பா 33 இல் "அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும்என்ற பாடல்கள் மொழிக்கும் இசைக்குமுள்ள தொடர்பை காட்டுகிறது.

அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலு

முளவென மொழிப விசையொடு சிவணிய

நரம்பின் மறைய வென்மனார் புலவர். (33)

"நரம்பின் மறைஎன்பது இசை நூல் ஆகும்இசைமட்டுமல்லஇந்தப் பிரபஞ்சமே ஒலியின் ஒத்திசைவிலும் நிகழ்கிறது

தமிழ் இசை மரபில் ராகம்தாளம்சங்கதிகமகம்பிருக்கா போன்றவை இசையின் அடிப்படையானதாக இருக்கின்றனஇவையின்றி இசையில்லை என்று சொல்லிவிடலாம்இவை எல்லாம் உலகப்பொதுவானவை என்றாலும் இவற்றுக்கெல்லாம் தனி இலக்கணங்களை வகுத்தவர்கள் தமிழர் என்பது மிகையான கூற்றல்லதமது இசையை அழகுபடுத்தும் நோக்கத்துடனேயே நம் முன்னோர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்தினார்கள்.

இந்த அமைப்பு முறைகளை கர்நாடக ஹிந்துஸ்தானி இசை கச்சேரிகளில் இன்றும் நாம் கேட்கமுடியும்நமது இசையின் முதுகெலும்பு இவை தான் என்பதும்இதுவே இந்திய இசையை உலகின் வேறு இசைகளிலிருந்து வேறுபடுத்தியும் காட்டுகின்றன என்பதும் நமது கவனத்திற்குரியதாகும்.

தமிழ் ஒலி அமைப்பு முறைகளுக்கு இலக்கணம் வகுத்த முன்னோர்கள் ஒலியின் அழகுகள் குறித்தும் ஏராளமான செய்திகளை நமக்குத் தந்துள்ளனர்இதன் மூலம் அவர்களின் ஒலி பற்றிய மிக நுணுக்கமான அறிவினை எண்ணி வியக்கவும் செய்கிறோம்பழந்தமிழ் நூல்கள் சந்தம் வண்ணம்அளபெடைசங்கதிகமகம் போன்றவை பற்றியும் பேசுகின்றன.

சந்தம் வண்ணம்

பாடல்களில் உள்ள ஓசைநயம் சந்தம் எனப்படுகிறதுபாடல் வரிகளில் பொதிந்திருக்கும் தாளத்தின் கூறுகளையும் அது வெளிப்படுத்தும்ஒலியின் அழகைத் தமிழில் வண்ணம் என்றும் ராகம் என்றும் அழைக்கின்றனர்இசைக்கலையில் உயர்ந்த குறிப்பாற்றலை வெளிப்படுத்த இது உதவுகிறது.

அளபெடை:

அன்றாட வாழ்வில் நம்மை அறியாமலேயே ஒரு நபரையோ பொருளையோ அழைக்கும் போதோ அல்லது பாடும் போதோ சில ஒலி அளவுகளை நீட்டியும் குறைத்தும் பயன்படுத்துகிறோம்அதில் நீண்ட ஒலிகளை எழுப்புவதை அளபெடை என்று அழைக்கின்றோம்ஒரு சொல்லின் ஒலி அளவை சற்று நீட்டி அழைப்பதை பொருளைக் கூவி விற்பவர்களிடமும் ஒப்பாரி பாடும் போது சில சொற்களை நீட்டிப் பாடுவதை சாதாரண பெண்களிடமும் சர்வசாதாரணமாகக் காண்கிறோம்.

இந்த ஒலிப்பு முறைகளை தமிழ் இலக்கணத்தில் இயற்கை அளபெடை சொல்லிசை அளபெடை இன்னிசை அளபெடை செய்யுளிசை அளபடை என நான்காக வகுத்துள்ளனர்நெடில் எழுத்துக்களே அளபெடுக்கும் என்பர்ஈ ஊ ஏ ஊ ஓ போன்ற நெடில் எழுத்துக்களிலேயே அளபடை அமைந்திருக்கும்.

செவிக்கு இனிய ஓசைதரும் வகையிலேயே இருப்பது இன்னிசை அளபடை ஆகும்கர்னாடக இசையில் ஒரு ராகத்தை விரிவாக அசைத்து ,அசைத்து நீட்டிப் பாடும் போது அவை ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஐஇ ஓஒ – ஒள உ என்ற எழுத்துக்களின் ஒலிநயத்தையும் ஓசைநயத்தையும் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

பெரும்பாலும் கர்நாடக இசைக்கச்சேரிகளில் இசைக்கலைஞர்கள் ராகம் பாடும் போது அசைத்து வரும் ஒலிகளைக் கவனித்தால் ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஐஇ ஓஒ – ஒள  என்கிற இந்த எழுத்துக்களின் ஒலிநயங்களையே நாம் கேட்க முடியும்இந்த எழுத்துக்களை அசைத்தால் மட்டுமே காதுக்கு இனிமை உண்டாகும்.மேலை நாடுகளில் கூட குரல் பயிற்சி செய்பவர்களும் இந்த ஒலிகளையே பயன்படுத்துகின்றனர்.

இசையில் பயன்படும் அளபெடை போலவேகமகங்களும்சங்கதிகளும்பிருக்காக்களும் மிக,மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

சங்கதி :

ஒரு பாடலில் வரும் வரிகளை திரும்பத் திரும்ப விதம் விதமாக பாடிக் காண்பிப்பது சங்கதி எனப்படும்ஒரு பாடலின் அழகையும்இனிமையையும் பாவத்தையும் அழகுபட காண்பிக்கவும் சங்கதி பயன்படுகிறது.

பிருக்கா:

பாடகர் தங்களது பாடல்களில் வரும் சொற்களை அல்லது ஒரு சொல்லில் அசையக்கூடிய இடங்களில் குரலில் விதம்,விதமான விறு விறுப்பானதிடீர்திடீர் என மாறுபாடுகளையும் பாடி அவற்றில் நுணுக்கமான வேறுபாடுகளையும் காண்பிக்கும் ஒரு முறையாகும்பாடும் வரிகளில் இருக்கும் சொற்களை அசைத்து,அசைத்து அல்லது மீண்டும் மீண்டும் பாடிக் காட்டுதல்இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் எஸ்.ஜி.கிட்டப்பாவின் பாடல் முறையைச் சொல்லலாம்அவரைப்பின்பற்றி டி.ஆர்.மகாலிங்கம் சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் பிருக்கா வைத்து பாடி புகழ் பெற்றனர்.

கமகம்:

கமகம் என்பதை பழந்தமிழர்கள் உள்ளோசைகள் என்று அழைத்தனர்இது இசை ஒலிகளுக்கு அழகூட்டும் அல்லது உயிரூட்டும் ஒரு முறையாகும்ஒரு பாடலைப் பாடுபவரோ அல்லது வாத்தியக்கருவி வாசிப்பவர்களோ சில இனிமையான இடங்களை அழகுபடுத்திக் காட்டவும் இனிமைகூட்டவும் ஒலி அசைவுகளில் சில நுணுக்கங்களைக் காண்பித்தலாகும்கமகங்களில் பலவகையுண்டு என சிலப்பதிகாரம் சொல்கிறதுஅவை..

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்

சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்

ஏருடைப் பட்டடை என இசையோர் வகுத்த

பட்ட வகைதன் செவியின் ஓர்த்த

கானல் வரி-12-6 ]

கர்நாடக இசையில் 15 வகையான கமகங்கள் உண்டுஅதில் முக்கியமானவை நான்கு.இலகுவாக அடையாளம் காணக் கூடியவையாகும்.

01 ஜாரு Jaaru ]

கொஞ்சம் வளைவுள்ள கமகம்அதை Sliding Gamaga இன அழைப்பர்ஒரு சொல்லையோ வரியையோ நேராகப் பாடாமல் கொஞ்சம் வளைத்து பாடுதல்ஆறு வளைந்து வளைந்து ஓடுவதை போன்றதாகும்.

02 கம்பிதம் Gambitham ] –

அலை [ Wave ] வடிவத்தில் பாடுவதுநேராகப் பாடாமல் சுரங்களுக்கிடையே அசைவுகளைக் காட்டுதல்கொஞ்சம் வளைவுள்ள கமகம்.

03 ஜண்ட Janta ]- Janta Swaras -

சுரங்களை இரண்டுஇரண்டாகப் படுதல்உ ம் சச ரிரி ககமம ..

04 ஸ்புரிதம் Spuritham ] - Vibration Gamagas-

ஜண்ட சுரங்களை துரிதமாகப் பாடும் முறை இதுவாகும்.

இவை செவ்வியலிசைகளில் மட்டுமல்ல சினிமா இசையிலும் அதன் அளவிற்கேற்ப இருந்து வருவதை நாம் காண்கிறோம்குறிப்பாக மெல்லிசைமன்னர்களின் இசையில் மிக இயல்பாக இழைந்தோடிக்கிடக்கின்றன.

மேலே கூறப்பட்ட சந்தம் வண்ணம்அளபடைசங்கதி கமகம் போன்றவற்றை தமது பாடல்களில் மிக இயல்பாக வார்த்தையில் சொல்ல முடியாத அழகுடன் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

//" எனக்கு பிருக்கா எல்லாம் வராதுநல்ல கார்வை கொடுத்துப் பாடுவேன். // என்று டி.எம்.சௌந்தரராஜன் முன்பு ஒருமுறை கூறியிருந்தார்கிட்டப்பா தியாகராஜ பாகவதர் டி.ஆர்.மகாலிங்கம் சீர்காழி கோவிந்தராஜன் பிருக்கா வைத்து பாடி வந்தனர்கால மாற்றத்தால் சினிமாவில் பிருக்கா மறைந்து விட்டது என்று சொல்லலாம்.

எந்த ஒரு படைப்பும் அதை படைக்கும் கலைஞனின் தனித்தன்மையாலும் சிறப்பு பெறுகிறது அந்தவகையில் தமிழ் சினிமா இசையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி அல்லது நடை இருந்து வந்திருக்கிறது. 1950களில் புகழபெற்றிருந்த ஜி.ராமநாதனின் வாத்திய பிரயோகங்களும் குறிப்பாக அவர் பயன்படுத்திய தாள நடையும் மற்றவர்களிடமிருந்து அவரைத் தனியே எடுத்துக் காட்டின.

மெல்லிசைமன்னர்களும் தங்கள் தனித்துவத்தை இசையில் துல்லியமாகக் காண்பித்தனர்.அந்தவகையில் இசையின் கூறுகளாக இருந்த பல அம்சங்களையெல்லாம் விரிவாகப் பயன்படுத்தியதால் மெல்லிசைமன்னர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

மேலே கூறப்பட்டவற்றில் ஒன்றான வண்ணம் என்பது இசையின் முக்கிய அம்சமாகவும் தமிழ் மொழியின் இலக்கணப்பகுதியின் முக்கிய அம்சசமாகவும் தொல்காப்பியம் பிரதானப்படுத்தியுள்ளதுவண்ணங்கள் பற்றிய மிக விரிவாகப் பேசும் தொல்காப்பியம் இருபது வண்ணங்களை பற்றிய முக்கிய குறிப்புகளையும் தருகிறது.

கவிஞர்கள் எழுதும் பாடல்களில் இடம்பெறும் சொற்களின் ஒலிக்கும் ,ஓசைநயத்திற்கும் அவற்றிலுள்ள சந்தநடைக்கும் மிக நெருக்கிய தொடர்பு இருக்கும் இதனையே மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் கவி அல்லது பாடல் வரிகளிலேயே இசை இருக்கிறது .அதைத் தொடர்ந்தாலே மெட்டுக்கள் பிறந்து விடும் என்பார் ஆனால இது போன்ற கருத்துக்களை அவர் போன்ற மேதைகளாலேயே சொல்ல முடியும்இவற்றையெல்லாம் உள்வாங்கி எங்கெல்லாம் என்னென்ன முறைகளை கையாள வேண்டுமோஅங்கெல்லாம் சிறப்பாகக் கையாண்டு தமது பாடல்களில் பொதிந்து வைத்தனர்எழுத்துக்களின் ஓசையையும் அவற்றில் எழும் ஓசைப்பெருக்குகளையெல்லாம் தமது பாடல்களை வளம் செய்யுமாறு அந்தந்த உணர்வுகளுக்கேற்ப முதன்மையுறத தந்தனர்.

அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்

அளபெடை:

சாதாரண பேச்சுவழக்கில் நம்மை அறியாமலேயே நாம் தேவையான அளவுக்கு சொற்களை நீட்டியும் குறுக்கியும் பாவிப்பது போல இசையிலும் இருக்கிறது.அது சினிமாப்பாடல்களிலும் சிறப்பாக இருக்கிறதுசொற்களின் பயன்பாட்டிலும் உச்சரிப்பிலும் அதிக கவனம் செலுத்திய பழைய இசையமைப்பாளர்கள் அவற்றைத் தகுந்த இடங்களிலெல்லாம் பயன்படுத்தியும் இருக்கின்றனர்இசையமைப்பாளர்கள் தமது இசையில் அதனை மிக லாவகமாகப் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளனர்மெல்லிசைமன்னர்களின் இசையில் அது மிகவும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.

அளபெடை என்பது இசையில் வரும் போது அளவில் சற்று நீள ஓசையாக வரும்ஒன்றை விழித்து அழைப்பதற்கு அல்லது ஒரு கருத்தை ஓங்கி சொல்வதற்கு அல்லது சொற்களுடன் ஓசைகளை நீட்டி பாடல்களுக்கு சுவை கூட்டுவதற்கு அளபெடை பயன்படுகிறதுமெல்லிசை மன்னர்களை பொறுத்தவரையில் இசையின் ஜீவனுக்கு உயிர் கொடுக்க இந்த முறைகளையும் ஹம்மிங்காக ஓசைவளைவுகளாக என பல பரிமாணங்களில் வகை வகையாகத் தந்துள்ளனர்அதுமட்டுமல்ல அவற்றில் அற்புதமான உணர்வுகளையும்இசையின் புத்துணர்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

சொற்களில் இயல்பாக இருக்கும் அளபெடைகளை தமது இசையில் கனகச்சிதமாகப் பயன்படுத்தி வெற்றிகண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள்அளபெடைக்கு உதாரணமாக அமைந்த பல பாடல்கள் உண்டுஅவற்றுள் சில :

01 நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் எங்க வீட்டுப் பிள்ளை 1963-பாடியவர்டி.எம்.எஸ் ஈஸ்வரி இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் ஆரம்பமே அமர்க்களமான அளபெடையுடன் நான் மாந்,,,,,,,,தோப்பில் என்று அதாவது தோப்பு அவ்வளவு தூரம் என்பது போல நீட்டலுடன் தொடங்குகிறதுஅது போலவே அதைக் கொடுத்தா …..லும் வாங்கவில்லை என்றும் வரும்எங்கெல்லாம் நீட்டமான எழுத்துக்கள் வருகிறதோ அதற்கேற்ப தேவையான போது நீண்ட ஓசையைக் காட்டுவார்கள்.

அதுமாத்திரமல்ல இனிய சங்கதிகளும் இனிய ஓசைநயங்களும் இந்தப்பாடலில் உண்டு.

நான் தண்ணீர் பந்தலில் நின்றுருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள் ......கோய் "

என்ற வரிகளை இரண்டாவது முறை பாடும் போது கோய்என்ற ஓசையை சேர்த்து சுவையூட்டுகின்றார்கள்.அதே போல அவன் தாலி கட்டும் முன்னாலே தொட்டாலே போதும் என்றே துடிதுடித்தான் என்ற வரிகளில் "ஓகோ      "என்று இதமான ஓசைநயத்தையும் பாடலின் நிறைவுப்பகுதிக்கு முன்னாக  கோயின்னா... கோயின்னா... கோயின்னா...  கோயின்னா... கோயின்னா... கோயின்னா... ஓகோகோ ..ஓகோகோ ...ஓகோகோ கொய்யா என்று அருமையான Sliding வளைந்த ஓசையைக் கொடுத்து முடிக்கிறார்கள்இந்தப்பாடலில் சந்தூர் வாத்தியம் மற்றும் தாள வாத்தியங்கள் மிகவும் சிறப்புடன் ஒத்திசைவுக்கு ஏற்பப் பயன்படுத்தப்பட்டுள்ளதுஎத்தனை அற்புதம் !

02 நான் ஆணையிட்டால் எங்க வீட்டுப் பிள்ளை 1963 -பாடியவர்டி எம் .எஸ் இசை :விஸ்வ நாதன் ராமமூர்த்தி

ஆரம்பமே நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்று ஓங்கிய குரலில் அளபெடையுடன் அழகாக ஆரம்பிக்கும் இப்பாடலில் இடையில் ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன் ஒரு கடவுளுண்டு அவன் கொள்கையுண்டு அதை எப்போதும் காத்திருப்பேன் என்ற வரிகளில் அருமையான வளைந்து போகும் சங்கதியையும் கேட்கலாம்.

03 அதோ அந்த பறவை போல ஆயிரத்தில் ஒருவன் 1965 -பாடியவர்டி எம் .எஸ் இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

அறைகூவலாக ஒலிக்கும் இந்தப்பாடல் அதோ என்று நீட்டல் ஓசையுடன் ஆரம்பிக்கிறது.

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நாம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே !

என்ற வரிகளில் விலகவில்லையே சுடுவதில்லையே நடப்பதில்லையே மறப்பதில்லையே என்று நீண்ட ஓசைகளால் பாடலை அழகுபடுத்துவதுடன் பாடல் முடிவில் விடுதலை என்ற சொல்லும் அழகுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

04 அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு வெண்ணிற ஆடை 1964 -பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

அளபெடையுடன் தொடங்கும் இந்தப்பாடல் வளைந்து ,வளைந்து செல்லும் இனிய கமகங்களையும் கொண்ட பாடல்பாடலின் இடையில் அம்மம்மா என்ற சொல்லை ஓங்கி ஒலிக்க வைப்பதுடன் அதை மென்மையாகவும் முடிக்கும் அழகைக்காண்பதுடன்

ஏதோ இன்பம் ஏதோ தந்து என்னை தொட்டு செல்லும் வெள்ளமே ... மே.. மே.. மே.. மே

தானே வந்து தானே தந்து தள்ளித் தள்ளி செல்லும் உள்ளமே.... மே

அந்நாளில் எந்நாளும் இல்லை இந்த எண்ணம்

அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம் என அலையாக சென்று அம்மம்ம்மாஆ      என்று நீட்டி பாடலை முடிக்கும் அழகைக் காண்கிறோம்.!

05 அந்த மாப்பிள்ளை காதலிச்சான் பணம் படைத்தவன் 1963 -பாடியவர்டி எம் .எஸ் சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

மா...ப்பிள்ளை “ என்று இழுத்து பாடும் ஆரம்பத்துடன் தொடங்கும் இந்தப்பாடலில் இயல்பான சங்கதிகளும் இசைந்து செல்கிறது.

வெட்கத்திலே நான் இருந்தேன்

பக்கத்திலே தானிருந்தான் என்று அனுபல்லவியிலும் ,

சரணத்தில்

என்னருகே பெண்ணிருந்தா

பெண்ணருகே நானிருந்தேன் என்ற அழகான சங்கதிகள் கொண்ட பாடல் .

01 பாட்டுக்கு பாட்டெடுத்து படகோட்டி 1964 -பாடியவர்டி எம் .எஸ் சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

தூது விடும் இந்தப்பாடலில் மென் ஓசைகள் பயன்படுத்தப்படுகிறது.எனினும் தேவையான இடங்களிலெல்லாம் நீண்ட ஓசைகளால் , அளபெடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுகுறிப்பாக பாடலின் நடுவே வரும் தொகையறாவில் அது பேரின்பமாய் ஒலிக்கிறது.

இளவாழ....ந் தண்டாக........... எலுமிச்...சம்.. கொடியாக......

இருந்தவளை கைபிடிச்சு இரவெல்லாம் கண்முழிச்சு

இல்......லாத ஆசையில் என்மன...சை ஆடவிட்டான்

...டவிட்டு மச்சா னே ஓடம் விட்டு போனானே

ஓடம் விட்டு போனானே.. .. .. .. -

என நீண்ட ஓசையில் இனிய சங்கதியையும் வைத்து அழகு சேர்க்கைறார்கள் மெல்லிசைமன்னர்கள்.

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய் தலைமுடித்து

பின்னலால் சடை போட்டு என்மனதை எடை போட்டு

மீன்பிடிக்க வந்தவளை நான் பிடிக்க போனேனே

மாய் எழுதும் கண்ணாலே பொய் எழுதி போனாலே

என்ற வரிகளில் எத்தனை நீண்ட ஓசை அழகுகள்அந்த வரிகளின் இசையும் நாயகனின் துயரமும் நம் நெஞ்சை அடைப்பதுடன் இதமாக வருடியும் கொடுக்கிறது.

சரணத்தில் ..

நெஞ்சுமட்டும் .....அங்கிருக்க

நான் மட்டும்.. இங்கிருக்க  .. ..

நான் மட்டும் இங்கிருக்க

இந்த வரிகள் தான் பாடலின் உச்சம் என்று சொல்லலாம்அந்த வரிகளின் இணையில் எத்தனை கனிவு ...உருக்கம் !!

06 எல்லோரும் கொண்டாடுவோம் பாவமன்னிப்பு 1961 -பாடியவர்டி எம் .எஸ் ஹனீபா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்தப்பாடலில் கொண்டாடுவோம் ...ஒன்றாய் கூடுவோம் என்ற ஒலிகளின் ரீங்காரத்தை எப்படி வர்ணிப்பது?

ஆடையின்றி பிறந்தோமே ஆசையின்றி பிறந்தோமா

ஆடி முடிக்கையில் அள்ளிக் சென்றோர் யாருமுண்டோ .. ..  ..

இந்தபாடலின் உச்சம் இந்த  .. .. என்ற கமகத்தில் தான் இருக்கிறதுஎவ்வளவு உருக்கம் ,நெகிழ்ச்சி உள்ளத்தை நெகிழ்த்தும் அதிர்வு !

அளபடை வருகின்ற இன்னும் சில பாடல்கள்:

07 ஆறோடும் மண்ணில் எங்கும் பழனி 1964 -பாடியவர்டி.எம்.எஸ் சீர்காழி ஸ்ரீனிவாஸ் இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

கண் முன்னே கிராமீயத்தை கொண்டுவரும் இனிய குழலுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் ஆர்ப்பாட்டமில்லாமல் மிக இயல்பான ஓசைநயத்துடன் அளபெடையைக் கையாண்டுள்ளனர்.

ஆறோடும் ..தேரோடும் ..நீரோடும் போன்ற சொற்பதங்கள் மற்றும் பஞ்சமும் பசியியுமின்றி பாராளும் பசுமையுண்டு நீட்டலாகவும் , " தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ என்று கனிந்த குழைவும் , " அறுவடைக்காலம் உந்தன் திருமண நாளம்மா என்ற வரிகளின் இசையின் இன்ப அதிர்வும் என அத்தனை இனிமையையும் ஒன்று சேர்த்து தரும் பாடல் !

08 வாராதிருப்பானோ பச்சை விளக்கு 1963 -பாடியவர்டி.எம்.எஸ் சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் வரிகளின் நீண்ட ஓசைநயத்தையும் அருமையான செனாய் வாத்திய வாசிப்பில் நெகிழ்ச்சியான கமகங்களையும் அற்புதமாகத் தரும் பாடல்.

09 சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ சந்திரோதயம் 1967 -பாடியவர்டி.எம்.எஸ் சுசீலாஇசை :விஸ்வநாதன்

10 அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு ராமன் எத்தனை ராமனடி 1970 -பாடியவர்டி எம் .எஸ் இசை :விஸ்வநாதன்.

இந்தப்பாடல் மகிழ்சியாகவும் துயரமாகவும் இரண்டு பாடல்கள் வெளிவந்தனமகிழ்சியாக ஒலிக்கும் பாடலில் "அம்மா..................டி என்று நீண்ட விழிப்புடன் கூவும் ஓசை அழகுடன் ஆரம்பமாகிறது பாடல்குதூகலம் தரும் தாளநடையின் பின்னணி இனிமை சேர்க்க பிற ஓசைநயங்களும் இணைந்திருக்கும் இனிமையான பாடல் !

கவலையாக ஒலிக்கும் இதே பாடல் தான் பிரபலமானதுஅந்தப்பாடலிலும் "அம்மா........டி என்ற அளபடை நிறைவேறாத காதலின் வேதனையையும் விரக்தியையும் வெளிப்படும்.பணக்கார பெண்ணை மனத்தால் நேசித்த ஏழையின் மறக்கவியலாத வேதனை இந்தப்பாடல்இப்படி பல பாடல்களைக் கூறும் முடியும்பொதுவாகவே மேலே சொன்ன அத்தனை நுட்பங்களையும் பாடல்களின் தன்மைக்கு ஏற்ற விதத்தில் அதற்கு அழகிய அலங்கார வேலைப்பாடுகளை புனைவதைப் போல மெல்லிசைமன்னர் தந்திருக்கிறார்!

ஜாரு Jaaru ] சற்று வளைவு கொண்ட Sliding ] கமகங்கள்:

01 பாலிருக்கும் பழமிருக்கும் பாவமன்னிப்பு 1961 - பி.சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

பஞ்சணையில் காற்று வரும்

தூக்கம் வராது ...தூக்கம் வராது ...

என்ற இடத்தில் எத்தனை அழகான சுருண்டோடும் சங்கதிகள்அந்த வரிகளைத் தொடர்ந்து வரும் சந்தூர் வாத்தியமும் உருண்டோடும்!

** கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும் ம்,,,ம்ம் ..ம்

** காதலுக்கு ஜாதில்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே ...ஏ ...ஏ ..ஏ ,,ஏ இந்த இடத்திலும் மிக நுண்ணிய சங்கதிகள் பேசும் .

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே .. என்று முடிக்கும் அழகோ அழகு !

02 சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ சந்திரோதயம் 1966 - டி.எம்.எஸ் பி.சுசீலா இசைவிஸ்வநாதன்.

எந்நாளும் பிரியாத உறவல்லவோ ...

இளஞ் சூரியன் உந்தன் வடிவானது

செவ்வா....மே உந்தன் நிறமா...னதோ ..

என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

இளஞ் சூரியன் உந்தன் வடிவானது

செவ்வான.........மே உந்தன் நிறமா.....னதோ .. // இந்த இடங்களில் அற்புதமான வளைவில் கமகம் வளைந்து அழகுகாட்டும்இந்த இடத்தில் சுசீலாவின் குரல் தேனாக இனிக்கும்.

03 ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை பணத்தோட்டம் 1963 - டி.எம்.எஸ் பி.சுசீலா இசைவிஸ்வநாதன்.ராமமூர்த்தி

இந்தப்பாடலில் அனாயாசமாக வழிந்தோடும் சங்ககளைக் கேட்கலாம்திரும்பிய இடங்களிலெல்லாம் சங்கதிகள் தான் !

திருநாள் தேடி தோழியர் கூடி சென்றார் திரும்பவில்லை...

தினையும் பனையாய் வளர்ந்தே இருவிழிகள் அரும்பவில்லை இந்த வரிகளில் எத்தனை அழகான வளைவுகள் அதிர்வுகள் அது போல

எனையே அவன்பால் கொடுத்தேன் இறைவன் திருடவில்லை” என்ற வரிகளில் கொடுத்தேன் இறைவன் திருடவில்லை என்ற வரிகள் அருமை என்று சொல்லலாம்!

03 கண்ணிலே அன்பிருந்தால் ஆனந்தி 1964 - பி.சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

எத்தனை அருமையான வளைவுகள் இந்தப்பாடலில் எத்தனை இனிமை !

கண்ணிலே அன்பிருந்தா..ல் கல்லிலே தெய்வம் வரும்.....ம் ...ம் ...ம் ...ம்

நெஞ்சிலே ஆசை வந்தா.ல் நீரிலும் தேனூறும்...ம் ...ம்...ம் ...ம்

04 என்னை எடுத்து தன்னை கொடுத்து படகோட்டி 1964 - பி.சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்தப்பாடலில்

போனவன் போனாண்டி வந்தாலும் வருவாண்டி என்ற இடங்கள் பல இடங்களிலும் விதம்விதமாக பாடப்படுகிறது.

05 பொன் எழில் பூத்தது புதுவானில் கலங்கரை விளக்கம் 1965 - டி.எம்.எஸ் பி.சுசீலா இசைவிஸ்வநாதன்.

சிவகாமி ...சிவகாமி என்ற சொற்களைத் தொடர்ந்து  .. என்று இரண்டு முறை வரும் நீண்ட சுசீலாவின் ஹம்மிங்கிலும் Sliding கமகம் அழகாக வரும்.

.. இந்த இடத்தில் சுசீலாவின் குரல் தேனாக இனிக்கும்.

அலை,அலையாக வருகின்ற கமகங்களைக் கொண்ட பாடல்கள் :

01 இந்த மன்றத்தில் ஓடிவரும் போலீஸ்காரன் மகள் 1963 -பாடியவர்பி.பி.எஸ். + எஸ்.ஜானகி இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

அலையலையாக ஓடும் இனிய வாத்திய இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் வழிந்தோடும் இனியநுண்ணிய சங்கதிகளையும் கேட்கலாம்.விறுவிறுப்பும் இனிய வளைவுகளும் வாத்திய இசையிலும் காண முடியும்.

இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ  .. .... என்று விறுவிறுப்பான அலையாகவும்

இந்த மன்றத்தில்    டி வரும் ---- என்ற வரிகளில் நுணுகிய அசைவையும் பின்

வண்ண மலர்களில் அரும்பாவாள்

உன் மனதுக்கு கரும்பாவாள் இந்து

அலைகடல் துரும்பானாள் என்று

ஒரு மொழி கூறாயோ...   என்ற இடத்தில் அருமை வளைவு விழும்!

அவள் வேதனை கூறாயோ  ..என்று ஜானகி பாட ,...….

தொடர்ந்து பி.பி.எஸ்

தன் கண்ணனைத் தேடுகிறாள் மன காதலைக் கூறுகிறாள் இந்த

அண்ணனை மறந்து விட்டாள் எனும் அதனையும் கூறாயோ

என்று அற்புதமாக நிறைவு செய்யும்பாடல். " தன் கண்ணனைத் தேடுகிறாள் என்று பி.பி.எஸ் பாடும் இடம் அருமை.

04 நான் பேச நினைப்பதெல்லாம் பாலும் பழமும் 1963 - பாடியவர்டி.எம்.எஸ் பி.சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றுமில்லை பொருளென்றுமில்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை விலையேதுமில்லை

இந்த வரிகள் இரண்டுமுறை பாடப்படுகிறதுஇரண்டாவது முறை வரும் போது என்ன ஒரு அற்புதமான வளைந்து போகும் சங்கதி !! அதைத் தொடர்ந்து

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே ...உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நம்மையன்றி வேறேதுமில்லை வேறேதுமில்லை

04 பொன்னை விரும்பும் பூமியிலே ஆலயமணி 1963 - பாடியவர்டி.எம்.எஸ் இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

உணர்வுக்கு ஏற்ப எத்தனை தினுசாக சங்கதிகளை அலை போல மென்மையாகவும் மிக நுட்பமாகவும் இசையமைக்கப்பட்ட பாடல்சொற்களின் ஓசைக்கும்பொருளுக்கும் ஏற்ப ஏற்ற இறக்கங்களுடன் நகரும் பாடல்.

பாடலின் சரணத்தில்

ஆலமரத்தின் விழுதினைப் போலெ அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

ஆலமரத்தின் விழுதினைப் போலெ அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

வாழைக்கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போல வாழ வைத்தாயே

வாழைக்கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போல வாழ வைத்தாயே

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என் உயிரே...

இந்தவரிகளில் நுட்பமான சங்கதிகளைக் கேட்கலாம்.

05 அனுபவம் புதுமை காதலிக்க நேரமில்லை 1964 - பி .பி .எஸ் சுசீலா இசைவிஸ்வநாதன்ராமமூர்த்தி

இந்தப்பாடலில் மிக அருமையான வளைவுகளையும் ரகசியம் பேசும் இனிய ஆசைகளையும் கேட்க முடியும்.

அங்கங்கே நீட்டமான ஓசையாக

"ஒன்று நானே தந்தேன் அது போதாது என்றாள் ...போதாதுஎன்றாள் – என்று நீட்டமாக ஸ்ரீனிவாஸ் அசைக்கும்

இடத்திலும்

இது மாறாதென்றான் இனி நீயே என்றான்

கண்ணில் பார்வை தந்தான் துணை நானே என்றான் ",,,நாளை என்றான் என்ற இடத்திலும் மிக அருமை வளைவு விழும்!

வாத்தியங்களில் குறிப்பாக எக்கோடியன் இசையிலும் இதனைக் கேட்கலாம்.

06 தமிழுக்கும் அமுதென்று பேர் பஞ்சவர்ணக்கிளி 1964 - சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

வளைந்து ,வளைந்து செல்லும் இந்தப்பாடலில் மேல் சொன்ன அனைத்து இசை அம்சங்களையும் நாம் கேட்கமுடியும்.

பாடலின் இடையிடையே வரும் சொற்களின் ஓசைநயத்திற்கு ஏற்பவும் இசைந்து செல்லும் அற்புதமான இசையமைப்பு இந்தப்பாடல்பாடல்வரிகளின் முடிவில் வரும் சொற்களைக் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

உயிருக்கு நேர் ,பேர் ,நீர் ஊர் ,வான்வேர் பால் வேல் தேன் ,தோள்,வாள்தாய் தீ போன்ற சொற்களின் ஓசைநயம் அற்புதமாக இசையமைக்கப்பட்டுள்ளது.

07 காத்திருந்த கண்களே மோட்டார் சுந்தரப்பிள்ளை 1965- பி.பி.எஸ் சுசீலா Isai; விஸ்வநாதன்

 

காத்திருந்த கண்களே ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே.இந்த இடத்தில் மிக அருமையான அலை போன்ற சங்கதி வரும்.

மைவிழி வாசல் திறந்ததிலே -ஒரு மன்னவன் நுழைந்ததென்ன அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விழைந்ததென்ன /.

மைவிழி வாசல் திறந்ததிலே -ஒரு மன்னவன் நுழைந்ததென்ன ...………........இந்த வரிகளை இரண்டாவது முறை பாடும் போது அருமையான வளைவைக் காணமுடியும். 

ஜண்ட Janta ]- Janta Swaras - சுரங்களை இரண்டுஇரண்டாகப் பாடுதல்.[ உ ம் சச ரிரி ககமம ..]

கர்னாடக இசையில் பயிலப்படும் ஜண்ட வரிசை அமைப்பு என்பது ஒரு சுரத்தை இரண்டு தடவை பாடும் முறையாகும்.அதுமட்டுமல்ல ஒரே சுரத்தை இருமுறைபாடினாலும் இரண்டாவது முறை பாடும் போது அதே சுரத்தை கொஞ்சம் அழுத்தம் கொடுத்தும் பாடுவர்ஜண்ட வரிசை என்பது   ரி ரி     என இந்த அமைப்பு முறையில் வரும்முறையையும் விஸ்வநாதன் பாடல் வரிகளாக்கி சிறப்பாகக் கையாண்டார்அந்த வகையில் அமைந்த சில சினிமாப்பாடல்கள்.

01 உனக்கு மட்டும் உனக்கு மட்டும் மணப்பந்தல் 1963 -பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் பல்லவி முடித்து வரும் இடையிசை அசைந்து ,அசைந்து வர

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே ..ஓகோ ,,ஓகோ ,, ஓகோகோ கோ ….

என்று இனிய ஹம்மிங்கைத் தொடர்ந்து மீண்டுமொருமுறை வந்து நின்றார் வரிகளை மீண்டும் பாடி

பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே

போட்டு வைத்தேன் போட்டு வைத்தேன் ஆசையினாலே.. ....

என்று இனிமையால் பாடலை உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறார் சுசீலா !

02 நாளாம் நாளாம் திருநாளாம் காதலிக்க நேரமில்லை 1964 -பாடியவர்பி.பி .எஸ் பி.சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

03 நான் யார் நான் யார் குடியிருந்த கோயில் 1967 -பாடியவர்டி.எம்.எஸ் இசை :விஸ்வநாதன்

04 சொன்னது நீதானா சொல் நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 - பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

04 என்ன என்ன வார்த்தைகளோ வெண்ணிற ஆடை 1964 - பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

05ஓராயிரம் நாடகம் ஆடினாள் சுமதி என் சுந்தரி 1969 - பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன்

மெல்ல மெல்ல கிள்ளி கிள்ளி

கை எடுத்து அள்ளி அள்ளி

காலெடுத்து துள்ளி துள்ளி

பாடல்களின் இடையேயும் இது போன்ற வரிகளில் கேட்க முடியும்.

04 ஸ்புரிதம் Spuritham ] - Vibration Gamagas- [அதிர்வுகளைக் கொண்ட கமகம்]

பலவிதமான இசையின் நுட்பங்களை எல்லாம் இனிதாகப் பயன்படுத்திய விஸ்வநாதன் குரல்களின் அதிர்வுகளையும் இயல்பான போக்கில் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தினார்

அதிர்வுகளைக் கொண்ட பாடல்.

01 எல்லோரும் கொண்டாடுவோம் பாவமன்னிப்பு 1961 -பாடியவர்டி.எம்.எஸ் இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

02 ஓராயிரம் நாடகம் ஆடினால் சுமதி என் சுந்தரி 1971 -பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன்

03 சொல்லவோ சுகமான கதை சிவந்தமண் 1970 - சுசீலா இசைவிஸ்வநாதன்

04 தேடினேன் வந்தது ஊட்டி வரை உறவு 1969 - சுசீலா இசைவிஸ்வநாதன்

05 நீராடும் கண்கள் இங்கே வெண்ணிற ஆடை 1969 - சுசீலா இசைவிஸ்வநாதன்

06 பட்டத்துராணி சிவந்தமண் 1970- ஈஸ்வரி இசைவிஸ்வநாதன்

07 கடவுள் ஒருநாள் உலகைக் காக்க சாந்தி நிலையம் 1971 -பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன்

08 சொல்லவோ சுகமான கதை சிவந்தமண் 1970 - சுசீலா இசைவிஸ்வநாதன்

05 சங்கதிகள் :

சங்கதி என்பது பாடல் அமைக்கப்பட்ட ராகத்தின் இனிமையை அல்லது அதில் இடபெற்றிருக்கக்கூடிய பாடல்வரிகளின் சுவையான பகுதிகளை அல்லது அதன் பொருள் விளங்க அல்லது முக்கியத்துவத்தை திரும்ப திரும்பப் பாடி விளக்குவது.

ஹிந்துஸ்தானி இசையில் சங்கதிகள் நிறைந்திருக்கும்அதன் வீச்சுக்களை நாம் ஹிந்தித் திரையிசைப்பாடல்களிலும் தாராளமாகக் கேட்க முடியும்.பொதுவாக மெல்லிசைமன்னர்கள் ஹிந்துஸ்தானி இசையான ஹசல் இசை முறையின் மிகப்பெரிய ரசிகர்கள் என்பதால் அவர்களது பாடல்களில் இயல்பாகவே அவை வெளிப்பட்டுள்ளன.

1960களின் ஆரம்பம் முதல் இறுதிவரை மெல்லிசைமன்னரின் இசையை கவனித்தவர்கள் அவரது இசையில் மிக இயல்பாக இனிய சங்கதிகளை கேட்க முடியும்உதாரணமாகச் சில பாடல்கள் :

01கட்டோடு குழல் ஆட பெரிய இடத்துப் பெண் 1961 - டி.எம்.எஸ் சுசீலா ஈஸ்வரி இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

02 பேசுபவது கிளியா பணத்தோட்டம் 1961 - டி.எம்.எஸ் சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

03 ஒருநாளிலே உருவானதே சிவந்தமண் 1970 -பாடியவர்டி .எம் .எஸ் சுசீலா இசை :விஸ்வநாதன்

04நினைத்தால் சிரிப்பு வரும் பாமா விஜயம் 1968 -பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன்

05 கண்ணிரண்டும் மின்ன ஆண்டவன் கட்டளை 1963 -பாடியவர்பி.பி.எஸ் ஈஸ்வரி இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

காத்திருந்த கண்களே மோட்டார் சுந்தரம்பிள்ளை 1966 -பாடியவர்பி.சுசீலா பி.பி.எஸ் + - இசை :விஸ்வநாதன்

07 கண்ணனை நினைக்காத நாளில்லையே சீர்வரிசை 1974 - எஸ்.பி.பி சுசீலா இசைவிஸ்வநாதன்

08 வெள்ளி கிண்ணம்தான் உயர்ந்த மனிதன் 1968 - டி.எம்எஸ் சுசீலா இசைவிஸ்வநாதன்

09 சமுத்ரா ராஜ குமாரி எங்கள் வாத்தியார் 1979 -பாடியவர்எஸ்.பி.பி வாணி இசை :விஸ்வநாதன்

10 பாரதி கண்ணம்மா நினைத்தாலே இனிக்கும் 1979 -பாடியவர்எஸ்.பி.பி வாணி இசை :விஸ்வநாதன்

06 பேச்சோசைகளுடன் இணைந்த பாடல்கள்:

பேச்சோசை போல அமைந்த பாடல்களிலும் பலவிதமான நுட்பங்களைப் பயன்படுத்திய பாடல்களில் தடையின்றி நழுவிச் செல்லும்அதிர்வுமிக்க இனிய கமகங்களையும்சங்கதிகளையும் தந்து பாடல்களின் ஜீவனை செதுக்கிய பாடல்கள்.

01 கொடி அசைந்ததும் காற்று வந்ததா பார்த்தால் பசி தீரும் 1962 -பாடியவர்டி.எம்.எஸ் +பி.சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் ஆரம்பத்திலேயே ஒரு எழுத்துத்தரும் ஒலியில் மறைந்திருக்கும் உணர்வின் ஆழ வெளிப்பாடுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தப்படுத்திக் காட்டுகின்றார்கள்.

கொடி அசைந்ததும் ..ம்

காற்று வந்ததா ….ம் ஹ்ம்

காற்று வந்ததும்...ஓகோ

கொடி அசைந்ததா

நிலவு வந்ததும்..ம்

மலர் மலர்ந்ததா..ம் ஹ்ம்

மலர் மலர்ந்தும் .....ம்

நிலவு வந்ததா

இந்த வரிகள் முடிந்ததும் வரும் வயலின் இசை அலை ,அலையாக வர அதைத்தொடரும் குழல் சுழன்று அழகு காட்டும்.

03 சொன்னது நீதானா சொல் நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 -பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

04 என்ன நினைத்து என்னைநெஞ்சில் ஓர் ஆலயம் 1963 -பாடியவர்பி.சுசீலா இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

05ஆனி முத்து வாங்கி வந்தேன் பாமா விஜயம் 1966 -பாடியவர்பி.சுசீலா சூலமங்கலம்ஈஸ்வரி இசை :விஸ்வநாதன்

06 சிரிப்பில் உண்டாகும் எங்கிருந்தோ வந்தாள் 1971 -பாடியவர்டி எம் .எஸ் சுசீலா இசை :விஸ்வநாதன்

07 ஒருநாளிலே உருவானதே சிவந்தமண் 1970 -பாடியவர்டி எம் .எஸ் சுசீலா இசை :விஸ்வநாதன்

08 அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே கன்னிப்பெண் 1969-பாடியவர்ஈஸ்வரி சுசீலா இசை :விஸ்வநாதன்

09 அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு ராமன் எத்தனை ராமனடி 1970 -பாடியவர்டி எம் .எஸ் இசை :விஸ்வநாதன்

10 காற்று வாங்கப்போனேன்கலங்கரை விளக்கம் 1965 -பாடியவர்டி.எம்.எஸ் இசை :விஸ்வநாதன்.

தங்களது பாடல்களில் எத்தனையோ விதமான ஓசைநயங்களையும் ,சத்தங்களையும் பயன்படுத்திய மெல்லிசைமன்னர் காதோடு ரகசியம் பேசுவது போன்ற மிக மென்மையான ஆசைகளையும் பயன்படுத்தி பாடல்களைத் தரத் தவறவில்லை.

மென்மையான ரகசியம் பேசுவது போலமைந்த பாடல்கள்.

01 இதுவரை நீங்கள் பார்த்த பார்வை பணக்காரக்குடும்பம் 1963- டி.எம்.எஸ் சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

02 அனுபவம் புதுமை காதலிக்க நேரமில்லை 1964 - பி.பி.எஸ் சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

03 ரகசியம் ரகசியம் பரம ரகசியம் பெரிய இடத்துப்பெண் 1963 - சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

04 லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் அன்பே வா 1967- சுசீலா இசைவிஸ்வநாதன்

05 உன்னை ஒன்று கேட்பேன் புதிய பறவை 1963 - சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

06 அத்தை மகனே போய்வரவா பாதகாணிக்கை 1962 - சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

07 பாலிருக்கும் பழமிருக்கும் பாவமன்னிப்பு 1961 - சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

08 தூக்கமும் கண்களை ஆலயமணி 1963 - எஸ்.ஜானந்தகி இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

09 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் பஞ்சவர்ணக்கிளி 1965 -சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

10 பச்சைக்கிளி ஒன்று ராமு1966- பி.பி.எஸ் இசைவிஸ்வநாதன்

11 இரவினிலே என்ன நினைப்பு என் கடமை 1965 -சுசீலா இசைவிஸ்வநாதன் ராமமூர்த்தி

இனிய கமகங்கள்சங்கதிகள் பேச்சோசைகள் என இசைக்கு அழகு சேர்க்கும் இவை போன்ற பலவற்றையும் ஒருமைப்படுத்தி பல்வேறு பாடல்களில் முயன்றதுடன் ,இசை உயிர்பெற எங்கெங்கு அவை பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் மனக்கிளர்ச்சியும்மனதை மயக்கும் வகையிலமைந்த பாடல்களையும் தந்திருக்கிறார் மெல்லிசைமன்னர் !

1960 களில் தொடங்கி 1980கள் வரை தொடர்ந்து அவர் இசையமைத்த பாடல்களில் மட்டுமல்ல திரைப்படத்தின் முக்கிய அம்சமான பின்னணி இசையிலும் கவனம் செலுத்தினார்.


பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் :

பாடல்கள் பலவிதமான கட்டமைப்புகளைக் கொண்டியங்குகின்றன. மெட்டுகளில் பலவிதமான அமைப்புகள் இருப்பது போலவே பாடல்களில் இயல்பாய் இருப்பது தாளம். தாளமின்றி எந்த ஒரு பாடலும் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தாளமின்றி பாடல்களே இல்லை. அதனாலதான் ஸ்வரம், ராகம் , தாளம் மூன்றும் சேர்ந்ததே சங்கீதம் என்று முன்னோர் கூறினர்.

பண்டைய தமிழ் மக்கள் இசை குறித்த மிகுந்த ஆற்றல் பெற்றவர்கள் என்பது வெறும் புகழ்ச்சி சார்ந்த கருத்தல்ல. இசை பற்றிய தெளிவும் , ஆற்றலும் மிக்கவர்கள் என்பதை பல பழைய நூல்கள் எடுத்தியம்புகின்றன.தொல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மட்டுமல்ல இசைபற்றிய அரிய கருத்துக்களையும் போகிற போக்கில் கூறிச் செல்கிறது. இசைக்கும் , மொழிக்கும் இடையே உள்ள நெருக்கமான பொதுத்தன்மையான ஓசை நயங்களை பேசும் பொது வண்ணம் பற்றிய செய்திகளையும் கூறிச் செல்கிறது. குறிப்பாக இருபது வண்ணங்களை பற்றிய குறிப்புகளையும் பேசுகிறது .

அவையாவன .. 1. பாஅ வண்ணம் 2. தாஅ வண்ணம் 3. வல்லிசை வண்ணம் 4. மெல்லிசை வண்ணம் 5.இயைபு வண்ணம் 6.அளபடை வண்ணம் 7.நெடுஞ்சீர் வண்ணம் 8. குருஞ்சீர் வண்ணம் 9. சித்திர வண்ணம் 10. நலிபு வண்ணம் 11. அகப்பாட்டு வண்ணம் 12. புறப்பாட்டு வண்ணம் 13.ஒழுகு வண்ணம் 14. ஒருஉ வண்ணம் 15. எண்ணு வண்ணம் 16.அகைப்பு வண்ணம் 17. தூங்கல் வண்ணம் 18. ஏந்தல் வண்ணம் 19. உருட்டுவண்ணம் 20.முடுகு வண்ணம். தொல்காப்பியம் ஒரு மொழியியல் நூல் [ Linguistic ] என்று குறிப்பிடும் போது தொல்காப்பியர் பன்டைய காலத்திலிருந்த இயல் இலக்கணம் ,இசை இலக்கணம், நாடக இலக்கணம் ஆகிய நூல்களிலிருந்து இயல் இலக்கணத்தை மட்டும் பிரதானமானது தொகுத்தார் என்றும் அதில் இசையின் இலக்கணக் கூறுகளையும் கூறத்தவறவில்லை எனப்தையும் அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மோனை .எதுகை , இயைபு முதலிய தொடைகளின் இலக்கணம், இசைக்க கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை , விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுவன. இவற்றை முதன்முதலில் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது தொல்காப்பியமே. மோனை முதலிய தொடைகளின் இலக்கணம் இல்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடல்களுக்குரிய யாப்பு வகைகளை தொல்காப்பியம் மிகவும் அழகாக வகுத்து பகுத்துக் காட்டியுள்ளது. தொல்காப்பியத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது , என்பார் இசையறிஞர் வீ.பா.கா.சுந்தரம்.

முன்னைக்காலம் தொட்டு இன்று வரை சில விஷயங்கள் சங்கிலித் தொடர் போல தொடர்ந்து வருவதை இசையிலும் நாம் காண முடியும். குறிப்பாக தாளம் பற்றி இன்றும் நாம் அறிகின்ற ஐந்து வகை தாளங்கள் இதற்கும் சான்றாக விளங்குகின்றன. சதுஸ்ரம் , திஸ்ரம் , மிஸ்ரம் , கண்டம் , சங்கீரணம் இன்றும் கர்னாடக இசையுலகில் பேசப்படும் தாளங்கள் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் அவை பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.

தாளம் பற்றி தொல்காப்பியம் வியக்கத்தக்க செய்திகளையும் கூறுகின்ற போது அவற்றின் தமிழ் பெயர்களில் நடை என குறிப்பிடுகின்றது. 01. மூன்றன் நடை [ (திஸ்ர நடை ] - தகிட 02 நாலன் நடை [ சதுஸ்ரம் ] - தகதின – தகதிமி -- தாதிமி 03 ஐந்தன் நடை [ கண்டம் ] - தக திமித -- தக தகிட 04 ஏழன் நடை [ மிஸ்ரம் ] - தகிட தகதிமி -- தனன தந்தன 05. ஒன்பான் நடை [சங்கீர்ண நடை] - தகதிமி தகிடதக -- தாக தக தக தக

"நடைமிகுந்தேத்திய குடை நிழல் மரபும் " என்ற தொல்காப்பியரின் வரிகள் மூலம் அறிகிறோம். //.. இயற்றமிழுக்குரிய ஐந்து அங்கங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவைகளோடு சுருதி, சுரம், இராகம், தாளம் முதலிய நான்கும் சேர்ந்து, இசைத்தமிழுக்கு மொத்தம் ஒன்பது அங்கங்களாகும். தாளம் இசையின்; கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது ஆகும். பாடல்களுக்கு வடிவமும், நடையும், விரைவும், எழுச்சியும் நல்குவது தாளமே. ‘தாளம் இன்றேல் கூழம்’ என்பார் பாரதியார்.// என்பார் இசை ஆய்வாளர் ஆ.ஷைலா ஹெலின்.

பாடல், இசையமைப்பு பற்றிய மெல்லிசைமன்னருடனான சில உரையாடல்களிலும் அவர் வழங்கிய பேட்டிகளிலும் முக்கியமான விஷயம் ஒன்றையும் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். அவரது இசையமைப்பை வியக்கும் சிலரது கேள்விக்கு " பாடலின் வரிகளிலேயே இசை பொதிந்திருக்கும் , அந்த சந்தங்களையே தொடர்ந்தால் இசை வந்துவிடும் " என்பார். இந்தக் கூற்றை வேறு ஒருவகையில் விளக்குவது போல மெல்லிசைமன்னர் விஸ்வநாதன பற்றி கவிஞர் கண்ணதாசன் , " விஸ்வநாதனிடம் ஒரு தினசரிப் பேப்பரின் துண்டைக் கொடுத்தால் கூட மெட்டு போட்டுத்தருவான் " என்பார். உண்மையில் அவர் விளையாட்டாகக் கூறினாலும் சொற்களில் பொதிந்திருக்கும் ஒலிநயங்களில் இசையும் ஒளிந்திருக்கிறது என்பதை பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியயமும் கூறுகிறது.

பழந்தமிழர்கள் இசைக்கும் மொழிக்கும் உள்ள மிக நெருக்கமான தொடர்புகளை மிக்கது துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர். மொழிக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பையும் , ஒலிக்கும் , ஓசைக்கும் இசைக்கும் உள்ள தொடர்பையும், இசைக்கும் காலத்திற்கும் உள்ள தொடர்பையும் ,இசைக்கும் சொற்களுக்கும் உள்ள தொடர்பையும் ,இசைக்கும் உடலுக்குமுள்ள பிணைப்பையும் மிகத்துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர். " பாடலின் வரிகளிலேயே இசை பொதிந்திருக்கு " என விஸ்வநாதன் கூறிய கருத்து மிக உண்மை கருத்தாகும். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளின் பாடல்கள் சந்தங்களைஅல்லது பலவிதமான தாளங்களை / சந்தங்களை அடிப்படையாகக் கொண்டன என்று விளக்குகிறார் வி.ப.க சுந்தரம்.

முரசியம்பின முருட திர்ந்தன முறையெழுந்தன - பணிலம் வெண்குடை அரசெ ழுந்ததோர் படியெழுந்தன என்ற வரிகளை " திகிட தகதிமி - தகதிமி " என்ற மிஸ்ர நடையில் [ ஏழன் நடை ] , அது போலவே பிறப்பாடல்களை வேவ்வேறு சந்தங்களிலும் அமைத்தார் என விளக்குவார்.

மெல்லிசைமன்னர்கள் சந்தங்களில் , தாளநடைகளில் பல நுட்பங்களையும் வெளிப்படுத்தியள்ளனர். இன்றைய நிலையில் சினிமா மொழியில் "தத்தகாரம்" என்று சந்தங்களை அழைப்பதை நாம் காணலாம். இசையமைப்பாளர் தாம் அமைக்கும் மேட்டை தத்தகாரத்தில் கூற பாடலாசிரியர்கள் அதற்கேற்ற வரிகளை எழுதிக்கொடுப்பதையும் நாம்அறிவோம்.

சந்தத்துக்கு அல்லது இசைக்கு பாடல் வரிகளா ? அல்லது பாடல் வரிகளுக்கு இசையா / சந்தமா ? என்ற சிறு விவாதங்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு! ஒரு சில இசையமைப்பாளர்கள் மட்டுமே எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பவர்கள் என்றும் விஸ்வநாதன் காலத்தில் " தத்தகாரத்துக்கும் " பாடல்கள் எழுதப்பட்டன என்றும் கூறுவார். ஏலவே எழுதப்பட்ட பாடல்களுக்கு மனத்துக்கிசைந்த இசையை எந்த இசையமைப்பாளரும் எளிதில் கொடுத்துவிட முடியுமா என்பது சந்தேகமானதே என்றாலும் அதிலும் வல்லமை காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

மெட்டா ? பாடலா ? என்பதை மெல்லிசைமன்னர் பாடலாசிரியர்களிடம் " கவிஞரே பாடல் சந்தத்துக்கா ? சொந்தத்துக்கா ? என்று கவிஞர்களின் உளப்பாங்கை மென்மையாக அறிந்து வசப்படுத்தும் யுக்தியை நாம் அறிவோம். மெல்லிசைமன்னர்கள் பாடல்கள் மெட்டுக்கு எழுதப்பட்டனவா அல்லது பாடலுக்கு இசையமைக்கப்பட்டனவா என்பதை இலகுவில் கண்டுகொள்ள முடியாத வண்ணம் மிக இயல்பாக இருப்பதை நாம் காண்கிறோம்.

சந்தத்திற்கு எழுதப்பட்ட சில பாடல்களை ஒரு சிறப்பான பாடல்களாக்கி புகழ்பெற வைத்த பெருமையும் மெல்லிசைமன்னரைச் சாரும்! 01 சிப்பியிருக்குது முத்துமிருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு [1981] - எஸ்.பி.பி. + ஜானகி - இசை : விஸ்வநாதன். 02 வான் நிலா நிலா - பட்டினப்பிரவேசம் [1977] - எஸ்.பி.பி. - இசை : விஸ்வநாதன். பாடல்வரிகளிலேயே பாடல்களுக்கான இசை இருக்கிறது என விஸ்வநாதன் கூறுவது மிக நுட்ப்பமான விடயமாகும். இதை “ இசை மொழியியல் “ என்ற பகுப்பில் தொல்காப்பியர் ‘வளியிசை’ என்று குறிப்பிடுகிறார். “ காற்றின் ஓசை மனிதனின் உள்ளக் கருத்துக்கு இசைய வெளிப்படும்போது, அது வளியிசை என்கிறார்.” என்பார் ஆய்வாளர் ஆ. ஷைலா ஹெலின். [ இசை மொழியியல் - என்ற கட்டுரையில் ] “ அகத்தெழு வளியிசை யரிநப நாடி “ [ தொல் எழுத்து 3-102 ]

மொழியின் அடிப்படை ஒலியில் இருப்பது போல இசையும் ஒலியில் அமைகிறது. இலைமறையாக கிடக்கும் இந்த நுட்பங்களையெல்லாம் பழந்தமிழர்கள் தெரிந்திருந்தனர் என்பது வியப்பானதாகும். உருவம் இல்லாத இசை, உருவமில்லாத காற்றில் கரைந்து போவது போல மாயம் காட்டும் " மாயமான் " ஆன இசைக்கு , தனது இசைவடிவம் ஒன்றிற்கு இசைஞானி இளையராஜா " காற்றைத் தவிர வேறில்லை " [ Nothing But Wind ] என்று பெயர் சூட்டியது இசையின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டதால் தானோ என்ற எண்ணம் எழுகிறது. பலவிதமான உள்ளடக்கங்களை பலவடிவச் சோதனைகளையும் செய்து பார்க்கும் திரை இசையமைப்பாளர்களால் மட்டுமே இசை குறித்து இது போன்றதொரு முழுமையான பார்வை பார்க்கமுடியும்..

பாடல்களுக்கிடையிலே தாளங்களை வாயால் சொல்லிப்பாடும் ஒரு நுட்பத்தையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள். தாந்தி நக்கடி , தாந்தி நக்கடி - தை தை தை ,தை தை - தகதிமித்தா - தந்தானா தந்தானா - போன்ற தாள லயங்களையும் , கொன்னக்கோல் என அழைக்கபடும் முறையையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.

தாளக்கட்டுகளை வாயால் கூறுவதையும் தமது பாடல்களில் இணைத்த பாடல்களுக்கான சில உதாரணங்கள்: 01 Rock and Roll - பதிபக்தி [1959] - வி.என்.சுந்தரம் + சந்திரபாபு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 இந்த திண்ணை பேச்சு வீரரிடம் - பதிபக்தி [1959] - டி.எம்.எஸ் + சந்திரபாபு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 தந்தானா பாட்டு பாடணும் - மகாதேவி [1959] - ரட்ணமாலா + சந்திரபாபு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 லவ்பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ் - அன்பேவா [1967] - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் 05 அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு - ராமன் எத்தனை ராமனடி [1969] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் 06 உனக்கென்ன மேலே நின்றாய் - சிம்லா ஸ்பெஷல் [1981] - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன்.

கொன்னக்கோல்: 01 வெட்கமாய் இருக்குதடி - பார் மகளே பார் [1963] - சூலமங்கலம் + லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 நீயே எனக்கு என்றும் - பாழே பாண்டியா [1962] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 மாதவி பொன்மயிலாள் - இருமலர்கள் [1968 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்.

மேல்நாட்டு இசையில் ஜோட்லிங் [ Jodling ] என்று அழைக்கப்படும் வாயால் தாளம் போடும் யுத்தியையும் பயன்படுத்தினார்கள் ; சில உதாரணங்கள் : 01 மலர் நின்ற முகம் - வெண்ணிற ஆடை [1964] - ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 அள்ளிப்பந்தல் கால்கள் - வெண்ணிற ஆடை [1964] - ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 என்ன வேகம் சொல்லு பாமா - இருமலர்கள் [1968 - டி.எம்.எஸ் + ராகவன் - இசை : விஸ்வநாதன் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் 1950 களில் அனறைய இசையமைப்பாளர்கள் நாட்டுப்புற இசையையும் , கர்னாடக இசையையும் கலந்து தந்த போது தபேலா , மிருதங்கம் , பறை , டோலக் , டேப், கஞ்சிரா, தவில், செண்டை போன்ற தாளக்கருவிகளையும் பயன்டுத்தினார்கள் .இவர்களில் தனித்துவமிக்க இசைநடைகளை தனது கர்நாடக இசைசார்ந்த இனிய பாடல்களில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் அன்றைய இசையமைப்பாளர்கள். இவற்றுடன் வாயால் சொல்லப்படும் தாள லயமான கொன்னக்கோல் , ஜதி போன்றவற்றையும் எல்லா இசையமைப்பாளர்களும் பயன்படுத்தினார்கள் . மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல், ஜதி போன்ற ஒலிகளை நாட்டியப்பாடல்களிலும் அன்றைய இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினர். ஆயினும் அதில் ஜி.ராமநாதன் இசை அதிக கவனம் பெற்றது.

ஜி.ராமநாதன் பாடலில் ஒலிக்கும் தபேலாவின் நாதம் சிறப்பாக இருக்கும் காதல் பாடல்களில் மோர்சிங்கையும் சேர்த்து பாடல்களின் ஒலிநயத்தை சிறப்பாக்கியிருப்பார் ஜி.ராமநாதன். மதுரைவீரன் படத்தில் " நாடகம் எல்லாம் கண்டேன் " பாடலின் மோர்சிங்கின் ஒலிசிறப்பை நாம் கேட்கமுடியும்.

மோர்சிங் : 01 நாடகம் எல்லாம் கண்டேன் - மதுரைவீரன் 1956 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 02 ஆண்டவனே இல்லையே - ராணி லலிதா 1958 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : ஜி.ராமநாதன் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த துள்ளலிசைப் பாடல்களிலும் தாளம் துல்லியமாக இருக்கும். தபேலா , பறை , தப்பு , டேப்பு, கடம் போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் சில ! 01 வாங்க மச்சான் வாங்க - மதுரைவீரன் 1956 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.லீலா - இசை : ஜி.ராமநாதன் 02 சும்மா இருந்தா சொத்துக்கு நாட்டம் - மதுரைவீரன் 1956 - பாடியவர்கள் : பி.லீலா + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 03 கண்ணே உன்னால் நான் அடையும் - அம்பிகாபதி 1957 - பாடியவர்கள் : என்.எஸ்.கிருஷ்ணன் + மதுரம் - இசை : ஜி.ராமநாதன் 04 சங்கத்து புலவர் - சக்கரவர்த்தித்த திருமகள் 1957 - பாடியவர்கள் : என்.எஸ்.கிருஷ்ணன் + சீர்காழி - இசை : ஜி.ராமநாதன் 05 அத்தானும் நீதானே - சக்கரவர்த்தித்த திருமகள் 1957 - பாடியவர்கள் : எஸ்.சி.கிருஷ்ணன் + டி.வி.ரத்தினம் - இசை : ஜி.ராமநாதன் . ஜி.ராமநாதன் காலத்திலேயே தனது தனித்துவத்தைக் காண்பித்த இன்னுமொரு இசை ஆளுமை திரைஇசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஆவார். அவரது பாடல்களிலும் தனித்துவமான தாள நடைகளால் தனிச் சிறப்புமிக்கவராகத் திகழ்ந்தார்.ஜி.ராமநாதன் தாளநடையில் தனித்துவமிக்க நாதலய ஆழமும் [Base ],ஒலித்துல்லியமும் இருப்பது போல கே.வி.மகாதேவன் தாள நடையில் தனித்துவமான நாட்டுப்புற தாள இசையின் சிறப்பான கூறுகளும் ஆழமும் இருக்கும். கே.வி.மகாதேவன் இசையில் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த பாடல்களிலும் தபேலா , பறை , தப்பு , டேப்பு, கடம், கஞ்சிரா, தவில், செண்டை ,கடசிங்காரி போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னாளில் இளையராஜாவின் இசையில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட கடசிங்காரி என்ற தாளக்கருவியைக் கண்டுபிடித்தவர் கே.வி.மகாதேவன் இசைக்குழுவில் இருந்த சிங்காரம் என்பவர். இவரது மகன் தான் இன்று இளையராஜாவின் இசைக்குழுவில் இந்தக்கருவியை வாசித்து வருகின்ற “ ஜெயாச்சா “ என்றழைக்கப்படும் எஸ்.ஜெயச்சந்திரன் என்ற இசைக்கலைஞர்.

மேற்குறித்த தாளக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு சில உதாரணங்கள்: 01 மாமா மாமா மாமா - குமுதம் 1959 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் + கே.ஜமுனாராணி - இசை : கே.வி.மகாதேவன் 02 ஏர்முனைக்கு நேர் இங்கே - பிள்ளைக்கனியமுது 1959 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன் 03 பார்த்தா பாசுரம் - திருவிளையாடல் 1966 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை :கே.வி.மகாதேவன் 04 நாதர் முடி மேலிருக்கும் - திருவருட்செல்வர் 1967 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன் 05 மணப்பாறை மாடு கட்டி - மக்களைப்பெற்ற மகராசி 1957 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன்

பெரும்பாலும் பக்திப்படங்களிலும் கிராமியக்கதைகளிலும் கே.வி.மகாதேவன் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் , தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர் படங்களிலும் , சிவாஜி நடித்த பல சமூகக்கதைகள் கொண்ட படங்களுக்கும் இசையமைத்தார். குறிப்பாக 1960களின் முன்னணி இசையமைப்பாளர்களாக மகாதேவனும் , மெல்லிசைமன்னர்களும் இருந்தார்கள் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ளலாம். 1940களின் ஆரம்பத்திலிருந்து இசையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட மகாதேவன் இசையில் மெல்லிசைமன்னர்களின் தாக்கமும் இருந்தது என்பதை அவரது வாத்திய இசை பயன்படுத்தும் முறையை குறிப்பிட்டு சொல்லலாம்.

ஆனாலும் கே.வி.மகாதேவன் இசையில் ஒரேவகைமாதிரியான தாள நடைகள் பயன்படுத்தப்பட்டு ஒருவிதமான சலிப்பும் , ஏதோ ஒருவகை பூர்த்தியாகாத தன்மையும் வெளிப்பட்டது என்பதை யாரும் மறுக்கவும் முடியாத நிலை இருந்தது. தாள நடைகளில் பரவலான வெளிதாக்கமற்ற நிலையும், ஒருவித வரட்சியும், கிராமியப்பாங்கை சுற்றிவந்த எதிரொலிகளுமே அதிகம் தெரிந்தது.இது பல்கிப் பெருகி வந்த சினிமாவுக்கு போதுமானதாக இருக்கவில்லை என கூறலாம். மகாதேவனின் இசையில் வெளிப்பட்ட ஒரேவகைமாதிரியான தாளலயப் பாங்கான பாடல்களுக்கு உதாரணமாகச் சில பாடல்களைக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். 01 மண்ணுக்கு மரம் பாரமா - தை பிறந்த வழி பிறக்கும் 1959 - பாடியவர்கள் : எம்.எஸ்.ராஜேஸ்வரி இசை : கே.வி.மகாதேவன் 02 நீ சிரித்தால் நான் சிரிப்பேன் - பாவை விளக்கு 1959 - பாடியவர்கள் : சூலமங்கலம் - இசை : கே.வி.மகாதேவன் 03 சின்னப்ப பாப்பா எங்க செல்ல பாப்பா - வண்ணக்கிளி 1966 - பாடியவர் : பி.சுசீலா - இசை :கே.வி.மகாதேவன் 04 ஒரே ஒரு ஊரிலே - படிக்காத மேதை 1961 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் + சூலமங்கலம் - இசை : கே.வி.மகாதேவன் 05 படித்ததினால் அறிவு பெற்றோர் - படிக்காத மேதை 1961 - பாடியவர்கள் : எம்.எஸ்.ராஜேஸ்வரி - இசை : கே.வி.மகாதேவன். 01 காட்டு ராணி கோட்டையிலே - தாயைக் காத்த தனயன் 1962- பாடியவர்கள் : பி.சுசீலா இசை : கே.வி.மகாதேவன் 02 காட்டுக்குள்ளே திருவிழா - தாய் சொல்லைத்த தட்டாதே 1962- பாடியவர்கள் : பி.சுசீலா - இசை : கே.வி.மகாதேவன்

தங்களுக்குப் பரிட்சயமானதாள வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தி வந்த இக்காலங்களில் மெல்லிசைமன்னர்கள் பொங்கஸ் என்ற லத்தீன் அமெரிக்க தாளக்கருவியை அதிகமாகப் பயன்படுத்தி தமிழ் சினிமாவின் இசைமுகத்தையே மாற்றிக்கொண்டிருந்தனர்.

அவர்களை பின்பற்றி கே.வி.மகாதேவனும் தனது பாடல்களில் பொங்கஸ் இசைக்கருவியின் நாதத்தைப் பின்னிப்பார்க்க விழைந்ததை அவரது பல பாடல்களில் கேட்கின்றோம். இதற்கு எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள். 01 நதி எங்கே போகிறது - இருவர் உள்ளம் 1962- பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.சுசீலா இசை : கே.வி.மகாதேவன் 02 எண்ணிரண்டு பதினாறு - அன்னை இல்லம் 1962- பாடியவர்கள் : டி.எம்.எஸ் + ஈஸ்வரி - இசை : கே.வி.மகாதேவன் 03 உன்னை அறிந்தால் நீ - வேட்டைக்காரன் 1966 - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை :கே.வி.மகாதேவன் 04 அழகு சிரிக்கின்றது - இருவர் உள்ளம் 1962- பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : கே.வி.மகாதேவன் 05 சித்திரை மாத நிலவினிலே - துளசிமாடம் 1965- பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன் 06 ஆடும் மயிலே ஆட்டம் எங்கே - துளசிமாடம் 1965- பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன். மெல்லிசைமன்னர்கள் இசையில் பொங்கஸ் இசைக்கருவி பயன்படுத்தப்பட்ட பாடல்களின் பட்டியலை இக்கட்டுரையின் பத்தாவது பகுதியிலும் , பொங்கஸ் வாத்தியம் பற்றிய செய்திகளை எனது நூலிலும் வாசிக்கலாம்.

சோற்றுப்பதமாகச் சில பாடல்கள் : 01 ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ் - என் கடமை [1964] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 போனால் போகட்டும் போடா - பாலும் பழமும் [1961] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 வந்த நாள் முதல் - பாவமன்னிப்பு [1961] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 அண்ணன் காட்டிய வழியம்மா - படித்தால் மட்டும் போதுமா [1961] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 மெல்ல நட மெல்ல நட - புதிய பறவை [1964] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

அறுபதுகளின் முற்கூறிலும் நடுப்பகுதியிலும் அதிகமாக பொங்கஸ் தாளக்கருவியை மிக எழுச்சியுடனும் பயபடுத்தினார்கள் என்று சொல்லும் போது அதன் இனிய அதிர்வு லயத்தை வேறு சில தாளவாத்தியக்கருவிகளுடனும் பயன்படுத்தி தாளப்பயன்பாடுகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அந்த வகையில் மெல்லிசைக்கு புதுநெறி வகுத்தவர்களாக விளங்கும் மெல்லிசைமன்னர்கள் அவர்களது சமகாலத்தவர்களுடன் ஒப்பிடும் பொழுது ஈடிணையற்றவர்களாக விளங்குவதையும் காண்கிறோம். பொங்கஸ் தாளக்கருவி என்பது லத்தீன் அமெரிக்க இசைக்கருவி. அமெரிக்கக்கண்டத்திற்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட ஆபிரிக்க உழைக்கும் மக்களின் இசைக்கருவி. இத்தாளவாத்தியக்கருவி லத்தீன் அமெரிக்க இசையில் அதிக தாக்கம் விளைவித்த வாத்தியம். பொழுது போக்கு இசையிலும் ,வியாபார வெற்றியிலும் உலகைக் கலக்கிய தாள வாத்தியம்.

அந்த வாத்தியக்கருவியை நமது மரபுசார்ந்த தளங்களுடன் இணைத்த பெருமை மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையே சாரும். பாடல்களின் தாளங்களுக்கு பொருத்தப்பாடாக, ஆற்றொழுக்காக , ஒன்றை ஓன்று குழப்பாமல் , தெளிந்த ஓட்டத்தில் அதைக் கலந்து தந்த மெல்லிசைமன்னர்களின் பேராற்றல் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. எந்தவகையான பாடல்களாயினும் அவற்றிலெல்லாம் நுட்பமாயும் , நுண்கூர்மையுடனும் தந்த அவர்களது படைப்பாற்றல் அவதானம் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. திரைப்பட மெல்லிசைப் பாடல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட தாள வாத்தியக்கருவி தபேலா ஆகும். எல்லாவிதமான பாடல்களிலும் இவ்வாத்தியம் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த வாத்தியத்துடன் பொங்கஸ் வாத்தியத்தை மெல்லிசைமன்னர்கள் புயன்படுத்திய விதம் என்பது அவர்களது புதுமை வேட்கையை துலக்கமாகக் காண்பிக்கக் கூடியதாகும்.

விதம் , விதமான தாள வாத்தியங்கள் மூலம் தாள நடைகளை மாற்றி, மாற்றி போட்டு அவற்றை பாடல்களின் ஒருங்கிசைந்த சுவையின்பத்தின் அடிநாதமாக்கிக் காட்டினார். பொங்கஸ் மற்றும் தபேலா வாத்தியங்களை அற்புதமாகக் கலந்த பாடல்கள் சிலவற்றை இங்கே நோக்கலாம். பொங்கஸ் மற்றும் தபேலா இணைந்து வருகின்ற பாடல்கள் சில: 01 நினைக்காத தெரிந்த மனமே - ஆனதா ஜோதி [1962] - பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 01 பேசுவது கிளியா இல்லை - பணத்தோட்டம் [1962] - டி .எம்.எஸ் +பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 என்னை மறந்ததென் - கலங்கரை விளக்கம் [1965] - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் 03 ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் - சாந்தி [1967] - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் இந்தப்பாடல் பொங்கஸ் தாளத்துடன் ஆரம்பிக்கிறது இடையில் மட்டும் மிக அருமையாக தபேலா இணைந்து கொள்ளும் அழகோ அழகு! 04 யாருக்கு மாப்பிள்ளை யாரோ - பார்த்தால் பசி தீரும் [1962] - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 மதுரா நகரில் தமிழ்சங்கம் - பார் மக்களே பார் [1963] - பி.பி.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 என் கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் [1965] - டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன்

பலவிதமான தாள வாத்தியங்களை வைத்து வித்தியாசமான தாளநடைகளில் அமைந்த பாடல்கள் :

01 தாழையாம் பூமுடிச்சு - பாகப்பிரிவினை [1964] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 தொட்டால் பூ மலரும் - படகோட்டி [1964] - டி .எம்.எஸ் +பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி [1964] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 கட்டோடு குழலாட ஆட - பெரிய இடத்துப் பெண் [1964] - டி .எம்.எஸ் + சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 நான் மாந்தோப்பில் - எங்க வீட்டுப் பிள்ளை [1964] - டி .எம்.எஸ்+ ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டோலக் + தபேலா 06 தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி [1964] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டேப் + தபேலா 07 எல்லோரும் கொண்டாடுவோம் - பாவமன்னிப்பு [1961] - டி .எம்.எஸ்+ ஹனீபா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டேப் 08 தாயத்து தாயத்து - மகாதேவி [1957] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டேப் 10 தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி [1964] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டேப் + தபேலா.

தாம் அமைக்கும் மெட்டுக்களின் அமைப்பிற்குள்ளேயே அதன் உறுதிப்பாட்டில் நிலைகொண்ட வண்ணம் அதன் மையத்தைத் தழுவியும் ,சற்று விலகியும் தாளநடைகளை மாற்றியும் தங்கள் படைப்பாற்றல் மூலம் நெஞ்சை அள்ளும் பல பாடல்கள்தந்த அற்புதங்களையும் நாம் காண்கின்றோம். மனவெழுச்சிகளை வெளிப்படுத்துகின்ற இசையில் அதனுடன் இணைந்த உணர்ச்சி பாவங்களையும் பல வண்ணக்கலவையால் ஓவியத்தில் நீகழ்த்துவது போல விதம்விதமான வர்ணஜாலங்களாக விரைந்தெழுந்து,அவை மடமாறும் இடங்களில் ஒன்றை ஒன்று உறுத்தாமல் மடைமாறிச் செல்வதும் அதன் நேர்த்தியும் நம்மை வியக்க வைப்பதுடன் நம்மை இனம் புரியாத ரசபாவத்திற்கும் உள்ளாக்கும் அதிசயத்தையும் காண்கிறோம்.குறிப்பாக அந்தந்த கணங்ககளில் இசைநெறியில் சுழலவேண்டிய வாத்தியக்கருவிகளை வாசித்தளித்த இசைக்கலைஞர்களின் கைநேர்த்தியும் , அவர்களைக் கையாண்ட மெல்லிசைமன்னர்களின் கூர்மையான நோக்கும் கலைநேர்த்திமிக்கவையாகும்

இன்று அந்தப்பாடல்களை மீண்டும் பாடி புதிதாக ஒலிப்பதிவு செய்து வெளிவரும் இசைத்தட்டுக்களில் , இத்தனை துல்லியமான ஒலிப்பதிவுகள் , தொழில் நுட்பங்கள் இருந்த போதும் வாத்தியங்கள் மடைமாறும் இடங்களிலெல்லாம் இடறி விழுவதைக் கேட்கின்றோம். இத்தனை தொழில்நுட்பமில்லாத அந்தக்காலத்தில் அந்தக்கால வாத்தியக்கலைஞர்களின் ஞானமும் ,கைத்திறனும் எத்தகையது என்பதை வாத்தியக்கலைஞராகத் தனது வாழ்வை ஆரம்பித்த இளையராஜா பின்வருமாறு கூறுவார். “அண்ணன் விஸ்வநாதன் இசைக்குழுவிலிருந்த வாத்தியக்கலைஞர்களுக்கு கிட்ட போகவே பயமாக இருக்கும் ; அத்தனை திறமைசாலிகள் " என்பார். பாடல்களில் தாளம் மற்றும் மெட்டுக்களில் மாற்றங்களைகளைக் காட்டுவதன் மூலம் வெவ்வேறுவிதமான சூழ்நிலைகளை அதனூடே சிலசமயங்களில் வெவ்வேறு சமூக நிலைகளையும் வெளிப்படுத்தும் அழகையும் பல விதங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் :

01 எங்க வாழ்க்கையிலே - ஒன்று பட்டால் உண்டு வாழ்வு [1956] - சுசீலா + ஜமுனாராணி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 ஆடைகட்டி ஆடும் நிலவோ - அமுதவல்லி [1957] - டி .ஆர்.மகாலிங்கம் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

தாளநடைகளில் மாற்றங்களை தங்களது ஆரம்ப காலங்களிலேயே புது தினுசாக பரீட்சித்துப் பாரத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பதற்கு இந்தப்ப பாடலே சாட்சி என்று கூறி விடலாம். எத்தனை விதமான தாள நடைகள் எனபதை உற்றுக் கேட்டால் நாம் அனுபவிக்க முடியும். 03 மனம் கனிவான அந்த மங்கையை - இது சத்தியம் [1963] - டி எம் எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

என்னே , அற்புதமான பாடல் இது ! எத்தனை இனிமை என்று வியக்கின்ற பாடல்களில் இதுவும் ஒன்று ! அருமையான இந்தப்பாடலில் எத்தனை விதம் விதமான தாள நடைகள் பயன்டுத்தியிருக்கின்றார்கள். மெட்டு எப்படியெல்லாம் மாறி, மாறி ஜாலம் காட்டுகிறது! பாடலின் ஆரம்பம் தபேலா தாளத்துடன் ஆரம்பிக்கும் அழகும் , பல்லவி முடிந்து வருகிற பொங்கஸ் தாளம் என பாடல் முழுவது தபேலா, பொங்கஸ் வாத்தியங்களை வைத்து சுழன்று வரும் பாடலில் ஹம்மிங்கையும் இணைத்து மெல்லிசைமன்னர்கள் போதையூட்டுகிறார்கள். 04 நான் உயர உயர - நான் ஆணையிட்டால் [1964] - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் இந்தப்பாடலில் .. உயரும்போதுமயங்கி விடாமல் " என்ற இடத்தில் ஒரு மாறுதலும் பின்னர் " தாய்தந்தாள் பால் மயக்கம் " என்ற இடத்தில் ஒரு மாறுதலும் என பலவிதமான நடைகளுடன் பாடல் நளினம் காட்டும். 05 ஜவ்வாது மேடையிட்டு - பணத்தோட்டம் [1963] - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப்பாடலில் " நாகலிங்கப்பூ எடுத்து " என்ற இடத்தில் புதிய திருப்பம் காட்டும் இந்தப்பாடல். 06 நினைத்தால் சிரிப்பு வரும் - பாமா விஜயம் [1968] - சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் "ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா" என்ற பாடல் வரிகளில் மெட்டும் , தாளமும் மாறி விடும். 07 அடியே நேற்று பிறந்தவளே - என் தம்பி [1969] - சுசீலா + டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் 08 தேடி தேடி காத்திருந்தேன் - பெண் என்றால் பெண் [1969] - சுசீலா - இசை : விஸ்வநாதன் 09 தங்கத் தேரோடும் வீதியிலே - லட்சுமி கல்யாணம் [1968] - டி எம் எஸ் + சீர்க்ஸ்ழி - இசை : விஸ்வநாதன் 10 கண்களும் காவடி சிந்திக்கட்டும் - எங்க வீட்டுப் பிள்ளை [1964] - ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டோலக் + தபேலா

ஒரே பாடலுக்குள் பலவிதமான மெட்டு அடுக்குகளை வைத்து பல்வேறு இசைக்கார்வைகளை வித்தியாசமான தாளநடைகளிலும் அமைத்துக்காட்டி தனது படைப்பாற்றல் எல்லையற்றது என மெல்லிசைமன்னர் நிரூபித்த பாடல்கள் சில :

01 மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மக்களே பார் [1963] - பி.பி.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பெண் போனால் இந்த பெண் போனால் - எங்க வீட்டுப் பிள்ளை [1963] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 தத்தை நெஞ்சம் முத்தத்தில் - சர்வர் சுந்தரம் [1965] - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 நான் உயர உயர போகிறேன் - நான் ஆணையிட்டால் [1968] - டி .எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் 05 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா [1969] - டி .எம்.எஸ் +பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் 06 ஒரு ராஜா ராணியிடம் - சிவந்த மண் [1969] - டி .எம்.எஸ் +பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் 07 முத்தமோ மோகமோ - பறக்கும் பாவை [1970] - டி .எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் 08 நினைத்தால் சிரிப்பு வரும் - பாமா விஜயம் [1968] - சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் 09 பாரதி கண்ணம்மா - நினைத்தாலே இனிக்கும் [1979] - எஸ்.பி.பி + வாணி - இசை : விஸ்வநாதன் 10 தங்கத் தோணியிலே - உலகம் சுற்றும் வாலிபன் [1973] - ஜேசுதாஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் 11 என் கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் [1967] - டி .எம்.எஸ்+ சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 11 நான் அளவோடு ரசிப்பபவன் - எங்கள் தங்கம் [1969] - டி .எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்

பாடல் அமைப்பு உத்திகளில் ஒரு பாடலின் முன்பகுதியை ஒரு பாடகரும் , பின்பகுதியை ஒரு பாடகரும் பாடும் வண்ணம் அமைத்து பாடலுக்கு சுவை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்கள். பின்னர் விஸ்வநாதன் தனியே பிரிந்து இசையமைத்த போதும் இந்த அமைப்பைப் பயன்படுத்தினார். அதற்கு சில உதாரணங்கள் :

01 வாராதிருப்பானோ - பச்சை விளக்கு [1957] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி [1964] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 மனம் கனிவான அந்த - இது சத்தியம் [1963] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 நான் மாந்தோப்பில் - எங்க வீட்டுப் பிள்ளை [1963] - டி .எம்.எஸ். +ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 மலர்ந்தும் மலராத - பாசமலர் [1961] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 கட்டோடு குழலாட ஆட - பெரிய இடத்து பெண் [1957] - டி .எம்.எஸ். + சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 பொன்னெழில் பூத்தது புதுவானில் - கலங்கரை விளக்கம் [1957] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் திரைக்காட் சிகளில் பயணம் செய்யும் போது பாடும் பாடல்களுக்குப் பொருத்தமாகவும் தாளங்களை அமைத்து பாடல்களில் அமைத்து பாடல்களின் இனிமையில் கரைத்து வெளியே தெரியாத வண்ணம் காட்டிய புதுமையின் முன்னோடிகள் தான் மெல்லிசைமன்னர்கள்! குதிரை வண்டி , மாட்டுவண்டி , புகையிரதம் , கார் எதையும் அவர்கள் தாளநடையில் காட்டினார்கள். குதிரை வண்டி: 01 அச்சம் என்பது மடமையடா - மன்னாதி மன்னன் [1960] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி . 02 வாழ்வது என்றும் உண்மையே - ராஜா மலையசிம்மன் [1960] - சீர்காழி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி . 03 அழகுக்கும் மலருக்கும் - நெஞ்சம் மறப்பதில்லை [1968 - பி.பி.எஸ் + ஜானகி - இசை : விஸ்வநாதன். ராமமூர்த்தி. 04 ஓகோ கோ மனிதர்களே - படித்தால் மட்டும் போதுமா [1968 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா [1968] - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன். மாட்டுவண்டி : 05 பாரப்பா பழனியப்பா - பெரிய இடத்துப் பெண் [1963] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - பாசம் [1962] - ஜானகி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ரயில் : 07 கேள்வி பிறந்தது அன்று - பச்சை விளக்கு [1964 ] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 08 சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி [1969] - சுசீலா - இசை : விஸ்வநாதன். 09 கடவுள் ஒரு நாள் உலகைக்கான - சாந்தி நிலையம் [1969 ]- சுசீலா - இசை : விஸ்வநாதன்.

திரையில் இசை என்பது பாடல் மட்டுமே என்ற புரிதல் இருந்துவரும் சூழ்நிலையில் அதன் பல்வேறு பரிமாணங்களையும் காட்டி புதுமைசெய்தது மாத்திரமல்ல , இசைக்கும் மொழிக்குமான நெருக்கமான தொடர்பையும் அழகாக வெளிப்படுத்தினார்கள்.

என்ன தான் உயர்வான இசை இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் ஊடகமாக மொழி அத்தியாவசியமானதாகிறது. தமிழ் மொழிக்கும் இசைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை காலங்காலமாக பேசிவருகின்றனர்.அந்தவகையில் இசைக்கும் மொழிக்குமுள்ள நெருங்கிய தொடர்பு போலவே பாடலாசிரியர்களுக்கும் மெல்லிசைமன்னர்களுக்கும் நல்ல புரிதல் இருந்து வந்துள்ளது.


பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் :

பாடல்கள் பலவிதமான கட்டமைப்புகளைக் கொண்டியங்குகின்றன. மெட்டுகளில் பலவிதமான அமைப்புகள் இருப்பது போலவே பாடல்களில் இயல்பாய் இருப்பது தாளம். தாளமின்றி எந்த ஒரு பாடலும் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தாளமின்றி பாடல்களே இல்லை. அதனாலதான் ஸ்வரம், ராகம் , தாளம் மூன்றும் சேர்ந்ததே சங்கீதம் என்று முன்னோர் கூறினர்.

பண்டைய தமிழ் மக்கள் இசை குறித்த மிகுந்த ஆற்றல் பெற்றவர்கள் என்பது வெறும் புகழ்ச்சி சார்ந்த கருத்தல்ல. இசை பற்றிய தெளிவும் , ஆற்றலும் மிக்கவர்கள் என்பதை பல பழைய நூல்கள் எடுத்தியம்புகின்றன.தொல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மட்டுமல்ல இசைபற்றிய அரிய கருத்துக்களையும் போகிற போக்கில் கூறிச் செல்கிறது. இசைக்கும் , மொழிக்கும் இடையே உள்ள நெருக்கமான பொதுத்தன்மையான ஓசை நயங்களை பேசும் பொது வண்ணம் பற்றிய செய்திகளையும் கூறிச் செல்கிறது. குறிப்பாக இருபது வண்ணங்களை பற்றிய குறிப்புகளையும் பேசுகிறது .

அவையாவன .. 1. பாஅ வண்ணம் 2. தாஅ வண்ணம் 3. வல்லிசை வண்ணம் 4. மெல்லிசை வண்ணம் 5.இயைபு வண்ணம் 6.அளபடை வண்ணம் 7.நெடுஞ்சீர் வண்ணம் 8. குருஞ்சீர் வண்ணம் 9. சித்திர வண்ணம் 10. நலிபு வண்ணம் 11. அகப்பாட்டு வண்ணம் 12. புறப்பாட்டு வண்ணம் 13.ஒழுகு வண்ணம் 14. ஒருஉ வண்ணம் 15. எண்ணு வண்ணம் 16.அகைப்பு வண்ணம் 17. தூங்கல் வண்ணம் 18. ஏந்தல் வண்ணம் 19. உருட்டுவண்ணம் 20.முடுகு வண்ணம். தொல்காப்பியம் ஒரு மொழியியல் நூல் [ Linguistic ] என்று குறிப்பிடும் போது தொல்காப்பியர் பன்டைய காலத்திலிருந்த இயல் இலக்கணம் ,இசை இலக்கணம், நாடக இலக்கணம் ஆகிய நூல்களிலிருந்து இயல் இலக்கணத்தை மட்டும் பிரதானமானது தொகுத்தார் என்றும் அதில் இசையின் இலக்கணக் கூறுகளையும் கூறத்தவறவில்லை எனப்தையும் அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மோனை .எதுகை , இயைபு முதலிய தொடைகளின் இலக்கணம், இசைக்க கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை , விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுவன. இவற்றை முதன்முதலில் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது தொல்காப்பியமே. மோனை முதலிய தொடைகளின் இலக்கணம் இல்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடல்களுக்குரிய யாப்பு வகைகளை தொல்காப்பியம் மிகவும் அழகாக வகுத்து பகுத்துக் காட்டியுள்ளது. தொல்காப்பியத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது , என்பார் இசையறிஞர் வீ.பா.கா.சுந்தரம்.

முன்னைக்காலம் தொட்டு இன்று வரை சில விஷயங்கள் சங்கிலித் தொடர் போல தொடர்ந்து வருவதை இசையிலும் நாம் காண முடியும். குறிப்பாக தாளம் பற்றி இன்றும் நாம் அறிகின்ற ஐந்து வகை தாளங்கள் இதற்கும் சான்றாக விளங்குகின்றன. சதுஸ்ரம் , திஸ்ரம் , மிஸ்ரம் , கண்டம் , சங்கீரணம் இன்றும் கர்னாடக இசையுலகில் பேசப்படும் தாளங்கள் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் அவை பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.

தாளம் பற்றி தொல்காப்பியம் வியக்கத்தக்க செய்திகளையும் கூறுகின்ற போது அவற்றின் தமிழ் பெயர்களில் நடை என குறிப்பிடுகின்றது. 01. மூன்றன் நடை [ (திஸ்ர நடை ] - தகிட 02 நாலன் நடை [ சதுஸ்ரம் ] - தகதின – தகதிமி -- தாதிமி 03 ஐந்தன் நடை [ கண்டம் ] - தக திமித -- தக தகிட 04 ஏழன் நடை [ மிஸ்ரம் ] - தகிட தகதிமி -- தனன தந்தன 05. ஒன்பான் நடை [சங்கீர்ண நடை] - தகதிமி தகிடதக -- தாக தக தக தக

"நடைமிகுந்தேத்திய குடை நிழல் மரபும் " என்ற தொல்காப்பியரின் வரிகள் மூலம் அறிகிறோம். //.. இயற்றமிழுக்குரிய ஐந்து அங்கங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவைகளோடு சுருதி, சுரம், இராகம், தாளம் முதலிய நான்கும் சேர்ந்து, இசைத்தமிழுக்கு மொத்தம் ஒன்பது அங்கங்களாகும். தாளம் இசையின்; கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது ஆகும். பாடல்களுக்கு வடிவமும், நடையும், விரைவும், எழுச்சியும் நல்குவது தாளமே. ‘தாளம் இன்றேல் கூழம்’ என்பார் பாரதியார்.// என்பார் இசை ஆய்வாளர் ஆ.ஷைலா ஹெலின்.

பாடல், இசையமைப்பு பற்றிய மெல்லிசைமன்னருடனான சில உரையாடல்களிலும் அவர் வழங்கிய பேட்டிகளிலும் முக்கியமான விஷயம் ஒன்றையும் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். அவரது இசையமைப்பை வியக்கும் சிலரது கேள்விக்கு " பாடலின் வரிகளிலேயே இசை பொதிந்திருக்கும் , அந்த சந்தங்களையே தொடர்ந்தால் இசை வந்துவிடும் " என்பார். இந்தக் கூற்றை வேறு ஒருவகையில் விளக்குவது போல மெல்லிசைமன்னர் விஸ்வநாதன பற்றி கவிஞர் கண்ணதாசன் , " விஸ்வநாதனிடம் ஒரு தினசரிப் பேப்பரின் துண்டைக் கொடுத்தால் கூட மெட்டு போட்டுத்தருவான் " என்பார். உண்மையில் அவர் விளையாட்டாகக் கூறினாலும் சொற்களில் பொதிந்திருக்கும் ஒலிநயங்களில் இசையும் ஒளிந்திருக்கிறது என்பதை பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியயமும் கூறுகிறது.

பழந்தமிழர்கள் இசைக்கும் மொழிக்கும் உள்ள மிக நெருக்கமான தொடர்புகளை மிக்கது துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர். மொழிக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பையும் , ஒலிக்கும் , ஓசைக்கும் இசைக்கும் உள்ள தொடர்பையும், இசைக்கும் காலத்திற்கும் உள்ள தொடர்பையும் ,இசைக்கும் சொற்களுக்கும் உள்ள தொடர்பையும் ,இசைக்கும் உடலுக்குமுள்ள பிணைப்பையும் மிகத்துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர். " பாடலின் வரிகளிலேயே இசை பொதிந்திருக்கு " என விஸ்வநாதன் கூறிய கருத்து மிக உண்மை கருத்தாகும். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளின் பாடல்கள் சந்தங்களைஅல்லது பலவிதமான தாளங்களை / சந்தங்களை அடிப்படையாகக் கொண்டன என்று விளக்குகிறார் வி.ப.க சுந்தரம்.

முரசியம்பின முருட திர்ந்தன முறையெழுந்தன - பணிலம் வெண்குடை அரசெ ழுந்ததோர் படியெழுந்தன என்ற வரிகளை " திகிட தகதிமி - தகதிமி " என்ற மிஸ்ர நடையில் [ ஏழன் நடை ] , அது போலவே பிறப்பாடல்களை வேவ்வேறு சந்தங்களிலும் அமைத்தார் என விளக்குவார்.

மெல்லிசைமன்னர்கள் சந்தங்களில் , தாளநடைகளில் பல நுட்பங்களையும் வெளிப்படுத்தியள்ளனர். இன்றைய நிலையில் சினிமா மொழியில் "தத்தகாரம்" என்று சந்தங்களை அழைப்பதை நாம் காணலாம். இசையமைப்பாளர் தாம் அமைக்கும் மேட்டை தத்தகாரத்தில் கூற பாடலாசிரியர்கள் அதற்கேற்ற வரிகளை எழுதிக்கொடுப்பதையும் நாம்அறிவோம்.

சந்தத்துக்கு அல்லது இசைக்கு பாடல் வரிகளா ? அல்லது பாடல் வரிகளுக்கு இசையா / சந்தமா ? என்ற சிறு விவாதங்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு! ஒரு சில இசையமைப்பாளர்கள் மட்டுமே எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பவர்கள் என்றும் விஸ்வநாதன் காலத்தில் " தத்தகாரத்துக்கும் " பாடல்கள் எழுதப்பட்டன என்றும் கூறுவார். ஏலவே எழுதப்பட்ட பாடல்களுக்கு மனத்துக்கிசைந்த இசையை எந்த இசையமைப்பாளரும் எளிதில் கொடுத்துவிட முடியுமா என்பது சந்தேகமானதே என்றாலும் அதிலும் வல்லமை காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

மெட்டா ? பாடலா ? என்பதை மெல்லிசைமன்னர் பாடலாசிரியர்களிடம் " கவிஞரே பாடல் சந்தத்துக்கா ? சொந்தத்துக்கா ? என்று கவிஞர்களின் உளப்பாங்கை மென்மையாக அறிந்து வசப்படுத்தும் யுக்தியை நாம் அறிவோம். மெல்லிசைமன்னர்கள் பாடல்கள் மெட்டுக்கு எழுதப்பட்டனவா அல்லது பாடலுக்கு இசையமைக்கப்பட்டனவா என்பதை இலகுவில் கண்டுகொள்ள முடியாத வண்ணம் மிக இயல்பாக இருப்பதை நாம் காண்கிறோம்.

சந்தத்திற்கு எழுதப்பட்ட சில பாடல்களை ஒரு சிறப்பான பாடல்களாக்கி புகழ்பெற வைத்த பெருமையும் மெல்லிசைமன்னரைச் சாரும்! 01 சிப்பியிருக்குது முத்துமிருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு [1981] - எஸ்.பி.பி. + ஜானகி - இசை : விஸ்வநாதன். 02 வான் நிலா நிலா - பட்டினப்பிரவேசம் [1977] - எஸ்.பி.பி. - இசை : விஸ்வநாதன். பாடல்வரிகளிலேயே பாடல்களுக்கான இசை இருக்கிறது என விஸ்வநாதன் கூறுவது மிக நுட்ப்பமான விடயமாகும். இதை “ இசை மொழியியல் “ என்ற பகுப்பில் தொல்காப்பியர் ‘வளியிசை’ என்று குறிப்பிடுகிறார். “ காற்றின் ஓசை மனிதனின் உள்ளக் கருத்துக்கு இசைய வெளிப்படும்போது, அது வளியிசை என்கிறார்.” என்பார் ஆய்வாளர் ஆ. ஷைலா ஹெலின். [ இசை மொழியியல் - என்ற கட்டுரையில் ] “ அகத்தெழு வளியிசை யரிநப நாடி “ [ தொல் எழுத்து 3-102 ]

மொழியின் அடிப்படை ஒலியில் இருப்பது போல இசையும் ஒலியில் அமைகிறது. இலைமறையாக கிடக்கும் இந்த நுட்பங்களையெல்லாம் பழந்தமிழர்கள் தெரிந்திருந்தனர் என்பது வியப்பானதாகும். உருவம் இல்லாத இசை, உருவமில்லாத காற்றில் கரைந்து போவது போல மாயம் காட்டும் " மாயமான் " ஆன இசைக்கு , தனது இசைவடிவம் ஒன்றிற்கு இசைஞானி இளையராஜா " காற்றைத் தவிர வேறில்லை " [ Nothing But Wind ] என்று பெயர் சூட்டியது இசையின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டதால் தானோ என்ற எண்ணம் எழுகிறது. பலவிதமான உள்ளடக்கங்களை பலவடிவச் சோதனைகளையும் செய்து பார்க்கும் திரை இசையமைப்பாளர்களால் மட்டுமே இசை குறித்து இது போன்றதொரு முழுமையான பார்வை பார்க்கமுடியும்..

பாடல்களுக்கிடையிலே தாளங்களை வாயால் சொல்லிப்பாடும் ஒரு நுட்பத்தையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள். தாந்தி நக்கடி , தாந்தி நக்கடி - தை தை தை ,தை தை - தகதிமித்தா - தந்தானா தந்தானா - போன்ற தாள லயங்களையும் , கொன்னக்கோல் என அழைக்கபடும் முறையையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.

தாளக்கட்டுகளை வாயால் கூறுவதையும் தமது பாடல்களில் இணைத்த பாடல்களுக்கான சில உதாரணங்கள்: 01 Rock and Roll - பதிபக்தி [1959] - வி.என்.சுந்தரம் + சந்திரபாபு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 இந்த திண்ணை பேச்சு வீரரிடம் - பதிபக்தி [1959] - டி.எம்.எஸ் + சந்திரபாபு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 தந்தானா பாட்டு பாடணும் - மகாதேவி [1959] - ரட்ணமாலா + சந்திரபாபு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 லவ்பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ் - அன்பேவா [1967] - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் 05 அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு - ராமன் எத்தனை ராமனடி [1969] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் 06 உனக்கென்ன மேலே நின்றாய் - சிம்லா ஸ்பெஷல் [1981] - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன்.

கொன்னக்கோல்: 01 வெட்கமாய் இருக்குதடி - பார் மகளே பார் [1963] - சூலமங்கலம் + லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 நீயே எனக்கு என்றும் - பாழே பாண்டியா [1962] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 மாதவி பொன்மயிலாள் - இருமலர்கள் [1968 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்.

மேல்நாட்டு இசையில் ஜோட்லிங் [ Jodling ] என்று அழைக்கப்படும் வாயால் தாளம் போடும் யுத்தியையும் பயன்படுத்தினார்கள் ; சில உதாரணங்கள் : 01 மலர் நின்ற முகம் - வெண்ணிற ஆடை [1964] - ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 அள்ளிப்பந்தல் கால்கள் - வெண்ணிற ஆடை [1964] - ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 என்ன வேகம் சொல்லு பாமா - இருமலர்கள் [1968 - டி.எம்.எஸ் + ராகவன் - இசை : விஸ்வநாதன் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் 1950 களில் அனறைய இசையமைப்பாளர்கள் நாட்டுப்புற இசையையும் , கர்னாடக இசையையும் கலந்து தந்த போது தபேலா , மிருதங்கம் , பறை , டோலக் , டேப், கஞ்சிரா, தவில், செண்டை போன்ற தாளக்கருவிகளையும் பயன்டுத்தினார்கள் .இவர்களில் தனித்துவமிக்க இசைநடைகளை தனது கர்நாடக இசைசார்ந்த இனிய பாடல்களில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் அன்றைய இசையமைப்பாளர்கள். இவற்றுடன் வாயால் சொல்லப்படும் தாள லயமான கொன்னக்கோல் , ஜதி போன்றவற்றையும் எல்லா இசையமைப்பாளர்களும் பயன்படுத்தினார்கள் . மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல், ஜதி போன்ற ஒலிகளை நாட்டியப்பாடல்களிலும் அன்றைய இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினர். ஆயினும் அதில் ஜி.ராமநாதன் இசை அதிக கவனம் பெற்றது.

ஜி.ராமநாதன் பாடலில் ஒலிக்கும் தபேலாவின் நாதம் சிறப்பாக இருக்கும் காதல் பாடல்களில் மோர்சிங்கையும் சேர்த்து பாடல்களின் ஒலிநயத்தை சிறப்பாக்கியிருப்பார் ஜி.ராமநாதன். மதுரைவீரன் படத்தில் " நாடகம் எல்லாம் கண்டேன் " பாடலின் மோர்சிங்கின் ஒலிசிறப்பை நாம் கேட்கமுடியும்.

மோர்சிங் : 01 நாடகம் எல்லாம் கண்டேன் - மதுரைவீரன் 1956 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 02 ஆண்டவனே இல்லையே - ராணி லலிதா 1958 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : ஜி.ராமநாதன் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த துள்ளலிசைப் பாடல்களிலும் தாளம் துல்லியமாக இருக்கும். தபேலா , பறை , தப்பு , டேப்பு, கடம் போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் சில ! 01 வாங்க மச்சான் வாங்க - மதுரைவீரன் 1956 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.லீலா - இசை : ஜி.ராமநாதன் 02 சும்மா இருந்தா சொத்துக்கு நாட்டம் - மதுரைவீரன் 1956 - பாடியவர்கள் : பி.லீலா + ஜிக்கி - இசை : ஜி.ராமநாதன் 03 கண்ணே உன்னால் நான் அடையும் - அம்பிகாபதி 1957 - பாடியவர்கள் : என்.எஸ்.கிருஷ்ணன் + மதுரம் - இசை : ஜி.ராமநாதன் 04 சங்கத்து புலவர் - சக்கரவர்த்தித்த திருமகள் 1957 - பாடியவர்கள் : என்.எஸ்.கிருஷ்ணன் + சீர்காழி - இசை : ஜி.ராமநாதன் 05 அத்தானும் நீதானே - சக்கரவர்த்தித்த திருமகள் 1957 - பாடியவர்கள் : எஸ்.சி.கிருஷ்ணன் + டி.வி.ரத்தினம் - இசை : ஜி.ராமநாதன் . ஜி.ராமநாதன் காலத்திலேயே தனது தனித்துவத்தைக் காண்பித்த இன்னுமொரு இசை ஆளுமை திரைஇசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஆவார். அவரது பாடல்களிலும் தனித்துவமான தாள நடைகளால் தனிச் சிறப்புமிக்கவராகத் திகழ்ந்தார்.ஜி.ராமநாதன் தாளநடையில் தனித்துவமிக்க நாதலய ஆழமும் [Base ],ஒலித்துல்லியமும் இருப்பது போல கே.வி.மகாதேவன் தாள நடையில் தனித்துவமான நாட்டுப்புற தாள இசையின் சிறப்பான கூறுகளும் ஆழமும் இருக்கும். கே.வி.மகாதேவன் இசையில் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த பாடல்களிலும் தபேலா , பறை , தப்பு , டேப்பு, கடம், கஞ்சிரா, தவில், செண்டை ,கடசிங்காரி போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னாளில் இளையராஜாவின் இசையில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட கடசிங்காரி என்ற தாளக்கருவியைக் கண்டுபிடித்தவர் கே.வி.மகாதேவன் இசைக்குழுவில் இருந்த சிங்காரம் என்பவர். இவரது மகன் தான் இன்று இளையராஜாவின் இசைக்குழுவில் இந்தக்கருவியை வாசித்து வருகின்ற “ ஜெயாச்சா “ என்றழைக்கப்படும் எஸ்.ஜெயச்சந்திரன் என்ற இசைக்கலைஞர்.

மேற்குறித்த தாளக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு சில உதாரணங்கள்: 01 மாமா மாமா மாமா - குமுதம் 1959 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் + கே.ஜமுனாராணி - இசை : கே.வி.மகாதேவன் 02 ஏர்முனைக்கு நேர் இங்கே - பிள்ளைக்கனியமுது 1959 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன் 03 பார்த்தா பாசுரம் - திருவிளையாடல் 1966 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை :கே.வி.மகாதேவன் 04 நாதர் முடி மேலிருக்கும் - திருவருட்செல்வர் 1967 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன் 05 மணப்பாறை மாடு கட்டி - மக்களைப்பெற்ற மகராசி 1957 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன்

பெரும்பாலும் பக்திப்படங்களிலும் கிராமியக்கதைகளிலும் கே.வி.மகாதேவன் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் , தேவர் பிலிம்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர் படங்களிலும் , சிவாஜி நடித்த பல சமூகக்கதைகள் கொண்ட படங்களுக்கும் இசையமைத்தார். குறிப்பாக 1960களின் முன்னணி இசையமைப்பாளர்களாக மகாதேவனும் , மெல்லிசைமன்னர்களும் இருந்தார்கள் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ளலாம். 1940களின் ஆரம்பத்திலிருந்து இசையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட மகாதேவன் இசையில் மெல்லிசைமன்னர்களின் தாக்கமும் இருந்தது என்பதை அவரது வாத்திய இசை பயன்படுத்தும் முறையை குறிப்பிட்டு சொல்லலாம்.

ஆனாலும் கே.வி.மகாதேவன் இசையில் ஒரேவகைமாதிரியான தாள நடைகள் பயன்படுத்தப்பட்டு ஒருவிதமான சலிப்பும் , ஏதோ ஒருவகை பூர்த்தியாகாத தன்மையும் வெளிப்பட்டது என்பதை யாரும் மறுக்கவும் முடியாத நிலை இருந்தது. தாள நடைகளில் பரவலான வெளிதாக்கமற்ற நிலையும், ஒருவித வரட்சியும், கிராமியப்பாங்கை சுற்றிவந்த எதிரொலிகளுமே அதிகம் தெரிந்தது.இது பல்கிப் பெருகி வந்த சினிமாவுக்கு போதுமானதாக இருக்கவில்லை என கூறலாம். மகாதேவனின் இசையில் வெளிப்பட்ட ஒரேவகைமாதிரியான தாளலயப் பாங்கான பாடல்களுக்கு உதாரணமாகச் சில பாடல்களைக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். 01 மண்ணுக்கு மரம் பாரமா - தை பிறந்த வழி பிறக்கும் 1959 - பாடியவர்கள் : எம்.எஸ்.ராஜேஸ்வரி இசை : கே.வி.மகாதேவன் 02 நீ சிரித்தால் நான் சிரிப்பேன் - பாவை விளக்கு 1959 - பாடியவர்கள் : சூலமங்கலம் - இசை : கே.வி.மகாதேவன் 03 சின்னப்ப பாப்பா எங்க செல்ல பாப்பா - வண்ணக்கிளி 1966 - பாடியவர் : பி.சுசீலா - இசை :கே.வி.மகாதேவன் 04 ஒரே ஒரு ஊரிலே - படிக்காத மேதை 1961 - பாடியவர்கள் : டி.எம்.எஸ் + சூலமங்கலம் - இசை : கே.வி.மகாதேவன் 05 படித்ததினால் அறிவு பெற்றோர் - படிக்காத மேதை 1961 - பாடியவர்கள் : எம்.எஸ்.ராஜேஸ்வரி - இசை : கே.வி.மகாதேவன். 01 காட்டு ராணி கோட்டையிலே - தாயைக் காத்த தனயன் 1962- பாடியவர்கள் : பி.சுசீலா இசை : கே.வி.மகாதேவன் 02 காட்டுக்குள்ளே திருவிழா - தாய் சொல்லைத்த தட்டாதே 1962- பாடியவர்கள் : பி.சுசீலா - இசை : கே.வி.மகாதேவன்

தங்களுக்குப் பரிட்சயமானதாள வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தி வந்த இக்காலங்களில் மெல்லிசைமன்னர்கள் பொங்கஸ் என்ற லத்தீன் அமெரிக்க தாளக்கருவியை அதிகமாகப் பயன்படுத்தி தமிழ் சினிமாவின் இசைமுகத்தையே மாற்றிக்கொண்டிருந்தனர்.

அவர்களை பின்பற்றி கே.வி.மகாதேவனும் தனது பாடல்களில் பொங்கஸ் இசைக்கருவியின் நாதத்தைப் பின்னிப்பார்க்க விழைந்ததை அவரது பல பாடல்களில் கேட்கின்றோம். இதற்கு எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள். 01 நதி எங்கே போகிறது - இருவர் உள்ளம் 1962- பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.சுசீலா இசை : கே.வி.மகாதேவன் 02 எண்ணிரண்டு பதினாறு - அன்னை இல்லம் 1962- பாடியவர்கள் : டி.எம்.எஸ் + ஈஸ்வரி - இசை : கே.வி.மகாதேவன் 03 உன்னை அறிந்தால் நீ - வேட்டைக்காரன் 1966 - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை :கே.வி.மகாதேவன் 04 அழகு சிரிக்கின்றது - இருவர் உள்ளம் 1962- பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : கே.வி.மகாதேவன் 05 சித்திரை மாத நிலவினிலே - துளசிமாடம் 1965- பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன் 06 ஆடும் மயிலே ஆட்டம் எங்கே - துளசிமாடம் 1965- பாடியவர்கள் : டி.எம்.எஸ் - இசை : கே.வி.மகாதேவன். மெல்லிசைமன்னர்கள் இசையில் பொங்கஸ் இசைக்கருவி பயன்படுத்தப்பட்ட பாடல்களின் பட்டியலை இக்கட்டுரையின் பத்தாவது பகுதியிலும் , பொங்கஸ் வாத்தியம் பற்றிய செய்திகளை எனது நூலிலும் வாசிக்கலாம்.

சோற்றுப்பதமாகச் சில பாடல்கள் : 01 ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ் - என் கடமை [1964] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 போனால் போகட்டும் போடா - பாலும் பழமும் [1961] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 வந்த நாள் முதல் - பாவமன்னிப்பு [1961] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 அண்ணன் காட்டிய வழியம்மா - படித்தால் மட்டும் போதுமா [1961] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 மெல்ல நட மெல்ல நட - புதிய பறவை [1964] - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

அறுபதுகளின் முற்கூறிலும் நடுப்பகுதியிலும் அதிகமாக பொங்கஸ் தாளக்கருவியை மிக எழுச்சியுடனும் பயபடுத்தினார்கள் என்று சொல்லும் போது அதன் இனிய அதிர்வு லயத்தை வேறு சில தாளவாத்தியக்கருவிகளுடனும் பயன்படுத்தி தாளப்பயன்பாடுகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அந்த வகையில் மெல்லிசைக்கு புதுநெறி வகுத்தவர்களாக விளங்கும் மெல்லிசைமன்னர்கள் அவர்களது சமகாலத்தவர்களுடன் ஒப்பிடும் பொழுது ஈடிணையற்றவர்களாக விளங்குவதையும் காண்கிறோம். பொங்கஸ் தாளக்கருவி என்பது லத்தீன் அமெரிக்க இசைக்கருவி. அமெரிக்கக்கண்டத்திற்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட ஆபிரிக்க உழைக்கும் மக்களின் இசைக்கருவி. இத்தாளவாத்தியக்கருவி லத்தீன் அமெரிக்க இசையில் அதிக தாக்கம் விளைவித்த வாத்தியம். பொழுது போக்கு இசையிலும் ,வியாபார வெற்றியிலும் உலகைக் கலக்கிய தாள வாத்தியம்.

அந்த வாத்தியக்கருவியை நமது மரபுசார்ந்த தளங்களுடன் இணைத்த பெருமை மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையே சாரும். பாடல்களின் தாளங்களுக்கு பொருத்தப்பாடாக, ஆற்றொழுக்காக , ஒன்றை ஓன்று குழப்பாமல் , தெளிந்த ஓட்டத்தில் அதைக் கலந்து தந்த மெல்லிசைமன்னர்களின் பேராற்றல் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. எந்தவகையான பாடல்களாயினும் அவற்றிலெல்லாம் நுட்பமாயும் , நுண்கூர்மையுடனும் தந்த அவர்களது படைப்பாற்றல் அவதானம் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. திரைப்பட மெல்லிசைப் பாடல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட தாள வாத்தியக்கருவி தபேலா ஆகும். எல்லாவிதமான பாடல்களிலும் இவ்வாத்தியம் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த வாத்தியத்துடன் பொங்கஸ் வாத்தியத்தை மெல்லிசைமன்னர்கள் புயன்படுத்திய விதம் என்பது அவர்களது புதுமை வேட்கையை துலக்கமாகக் காண்பிக்கக் கூடியதாகும்.

விதம் , விதமான தாள வாத்தியங்கள் மூலம் தாள நடைகளை மாற்றி, மாற்றி போட்டு அவற்றை பாடல்களின் ஒருங்கிசைந்த சுவையின்பத்தின் அடிநாதமாக்கிக் காட்டினார். பொங்கஸ் மற்றும் தபேலா வாத்தியங்களை அற்புதமாகக் கலந்த பாடல்கள் சிலவற்றை இங்கே நோக்கலாம். பொங்கஸ் மற்றும் தபேலா இணைந்து வருகின்ற பாடல்கள் சில: 01 நினைக்காத தெரிந்த மனமே - ஆனதா ஜோதி [1962] - பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 01 பேசுவது கிளியா இல்லை - பணத்தோட்டம் [1962] - டி .எம்.எஸ் +பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 என்னை மறந்ததென் - கலங்கரை விளக்கம் [1965] - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் 03 ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் - சாந்தி [1967] - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் இந்தப்பாடல் பொங்கஸ் தாளத்துடன் ஆரம்பிக்கிறது இடையில் மட்டும் மிக அருமையாக தபேலா இணைந்து கொள்ளும் அழகோ அழகு! 04 யாருக்கு மாப்பிள்ளை யாரோ - பார்த்தால் பசி தீரும் [1962] - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 மதுரா நகரில் தமிழ்சங்கம் - பார் மக்களே பார் [1963] - பி.பி.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 என் கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் [1965] - டி.எம்.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன்

பலவிதமான தாள வாத்தியங்களை வைத்து வித்தியாசமான தாளநடைகளில் அமைந்த பாடல்கள் :

01 தாழையாம் பூமுடிச்சு - பாகப்பிரிவினை [1964] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 தொட்டால் பூ மலரும் - படகோட்டி [1964] - டி .எம்.எஸ் +பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி [1964] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 கட்டோடு குழலாட ஆட - பெரிய இடத்துப் பெண் [1964] - டி .எம்.எஸ் + சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 நான் மாந்தோப்பில் - எங்க வீட்டுப் பிள்ளை [1964] - டி .எம்.எஸ்+ ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டோலக் + தபேலா 06 தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி [1964] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டேப் + தபேலா 07 எல்லோரும் கொண்டாடுவோம் - பாவமன்னிப்பு [1961] - டி .எம்.எஸ்+ ஹனீபா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டேப் 08 தாயத்து தாயத்து - மகாதேவி [1957] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டேப் 10 தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி [1964] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டேப் + தபேலா.

தாம் அமைக்கும் மெட்டுக்களின் அமைப்பிற்குள்ளேயே அதன் உறுதிப்பாட்டில் நிலைகொண்ட வண்ணம் அதன் மையத்தைத் தழுவியும் ,சற்று விலகியும் தாளநடைகளை மாற்றியும் தங்கள் படைப்பாற்றல் மூலம் நெஞ்சை அள்ளும் பல பாடல்கள்தந்த அற்புதங்களையும் நாம் காண்கின்றோம். மனவெழுச்சிகளை வெளிப்படுத்துகின்ற இசையில் அதனுடன் இணைந்த உணர்ச்சி பாவங்களையும் பல வண்ணக்கலவையால் ஓவியத்தில் நீகழ்த்துவது போல விதம்விதமான வர்ணஜாலங்களாக விரைந்தெழுந்து,அவை மடமாறும் இடங்களில் ஒன்றை ஒன்று உறுத்தாமல் மடைமாறிச் செல்வதும் அதன் நேர்த்தியும் நம்மை வியக்க வைப்பதுடன் நம்மை இனம் புரியாத ரசபாவத்திற்கும் உள்ளாக்கும் அதிசயத்தையும் காண்கிறோம்.குறிப்பாக அந்தந்த கணங்ககளில் இசைநெறியில் சுழலவேண்டிய வாத்தியக்கருவிகளை வாசித்தளித்த இசைக்கலைஞர்களின் கைநேர்த்தியும் , அவர்களைக் கையாண்ட மெல்லிசைமன்னர்களின் கூர்மையான நோக்கும் கலைநேர்த்திமிக்கவையாகும்

இன்று அந்தப்பாடல்களை மீண்டும் பாடி புதிதாக ஒலிப்பதிவு செய்து வெளிவரும் இசைத்தட்டுக்களில் , இத்தனை துல்லியமான ஒலிப்பதிவுகள் , தொழில் நுட்பங்கள் இருந்த போதும் வாத்தியங்கள் மடைமாறும் இடங்களிலெல்லாம் இடறி விழுவதைக் கேட்கின்றோம். இத்தனை தொழில்நுட்பமில்லாத அந்தக்காலத்தில் அந்தக்கால வாத்தியக்கலைஞர்களின் ஞானமும் ,கைத்திறனும் எத்தகையது என்பதை வாத்தியக்கலைஞராகத் தனது வாழ்வை ஆரம்பித்த இளையராஜா பின்வருமாறு கூறுவார். “அண்ணன் விஸ்வநாதன் இசைக்குழுவிலிருந்த வாத்தியக்கலைஞர்களுக்கு கிட்ட போகவே பயமாக இருக்கும் ; அத்தனை திறமைசாலிகள் " என்பார். பாடல்களில் தாளம் மற்றும் மெட்டுக்களில் மாற்றங்களைகளைக் காட்டுவதன் மூலம் வெவ்வேறுவிதமான சூழ்நிலைகளை அதனூடே சிலசமயங்களில் வெவ்வேறு சமூக நிலைகளையும் வெளிப்படுத்தும் அழகையும் பல விதங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் :

01 எங்க வாழ்க்கையிலே - ஒன்று பட்டால் உண்டு வாழ்வு [1956] - சுசீலா + ஜமுனாராணி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 ஆடைகட்டி ஆடும் நிலவோ - அமுதவல்லி [1957] - டி .ஆர்.மகாலிங்கம் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

தாளநடைகளில் மாற்றங்களை தங்களது ஆரம்ப காலங்களிலேயே புது தினுசாக பரீட்சித்துப் பாரத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பதற்கு இந்தப்ப பாடலே சாட்சி என்று கூறி விடலாம். எத்தனை விதமான தாள நடைகள் எனபதை உற்றுக் கேட்டால் நாம் அனுபவிக்க முடியும். 03 மனம் கனிவான அந்த மங்கையை - இது சத்தியம் [1963] - டி எம் எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

என்னே , அற்புதமான பாடல் இது ! எத்தனை இனிமை என்று வியக்கின்ற பாடல்களில் இதுவும் ஒன்று ! அருமையான இந்தப்பாடலில் எத்தனை விதம் விதமான தாள நடைகள் பயன்டுத்தியிருக்கின்றார்கள். மெட்டு எப்படியெல்லாம் மாறி, மாறி ஜாலம் காட்டுகிறது! பாடலின் ஆரம்பம் தபேலா தாளத்துடன் ஆரம்பிக்கும் அழகும் , பல்லவி முடிந்து வருகிற பொங்கஸ் தாளம் என பாடல் முழுவது தபேலா, பொங்கஸ் வாத்தியங்களை வைத்து சுழன்று வரும் பாடலில் ஹம்மிங்கையும் இணைத்து மெல்லிசைமன்னர்கள் போதையூட்டுகிறார்கள். 04 நான் உயர உயர - நான் ஆணையிட்டால் [1964] - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் இந்தப்பாடலில் .. உயரும்போதுமயங்கி விடாமல் " என்ற இடத்தில் ஒரு மாறுதலும் பின்னர் " தாய்தந்தாள் பால் மயக்கம் " என்ற இடத்தில் ஒரு மாறுதலும் என பலவிதமான நடைகளுடன் பாடல் நளினம் காட்டும். 05 ஜவ்வாது மேடையிட்டு - பணத்தோட்டம் [1963] - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப்பாடலில் " நாகலிங்கப்பூ எடுத்து " என்ற இடத்தில் புதிய திருப்பம் காட்டும் இந்தப்பாடல். 06 நினைத்தால் சிரிப்பு வரும் - பாமா விஜயம் [1968] - சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் "ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா" என்ற பாடல் வரிகளில் மெட்டும் , தாளமும் மாறி விடும். 07 அடியே நேற்று பிறந்தவளே - என் தம்பி [1969] - சுசீலா + டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் 08 தேடி தேடி காத்திருந்தேன் - பெண் என்றால் பெண் [1969] - சுசீலா - இசை : விஸ்வநாதன் 09 தங்கத் தேரோடும் வீதியிலே - லட்சுமி கல்யாணம் [1968] - டி எம் எஸ் + சீர்க்ஸ்ழி - இசை : விஸ்வநாதன் 10 கண்களும் காவடி சிந்திக்கட்டும் - எங்க வீட்டுப் பிள்ளை [1964] - ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி - டோலக் + தபேலா

ஒரே பாடலுக்குள் பலவிதமான மெட்டு அடுக்குகளை வைத்து பல்வேறு இசைக்கார்வைகளை வித்தியாசமான தாளநடைகளிலும் அமைத்துக்காட்டி தனது படைப்பாற்றல் எல்லையற்றது என மெல்லிசைமன்னர் நிரூபித்த பாடல்கள் சில :

01 மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மக்களே பார் [1963] - பி.பி.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பெண் போனால் இந்த பெண் போனால் - எங்க வீட்டுப் பிள்ளை [1963] - டி .எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 தத்தை நெஞ்சம் முத்தத்தில் - சர்வர் சுந்தரம் [1965] - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 நான் உயர உயர போகிறேன் - நான் ஆணையிட்டால் [1968] - டி .எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் 05 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா [1969] - டி .எம்.எஸ் +பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் 06 ஒரு ராஜா ராணியிடம் - சிவந்த மண் [1969] - டி .எம்.எஸ் +பி. சுசீலா - இசை : விஸ்வநாதன் 07 முத்தமோ மோகமோ - பறக்கும் பாவை [1970] - டி .எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் 08 நினைத்தால் சிரிப்பு வரும் - பாமா விஜயம் [1968] - சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் 09 பாரதி கண்ணம்மா - நினைத்தாலே இனிக்கும் [1979] - எஸ்.பி.பி + வாணி - இசை : விஸ்வநாதன் 10 தங்கத் தோணியிலே - உலகம் சுற்றும் வாலிபன் [1973] - ஜேசுதாஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் 11 என் கேள்விக்கென்ன பதில் - உயர்ந்த மனிதன் [1967] - டி .எம்.எஸ்+ சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 11 நான் அளவோடு ரசிப்பபவன் - எங்கள் தங்கம் [1969] - டி .எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்

பாடல் அமைப்பு உத்திகளில் ஒரு பாடலின் முன்பகுதியை ஒரு பாடகரும் , பின்பகுதியை ஒரு பாடகரும் பாடும் வண்ணம் அமைத்து பாடலுக்கு சுவை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்கள். பின்னர் விஸ்வநாதன் தனியே பிரிந்து இசையமைத்த போதும் இந்த அமைப்பைப் பயன்படுத்தினார். அதற்கு சில உதாரணங்கள் :

01 வாராதிருப்பானோ - பச்சை விளக்கு [1957] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி [1964] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 மனம் கனிவான அந்த - இது சத்தியம் [1963] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 நான் மாந்தோப்பில் - எங்க வீட்டுப் பிள்ளை [1963] - டி .எம்.எஸ். +ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 மலர்ந்தும் மலராத - பாசமலர் [1961] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 கட்டோடு குழலாட ஆட - பெரிய இடத்து பெண் [1957] - டி .எம்.எஸ். + சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 பொன்னெழில் பூத்தது புதுவானில் - கலங்கரை விளக்கம் [1957] - டி .எம்.எஸ். + சுசீலா - இசை : விஸ்வநாதன் திரைக்காட் சிகளில் பயணம் செய்யும் போது பாடும் பாடல்களுக்குப் பொருத்தமாகவும் தாளங்களை அமைத்து பாடல்களில் அமைத்து பாடல்களின் இனிமையில் கரைத்து வெளியே தெரியாத வண்ணம் காட்டிய புதுமையின் முன்னோடிகள் தான் மெல்லிசைமன்னர்கள்! குதிரை வண்டி , மாட்டுவண்டி , புகையிரதம் , கார் எதையும் அவர்கள் தாளநடையில் காட்டினார்கள். குதிரை வண்டி: 01 அச்சம் என்பது மடமையடா - மன்னாதி மன்னன் [1960] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி . 02 வாழ்வது என்றும் உண்மையே - ராஜா மலையசிம்மன் [1960] - சீர்காழி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி . 03 அழகுக்கும் மலருக்கும் - நெஞ்சம் மறப்பதில்லை [1968 - பி.பி.எஸ் + ஜானகி - இசை : விஸ்வநாதன். ராமமூர்த்தி. 04 ஓகோ கோ மனிதர்களே - படித்தால் மட்டும் போதுமா [1968 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே வா [1968] - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன். மாட்டுவண்டி : 05 பாரப்பா பழனியப்பா - பெரிய இடத்துப் பெண் [1963] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - பாசம் [1962] - ஜானகி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ரயில் : 07 கேள்வி பிறந்தது அன்று - பச்சை விளக்கு [1964 ] - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 08 சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி [1969] - சுசீலா - இசை : விஸ்வநாதன். 09 கடவுள் ஒரு நாள் உலகைக்கான - சாந்தி நிலையம் [1969 ]- சுசீலா - இசை : விஸ்வநாதன்.

திரையில் இசை என்பது பாடல் மட்டுமே என்ற புரிதல் இருந்துவரும் சூழ்நிலையில் அதன் பல்வேறு பரிமாணங்களையும் காட்டி புதுமைசெய்தது மாத்திரமல்ல , இசைக்கும் மொழிக்குமான நெருக்கமான தொடர்பையும் அழகாக வெளிப்படுத்தினார்கள்.

என்ன தான் உயர்வான இசை இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் ஊடகமாக மொழி அத்தியாவசியமானதாகிறது. தமிழ் மொழிக்கும் இசைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை காலங்காலமாக பேசிவருகின்றனர்.அந்தவகையில் இசைக்கும் மொழிக்குமுள்ள நெருங்கிய தொடர்பு போலவே பாடலாசிரியர்களுக்கும் மெல்லிசைமன்னர்களுக்கும் நல்ல புரிதல் இருந்து வந்துள்ளது.


இயலும் இசையும் அல்லது இசையும் இயலும்

கண்ணதாசன் காலம் .

கருத்தாழமும் தத்துவார்த்த அறிவுக்கூர்மையுமிக்க பாடல்களை எழுதி புகழடைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் சொல்லும் முறையில் ஆழமான கருத்துக்களையெல்லாம் எளிமையாக எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசன் திரைப்பட நுழைவும் திராவிடக்கழக ஆதரவும் சமகாலத்தில் நிகழ்ந்தவை. அறிஞர் அண்ணா, எம்.ஆர்.ராதா ,கலைஞர் கருணாநிதி ,என்.எஸ்.கிருஷ்ணன் , எம்.ஜி.ஆர் என மிகப்பெரிய கலைஞர்கள் கூட்டமே தமிழ் திரையில் முகம் காட்டிய காலம்.

திராவிட இயக்கத்தின் செல்வாக்கு பின்னர் திராவிட முன்னேற்றக்கழகமாகி திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய காலம். இக்காலத்தில் அந்த இயக்கத்தின் முன்னணித் தலைவர்களுடன் நடப்பிலிருந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவரது வெற்றிக்கு அக்கட்சியின் செல்வாக்கும் முக்கிய காரணமாகியது. ஒருவரை ஒருவர் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது பிற்காலத்தில் வெளிப்பட்டது.

பெரியாரை கடுமையாக விமர்சித்து கடவுள் மறுப்பைத் துறந்து " ஒன்றே குலம் ஒருவனே தேவன் " என்று சமரசம் பேசிய அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னற்றக் கழகத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவனார் கண்ணதாசன். பிராமணிய எதிர்ப்பு , ஹிந்தி எதிர்ப்பு , நாத்திகம் , புராண எதிர்ப்பு , தனித்தமிழ் நாடு என்று கோசம் போட்டு வந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் கருத்துக்களை அவரது ஆரம்பகாலப் பாடல்கள் நன்கு வெளிப்படுத்தின. தனது சினிமாப்பாடல்களிலும் இவற்றை அவர் பிரதிபலித்தார்.

தி.மு.க இயக்கத்திலிருந்த காலத்திலேயே அவர் தனக்குத் தேவையான புகழையும் சம்பாதித்துக்கொண்டார். அந்த இயக்கத்தின் செல்வாக்கு காரணமாக அவர்களே தங்களுக்கு தாங்களே அறிஞர், கலைஞர் , கவிஞர் , புரட்சி நடிகர், இலட்சிய நடிகர், கலைவாணர் எனப் பட்டப் பெயர்களையும் சூட்டிக்கொண்டனர்.

இந்த கவிஞர் என்ற பட்டம் என்பது அவரது வாழ்நாள் வரையிலும் , ஏன் இன்றும் கூட அவருக்கு நிலைத்த பட்டமாயிற்று. இன்றும் கவிஞர் என்றால் அது கண்ணதாசனையே குறிக்கும் என்று எல்லோரும் நம்பும் அளவுக்கு அது நிலைத்து நிற்கிறது. அன்றைய சினிமாவட்டாரங்களில் கவிஞர் என்றால் கண்ணதாசனை மட்டும் கருதியதும் , மற்றவர்களை அவர்களின் பெயர்களுடன் [ உ+ம்: "கவிஞர் " வாலி ] அழைக்கப்பட்டதையும் நாமறிவோம்.

குறிப்பாக தி.மு.க பிராச்சாரம் செய்துவந்த திராவிட நாடு , தமிழரின் வீரம் , தமிழரின் காதல் , கொடை , வள்ளல் தன்மை போன்றவற்றை அவர் அதிகமாமகப் பாடினார். பத்து வருடங்களாகும் மேல் அந்த இயக்கத்தின் முக்கிய பங்காளியாக இருந்த அவர் ,தி.மு.க தலைவர்களின் நடவடிக்கைகளால் அதிர்ப்தியுற்றும் நாத்திகத்தின் மேல் வெறுப்பு கொண்டும் ஆத்திகராக மாறினார்.

பிராமணர் அல்லாத உயர் சாதியினரின் பணக்கார வர்க்கத்தை தி.மு.கவினர் பிரதிநித்துவப்படுத்தியதால் பெரும் பணக்காரத் திரைப்பட நிறுவனங்கள் தி.மு.க கலைஞர்களை ஆதரித்த நிலையில் , அதனூடே தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதில் மிகவும் முனைப்பாக இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தி.மு. கழகத்தினர் வெற்றிகண்டார்கள்.

வர்க்க அரசியல் பேசிய கம்யூனிச இயக்கத்தவர்கள் அற்புதமான கலைஞர்களைக் கொண்டிருந்த நிலையிலும் பெருநிதி மூலதன உதவியின்மையால் திரைத்துறையில் வெற்றிபெற முடியவில்லை.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கண்ணதாசன் இருவரும் புகழ்பெற்ற இக்காலத்தில் இரு முக்கிய இயக்கங்களின் செயல்பாட்டாளர்களாகவும் விளங்கினர்.

சமூகப் பிரச்சனைகளுக்கு ஆழமான கருத்துக்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தத்துவார்த்த ரீதியில் எளிமையாகக் கூறினார் என்றால் கண்ணதாசன் சமூக பிரச்சனைகளுக்கு மேலோட்டமான , சாதாரண மக்களை உடனடியாக ஆசுவாசப்படுத்தக்கூடியதுமான கருத்துக்களை எழுதினார். அதற்கு சிறந்த உகாரணம்

உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

என்ற வரிகள் சான்றாகும் . இந்த வரிகளைக் கேட்கும் ஒருவன் தன்னைவிட கஷ்டநிலையில் பலர் இருக்கிறார்கள் என்ற சமாதானத்திற்கு வரக்கூடும் என்பதை நாம் அறிவோம். அது ஒரு ஆறுதல் மட்டுமே! இது போன்ற பொய்யான ஆறுதல்களை கண்ணதாசன் பலபாடல்களில் வழங்கினார் என்று முனைவர். கோ.கேசவன் ஒரு கட்டுரையில் கூறியது என் ஞாபகத்திரு வருகிறது.

கண்ணதாசனின் கவிதைகள் பற்றிய பல்வேறு அரசியல்,சமூகம் சார்ந்த பலவிதமான கருத்துக்கள் வெளிவந்துள்ளன.அவை பெரும்பாலும் திரைப்பாடல்களுக்கு அப்பாலும் அவர் எழுதிய கவிதைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல்களில் அரசியல்சார்ந்து தத்துவார்த்தரீதியில் எழுதினார் என்றால் , அவருக்குப்பின் திரைப்படங்களில் ஆன்மிகம் சார்ந்த தத்துவச் செறிவுள்ள கருத்துக்களை எழுதியவர் கண்ணதாசன்.

வாழ்க்கையின் இன்பமும், துன்பமுமான பலவித சுவைகளை தனது எளிமைமிக்க , அழகுமிக்க , இனிய சொல்லோசைகளால் இசைப் பாடல்களை நிறைத்தவர் கண்ணதாசன் என்பதை யாரும் மறுக்க முடியாது.ஒரு வரம்பு கொண்ட சினிமாப்பாடல் அமைப்புக்குள், அதற்கு ஒத்திசைவான வரிகளை எழுதி தன்னைவிட யார் சிறந்தவன் இருக்க முடியும் என்று எண்ணத்தக்க பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்!

இனிய ஒலிகளையுடைய இசை எப்படி மக்களைக் கவர்கிறதோ அவ்வாறே கவிதையின் சொல்லோசை இனிமையும் மக்களை கவர்கிறது.கவிதையை படிக்கும் வாசகனின் உள்ளத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சியை விட , அவற்றை இசையுடன் கேட்கும் போது அவர்களை அறியாமலேயே அதனுடன் ஒன்றவைத்து விடுகிற ஆற்றல் இசைக்கு இருக்கிறது.

உருவமில்லாத இசை எவ்வளவு இனிமைமிக்கதாயினும் அதற்கான உருவத்தை பாடல்வரிகள் வழங்குகின்றன. அந்த ரீதியில் அந்த இனிய மெலோடியை எத்தனை நாளைக்கு ஒருவர் பாடிக்கொண்டு திரிய முடியும்? ஆனால் அந்த இசையுடன் பாடல்வரிகளை இணையும் போது கேட்ட நொடிகளிலேயே நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. உண்மையில் இசைதான் மக்களை உடனேயே கவர்கிறது என்றாலும் அதற்கிசைவான வரிகள் கிடைக்கும் போது அந்த இசையும் முழுமையடைகிறது.

நாம் என்னதான் பாடலற்ற மெட்டுக்களில் அல்லது வாத்திய இசையில் மயங்கினாலும் நமக்குப் புரியும் மொழியில் பாடலைக் கேட்கும் போதே தான் இசை முழுமையான திருப்தி கொடுக்கிறது. அதனால் தான் நாம் பெரும்பாலான பாடல்களை வானொலியில் மட்டுமே கேட்டு நம்மையறியாமல் பாடல்களை மனப் பாடமும் செய்கின்றோம்.

பட இயக்குனர்கள் விவரிக்கும் கதைசூழல் , நாயக , நாயகி உணர்வுநிலைகள் என்பவற்றை சரியாகப் புரிந்து கொண்டு இசையமைப்பாளர் தரும் இசைக்கு பொருத்தமான வரிகளை எழுதுவதில் கண்ணதாசன் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார். அதில் அவர் காட்டிய ஈடுபாடும் ,எழுதும் வேகமும்,நேர்த்தியும், வீச்சும் எல்லோரையும் வியக்க வைத்ததன். தனது திறமையும் அதில் தான் உண்டு என்பதையும் அவரே நம்பினார்.

இதை " இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு " என்று அவரே சொல்வார்.

தனது நண்பர் கலைஞர் கருணாநிதி போல படத்தில் வசனம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் திரைப்பட வாய்ப்புகளைத் தேடிய கண்ணதாசன் , அந்த வாய்ப்பு கிடைக்காததால் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். 1947 ஆம் வருடம் வெளிவந்த கன்னியின் காதலி படத்தில்

கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே

கடினப்படாமல் ஏதும் கைக்கு வராதது கஷ்டப்படுவார் தம்மை காய் நழுவாது அடுத்தடுத்து முயன்றால் ஆகாதது ஏது உனக்கு ஆகாதது ஏது

என்ற பாடல் வரிகளின் மூலம் தனது நிலையை வெளிப்படுத்துவது போல ஒரு பாடலை முதன் முதலாக எழுதினார். அதுவே அவரது முதல் பாடலாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து 1950 களின் நடுப்பகுதியில் குறிப்பிடத்தக்க நல்ல பல பாடல்களை எழுதினார் என்று முதல் அத்தியாயத்தில் சில பாடல்களைக் குறிப்பிட்டேன். ஆனாலும் கண்ணதாசனுக்கு நிலையான இடம், புகழ் அவர் மெல்லிசைமன்னர்களுடன் இணைந்த காலத்திலேயே கிடைத்தது என்பதை யாவரும் அறிவர்.

மெல்லிசைமன்னர்களின் எளிய , இனிய மெட்டுக்களுக்கு குறிப்பிடத்தக்க இனிய சொற்களுடன் கூடிய சந்தங்களை கண்ணதாசன் எழுதி பாடல் எழுதும் முறையில் புதுசாதனை உண்டாக்கினார். எத்தனையோ இனிமையான சந்த ஒழுங்குகளையெல்லாம் எழுதி தனக்கென புதிய நடையை உருவாக்கினார். அவர் எழுதிய பாடல்களில் மிக எளிமையான பல்லவிகளில் ஒலிகளின் தனிச்சிறப்பும் ,அதன் பின்னணியில் நுண்மையான குறியீட்டு தன்மையும் இணைந்திருப்பதை அவதானிக்கலாம். அந்த பாடல்களைக் கேட்கும் இசைரசிகர்கள் நாவில் அவை மிக இலகுவாக ஒட்டிக் கொள்ளும் தன்மையையும் நாம் காண முடியும்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து நம்மை அறியாமல் நமது செவிகளில் புகுந்து நினைவுகளில் நீக்கமற நிறைந்துவிட்ட ஏராளமான பாட்டுக்களை எழுதிய பெருமை கவிஞர் கண்ணனாதாசன் அவர்களை சாரும். பால்ய வயதில் இலங்கை வானொலி அலைகள் எங்கள் வானமண்டலம் எங்கும் நிறைத்த பெருந்தொகையான திரைப்பாடல்கள் அவர் எழுதியதே என்பதை பின்னாளில் புரிந்து கொண்டோம். பாடல்களுடன் சம்பந்தப்பட்ட இசைவாணர்களும் , கவிவாணர்களும் இசையென்னும் பேரின்பத்தில் மக்களை மிதக்க வைத்தனர.

பசுமரத்தாணி போல நம் நெஞ்சங்களின் நினைவடுக்ககுகளில் பதிந்த பாடல்கள் பல நினைவுகளை மலர்த்துவதையும் அவற்றின் இசையும்,ஒலியமைதியும் , பாடல்வரிகளின் எளிமையும், அழகும், அதில் ஊறிய இலக்கிய நயங்களும் இன்று நம்முள் கரைந்து கரையேற முடியாத வண்ணம் உடலெங்கும் ஓடுகின்றன.

நம் நினைவுகளைத் தேக்கி வைத்ததில் கண்ணதாசன் - விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைக்கு மிகப்பெரிய, அழிக்க முடியாத பங்குண்டு.

சினிமாவில் பாடல் எழுதுவோரை கவிஞர்கள் என்று அழைப்பதைவிட பாடலாசிரியர்கள் என்றழைப்பதுவே பொருத்தமானதாக இருக்கும். தன்னுணர்ச்சிப் பாடல்களை எழுதுவோர்களே பொதுவாக கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கண்ணதாசன் ஆற்றல் வாய்ந்த கவிஞர் எனபதால் சந்தேகமில்லையெனினும் , அவர் சினிமாவில் எழுதியதெல்லாம் பட இயக்குனர்கள் ., மாற்று தயாரிப்பாளர்கள் சொல்லும் கதை சூழ்நிலைகளுக்கு பொருத்தமான வரிகளேயாகும். அது கூட நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது வீதம் இசையமைப்பாளர்கள் கொடுக்கும் மெட்டுக்களுக்கே எழுதப்பட்டவையாகும். கவிஞர்களது சொந்த மனக்கருத்துக்களை யாரும் அங்கே எதிர்பார்ப்பதில்லை.

மரபு ராகங்களிலிருந்து இனிய ரசங்களைப் பிழிந்தெடுத்து இனிமைமிக்க மெட்டுக்களை உருவாக்குவதுதை மெல்லிசைமன்னர்கள் ஓர் புதிய இயக்கமாகத் தொடங்கினார்கள் என்றால் தமிழ்க்கவிதை மரபின் ஓசையழகையும் , கவிதையழகையும் ,வாழ்க்கையில் காணக்கூடிய , வாழ்வுடன் ஒட்டிய நிகழ்வுகளை எல்லாம் எளிய தமிழில் மிக எளிய சொற்களில் கட்டப்பட்ட பாடல் வரிகளால் கண்ணால் பார்ப்பதை எல்லாம் மனத்திரையில் புதிய காட்சி விரிவுகளாய் வடித்த பெருமை கவிஞர் கண்ணதாசனைச் சாரும்!

அந்தவகையில் கதாமாந்தர்களின் உணர்வுகளை உள்வாங்கி மின்னல் வெட்டுக்களாய் ஒருசில வரிகளிலேயே அனாயாசமாக பொதிந்து கொடுக்கும் ஆற்றல்மிக்கவராகக் கண்ணதாசன் சிறந்து விளங்கியதை அவர் எழுதிய ஏராளமான பாடல்களில் கேட்கிறோம்.

அவர் மெட்டுக்களுக்காக எழுதிய பல பல்லவிகளைக் கேட்டவுடன் நம் மனத்திரைகளில் எத்தனை அற்புதமான ஓவியங்களை தோற்றுவிக்கின்றன என்பதை நாம் உடனடியாகவே உணர்கின்றோம். நம் மனத்தில் அவை உண்டாக்கும் உணர்ச்சியலைகள் தான் எத்தனை எத்தனை!

கண்ணதாசன் தரும் சொற்களின் அடுக்கல்கள் , சொல்லோசைகள் , வரிகளில் இடையே நடனமாடிக்கொண்டிருக்கும் ஓசைநயங்கள் இசையுடன் ஒன்று கலந்து வரும் போது அதன் ஆற்றல்கள் வேறாகிவிடுகின்றன. அன்றாடம் நாம் பாவிக்கும் சொற்களுக்கு இத்தனை வலிமையுண்டா என்று நாம் வியக்கவைக்கவும் செய்கின்றோம். அவற்றை எத்தனை முறை கேட்டாலும் அந்த வியப்பு எப்போதும் புதிதாகவே அமைந்துவிடுகின்றன.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களின் பல்லவிகளைக் கேட்கும் போது பாடலின் குறிப்பாற்றலையும் , இன்பச்சுவையையும் கேட்டு இன்புறுகிறோம். அவை பலவிதமான உணர்ச்சியலைகளையும் நம்முள் எழுப்புவதை உணர்கிறோம்.

அவர் எழுதிய பல்லவிகளை தனியே வாசிக்கும் போதே மனதில் இன்ப உணர்வைக் கிளர்த்துவதாகவும் , அழகுணர்ச்சி மிக்கதாகவும் ,ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வலைகள் நம்முள் எழுவதை நாம் உணரமுடியும். அப்பர் எழுதிய " மாசில் வீணையும் மாலை மதியமும் " என்ற பாடலை வாசிக்கும்போதே மனதில் எத்தனை இன்பம் பிறக்கிறது ! அது போலவே கண்ணதாசனின் இனிய சொல்லோசைகள் மெல்லிசைமன்னர்களின் தேனினினும் இனிய இசையுடன் இணைந்து வரும் பொது அதன் இனிமையை சொல்லவும் வேண்டுமா !?

சில பாடல்களின் பல்லவிகள்:

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து விடிந்தும் விடியாத கலைப் பொழுதாக விளைந்த காலை அன்னமே நதியில் விளையாடி கொடியின் தலைசீவி நடந்த இளந்தென்றலே - வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொழிந்த தமிழ் மன்றமே…

01 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல- பாசமலர் 1961 - பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள்மொழி கூறும் பறவையின் ஒலி கேட்டேன் - உன் இறைவன் அவனே அவனே எனப்படும் மொழி கேட்டேன் - உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்.

02 ஆலயமணியின் ஓசையை - பாலும் பழமும் 1961 - பாடியவர்: சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

சொற்களின் மதிப்பும், ஒலியின்பமும், பாடல் ஒலிக்கும் காலச் சூழலை அற்புதமாகக் கண்முன் படம்பிடித்துக் காட்டுகின்றன.

மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தததும் நிலவாலே பொழுதும் விடிந்ததது கதிராலே - சுகம் பொங்கியெழுந்ததது நிலவாலே……

[ இந்தப்பாடலை இசையமைத்தவர் கே.வி.மகாதேவன்]

உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி… 03 உள்ளம் என்பது ஆமை - பார்த்தால் பசிதீரும் 1962 - பாடியவர்: டி. எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காற்றினிலே நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மனம் பெறுமோ வாழ்வே …. 04 செந்தமிழ் தென் மொழியால் - மாலையிட்ட மங்கை 1959 - பாடியவர்: டி. ஆர்.மகாலிங்கம் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல்களின் ஆரம்பங்களில் மட்டுமல்ல இடையில்வரும் வரிகளிலும் ஒளியூட்டும் அழகிய சொல்லோசைகளை எழுத்திச் சென்றார்.

கன்னித்தமிழ் கண்டதொரு திருவாசகம் கல்லைக்கனியாக்கும் ஒரு வாசகம் உண்டென்று சொல்வது உந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா இல்லையென்று சொல்வது உந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா … 02 கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா - ஆலயமணி 1962 - பாடியவர்: டி. எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும் படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடைமை நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது வீட்டின் தனியுடமை .. 01 கேள்வி பிறந்தது அன்று - பச்சை விளக்கு 1962 - பாடியவர்: டி. எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகை போல தெரியும் - அது நாட்பட நாட்படப் புரியும் … 02 உள்ளம் என்பது ஆமை - பார்த்தால் பசிதீரும் 1962 - பாடியவர்: டி. எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்றத்தாழ்வுகள் மனிதனின் ஜாதி பாரில் இயற்கை படைத்ததையெல்லாம் பாவி மனிதன் பிரித்து வைத்தானே.. 03 வந்த நாள் முதல் - பாவமன்னிப்பு 1961- பாடியவர்: டி. எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்… 04 மயக்கமா கலக்கமா - சுமைதாங்கி 1962 - பாடியவர்: பி.பி.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்தப்பாடல் வரிகளை பாடும் போது கல்நெஞ்சம் படைத்தவர்களின் இதயமும் உருகும்.அப்படிப்பட்ட இசை ! நூறுவகை பறவை வரும் கோடி வகை பூ மலரும் ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆடையின்றி பிறந்தோமா ஆசையின்றி பிறந்தோமா ஆடி முடிக்கையில் அள்ளிக் சென்றோர் யாருமுண்டோ.. 05 எல்லோரும் கொண்டாடுவோம் - பாவமன்னிப்பு 1961 - பாடியவர்: டி.எம்.எஸ் + ஹனீபா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

கீழ் வரும் பாடல்வரிகளை கேட்கும் போது பாடிய முறையும் ,பயன்படுத்தப்பட்ட ராகமும் மனத்தைக் கனிந்துருக வைக்கும். கன்னி மாலை கண்டும் இன்ப சோலை வந்தும் இன்னும் கோபம் என்ன மின்னும் நாணம் என்ன நாணத் தடை பிறந்த உள்ளமே -அதில் ஆசை மடைகடந்த வெள்ளமே - இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே இன்பம் பண்பாடுவோம் கண்ணே கண்ணா

நாமன்றி யார் அறிவார் அன்பே நாமன்றி யார் அறிவார் 06 நானன்றி யார் வருவார் - மாலையிட்ட மங்கை 1959 - பாடியவர்: டி.ஆர்.மகாலிங்கம் + கோமளா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

கட்டற்ற உத்வேகமும் , நெகிழ்ச்சியும் , மனவெழுச்சியும், இரக்கவுணர்வும் என பலவிதமான உணர்வுகளைத் தூண்டுவதுமான ஏராளமான பாடல்களை தந்த இணை என்றால் அது கண்ணதாசன் - மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையே என்பதில் கருத்து முரண்பாடு இருக்க முடியாது. கவிதையும் இசையும் ஒன்றுகலந்து வரும் போது இயல்பாக நெஞ்சில் பாய்ச்சி செல்லும் அதிர்வு அடர்த்தியை பலவிதமான பாடல்களில் கேட்கமுடியும். அது பாடலின் பல்லவியாக , அனுபல்லவியாக , சரணமாக அல்லது தொகையறாவாகக் கூட இருக்கலாம். அப்பாடல்களைக் கேட்கும் போது " வாழ்வு என்பது இத்தனை மகத்தானதா !? என்ற உணர்வு எழுவதும் , அதுமட்டுமல்ல இது போன்ற இனியபாடல்களைக் கேட் பதாலேயே வாழ்வு அர்த்தம் பெறுகிறது " என்பதையும் நாம் உணர முடிகிறது.

இவ்விதமாக உணர்வுகளை பாடல்வரிகள் ஏற்படுத்துகிறதா இல்லை அதற்கான இசை எழுப்புகிறதா என்று எழும் சிந்தனைக்கு இலகுவில் பதில் சொல்ல முடிவதில்லை.உள ஆற்றலை வசியம் செய்யும் இவர்களின் பாடல்கள் உருவமா , உள்ளடக்கமா என்ற கேள்விக்கே இடமற்று போக செய்யக்கூடியவையாக இரண்டறக்கலந்த ஒருமையில் ஒன்றி நிற்பவையாக உள்ளன!

1950 , 1960 களில் எழுந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் எழுச்சி தமிழ் திரைப்படங்களிலும் பிரதிபலித்தது. அதில் முக்கிய பங்காற்றிய நடிகர்கள் குறித்த புகழ்பாடல்கள் பழங்காலத்து தமிழ் மன்னர்களான சேர , சோழ , பாண்டிய மன்னர்களுக்கிணையாக ஒப்பிடப்பட்டன. இந்த புகழ்மாலைகளையெல்லாம் தனது வளர்ச்சிக்கு முறையாகப் பயன்படுத்திக் கொண்டவர் எம் ஜி ஆர் என்றால் மிகையில்லை. அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமை கருணாநிதியையும் ,கண்ணதாசனையுமே சாரும்.

கருணாநிதி கதை வசனத்தில் " பஞ் " டைலாக்ஸ் [ Punch Dialogues ] என இன்று பிரசித்தி பெற்ற ஒரு கதாநாயகன் புகழ் பாடும் முறையை ஆரம்பித்த முன்னோடி என்று அடித்துச் சொல்லலாம். கண்ணதாசனும் தான் வசனம் எழுதிய எம்ஜிஆர் படங்களில் அதை பின்பற்றினார். அவை கணிசமான அளவு ரசிகர்களின் செல்வாக்கையும் பெற்றது. திராவிட முன்னேற்றக கழக அரசியல் மேடைகளில் அடுக்கு வசனங்களை பேசி இந்த முறையை ஆரம்பித்து வைத்தவர் அண்ணாத்துரை ஆகும்.

இவ்விதம் தங்கள் கழகத்தைச் சார்ந்த நடிகர்கள் மீதான புகழைக் சினிமாப்பாடல் வரிகளில் ஏற்றியவர் கவிஞர் கண்ணதாசனே ! குறிப்பாக எம்ஜிஆர் குறித்த புகழை அவர் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாடல்களில் வெளிப்படுத்தினார். அதை எம்ஜிஆர் தனதுவெற்றிக்கான மூலதனம் ஆக்கினார். திரைப்பாடல்களில் எம்ஜிஆருக்கு அவை அழியாத புகழைக் கொடுத்தன.

கண்ணதாசன் எம்.ஜி.ஆர் புகழ்பாடி எழுதிய சில பாடல் வரிகள்

01 சேரனுக்கு உறவா செந்த்தமிழர் நிலவா [ பேசுவது கிளியா என்ற பாடல்கள் வரும் வரிகள் ]

02 உலகம் பிறந்தது எனக்காக [ இந்தப் பாடல் முழுதும் அவர் புகழ்படுவது போலவே இருக்கும் ]

03 உறவு சொல்ல ஒருவர் இன்றி வாழ்பவன் [ படம்: பாசம் ]

04 மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் [ உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் ]

இவை மாத்திரமல்ல கே .வி.மகாதேவன் இசையில் தேவர் தயாரித்த " த " , "தா " வரிசைப்படங்களில் வெளிவந்த பல பாடல்களிலும் கண்ணதாசன் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம்.ஜி.ஆர் புகழ்பாடி பல பாடல்களை எழுதினார்.

பின்னாளில் கவிஞர் வாலி முன்னிலைப்படுத்தப்பட்டு , அப்பட்டமாக எம்.ஜி.ஆர் புகழ்பாடி ஏராளமான பாடல்களை எழுதி புகழ்பெற்றார். இதனை வைத்து சிலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் இவர்களை போல எம்.ஜி.ஆர் புகழ்பாடி பாடல்கள் எழுதினார் என்று கூறத் தலைப்படுகின்றனர்.

உண்மையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல்களில் பொதுவுடமைக் கருத்துக்களையே எல்லோருக்கும் எழுதினார். தத்துவப் பாடல்களில் மட்டுமல்ல காதல் பாடல்களிலும் எழுதினார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல தான் எழுதிய படங்களில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் கதை சூழலுக்கு ஏற்ப தனது கருத்தையே பிரதானப்படுத்தி எழுதினார். எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அப்பாடல் அதிகம் புகழ் பெற்றதால் பலரும் அப்படி நினைக்கிறார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது கொள்கைகளில் பிடிவாதமிக்கவராகவே வாழ்ந்தார்.

மெட்டுக்களுக்கு சொற்களை இட்டு நிரப்பும் திரைப்பாடல் முறைக்குள் கவிஞர் கண்ணதாசன் தான் உணர்பவற்றை மிக பொருத்தமாக எழுதினாலும் பொருட்செறிவற்ற வரிகளும் ஆங்காங்கே இட்டு நிரப்பட்டன என்ற குற்றச்சாட்டும், ஓசைநயத்திற்காக எழுதப்படும் சிலவரிகள் இசைக்கு பொருத்தமாக இருப்பினும் பொருட்செறிவற்ற பாடல்வரிகளையும் எழுதியதாக குற்றச்சாட்டுகள் அவர் மீது விழவும் செய்தன.

"கட்டோடு குழலாட ஆட கண்ணென்ற மீனாட ஆட " என்ற பாடலில் பச்சரிப் பல் ஆட பம்பரத்து நாவாட " என்று இளம் பெண்கள் பாடும் பாடலில் " பல்லாட " வரிகள் பல்லாடுவது கிழவிகளுக்கே என்றார் காமராசன்.

" இழுக்குள்ள பாட்டு இசைக்கு நன்றடா: அதை ஒன்றும் கண்டுகொள்ளாதே "

கண்ணதாசனின் பாடல் எழுதும் முறை பற்றி அவருடன் நெருங்கிப்பழகிய இசையராஜா பின்வருமாறு கூறுகிறார் ;

“அவரது வார்த்தைகளை இசையை விட்டு பிரித்துப்பார்க்க முடியாது.சிலவேளைகளில் அர்த்தம் முன்னே , பின்னே இருக்கலாம் ;அர்த்தம் இருக்கோ இல்லையோ!.. ஏதாவது குற்றம் என்றால் " அண்ணா அந்த Lines ஒருமாதிரி இருக்குது என்றால் , " இழுக்குள்ள பாட்டு இசைக்கு நன்றடா: அதை ஒன்றும் கண்டுகொள்ளாதே ", சிலவேளை நிரப்புவதற்காக சில சொற்களை போடவேண்டியிருக்கும் அப்போது அப்படி சொல்லுவார்.அவர் பாடல் எழுத யோசிக்கவே மாட்டார்!”

ஆனாலும் 1960களிலேயே மெல்லிசைமன்னர்களின் எளிய , இனிய மெட்டுக்களுக்கு குறிப்பிடத்தக்க இனிய சொற்களுடன் கூடிய சந்தங்களை கண்ணதாசன் எழுதி பாடல் எழுதும் முறையில் புதுசாதனை உண்டாக்கினார். எத்தனையோ இனிமையான ச ந்த ஒழுங்குகளையெல்லாம் எழுதி தனக்கென புதிய நடையை உருவாக்கினார். அவர் எழுதிய பாடல்களில் மிக எளிமையான பல்லவிகளில் ஒலிகளின் தனிச்சிறப்பும் , அதன் பின்னணியில் நுண்மையான குறியீட்டு தன்மையும் இணைந்திருப்பதை அவதானிக்கலாம். அந்த பாடல்களைக் கேட்கும் இசைரசிகர்கள் நாவில் அவை மிக இலகுவாக ஒட்டிக் கொள்ளும் தன்மையையும் நாம் காண முடியும்.

கட்டற்ற உத்வேகம் , நெகிழ்ச்சி , மனவெழுச்சி, இரக்கவுணர்வு என பலவிதமான உணர்வுகளைத் தூண்டுவதுமான ஏராளமான பாடல்களை தந்த இணை என்றால் அது கண்ணதாசன் - மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையே என்பதில் கருத்து முரண்பாடு இருக்க முடியாது. கவிதையும் இசையும் ஒன்றுகலந்து வரும் போது இயல்பாக நெஞ்சில் பாய்ச்சி செல்லும் அதிர்வு அடர்த்தியை பலவிதமான பாடல்களில் கேட்கமுடியும். அது பாடலின் பல்லவியாக , அனுபல்லவியாக , சரணமாக அல்லது தொகையறாவாகக் கூட இருக்கலாம். அப்பாடல்களை கேட்கும் போது " வாழ்வு என்பது இத்தனை மகத்தானதா !? என்ற உணர்வு எழுவதும் , அதுமட்டுமல்ல இது போன்ற இனியபாடல்களைக் கேட்பதாலேயே வாழ்வு அர்த்தம் பெறுகிறதோ “என்ற எண்ணம் எழுவதையும் உணர்கிறோம்.

இவ்விதமாக உணர்வுகளை பாடல்வரிகள் ஏற்படுத்துகிறதா இல்லை அதற்கான இசை எழுப்புகிறதா என்று எழும் சிந்தனைக்கு இலகுவில் பதில் சொல்ல முடிவதில்லை.உள ஆற்றலை வசியம் செய்யும் இவர்களின் பாடல்கள் உருவமா , உள்ளடக்கமா என்ற கேள்விக்கே இடமற்று போக செய்யக்கூடியவையாக இரண்டறக்கலந்த ஒருமையில் ஒன்றி நிற்பவையாக உள்ளன!

தனியே ஒரு பாடலை பாட்டுப்புத்தகத்தில் வாசிக்கும் பொழுது அறிவுபூர்வமாக மட்டுமே வாசிக்க முடியும். ஆனால் அதனை இசையுடன் பாடும் பொழுது அடிமன உணர்வலைகள் வேறுவிதமாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும். இசையின் அசைவுகள் செறிவான உணர்வலைகளைத் தந்து நமது உடலையே அசையச் செய்கிற ஆற்றலை நாம் உணர முடியும்.இசையுடன் பாடப்படும் வரிகளின் அர்த்தம் நம்மையும் ஈர்த்து நம்மைத் தனதாக்கிக் கொள்கிறது.

மனத்தளைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக உணரவும் , இறுகிய மனநிலைகளை உடைத்து பூரண விடுதலையுணர்வையும், உடலுக்கு புத்துணர்வு , உயிரோட்டத்தையும் வழங்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. மெல்லிசைமன்னர்களின் இசையும் கண்ணதாசனின் வரிகளும் இணையும் போது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத பல உணர்வுகள் நம் உள்ளத்தில் மலர்வதை பல பாடல்களில் அனுபவித்திருக்கின்றோம்.

தனக்குச் சொல்லப்படும் காட்சிகளுக்கேற்ற எண்ணற்ற பாடல்களை எழுதிய கண்ணதாசன் அவற்றை தெளிவாக விளக்கும் அழகுணர்ச்சிமிக்க பாடல்களை மிக எளிமையாக சாதாரண மக்களும் எளிதில் புரியும் வண்ணம் தந்தது மட்டுமல்ல , பழந் தமிழ் இலக்கியம் என்று படித்தவர்களால் மட்டும் பேசப்பட்டு வந்த இலக்கியங்களையெல்லாம் பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் எளிய தமிழில் தந்தார். அவை தகுந்த வாய்ப்புகள் கிடைத்த போது அவரது வார்த்தைகளில் பீறிட்டுப் பாய்ந்தன. தனது எழுத்தின் ரகசியம் பற்றி பின்வருமாறு கண்ணதாசன் கூறுகிறார்

// இளம் பருவத்திலேயே தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். மிகவும் சிறிய பிராயத்தில்கூட கடினமான தமிழ் இலக்கியங்களைக் குருட்டுத் தனமாக மனப்பாடம் செய்வது என் வழக்கம். பொருள் புரிகிறதோ இல்லையோ , ஓசை நயத்துக்காகப் பாடல்களை படிப்பது என் சுபாவமாக இருந்தது. அதே சமயம் தெளிவான உரைகள் கிடைத்தால் பொருளையும் புரிந்து கொண்டிருக்கிறேன். நல்ல பருவத்தில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், நாளடைவில் வளர்ந்து, என்னை ஓரளவுக்கு இலக்கிய அறிவுள்ளவனாக ஆக்கிற்று. ..பண்டிதர்களின் உரைநடையால் சாதாரண மக்களுக்குப் புரியாமல் போய்விட்ட விஷயங்களையே எனது எளிய நடையில் எழுதினேன்..// .. கண்ணதாசன் [ நான் ரசித்த வர்ணனைகள் ]

பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் , பொதுமக்கள் சார்ந்த மக்கள் இலக்கியங்களிலிருந்தும் , வட்டார வழக்குகளிலிருந்தும் என பல்வகை மூல ஊற்றுக்களிலிருந்து தனக்கு வேண்டியவற்றை தாம் படித்தவற்றை நினைவிலிருந்தும் அவர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் திரைப்பாடல்களாய் அள்ளி வீசினார்.அவை அவர் எழுதிய பல்வகைப்பாடல்களிலும் விரவிக்கிடக்கின்றன. அவர் எழுதிய பல்வகைப்பாடல்கள் அவற்றில் மெல்லிசைமன்னர்களின் இசையில் மட்டும் வெளிவந்த பாடல்கள் இங்கே தரப்படுகிறது

தாலாட்டு

01 சிங்கார புன்னகை - மஹாதேவி 1957 - பாடியவர்: எம்.எஸ் . ராஜேஸ்வரி + பாலசரஸ்வதி - இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 மனம் ஒன்றே பெரிதெனக் கொண்டு - மஹாதேவி 1957 - பாடியவர்: டி.எஸ்.பகவதி - இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 தென்றல் வந்து வீசாதோ - சிவகங்கை சீமை 1959 - பாடியவர்: எஸ்.வரலட்சுமி + கோமளா - இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 மழை கூட ஒருநாளில் தேனாகலாம் - மாலையிட்ட மங்கை 1959 - பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி - இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 ஏன் பிறந்தாய் மகனே - பாகப்பிரிவினை 1959 - பாடியவர்:டி.எம் .எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 சின்னஞ் சிறு கண்மலர் - பதிபக்தி 1959- பாடியவர்: பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 07 நீரோடும் வைகையில் - மன்னாதிமன்னன் 1960 - பாடியவர்:டி.எம் .எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 08 சொல்லடா வாய் திறந்து - நீல வானம் 1967 - பாடியவர்: பி.சுசீலா - இசை :விஸ்வநாதன்

சோகம் 01 சிரிக்க சொன்னார் சிரித்தேன் - கவலையில்லாத மனிதன் 1960 - பாடியவர்:பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பெண் பார்க்க மாப்பில்லை - கவலையில்லாத மனிதன் 1960 - பாடியவர்:கே.ஜமுனாராணி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 காவிரித்தாயே காவிரித்தாயே - மன்னாதிமன்னன் 1960 - பாடியவர்:கே.ஜமுனாராணி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 கண்கள் இரண்டும் என்று - மன்னாதிமன்னன் 1960 - பாடியவர்: பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 ஆத்தோரம் மணலெடுத்து - வாழ்க்கை வாழ்வதற்கே 1963- பாடியவர்:பி.பி.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 என்னை யாரென்று எண்ணி எண்ணி - பாலும் பழமும் 1961 - பாடியவர்:டி.எ.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 எங்கிருந்தாலும் வாழ்க - நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 - பாடியவர்: ஏ.எல்.ராகவன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 07 என்ன நினைத்து என்னை - நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 08 சொன்னது நீதானா - நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 09 காதலிலே பற்றுவைத்தாள் அன்னையடா - இது சத்தியம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 10 அவள் பறந்து போனாளே - பார் மகளே பார் 1963 - பாடியவர்:டி.எம் .எஸ் + பி.பி.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பார் மகளே பார் - பார் மகளே பார் 1963 - பாடியவர்:டி.எம் .எஸ்- இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 கண்களே கண்களே - காத்திருந்த கண்கள் 1962 - பாடியவர்: பி.பி.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 நெஞ்சம் மறப்பதில்லை நெஞ்சம் மறப்பதில்லை 1962 - பாடியவர்: பி.பி.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 மலரே நீ சொல்ல ஒரு - கொடிமலர் 1965 - பாடியவர்: பி.சுசீலா - இசை : விஸ்வநாதன்

வீரம்

01 வீரர்கள் வாழும் - சிவகங்கை சீமை 1958 - பாடியவர்: டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 அச்சம் என்பது மடமையடா - மன்னாதி மன்னன் 1960 - பாடியவர்: டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 அதோ அந்த பறவை போல - ஆயிரத்தில் ஒருவன் 1965 - பாடியவர்: டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 எங்கள் திராவிடப் பொன்னாடே - மாலையிட்ட மங்கை 1959 - பாடியவர்: டி.ஆர் .மகாலிங்கம் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

காதல்

01 ஏழை நின் கோவிலை - பணம் 1954 - பாடியவர்: ஜி.கே.வெங்கடேஷ் + வசந்தகுமாரி - இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 கூவாமல் கூவும் கோகிலம் - வைரமாலை 1955 - பாடியவர்: லோகநாதன் + வசந்தகுமாரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 கண்மூடும் வேளையிலும் - மஹாதேவி 1957 - பாடியவர்: ஏ.எம்.ராஜா + பி.சுசீலா - இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 கனிய கனிய மழலை பேசும் - மன்னாதிமன்னன் 1960 - பாடியவர்:டி.எம் .எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 நான் பேச நினைப்பதெல்லாம் - பாலும் பழமும் 1961 - பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 பேசுவது கிளியா - பன்மத்தோட்டம் 1956 - பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 07 மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மகளே பார் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 08 அன்று வந்ததும் இதே நிலா - பெரிய இடத்து பெண் 1962 - பாடியவர்:டி.எம் .எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 09 போக போக தெரியும் - சர்வர் சுந்தரம் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 10 பால் வண்ணம் பருவம் - பாசம் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 11 என்னைத் தொட்டு - பார்மகளே பார் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 12 நாணமோ இன்னும் - ஆயிரத்தில் ஒருவன்1965 - பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

தத்துவம்

01 அண்ணன் என்னடா தம்பி என்னடா - பழனி 1965 - பாடியவர்:டி.எம் .எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 போனால் போகட்டும் போடா - பாலும் பழமும் 1961 - பாடியவர்:டி.எ.எஸ் + பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 கண்ணிலே நீர் எதற்கு - போலீஸ்காரன் மகள் 1962 - பாடியவர்: சீர்காழி + ஜானகி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 ஆறுமனமே ஆறு - ஆலயமணி 1963 - பாடியவர்:டி.எ.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 பிறக்கும் போதும் அழுகின்றாய் - கவலையில்லாத மனிதன் 1960 - பாடியவர்: ஜே.பி சந்திரபாபு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

நகைச்சுவை

01 நீயே எனக்கு என்றும் - பலே பாண்டியா 1962 - பாடியவர்:டி.எம் .எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 சிரிப்பு வருது சிரிப்பு வருது - ஆண்டவன் கட்டளை 1962 - பாடியவர்:ஜே.பி.சந்திரபாபு - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 தந்தனா பாட்டு பாடணும் - மகாதேவி 1957 - பாடியவர்: சீர்காழி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 கோமாளி கோமாளி - படித்தால் மட்டும் போதுமா 1963 - பாடியவர்:ஜி.கே.வெங்கடேஷ் + ஏ.எல் .ராகவன் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 காதலிக்க நேரமில்லை - காதலிக்க நேரமில்லை 1964 - பாடியவர்: சீர்காழி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 பாரப்பா பழனியப்பா - பெரிய இடத்துப் பெண் 1963 - பாடியவர்: டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

கால அளவில் நோக்கும் போது கண்ணதாசன் - விஸ்வநாதன் ராமமூர்த்தி , பின்னர் கண்ணதாசன் - விஸ்வநாதன் இணையின் தொடர்ச்சி 1950 களில் தொடங்கி 1980கள் வரையான மூன்று தசாப்தங்களின் வெற்றிக்கூட்டணியாக திகழ்ந்தது. வெவ்வேறு காலகட்டங்களில் அவர்கள் எத்தனையோ இனிமைமிக்க பாடல்களை வழங்கினார்கள் என்பதை எண்ணிபார்க்கும் போது வியப்பும் மலைப்பும் ஏற்படும். அதுமட்டுமல்ல கண்ணதாசன் வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஏராளமான பாடல்களைஎழுதியதையும் நாம் மறக்க முடியாது.

கண்ணதாசன் புகழின் உச்சியிலே இருந்த காலத்தில் வேறு பல கவிஞர்களும் தமிழ் திரைப்படங்களில் நல்ல, நல்ல பாடல்களை எழுதி தங்களது திறமையை நிலைநாட்டினர். பெரும் புகழ் பெற்ற பல பாடல்களை அவர்கள் எழுதினாலும் பெரும்பாலும் அவர்களின், பாடல்களையும் கண்ணதாசனே எழுதினார் என்றே நினைக்கும் வண்ணம் கண்ணதாசனின் புகழ் ஓங்கியிருந்தது. அவர்களில் வாலி. அவினாசிமணி , பூவை செங்குட்டுவன் , புலமைப்பித்தன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். வாலி தவிர்ந்த மற்றவர்கள் எழுதிய சில பாடல்களை பாருங்கள்:

பூவை செங்குட்டுவன்

01 நான் உங்க வீட்டுப்பிள்ளை - புதிய பூமி 1967 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் 02 ராதையின் நெஞ்சமே - கனிமுத்துப்பாப்பா 1970 - சுசீலா - இசை : டி.வி.ராஜு 03 வானம் நமது தந்தை - தாகம் 1970- எஸ்.ஜானகி - இசை :எம்.பி.ஸ்ரீநிவாசன் 04 காலம் எனக்கொரு பாட்டெழுதும் - பௌர்ணமி 1971 - எஸ்.பி.பி - இசை :ஜி.கே.வெங்கடேஷ் 05 திருப்பரம் குன்றத்தில் - கந்தன் கருணை 1967 - சுசீலா + சூலமங்கலம் - இசை :மகாதேவன் 06 திருப்புகழைப் பாட பாட - கௌரி கல்யாணம் 1966 - சுசீலா + சூலமங்கலம் - இசை :விஸ்வநாதன்

அவினாசிமணி

01 காலத்தை வென்றவன் நீ - அடிமைப்பெண் 1969 - சுசீலா + ஜானகி - இசை : கே.வி.மகாதேவன் 02 ஒளி பிறந்த போது - கன்னிப்பெண் 1969 - ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் 03 இவ்வளவு தான் உலகம் - இவ்வளவு தான் உலகம் 1969- டி.எம்.எஸ் + ஈஸ்வரி - இசை :விஸ்வநாதன்

புலமைப்பித்தன்

01 நான் யார் நான் யார் - குடியிருந்த கோயில்1967 - டி.எம்.எஸ் - இசை :விஸ்வநாதன் 02 ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண் 1969 - எஸ்.பி.பி.+ சுசீலா - இசை :கே.வி.மகாதேவன் 03 இந்தப் பச்சைக்கிளிக்கொரு- நீதிக்குத் தலை வணங்கு 1976 - ஜேசுதாஸ் - இசை :விஸ்வநாதன் 04 பகை கொண்ட உள்ளம் - எல்லோரும் நல்லவரே 1974 - ஜேசுதாஸ் - இசை :வி.குமார்

இவர்களில் கவிஞர் வாலி , கண்ணதாசன் காலத்திலேயே அவருக்கு நிகராக பாடல்கள் எழுதியவர். ஓவிய ஆற்றல்மிக்கவராகத் திகழ்ந்த வாலி தனது இலக்கிய ஆற்றலால் 1960 களில் மெல்லிசைமன்னர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு புகழ் பெற்றார்.

1990 களுக்குப் பின் கவிஞர் வாலி எழுதிய சில பாடல்கள் அவர் மீதான எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கியிருந்தன.ஆனாலும் 1960களில் மெல்லிசைமன்னர்களின் இசையில் அவர் எழுதிய பாடல்களை எண்ணிப்பார்க்கும் போது அப்பாடல்களின் இனிமை அதன் சொல்லோசைகள் குறித்த பிரமிப்பும் நமக்குள் ஏற்படும்.

அக்காலத்தில் வெளிவந்த , மெல்லிசைமன்னர்களின் இனிய இசையில் கவிஞர் வாலி எழுதிய பாடல்களையும் குறித்து எழுதாமல் இக்கட்டுரைகள் நிறைவடையாது என்பது உண்மையாகும். அந்தக்காலத்தில் வாலி எழுதிய பாடல்கள் பலவற்றைக் கண்ணதாசனே எழுதினார் என்றே பலர் நினைத்தனர். அதற்கான அடிப்படைக்காரணமே மெல்லிசைமன்னர்களின் இனிய இசையில் அவை வெளிவந்தததும் தான்! அது பற்றி எழுதுவதற்கு காரணமே மெல்லிசைமன்னர்களின் இனிய இசைதான் என்று சொல்வேன்.


இசை சாம்ராஜ்ஜியத்தில் புதிய கவிஞன்.

தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன் ..

மற்றும்

என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் அவருவாண்டி ….

என்று அற்புதமான பாடல் வரிகளை ஒரு புதுக்கவிஞர் எழுதினார்.

அவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,கண்ணதாசன் போன்றோரைத் தொடர்ந்து தமிழ் திரைப்பாடல் எழுதுவதில் அவர்களின் தொடர்ச்சி என நிரூபித்து நிலைபெற்றார். அவர்தான் கவிஞர் வாலி ! கவிஞர்கள் கண்ணதாசன் , வாலி என் இரு கண்கள் என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நெற்றிக்கண் என்பார் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.

எம்.ஜி. ஆர் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தினருடனான முரண்பாடுகளால் அவ்வப்போது விலகியும் , ஒதுங்கியும் இருந்த கண்ணதாசன் எம்.ஜி ஆர் சார்ந்த தி.மு. க வினரின் அரசியல் கருத்துக்களை எழுதாமல் இருந்த நிலையில் நேரடியாக எம்.ஜி.ஆர் - தி.மு.க புகழ் பாடும் பாடலாசிரியராக வாலி அமைந்தார்.

திரைப்பாடல் எழுத்துமுறையில் கண்ணதாசனின் பாணியைக் கைக்கொண்ட கவிஞர் வாலி தனக்கான ஓர் தனியிடத்தையும் பிடித்துக் கொண்டார்.ஒரு காலகட்டத்தில் யார் எந்தப்பாடலை எழுதினார் என்று சொல்ல முடியாத வகையில் பல பாடல்கள் அமைந்தன. அரசியல் கருத்துக்கள் மற்றும் தத்துவப்பாடல்கள் என்ற வகையில் பட்டுக்கோட்டையின் பாணியைச் சாராமல் முற்றுமுழுதாகவே கண்ணதாசனின் எளிமையான முறைகளையும் கவிஞர் வாலி பின்பற்றினார்.

சில படங்களில் கண்ணதாசனும் , வாலியும் தனித்தனியே முழுப்பாடல்களை எழுதி தமக்கான அடையாளமாக இது இன்னாரின் பாடல்கள் என்று அடையாளம் காணும் வகையில் பாடல்களை எழுதினர்.குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் பாடல்கள் முழுவதும் கவிஞர் வாலியால் எழுதப்பெற்று புகழ் சேர்த்தன.

தி.மு.க அரசியலில் முரண்பாடுகள் இருந்தாலும் எம்.ஜி.ஆருடனான தனிப்பட்ட பிரியமும் , நட்பாலும் சில சமரசங்களுக்கு பின்னர் எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார். ஒரு படத்தில் கண்ணதாசனும் , வாலியும் எழுதிய போது எந்தப்பாடலை யார் எழுதினார் என்று சொல்ல முடியாத மயக்கம் தரும் ஒற்றுமை இருந்தது.

இருவரும் எழுதிய பாடல்கள் மெல்லிசைமன்னர்களின் இனிய இசையில் வந்ததால் அவர்களுக்கிடையேயான வேறுபாடுகளை யாராலும் குறிப்பாக இனம் காணமுடியாமல் போயிற்று. அதுமாத்திரம் அல்ல சிறந்த இனிய பாடல்கள் எல்லாம் கண்ணதாசனுடையவை என்ற மயக்கம் எல்லோரிடமும் இருந்ததாலும் , வாலியும் அவர் பாணியைப் பின்பற்றி எழுதியதால் அந்த மயக்கம் தவிர்க்க முடியாததாயிற்று.

`வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை'- நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. என்று கவிஞர் கண்ணதாசன் கூறினார் என்பார் கவிஞர் நா.காமராசன்.

இன்றும் பலர் கவிஞர் வாலி எழுதிய பாடல்களை கண்ணதாசன் எழுதியதாக நினைப்பது சகஜமாக உள்ளது. சில சமயங்களில் அந்தப்பாடல்களை இசையமைத்த மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூட சில இசை நிகழ்ச்சிகளில் வாலி முன்னைனையிலேயே இது கண்ணதாசன் எழுதிய பாடல் என்று சொன்னதுண்டு. அதே மேடையில் அந்தப்பாடல்களை நான் தான் எழுதினேன் என்று வாலி திருத்தியதுமுண்டு.

இவ்விதம் கண்ணதாசன் புகழ் எப்படிப்பட்டது என்பதை கவிஞர் வாலியே ஒருமுறை " தமிழ்நாட்டில் கம்பராமாயணம் , திருக்குறள் தவிர மற்ற எல்லா நூல்களையும் கண்ணதாசனே எழுதினார் என்று மக்கள் நம்புகிறார்கள் " என்று நகைச்சுவையாய் கூறினார்.

அதுமட்டுமல்ல ,கண்ணதாசன் கவிதையின் ஆதிக்கம் ,செல்வாக்கு போன்றவை மக்கள் மத்தியில் மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கின . அவர் தனது பாடல்களில் பயன்படுத்திய சொல்லோசைகள் , மொழிவழக்குகள் ,நடை என்பவை இயல்பானதாகவும்,கவர்ச்சிகரமானதாகவும் இருந்ததால் அவர் எழுதும் பாடல்வரிகள் புதிய படங்களின் தலைப்பாகவும் , கதை , கவிதை நூல்களின் தலைப்புகளாகவும் வெளிவர ஆரம்பித்தன.

நடிகர்களின் புகழ் பாடுவதை பாடலாசிரியர்கள் ஆரம்பித்து வைத்தார்கள் என்பதும் அது 1960களில் உச்சம்பெறுவதையும் காண்கிறோம். கண்ணதாசன் கணிசமான அளவு ஆரம்பித்தார் என்றால் கவிஞர் வாலி அதை முழுமூச்சாக செய்தார். எம்.ஜி.ஆர் பற்றிய புகழாராத்தை வெளிப்படையாக எழுதினார். " எம்.ஜி.ஆர் பற்றிய புகழை நான் பாடினேன் என்றால் அவர் , தி.மு.க வில் இருந்த காலத்தில் தான் தி.மு.க வின் கருத்துக்களைத் தான் பாடினேன்.ஏனென்றால் எனது வளர்ச்சிக்கு உதவியது திராவிட முன்னேற்றக கழகமே "என்று கவிஞர் வாலி பகிரங்கமாவே கூறினார்.

பொதுவாக நடிகர்கள் அதிக புகழ் பெற்றதாலும் அவர்களை புகழ்ந்து எழுதுவதை ஒரு போக்காகக் கொள்ள வேண்டிய நிலை கவிஞர்களுக்கு உண்டானது.

பாடல் எழுதுவது பற்றி வாலி கீழ்வருமாறு வாக்குமூலம் தருகிறார் :

எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அவர் பற்றி சற்று மறைவாக கண்ணதாசன் " செந்தமிழா எழுந்து வாராயோ " , "சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா " , உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் " என்று எழுதினார் என்றால் நான் எம்.ஜி.ஆரின் படங்களில் தனிப்பாடல்களில் அவரது சமூகக்கருத்துக்களுடன் "ஏழைகளின் தலைவன் " , நான் அளவோடு ரசிப்பவன் எதையும் அளவின்றிக் கொடுப்பவன் " , "என்னைப்பாட வைத்தவன் ஒருவன் " எனப் பச்சையாக வண்ணம் கொடுத்தேன்! நடிகர்களின் குணவியல்பு , அரசியல் குணாதிசயங்களை வெளிப்படுத்தலாம்

குறிப்பாக " மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் / அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் " என்ற பாடல் அது எம்.ஜி.ஆரை புகழ்கிறதா , தி.மு.க வை புகழ்கிறதா , தமிளைப் புகழ்கிறதா என்ற ஐயம் பலருக்கு இருந்ததது. அவரவர் மனநிலைக்கு ஏற்ப அதை எடுத்துக் கொண்டனர். ஆனாலும் பரந்துபட்ட மக்களின் செல்வாக்கு இருந்ததால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே குறிப்பிட்டது என்பதாகவே இருந்தது.

அண்ணனின் தம்பி உண்மையின் தோழன் ஏழைக்கு தலைவன் நீங்கள் அய்யா / …..

நம்நாடு படத்தில் " வாங்கய்யா வாத்தியாரய்யா "என்ற பாடலில் வரும் வாலியின் வரிகள் இவை!

தமிழ்ப்புலவர்கள் தங்களை ஆதரித்த மன்னர்களையும் ,புரவலர்களையும் அவர்களது வீரதீர சாகசங்களையும் புகழ்ந்து தள்ளியதை தமிழ்கவிதை மரபில் காண்கிறோம். அரசர்களை புகழ்ந்தவர்கள் பின்னர் கடவுள்களை தந்தையாகவும், தாயாகவும் , தோழனாகவும் , நாயகன் ,நாயகியாகவும் பாவித்து எழுதிய மரபை நாம் மறந்துவிட முடியாது.

கம்பன் தெய்வச்சுவை சொட்டச் சொட்ட எழுதிய கம்பராமாயணமும் , கண்ணன் மீது தீராத காதல் கொண்ட ஆண்டாள் தன்னை அவனது மணப்பெண் என உருவகித்துப் பாடியதையும், அதன் வழியே பாரதியார் கண்ணனை வெவ்வேறு பாத்திரங்களாக்கி பாடியதையும் நாம் மறந்துவிட முடியாது.

இந்த லட்சணத்தில் சினிமாப்பாடல்களை எழுதும் கவிஞர்களை மட்டும் குறைகூறி என்ன பயன்!?

"ஓசையிலிருந்து தான் நான் எழுதுவேன் " என்பார் கண்ணதாசன். கண்ணதாசனின் எழுத்துநடையையே தான் பின் பற்றியதாக கவிஞர் வாலி பிற்காலத்தில் கூறினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கண்ணதாசன் போன்றோரின் பாடல்களால் கவரப்பட்டு தானும் பாடல்கள் எழுத வேண்டும் என்று வந்தவர் வாலி. ஏற்கனவே நாடகங்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் பெயர் பெற்றிருந்த அவர் சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்புகள் தேடினார்.

நிலவும் தாரையும் நீயம்மா-இந்த உலகம் ஒருநாள் உனதம்மா

முதன் முதலாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - வாலி சந்திப்பின் போது வாலி எழுதிய மேல் சொன்ன வரிகளை படித்து ,ரசித்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் " நாளைய உலகம் உனதய்யா " என்றாராம் ! அந்த வருடமே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மரணமடைந்தார் .

அழகர்மலைக்கள்வன் [ 1959 ] படத்தில் அந்தப்பாடல் இசையமைப்பாளர் கோபால் இசையில் பி.சுசீலாவின் குரலில் வெளிவந்தது.

கவிஞர் வாலி , பின்னர் கண்ணதாசனின் சாயலில் பாடல்களை எழுதினாலும் தனது முத்திரைகளையும் அதில் பதிக்கத் தவறவில்லை.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

நதியில் விளையாடி கொடியின் தலைசீவி நடந்த இளந் தென்றலே …

என்று கடந்த கால கவிதைகளின் மரபுகளை கண்ணதாசன் எளிய தமிழில் சொல்லோவியங்களாக்கினார் என்றால் , கவிஞர் வாலி , சாதாரண நடைமுறையில் புழங்கும் சொற்களை பயன்படுத்தி தன் கால இளைஞர்களுக்கு தனக்கே உரிய குறும்புடன் எழுதியது போல

அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் என்றும்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும் …

என குடியிருப்பு , வாடகை போன்ற சொற்களை கவர்ச்சியாக எழுதினார். கண்ணதாசனிடமிருந்த பழந்தமிழ் இலக்கிய அனுபவங்கள் போலல்லாமல் , அவை சற்று குறைவாக இருந்தாலும் கதைக்குத் தேவையான விதத்தில் பாடல்களை எழுதினார்.

வணிக வெற்றிகளை மட்டும் நம்பும் தமிழ் திரைத்துறைக்கு தேவையான கவர்ச்சிமிக்க எளிமையான ஓசைநயமிக்க சொல்லடுக்குகளை புனைந்தவர் கவிஞர் வாலி.எம்.ஜி.ஆருக்கு அவர் எழுதிய புகழ்ச்சிப் பாடல்கள் எம்.ஜி.ஆரின் கவர்ச்சிக்கு மினுக்கு உடை போல அவரது சொல்வீச்சுகளும் ஜாலம் காட்டின ! பாடல் எழுதுவதில் மட்டுமல்ல கண்ணதாசனைப் போலவே வசனம் எழுதுவதிலும் அதனது எழுத்தாற்றலைக் காண்பித்தவர் கவிஞர் வாலி!

நாடகத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் , இசையில் நல்ல ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கிய வாலி கர்னாடக இசை ராகங்கள் பற்றிய புரிதலும் கொண்டவராக இருந்ததுடன் தனது இளம்வயதிலேயே " கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் " என்ற பாடலை கர்னாடக இசைப்பாடகர் மதுரை சோமு வுக்கு எழுதிக் கொடுத்தார். அப்பாடல் பின்னாளில் அதிக புகழ்பெற்று எம்.எல் வசந்தகுமாரி போன்றோரால் மேடைகளில் பாடப்பட்டது.

அது மாத்திரமல்ல பக்திப்பாடல்கள் எழுதுவதிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். " உள்ளம் உருகுதைய்யா " , " கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் " என்ற புகழபெற்ற முருகன் பாடல்களை திரைக்கு அறிமுகமாகும் முன்னரே எழுதியவர் வாலி என்பது பலர் அறியாத தகவல்

முதன் முதலாக எம்.ஜி.ஆறுக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் " என்ற பாடலை டி.ஆர். பாப்பாவின் இசையில் எழுதினார். பாடல் எழுத்து வாய்ப்பு கே.வி.மகாதேவனிடம் கிடைத்த போதும் மகாதேவன் இவரது பாடல் எழுதும் முறையை “பாராட்டவுமில்லை , ஊக்குவிக்கவுமில்லை” என்று பின்னாளில் வாலி கூறினார்.

கவிஞர் வாலிக்கு நெருக்கமான பலர் சினிமா உலகில் இருந்து சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கண்ணதாசனுக்கு உதவியாளராக சேர்த்துவிடுவதாகக் கூறிய ஜி.கே.வெங்கடேஷிடம் நான் அப்படி இருந்துவிட்டால் எனக்கு யாரும் சந்தர்ப்பம் தரமாட்டார்கள் என்று மறுத்து விட்டார். அவரைப்போலவே தானும் பாடல்கள் எழுத வேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவராகவே விளங்கினார்.

தனக்கு பிடித்த கவிஞரான கண்ணதாசனை நேரில் கண்டு உரையாடிய போது கண்ணதாசன் அவருக்கே உரிய பாங்கில் நட்பு பாராட்டியதையும் அவர் பற்றி தான் உயர்ந்த மதிப்பு வைத்திருந்ததையும் குறிப்பிட்ட வாலி , தான் கண்ணதாசன் பற்றி எழுதிய கவிதையும் அவரிடம் காண்பித்து மகிழ்ந்ததாக பதிவு செய்திருக்கின்றார்.

காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை பாட்டுக்குள் வைத்தவனே காக்கைக்கு கூட்டுக்குள் குயிலாகக் கூவித் திரியாமல் காலம் கழித்தவனே

- வாலி –

திராவிட முன்னேற்றக்கழகத்தில் கண்ணதாசன் இருந்த காலம் பற்றியது அந்தக்கவிதை.

ஒரு சில படங்களில் பாடல் எழுதிய போதும் தொடர்ச்சியாக எழுதும் வாய்ப்புகள் அற்ற நிலையில் தொடர்ந்தும் , பாடல் எழுதும் வாய்ப்பு தேடி களைத்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிவிடலாம் என்ற நிலையில் , அவரது நண்பர்களில் ஒருவரான பிபி.ஸ்ரீனிவாஸ் தாம் சிலநாட்களுக்கு முன் பாடி ஒளிப்பதிவான " மயக்கமா கலக்கமா " என்ற பாடலைப் பாடிக் காண்பித்த போது , அந்தப்பாடலில் வரும் வரிகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும் , தனக்கு நம்பிக்கை தந்ததாகவும் , ஊர்க்குத் திரும்பிப்போவதைக் கைவிட்டு தொடர்ந்து முயற்சிக்கலாம் என்ற நம்பிகையையும் தந்தது என்று வாலி பல இடங்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக்காலத்தில் ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்த இசையமைப்பாளர்கள் என்றால் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர் என்ற ரீதியில் அவர்களின் கண்பட்டால் அல்லவா பெருமை கிட்டும் என்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட ஜாம்பவான்களை வாலி சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

தொடர்ந்து வேலையற்ற வாழ்க்கைப்போராட்டமாகிய நிலையில் " இதயத்தில் நீ " என்ற படத்தில், வாலியின் திறமையை அறிந்த தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் மூலம் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் மெல்லிசைமன்னர்களே !தயாரிப்பாளர் சொல்லுவதை யாரால் தட்ட முடியும்?

மெல்லிசைமன்னர்களின் இசையில் " பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா / பொன்மகளே வாய் திறந்து பாமாலை பாடவா / என்ற பாடல் வரிகளை எழுதிய வரிகளை எழுதிய போது அதை அருமையாக இசைத்த மெல்லிசைமன்னர் " இவ்வளவு நாளும் எங்கே இருந்தீர்கள் " என்று கேட்டு விட்டு மிகுதி பாடல்களையும் இவரே எழுதட்டும் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்; பிறகென்ன சாப்பாட்டுக்கு வசதியில்லாமல் நான் சாப்பிட நேரமில்லாமல் பாடல் எழுதினேன்; எல்லாப்பெருமையும் அண்ணன் விஸ்வநாதனையே சாரும்! என்பார் வாலி.

01 பூவரையும் பூங் கொடியே - இதயத்தில் நீ [ 1963 ] - பாடியவர் : பி.பி.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 01 ஓடிவது போல இடையிருக்கும் - இதயத்தில் நீ [ 1963 ] - பாடியவர் : பி.பி.எஸ் + சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

கற்பகம் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் அவருக்கு பெரும் புகழைத் தந்தன. குடும்ப உறவுகளின் உணர்வுநிலைகளின் அழகிய கூறுகளை மொழிச் சிக்கல் இல்லாமல் மிக எளிய நடையில் அவர் எழுதிய விதமும் மெல்லிசைமன்னர்களின் உணர்ச்சி ததும்பும் இசையில் வெளிவந்து இன்றுவரை சாகாவரம் பெற்றுத் திகழ்கின்றன. பாடல்கள் பெரு வெற்றி பெற்றதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் அந்தப்பாடல்கள் புகழபெற்ற நடிகர்களாலோ அல்லது ஆண் பாடகர்களாலோ பாடப்படாமல் தனியே பெண்குரலில் பாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கனவாகும்.

அறிமுக நாயகியாக கே.ஆர்.விஜயா நடித்த இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை.எத்தனை விதமான உணர்ச்சி மிகுந்த பாடல்கள் !

மனக்கிளர்ச்சியும் , உணர்ச்சிமேலீடும் தரும் வரிகளும் இசையும் இணைந்து கேட்பார்களை வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வுகளுக்கு இட்டு செல்லும் பாடல்கள் என்று கூறலாம். ஒவ்வொருபாடலும் முத்து முத்தானவையாகும்.

01 அத்தைமடி மெத்தையடி - கற்பகம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பக்கத்து வீட்டு பருவ மச்சான் - கற்பகம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 ஆயிரம் உறவுகள் வருவதுண்டு - கற்பகம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 மன்னவனே அழலாமா - கற்பகம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 அன்னைமடி மெத்தையடி - கற்பகம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்த நான்கு பாடலும் நம்மைப் மகிழ்ச்சியில் துள்ளவைக்கவும் , சோகத்தில் கரைக்கவும் செய்பவை.

01 அத்தைமடி மெத்தையடி - கற்பகம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

நிலபுலன்களுக்குச் சொந்தக்கார, பணக்காரத் தந்தையின் அருமை மகள் கற்பகத்தின் கதையைக் கூறுமிந்தத் திரைப்படம் மிக நுட்பமான உணர்வுகளை படம் பிடித்துக்காட்டுவதாய் அமைக்கப்பட்ட திரைப்படம் . தமிழ் திரையின் அதிசிறந்த நடிகர்களான எஸ்.ரங்காராவ் , எம்.ஆர்.ராதா, வி.நாகைய்யா , ஜெமினி கணேஷன் , வி. கே.ராமசாமி ,சாவித்திரி என சிறந்த குணசித்திர நடிகர்கள் நடித்த சோகச் சித்திரம் தான் கற்பகம் . நாட்டுப்புற மக்களின் இன்ப துன்ப நிகழ்வுகளையும்,அவர்களின் மனோவியலையும் மிக நுண்ணுணர்வுகளினூடாக வெளிப்படுத்திய படம்

ஒரே காலத்தில் திருமணம் செய்த தனது அண்ணனின் மகளை, அதுவரை பிள்ளையில்லாத நாயகி தாலாட்டி உறங்க வைக்கப் பாடும் பாடல் " அத்தைமடி மெத்தையடி " என்ற பாடல் ! இந்தப்படத்தின் தீம் இசை போல இந்தப்பாடல் பயன்படுத்தப்பபட்டுள்ளது . பாடலின் மையக்கருத்தை , அதை அற்புதமாக வெளிப்படுத்தும் இந்தப்பாடல் வெவ்வேறு இடங்களில் வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. பாடலில் முன்னர் வரும் ஆராரி..ஆராரி..ஆராரி .ஆராரோ ஹம்மிங்கில் நாயகியின் ஏக்கம் மிஞ்சிய சோகத்தின் குரலாக இசையமைக்கப்பட்ட விதம் நம்மைத் தாக்குகிறது. பாடல்ன்னவோ சந்தோசமானதாக ஒலித்தாலும் வார்த்தையில் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம் பின்னிபிணைக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாடல் மீண்டும் " அன்னைமடி மெத்தையடி " என்று ஒரு சிறிய பாடலாகவும் படத்தில் இடம் பெற்றுள்ளது

மெல்லிசைமன்னர்களின் இசையும் , வாலியின் எளிமையான வரிகளும் ,உணர்ச்சி பெருக்குகளையும் பொதிந்து வைத்திருக்கின்றது.

02 பக்கத்து வீட்டு பருவ மச்சான் - கற்பகம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்

மென்மையாக ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஆர்ப்பாட்டமும் , எழுச்சியும்தருகின்ற இனிமையான பாடல்! ஹம்மிங் ,விசில் , ஜலதரங்கம் , சித்தார் , குழல் , பொங்கஸ் என அதனை பரிவாரங்களையும் வைத்துக் கொண்டு மனதில் பதிய வைக்கிற இசையால் நம்மை கட்டிப் போடுகிறார்கள் மெல்லிசைமன்னர்கள்.

இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு மெல்லிசைமன்னர்கள் என்ற பட்டத்தை சிவாஜி தலைமையில் வழங்கி கௌரவித்த கண்ணதாசன் , அந்த விழாவின் இசை நிகழ்ச்சியில் விஸ்வநாதன் அப்போது வெளிவராத கற்பகம் என்ற படத்தில் புதிய கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலை சுசீலாவை பாடவைத்தார். மேடையில் பாடப்பட்ட கவிஞர் வாலி எழுதிய இந்தப்பாடல் குறித்து கவிஞர் கண்ணதாசன் பேசிய போது இந்தப்பாடலை நான் நன்றாக ரசித்தேன். புதிய கவிஞரின் கவியாற்றல் "மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான் " என்ற வரிகளில் மிக அற்புதமாக வெளிப்பட்டுள்ளது என்றும் எனது வாரிசாக இவர் தான் வருவார் என்றும் பாராட்டிப் பேசினார்.

03 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு - கற்பகம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

முதலிரவு பாடல் வேளையில் நாயகியின் தோழி பாடுவதாக அமைந்த பாடல் இது. இப்பாடலில் ஒரு புதுமை; பாடல் வரிகள் முற்றுப்பெறாமல் கேள்வி கேட்பது போலவும் அதற்கு இசையில் பதில் சொல்வது போலவும் புதுமையைக் கையாண்டபாடல்!

வயதில் வருவது ஏக்கம் - அது வந்தால் வராது - - - - - வந்ததம்மா மலர் கட்டில் இனி வீட்டினில் ஆடிடும் - - - -

என்று பாடலும் இசையும் குழைந்து வரும் இனிய பாடல்;

04 மன்னவனே அழலாமா - கற்பகம் 1963 - பாடியவர்: பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

நாட்டுப்புறபகுதிகளில் செய்வினை ,சூனியம் , சகுனங்கள் , ஆவி போன்ற நம்பிக்கைகள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. தனது மனைவி இறந்த சோகத்தில் நாயகன் , மன உழைச்சலின் உச்சத்தில் மறுமணம் ஒன்றை நினைத்தும் பார்க்க முடியாத நிலையில் , இறந்து போன அவனது மனைவியே ஆவியாக அவன் கண்முன் தோன்றி பாடுவதாக அமைந்த பாடல் இது !

இந்தப்பாடலின் வாத்திய அமைப்பை கவனித்தால் பெரும்பாலும் கிளப் டான்ஸ் போன்ற காட்சிக்கு பயன்படும் ட்ரம்பெட் , வயலின் போன்ற இசைக்கருவிகளை அமானுஷ்ய உணர்வை தரும் வகையில் புதுவகையில் பயன்படுத்தி , வழமையான இசை இலக்கணங்களை புது விளக்கம் செய்தது போல ஒரு பாடலை மெல்லிசைமன்னர்கள் தந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இசை உத்திகளில் ஹோரஸ் இசையையும் புதுவிதமாக செய்து தமிழ் சினிமாவிற்கு தலை சிறந்த பாடலை தந்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தப்பாடலுக்குப் பயன்படுத்தப்பட்ட ராகமும் மிக முக்கியமாகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டியதாகும். பழந்தமிழ் ராகமான கீரவாணி யின் தன்மையறிந்து பயன்படுத்தப்பட்ட விதம் அருமையிலும் அருமை !

பாடலின் சூழ்நிலையை விளக்கும் அருமையான வரிகள் , அதற்கேற்ற அதியற்புத இசையமைப்பு இவற்றையெல்லாம் தந்து இனிய குரலால் மேலே உயர்த்தி செல்லும் சுசீலாவின் தேனினும் இனிய குரல்! இதைவிட இசைரசிகர்களுக்கு வேறென்ன வேண்டும் !?

சினிமாப்பாடல் எழுதும் முறை பற்றி கவிஞர் வாலி பின்பவருமாறு கூறுகிறார்

// …“ திரைப்படப்பாடல் என்பது காட்சிக்காக எழுதப்படும் நாடகப்பாடல்கள். அதில் கவித்துவம் இருக்கலாம். இலக்கணத்தை மண்டையில் ஏற்றிக் கொண்டு சினிமாப்பாடல் எழுதினால் இசையமைப்பாளர்களோ அல்லது பட இயக்குநர்களோ விரும்பமாட்டார்கள். இலக்கணப்படி இப்படி வரக்கூடாது என்று நாம் சொன்னால் " இவன் என்ன பள்ளிக்கூட வாத்தியார் மாதிரிப் பேசுகிறான் " என்பார்கள். கவிஞர் சுரதா ரொம்ப தமிழ் படித்தவர் என்பதனாலேயே அவருக்கு பயந்து ,திருத்தங்கள் கருத்துக்கள் சொல்ல முடியாது என்று பயந்தார்கள்.

Lyrics என்பது இசைக்கு இசைந்து போகக்கூடியது. உணர்ச்சிகளை ஒட்டி அந்தப்பாட்டுக்கள் நாயக , நாயகி உணர்வுகளை வாலாயப்படுத்த வேண்டும். இலக்கண [ Gramatic ] வழியில் போனால் அது நடக்காது.அப்படிப்போனால் நல்லதுதான். உணர்ச்சி தான் முக்கியம்!

Gramatic இல்லாவிட்டால் பரவாயில்லை. ஷேக்ஸ்பியர் காலத்திலும் அவர் பாடல்களிலும் அது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.ஆனாலும் அந்த இலக்கணம் இல்லாததால் அவை வெறுக்கப்படவில்லை. மக்கள் அவரது பாடல்களை கொண்டாடினார்கள்! // “ - வாலி

மெல்லிசைமன்னர்கள் தங்கள் படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்த காலத்தில் கவிஞர் வாலியுடன் இணைந்தது தந்த தொடர் வெற்றிப்பாடல்கள் படத்திற்குப் படம் இடம்பெறாத தொடங்கியது. இசையை பாடல்வரிகள் மிஞ்சியதா இல்லை பாடல்வரிகளை இசை மிஞ்சியதா என்று பிரித்துப் பார்க்க முடியாத பிரமிக்க வைக்கும் இனிய பாடல்கள் காற்றாலையில் மிதந்தன.

1960 களில் தொடங்கிய மெல்லிசைமன்னர்கள் - வாலி இணை தொடர்ந்து 1980 கள் வரையிலும் பல இனிய நெஞ்சுமறக்காத பாடல்களைத் தந்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தன. பலவிதமான பிரிவுகளில் தொகுத்து கூறத்தக்க வகையில் ஏராளமான பாடல்களை இந்த இணை தந்துள்ளது. எப்படிப்பட்ட பாடல்கள் என்று இன்றும் நாம் வியப்புடன் நோக்கும் பாடல்களை நாம் கேட்கக் கிடைத்தது தமிழ் சினிமாவால் விளைந்த ஒரே ஒரு நன்மை என்று கூறலாம்.

என்னதான் வரிகளை யார் எழுதினாலும் இசையில் தங்கள் படைப்பாற்றலால் உச்சங்களைத் தோட்ட மெல்லிசைமன்னர்களின் இசையின்றி இவை சாத்தியமாகி இருக்க மாட்டாது என்பதே உண்மை! அது தான் இசையின் பேராற்றல் !

கவிஞர் வாலி - மெல்லிசைமன்னர்கள் இணையில் வெளிவந்த ஏராளமான பாடல்களை படங்கள் , பாடக, பாடகிகளின் தனிப்பாடல்கள், ஜோடிப்பாடல்கள் , சந்தோசப்பாடல்கள், சோகப்பாடல்கள் என பலவிதமாக வரிசைப்படுத்திக் கூறலாம். இருவரின் இலையில் வெளிவந்த ஒரு சில பாடல்களை இங்கே வரிசைப்படுத்தி கூறலாம்

படகோட்டி [1964] 01 என்னை எடுத்து தன்னை கொடுத்து - படகோட்டி [1964 ] - பாடியவர் : பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 தொட்டால் பூ மலரும் - படகோட்டி [1964 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி [1964 ] - பாடியவர் : டி .எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 தரைமேல் பிறக்கவைத்தான் - படகோட்டி [1964 ] - பாடியவர் : டி .எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி [1964 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 கல்யாணப்பொண்ணு - படகோட்டி [1964 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

எங்க வீட்டு பிள்ளை [1965] 01 குமரிப்பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டு பிள்ளை [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பெண் போனால் - எங்க வீட்டு பிள்ளை [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 நான் மாந்தோப்பில் - எங்க வீட்டு பிள்ளை [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + ஈஸ்வரி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பஞ்சவர்ணக்கிளி [1965 ] 01 அழகன் முருகனிடம் - பஞ்சவர்ணக்கிளி [1965 ] - பாடியவர் : பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 அவளுக்கும் தமிழ் என்று - பஞ்சவர்ணக்கிளி [1965 ] -பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 கண்ணன் வருவான் - பஞ்சவர்ணக்கிளி [1965 ] - - பாடியவர் : பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 பூ மணக்கும் கன்னியாக [bit] - பஞ்சவர்ணக்கிளி [1965 ] - - பாடியவர் : பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

தெய்வத்தாய் [ 1964 ] 01 இந்தப் புன்னகை என்ன விலை - தெய்வத்தாய் [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 வண்ணக்கிளி சொன்ன மொழி - தெய்வத்தாய் [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 மூன்றெழுத்தில் என் - தெய்வத்தாய் [1964 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆயிரத்தில் ஒருவன் [1965 ] 01 உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன் [1965 ] - பாடியவர் : சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பருவம் எனது பாடல் - ஆயிரத்தில் ஒருவன் [1965 ] - பாடியவர் : சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 ஏன் என்ற கேள்வி - ஆயிரத்தில் ஒருவன் [1965 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

டி .எம்.எஸ் + பி.சுசீலா ஜோடிப்பாடல்கள்:

01 இந்தப் புன்னகை என்ன விலை - தெய்வத்தாய் [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 வண்ணக்கிளி சொன்ன மொழி - தெய்வத்தாய் [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 தொட்டால் பூ மலரும் - படகோட்டி [1964 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி [1964 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 குமரிப்பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டு பிள்ளை [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 பெண் போனால் - எங்க வீட்டு பிள்ளை [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 07 நான் மாந்தோப்பில் - எங்க வீட்டு பிள்ளை [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + ஈஸ்வரி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 08 மாணிக்க தொட்டில் - பணம் படைத்தவன் [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + ஈஸ்வரி+ சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 09 அந்த மாப்பிள்ளை காதலிச்சான் - பணம் படைத்தவன் [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி. சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 10 பவளக்கொடியில் - பணம் படைத்தவன் [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + ஈஸ்வரி - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 11 அன்றொரு நாள் இதே நிலவில் - நாடோடி [1966 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + சுசீலா - இசை: விஸ்வநாதன் 12 விழியே விழியே - புதிய பூமி [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் + பி. சுசீலா - இசை: விஸ்வநாதன்

டி .எம்.எஸ் பாடல்கள்:

01 ஒரு பெண்ணை பார்த்து - தெய்வத்தாய் [1965 ] - பாடியவர் : டி .எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 மூன்றெழுத்தில் என் - தெய்வத்தாய் [1964 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 03 நான் ஆணையிட்டால் - எங்கவீட்டுப் பிள்ளை [1965 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 தரைமேல் பிறக்க - படகோட்டி [1964 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 கொடுத்ததெல்லாம் - படகோட்டி [1964 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 கண் போன போக்கிலே - பணம் படைத்தவன் [1964 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 07 காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் [1965 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் 08 கை விரலில் பிறந்தது நாதம் - கல்லும் கனியாகும் [1968 ] - பாடியவர் : டி .எம் எஸ் - இசை: விஸ்வநாதன் 09 வரதப்பா வரதப்பா - பாபு [1970 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் 10 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - நம்நாடு [1967] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன் 11 அந்த நாள் ஞாபகம் - உயர்ந்தமனிதன் [1968 ] - பாடியவர் : டி.எம்.எஸ் - இசை: விஸ்வநாதன்

பி.சுசீலா பாடல்கள்: 01 நான் நன்றி சொல்வேன் - குழந்தையும் தெய்வமும் [1965 ] - பாடியவர் : பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் 02 நாளை இந்த வேளை - உயர்ந்தமனிதன் [1968 ] - பாடியவர் : சுசீலா - இசை: விஸ்வநாதன் 03 உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன் [1965 ] - பாடியவர் : சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 பருவம் எனது பாடல் - ஆயிரத்தில் ஒருவன் [1965 ] - பாடியவர் : சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 05 சித்திர பூவிழி - இதயத்தில் நீ [1965 ] - பாடியவர் : ஈஸ்வரி + பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 06 ஆடை முழுதும் நனைய - நம்நாடு [1968 ] - பாடியவர் : சுசீலா - இசை: விஸ்வநாதன் 07 ஆண்டவனே உந்தன் - ஒளிவிளக்கு [1967 ] - பாடியவர் : சுசீலா - இசை: விஸ்வநாதன்

மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் - கவிஞர் வாலி இணையில் வெளிவந்த பாடல்களை தொகுத்தால் அதுவே நீண்டு ஒரு நூலாக விரியக்கூடியது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்

பொதுவாக சினிமாப்பாடல்களை ஒரு இலக்கியமாக அங்கீகரிக்காததை தமிழ் சூழலில் காண்கிறோம்.தமிழ் இலக்கிய மற்றும் மொழியியல் ரீதியில் சினிமாப்பாடல்கள் பற்றிய ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லை என்றே சொல்லலாம்.பொதுவாக இலக்கியம் என்றால் அது சமூகத்தைப் பிரதிபலிப்பது , அதனூடே சமூக மாற்றத்திற்கு உதவுவது. சமூகத்தில் இருக்கும் தனிமனிதர்களிடமே பெரும்பாலும் மாற்றங்கள் முதன் முதலில் தோன்றுகின்றன. அந்தவகையில் சாதாரண மக்கள் தங்களைப்பாதித்த சினிமாப்பாடல்கள் பற்றி பேசுவதை பரவலாக்க இருக்கின்றோம்.அப்படிப்பட்டகருத்துக்களை பல்துறைகளைச் சார்ந்த நபர்களும் கூறியிருக்கின்றனர். அதில் தமது பிற்கால வாழ்வில் சினிமாவிலேயே புகழபெற்ற பல கலைஞர்களும் அடங்குவர்.

" வேப்பமர உச்சியில் நின்று பேய் ஒன்னு ஆடுதுன்னு விளையாட்டுப் போகும் நேரம் சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தையே கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க "

என்ற வரிகள் தன்னை சிந்திக்க வைத்ததாக கவிஞர் வைரமுத்துவும்

" இளமை எல்லாம் வெறும் கனவு மாயம் இதில் மறைந்தது சில காலம் நினைவும் அறியாமல் முடிவும் தெரியாமல் மயங்குது எதிர்காலம் "

என்ற கண்ணதாசனின் வரிகள் தனது எதிர்காலம் குறித்த கவலையை எழுப்பியதாகவும் ,சிந்திக்க வைத்ததாகவும் இசையமைப்பாளர் இளையராஜாவும்

தனது சமகாலக் கவிஞராக விளங்கிய கண்ணதாசன் எழுதிய உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என்று தொடங்கும் பாடலின் பின்வரும் வரிகள் தன்னை உலுக்கியதாகவும் தனது மனைவி இறந்த போது கண்ணதாசனின் அந்தப்பாடல் தனக்கு தஞ்சமளித்ததாகவும் , கவிஞர் வாலியும் கூறியிருந்தனர்.

பாடலாசிரியர் தெரிய வேண்டியது என்ன ? - வாலி சொல்கிறார்..

//..சினிமாவுக்கு பாடல் எழுதத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம் என்னான்னா … வெறுமனே தமிழ் தெரிஞ்சா ,இசை தெரிஞ்சா மட்டும் போதாது ..அந்த இசையினுடைய சுரத்தானங்களுக்குத் தகுந்த மாதிரி போட்டாத்தான் நல்லாயிருக்கும்.அதற்குரிய இடங்களிலில் இடம் இருக்கும் .

நான் . கண்ணனாதாசன் எழுதியகாலம் தி.மு.க முன்னணிக்கு வந்த காலம் , தமிழ்மேல் எல்லோருக்கும் காதல் பிறந்த காலம். எதுகை ,மோனை ,சந்தங்கள் ரசிக்கப்பட்ட காலம் . எம்.ஜி.ஆர் , சிவாஜி போன்றவர்கள் சங்கரதாஸ் நாடகக்கம்பனிகளில் பயின்றவர்கள் அவர்கள் பாடல்களை எதுகை ,மோனையுடன் கேட்டுப் பழகியவர்கள்; இலக்கிய நயத்துடன் , சந்த இயைபுத்தொடையுடன் அளவுகளுடன் இருந்தால் தான் பாட்டாக ஏற்பார்கள் என்ற காலமிருந்தது…// - வாலி.

அந்தக்காலத்து பட இயக்குனர்கள் , பாடலாசிரியர்கள் , இசையமைப்பாளர்கள் எனப்பலரும் நாடகத்துறையில் பயிற்சி பெற்று வந்ததால் நல்ல இசை , பாடல் வரிகள் , பாடும் முறை போன்றவற்றை அறிந்திருந்தாலும் அதில் ஓரளவேனும் பயிற்சி , மற்றும் நல்ல ரசனை இருந்ததாலும் நல்ல , நல்ல பாடல்கள் வெளிவரக்கூடியதை இருந்தது.

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு தேன் குயில் கூட்டம் பண்பாடும் மான்குட்டி கேட்டு கண் மூடும் …… [ அத்தைமடி மெத்தையடி ]

உணர்வுநிலைகளைத் தாக்கும் உணர்ச்சிமிகும் இனிய இசையும் எளிமைமிக்க தாலாட்டு மரபின் ஓசைநயமும் , அழகும் கேட்கும்போதெல்லாம் மனதில் இனம்புரியாத உணர்வுகள் கிளர்ந்தெழுவதும் , மெய்சிலிர்ப்பும் , மெல்லிசைமன்னர்களின் இசை மாயவித்தைகள் பற்றிய பிரமிப்பும் அரை நூற்றாண்டாக நிலைபெற்று நிற்கின்ற ஆச்சர்யத்தையும் உணர்த்தும் பாடல்!

பிற்காலத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் பலவிதமான விமர்சனங்களுக்குட்ப்பட்டாலும் , அன்று அவர் எழுதிய பல இனிய பாடல்கள் நம்மை மகிழ்வித்தது மட்டுமல்ல , நம் வாழ்விலும் , நம் நினைவுகளிலும் ஒன்றிக்கலந்த பாடல்கள் என்பதை யார்தான் மறுதலிக்க முடியும். அதற்கு முக்கிய காரணம் அவை மெல்லிசைமன்னர்களின் இனிய மெட்டுக்களில் வெளிவந்தது என்பதும் முக்கியமான காரணமல்லவா!!

தமிழ் திரை இசையை பொறுத்தவரையில் மெல்லிசைமன்னர்களுக்கு முன்னோடிகளாக இருந்த மூத்த இசையமைப்பாளர்கள் இசையென்றால் பெரும்பாலும் பாடல்களிலேயே கவனம் செலுத்திய நிலையிலிருந்து விலகி , படத்தின் பின்னணி இசையிலும் தமது படைப்பாற்றலால் அன்று பெரும் புகழ்பெற்ற ஹிந்தித் திரைப்படங்களுக்கு நிகராக ஓரளவேனும் தரத்தை உயர்த்த முயன்ற பெருமை மெல்லிசைமன்னர்களையே சாரும்!


டைட்டில் இசையும் பின்னணி இசையும்:

இன்றைய நவீன காலத்தில் எல்லாத்துறைகளிலும் கம்பியூட்டர் நுழைந்து வருவதும் தொழில் நுட்பம் சார்ந்து கலைகளும் மாற்றம் கண்டும் வருகின்றன. பின்னணி இசை என்ற சொற்பதம் நாடக நிகழ்த்துக்கலையின் நவீன வடிவமாகிய சினிமாவில் அதிகம் பேசப்படும் பொருளாக அறியப்பட்டது. மேலைநாடுகளில் சினிமாவில் மட்டுமல்ல 1940 களிலிருந்து புதிய வடிவமாகிய காட்டூனிலும் பின்னணியாக இசையுடன் , குரல்களும் பெருமளவில் பயன்டுத்தப்பட்டு வந்தது. இன்றைய நிலையில் கம்பியூட்டரின் விரிந்த செயற்பாடுகளால் கேம் [ Computer Electronics Games ] என்ற ஒரு புதுவகை உருவாகி அதற்கான இசையும் உலகமெல்லாம் பாவனைக்கு வந்துள்ளது. கம்பியூட்டரின் நுண்ணறிவு முயற்சியால் "இயற்கைக்கு நெருக்கமாக வடிவமைக்கப்படும் முயற்சியில் " உண்டாக்கப்பட்ட ஒருவித செயற்கையான மனித பாத்திரப்படைப்புகள் மூலம் கதை சொல்லுவதும் , அது உலகெங்குமுள்ள சிறுவர் , சிறுமியர்களை பித்துப் பிடிக்க வைத்துள்ளதையும் நாம் அறிவோம்.

அந்த வகை video - Computer Games களிலும் பின்னணி இசை பயன்படுகிறது. அந்த உருவங்கள் எப்படி செயற்கையாக உருவாக்கப்பட்டு , ஒருவித இறுக்கத்துடனான இயந்திரத்தன்மை மிக்கதாக விளங்குகின்றதோ, அவ்வாறே அதற்கான இசையும் ஒருவித வரட்டுத்தனமிக்க இயந்திரத்தனத்துடன் ஒலிப்பதையும் நாம் கேட்கின்றோம்.உலகெங்கும் விற்பனையாகும் அந்த Games ன் இசை என்பது உலகின் எந்த பிரதேசத்து இசையையும் சாராதது என்பது நம் அவதானத்திற்குரியது. அதை வெளியிலிருந்து நாம் கேட்கும் போதே நமக்கு எரிச்சல் உண்டாகிறது. நவீன மோட்டார் வீதிகள் இல்லாத பின்தங்கிய நாடுகளிலும் கூட இந்த Games அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. அந்த இசையில் நாம் எந்த உணர்ச்சியையும் , நாடுகளுக்கிடையேயான வித்தியாசங்களை இசையில் கேட்கமுடியாது.

Electronic Games மட்டுமல்ல டாக்குமெண்டரி , விளம்பரப்படங்கள் , குறும்படங்கள் போன்றவற்றிலும் பின்னணி இசை பயன்படுகிறது. தற்போதைய தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற கம்பியூட்டர் மென் பொருள் இசை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகெங்கும் ஒரே ரகமான மென்பொருட்களை எல்லோரும் பாவிப்பதால் பல்லினக் கலாச்சாரம் அழிக்கப்பட்டு ஒற்றைப் பரிமாண செயற்கை இசைகளை உருவாக்கி விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரு லாபமடைவதுன் தாம் நினைக்கும் வர்த்தகம் சார்ந்த கலாச்சாரத்தையும் திட்டமிட்டுப் பரப்புகின்றனர்.

தமிழ் திரையில் 1990 களின் நடுப்பகுதியிலிருந்து இந்த கேடான போக்கு நடைபெற்று வந்தாலும் அதற்கு முன் குறிப்பாக 1950 களின் பிற்பகுதியிலிருந்து 1990 கள் வரையான பகுதி இயற்கை வாத்தியங்கள் அதிகம் பயன்பட்டன. பின்னணி இசையைப் பொறுத்தவரையிலும் இக்காலப்பகுதி தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம்.

இசை என்பது ஒரு கலாச்சாரம் சார்ந்த அம்சம் என்பதால் எந்த ஒரு இசையும் அதன் கலாச்சார பின்னணியிலேயே உருவாகி வளர்கின்றன. அது இந்திய , சீன , ஆபிரிக்க , லத்தீன் அமெரிக்க , அரேபிய , ஐரோப்பிய இசை என பன்முகத்தன்மை மிக்கதாகவும் , சுவைமிக்கதாகவும் இருந்து வருகின்றன. திரைப்படங்களும் அவை சார்ந்த நிலங்களின் இசையாகவுமே இருந்து வருகின்றன.

1940 களில் வெளிவந்த திரைப்படங்களில் பெரும்பாலும் கொஞ்சம் வசனமும் அதிக பாடலும் என்றால் 1950 களில் நீண்ட வசனமும் , அதேயளவுக்கு எண்ணிக்கையில் நிறைந்த பாடல்களும் இடம் பிடித்தன. பின்னணி இசை என்பதற்கான இடமிருந்தால் அல்லவா இசையமைப்பாளர்கள் அந்த இடங்களில் இசையை வழங்க முடியும் ! அந்தப்படங்களில் பின்னணி இசை என்பது பெரும்பாலும் காட்சிகள் மாறும் இடங்களில் மாத்திரம் கையாளப்பட்டன. பாடல்கள் தான் இசை எனக் கருதப்பட்ட காரணத்தால் காட்சிகளுக்குப் பொருத்தமான இடங்களிலெல்லாம் ஏற்கனவே வெளிவந்து புகழபெற்ற பாடல்களின் இசையை வாத்தியங்களில் வாசிப்பதை ஒரு வழக்கமாக எல்லா இசையமைப்பாளர்களும் கைக்கொண்டனர்.

தமிழ் சினிமாவில் பாடல்களே முனைப்பாய் இருந்த எல்லாக்காலத்திலும் ஏதோ ஒருவகையில் ஒரு சில வாத்தியங்களைக் கொண்டு பாடல்களை இடையிட்டு பின்னணி இசையாக இசைப்பதும் , சில இடங்களில் வாத்திய குழு வாசிக்கும் நிலைமையும் இருந்தே வந்திருக்கிறது.

தமிழ் திரையைப் பொறுத்தவரையில் தனது புதுமையான பின்னணி இசைக்கோர்வைகளால் அதை தனிச் சிறப்புமிக்க பேசுபொருளாக்கியவர் இசைஞானி இளையராஜா! அவர் மெல்லிசை மன்னர்களின் தொடர்ச்சியாக வந்தாலும் பின்னணி இசையில் அவர் தனித்துவமிக்க முன்னறிந்து கூற முடியாத புதுமையையும் , ஆளுமையையும் காண்பித்து அதற்கான புதிய இசை நடையையும் உருவாக்கிக்காட்டினார். அவருக்கு முன்பிருந்தவர்களும் சரி , அவருக்குப் பின்வந்தவர்களும் சரி காலத்திற்கு காலம் மாறும் மாறுபாடுகளைக் கடந்து அவர் அடைந்த உச்சங்களைத் தொட முடியவில்லை.

திரைப்படம் என்பது முற்றுமுழுதாக இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பதே உலக சினிமா கொடுத்திருக்கிற ஒரு சிந்தனை. பலவிதமான கலைகள்.அதனுடன் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் திரைப்படத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டு இயக்குனர்கள் விவரிக்கும் அம்சங்களை நிறைவேற்றுவபர்களாக செயல்படுகின்றன.அந்த வகையிலேயே பலவிதமான கலைஞர்களும் ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். ஒரு இயக்குனர் தான் வெளிப்படுத்த வேண்டிய கருத்தை அதற்குரியவர்களிடமிருந்து வெளிப்பட வைப்பார். ஆக திரைப்படம் என்பதே ஒரு இயக்குனரின் படைப்பு தான்! ஒரு திரைப்படம் அல்லது குறிப்பிட்ட ஒரு கதை பற்றிய எண்ணத்தை , அது எப்படி வடிவம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை நீண்ட காலம் மனதில் சுமக்கும் அல்லது கற்பனை செய்யும் இயக்குனர் பலவிதமான சிந்தனைகளை கொண்டிருப்பார்.

அந்த வகையில் அந்த திரைப்படங்களில் பணியாற்ற ஓப்பந்தமாகும் இசையமைப்பாளரும் அதற்குரிய தொழில்நுட்பக்கலைஞர்களில் ஒருவரே. ஆனாலும் ஒருபடம் முழுமையடைந்து இசையமைப்பாளரின் பார்வைக்கு வரும் போது அவர் அந்த இயக்குனர் என்ன மாதிரியான மனநிலையிலிருந்து அதனைப் படமாக்கினார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வார் என்பது சந்தேகமான காரியம் தான். இயக்குனருக்கும் , இசையமைப்பாளருக்குமான புரிந்துரணரவைப் பொறுத்தே அது அமையும்.

மற்ற கலைவடிவங்களான ஓவியம் ,நாட்டியம் , கவிதை போன்ற கலைகளைப் போல இசையமைப்பு என்பது முற்றுமுழுதான இசையமைப்பாளரின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு கலை வடிவம் அல்ல. அதில் ஏனையோரின் தலையீடுகளும் இருக்கும். குறிப்பிட்ட இயக்குனர் குறிப்பிட்ட காட்சிகளுக்க்கான இசை இப்படித்தான் வரவேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன் ; இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்ற போக்கு , இந்திய சினிமாக்களில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இருக்கிறது.குறிப்பாக இன்றைய ஹொலிவூட் திரைப்பட இசையமைப்பாளர்களும் இந்த நிலைமைக்கு உட்பட்டே இசையமைக்கின்றனர்.

ஹொலிவூட்டின் புகழபெற்ற இளம் இசையமைப்பாளரான ஜேம்ஸ் கோனர் [ James Horner ] பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது. " திரைப்படத்திற்கு இசையமைப்பது என்பது வேறு ஒருவரின் படைப்புக்கு நாம் வேலை செய்ய அமர்த்தப்பட்டுள்ளோம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அங்கே நான் , இது நல்ல இசையென்று ரசிக்கும் இசையைக் கொடுக்க முடியாது. ஏனென்றால் பிறருக்கும் நமக்கும் இருக்கும் இசை ரசனை என்பது ஒன்றாக இருக்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அப்படி இருப்பதில்லை என்பதே உண்மை ! நாம் நினைக்கலாம் இது ஒரு நல்ல இசை என்று, ஆனால் உங்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் திரைப்பட இயக்குனர் , " இன்னும் கொஞ்சம் நல்லா தர முடியுமா , அல்லது இன்னும் கொஞ்சம் சந்தோசமாக , இனிமையாக தரமுடிடயுமா " என்று சொல்லலாம்.. முழுமையாக சொல்ல வேண்டும் என்றால் நம்மைச் சூழ உள்ளோரை சார்ந்தும் , அவர்களை சந்தோசப்படுத்துவதாகவுமே இருக்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது.

தமிழ் திரையில் பின்னணி இசை என்பது 1950களிலிருந்து ஏதோ ஒருவகையில் இருந்து கொண்டே வந்துள்ளது. இன்றைய பொருளில் சிறப்பான வாத்திய இசையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு இசை அல்லது ஒரு ஒலி இருக்க வேண்டும் கருத்தோட்டம் இல்லாமலில்லை. மேலைத்தேய சினிமா, மற்றும் ஹிந்தி சினிமாவைப் பார்த்து வளர்ந்தது என்ற நிலையில் பின்னணி இசை அதிக முக்கியத்துவமில்லாமல் விட்டாலும் மாறும் காட்சிகளின் இடைவெளிகளை நிரப்புவதற்காகவும் பயன்படுத்தினர்.

1960 களின் நவீன இசையின் நாயகர் மெல்லிசைமன்னர்களே என்பது எல்லோரும் அறிந்ததே! அவர்கள் பாடல்களின் வாத்திய இசையில் பலபுதுமைகளைப் புகுத்தியவர்கள் என்பது மட்டுமல்ல ஹிந்தி திரையிசைக்கு நிகராக தமிழ் சினிமா இசையை தரமுயர்த்தியவர்களுமாவார். தனியே பாடல்களில் மட்டுமல்ல படத்தின் பின்னணி இசையிலும் கவனம் செலுத்தியத்தின் உரிமைக்காரர்களாகவும் விளங்கினர்.தனது மிக இளவயதிலேயே ஹிந்தி திரையிசையின் சாதனை இசையமைப்பாளரான நௌசாத் இசையால் கவரப்பட்ட மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அந்த இசைப்பள்ளியைச் சார்ந்தவர் என்றே சொல்ல வேண்டும்.

பிறப்பால் மலையாளியான விஸ்வநாதன் நீண்டகாலம் தமிழ்நாட்டில் வாழ்ந்து தன்னை தமிழராகவே உணர்ந்தவர் என்ற நிலையிருந்தாலும் தமிழ் நாடக மரபிலிருந்து வந்தாலும் , அவரது முன்னோடி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன் , கே.வி.மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்கள் தமிழ்நாட்டு இசைமரபை, நாட்டுப்புற இசை, செவ்வியலிசை [ கர்நாடக இசை ] போன்றவற்றை கைக்கொண்டது போலல்லாமல் ஹிந்தி இசையைத் தனது முன்னுதாரணமாகவே கொண்டார். மலையாள நாடன் பாட்டுக்களையும் பயன்படுத்தியவரல்ல. தமிழ் இசையில் பரீட்சயமமிருந்தாலும் மெல்லிசை ஒன்றையே நினைத்து மெல்லிசைமன்னர்கள் பயணித்தார்கள் என்பதே உண்மையாகும்.அன்றைய நிலையில் எல்லா மாநில இசையும் ஹிந்தி இசையையே முன்னுதாரணமாகக் கொண்டனர் என்பது பொது போக்காகவே இருந்தது.

ஹிந்தி திரையிசையின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய நௌசாத் இந்திய செவ்வியல் மரபு இசையைப் பயன்படுத்தி புகழ் பெற்றதுடன் 1940களின் இறுதியிலேயே மேலைத்தேய இசையையும் பயன்படுத்தி புதுமைகளைப் புகுத்திய முன்னோடியுமாவார். ஆயினும் 1950களில் ஹிந்தி திரையிசையை செழுமைப்படுத்தியதில் வங்காள இசையமைப்பாளரான அனில் பிஸ்வாஸ் என்பவர் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். அனில் பிஸ்வாஸ் இசையில் 1950 இல் வெளிவந்த Arzoo என்ற திரைப்படத்தில் Title இசையில் வெளிப்படுத்தப்பட்ட இசை , Arrangement என்று சொல்லப்படுகிற மேலைத்தேய பாணியில் சுரக்குறிப்புகள் [ Notations ] எழுதப்பதுடன் harmony . மற்றும் Counterpoint போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன.

ஹிந்தி திரை இசையை நவீனமயமாக்கியதில் நௌசாத் , அனில் பிஸ்வாஸ் போன்ற இசையமைப்பாளர்களின் உதவியாளர்களாக இருந்த தென்னிந்திய கோவா பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் முக்கிய பங்காற்றினார்கள். கோவாவைச் சார்ந்த இசைக்கலைஞர்கள் மேலைத்தேய செவ்வியல் இசையில் நன்கு பரீட்ச்யமாய் இருந்ததுடன் சர்ச் , உணவு விடுதிகள் மற்றும் கிளப் போன்ற இடங்களில் மேலைத்தேய இசையை இசைத்து தமது வாழ்வாதாரமாகவும் கொண்டிருந்தவர்கள். அவர்கள் போர்த்துக்கேய இசை மரபை பின்பற்றியவர்களாவர்.

Anthony Consalves , Josique Menzies , Maoro Alfonso போன்ற கலைஞர் மிக முக்கிய பங்காற்றினார்கள். பம்பாய் " புதிய நாடக அமைப்பின் " [ New Theatre ] கலைஞர்களின் திறமையையும் சினிமா இசையமைப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுடன் கடற்படை , மற்றும் Band வாத்தியக் கவிஞர்கள் பலரும் திரையிசைக்குள் உள்வாங்கப்பட்டனர். அணில் பிஸ்வாஸின் உதவியாளராக, வாத்திய ஒருங்கிணைப்பாளராக இருந்த ராம் சிங் என்பவர் பஞ்சாபைத் சார்ந்த band வாத்தியக்கலைஞராவார். அவர்களது வாசிப்பு இந்திய இசைக்கு இசைவாக அமைந்தததுடன் 1930 , 1940 களின் இருந்த இசைக்கு முற்றிலும் மாறாக புதுமையானதாகவும் , முன்பு அறிந்திராத இசையாகவும் அமைந்தது. அனில் பிஸ்வாஸின் இசைக்கு வளம் சேர்த்ததில் Jerry Fernandes என்ற கலைஞரும் முக்கியமானவராவார். அன்றிருந்த இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் சங்க உறுப்பினர்களின் திறமைகளையெல்லாம் பயன்படுத்திய இசையமைப்பாளர்களே பெயரை எடுத்தனர்.

அன்றைய நிலையில் அனில் பிஸ்வாஸ் ஹிந்தி இசையை நவீனப்படுத்தினார் என்று கூறப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் அங்கே இசையமைப்பாளர் நௌசாத்தின் பங்களிப்பே அதிகம் என்கிறார்கள். Kersi Lord என்ற இசைக்கலைஞர் Arranger , Score Composer , Accordian Player எனப் பன்முகம் கொண்டவர். அவர் பின்வருமாறு கூறுகிறார் .. " நௌசாத் மிகப்பெரிய வாத்தியக்குழுவை ஆரம்பித்தார். அவரிடம் நான் சேர்ந்தேன். அவருடைய இசை இந்திய செவ்வியலிசை சார்ந்ததாகவும் , மேலைத்தேய வாத்திய இசையும் நன்றாக இருந்தது." நௌஸாத்தின் இசைக்கு Ram Sign ,வயலினிஸ்டுக்களான Josique Menzies ,Anthony Consalves போன்றவர்கள் வாத்திய இசையின் ஒருங்கமைப்பாளர்களாகவும் [ Arrangements ] இருந்தனர். Anthony Consalves தனது அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

" நான் 1948 இல் இசையமைப்பாளர் ஷியாம் சுந்தரிடம் சேர்ந்தேன். அவருக்கு வாத்திய இசையிலும் , ஹார்மனி [ Harmony ] இசையிலும் மிகச் சொற்ப அறிவே இருந்தது. அவரது மெட்டுக்களில் நான் அமைக்கும் ஹார்மனிகளை கலப்பதற்கு என்னை அனுமதித்தார். ஆனாலும் அவருக்கு அவை புதிதாக இருப்பததால் சில கட்டுப்பாடுகளையும் விதிப்பார். சிலவேளைகளில் அனுமதிக்க மாட்டார். அது மெட்டை விட்டு வெளியே போகும் எனக் கருதினார். ராக , தாள முறைகளில் அவர் அமைக்கும் மெட்டுக்களை அதன் அமைப்புக்கு கெடாமல் , எந்தப் பிரச்சனையுமில்லாமல் நான் ஹார்மனியுடன் கலந்து கொடுத்தேன்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஹிந்தி திரைப்படத்திற்கு மேலைத்தேய இசையில் பரீட்சயமுள்ள , இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் தேவைப்பட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் கோவாப் பகுதிலேயே கிடைத்தார்கள்.

1950 களின் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி யின் வருகையுடன் Western Style of Music மேலும் வளம் பெற்றது. அவரது உதவியாளர்களாக kanu Gosh, Sebatean போன்றோர் இருந்தனர் இவ்விதம் ஹிந்தி திரையிசையின் போக்கை மேலோட்டமாகக் கூறுவதன் காரணம் யாதெனின் மெல்லிசைமன்னர்களின் இசை அவர்களை அடியொற்றியதாக இருந்து வந்தது என்பதைக் குறிப்பிடுவதற்கேயாகும். அன்றைய காலத்தில் நௌசாத் மிகப்பெரிய இசையமைப்பாளராக விளங்கினார்.

தமிழ் திரையிசையைப் பொறுத்தவரையில் நவீன இசையின் நாயகராக சி.ஆர்.சுப்பராமன் வருகிறார். மேலைத்தேய இசையின் கூறுகளான ஹார்மனி இசையை தனது படங்களில் பரீட்சித்து பார்த்த பெருமை அவரையே சாரும். தனக்கென்று புதிய பாணியை உருவாக்கினார். அவரது அந்த முயற்சியை அவரது இறுதிப்படங்களில் காணமுடியும். குறிப்பாக லைலா மஜ்னு படத்தில் பின்னணி இசையிலும் ,பாடல்கள் சிலவற்றிலும் காண முடியும்.

தமிழ் திரையில் புதுமை இசையின் அடையாளமாக விளங்கியவர் சி .ஆர் .சுப்பராமன்.. நெஞ்சில் நிறைந்து அழியாத இடத்தைப் பிடித்து நிற்கின்ற பல இனிய சாகாவரமிக்க பாடல்களையும் தந்த பெருமைக்குரியவர். சி.ஆர்.சுப்பராமன் ஹிந்தி திரையின் ஒப்பற்ற இசையமைப்பாளராக இருந்த நௌசாத்தின் இசைமுறையையே பின்பற்றினார். சுப்பராமனின் பல பாடல்கள் நௌசாத்தின் பாடல்களையே ஒத்திருக்கும். நௌசாத்தின் இசைப்பள்ளியை சேர்ந்தவரே சி.ஆர்.சுப்பராமன். சுப்பராமனின் இசைப்பள்ளியில் வளர்ந்தவர்கள் தானே மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர் ! ஆக மிக இயல்பாக நௌசாத் இசையின் தாக்கம் மெல்லிசைமன்னர்களின் இசையில் இருந்தது,

ஹிந்தி திரையிசையை வளப்படுத்திய நௌசாத் , அணில் பிஸ்வாஸ் , எஸ்.டி. பர்மன் , சலீல் சௌத்ரி போன்ற இசையமைப்பாளர்கள் நல்ல வாத்திய இசை கலைஞர் , உதவியாளர்கள் , இசைநடாத்துனர்கள் போன்றோர்களை தங்கள் இசையில் இணைத்துக்கொண்டு செயற்பட்டனர். குறிப்பாக சிறந்த வாத்தியக்கலைஞர்களையும் இணைத்துக் கொண்டனர். மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி ஒரு சிறந்த வயலின் வித்துவான் என்பது பலரும் அறிந்த செய்தி.

தாம் போடும் மெட்டுக்களை சுரப்படுத்தி எழுதவும் , பாடகர்களுக்கு அதை சொல்லிக் கொடுக்கவும் , பின் படங்களுக்கான பின்னணி இசையை ஒருங்கமைக்கவும் உதவியாளர்களை மெல்லிசைமன்னர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் ஜி.எஸ் .மணி , ஜி.கே.வெங்கடேஷ் , ஆர்.கோவர்தனம், ஹென்றி டானியல் , ஜோசப் கிருஸ்ணா போன்றவர்கள் புகழபெற்றவர்கள்.

அன்றைய காலத்தில் பிற இசையமைப்பாளர்கள் பலரும் உதவியாளர்களை வைத்திருந்தனர், கே.வி.மகாதேவனுக்கு புகழேந்தி , ஜி.ராமநாதனுக்கு சுந்தரம் , டி.பி.ராமசந்திரன் என பலரையும் உதாரணம் காட்ட முடியும். பாடல்களே மிக முக்கியமானவை என்ற நிலையிலும் ,இசையமைப்பாளர்களின் வேலை அதுமட்டுமே என்ற நிலையில் அன்றைய படங்களுக்கான பின்னணி இசையைப் பெரும்பாலும் உதவியாளர்கள் செய்தார்கள் என்பதும் முக்கியமானதாகும்.

பின்னணி இசைக்கு அதிகமான வாத்தியங்கள் பயன்படாத அக்காலங்களில் சில வாத்தியக்கருவிகளை வைத்தே நிறைவு செய்தனர். 1940 , 1950களில் வெளிவந்த படங்களை நாம் நோக்கினால் காட்சிக்குப் பொருத்தமான இசையென்றால் ஏற்கனவே வந்த ஒரு திரைப்பாடலோ அல்லது நன்கு தெரிந்த நாட்டுப்புற மெட்டோ பயன்படுத்தப்படும் வழமையை நாம் காணலாம். இந்த உத்தியை ஜி.ராமநாதன் படங்களில் அதிகம் காணமுடியும்.

மதுரைவீரன் படத்தில் பின்னணி இசையாக கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த " உன்னைக் கண் தேடுதே " மெட்டும் வேறு சில இடங்களில் ,அதே படத்தில் பாடலாக வரும் " தேடி வந்தேனே புள்ளி மானே " பாடலின் மெட்டும் பின்னணியாக ஒலிக்கும். இதே பாணியை மெல்லிசை மன்னர்களும் தமது ஆரம்பகாலப்படமான " தலை கொடுத்தான் தம்பி " படத்தில் அவர்கள் ஏற்கனவே குலேபகாவலி படத்தில் இசையமைத்த " சொக்கா போட்ட நவாப்பு " என்ற பாடலை வாத்திய இசையாகவும், அதே போல மகாதேவி படத்தில் சந்திரபாபு , கருணாநிதி தோன்றும் காதல் காட்சியில் " மன்மதலீலையை வென்றார் உண்டோ " பாடல் நீண்ட நகைச்சுவை இசையாக வெளிப்படுத்தியமை என்பது அந்தக்காலத்து பொதுவிதி எனலாம்.

பின்னணி இசையின் முக்கியத்துவத்தை அமெரிக்கத்திரைப்படங்கள் 1930களிலேயே மிக அற்புதமாக வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டன.ஐரோப்பாவிலிருந்து சென்ற செவ்வியல் இசை [ Western Classical ] தெரிந்த இசையமைப்பாளர்கள் அமெரிக்கதிரையில் புதிய காவியங்களை படைத்தனர். மேலைத்தேய சிம்பொனி இசைமரபில் பாண்டித்தியமிக்க இசைக்கலைஞர்கள் அமெரிக்கத்திரைப்படங்களுக்கான விரிந்த இசை ஓவியங்களை படைத்து திரையிசையைப் புத்தாக்கம் செய்தனர். அமரிக்கப் பிரமாண்ட தயாரிப்புகளுக்கு தகுந்த பிரமிக்க வைக்கும் இசையை ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் வழங்கி புதுமை காட்டினார்கள். 1930களில் Max Steiner என்ற வியன்னா இசைமரபில் வந்த இசையமைப்பாளர் மிகப்பிரமாண்டமான தயாரிப்பான King Kong படத்தில் Kong ஐ அறிமுகம் செய்யும் இசையும் , அதே இசை பெண்ணின் மென்மையான இசையாகவும் ,King Kong பெண்ணைக் கையில் வைத்திருக்கும் போது காதல் இசையாகவும் அது மலர்ந்து புதிய அதிசயங்களை நிகழ்த்தியது. Max Steiner ஐ தொடர்ந்து பல ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் ஹொலிவூட் திரையிசையை சிம்பொனி பாணியில் வளர்த்தெடுத்தனர்.

வெளிநாடுகளில் சில இசையமைப்பாளர்கள் இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்ப திரைப்படம் படமாக்குவதற்கு முன்னரேயே இசையமைப்பதும் , சில இசையமைப்பாளர்கள் படமாக்கிய பின்பு இசையமைப்பதும் என தங்களுக்கு இசைவாக தெரிவு செய்கின்றனர்.

இயக்குனர் ஸ்டிபன் ஸ்பீல்பர்க் தனது படங்களுக்கான இசையை படமாக்கிய பின்னர் இசையமைப்பாளர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுவது வழமை. ஆனால் The Good, the Bad and the Ugly . the films Once Upon a Time in the West and Once Upon a Time in America போன்ற படங்களின் இயக்குனர் Sergio Leone தனது படங்களின் இசையமைப்பாளரான Ennino Morricone முன்கூட்டியே இசையமைத்து வைத்திருக்கும் இசைக்க பொருத்தமாக தனது காட்சிகளை அமைப்பார்.

தமிழ் சினிமாவில் பின்னணி இசை என்பது ஒரு முக்கியமான அம்சமாகப் பேசப்பட்டது அல்லது அதற்கென தனிக்கவனம் செலுத்தப்பட்டது என்றால் அது இளையராஜா காலத்திலேயே! தனி இசைத்தட்டாக இளையாராஜா இசையமைத்து வெளிவந்த How To Name It என்ற இசைத்தொகுப்பை தனது வீடு படத்தின் பின்னணி இசையாகப் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.  இது போன்றதொரு நிகழ்வு தமிழ் சினிமாவுக்கே புதியதாகும்.

மேலைத்தேய திரைப்படங்களில் காலத்திற்கு காலம் இசையிலும் பலவிதமான புதிய முயற்சிகள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. சிம்பொனி இசை சார்ந்த செவ்வியல் இசை , ஜாஸ் , புளூஸ் , ரொக் , 1980 களில் புதிய சிந்தசைசர் சார்ந்த இசை என பலவகை இசை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. முதன் முதலில் சிந்தசைசர் இசை Chariot of fire என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டு பிரமிப்பு ஊட்டியது.

சினிமா இசை என்பது பலவிதமான இசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைக்கும் [ juxtaposition ] இசையாகும்.குறிப்பிட்ட சில செக்கன்களில் நிலைபெற்று ,மாறி மாறி வரும் காட்சிகளுக்கு தகுந்தவாறு அவை அமைக்கப்படுகின்றன. நாம் காணும் காட்சிகளுக்குத் தகுந்த மாதிரி கவலை, மகிழ்ச்சி , நகைச்சுவை என பலவிதமான உணர்வுகளை இசை வெளிப்படுத்துவதுடன் நாம் காணத்தவருகின்ற பிற சங்கதிகளையும் பின்னணி இசை வெளிப்படுத்துகிறது.

தமிழ் சினிமாவில் பின்னணி இசையில் புது உத்திகளை காண்பிக்க மெல்லிசைமன்னர்கள் தமது ஆரம்பகாலத்திலேயே முயற்சிகளை செய்தனர்

மகாதேவி [1957] மகாதேவி [1957] படத்தில் பின்னணி இசை என்பது முழுமையான அசத்தலான அதிரடி இசை என்று சொல்லலாம். முழுமையான வாத்திய இசையின் முழக்கத்தைக் கேட்க முடியும். கதையின் விறுவிறுப்பும் ,கவர்ச்சியான வசனங்களும் , சிறப்பானமுறையில் அமைக்கப்பட்ட வாள் சண்டைக்காட்சிகளும் , விறுவிறுப்பான குதிரை ஓட்டங்களும் கொண்ட நேர்த்தியான ஒரு படத்திற்கு சிறப்பான இசை மேலும் அணி சேர்த்திருக்கிறது. அன்றைய நிலையில் அப்படம் மிகச்சிறந்த , புதுமையான இசையைக் கொண்ட படம் என்று கூறலாம். நகைச்சுவைக்காட்சிகளிலும் இசை புதுமையாக இருக்கும். படம் பார்ப்பவர்களை அந்ததந்த உணர்ச்சிகளுக்குள்/ உள்ளிழுக்கும் வகையில் இசையும் இருக்கும்

பாசவலை ,ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ,தலை கொடுத்தான் தம்பி போன்ற ஆரம்பகால படங்களிலும் மெல்லிசைமன்னர்களின் வாத்திய இசையில் இருந்த ஆர்வத்தைப் பின்னணி இசையில் காண்கிறோம்.ஆயினும் 1960களிலேயே அதன் தொடர்ச்சியாக புதிய இசை பிரவாகம் உச்சம் பெறுகிறது. தொடர்ச்சியாக வெளியான படங்களில் அவர்களது இசை விரிந்து செல்கிறது.

பின்னணி இசை பற்றி கூறும் போது அவை காட்சிகளுக்கேற்ற வகையில் வாத்திய இசையாக இருக்கின்ற அதே வேளை படத்தின் முன்னிசையிலும் [ Title Music ] வாத்திய இசையில் சிறப்பான கவனம் செலுத்தியதுடன் புதிய கற்பனைகளுக்கும் இடம் கொடுத்து புதிய ஒலியமைப்பை உருவாக்கிக் காட்டினார்கள்.

பின்னணி இசையில் முக்கியமானதொரு அம்சமாகக் கருதப்படும் theme music என்ற வகை முக்கியமாகக் கருதப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அடையாளப்படுத்துவதாகவும் , சில முக்கிய சம்பவங்களை நினைவுபடுத்துவதாகவும் அமைக்கப்படுகின்ற இசையாகவும் , சில சமயங்களில் திரும்பத்திரும்ப வெவ்வேறு விதங்களில் ஒலிக்கும் இசையாகவும் அமைக்கப்படும் இசையாகும்.

ஒருபடத்தின் முக்கியமான ஒரு பாடல் கூட Theme Music ஆக அமைவதுடன் அவற்றை தமது டைட்டில் இசையாகவும் மெல்லிசைமன்னர்கள் மிகச் சிறப்பான முறையில் கையாண்டு இசை உயிர்ப்பின் ஓட்டத்தை வெளிப்படுத்தியிருப்பர். அதில் சிறப்பு என்னவென்றால் ஒரு மெட்டை பலவிதமாக இசைத்து அதன் உள்ளோசைகளை வெளிப்படுத்துவதுடன் ,அதை பல கோணங்களிலிருந்து பார்த்து கற்பனைகளில் விளையாடி இசையின் இன்பங்களை , அதன் பல்வேறு சாத்தியப்பாடுகளை வெளிப்படுத்துதலாகும். இதனை மேலைத்தேய இசையிலேயே அதிகமாக நாம் காணலாம். குறிப்பாக சிம்பொனியில் அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்கள் இதனை Music Variation என அழைப்பர்.

தமிழ்திரைப்படங்களைப் பொறுத்தவரையில் பாடல்களை போலவே நாட்டுப்புற இசை , செவ்வியலிசை , மேலைத்தேய இசை போன்றவை பின்னணி இசைக்கு பயன்பட்டுள்ளன. இதில் அதிகமான வேறுபாடுகளை முதன் முதலில் காண்பித்த பெருமையும் மெல்லிசைமன்னர்களையே சாரும்.

கதையின் போக்குகளுக்கேற்ப இசையைப் பயன்படுத்தி காட்சிகளுக்கு உயிர் கொடுத்தார்கள். எல்லாவிதமான உணர்வுநிலைகளையும் இசையால் வெளிப்படுத்தி ரசிகர்களை கதையுடன் ஒன்ற வைத்தார்கள். சோகக்காட்ச்சிகளில் நெகிழ்ந்து அழவைக்கவும் , காதல் காட்சிகளில் மகிழ்வூட்டவும், நகைச்சுவைக் காட்சிகளில் கலகலப்பூட்டவும் , பயஉணர்வை வெளிப்படுத்த மிரட்டும் இசையாக பீதியூட்டவும் புதிய வாத்தியங்களில் புதுப்புது இசைப்படிமங்களை உருவாக்கிக் காட்டினார்கள்.

வார்த்தையால் , ஏன் சில சமயங்களில் காட்சிகளால் கூட விளக்க முடியாத உணர்வனுபவத்தை இசையால் உணர்த்த முடிந்ததுடன் , படத்தைப் பார்க்காமலேயே அதன் ஒலிவடித்தைக் கேட்கும் போது அவை இன்னென்ன காட்சிகளை வெளிப்படுத்துகிறது என்று ரசிகர்களை கூற வைக்குமளவுக்கு புதிய படிமங்கள் இசையில் உருவாகின. குறிப்பாக நாகேஷின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு அவர்கள் கொடுத்த வழுக்கி , வழுக்கி ஓடும் இசை தனித்துவமிக்கதாகும். நாகேஷின் நகைச்சுவை நடிப்பின் குறியீடாக பயன்படுத்திய நகைச்சுவை இசை தனித்துவமானது. பணத்தோட்டம் படத்தில் நாகேஷ் மற்றும் நகைச்சுவை நடிகர் வீரப்பன் தோன்றும் காட்சிகளில் மியூட் ரம்பட் , பியானோ , கஸ்டாநெட், பொங்கஸ் , எக்கோடியன் போன்ற வாத்தியங்களை பிரமிக்கத்தக்க வகையில் பயன்படுத்தினார்கள். இந்தவகை இசையை 1970கள் வரை பயன்படுத்தினார்கள்.

உணர்வுகளை குறியீடாகப் பயன்படுத்திய ஓர் மரபு தமிழுக்குண்டு. ராகங்களின் நுண்ணிய உணர்வுகளை மெல்லிசைமன்னர்களும் பயன்படுத்தினார்கள். பொதுவாக மோகனம் என்ற ராகம் மகிழ்ச்சியின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதை பாதகாணிக்கை படத்தில் ஜெமினி , சாவித்ரி நாடகக்காட்சியில் குழலிசையாகவும் , அதே போல கல்யாணி ராகத்தை படங்களின் ஆரம்பக்காட்சியில் மகிழ்ச்சியின் சூழலைக் காட்டவும் பயன்படுத்திருப்பர். பாவமன்னிப்பு படத்தின் முதல் காட்சியில் கல்யாணி ராகம் பின்னணி இசையாக வரும். இது போல ஏராளமான படங்களில் இந்த முறையைக் கையாண்டுள்ளனர்

அதே போல சோக உணர்வை வெளிப்படுத்த சிவரஞ்சனி ராகத்தையும் , அதற்கிணையாக ஏனைய பல ராகங்களையும் மெல்லிசைமன்னர்கள் ஏராளமான படங்களில் பயனப்டுத்தினார்கள். மெல்லிசைமன்னர்கள் தமது ஆரம்பக் காலத்தில் இசையமைத்த பதிபக்தி படத்தில் தாயுடன் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்து கொண்டே சாவித்திரி சட்டி பானைகளை விற்பதற்கு எடுத்து வைக்கும் காட்சியில் , காட்சியை இடையூறு செய்யாத மெல்லிய பின்னணி இசையாக சிவரஞ்சனி ராகத்தை , ஆர்ப்பரிக்கும் இசையாகவும் வயலின் சேர்ந்திசையாக நெஞ்சை உருக்கும் சோக இசையாகவும் இசைத்து இனம்புரியாத உணர்வுகளையெல்லாம் வெளிக்கொணர்ந்திருப்பர்.

ஒருபடத்தின் குறிப்பிட்ட ஒரு பாடலை எடுத்துக் கொண்டு அதை பல்வேறு சூழ்நிலைகளுக்குத் தகுந்தமாதிரி பலவிதங்களில் இசைப்பது மட்டுமல்ல ,அதனை டைட்டில் இசையாகவும் பயன்படுத்தி இனிமை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்களே ! குறிப்பாக பார் மகளே பார் , பாலும் பழமும் , நெஞ்சம் மறப்பதில்லை , காதலிக்க நேரமில்லை , புதியபூமி , பெற்றால் தான் பிள்ளையா, பணம் படைத்தவன் போன்ற படங்களில் வரும் டைட்டில் இசை என்பதே அந்தந்தப் படத்தின் பாடல்கள் தான். வேறு சில படங்களில் , அந்தப்படத்தில் இடம் பெற்ற இரண்டு மூன்று பாடல்களின் கலவையாக டைட்டில் இசை இருக்கும். கவலை இல்லாத மனிதன் படத்தின் டைட்டில் இசையில் அப்படத்தின் எல்லாப்பாடல்களும் வாத்திய இசை மாலையாக அமைத்திந்திருக்கும். அதே போல பாசம் படத்தின் டைட்டில் இசையாக சிறுவன் ஒருவன் தவறு செய்து சிறைக்கு செல்வதும் , மீண்டும் பெரியவனாக வளர்வதுமாக வரும் காடசியின் பின்னணியிசையாக கானடா ராகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, பல்வேறு விதங்களில் இசைத்து பருவ காலமாற்றத்தை காண்பித்ததுடன் அந்த சிறுவன் வளர்ந்து எம்.ஜி.ஆறாக வருவதுமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

பாசம் படத்தில் சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நாயகன் ஊரைவிட்டுப் போன தனது தாயைத் தேடி அலையும் காட்சியில் " உலகம் பிறந்தது எனக்காக " பாடலின் வாத்திய இசையாக வரும். வயலின் சோலோவாக தொடங்கும் இசை எக்கோடியன் பொங்கஸ் , குழு வயலின் இசையுடன் மயங்கி விழும் இடம் மற்றும் திருடர்கள் இருக்கும் இடம் வரை வரும் . அதைத் தொடரும் திருடர்கள் அவருக்கு சாப்பாடு கொடுக்கும் காட்சி வசனங்களற்று வரும் இடத்தில் எக்கோடியன் , மேண்டலின் , குழு வயலினிசை என ஒரு என ஒரு இசைநாடகத்தையே நடாத்திக்காட்டுகிறார்கள் இசையமைப்பாளர்கள். நாயகன் திருடனாவது அந்தக்காட்சியின் மூலம் காட்டப்படுகிறது

பாவ மன்னிப்பு டைட்டில் இசை மத ஐக்கியம் குறித்த கதைக்கு முதன் முதலில் கோயில் இசையும் அதைத்தொடர்ந்து சர்ச் இசையும் ஒலிக்கும் இந்த இசையில் புதுமையான ஹோரஸ் இசையும் , விறுவிறுப்பான வயலின் இசையும் அதைத் தொடர்ந்து பொங்கஸ் தாளத்துடன் இணைந்து வரும் "வந்த நாள் முதல் " பாடலின் மெட்டில் பலவிதமான பாணிகளில் [Variations ] இசை இணைந்து வரும்.. அதைத் தொடர்ந்து வரும் கோயில் காடசியின் பின்னணியில் மங்களகரமான கல்யாணி ராகம் பின்னணியுடன் இணைந்து படத்தின் முதல் காட்சியாய் மலரும் !

பாதகாணிக்கை இந்தப்படத்தின் முகப்பு இசையில் [Title Music] ரேவதி, சாருகேசி , ஹமீர் கல்யாணி, சாரங்கா உள்ளிடட ராகங்களை ராகமாலிகையாக அமைத்திருப்பார்கள் ஆரம்பிக்க காட்சியில் கோயிலிலிருந்து நாதஸ்வரத்துடன் கதாபாத்திரங்கள் ஊர்வலமாக வருவதும் கிராமிய சூழலை மிக அற்புதமாக வெளிப்படுத்தும். ஜெமினி கணேஷன், விஜயகுமாரி மற்றும் சாவித்திரி என முக்கோணக்காதலை வெளிக்காட்டும் இந்த திரைப்படத்தில் இந்தப்பாத்திரங்கள் அறிமுகமாகும் காட்சிகளில் மோகனராகம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

கற்பகம்: கற்பகம் படத்தில் பண்ணையார் ரங்காராவ் , தனது மாப்பிள்ளை ஜெமினியின் நற்குணத்தை பார்த்து பெருமைப்படும் போது தனது மகளை பார்த்து “எப்படி” என்பது போல ஒரு பெருமிதப்பார்வை பார்ப்பார் , அப்போது வெட்கமும் ,பெருமிதமும் கொள்ளும் கே.ஆர்.விஜயா முகம் காட்டப்படும் போது ஒரு சொற்ப நேரத்தில் குழலிசை ஒலிக்கும் !

அதே போல ஜெமினியை இழிவுபடுத்துவதாக எண்ணி அகங்காரம் பிடித்த முத்துராமன் "அவனை உங்க மருமகன் ஆக்குங்க..எனக்கென்ன " என்று சொல்லும் பொழுதில் , ஆனந்தத்துடன் குதூகலிக்கும் ரங்காராவ் " இப்போ தாண்டா நீ உருப்படியா ஒரு செய்தி சொல்லியிருக்கிறாய் " என்ற இடத்தில் ஒரு குதூகலமான குழலிசை வரும்!

கற்பகம் படத்தில் அண்ணனின் மகளில் பாசம் வைத்து வளர்க்கும் கே.ஆர்.விஜயா - ஜெமினி தம்பதிகள் , குடும் பத் தகராறால் பிரித்தெடுக்கப்படும் குழந்தையின் பிரிவால் வாடும் காட்சி தொடக்கம் , பாசமற்ற உண்மையான தாய் , தந்தையுடன் அந்நியப்பட்டு குழந்தை தப்பி ஓடிவந்து விஜயாவிடம் வந்து சேருவதும்,குழந்தையின் தாய் ஷீலா பலவந்தமாக பறித்து செல்லுவதும் , குழந்தை கதறுவதும் அவர்களைத் தொடர்ந்து விஜயா ஓடிவருவதும் , அதே நேரத்தில் வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டு நின்ற முரட்டுக்காளை கட்டறுத்துக் கொண்டு ஓடி வந்து குழந்தையை முட்ட வரும் போது விஜயாவை முட்டுவதும் அந்தக்கணத்திலேயே விஜயா மரணமடைவதுமான அந்த நீண்ட தொடர் காட்சியில் வரும் பலவிதமான பின்னணி இசையும் . திருமணத்தில் சோகமான ராகமான கானடா ராகத்தையும் , முதலிரவுக்காட்சியில் சோகமான வகையில் " ஆயிரம் இரவுகள் " பாடல் ஒலிப்பதும் அந்தக்காட்சிகளைத் தொடர்ந்து படம் முடியும்வரை , உணர்ச்சி மிகுந்த பல காட்சிகளில் அங்கங்கே நெஞ்சைத் தொடும் இசையை மெல்லிசைமன்னர்கள் வழங்கியிருப்பார்கள்.

வாத்திய இசை ஜாலங்கள்; தென்னிந்திய ,வட இந்திய வாத்தியங்களுடன் மேலைத்தேய வாத்தியங்களை கலந்து மெல்லிசைமன்னர்கள் பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் அதிகமான அளவில் தங்களுக்கு எட்டிய வாத்தியங்களையெல்லாம் ஒன்று விடாமல் 1960களிலேயே பயன்படுத்திக்காட்டினார். அதற்கேற்ற சிறந்த கலைஞர்களும் அவர்களுக்கு அன்று கிடைத்தனர். ஒவ்வொரு வாத்தியத்திலும் அவர்கள் தலைசிறந்த கலைஞர்களாக விளங்கினர் என்பதை அன்றைய வாத்தியக்கலைஞர்களாக இருந்த பலர் கூறியிருக்கின்றனர். குறிப்பாக இசைஞானி இளையராஜா " விஸ்வநாதன் இசைக்குழுவில் இருந்த பியானோ கலைஞரான பிலிப் போன்றோருக்கு அருகில் போகவே பயமாக இருக்கும் ; அவ்வளவு திறமைசாலிகள் " என்று குறிப்பிட்டுள்ளார்.

மெல்லிசைமன்னர்களின் இசையில் பின்னணியாக ஒலித்த வாத்தியங்களில் புல்லாங்குழல் ,வயலின் ,செனாய் , பியானோ போன்ற வாத்தியங்களை மிக அதிகமாய் பயன்பட்டன எனலாம். குறிப்பாகக் குழலிசை வார்த்தையில் சொல்ல முடியாத அளவில் எண்ணிறைந்த படங்களில் பயன்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல குழு வயலின் இசையை அற்புதமாகக் கையாண்டு வியக்க வைத்தார்கள்.

பாலும் பழமும் படத்தில் மனைவின் பிரிவால் சிவாஜி வாடும் பழைய நினைவுகளை மீட்டும் காட்சியில் ஒத்தடம் கொடுக்கும் குழலிசை , அதனுடன் இசைந்து வரும் வயலின், எக்கோடியன் என பின்தொடரும் இதயத்தைத் தொடரும் இசை ! அதே போல ஆராய்ச்சி செய்து களைத்து சிவாஜி உறங்கும் காட்சியில் அருமையான குழலிசை. அதே போல பாசம் படத்தில் எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி மாட்டு வண்டியில் போகும் போதும் இனிய குழலிசை வரும். கர்ணன் படத்தில் சிவாஜி தேவிகாவை சந்திக்கும் முதல்காட்சியில் வரும் கனிந்த குழலிசை. புதிய பறவை படத்தில் சிவாஜி சரோஜாதேவியுடன் தேயிலைத் தோட்டத்தில் நடந்து வரும் காட்சியில் வயலினிடன் இணைந்த இனிய குழலிசை அருமையாக இருக்கும். அதே படத்தில் உறக்கம் கலைந்த சரோஜாதேவி, சிவாஜியுடன் உரையாடும் இரவுக்காட்சியில் வரும் பின்னணி இசையில் வயலின் ,எக்கோடியன், ஹம்மிங் என கலந்து வரும் இனிய இசையில் குழலும் கலந்து இனிமை சேர்க்கும்..

தந்திக்கருவிகளில் தலையாயது வயலின் என்பார்கள். மேலைநாட்டு செவ்வியலிசையிலும் பிரதான பங்குவகிப்பது வயலின் இசைக்கருவி என்பதுடன் உலக சினிமாக்களிலும் கனதியான இசையைத் தரும் கருவி வயலின் என்றால் மிகையல்ல ! மெல்லிசைமன்னர்கள் அதன் சிறப்பறிந்து எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் பொருத்தமாக பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் பயன்படுத்தி வெற்றி கண்டார்கள்

குறிப்பாக மேலைத்தேய பாணியை இசையை சில படங்களில் கையாண்ட மெல்லிசைமன்னர்கள் ஹார்மோனி இசைக்கு இசைவாக குழு வயலின் இசையை அற்புதமாக பயன்படுத்தியமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக, அவர்களின் பொற்காலம் எனக்கருதப்படும் 1960களில் வெளிவந்த புதிய பறவை , பணத்தோட்டம் , பாலும் பழமும், பாவமன்னிப்பு மற்றும் இன்னும் படங்களைக் கூறலாம். ஆனால் பின்னணி இசையில் அவர்களின் படைப்பாற்றலின் உச்சம் , நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வெளிப்பட்டது என்று நான் கருதுகிறேன்.

பொதுவாக கதை சொல்வதில் ஒரு இயந்திரகதியான வேகம் இருந்த தமிழ் திரைப்படச் சூழலில் இசையமைப்பாளர்களுக்கு அதிக இடமிருப்பதில்லை. விரைவான கதை நகர்த்தல் ,எடிட்டிங் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பின்னணி இசைபற்றிய அதிக விழிப்புணர்ச்சியும் அந்தக்காலத்தில் இருக்கவில்லை. திரைக்காட்சிக்கு பின்னால் ஓடும் ஏதாவது ஒரு சத்தம் இருப்பது என்றே கருதப்பட்டது.

ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படம் ஒரு சாதாரண கதை என்றிருந்தால் அதுவும் ஏனைய படங்களை போலவே தான் இருந்திருக்கும். ஆனால் அந்தப்படம் மனதில் பயபீதியை எழுப்பக்கூடிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதால் தனியே வசனங்களாலோ , பாடல்களாலோ அந்த உணர்வைக் கொண்டுவர முடியாது என்பதால் மட்டுமே பின்னணி இசையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. அந்த இசை இல்லையென்றால் படத்தில் எந்த உணர்வும் சரியாக வெளிப்பட்டிராது போயிருக்கும்.

சாதாரண நடைமுறை வாழ்வில் கேட்க ஆவலைத் தூண்டும் பேய் ,பிசாசு கதைகள் போன்றவற்றிற்கு தனியிடம் இருந்து வந்துள்ளது. மந்திர தந்திர , பேய், மறுபிறவி போன்றவை பற்றிய புனைகதைகளைக் கேட்பதில் பொதுவாக மனிதர்களுக்கு எப்போதும் ஒரு ஆவல் இருந்து வந்திருக்கின்றது.நம்மையும் ,நமது சூழலையும் ஏதோ ஒரு மர்மம் சூழ்ந்திருப்பதாக மனதில் ஒரு இனம்புரியாத பயம் மனிதர் மனதில் ஓட்டிக்கொண்டே இருக்கிறது. அதன் மேல் கட்டப்பட்ட கற்பனைக்கதை தான் நெஞ்சம் மறப்பதில்லை. முற்பிறப்பு பற்றிய கற்பனைக்கதை! ஹிந்தியில் திலீப்குமார் - வையந்திமாலா நடித்துப் புகழ்பெற்ற மதுமதி படத்தின் பாதிப்பு கொண்ட கதை! பாடசாலை விடுமுறைக்கு நண்பனின் ஊருக்குச் செல்லும் கதாநாயகன் அங்கு அனுபவிக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் கதையாகச் சொல்லப்படுகிறது. ஊருக்கு உள்ளே போகும்போதே தனக்கு ஏற்கனவே அந்த இடங்கள் பரீட்சயமாக உள்ளதை உணர்கிறான்.

நண்பனின் வீட்டிலேயே பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நண்பனது சகோதரி பற்றிய மர்மத்தையும் அவள் சில மாதங்களுக்கு முன் தண்ணீர் எடுக்க சென்று நீண்ட நேரம் காணாமல் போனதாகவும் , தேடி போன போது, ஊருக்கு எல்லையிலிருக்கும் ஒரு பாழடைந்த மண்டபத்தின் அருகில் உள்ள பூங்காவில் சித்தப்பிரமை பிடித்த நிலையில் இரவு வரை நின்றதாகவும் , அதிலிருந்து அவளை ஒரு அறையில் பூட்டி வைத்திருப்பதாகவும் நண்பன் கூறுகிறான். “அந்த பாழடைந்த மண்டபத்திற்கு யாரும் போவதில்லை, அங்கே பேய்கள் இருப்பதாகவும் “ நண்பன் கூற கதாநாயகக்கனுக்கு அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. அன்றிரவே தனியே இரண்டு மைலுக்கு அப்பால் இருக்கும் அந்த பாழடைந்த மண்டபத்தை பார்க்க எல்லோரும் உறங்கிய பின் புறப்படுகிறான். அவனுடன் மெல்லிசைமன்னர்களின் இசையும் பின் தொடர்கிறது.

//…வீட்டிலிருந்து மெதுவாக நடக்கின்றான்..சுழலும் வயலினிசை ஆரம்பித்து முடிய காட்டுக்குள் பிரவேசிக்கும் காட்சி ஆரம்பிக்கிறது ,, அபபோது எக்கோடியன் , கிளாரினெட் வாத்தியங்களை இசைக்க காட்டுப் பறவைககள் , புள்ளினங்கள் சத்தம் இரவின் ஒலிநயங்களுடன் அசைகிறது….பங்களாவை சற்று நெருங்கும் போது சைலபோன் இசைக்கருவியின் அதிர்வோடு பறவையினங்களின் ஒலி ஓங்கி ஒலித்து மறைகிறது….இப்போது பறவைகளின் ஒலிமட்டும் கேட்கிறது ,,, திடீரென பலமாக வயலினிசை ஒலிக்க மெல்லிய புகைகளினூடே ஒரு வெள்ளை உருவம் கலந்து மறைகிறது… இப்போது பாழடைந்த மண்டப வாசல் தெரிகிறது ..காற்று ஒலியுடன் நரிகளின் ஒலியும் கேட்கிறது...மண்டப வாசலை நெருங்கிவிட்டான் .. குருவியின் ஒலியுடன் சைலபோன் கருவியும் ஒலித்து மறையும் தருணம் பின்னாலிருந்து ஒரு பெண்ணின் ஓலம் ஹம்மிங்காய் [ நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலின் ஹம்மிங் ] எழுகிறது...கதாநாயகன் சற்றுப்புறமும் தேடுகிறான்….ஆனால் யாரையும் காணவில்லை ...காற்று ஓசையுடன் கிளாரினெட் மற்றும் குழு வயலின் இசை ஆரம்பிக்கிறது..கமரா மண்டபத்தின் பக்கவாட்டிலிருந்து பிரதான வாசலை நெருங்குகிறது ...மீண்டும் அந்தப் பெண்ணின் அழுகை ஒலி ஹம்மிங்காக ஒலிக்கிறது ...சற்றுமுற்றும் பார்த்த நாயகன் குனிந்து திரும்புகிறான் ..அப்போது நிலத்திலிருந்து , சருகுகள் காற்று வேகத்தில் பறக்க , யாரோ நடப்பது போல சலங்கை ஒலியும் கேட்கிறது….நாயகன் மண்டபவாசலை நோக்கித் திரும்புகிறான்...உள்ளே இருந்து வெள்ளைப்புகையிலிருந்து ஓர் பெண் வெள்ளை உருவாக அவனை நோக்கி கிட்ட வந்ததும் மறைந்து விடுகிறாள் ..பயந்து போகிற நாயகன் , காடுகளைக் கடந்து தலை தெறிக்க தனது வீடு நோக்கி ஓடி வீடு சேர்கிறான்….அப்போது குழு வயலின்இசை உச்சம் பெறுகிறது … நாயகன் வேர்த்து விறுவிறுத்து ஓடி பாதுகாப்பாக வீடு வந்து சேர்கிறான்…. //

பாழடைந்த மண்டபத்தைப் பார்த்த ஆவல் முழுமையடையாததால் அடுத்த நாள் இரவு மீண்டும் செல்கிறான். மீண்டும் மெல்லிசைமன்னர்களுக்கு அருமையான வாய்ப்பாக அமைகிறது.

மீண்டும் இரவுக்காட்சி இரவு சாப்பாடு முடித்தபின் உறக்கமில்லாமல் தவிக்கும் நாயகன் சிகரெட் புகைத்த வண்ணம் அங்குமிங்கும் உலாவுகிறான். மீண்டும் பாழடைந்த மண்டபத்தில் ஒலித்த பெண்ணின் அவலமும் , துயரமும் கலந்த ஓலம் [ Humming] காதில் ஒலிக்கிறது.எங்கும் நிசப்தம் .. சற்றுமுற்றும் பார்க்கிறான்... மீண்டும் அதே அவளை ஓலம் சற்று நீண்டு ஒலிக்கிறது...மீண்டும் இரவின் அமைதி ஒலி..! மேல்மாடியிலிருந்து படிகளிலிருந்து கீழே இறங்கி வருகிறான் ....[ இனம் புரியாத உணர்வை வெளிப்படுத்துவது போல வயலினிசை மேலெழும்புகிறது ].. வயலின் முடியும் தருணத்தில் மீண்டும் நாயகன் காட்டுக்குள் நுழையும் காட்சி ஆரம்பிக்கிறது. - அந்தக்காட்சியில் வயலினுடன் , ஓபோ , குழல் இணைந்து கொள்ள இரவு ஒலியுடன் , காற்றின் ஒலியும் இணைந்து நீண்டு ஒலிக்க … மண்டப வாயிலில் நின்று திரும்பிப் பார்க்கும் போது திடீரென வெண்தாடி வைத்த கிழவனின் கோர உருவம் கண்ணில் தென்பட அதிர்ச்சியில் வீழ்கிறான்..[ அந்தக்காட்சியில் வயலினிசை உச்சம் பெற்று ஒலிக்கிறது ] விழுந்தவன் ஓடிவந்து மீண்டும் அந்த இடத்தை பார்க்கிறான், அவன் பார்த்த அந்த உருவம் மறைந்துவிட்டது. [ வயலின் இசை மீண்டும் ஒலிக்கிறது ] பயத்தில் அங்கிருந்து தப்பியோட முயற்சிக்கும் போது தடக்கி விழுந்து விடுகிறான். எழுந்து தன்னைச் சுதாரிக்க முனையும் போது மீண்டும் அந்தப் பெண் குரலின் அவலம் அவனைத் தடுக்கிறது.

திரும்ப வருகிறான் ...[ வயலின் குழு இசையும் , புல்லாங்குழல் இசையும் இணைந்து திடீர் அதிர்ச்சி கொடுக்க வெள்ளை உடை உடுத்திய ஓர் பெண் உருவம் தெரிகிறது.. வயலின் இசை மேலெழுகிறது.. அந்தப் பெண்ணை நோக்கி நாயகன் மண்டபவாசலின் படியேறுகிறான் ...அவளைத் தேடுகிறான் ... [ அந்த 10செக்கனிலும் வயலின் இசை ஒலிக்கிறது ].. மீண்டும் பெண் குரல் நீண்டு ஒலிக்கிறது.... நாயகன் அவளை நோக்கி நடந்து நெருங்குகிறான். காற்றின் அசைவில் ஒலிகேட்க மண்ணில் கிடந்த சருகுகள் காற்றில் அசைந்து போகின்ற அதே வேளையில் யாரோ நடக்கும் நடந்து போகும் ஒலி போலவும் சலங்கை ஒலியும் இணைகிற போது அதைத்தொடர்ந்து வயலினிசையும் , ஓபோ இசையும் கலந்து ஒலிக்கும் கனிந்த இசையுடன் மீண்டும் பாடல் ஆரம்பிக்கிறது! "நெஞ்சம் மறப்பதில்லை " பாடலின் பல்லவி நீண்டு ஒலித்து , ஒற்றைக் குயிலின் அழுகுரலுடன் நிறைவடைகிற போது அந்தப்பெண்ணின் உருவமும் புகையாய் மண்டபச்சுவரில் மறைகிறது

மண்டபச் சுவரை நாயகன் உற்றுப் பார்க்கிறான்… மண்டபச்சுவரில் தெரியும் ஓர் ஆணின் மங்கிய உருவம் அவனைப்போலவே இருப்பதை பார்க்கும் போது மீண்டும் அந்தப்பெண்ணின் பாடல் கேட்கிறது... நிசப்தம் ..நாயகன் முகம் க்ளோசப்பில் காட்டப்படுகிற வேளையில் இரவு பூச்சி , புள்ளினங்கள் ஒலி மட்டும் கேட்கிறது... திடீரென மாடிப்படியிலிருந்து பெரிய கல் ஒன்று உருண்டு விழுகிறது ... மீண்டும் அமைதி ,, இரவின் ஒலி மட்டும் கேட்கிறது ... மீண்டும் வயலினிசை எழுகிறது ..அதனுடன் சைலபோனும் ஒலித்து ஓய… திடீரென இன்னுமொரு ஓவியம் [ நம்பியார் ] சுவரில் தெரிகிறது ..ஓவியத்தை உற்றுப் பார்க்கின்றான்.... அமானுஷ்யம் தரும் சைலபோனும் , வயலினும் இணைந்து வரும் இசையுடன் காற்றின் வேகமும் இணைந்து தொடர சுவரிலிருந்த நம்பியார் ஓவியம் எக்காளமிட்டு சிரிப்பது தெரிகிறது .. நாயகன் முகம் காட்டப்படுகிறது ..ஏதோ ஒரு தெளிவு பிறந்தது போல முகம் மாறுகிறது.. காட்சி நினைவுச் சுழி போல சுழல்கிறது ...அந்த நினைவுச் சுழி நதி நீரோட்டத்தில் கலந்து வருகிறது ... நாயகன் முகம் அதனுடன் இணைத்துக் காட்டப்படுகிற அந்த காட்சியில் எரிமலை ,கடல் கொந்தளிப்பு , மேகங்களின் விரைந்த ஓட்டம் , மின்னல் வெட்டு எனக் காட்சிகளின் அடுக்கப்பட்ட [ Montage ] தொகுப்பாக காட்டப்படுகிறது.

அப்போது நாட்டுப்புறப்பெண்ணாக நாயகியின் [ தேவிகா ] உருவமும் , நம்பியாரின் உருவமும் நாயகனுக்கு தெளிவாகத் தெரிகிறது .... அதோடு பழைய நினைவுகளுக்குத் திரும்புவதாக பாடல் ஆரம்பிக்கிறது .. படத்தின் கதையும் Flashback ஆக ஆரம்பிக்கிறது!

மெல்லிசைமன்னர்களின் பின்னணி இசையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பின்னணி இசை மிக முக்கியமானதொரு அம்சமாகும். இது போன்றதொரு ஹார்மோனி இசையான சிம்பொனி அமைப்பு சார்ந்த இசையை அவர்கள் வேறு படத்தில் பயன்படுத்தவில்லை அல்லது இவ்வளவு விரிந்த இசைக்கான ஒரு களம் - வெளி அவர்களுக்கு வேறு படங்களில் கிடைக்க வில்லை என்று எண்ணுகிறேன்.

" நெஞ்சம் மறப்பதில்லை " என்ற படத்திற்கு நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை அமைத்து , அதையே படத்தின் Theme Music ஆகப் பயன்படுத்தியதுடன் அந்த மெட்டைச் சார்ந்தே பின்னணி இசையை பலவிதமாக, மேலைத்தேய இசை முறையில் சொல்வதானால் Music variations என்ற அமைப்பு முறையை பயன்படுத்தி சாதனை படைத்தார்கள். இந்த Music variations என்ற இசைநுட்பத்தை மேலைத்தேய செவ்வியலிசைக்கு [ Western Classical ] அறிமுகம் செய்து புகழ் பெற்றவர் ஜோசப் ஹைடன் என்பவராகும். இந்த வகை இசையை மேலைத்தேய இசை நன்கு தெரிந்தவர்களே இசையமைக்க முடியும்.க ட்டுரையின் ஆரம்பத்தில் ஹிந்தி திரையிசையில் பெரிய ஜாம்பவான்களாயிருந்த நௌசாத் , அணில் பிஸ்வாஸ் போன்றோருக்கு அவர்கள் அமைக்கும் மெட்டுக்களிலேயே , அவர்களின் அனுமதியுடன் அவர்களின் உதவியாளர்களாயிருந்த அல்லது வாத்தியக்கலைஞர்களை ஒருங்கிணைப்பாளர்களாயிருந்த கோவாவைச் சேர்ந்த மேலைத்தேய இசை தெரிந்த கலைஞர்கள் எவ்விதம் கார்மோனி இசையை அமைத்துக் கொடுத்தார்கள் என்ற குறிப்பைத் தந்தேன். அதுபோல ஒருவராக மெல்லிசைமன்னர்களின் உதவியாளராக இருந்த ஹென்றி டானியல் இருந்திருப்பார் என நினைக்கிறேன்.

மெல்லிசைமன்னர்களின் பின்னணி இசையில் முக்கிய பங்காற்றியதில் வயலின் முக்கியமானது. மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி ஒரு சிறந்த வயலின் வித்துவான் என்பது முக்கியமானதாகும். நல்ல வயலின் கலைஞர்களும் அவர்களது இசைக்குழுவில் இருந்ததுடன் அவர்களது உதவியாளர்களாகவும் இருந்துள்ளனர். பிற்காலத்தில் புகழபெற்ற இசையமைப்பாளராக வளர்ந்த சியாம் என்பவர் சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர் முட்டுமல்ல மெல்லிசைமன்னர்களின் பலஉதவியாளர்களில் ஒருவரான ஹென்றி டானியல் சிறந்த இசைநடாத்துனராகவும் [ Conductor ] வயலின் பகுதிக்கு பொறுப்பானவர்கவும் விளங்கினார். ஹென்றி டானியல் உதவியாளராகப் பணியாற்றிய படங்களில் வயலின் இசை அற்புதமாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.

பொதுவாக மெல்லிசைமன்னர்களுக்கு பல இசை உதவியாளர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்களில் ஹென்றி டானியல் பற்றி இதுவரை யாரும் பேசியதும் இல்லை , தகவல்களும் இல்லை. ஆனால் எனது அவதானத்தில் அவர் உதவியாளராக இருந்த அத்தனை படங்களிலும் வயலினிசை சிறப்பாக இருப்பதையும் மேல்நாட்டு ஹார்மோனி இசை சார்ந்து தரம் மிக்கதாக இருப்பதையும் அவதானித்திருக்கிறேன்.

மெல்லிசைமன்னர்களின் உதவியாளர்களாக இருந்த ஜி.கே .வெங்கடேஷ் , ஆர்.கோவர்தனம் , ஜோசப் கிருஷ்ணா போன்றோர் பிற்காலத்தில் இசையமைப்பாளராக இருந்தனர் என்பதை பலரும் அறிவர். ஆனால் ஹென்றி டானியல் பற்றிய செய்திகள் மேகம் மூடிய நட்சத்திரமாகவே இருக்கிறது. புதிய பறவை படத்தில் கப்பலில் ஓர் ஆங்கிலேயர் பாடுவதாக அமைந்த பாடலைப் பாடியவர் ஹென்றி டானியல். புதிய பறவை படத்தின் டைட்டிலில் பின்னணி பாடியவர் பெயரில் அவரது பெயரும் இருக்கிறது. அது மட்டுமல்ல ஜி.ராமநாதன் உத்தமபுத்திரன் படத்தில் இசையமைத்த " யாரடி நீ மோகினி " பாடலின் பின்பகுதியில் வரும் ரோக் அண்ட் ரோல் பகுதி ஹென்றி டானியலின் பங்களிப்பாகும்.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தைப் போல சிறப்பாக அமையாவிட்டாலும் ராமன் எத்தனை ராமனடி , உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் சில காட்சிகளில் பொருத்தமான ஹார்மோனி இசையை நாம் கேட்க முடியும். ராமன் எத்தனை ராமனடி படத்தில் ஊரில் சாப்பாட்டு ராமனாக , அப்பாவியாக , ஏழையாக இருந்த சிவாஜி , ஊரில் பணக்காரியான கே.ஆர் . விஜயாவின் மீது கொண்ட காதலால் , அவளின் தூண்டுதலால் , பெரிய நடிகனாக, பெரும் செல்வந்தனாக மாறி ஊருக்குத் திரும்பிய போதும் அவளை அடைய முடியாத ஏமாற்றத்தால் , அந்த வேதனையால் , அவர்கள் உலாவிய பழைய இடத்திற்கு வருவதும் , பழைய சம்பவங்களை நினைவூட்டிப் பார்க்கும் காட்சியில் வரும் இசையும் - அதே போல உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி சௌகார் ஜானகி வாய்ச்சண்டை உச்சம் பெற்று சிவாஜி அடிப்பதும் , வீட்டை விட்டு வெளியே போவதும் சிவகுமார் ஓடிச் சென்று உள்ளே போகும்படி வேண்ட , சிவாஜி மீண்டும் சௌகாருடன் சமாதானமாவதுமான காட்சியில் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கும்

பலவிதமான வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தியும் , ராகங்களை பயன்படுத்தியும் , பல்வேறு இசைவகைகளைப் பயன்படுத்தி ஏராளமான படங்களுக்கு இசைவழங்கிய விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை கனதியான பின்னணி இசையை 1960களிலேயே தந்தார்கள் என்பதும் , பிரிவுக்குப் பின்னர் அதன் தொடர்ச்சி ஓரளவு சிறப்பாய் இருந்ததும் வர வர பின்னணி இசையின் போக்கு மாறியதையும் ஒரே விதமான இயந்திரத்தன்மை இருந்ததையும் அவதானிக்க முடியும். 1970களிலேயே சில படங்களில் இரைச்சல்கள் அதிகமிருந்தததையும் குறிப்பிடலாம். பல ரகங்களில் இசை என்று கூறும் போது நகைச்சுவைப் படங்களில் தனித்துவமிக்க இசையையும் விஸ்வநாதன் பயன்படுத்தினார். அவற்றில் காட்டூன் இசையின் வேகமும் ,சாயல்களும் அதிகமிருக்கும். அவற்றிற்கு உதாரணமாக அன்பே வா , உத்தரவின்றி உள்ளே வா , பாமா விஜயம் போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

உயர்ந்தமனிதன் , ராமன் எத்தனை ராமனடி போன்ற சிவாஜியின் படங்களில் வித்தியாசமான இசையும் , எம். ஜி .ஆர் படங்களில் விறுவிறுப்பான ஓட்டங்கள் கொண்ட இசையென சில வித்தியாசங்களையும் விஸ்வநாதன் காண்பித்தார். அவரைப் பொறுத்தவரையில் கதைக்கு தேவையான இசையைக் கொடுத்தார் என்றே நாம் கருத வேண்டியுள்ளது.

பாடல்கள் , டைட்டில் இசை , படத்தின் பின்னணி இசைகளில் கவனம் செலுத்தியது மட்டுமல்ல சினிமா இசைக்கு வெளியேயும் மெல்லிசை மன்னர்கள் பலவிதமான இசை முயற்சிகளிலும் தமது பங்களிப்பை செய்திருப்பது அவர்களின் பல்துறை இசைசார்ந்த ஈடுபாடாக இருந்தது.


திரை இசைக்கு அப்பால்…

பாடல்கள் , டைட்டில் இசை , படத்தின் பின்னணி இசை போன்றவற்றில் வாத்திய இசையின் பலவிதமான சாத்தியங்களை மெல்லிசைமன்னர்கள் மிக முனைப்பாக பயன்படுத்தி உயிர்ப்புள்ள புதிய திசையைக் காட்டியதுடன் இசையில் புதிய குறியீடுகளாகவும் பின்வந்தவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தனர்.

பொதுவாக சினிமாத்துறை தாண்டி வாத்திய இசை என்பது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் அறவே இல்லை என்று சொல்லிவிடலாம். சேர்ந்து பாடுவது குழுவாக ஆடுவதெல்லாம் மறைந்து ஒருவர் பாடவோ , ஆடவோ செய்யவும் பலர் ரசிக்கவுமான ஒரு இறுகிய போக்கு நிலைபெற்று ,அதை ஆட்டவோ ,அசைக்கவோ முடியாத நிலை இருந்த வேளையில் சினிமா இசை கொஞ்சம் அதை தொட்டு பார்த்தது.

சினிமா என்பது பணம் கொழிக்கும் ஒரு துறையாக இருப்பதால் , அதில் முதலீடு செய்தால் இன்னும் பலமடங்கு பணம் பாண்ணலாம் என்ற உந்துதல் தான் சினிமாவில் வாத்திய இசை உள்நுழையக் காரணமாகியது. ஆனால் உலகெங்கும் ஒரு நாட்டின் கலாச்சார அடையாளமாகவும் பெருமையின் அடையாளமாகவும் கருதப்படும் இசைத்துறைக்கு பெருமளவு நிதி ஒதுக்கும் நிலையில் மிகுந்த இசை வளம் மிக்க இந்தியா என்ன செய்திருக்கிறது என்றால் பெருத்த ஏமாற்றமே பதிலாகக் கிடைக்கும்!

மேலைநாட்டவரைப் பார்த்து ஏதேதோவெல்லாம் பிரதி பண்ணினார்கள். தங்கள் நாட்டுக்கென்று ஒரு இசைக்குழுவை அமைக்க முடியவில்லை என்பது நமது கவனத்திற்குரியது.

சென்னையிலும் , பம்பாயிலும் பெருமளவில் இசைக்கலைஞர்கள் குவிந்திருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு பொதுவான இசைக்குழு இல்லை. அது பற்றி இந்திய மாநில, மத்திய அரசுக்கு எந்தவிதக் கவலையும் கிடையாது

2019 வருடம் இந்தியாவின் முதன் முதல் சிம்பொனி இசைக்குழு இங்கிலாந்துக்கு வந்தது. அவர்கள் மேலைத்தேய சிம்பொனி இசைக்கலைஞர்களான பீத்தோவன், ராக்மானினொவ் , ரிமிஸ்கி போன்ற கலைஞர்களின் படைப்புகளை இசைக்கப் போவதாகவும் பிரபல தபேலா வித்துவான் அந்த இசைக்குழுவில் முக்கியமானவர் எனவும் செய்திகள் வெளியாகின.

செய்தியாளர்களிடம் பேசிய குஸ்ரு சன்டக் [ Khushroo Suntook ] என்பவர் " இந்தியாவின் ஒரே ஒரு தொழில் முறை சிம்பொனி இசைக்குழு நாங்கள் என்பது எங்கள் தேசிய அவமானங்களில்" ஒன்று என்று கூறினார். இந்தியாவைப் போன்ற நாடுகளான சீனா , ஜப்பான் , கொரியா போன்ற நாடுகளில் பல சிம்பொனி இசைக்குழுக்கள் இருப்பதை மனதில் வைத்து அவர் அப்படிக் கூறியிருப்பார். போலும்! சீனாவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட சிம்பொனி இசைக்குழுக்கள் இருப்பதாக Marat Bisengley என்பவர் கூறுகிறார்.

இசையில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட கொண்ட இந்தியாவில் , உலகப் புகழ பெற்ற பல கலைஞர்கள் இருக்கும் ஒரு நாட்டில் ஒரு சிம்போனி இசைக்குழு இல்லை என்பது ஒரு அவமானமானகரமானது தான். அதே வேளையில் இசைப் பாரம்பரியமற்ற ஒரு நாடான இலங்கையில் தென் கிழக்கு ஆசியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சிம்பொனி இசைக்குழு 1958 இல் உருவாக்கப்பட்டது என்பதும் ஆச்சரியம் அளிக்கும் செய்தியாகும். ஆனால் இந்திய சிம்பொனி இசைக்குழு 2006 தான் ஆரம்பிக்கப்பட்டது

நூறு ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி அல்லது ஐரோப்பியரின் ஆட்சிக்கு உட்பட்ட போதும் , தஞ்சையைச் சேர்ந்த சரபோஜி மன்னர் , மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ வாதியார் போன்ற மன்னர்கள் லண்டன் பில்கார்மோனிக் இசைக்குழுவிற்கு நிதி வழங்கிய போதும் அவர்களுக்கும் இங்கே ஒரு இசைக்குழு உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை.

ஆனாலும் மேலைத்தேய கலாச்சாரத்திலும் , பண்பாட்டிலும் ஆர்வம் காட்டிய பார்சி இனத்தவர்கள் வர்த்தகம் மட்டும் அல்லாமல் கலைத்துறையிலும் ஈடுபாடு காட்டினர். இன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் , மேலைத்தேய செவ்வியல் இசையில் புகழ்பெற்றிருக்கும் இசைக்கலைஞரான சுபின் மேத்தா பார்சி இனத்தவர் என்பது குறிப்ப்பிடத்தக்கதாகும் .

இசை என்பது இழிகுலத்தோருக்கானது என்று கருதப்பட்ட ஒரு நிலை மாறி ,பார்ப்பனர்களால் அது புனிதமாக்கப்பட்டு வேதம் , புராண , இதிகாச , பக்திக்குள் இசை மூழகடிக்கப்பட்டதும் , பார்ப்பனஆதிக்கத்தின் மூலம் இந்தியர்களின் இசை என்பது பக்தி இசையாக மாறி எந்தவித புதுமையான முயற்சிகளுக்கு இடமில்லாமல் போனதால் ஒற்றைப்பரிமாணமாக ஒருவர் பாடவோ அல்லது ஒருவர் ஒரு வாத்தியம் வாசைப்பதே போதுமானது என்று இசை இறுக்கம் பெற்றது. இசை என்பது பார்ப்பனீயமயப்படுத்தப்பட்டு பூர்வமாக சங்கீதத்தை தொழிலாகக் கொண்டவர்களை ஓரம் கட்டியதன் மூலம் இது சாதிக்கப்பட்டது.

ஆனாலும் நவீன கலைவடிவமாக வந்த சினிமாவை , குறிப்பாக இசையை இவர்களால் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதாலும் சினிமாவின் வளர்ச்சி மேலைநாடுகளுடன் சார்ந்திருந்ததாலும் சினிமா இசை தப்பியது. சினிமாவிலும் பார்ப்பன இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் , இசையில் அவர்களால் பார்ப்பன சனாதனிகளுக்கு அடங்க முடியவில்லை. ஏனெனில் சினிமா இசையே அதற்கு எதிராகவே இருந்தது என்பதே உண்மை. கர்னாடக சங்கீதம் என்பது ஒற்றைப்பரிமான monotony வகையையும் மேலைத்தேய இசை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட , பல அடுக்குகள் ஒரே நேரத்தில் ஒலிக்கும் polyphony என்கிற இசை வகையையும் சார்ந்ததாகும்

பார்ப்பன சிந்தனைக்கு மாறான போக்கைக் கொண்ட சினிமா இசையை , தங்கள் கட்டுக்குள் அடங்காத இசையை குறிப்பிட்ட காலம் வரை இந்திய வானொலிகள் மூலம் தடை செய்தார்கள். சினிமாக்கலைஞர்களின் மீது மக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கும் அதன் மூலம் அவர்கள் பெற்ற அங்கீகாரமும் எல்லை மீறி சென்ற காரணத்தால் தவிர்க்க முடியாமல் சினிமாப்பாடல்களை வானொலிகளில் ஒலிபரப்ப அனுமத்திதார்கள்.

மகிழ்வூட்டும் வாத்திய இசையின் தேவையை உணர்ந்த சினிமா இசையமைப்பாளர்கள் இசையின்மீதான சனாதனப்பார்வையை உதற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனதில் மரபு என்றும், ஆச்சாரம் என்றும் கருதினாலும் சினிமா என்று வரும் போது அதைத்தாண்ட வேண்டிய அவசியம் சினிமா இசையமைப்பாளர்களுக்கு இருந்தது. இதைக் கட்டுப்படுத்த முடியாது என்று உணர்ந்து அவர்களை அங்கீகரிக்க மறுத்தனர். சினிமா இசை என்பது தரம் குறைந்த இசை என்ற ஓர் மனநிலை சராசரி இந்தியர்களிடம் வெகு சாமர்த்தியமாக பரப்பினர்.

கர்னாடக இசை என்றாலே , அவர்கள் பாடும் முறையால் மக்கள் அந்நியப்பட்டிருந்த சூழலில் மரபு இசையிலிருந்து ராகங்களை எடுத்து வாத்திய இசை என்ற இனிப்புப் பூசி கொடுத்து சுவைக்க வைத்த பெருமை இசையமைப்பாளர்களுக்கு உண்டு.

மரபு ராகங்களுடன் வாத்தியங்களை இணைப்பதென்பது கர்னாடக கச்சேரி மேடைகளில் வித்துவான்களுக்கு பின்பாட்டு பாடும் வாத்திய முறையல்ல. அந்த ராகம்சார்ந்து மேலைத்தேய இசைப்பாங்கில் வாத்தியங்களை அந்த ராகங்களை இசைவாக இசைக்க வேண்டும். அது சினிமா இசையமைப்பாளர்களால் சாத்தியமானது. அதுவே வெகுஜனங்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

சினிமாப் பாடல்களை அடியொற்றியே பக்திப்பாடல்கள் வாத்திய இசையுடன் அமைக்கப்பட்டன. வெகுஜனங்களால் அதிகம் ரசிக்கப்படாத கர்னாடக இசையும் பக்தியையே பரப்புகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இருவிதமான இசைகளை ஒன்றுடன் ஒன்று எதிர்திசைகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்ற போதும் அதனதன் தன்மைகளை அங்கீகரிப்பதே இசையின் பன்முக ஆற்றலைப் புரிந்து கொள்ள ஒரே வழி. அந்தந்த இசைகளை அந்தந்த வழிகளில் ஏற்றுக் கொள்வதும் தான் சிறந்தவழி என்பதை புரிந்து கொண்டால் பலவிதமான இசைகள் வளர வழி ஏற்படும்.

வாத்திய இசையில் புதிய பாய்ச்சலைக் காட்டிய மெல்லிசை மன்னர்கள் சினிமா இசையைத் தாண்டியும் சில படைப்புகளில் ஈடுபட்டார்கள் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. அவர்களது பாடல்களை ஒலிபரப்பிய வானொலிகள் கூட இவற்றை பற்றி பொருட்படுத்தவே இல்லை.வானொலிகளில் தங்கள் குரல்களை ஒலிக்க வைப்பதிலிருந்த அக்கறை இசை நிகழ்ச்சிகளில் இருக்கவில்லை என்பதும் அதுபற்றி விழிப்புணர்வு அறவே இல்லாத ஒரு சூனிய காலமுமாக இருந்திருக்கிறது. இசை பற்றிய தேடல் என்றால் அது தமிழ் பாடல்களை போலிருக்கும் ஹிந்திப்பாடல்களை கண்டுபிடித்து ஒழிக்க விடுவதாகவே இருந்தது.இதற்கு யாரையும் குறை கூறிப் பயனில்லை.

1950 1960 களில் உருவாகி புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க இசையும் , வட அமெரிக்க இசையும் வர்த்தக ரீதியில் உலகெங்கும் பரவின.லத்தீன் அமெரிக்காவின் ரம்பா, சல்சா ,டாங்கோ, போஸோ நோவா அமெரிக்காவின் ஜாஸ் , புளூஸ், ரோக் போன்ற இசைவகைகளும் பொழுதுபோக்கு இசையில் பாரிய தாக்கம் விளைவித்தன.

அதே காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க இளைஞர்கள் பழமைவாத சமூக நோக்கத்திற்கு எதிரான ஓர் கிளர்ச்சியாக இளைஞர்களால் முதன்மைப்படுத்தப்பட்ட பாப் , ரோக் போன்ற இசைவகைகளும் , அந்த இளைஞர்களின் ஆன்மீக ஈடுபாடும் இந்திய இசையின்பால் ஏற்பட்ட ஈர்ப்பும் மேற்குக்கும் , கிழக்குக்குமான இசைத்த தொடர்புகளை புதிய நோக்கில் அணுகத் தலைப்பட்டது. மேலைத்தேய இசைக்கலைஞர்கள் கீழைத்தேய இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசைக்கும் ஒரு புதிய இசை இயக்கத்தை உருவாக்கினர்.

The Beatles, Bob Dylan, Rolling Stones, போன்ற புகழ் பெற்ற இசைக்குழுக்கள் இந்தியா , ஜப்பான் போன்ற நாடுகளின் இசையில் ஈடுபாடுகாட்டினார்.இதே வெளிப்பாடுகளை ஜப்பான் இசையிலும் காண முடியும். Misora Hibari என்ற பெண் இசைக்கலைஞர் ரோக் , ஜாஸ் போன்ற இசைக்கலைவைகளில் பாடல்களை பாடி புகழ்பெற்றார்.

மேற்கூறிய The Beatles , The Byrds போன்ற இசைக்குழுக்கள் இந்திய இசையில் அதிக ஈடுபாடு காட்டி சித்தார் இசைக்கலைஞர் ரவிசங்கரை அழைத்து பல இசைநிகழ்ச்சிகளை நடத்தியதுடன் அவரிடம் சித்தார் இசைக்கவும் பழகினர்.

இந்த இசைப்பரிவர்த்தனை தனியே பாப் இசையுடன் மட்டும் நிற்கவில்லை. மேலைத்தேய செவ்வியல் இசைக்கலைஞர்களையும் [ Western Classical ] இந்திய இசையின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக யெஹுதி மெனுஹின் [ Yehudi Menuhin ] போன்ற வயலின் இசைமேதை ரவிசங்கருடன் இணைந்து பல இசைக்கச்சேரிகளை நடாத்தினார். அவர்களின் முயற்சியில் West Meets East போன்ற இசைத்தட்டுக்கள் வெளிவந்து புகழ் பெற்றன. இதன் புகழ் கலப்பு இசையின் ஈர்ப்பை உலகெங்கும் உண்டாக்கியத்துடன் ஜப்பானியக் கலைஞர்களும் இந்தியக்கலைஞர்களுடன் இணைந்து சில படைப்புகளை உருவாக்க உதவியது.

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க வயலின் இசைக்கலைஞரான Yehudi Menuhin மற்றும் புலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு புல்லாங்குழல் கலைஞரான Jean Peirre Rampel போன்ற கலைஞர்கள் சித்தார் மேதை ரவி ஷங்கருடன் இணைந்து West Meets East என்ற புகழ்பெற்ற இசைத்தட்டை 1967 இல் வெளியிட்டனர்.

பின்னாளில் இளையராஜா தான் அடைந்த வெற்றிகளால் வாத்திய இசையில் How to Name It - Nothing But Wind போன்ற இசை தட்டுக்களை வெளியிட்டு இசை விற்பனர்களின் பாராட்டைப் பெற்றதுடன் , சாதாரண ரசிகர்களின் மத்தியிலும் அது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதிலும் மெல்லிசைமன்னர்களே இளையராஜாவுக்கு முன்னோடிகளாக இருந்தனர்.

1969 ஆண்டு மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி தனியே இசையமைத்த Fabulous Notes Of The Indian Carnatic-Jazz என்ற இசைத்தட்டு முன்னோடியாக அமைந்தது. இந்திய ராகங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அதனுடன் ஜாஸ் இசையின் கூறுகளும் இணைந்த புதுமையும், நவீனமுமான இசைவடிவமாக வெளிவந்தது.

இந்திய மனோதர்ம இசைக்கும் ஜாஸ் இசைக்கும் இடையே இருக்கும் இணக்கப்பாடுகளையும் , மென்மையான வேறுபாடுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தும் இந்த இசைத்தொகுப்பில் கௌளை ,ரஞ்சினி, பேகடா ,மோகனம் ,உதய சந்திரிகா , நாட்டை , பியாக , மாயாமாளவகௌளை , சஹானா,கனகாங்கி , ரசிகப்பிரியா போன்ற ராகங்கள் கனகச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ் இசைக்கருவிகளான வீணை ,குழல் ,கடம் , மிருதங்கம் , மத்தளம் ,கடம் ,செண்டை ,டேப் , செங்கு ,புல்புல் தாரா போன்றவற்றுடன் மேலைத்தேய இசைக்கருவிகளான சாக்ஸபோன் , பேஸ் க்ளாரினெட் ,பியானோ, கிட்டார் , ட்ரம்பெட் ,பொங்கஸ் , ட்ரம்ஸ் , டபுள் பேஸ் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மெல்லிசைமன்னர்கள் திரைப்படங்களில் பின்னணி இசையில் பயன்படுத்திய இசையின் சாயல்களையும் 1950 களில் புகழ்பெற்றிருந்த அமெரிக்க ஜாஸ் இசைக்கலைஞரான chico hamilton இசையின் சாயல்களையும் இதில் காண முடியும்.

மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியின் அடியொற்றி மெல்லிசைமன்னர் விஸ்வநாதனும் 1970 ஆம் ஆண்டு தனி வாத்திய இசைத்தொகுப்பாக Thrilling Thematic Tunes என்ற இசைத்தட்டை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு இசைவடிவமும் ஒவ்வொரு தலைப்பின் பெயரிட்டு இசைக்கப்படுத்துள்ளன. அவை பின்வருமாறு:

[01] Reminiscences – [02] Fields & Stories – [03] Quo-Dharma [04] Swing-O-Spring [05] Eve Of Kurukshetra [06] East - West Wedding [07] Train Music (Toy Train With Children) - [08] Holiday Mood [09] Rasa Leela – [10] Holiday Mood – [11] Rasa Leela – [12] Melody Medley – [13] Percussion Ensemble – Viswanathan வெளிவந்தகாலத்தில் மிக புதுமையாக இருந்திருக்கக்கூடிய ஒரு இசைத்த தொகுப்பு என்று சொல்லலாம். இதில் வருகின்ற வாத்திய இசை பெரும்பாலும் விஸ்வநாதன் திரைப்படங்களில் வழங்கிய இசை போன்ற தன்மையே ஓங்கி நிற்கிறது. ஒவ்வொரு இசைத்துணுக்கிற்கும் தரப்படட தலைப்புகளுக்கு பொருத்தமான இசை அமைக்கப்பட்டுள்ளது. பலவிதமான உணர்வுகளைக் கிளர்த்துமிந்த இசைத்தொகுப்பில் புல்லாங்குழல் இசையை மிக அற்புதமாகப் பய்னபடுத்தியிருப்பார் மெல்லிசைமன்னர்.

இந்த தொகுப்பில் வருகின்ற ராஸலீலா என்ற இசை மனத்தைத் தொடும் வகையிலும் , புல்லாங்குழலின் பல்வேறு பரிமாணங்களையும் வெகு சிறப்பாக எடுத்துக்காட்டுவதாகவும் ,அதனுடன் கோரஸ் இசையையும் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருப்பார். இந்த இசையில் வரு ஒரு சிறிய பகுதி இலங்கை வானொலி ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானதொரு இசையாகும். இலங்கை வானொலியில் ஒவ்வொரு நாளும் காலையில் ஒலிபரப்பாகும் புதுப்பாடல் நிகழ்சசியான " பொங்கு பூம்புனல் " நிகழ்ச்சியின் முகப்பிசை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இசைத்தட்டில் வெளிவந்த இசைத்தொகுப்பிலிருக்கும் பல இசைகளைவிட விஸ்வநாதன் தான் இசையமைத்த படங்களிலேயே நல்ல முயற்சிகளை பரீட்ச்சித்துள்ளார் என்று சொல்லலாம். உதாரணமாக கன்னிப்பெண் படத்தில் சிவகுமார் நாடககக்குழுவிற்கு ஒத்திகை பார்ப்பதாக வரும் காட்சியில் பலவிதமான இசை கலவையாக அமைத்திருப்பார் விஸ்வநாதன்.

கலைக்கோயில் படத்தில் இசைவித்துவானாக வரும் எஸ்.வி சுப்பையா வீணையை பார்த்து பழைய நினைவுகளை மீட்டுவதாக வரும் காட்சியில் வயலின்களும் ,செனாயும், குழலும் கலந்து வரும் சிவரஞ்சனிராகப் பின்னணி இசையும், மனக்கசப்பினாய் பிரிந்து போகும் முத்துராமனும் ,சுப்பைய்யாவையும் மீண்டும் சந்திக்கும் கோயில் காட்சியில் வரும் பின்னணி இசை என மெல்லிசைமன்னர் தந்தவை ஏராளம்.

ராமமூர்த்தி மற்றும் விஸ்வநாதனுக்கு முன்பாக தமிழ் இசையமைப்பாளர்கள் யாரும் செய்யாத இந்த முயற்சியாக இவை அமைந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மெல்லிசைமன்னரின் இசையின் பங்களிப்பில் முக்கியமானதொரு இடம் கர்னாடக இசைப்பாடகர் மகாராஜபுரம் சந்தானத்துடன் இணைந்து அவரது கச்சேரியில் வாத்திய இசை வழங்கியது. அன்றைய காலத்தில் மிகப்பெரிதாகப் பேசப்படட நிகழ்வாகும். இசைச்சங்கமம் என்ற பெயரில் நடாத்தப்பட்ட அந்த இசை நிகழ்ச்சியில் மனவெழுச்சி தருகின்ற " சம்போ சிவா சம்போ " என்ற ரேவதி ராகத்திலமைந்த பாடல் அதிக புகழ்பெற்றது. புதுமை நுழைய முடியாத கோட்டைக்குள் மெல்லிசைமன்னரை அழைத்துச் சென்ற பெருமை மகாராஜபுரம் சந்தனத்தை சாரும்.

மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி இசையமைத்த Fabulous Notes Of The Indian Carnatic-Jazz மற்றும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைத்த Thrilling Thematic Tunes போன்ற இசைப்படைப்புகளின் தாக்கம் கர்னாடக வயலின் இசைக்கலைஞரான லால்குடி ஜெயராமன் படைத்தளித்த The Dance of Sound: Thillana என்ற படைப்பிலும் பிரதிபலித்தது.

லால்குடி ஜெயராமன் இன்னிசை வடிவமாக The Dance of Sound Thillana என்ற பெயரில் தனி இசைத்தட்டை 1978 இல் வெளியிட்டார். ஒரு கர்னாடக இசை வித்துவான் என்ற ரீதியில் அந்த இசை சார்ந்த அதே வேளையில் கொஞ்சம் மேலைத்தேய இசைக்கலப்புடன் அதை இசையமைத்திருந்தார் . கர்னாடக கேட்டுப் பழகியவர்களுக்கு மிக இதமாக அமைந்த அற்புதமான இசைத்தட்டு. அதில் வயலினுடன் சந்தூர் , குழல் , பிராஸ்ட்ரம்ஸ் போன்ற பலவிதமான வாத்தியக்கருவிகளின் இனிய கூட்டொலிகளையும் நாம் கேட்க முடியும்.

இந்த இசைத்தட்டு உருவாக்கத்தில் மெல்லிசைமன்னனர்களின் வாத்தியக் குழுவில் வயலின் அக்கலைஞராகவும் , பின்னாளில் புகழபெற்ற இசையமைப்பாளராகவும் வளர்ந்த ஷ்யாம் என்பவர் அதன் [ Arranger ] தொகுப்பாளராக இருந்தார் .

சினிமா அரங்கத்திற்கு வெளியே தனியே வாத்திய இசையில் மட்டுமல்ல ,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த இசைப் பாடல்கள் தமிழிலும் , மலையாளத்திலும் வெளிவந்தன :அவற்றில் சில பக்திப்பாடல் இசைத்தட்டுக்களாகவும் அமைந்தன.

தமிழில்:

01 கிருஷ்ணகானம் 02 வடிவேல் முருகன் [ முருகன் பாடல்கள் ] 03 பொன்னூசல் [ நால்வரின் திருமுறைகள் ] அ.ச.ஞானசம்பந்தன் உரையுடன் வெளிவந்த இசைத்தட்டு 04 இசைசங்கமம்

மலையாளத்தில் :

01 ஐயப்பன் பாடல்கள் - ஜேசுதாஸ் 02 சரணம் ஐயப்பா - ஜேசுதாஸ் 03 மகர்லோட்சவம் - ஜேசுதாஸ் 04 ஐயப்பன் காவு - உன்னிமேனன் 05 கிருஷ்ணகாதா - ஜேசுதாஸ்

சினிமா இசைக்கு நெருக்கமாக இருப்பது பக்திப்பாடல்கள்.சினிமா வாய்ப்புக் கிடைக்காத இசையமைப்பாளர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் ,வெளிக்காட்டவும் பக்திப்பாடல்களை இசையமைப்பை ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றனர்.சினிமாவில் ஒலிக்கும் வாத்திய இசைபோலவே அவை அமைந்திருப்பதால் படத்தயாரிப்பாளர் பக்திப்பாடல்களை இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளருக்குத் துணிந்து வாய்ப்பை வழங்கும் நிலை இருக்கிறது.

இந்த பக்திப்பாடல்கள் சாராம்சத்தில் மெல்லிசையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். அந்த மெல்லிசைவடிவம் சினிமாவின் கொடை என்றால் மிகையல்ல. திரைப்படனங்களில் புகழபெற்ற பல இசையமைப்பாளர்கள் பக்திப்பாடல்களையும் இசையமைத்துப் புகழ் பெற்றனர்.

பக்திப்பாடல்களில் தனக்கென தன்னிகரில்லாத இடத்தை பிடித்து வைத்திருந்த சீர்காழி கோவிந்தராஜன் பாடிய புகழபெற்ற பல பாடல்களை இசையமைத்தவர் சினிமாவில் ஏற்கனவே பெரும்புகழ் பெற்ற டி.ஆர்.பாப்பா அவரை அடியொற்றி வி.குமார் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி என பெரும்பாலும் எல்லா இசையமைப்பாளர்களும் இசை வழங்கியுள்ளனர். பிற்காலத்தில் தேவா பக்த்திப்பாடல்கள் இசையமைத்து புகழ் பெற்ற பின்னர் தான் சினிமாவில் நுழையமுடிந்தது.

சினிமா இசையமைப்பாளர்கள் பக்தி இசையில் ஈடுபட்டது போகவே சினிமாவில் புகழ் பெற்ற பாடகர்கள் பலரும் பக்திப்பாடல்களையும் பாடினர்.

அந்தவகையில் விஸ்வநாதனும் சில பக்திப்பாடல்களை இசையமைத்தார். அவை சினிமாப்பாடல்களுக்கு நிகாரகப் புகழ் பெற்றன. குறிப்பாக அவரின் கிருஷ்ணகானம் என்ற இசைத்தட்டை கூறலாம். அந்த இசைத்தட்டில் வெளியான

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே , ஆயர்பாடி மாளிகையில் , குருவாயூருக்கு வாருங்கள் கோகுலத்து பசுக்கள் எல்லாம்

போன்ற பாடல்கள் ஒவ்வொரு தமிழர்களும் மனப்பாடமாக சொல்லும் வகையில் ஒலிபரப்பப்பட்ட பாடல்களாகும். அந்தப்பாடல்கள் தனித்துவம் மிக்க மெல்லிசைப்பாங்கினவை.

ஏற்கனவே தமிழ் திரைப்படங்களிலும் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த பக்திப்பாடல்களும் தனித்தன்மை மிகுந்தவை. கீழ் உள்ள பாடல்களை உதாரணம் காட்டலாம்.

01 அழகன் முருகனிடம் - பஞ்சவர்ணக்கிளி - பி.சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 02 பழமுதிர் சோலையிலே - குழந்தையும் தெய்வமும் - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 03 ராமன் எத்தனை ராமனடி - கௌரி கல்யாணம் - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04 திருப்புகழைப் பாட- கௌரி கல்யாணம் - பி.சுசீலா+ சூலமங்கலம் – இசை:விஸ்வநாதன் 05 கண்ணன் வந்தான் அங்கே - ராமு - சீர்காழி + டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 06 கேட்டதும் கொடுப்பவன் - தெய்வமகன் - டி.எம்.எஸ் - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 07 மண்ணுலகில் இன்று தேவன் - புனித அந்தோனியார் - வாணி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பக்திப்பாடல்கள் என்ற வகையில் மலையாளத்திலும் மெல்லிசைமன்னரின் இசையில் யேசுதாஸ் தனது சொந்த இசைக்கம்பனியான தரங்கிணி மூலம் சில இசைத்தொகுப்புக்களை தானே பாடி வெளியிட்டார்.பக்திப்பாடல்கள் மட்டுமல்ல மலையாள கலாச்சார கொண்டாட்டங்கள் சம்பந்தமான பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புக்களை ஜேசுதாஸின் " தரங்கிணி " நிறுவனம் வெளியிட்டு வந்தது.

அந்த தொடரில் ஓணப்பண்டிகை குறித்த இசைத் தொகுப்பு ஒன்றிற்கு மெல்லிசைமன்னர் இசையமைத்தார். அவரது படைப்பாற்றலுக்கு அழியாத புகழைத் தரும் அந்த இசைப்படைப்பு 1988 ஆம் ஆண்டு “ஆவணிப்பூக்கள் " என்ற பெயரில் மிக அருமையான பாடல்கள் அடங்கிய இசைத்தட்டாக வெளியானது. அந்தப்பாடல்களை ஜேசுதாஸ் ,சித்ரா பாடினர்.

01 துளசி கிருஷ்ணா துளசி - ஜேசுதாஸ் 02 நித்ய தருணி நீல ரஜனி - ஜேசுதாஸ் 03 ஓணப்பூவே - ஜேசுதாஸ் 04 குளிச்சு குறியிட்டு - ஜேசுதாஸ் 05 கினாவில் இன்னலை - ஜேசுதாஸ் 06 உத்திராட இராத்திரியில் - ஜேசுதாஸ் + சித்ரா 07 மூவந்தி முத்தச்சி - ஜேசுதாஸ் 08 அத்த கலத்தினே பூ தேடும் – சித்ரா

ஒரு பாடகரின் குரல் வளம் . பாடும் ஆற்றல் அறிந்து இசையமைக்கும் வல்லமை கொண்ட மெல்லிசைமன்னர் ஜேசுதாஸ் குரல் அறிந்து மிக , மிக அற்பதமாக இசைத்துள்ளார். அவரது படைப்பாற்றலின் வீச்சும் , செழுமைமிக்க அனுபவமும் மிக உன்னதமாக வெளிப்பட்ட பாடல்கள் அவை என்று சொல்லலாம்!. அந்த தொகுப்பில் அமைந்த ஒவ்வொரு பாடல்களும் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன.

குறிப்பாக ஜேசுதாஸ் பாடிய "துளசி கிருஷ்ணா துளசி ", "நித்ய தருணி நீல ரஜனி ", "கினாவில் இன்னலை " போன்ற பாடல்கள் மெல்லிசைமன்னரின் அதியுச்சப் பாடல்கள் என்று சொல்லலாம்.

இக்காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களில் மிகக்குறைந்த படங்களில் இசையமைத்த விஸ்வநாதன் ஒரு சில படங்களில் இத்தகைய பாடல்களை இசையமைத்தார் என்பதும் இளையராஜாவின் இசையலையில் அவை அதிகம் பேசப்படாமல் போனமையும் துரதிர்ஷ்டமானது.

திரை இசைக்கு அப்பால் மெல்லிசைமன்னர் இசையமைத்த முக்கியமான பாடல் தமிழ் தாய் வணக்கப் பாடலான “ நீராரும் கடலுடுத்த " என்ற பாடலாகும். பழந்தமிழர் கண்டெடுத்த முல்லைப்பண்ணில் தமிழ்த்தாய் வாழ்த்தை அமைத்த மெல்லிசைமன்னரின் இசை நுட்பத்தை இன்றும் கேட்டு இன்புறுகிறோம்.

அது போலவே மகாகவிகள் பாரதி , பாரதிதாசன் போன்றோரின் நாட்டுடைமையாக்கப்பட்ட பாடல்களையெல்லாம் மெல்லிசைமன்னர்களை வைத்து இசைத்தொகுப்புகளாக்கி வெளியிட்டு அருஞ்சொத்தாகப் பாதுகாத்திருக்க வேண்டும்.

மெல்லிசையில் தமிழ் திரையிசையைக் கீர்த்தி பெற வைத்து இசையின் உயிராற்றலை வெளிப்படுத்திய மெல்லிசைமன்னரின் இசையை பிற மொழி சினிமாக்களும் பயன்படுத்த தவறவில்லை.


பிறமொழிகளும் மெல்லிசை மன்னரும்

தமிழ் திரையிசையின் முன்னோடி இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் , எஸ்.வி. வெங்கடராமன் தமிழ் படங்களில் மட்டும் இசையமைத்துக் கொண்டிருந்த வேளையில் , தமிழ் படங்களுக்கு மட்டுமல்ல தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருந்தவர் அன்று இளைஞராக இருந்த சி.ஆர். சுப்பராமன்.

அந்தக்கால புகழ்பெற்ற நடிகையான பானுமதியின் பரணி பிக்சர்ஸ் கமபனியின் ஆஸ்தான இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் ! பானுமதியின் தாயரிப்பில் ரத்னமாலா , லைலா மஜ்னு , சண்டிராணி போன்ற படங்கள் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் வெளிவந்ததுடன், லைலா மஜ்னு , சண்டிராணி இசைக்காகவும் பேசப்பட்டன. சுப்பராமனின் அகால மரணத்தால் அவர் நிறைவு செய்யாத படங்களை அவரது உதவியாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி நிறைவு செய்தனர். தங்கள் குருநாதர் போலவே பிற மொழிப்படங்கள் சிலவற்றிற்கும் இசையமைத்த பெருமை மெல்லிசை மன்னர்களை சாரும்.

பக்த மார்க்கண்டேயா , தெனாலிராமன் , குடும்ப கௌரவம் , ராஜா மலையசிம்மன் போன்ற படங்கள் தமிழிலும் , தெலுங்கிலும் 1950 களின் ஆரம்பத்திலேயே மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளிவந்தன. குறைந்த அளவில் திரைப்படங்கள் வெளிவந்த காலத்தை ஒட்டிக் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திய மெல்லிசைமன்னர்கள் அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த போதிலும் தமிழ் படங்களில் இசையமைப்பதை முதன்மையாகக் கருதியதையும், முன்னுரிமை கொடுத்ததையும் காண்கிறோம். 1950 களின் தமிழ் சினிமாக்களில் வசனங்கள் என்ற பெயரில் எழுதப்பட்ட பிறர் கேட்பதற்கான செந்தமிழ் நடையில் அமைந்த உரைகள் ,அல்லது செந்தமிழ் நடையில் அமைந்த சொற்பொழிவுகளாக இருந்தபோதும் அதைப்போலல்லாது முழுமையாக செவ்வியல் சாராது மெல்லிசைசார்ந்து இசை வழங்கியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

இசையில் மெல்லிசையை முக்கியமாக கருதிய மெல்லிசை மன்னர்கள் பிராந்திய மொழிகள் எதுவானாலும் அந்த மொழிகளின் வழக்காறுகளை, தனித்தன்மைகளை வெளிக்கொணராது மெல்லிசையை மட்டுமே பிரதானமாகக் கொண்டனர். அதாவது அவர்களது இசை எந்தப்பகுதியைச் சார்ந்த இசை என்பதை அவர்களது இசையை வைத்து கூறிவிட முடியாது மெல்லிசைமன்னர்களின் இசையில் எந்த பிராந்தியத்தின் மண்வாசனையும் வீசாது. ஹிந்தி திரைப்படங்களில் இசையமைத்த பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த இசையமைப்பாளர்கள் தங்கள் தங்கள் மாநிலம் சார்ந்த இசைகளை தங்களது பாடல்களால் கலந்து கொடுத்தார்கள். வங்காளிகளான சலீல் சௌத்ரி ,ஹேமந்த் குமார் , எஸ்.டி.பர்மன் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வங்காள நாட்டு பாங்கு இசையையும் , நௌசாத் இசையில் உத்தர பிரதேசத்து இசையையும் , சங்கர் ஜெய்கிஷன் இசையில் பஞ்சாப் இசையையும் நாம் கேட்க முடியும்.

எஸ்.டி.பர்மன் , சலீல் சௌத்ரி , ஆர்.டி.பர்மன் போன்றோர் வங்காள நாட்டுப்புற இசையின் படகுப் பாடல்களை மிக பொருத்தமாக , அழகாக பயன்படுத்தினார்கள். எஸ்.டி பர்மன் இசையில் சுஜாதா என்ற, படத்தில் Sun Mere Bandhu Re என்ற பாடலும், Bandini [1963] படத்தில் " o janewale ho sake to laut " என்ற பாடலும் , சலீல் இசையில் Char Diwari படத்தில் "kaise manaaun piyava " என்று தொடங்கும் பாடலும் , ஆர்.டி.பர்மன் இசையில் " O Majhi Re Apna Kinara " என்ற பாடலும் வங்காளிகள் bhatiali பாடல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.

எஸ்.டி.பர்மன், சலீல் சௌத்ரி மட்டுமல்ல ஹிந்தியில் புகழ் பெற்ற வங்காள இசையமைப்பாளராக இருந்த ஹேமந்த் குமார் தாகூரின் பாடல் [ ரவீந்திர சங்கீதம் ] மெட்டுக்களில் அமைத்து பிரபலப்படுத்திய முக்கிய இசையமைப்பாளராவார்.

இன்று மெல்லிசையின் உச்சங்களாகக் கருதப்படும் இப்பாடல்களின் ஊற்று அவர்கள் சார்ந்த நாட்டுப்புற இசையின் தாக்கத்தின் பிரதிபலிப்புகளே மலையாள சினிமாவில் நீலக்குயில் படத்தில் அறிமுகமான ராகவன் மாஸ்டர் மலையாளத்து நாடன் பாட்டுக்களை அறிமுகம் செய்தார். அந்தப்படத்தில் அவரே இசையமைத்துப் பாடிய " காயலாரிகத்து வலையெண்ரிஞ்சப்போ வளை கிலுக்கிய சுந்தரி " என்ற பாடல் மலையாள நாட்டார் பாடலின் இனிமையைக் கொண்டது. மலையாள நாடன் பாடல்களின் மாதுர்யங்களைக் வெளிக்கொண்டுவந்ததில் பாடலாசிரியர் பி.பாஸ்கரன் மற்றும் ராகவன் மாஸ்டர், ஜி.தேவராஜன் போன்றோர் முக்கிய பங்காற்றினர்.. Kerala People's Arts Club என்கிற கம்யூனிஸ்ட் கலை இயக்கத்திலிருந்து வந்த கே.ராகவன் , ஜி.தேவராஜன் மலையாள நாடன் பாடல்களின் மாதுர்யங்களை தங்கள் இசையில் இழைத்து பெருமை சேர்த்தார்கள் மெல்லிசைமன்னர்களின் இசையில் பெரும்பாலும் மொழி வேறுபாடுகளால் அவை இன்ன மொழிப்பாடல் என வேறுபாடுமேயன்றி இசைமுறையில் அவ்வாறு அமைந்திருப்பதில்லை. மெல்லிசை என்ற பொதுமையான திரையிசை நீரோட்டத்தில் தங்களை வெளிப்படுத்த விரும்பினார்கள் என்ற வகையிலும் அக்காலத்தின் தேவையை ஒட்டியதாக மெல்லிசையை முன்தள்ள வேண்டிய தேவையால் அவர்கள் கவனம் செலுத்தியதும் நம் கவனத்திற்குரியதாகும். இவர்களது முன்னோடியும் ,சமகாலத்தவருமான கே.வி.மகாதேவனின் இசையில் தமிழ்நாட்டு இசைமரபை ஒட்டி பாடல்கள் இருப்பதை நாம் கவனிக்க முடியும். நாட்டுப்புற இசைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதும் அதன் வகைமாதிரிகள் சில என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ஆனாலும் எந்தவகை இசையென்றாலும் அதைக் கொடுக்கும் ஆற்றல்மிக்க மெல்லிசைமன்னர்கள் சில படங்களில் அந்த கதை களத்திற்கு ஏற்ப தமது பாடல்களில் நாட்டார் பாங்கில் தந்ததையும் நாம் மறக்க முடியாது. சிவகங்கை சீமை , பாகப்பிரிவினை போன்ற படங்ளின் பாடல்கள் இதற்கு சான்றாகும். ஆனாலும் அவர்களின் பெரு விருப்பும் , மனச்சாய்வும் மெல்லிசையின் பக்கமே இருந்தது வெள்ளிடைமலை!

இந்திய சினிமாவில் ஹிந்தியை அடுத்து வியாபாரரீதியில் முன்னணியில் இருந்த தமிழ் சினிமாவில் இசையமைப்பது என்பதும், அதில் முன்னணியில் இருக்க முடிந்தததென்பதும் இலகுவான காரியமல்ல என்ற வகையில் மெல்லிசைமன்னர்கள் கூடியவரையில் தமிழ் சினிமாவிலேயே தங்களை நிலை நிறுத்த விரும்பியமையும் மிக இயல்பானதாகும்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்த போதும் தென்னிந்தியாவின் இதர மொழிகளிலும் இவர்களது இனிமைமிக்க இசையைப் பயன்படுத்த பலரும் முனைந்தனர். அந்த வகையில் மெல்லிசைமன்னர் தெலுங்கு .மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியது தற்செயலானதன்று.

ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவின் இசையமைப்பாளர்கள் பலரும் தமிழ் திரைப்படங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். எஸ்.ராஜேஸ்வரராவ், எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி , ஏ.ராமாராவ் , ஆதிநாராயணராவ் , மாஸ்டர் வேணு, டி.சலபதிராவ் போன்றோர் மட்டுமல்ல இசையமைப்பாளர்களும் பாடகர்களுமான கண்டசாலா,ஏ.எம்.ராஜா மற்றும் ஜிக்கி , ஆர்.பாலசரஸ்வதி தேவி ,கே. ஜமுனாராணி , பி.சுசீலா போன்ற பலரும் தெலுங்கு மொழிக்காரர்களே! தமிழ் சினிமாவின் மெல்லிசைமுன்னோடியான சி.ஆர்.சுப்பராமனும் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவரே.

இக்கலைஞர்களும் தமிழ் திரையை தங்கள் இசையால் வளப்படுத்தியவர்கள் என்பதை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. கலை என்பது மொழி எல்லைகளைக் கடந்தது. கேட்கக் கேட்க இன்பமளிக்கின்ற அற்புதமான பாடல்களை அவர்கள் நமக்குத் தந்தார்கள்.

அவற்றில் சில பாடல்கள் ... 01 பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - மிஸ்ஸியம்மா - ஏ.எம்.ராஜா + பி.சுசீலா - இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் 02 வாராயோ வெண்ணிலாவே - மிஸ்ஸியம்மா - ஏ.எம்.ராஜா + பி.லீலா - இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் 03 ஆகா இன்ப நிலாவினிலே - மாயா பஜார் - கண்டசாலா + பி.லீலா - இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் 04 எந்தன் உள்ளம் துள்ளி - கணவனே கண் கண்டா தெய்வம் - பி.சுசீலா - இசை : ஏ.ராமாராவ் 05 அழைக்காதே நினைக்காதே - மணாளனே மங்கையின் பாக்கியம் - பி.சுசீலா - இசை : ஆதிநாராயணராவ் 06 கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே - அடுத்த வீட்டு பெண் - பி.பி.ஸ்ரீனிவாஸ் - இசை : ஆதிநாராயணராவ் 07 கோடை மறைந்தால் இன்பம் வரும் - மஞ்ச்சல் மகிமை - கண்டசாலா + பி.சுசீலா - இசை : மாட்ஸர் வேணு 08 மாறாத சோகம் தானோ - மஞ்ச்சல் மகிமை - கண்டசாலா + பி.சுசீலா - இசை : மாட்ஸர் வேணு இது போன்ற பல சாகாவரம் பெற்ற பாடல்கள்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

தெலுங்கு இசைக்கலைஞர்கள் தமிழ் திரைக்கு இனிய பாடல்களைத் தந்தது போலவே மெல்லிசைமன்னர்களும் தங்கள் இசையால் ஏனைய மொழிப்படங்களையும் வளப்படுத்தினர்.

1960 களில் வெளிவந்த மெல்லிசைமன்னர்களின் இனிய பாடல்கள் தெலுங்குத் திரைப்படங்களிலும் புகழ்பெறத் தொடங்கின. பெரும்பாலும் தமிழில் மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளிவந்த படங்கள் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, அவர்களது பாடல்களும் அப்படியே தெலுங்கு மொழிக்கு மாற்றப்பட்டன. இப்படங்களின் இசையமைப்பாளர்கள் வேறு சிலராக இருப்பதால், படங்களின் பின்னணி இசையை அந்தப்படங்களின் "இசையமைப்பாளர்கள்" செய்திருப்பார்கள் என்றே சொல்ல முடியும். ஏனெனில் பாடல்கள் அனைத்தும் மெல்லிசைமன்னர்கள் தமிழில் இசையமைத்துப் பெரும் புகழடைந்த பாடல்களே! தமிழில் வெளிவந்த பின்வரும் படங்கள் தெலுங்கு மொழியில் வெளிவந்தன.

பாசமலர் [Raktha Sambandham ] நெஞ்சில் ஓர் ஆலயம் [ Maarani Manasula ] போலீஸ்காரன் மகள் [ Constable Kuluru ] பாவமன்னிப்பு [ Paapa Parikaaram ] பாசம் = Manchi Chedu நிச்சயதாம்பூலம் [ Pelli Thampoolam ] வீரத்திருமகன் [ Aasa Jeevulu ] கர்ணன் [ Karna ] படகோட்டி [ Kaalam Mirindi ] சர்வர் சுந்தரம் [ Server Sundaram ] கறுப்புப்பணம் [ Kaavala Pillalu ] ராமு [ RAmu ]

மெல்லிசைமன்னர்கள் ஒன்றாக இருந்த காலத்தில் வெளிவந்த பாடல்கள் இவையானாலும் , இருவரும் பிரிந்த பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனியே இசையமைத்த படங்களிலும் நல்ல பாடல்களைக் கொடுத்தார். குறிப்பாக 1970களில் குறைந்தளவு தெலுங்குப்படங்களில் இசையமைத்தாலும் சில படங்களில் தனித்துவமான பாடல்களை அமைத்தார். குறிப்பாக மரோ சரித்திரா என்ற படத்தில் நல்ல பாடல்கள் அமைந்தன. இப்படம் பின்னர் ஹிந்தியில் ஏக் துஜே கேலியே என்ற பெயரில் வெளி வந்தது. ஏலவே கே.பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை , மன்மதலீலை பின்னர் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் தெலுங்கில் அதே பாடல்களுடன் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன.

மலையாள சினிமாவில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்:

தமிழ் நாட்டு மக்களின் இசை ரசனையை விட மலையாளிகளின் இசை ரசனை சற்று வித்தியாசமானது. தங்கள் அடையாளங்களை பேண விரும்புபவர்கள். தங்களது கலை, கலாச்சாரத்தில் பெருமிதத்துடன் கொண்டாடுவது என பலவிதத்திலும் முன்னனணியில் நிற்பவர்கள். இவர்களது கலை ரசனையும் வித்தியாசமானது. கல்வியிலும் மேம்பட்டு நிற்பதால் , அதனால் விழிப்புணவு இதற்க்கெல்லாம் அடிகோலியது என்று கூறலாம். இவர்களது முன்னேற்றங்களில் கம்யூனிஸ்டுக்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.

பொதுவாக மலையாளிகள் எல்லாவிதமான இசையையும் கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதை அவர்கள் நடாத்தும் இசை நிகழ்ச்சிகளின் மூலம் காண முடியும். அந்த நிகழ்ச்சிகளில் பாடும் சிறுவயதினர் கூட பிற மொழிப்பாடல்களை மிக அநாசாயமாகவும் , அனுபவித்தும் தங்கள் சொந்த மொழிப்பாடல் போல பாடி பிரமிக்க வைப்பதை நாம் காணலாம். பிற மொழிப்பாடல் என்ற சுற்றில் தமிழ், ஹிந்தி என தனித்தனியே சுற்றுக்கள் வைப்பதும் , கர்நாடக இசை , ஹிந்துஸ்தானி இசை , கஸல் இசை என பலவிதமான இசைச்சுற்றுக்களை அவர்களது இசைபோட்டி நிகழ்ச்சிகளில் காண முடியும். இதைத் தமிழ் இசைப் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்! பிற மொழி சுற்றோ பல்வகையான இசைச் சுற்றோ இருக்கவே இருக்காது.

அதே போலவே பிறமொழிகளில் திறமைமிக்க இசையமைப்பாளர்களை எல்லாம் மலையாளப்படங்களில் பயன்படுத்திருப்பதையும் நாம் காண முடியும். இசையமைப்பாளர்களில் சலீல் சௌத்ரி, நௌசாத் , பாம்பே ரவி , ரவீந்திர ஜெயின், உஷா கண்ணா மற்றும் பாடகர்களில் மன்னாடே, லதா மங்கேஷ்கர் போன்ற ஹிந்தி திரையில் கொடிகட்டிப் பறந்த கலைஞர்கள் பலரும் மலையாளப்படங்களை தங்கள் பாடல்களால் பெருமைப்படுத்தினர். உதாரணமாக செம்மீன் படப்பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் ஒலித்தன. தேசிய விருதையும் மலையாள சினிமாவுக்கு பெற்றுக் கொடுத்தது.

தமிழிலும் பிற மொழி இசையமைப்பாளர்கள், லஷ்மிகாந்த் ப்யாரிலால் போன்றவர்கள் ஒரு சில படங்களுக்கு இசையமைத்து மறைந்து விடுவார்கள். அவர்களது பாடல்கள் நன்றாக இருந்தாலும் தொடர்ச்சியாக இசையமைப்பதில்லை. அவர்களில் மனோஜ் கியான் , அம்சலேகா போன்றோர் சில படங்களுக்கு இசையமைத்து கொஞ்சம் பெயர் எடுத்தார்கள். ஆனால் பாம்பே ரவி தொடர்ச்சியாக பல மலையாளப்படங்களுக்கு இசையமைத்து பல இனிய பாடல்களை தந்ததுடன், அவரது பாடல்களைக் கேட்பவர்கள் ,அவர் ஒரு மலையாள இசையமைப்பாளர் என்று சொல்லும் வகையில் அவரது பாட்டுக்கள் வாத்திய அமைப்புகளில் மலையாள மணம் வீசுவதைக் காண முடியும்.

சலீல் சௌத்ரி இசையமைத்த செம்மீன் படம் தென்னிந்தியாவின் முதல் தேசிய பெற்றது. அதே போல பாம்பே ரவி இசையமைத்த சில பாடல்கள் தேசியவிருதுகளையும் பெற்றுக்கொடுத்தது. பாம்பே ரவியின் இனிமைமிக்க இசைக்கு அவர் இசையமைத்த இரண்டு பாடல்களை இங்கே உதாரணம் காட்டலாம்.

மஞ்சள் பிரசாதமும் நெற்றியில் சார்த்தி [சித்ரா ] சாகரங்களே பாடி உணர்த்திய சாமகீதமே [ ஜேசுதாஸ் ] இவ்வ்விதம் பிற மொழி இசையை ரசிப்பதிலும் ,அவர்களது திறமையை பயன்படுத்துவதிலும் ஆர்வம் காட்டிய மலையாளிகள் தங்களுக்கென தனித்துவத்தையும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் படத்தயாரிப்பாளர் தாம் பயன்படுத்தும் கலைஞர்களை புகழ்வதே வழமை என்றாலும் , அவர்கள் தரும் பாடல்களை ரசித்த இசை ரசிகர்களும் அவர்களை நன்கு தெரிந்து பெருமைப்படுத்துவதையும் நாம் மலையாளிகளிடம் காண முடியும். மிகப் பெரிய இசை லயிப்பு அவர்களிடம் இருக்கும் .

இசையில் அவர்களது மனச்ச்சாய்வு என்பது பெரும்பாலும் மெல்லிசையும் ,கஸல் மற்றும் முக்கியமாக கர்னாடக இசை ராகங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட Semiclassical Songs போன்றவற்றிற்கு மிகமுக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளன.

1960களின் நடுப்பகுதியிலிருந்து 1990களின் நடுப்பகுதிவரை மலையாளப்படங்களில் செவ்வியல்சார்ந்த மெல்லிசைப் பாடல்களைக் [ SemiClassical Songs ] கணிசமான அளவில் எல்லா இசையமைப்பாளர்களும் தந்திருக்கிறார்கள். குறிப்பாக பாடகர் ஜேசுதாஸின் குரலை வைத்து அவர்கள் நிகழ்த்தியிருக்கும் ராக வீச்சுக்கள் அற்புதமானவை. அதுமட்டுமல்ல அவரது குரலை பலவிதங்களிலெல்லாம் பயன்படுத்தி தங்களுக்கென இசையையும், இசைக்கலைஞனையும் உருவாக்கியதுடன் , கொண்டாடியும் மகிழ்ந்தார்கள்.

ஜேசுதாஸ் பாடிய சில Semi Classical இசைசார்ந்த பாடல்கள் தேவி கன்யாகுமாரி - இசை : ஜி.தேவராஜன் நாத பிரம்மத்தின் சாகரம் நீந்தி - இசை : ஜி.தேவராஜன் கோபி சந்தன குறி அணிஞ்சு - இசை : ஜி.தேவராஜன் நட்சத்திர தீபங்கள் ஒருங்கி - இசை : ஜி.தேவராஜன் ராக சாகரமே பிரியா காண சாகரமே -இசை : ஜி.தேவராஜன் சத்ய சிவ சௌந்தர்யங்கள் தன - இசை : ஜி.தேவராஜன் காட்டிலே பால் முழம் - இசை : ஜி.தேவராஜன் கதிர் மண்டபம் சொப்ன - இசை : ஜி.தேவராஜன்

தமிழ் நாட்டை விட பார்ப்பனீயம் அங்கே இறுக்கமாக இருப்பதால் இவ்விதம் Semiclassical பாடல்கள் செவ்வியலிசை சார்ந்து வருகிறது என இசை தெரிந்த சில கருதுகின்றனர். செவ்வியலிசை [ கர்நாடக இசை ] என்பது பிராமணர்களின் சொத்தா? இக்கருத்தில் உண்மையில்லை என்பதும் ராகம் சார்ந்த மெல்லிசையில் தென்னிந்திய மக்களுக்கு எப்போதும் ஒரு விருப்பம் இருந்ததென்பதே உண்மையாகும். இதற்கு மலையாளிகள் மட்டும் விதிவிலக்கானவர்கள் என்று கூறிவிட முடியாது.

சாதாரண ஒரு தமிழ் ரசிகர் எடுத்த எடுப்பில் மலையாளிகள் கொண்டாடும் ஒரு பாடலை ரசிக்க முடியுமா எனது சந்தேகம் தான் நமக்குத் பரிட்சயமான ராகங்களில் இசைக்கப்பட்டாலும் , வாத்திய எளிமையாலும் , இசையமைப்பின் முறையாலும் அவை தனித்தடத்தில் பயணிக்கும் இசை என்று சொல்லலாம்.

உதாரணமாகச் சில பாடல்கள்: தளிரிட்ட கினாக்கள் தன் தாமரை - மூடுபடம் 1963 - எஸ்.ஜானகி - இசை : எம்;எஸ்.பாபுராஜ் தாமசம் எண்டே வருவான் - பார்கவி நிலையம் 1964 - ஜேசுதாஸ் - இசை : எம்;எஸ்.பாபுராஜ் ஏன்டா சொப்னத்தில் தாமரை பொய்கையில் - அச்சாணி - ஜேசுதாஸ் - இசை: ஜி தேவராஜன்

தமிழ், மலையாளம் சினிமாக்கள் சமகாலத்திலேயே தொடங்கப்பட்டன. எனினும் 1940 களிலேயே தமிழ் சினிமா கணிசமான அளவில் வளர்ந்தது போல 1950 களிலேயே மலையாள சினிமா இந்த பயணம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. சென்னையில் வளர்ந்திருந்த சினிமா ஸ்டுடியோக்கள் அன்றைய தென்னிந்திய சினிமாக்களின் மையமாக இருந்தது. குறைந்தளவிலான சந்தை வாய்ப்பைக் கொண்ட மலையாள சினிமாவில் பெருமுதலீடுகளற்ற படங்களே வெளியாயின.ஆனாலும் தங்கள் தனித்துவத்தைப் பேண வேண்டும் என்ற ஆவல் மலையாளத் திரைத்துறையினரிடம் இருந்தது என்பது கவனத்திற்குரியது.

1950 களில் மெகபூப் , அகஸ்டின் ஜோசப், வைக்கம் மணி போன்ற பாடி நடிக்கும் நடிகர்களுடன் சாந்தா நாயர் , பி. லீலா , மெகபூப் போன்ற பாடாக, பாடகர்கள் பிரபலமாக இருந்தனர். அகஸ்டின் ஜோசப்என்பவர் கே.ஜே.ஜேசுதாஸின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது நல்லதங்காள் [ 1950 ] படத்தில் இக்கலைஞர்களின் பாடல்களை நாம் கேட்கலாம் . இந்த திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் பின்னாளில் புகழ் பெற்ற வி.தட்க்ஷிணாமூர்த்தி.

இசையைப் பொறுத்தவரையில் 1960 களில் புது எழுச்சியும் ,தனித்துவமும் உருவாகியது. மலையாள சினிமா இசையை வளப்படுத்தியதில் கே.ராகவன் ,ஜி.தேவராஜன் , பாபு ராஜ் , வி. தட்க்ஷிணாமூர்த்தி , பி.ஏ. சிதம்பரநாதன் , எம்.பி.ஸ்ரீநிவாசன் , எம்.கே.அர்ஜுனன் போன்றவர்கள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர் வி.தட்க்ஷிணாமூர்த்தி இசையில் கர்னாடக இசையும் ,அது சார்ந்த மெல்லிசையும்,கே.ராகவன் இசையில் நாட்டார்பண்பும் , மெல்லிசையும் , வடக்கன் பாட்டுகளும் ,பாபுராஜ் இசையில் கஸலும், மாப்பிள்ளை பாட்டுகளும், மெல்லிசையும் , பி.ஏ.சிதம்பரநாதன் இசையில் மெல்லிசையும் ,தேவராஜன் இசையில் நாட்டார் இசை மெல்லிசையும் , எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையில் மெல்லிசையும் , Semiclassical இசையும் , எம்.கே.அர்ஜுனன் இசையில் மெல்லிசையும் என மலையாள திரை இசைக்கென சிறப்பான ஒரு தனித்துவத்தைக் காட்டி வளர்த்தெடுத்தனர்.

இக்காலப்பகுதியில் தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பாடி புகழபெற்ற பின்னணிப்பாடகர்களான ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் முன்பு அதிகம் பாடிக்கொண்டிருந்தனர். 1960 களில் வீசிய புதிய அலையில் சில புதிய மலையாளப்பாடகர்களும் அறிமுகமாயினர். இவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் , பிரமானந்தன் , ஜெயச்சந்திரன், மாதுரி , வசந்தா போன்றோரின் பெயர்கள் அதிகம் பேசப்பட்டன.

குறிப்பாக கே.ஜே.ஜேசுதாஸ் தனக்கென மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தார். தனது குரல் வளத்தால் எல்லோரையும் கவர்ந்த ஜேசுதாஸ் இசையமைப்பாளர்களின் அபிமானத்திற்குரிய பாடகரானார். அவரது பாடும் திறனுக்கும் , குரலின் இனிமைக்கும் ஏற்ப பாடல்கள் வடிமைக்கப்பட்டன. மலையாளிகள் தங்களுக்கென ஓர் தனித்துவமான பாடகன் கிடைத்து விட்டான் என்று கொண்டாடினார்கள். சினிமா நடிகர்களுக்கு இணையாக அவர் போற்றப்பட்டார். அவரது வருகையின் பின்னர் தான் மலையாள இசை அரங்கின் பொற்காலம் உருவாகியது. அவர் வரும் வரை ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் பாடிக்கொண்டிருந்தனர். மலையாள பாடல்களையும் அது குறித்த மலையாளிகளின் பேட்டிகளையும் கேட்டால் அவர்கள் தங்கள் இசை தமது ஆத்மாவை தழுவுபவை என்பதைக் குறிப்பிடத் தவறுவதில்லை. தமக்கான தனித்துவத்தை பேணுவதில் பேரவா என்று நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஹிந்திப்பாடல்களும் ஹசல் இசையும் அவர்களது இசை கச்சேரிகளிலும் [ கான மேளா ] ஒலிப்பதை நாம் காண முடியும்.

கேரளத்து திருமணங்களில் பாடி புகழ்பெற்ற பாபுராஜ் என்ற இசைக்கலைஞர் அதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆரம்ப காலத்தில் அவருடன் பாடகர் ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் போன்றோர் இணைந்து பாடியுமிருக்கின்றனர். அவர் பின்னாளில் திரை இசையமைப்பாளரான பின்பு இரு பாடகர்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார். பாபுராஜ் குறித்து பின்னாளில் நினைவு கூறும் ஜெயசந்திரன் அவரது பாடும் முறையையும் , ஹார்மோனியம் வாசிக்கும் திறமையையும் குறித்துப் பேசியிருக்கிறார். பாபுராஜ் மட்டுமல்ல சலீல் சௌத்ரி ஹிந்தி திரையில் மிகவும் புகழபெற்றவர். புதிய ஒலிநயங்களையெல்லாம் வெளிப்படுத்துவதில் வல்லவர்.

மலையாளப்பாடல்கள் தனித்துவமானவையாகவும் இருப்பதற்கு தனித்துவம் மிக்க மண்சார்ந்த அதன் பாடல் வரிகளும் முக்கியகாரணங்களாகும். மலையாள நாட்டுப்புற மக்களின் வேர்களிலிருந்து வளர்ந்த கலைஞர்களின் பங்களிப்பு அங்கே அலாதியானது. அவை மலையாள வாழ்க்கையையும், அதன் அனுபவங்களையும் நன்கு பிரபலித்தன. அதில் கம்யூனிஸ்டுக்களின் பங்களிப்பே அதிகம். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கலைக்குழுவின் கேரளா பிரிவான "கேரளா மக்கள் கலைமன்றத்தினர் " ஆற்றிய பங்கு மலையாள சினிமா வளரவும் ,நல்ல ரசனை உருவாகவும் வழி காட்டியது.

மலையாள சினிமாவில் பாடல்கள் எழுதிய கவிஞர்களான பி.பாஸ்கரன், வயலார் போன்றவர்களும் , மலையாள சினிமாவில் நிரந்தர புகழ்பெற்ற கதாசிரியர் வாசுதேவன் நாயர், ராமு காரியத் போன்றோர் அந்த அமைப்பிலிருந்து வந்தவர்களே. இவர்கள் பாடல் எழுதுதல் , வசனம் , இயக்கம் என பல ஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்கினர். இந்த பின்புலத்தில் மலையாள சினிமாவில் மெல்லிசைமன்னர் எப்படி இசை அமைத்தார் என்பது சுவாரஸ்யமானது ஆகும் . தமிழ் சினிமா இசை இந்தியாவின் அதிக புகழ்பெற்ற வணிக சினிமாவான ஹிந்தி திரையிசையை அடியொற்றி வந்ததும் , அதன் பகட்டான popular இசைசார்ந்து இருந்ததையும் காணமுடியும். அதில் நன்கு தேர்ச்சி பெற்ற மெல்லிசைமன்னரின் இசை மண்ணும் , மக்களின் இசைசார்ந்து வளர்ந்த ஒரு தனிப்போக்கைக் கொண்ட இசை ரசனைக்கு பொருந்துமா என்ற கேள்வி நியாயமானது. ஆனாலும் அடிப்படையில் ராகம் சார்ந்த மெல்லிசையில் வல்லவர்களாயிருந்த மெல்லிசைமன்னர் முற்று முழுதாக தமிழில் தான் அமைப்பது போன்ற இசை தராமல் ஏற்கனவே மலையாளிகள் வளர்த்தெடுத்த இசைப்பாங்கைச் சார்ந்து வழங்கினார். அல்லது கொஞ்சம் அடக்கி வாசித்தார் என்று சொல்லலாம் .

தனக்கென ஒரு தனித்துவத்தை பேணிக்கொண்டு வளர்ந்த மலையாள சினிமா இசையை பல்வேறு விதமான இசையமைப்பாளர்களும் வளப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் பிறப்பால் மலையாளியாகவும் தமிழ் திரை இசையில் முன்னணி இசையமைப்பாளராகவும் விளங்கிய மெல்லிசைமன்னரை 1970 களிலிருந்து பயன்படுத்தத் தொடங்கினர். 1950களிலேயே ஜெனோவா [ 1953 ] . லில்லி [ 1958 ] என ஒரு சில படங்களுக்கு மெல்லிசைமன்னர்கள் இசையமைத்தாலும் அவை குறிப்பிட்டு சொல்லும் அளவில் இல்லை எனலாம். அவரது முதல் படமான ஜெனோவா [ 1953 ] தமிழிலும் , மலையாளத்திலும் வெளியான போதும் அப்பாடல்கள் பிரபலமடையவில்லை.

எம்ஜி.ஆர் நடித்த ஜெனோவா [1953] படத்தில் இடம் பெற்ற பல பாடல்களை ஏ.எம்.ராஜா , பி.லீலா போன்றோர் பாடினர். அப்பாடல்களை இப்போது கேட்கும் போது மெல்லிசைமன்னரின் இனிய இசை ரசிக்கும்படியாக இருப்பதை காணமுடியும்.

அதே போல லில்லி [1958] படப்பாடல்கள் கேட்க கிடைக்கின்றன. லில்லி [ 1958 ] என்ற படத்தில் பிரேம்நசீர் , சத்யன் போன்றோர் நடித்தனர் " ஆலப்புழா கடவினு ஞானும் கோட்டிற்கேறி " என்று தொடங்கும், பாடகர் மகபூப் பாடிய பாடல் நாட்டுப்புற இசையில் அமைந்திருக்கும்.

" ஜேசு நாயகா பிரேமா நாயகா " என்று தொடங்கும் பாடல் சாந்தா நாயர் மாற்று பி.லீலா குழுவினர் பாடியிருப்பார்கள். இவை தவிர ஜி.கே.வெங்கடேஷ் , ஏ.எல்.ராகவன் போன்றோர் பாடிய பாடல்களும் இருப்பதாக பாட்டு புத்தகம் தகவல் தருகிறது.

1970 களில் தங்கள் தனித்துவமான இசையால் தமக்கென ஓர் தனித்துமான மெல்லிசை அமைப்பை உருவாக்கி வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த இத்தனை மலையாள இசையமைப்பாளர்களும் களமாடிக்கொண்டிருந்த மலையாள சினிமாவில் மெல்லிசைமன்னரின் மீள் வருகை அமைகிறது.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும்அதிக எண்ணிக்கையிலமைந்த வாத்தியக்குழுவை பயன்படுத்திப்பழகிய மெல்லிசைமன்னர் மலையாள பாடல்களை .தமிழ் போல அல்லாமல் மலையாள இசையமைப்பாளர்களின் போக்கிலேயே பெரும்பாலான பாடல்களை குறைந்த அளவில் வாத்தியங்களை பயன்படுத்தித் தந்தார் என்று சொல்லலாம்.

1960 களின் நடுப்பகுதியிலிருந்து மலையாளத்தில் ஏற்கனவே இசையமைப்பாளர் வி.தட்க்ஷிணாமூர்த்தி - ஜேசுதாஸ் கூட்டணி , தேவராஜன் - ஜேசுதாஸ் கூட்டணி , பாபுராஜ் - ஜேசுதாஸ் கூட்டணி , எம்.கே.அர்ஜுனன் - ஜேசுதாஸ் கூட்டணி, சலீல் சௌத்ரி - ஜேசுதாஸ் கூட்டணி என இசையமைப்பாளர்களும் பாடகர்கரும் என இசையில் ஏராளமான பாடல்கள் வெளியாகி புகழின் உச்சியில் ஜேசுதாஸ் இருந்தார்.

மலையாள இசையமைப்பாளர்களால் இனிமையூட்டப்பட்ட ஜேசுதாஸின் குரல் வளத்தால் நிறைந்த மலையாளத்திரையிசை பாடல்களை தனது இசையாலும் வளப்படுத்திய பெருமை மெல்லிசைமன்னருக்கு உண்டு. அந்தவகையில் Semi Classical பாணியில் மட்டுமல்ல ஹசல் பாணியிலும் தன்னாலும் இசையமைக்க முடியும் என மெல்லிசைமன்னரும் நிரூபித்தார் என்பதற்கு உதாரணமாக அமைந்த பாடல்கள் சிலவற்றை கீழே தருகின்றேன். மேலே குறிப்பிட்டது போலவே பின்னாளில் மெல்லிசைமன்னரின் இனிய இசையால் விஸ்வநாதன் - ஜேசுதாஸ் கூட்டணியிலும் பல வெற்றிப்பாடல்கள் உருவாகின.

இந்தப்பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது என்று கூறலாம். 01 சுவர்க்க நந்தினி சொப்ன விகாரி நீ - லங்காதகனம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 புஷ்பாபரணம் வசந்த தேவண்டே - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 03 ஆ..நிமிசத்திண்டே - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 04 கதகளி கேளி தொடங்கி - அஜயனும் விஜயனும் 1976 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 05 மறந்நுவோ நீ ஹ்ருதயேசவ்ரி - அக்சயபாத்ரம் 1977 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 06 அஷ்டாபதியில் - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 07 சுப்ரபாதம் சுப்ரபாதம் - பணி தீராத வீடு 1973 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 08 கற்பூர தீரத்தின் - திவ்யதரிசனம் 1974 - ஜெயச்சந்திரன் - மாதுரி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 09 ஸ்வர்ணக்கோபுர நர்த்தகி சில்பம் - பணி தீராத வீடு 1974 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 10 பூக்காலம் இது பூக்காலம் - ஸ்நேகத்திண்டே முகம் 1978 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

அதேபோலவே மெல்லிசைபாங்கிலும் தமிழ் பாடல்களை போலல்லாது அங்கேயும் வேறுபட்ட வகையில் மிகுந்த தனித்துவமிக்க பாடல்களையும் தரமுடியும் என்று மெல்லிசைமன்னர் நிரூபித்தார்.

01 ஈஸ்வரன் ஒருக்கால் - லங்காதகனம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 சூர்யன் இன்னொரு நட்ஷத்திரம் - லங்காதகனம் 1971 - ஏசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 03 நட்சத்திர ராத்யத்தில் - லங்காதகனம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 04 ஆகாச பூரணி - திவ்யதரிசனம் 1974- ஏசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 05 ஸ்வர்க்கமென்ன கானகத்தில் - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 06 புஷ்பாபரணம் வசந்த தேவண்டே - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 07 ஆ..நிமிசத்திண்டே - சந்ரகாந்தம் 1971 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 08 வீணை பூவே குமாரன் ஆஸாண்டே - சந்ரகாந்தம் 1974 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 09 பிரம்ம நந்தினி - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜேசுதாஸ் + வசந்தா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 10 வீணை பூவே குமாரன் ஆஸாண்டே - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 11 சில்பி தேவா சில்பி - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 12 கதகளி கேளி தொடங்கி - அஜயனும் விஜயனும் 1976 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 13 மறந்நுவோ நீ ஹ்ருதயேசவ்ரி - அக்சயபாத்ரம் 1977 - ஜேசுதாஸ் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 14 அஷ்டாபதியில் - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஜேசுதாஸ் அதியுச்ச நிலையில் பாடிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் ஜெயச்சந்திரன் தனது தனித்துவமான பாடும் முறையால் பல இனியபாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். மெல்லிசைமன்னருக்கும் ஜேசுதாசுக்கும் இடையே சில உரசல்கள் இருந்த காரணத்தால் வேறு சில பாடகர்களும் பாடும் வாய்ப்பை பெற்றனர். அதில் கணிசமான அளவில் பாடும் வாய்ப்பைப் பெற்று தலை சிறந்த பாடல்களை பாடியவர் ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் - விசுவநாதன் கூட்டு அணியில் பல இனிய பாடல்கள் வெளி வந்தது போலவே ஜெயசந்திரன் - விஸ்வநாதன் கூட்டு அணியில் பல பாடல்கள் வெளிவந்தன.

எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்: 01 பஞ்சவடியிலே - லங்காதகனம் 1971 - ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 திருவாபரணம் சார்த்தி - லங்காதகனம் 1971 - ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 03 மலரம்பனெழுதிய மலையாளக் கவிதை - மந்திரக்கொடி 1971 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 04 சுப்ரபாதம் சுப்ரபாதம் - பணி தீராத வீடு 1973 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 05 கற்பூர தீரத்தின் - திவ்யதரிசனம் 1974 - ஜெயச்சந்திரன் - மாதுரி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 06 ஸ்வர்ணக்கோபுர நர்த்தகி சில்பம் - பணி தீராத வீடு 1974 - ஜெயச்சந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 07 கற்பூர தீரத்தின் - திவ்யதரிசனம் 1974 - ஜெயச்சந்திரன் - மாதுரி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 08 அஷ்டபதியிலே - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 -ஜெயசந்திரன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 09 கிலுக்காதே கிலுக்கும்னா கிலுக்காம்பட்டி - மந்திரக்கொடி 1971 - ஜெயச்சந்திரன் + சுசீலா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஜேசுதாஸ் , ஜெயசந்திரன் மட்டுமல்ல ஜோலி ஏப்ரகாம் , எஸ்.ஜானகி , பி.சுசீலா, வாணி ஜெயராம் போன்ற பலருக்கும் புகழ் தரும் பல பாடல்களை தந்தவர் விஸ்வநாதன்.

எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்.

01 மாலினி தடமே - ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ 1974 - எஸ்.ஜானகி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 வீணே பூவே குமாரன் ஆசாண்டே [ ஜானகி ] 03 நிஷீதினி நிஷிதீனி - யக்ஷகானம் 1976 - எஸ்.ஜானகி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 04 வசந்தமே நீ வன்னு விழிச்சால் - கூட்டவும் சிஷ்யனும் 1976 - எஸ்.ஜானகி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 05 மதுரமுள்ள நொம்புரம் - அக்சயபாத்ரம் 1977 - வாணி - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 06 முல்லைமாலை சூடிவண்ண - ஆயிரம் ஜென்மங்கள் 1976 - வாணி - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 07 பிரியமுள்ள சேட்டன் அறிவான் - அக்சயபாத்ரம் 1977 - சுசீலா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 08 கதிர் மண்டபம் ஒருக்கி -மந்திரக்கொடி 1973 - சுசீலா - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 09 ரஜனி கந்தி விடார்னு - பஞ்சமி 1976 - ஜோலி ஏப்ரகாம் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

மேலே குறிப்பிட்ட பாடகர்கள் மட்டுமல்ல தானே பல பாடல்களையும் பாடி தன்னை மலையாள சினிமாவிலும் நிலைநிறுத்தியவர் மெல்லிசைமன்னர். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் இசை நிகழ்சிகளில் பாடப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்

01 பிரபாதம் அல்லா நீ - சந்த்ரகாந்தம் 1971 - விஸ்வநாதன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 02 ஹ்ருதயவாகினி ஒழுக்குன்னுவோ - சந்த்ரகாந்தம் 1971 - விஸ்வநாதன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன் 03 கண்ணீர் துள்ளியே - பணி தீராத வீடு 1973 - எம்.எஸ்.விஸ்வநாதன் - இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

தன்னுடைய வழமையான பாணியிலிருந்து சற்று மாறுபட்டும் , மலையாள இசையமைப்பாளர்கள் வளர்த்தெடுத்த பாணிக்கும் நெருடலில்லாமல் அதனுடன் இசைந்து போகக்கக்கூடியதும் அதே வேளை தனது தனித்துவ திறமையால் ஆங்காங்கே தனது வாத்திய இசை பிரயோகங்களாலும் மக்களை மகிழ்விக்கும் பல இனிய பாடல்களை மெல்லிசைமன்னர் தரத்தவறவில்லை என்பதும் நம் அவதானத்திற்குரியது.

மாறும் கலாச்சார சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை தகவமைக்கவும் படைப்புணர்வின் ஆற்றலை நன்கு வெளிப்படுத்தவும் , அதன் பின்புலத்தில் அவர் பல்வேறு விதமான கற்பனை விரிவுகளை வளப்படுத்துவதிலும் பல்வேறு இசைவகைகளில் அவர் காட்டிய ஆர்வம் அவற்றின் மூலங்கள், அவற்றிலிருந்து உயிர்ப்பு ஒலிநயங்களும் , பிற சேர்க்கைகளும் அவர் படைப்புக்கு உதவியிருக்கும் என்பதை நாம் வியப்புடன் நோக்குகின்றோம்.


படைப்பின் மூலங்களும் நீரோட்டங்களும்:

படைப்பின் வழியே கலைஞர்கள் தங்களை தருகிறார்கள். அதன் மூலம் தனது உழைப்பை படைப்பூக்கத்துடன் வழங்கும் கலைஞன் நிம்மதியாகத் தனது பாரத்தை இறக்கிவைக்கிறான். அந்தப்படைப்பை உள்வாங்கும் ஒருவன் அதில் லயித்து அதற்கு ரசிகனாகிறான். கலைஞன் படைப்பால் ரசிகன் புது அனுபவம் பெறுகிறான். உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் அந்தப்படைப்பின் மூலம் பரவசமும் அடைகின்றான் படைத்தலும்,அதனால் விளையும் பரவசமும் வெவ்வேறு நிலைகளில் இயங்குகிறது."இன்பம் தரவும் ,பெறவும் பயன்படுத்தப் பெறுகிற சாக்கு இருக்கிறதே இது தான் கலை " என்பார் அன்னதா சங்கர் ராய்.[கலை - அன்னதா சங்கர் ராய், பக்கம் 5]

மனம் முழுவதும் பாடலில் பறிகொடுக்கும் ஒரு ரசிகன் பாடலில் ஒளிந்திருக்கும் நூதனங்களையும் , இசையமைப்பாளரின் உளப்பாங்கையும் உணரத் தலைப்படுகிறான். இசை ரசனையின் விரிதளத்தில் பயணிக்கும் ஒரு இசை ரசிகன் அந்தப் பயணத்தின் பலனாய் புதிய தேடலுக்கும் ஆட்படுகிறான். ரசிப்பின் அனுபவம் என்பது, நாளடைவில் இசையைப் படைத்த படைப்பாளிகள் எங்கனம் தமது படைப்பின் ரகசியங்களை மறைக்க முயன்றதையும் , அதன் பயனாய் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளுக்கு பலவிதமான மாறுவேடங்களை புனைந்து உலாவிடுவதையும் கண்டு ரசிக்கவும் செய்கிறான்.

இசையமைப்பாளர்கள் தாம் அனுபவித்த பிறரது படைப்புகளில் தம்மைக்கவர்ந்த அம்சங்களை நுட்பமாகக் கையாளும் போது அவை வெளியே துருத்திக் கொண்டு நிற்காதவண்ணம் காண்பிப்பதும் தங்களது இசைக்குள் அவற்றை அமிழ்த்திச் தங்கள் படைப்பிற்கு வளம் சேர்ப்பதையும் காண்பதை ரசிகனின் விரிந்த ரசனை பெற்றுக்கொடுக்கிறது. பரந்துபட்ட இசைரசிப்பு ரசிகனின் நுண்ணிய , ஆழமான பார்வையையும் விரிவடைய செய்கிறது. இசை ரசனையை புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

“இசையமைப்பு” என்ற படைப்பு செயற்பாட்டில் ஒரு படைப்பாளியின் சுதந்திர உணர்வு திரைப்படத்தை சார்ந்து இயங்குவதும் அதற்கப்பால் பரந்த ரசிகர்களைச் சார்ந்தும் இயங்குவதால் இசையமைப்பாளர்கள் எங்கெல்லாம் இசைப்பயணம் நடாத்தினார்கள் கண்டு கொள்ள ஏதுவாகிறது.இசையின் விரிந்த பயணத்தின் பலனாக இசையின் குறிப்பிட்ட இசைத்துணுக்குகள் சில கணங்களிலே முகம் காட்டி கரைந்து செல்வதையும் ,சில இசைத்துணுக்குகள் பூதாகாரமாகக் காட்டப்படுவதையும் வேறு சில பாடல்களில் மிக இயல்பாய் செல்வதையும் அவதானிக்கிறான்.

கலைஞர்கள் நாடுவது முழுமையான சுதந்திரம் என்ற வகையில் . சினிமாவில் அது எல்லா நேரமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. குறிப்பாகத் தமிழ் சினிமாவில் பணபலம் கொண்ட தயாரிப்பாளர்களும் , புகழ்பலம் கொண்ட நடிகர்களும் தங்கள் தகுதியை மீறி தேவையற்ற அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த காலம் என்பது மெல்லிசைமன்னர்களின் காலமாக இருந்தது.

ஒருமுகப்படுத்தி நிற்கவேண்டிய இசையமைப்பாளர்களது படைப்பின் இலக்கு பலதிசையிலும் சிதைக்கப்பட்டது. பரிசோதனை முயற்சிகளை எண்ணிப்பார்க்க முடியாத சோதனையான காலம் என்று சொல்லலாம். இது போன்ற தடங்கல்களை ஒருவிதமான பொறுமையோடு தான் அவர்கள் சகித்துக் கொண்டார்கள். கலைத்துரையாயினும் , தொழில்நுட்பத் திறனாயினும் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் கூட நடிகர்களுக்கு கீழ்ப்படிந்தே செயல்பட நேர்ந்தது. இசையைப் பொருத்தவரையில் ஒருவிதமான தத்தளிப்பே நியதியாக இருந்தது.

இசைப்படைப்பின் போது மேலெழும் அசாதாரண அகஎழுச்சியலை , வினோதமான கற்பனை வளம் கொண்ட தயாரிப்பாளர்கள்,நடிகர்களால் அதன் ஜீவ ஓட்டம் சிதைக்கப்பட்டன.

எனினும் அதை மீறமுடியாத இசைக்கலைஞன் தயாரிப்பாளர்கள் , நடிகர்களைக் குசிப்படுத்தும் ஒரு முறையைக் கையாண்டு, அவர்கள் ஏற்கனவே கேட்ட இசைமாதிரிகளை ஜாடைகாட்டி தற்காலிக விடுதலை பெற்றுவிடுகிறான்.சினிமாவின் வணிகம் சார்ந்து எழும் நிர்பந்தங்கள் இசையமைப்பளர்களை அடிபணிய வைத்திருக்கிறது. இவை போன்ற தடைகளையெல்லாம் தாண்டி நல்ல பாடல்களை அவர்கள் தந்தது தான் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விஷயமாகும்!

தங்கள் இசையின் நடை சிறப்பையும், எளிமையையும் வெளிப்படுத்த அவர்கள் இசைச்சிலம்பம் ஆடவில்லை.போகிற போக்கில் இயல்பாய் அமைந்த நடையைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள். அதுவே அவர்களின் படைப்பாற்றலாகவும் விளங்கின.

ஒரு சிறிய இசைத்துணுக்கை வைத்துக் கொண்டு அதனை குழைத்துக் குழைத்து கேட்பவர்களை பிரமிக்க வைப்பது, அதனைப் புதிய ,புதிய சங்கதிகளை போட்டு வளப்படுத்துவது என தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் இசைஜுவாலைகளில் எரியவைத்தார்கள். போடும் ஒவ்வொரு விதம்விதமான மெட்டிலும் இனிமையைக் குழைத்து அவர்கள் எதைத் தெரிந்தெடுப்பது என திக்குமுக்காட வைத்தார்கள்.

மெல்லிசைமன்னர்கள் இசை அமைத்து நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காத அல்லது ஒலிப்பதிவாகாத மெட்டுக்கள் எல்லாம் காற்றோடு காற்றாகக் கரைந்தன. சில பாடல்கள் வேறு சில படங்களுக்கு மாற்றியும் கொடுத்ததால் தப்பின. உதாரணமாக :

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் - [ பாலும் பழமும் ] அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் [ காதலிக்க நேரமில்லை ]

போன்ற பாடல்கள் வேறு படங்களுக்கு போடப்பட்ட மெட்டுக்களாகும். மெல்லிசைமன்னர் வேறு பல பாடல்களை இந்த வகையில் வெவ்வேறு படங்களில் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டார். சில பாடல்களை சாயல்களை, சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மாற்றியும் கொடுத்து அவர்களை திசை திருப்பி வைப்பார். அவை ஒரே மெட்டு என்பதை அவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத வண்ணம் கொடுத்திருக்கின்றார் . குறிப்பாக எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களில் கொடுத்திருக்கின்றார். ஒரே மேட்டை இரண்டு நடிகர்களுக்கும் விதம் விதமாக மாற்றி கொடுத்தார். உதாரணமாக .

அந்த மாப்பிளை காதலிச்சான் [ எம்.ஜி.ஆர் ] பணம் படைத்தவன்1965 அம்மாக்கண்ணு சும்மா சொல்லு [ சிவாஜி ]

இவ்விதம் விதம்விதமான மெட்டுக்களை பலவிதமான இசை ஊற்றுக்களிலிருந்து அவர்கள் பெற்றிருப்பதை காண முடிகிறது. ஒரே மேட்டை வைத்துக் கொண்டே பலவிதமான ஜாலங்கள் காட்டுவது ,தாள நடைகளை மாற்றுவது என மாந்திரீகர்களுக்குரிய வகையில் வித்தைகளைக் காட்டினார்.

இக்கட்டுரை அந்த மூலங்களைத் தேடிய பயணமாக அமைகிறது.

காற்றில் மிதந்துவரும் பூவின் வாசம் ஒருகணம் நம்மைத் தழுவி மறைந்து விட்டாலும் அதன் நறுமணத்தை மனதில் நிறுத்தி சென்று தான் தனித்துவத்தின் சுவடுகளை நெஞ்சில் பதித்து செல்வது போல , அல்லது அதன் நறுமணம் நம்மில் ஒட்டிக்கொள்வது போல இசையின் உயிர்வீசும் நறுமணத்துகள்கள் நம் மனதில் இனம்புரியாத அர்த்தங்களை , உணர்வுகளை புதைத்துவிட்டு சென்று மறைகின்றன. வாசத்திற்கும் இசைக்கும் நம் நினைவுகளை மடைமாற்றும் அற்புத சக்தி இருக்கிறது.

நிலத்தில் விழும் விதை முளைத்து மரமாகி ,விழுது விட்டு ஒன்றில் ஒன்று தங்குவது போல ,ரசிக்கும் இசைத்துணுக்குகள் தோற்றுவிக்கும் உணர்வுகள் விதையாகி நிலைத்துவிடுகின்றன.படைப்பில் இயங்கும் ஒரு பொழுதில் ஒரு கலைஞனின் அந்த ரசத்துளிகள் தன்னிச்சையாக போகிற போக்கில் கலந்தும் விடுகின்றன.ரசத்துளிகள் தரும் உணர்ச்சி அலை மேதைகளின் படைப்புகளில் தோன்றி புதிய வடிவம் பெற்றுவிடுகின்றன.கலாபூர்வமாகப் பார்க்கும் விதத்தில் , அல்லது வெளிப்படுத்தும் விதத்தில் வெவ்வேறு விதமாக அமைந்து விடுகின்றன.

கலைகளில் புதிய ,புதிய அம்சங்கள் சேர்மானம் அடைவது போல் சில கதைகள் புதிய வடிவங்களில் கலைவடிவமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன அவை திட்டமிட்டும் செயற்படுத்தப்பட்டு வந்திருப்பதை ஆள்பவர்களின் ஆதிக்கத்தின் தந்திரமாக இருப்பதையும் காண்கிறோம்.

இந்திய சூழலில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள பார்ப்பனீயம் மகாபாரதம் , ராமாயணம் , அரிச்சந்திரா போன்ற கதைகளை பல்வேறு வடிவங்களில் , பல்வேறு கலாச்சார சூழலுக்குதக்கவாறு தகவமைப்பதை வரலாறு முழுவதும் காண்கிறோம். எழுதப்படிக்கத்தெரியாத ஒரு இந்தியனுக்கும் மகாபாரதம் ,ராமாயணம் அத்துப்படியாகத் தெரியும் என்பதே அதற்குச் சான்றாகும். இடைவிடாத பிரச்சாரத்தால் அவை மக்கள் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

படைப்பாற்றல் என்பது சூனியத்திலிருந்து உதிப்பதில்லை. எந்த ஒரு படைப்புக்கும் ஒரு ஆதார மூலம் இருக்கிறது. அதே போல உலகப்புகழ் பெற்ற கலைவடிவங்கள் பலவும் மீள ,மீள வெவ்வேறு விதங்களில் வடிவம் எடுத்து வந்திருக்கின்றன என்னும் உண்மையிலிருந்து இதற்கான எடுத்துக்காட்டை நாம் கூறலாம். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்கள் சேக்ஸ்பியரின் நாடகத்தை உலகெங்கும் பரப்பி அதற்கான தனி மரியாதையை ஏற்படுத்திநார்கள். இருபதாம் நூற்றாண்டின் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஏற்பட்ட கலாச்சார பரிவர்த்தனையின் விளைவாய் நாடகத்துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் இந்தியாவில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அறிமுமாகியதுடன் .பார்சி நாடகம் ஐரோப்பிய நாடகங்களின்மரபுகளை உள்வாங்கியது.

பார்சி நாடகத்தின் தாக்கத்தால் தமிழ்நாடகமும் மாற்றம் கண்டது. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக அரங்கம் பார்சிநாடகத்தை உள்வாங்கி தமிழ் மக்கள் இசையும் இணைத்த வண்ணம் வளர்ந்தது. சங்கரதாஸ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல சம்பந்தமுதலியாரின் நாடகங்கள் சேக்ஸ்பியரின் நாடக மொழி பெயர்ப்புகளுடன் வசனங்களையும் ,தமிழர் பாரம்பரியங்களையும் இணைத்து உருவாகியது.

ஒரு காலத்தின் தேவைகளை ஒட்டி பிறக்கும் படைப்புக்கள் கலை நுணுக்கத்தால் நிலை பெற்று மரபாகி நிலைபெற்று விடுகின்றன. கால ஓட்டத்தில், குறிப்பிட்ட அந்தக் காலத்திற்குப் பொருந்தாவிட்டாலும் அந்த மரபின் ஈர்ப்பில் மயங்கும் ஒரு கலைஞன், அதனை உயிர்ப்புடன் தனது சொல்லும் திறன் கொண்டு இயம்பிக்காட்டுவதால் தனித்தன்மை மிக்க ஒன்றாக மாற்றுகிறான். பாமரத்தனமான இந்திய , இதிகாச , புராணக் கதைகள் எல்லாம் இவ்விதமாக திரும்பத் திரும்ப புதிய கலை வடிவங்களில் புகுந்து நிலைத்து நிற்கின்றன. இன்றைய காலத்தில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இதிகாசக்கதைகள் எல்லாம் மீண்டும் . மீண்டும் சுழன்றடிக்கும் துர்ப்பாக்கியமும் நிகழ்கிறது.

தமிழ் சினிமா இசையைப் பொறுத்தவரையில் பலவிதமான இசை, வாத்தியங்கள், நுணுக்ககங்கள் என பலவற்றை புதுமையாகக் கையாண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்ற ரீதியில் அவர்களது படைப்புகளில் பிறரது படைப்புகளின் சில அம்சங்கள் மட்டுமல்ல அவர்களே இசையமைத்த சில பாடல்களின் அம்சங்கள் புதிய ,புதிய பாதைகளிலும் திரும்ப திரும்பவும் வந்துள்ளன என்பதையும் காண்கிறோம். பலவிதமான இசைவகைகளின் போக்குகளெல்லாம் எவ்விதம் அவர்களது இசையில் கலந்து கொடுத்துள்ளார்கள் என்பதை அவதானிப்பது ரசனையைத் தூண்டுவதுடன் அவை பற்றிய சிந்தனைகளையும் தூண்டுபவைகளாக இருக்கின்றன.

சில பாடல்களை கேட்ட மாத்திரத்தில் அதனுடைய அசைவுகள் மனதில் இனம் புரியாத சலனங்களை எழுப்புகின்றன. எங்கோ ஓர் இடத்தில் ஒருகணத்தில் நழுவித் போகும் மெட்டின் ஒரு கணத்துளி ரசவாதம் உண்டாக்கிவிடும். அதை எங்கோ கேட்டிருக்கின்றோம் என்ற ஆவலை நம்முள் அவை தோற்றுவிக்கின்றன.அதை நாம் திரும்பத் திரும்ப கேட்கும் பொழுது, குறிப்பாகப் பாடும் பொழுது நமது ஞாபகக் கதிர்கள் பாய்ந்து நினைவு நரம்புகளில் ஒளியைப்பாய்ச்சி தட்டியெழுப்புகின்றன. செவியில் நுழைந்து இதயத்தில் எங்கோஒரு மூலையில் தங்கிவிட்ட ஒளிப்பிழம்புகள் ஒளிரத்தொடங்குகின்றன. இந்த அனுபவம் பலவிதமான ஒலிகளைக் கேட்டுப் பழகிய எல்லோருக்கும் பொதுவாக அமைவதில்லை. ஆனால் இசையில் ஈடுபாடும் ,கூர்மை நுணுக்கத்துடன் கேட்பவர்கள் இலகுவில் கண்டடைந்து விடுவர். அவை நீரோட்டத்தில் வருகின்ற அலையில் திடீரென தோன்றி மறைகின்ற குமிழிகள் போல மாயவித்தைகளை மனதில் தோற்றுவிக்கின்றன. இந்த ரசவாத மாயவித்தைகளை மிக இயல்பாக செய்து காட்டும் இசைக்கலைஞர்களை நாம் வியக்கும் அதே வேளை அதற்கான அவர்களின் முன்முயற்சிகளையும் எண்ணி பார்க்கின்றோம்.

இவை ஒருபுறமிருக்க இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசித்து பின் அவர்களுக்கு “தீவிர” ரசிகர்களாகி அவர்களை பாராட்டுவதும் , கடந்து போன காலங்களை நினைத்து ஏங்குவதும் பழம்பெருமை பேசுவதும் இவர்களைத் தாண்டி இசை வளரவில்லை என்று கூறவிழைவது என்பது குருட்டுத்தனமாதாகும். அதை விஸ்வநாதனின் ரசிகர்கள் என்று சொல்பவர்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லையாயினும் மறைமுகமாக செய்து வருகின்றார்கள். அதை அவர்கள் தர்க்க ரீதியில் விளக்கவும் முடியாது. அதுமட்டுமல்ல இந்த ரசிகர்கள் தமிழ் பாடல்களைத் தாண்டி இசையைக் கேட்கமுடியாதவர்களாயும் இருக்கின்றார்கள் என்பதையே இவை காட்டுகின்றன.

ரசிகர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் சந்திப்புக்கள் அல்லது கூட்டங்கள் மெல்லிசைமன்னர்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள், குறிப்பாக வெளிநாட்டு இசைகளை இப்படி பயன்படுத்தியுள்ளார் ,அப்படிப் பயன்படுத்தியுள்ளார் என கருத்துக்களை அள்ளி வீசுவது போன்ற அறியாமையை இலகுவில் காணக்கூடியதாய் இருப்பதை நாம் காண முடியும்.

மெல்லிசைமன்னரை மிகைப்படுத்துவதென்பது மிகுந்த உள்நோக்கத்ததுடன் நடாத்தப்படுவதாகவே தெரிகிறது. குறிப்பாக இளையாஜாவை மறைமுகமாக நிராகரிப்பதை மெல்லிசைமன்னரின் ரசிகர்கள் என்ற பெயரில் தங்களை உயர்சுவை கொண்டவர்களாகக் கருதும் சிலர் செய்துவருகின்றனர். குறிப்பாக மெல்லிசை மன்னர் காலத்தில் அறிமுகமான ஒரு சில வாத்தியங்களை " இதை " அவர்தான் அறிமுகப்படுத்தினார் அதுமட்டுமல்ல இதை வேறு யாராலும் செய்ய முடியாது என்று உளறுவார்கள். ஒருவர் தனது உரையில் விஸ்வநாதனின் ஒரு பாடலின் நடுவில் வரும் வயலினைக் குறிப்பிட்டு " இப்படியெல்லாம் வயலினை வாசிக்க இன்று யாராவது இருக்கிறார்களா " என்கிறார்!

மனசுக்கு இசைந்த வண்ணம் சபையில் இருப்பவர்களை மகிழ்வூட்ட பேசுவதும் ஒரு போக்காகவும் மட்டுமல்ல சில வேளைகளில் பேசுபவர்களை மிஞ்சும் வண்ணமும் சபையில் இருப்பவர்களும் சேர்ந்து பிதற்றுவதையும் மிக இயல்பாக கேட்கமுடியும். அதில் ஒலிக்கும் தொனி என்னவென்றால் இளையராஜா ஒரு “சாதனையாளன் அல்ல “என்பதான ஒரு கிளப்பின் பஜனை பாடலாக இருப்பதைக்கான முடியும். இதுவரை இசையைத் தங்கள் ஏகபோகமாக வைத்திருந்த சிறுகும்பலின் வெறுப்பு பெருமூச்சு மட்டுமல்ல மெல்லிசைமன்னர்களின் இசையின் தொடர்ச்சியாக அதை எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுத்துச் சென்ற இளையராஜாவை மறைமுகமாக நிராகரிக்கும் சாதிய மனநிலை கொண்ட குருட்டுப்பார்வையாகும். இசையின் முழுஅதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்திருப்பதாகப் பாவனை செய்து கொள்ளும் இவர்களால் தங்களுள் ஒருவரை விஸ்வநாதனுக்கு , இளையராஜாவுக்கு நிகராக கொண்டுவரமுடியவில்லை என்பது வேடிக்கை. இது இளையராஜா பெரு மதிப்பு வைத்திருக்கும் மெல்லிசைமன்னர்களை அவருக்கு எதிராக நிறுத்தும் வக்கிரம் தவிர வேறல்ல.!

பாரதி சொன்னது போல “மறைவாகப் பழங்கதைகள் பேசல்” என்பதற்கு இது போன்ற பஜனை மடங்களின் பாவலாக்கள் நல்ல உதாரணமாகும். ஆனால் மெல்லிசைமன்னரிடம் கேட்டால் அவர் "எனக்கு ஒன்னும் தெரியாது தம்பி "என்று விடுவார்.

இந்த இடத்தில் சில விஷயங்களைக் கூறியே ஆக வேண்டும். மெல்லிசைமன்னர்களின் இசையமைப்பில் போது அவர்களுடன் சில வாத்தியக்கலைஞர்களும் சேர்ந்து இருந்தே இசையமைப்பது அவர்களது முறையாகும். விஸ்வநாதன் போடும் மெட்டுக்களை அவர்கள் வாசித்துக் காண்பிப்பார்கள். அவரது உதவியாளர்கள் அவர் போடும் மெட்டுக்களை இசைக்குறிப்புகளாக எழுதிக்கொள்வார்கள். ஒரு மெட்டு எல்லோருக்கும் திருப்தி என்றவுடன் அதற்கான இடையிசையை வழங்கும் போதும் ஒரு வாத்தியக்கலைஞர் " இதை இப்படி இசைத்தால் சிறப்பாக இருக்கும் " என்று தனது எண்ணத்தை சொல்லும் போது விஸ்வநாதனுக்கும் அது பிடித்திருந்தால் வைத்துக்கொள்வார். இதை அவரிடம் வேலை செய்த இசைக்கலைஞர்கள் விஸ்வநாதன் மரணத்திற்கு பின் அவரது நினைவு நிகழ்ச்சிகளில் இது குறித்து பேசியிருக்கின்றன.

ஜெயா டி.வி தயாரித்த “என்றும் நம்முடன் எம்.எஸ்.வி “ என்ற விசுவநாதன் நினைவு நிகழ்ச்சியில் அவருடன் பணியாற்றிய வாத்தியக்கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் , உதவியாளர்கள் , கலைஞர்களின் பிள்ளைகள் என பலரும் தாம் நேரில் கண்ட , கேட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் சிலர் விஸ்வநாதனின் படைப்பாற்றல் பற்றியும் , அவரது எளிமையுயும் கலந்து பேசினர். அதில் விஸ்வநாதன் " அவர் லத்தீன் அமெரிக்காவில் பிறந்தது போல லத்தீன் இசை கொடுப்பார் " [றம்பட தாமஸ் ] சிலர் பியானோ கலைஞர் இதை மேலைத்தேய இசையில் இப்படி சொல்லுவார்கள் என்று சொல்லும் போது அவர் வியப்புடன் கேட்பார் , அவர் படிக்கவில்லை அதைத் தெரிந்து கொள்வார் என்றும் கண்ணதாசனின் மகன் காந்தி கலைக்கோயில் படத்தில் இடம்பெற்ற தங்கரதம் வந்தது பாடலை ஆபோகி ராகம் என்று பாலமுரளி சொன்ன போது அப்படியா என்று பணிவுடன் கேட்டார் என்றார்.

மற்றவர்களிடம் வேலை வாங்கும் திறமையும் மிகுந்த படைப்பாற்றலும் மிக்க விஸ்வநாதன் தனக்குத் தெரியாத விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து அறிந்து கொண்டார் என்பதும் தனது படைப்புகளில் மற்றவர்கள் கூறும் நல்ல அம்சங்களை இணைத்துக் கொண்டார் என்பதும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அதனாலேயே அவர் அடிக்கடி இதெல்லாம் ஒரு " கூட்டு முயற்சி " என்று கூறியதையும் நாம் பழைய ஒளிப்பதிவுகளிலும் , அவர் வழங்கிய பேட்டிகளிலும் நாம் கேட்கலாம்.

மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்த காலத்திலும் பின்னர் தனியே பிரிந்து இசையமைத்த போதும் மிகச் சிறந்த இசை உதவியாளர்களை தாம் இசையமைக்கும் மெட்டுக்களை இசைக்குறிப்புகளாக எழுதவும் , வாத்திய இசையை ஒருங்கமைக்கும் பணிகளை நிர்வகிக்க உதவியாளர்களையும் பயன்படுத்தி தனது பணியை இலகுவாக்கிக் கொண்டு புதிய , புதிய மெட்டுக்களை அமைப்பதில் கவனம் செலுத்தினார். அதுமட்டுமல்ல , அந்தக்காலத்தில் எல்லா இசையமைப்பாளர்களும் உதவியாளர்களை வைத்துக் கொள்ளுவதென்பது சகஜமாகவும் இருந்தது. அந்தக்காலத்து இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பிலும் அவர்களுடன் பணியாற்றிய வாத்தியக்கலைஞர்கள் மற்றும் உதவியாளர்களின் பங்களிப்பும் கணிசமான அவளில் இருந்தே வந்துள்ளன. பின்னாளில் முற்றுமுழுதாகத் தனியே எந்தவித உதவியுமின்றி தனது படைப்புகளைத் தன்னந்தனியனாக படைக்கும் ஆற்றலை இளையராஜா வளர்த்துக் கொண்டு எல்லோரையும் பிரமிக்க வைத்தார். இது குறித்து பின்னாளில் கருத்து தெரிவித்த பிரபல புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது.

" நான் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் குழல் வாசித்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரையில் இசைஞானி இளையராஜா தவிர்ந்த எல்லோரின் இசையிலும் ஏதோ ஒரு விதத்தில் பிறரது இசைப்பங்களிப்பு இருக்கிறது. இளையராஜாவின் படைப்பு முற்றுமுழுதாக அவருடைய படைப்பே! அவர் எழுதிய பின் தான் எல்லோரும் பார்க்க முடியும் "

விஸ்வநாதனுக்குப் பின்வந்த இளையராஜாவோ அவரது படைப்பில் வேறு யாரும் குறுக்கீடு செய்ய அனுமதிக்காமல் எல்லாவற்றையும் இசைக்குறிப்புகளாக எழுதிக் கொடுத்துவிடுவதை நாம் அறிவோம். இளையராஜாவைப் பொறுத்தவரையில் தனது படைப்புகள் மீதான அதீத தன்னம்பிக்கையின் வெளிப்பாடு அது. உலக இசைமேதைகளான மோஷார்ட் , பீத்தோவன் போன்றவர்களும் அப்படித்தான் தங்கள் படைப்பை எழுதினார்கள்.

மெல்லிசைமன்னரின் இந்த " அதிதீவிர " ரசிகர்கள் உலக இசைகளோடு மெல்லிசைமன்னரை தொடர்புபடுத்திப் பேசினாலும் அவரது ஆதர்சம் ஹிந்தி இசைத்தான் என்பதை அவரது பெரும் பாலான பாடல்களை உதாரணம் காட்டிக் கூற முடியும். என்னென்ன பாடல்களையெல்லாம் பிறநாட்டுப்பாடல்கள் என்று சொல்கிறோமோ அவையெல்லாம் அவர் ஹிந்தியிசையில் பெற்றுக்கொண்டார் என்பதையும் நிறுவ முடியும். கலா நுடபத்திறனுடன் அவர் அவற்றை தனது கைத்திறனால் வெகுசாமர்த்தியமாக கலந்து கொடுத்தார். தான் பாடிப்பாடி செதுக்கிய மெட்டுக்களை அழகு மின்னும் வண்ணம் வெளிப்படுத்த அதன் அலங்கார வெளிப்பாடுகளாக காட்டுவதற்கே தான் அனுபவித்த பிற இசையமைப்பாளர்களின் இசைத்துளிகளின் சாரங்களை அங்கங்கே இழைத்து கொடுத்தார்.

மெல்லிசைமன்னர்களின் இசையில் இன்னன்ன இசைத்தொடர்புகள், அதன் குணவேறுபாடுகள், அதனிலிருந்து வேறுபடும் சிறப்பியல்புகள், அதன் மூல வடிவங்கள் என்பன பற்றிய அறிவில்லாதவர்கள் “அதிதீவிர " ரசிகர்களே ஆவர்.

பழைய தமிழ் சினிமாப்பாடல்கள் எல்லாம் நல்ல தமிழிசை என்ற அறியாமை நம் மத்தியில் சிலருக்கு உண்டு . இவர்களுக்குத் தமிழிசை என்றாலே சினிமாப்பாடல் தான் என்பதை நினைக்கும் போது இவர்களின் அறியாமையை நாம் புரிந்து கொள்ளலாம் தமிழுக்கு அப்பால் உள்ள இசைவகைகள் ,மற்றும் உலக இசை அனுபவமே இல்லாத. மட்டுப்படுத்தப்பட்ட, குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டாத இசைகேட்கும் வாய்ப்புகள் பெற்றதாகவே நமது சமூகம் இருந்திருக்கிறது. நம்மவரில் பெரும்பானமையானவரின் பாடல் ரசனை என்பது சினிமாப்பாடல்களாகவே இருக்கிறது. அதன் காரணமாக தாம் நினைப்பதே உலகம் என நினைக்கின்றனர்..

உண்மையில் இந்த " ரசிகப்பெருமக்களின் " பொன்மொழிகள் அனைத்தின் சாராம்சம் என்பது இத்தனை இசைநுணுக்கங்களும் மெல்லிசைமன்னரின் சொந்தபடைப்பு என்பதும் வெளியிலிருந்து அவர் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுமேயாகும். இது உண்மைதானா ? மெல்லிசைமன்னர் தனது படைப்புகளில் எதையுமே எடுத்துக் கொள்ளவில்லையா? அவை முழுவதும் அவரது மூளையில் உதித்த இசைமுத்துக்களா ? புதிய சுவையுணர்வை பெறவில்லையா? என்பதை கால , தேச, அழகியல் நோக்கில் ஆராய்ந்தால் விடை கிடைத்து விடும்.

மெல்லிசைமன்னரின் “வெறிபிடித்த” ரசிகர்களாகத் தம்மைக்காட்டிக் கொள்ளும் சில இவ்விதம் பிதற்றினாலும் , இவை குறித்து மிகத் தெளிவாக மெல்லிசைமன்னர் பலமுறை பேசியிருக்கிறார். தனது வழிகாட்டியாக மெல்லிசைமன்னர் கருதிய ஹிந்தி இசையமைப்பாளர் நௌசாத் பற்றி அவர் கூறிய கூற்றிலிருந்து அதனை நாம் குறிப்பிடலாம். அவர் பின்வருமாறு கூறுகின்றார்.

" நம்மை வட இந்தியாவில் ஒரு இசை நிகழ்சசி செய்யக்கேட்டார்கள். நௌசாத் தலைமை தாங்க வேண்டும் என்றோம் . நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் நௌசாத் வீடு சென்றோம். பழைய இசைத்தட்டுக்கள் எல்லாம் வைத்திருந்தார். அந்தக்காலத்தில் வெளிவந்த எல்லா இசையமைப்பாளர்களது [ தமிழ், தெலுங்கு , கன்னடம் ] இசைத்தட்டுக்களையும் வைத்திருந்தார்.நமக்குத் புத்திமதியும் வழங்கினார். " கவிஞர்கள் என்றால் எல்லோருடைய கவிதைகளையும் படிக்க வேண்டும் : இசையமைப்பாளர்கள் என்றால் எல்லோருடைய இசையையும் கேட்க வேண்டும். அப்படியென்றால் தான் முன்னேற முடியும் " என்றார். நான் அவரது ரசிகன். எனது பாடல்களைக் கேட்டு கடிதம் எழுதுவார். நானும் எழுதுவேன். சென்னை வந்தால் எனது வீட்டில் தான் தங்குவார்.

மெல்லிசைமன்னரின் இசையில் நௌசாத் இசையின் பாதிப்புக்களை நாம் துல்லியமாகக் கேட்க முடியும். தமிழ் திரையின் புதுமை முன்னோடியாக விளங்கியவரும் , மெல்லிசைமன்னர்களின் குருநாதருமான சி.ஆர். சுப்பராமனின் இசைப்பாணி என்பதே நௌஸாத்தின் இசைப்பாணி ஆகும். அந்த வகையில் மெல்லிசைமன்னர்களின் இசையில் நௌசாத்தின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது இயல்பானதே . மெல்லிசைமன்னரின் இசையில் பிறரது பாதிப்பு இருப்பதென்பது அவை நேரடியாகத் தெரிகிறது என்று அர்த்தமல்ல. நெருப்புப்பொறியாக பறந்து வேகத்தில் மறையும் இசைத்துணுக்குகளையெல்லாம் விரித்து,விரித்து ஆலாபனைகளாக்கி இனிய பாடல்களாக்குவதும் அவற்றை பல சமயங்களில் தொனிகளாகவும் வெளிப்படுத்தும் அற்புதங்களை நாம் காணமுடியும்.

அவை பாடலின் ஆரம்பமாகவும் , இடையிசையாகவும் , கோரசாகவும் , வாத்திய இசையாகவும் , ஹம்மிங்காகவும் என பலவிதங்களிலெல்லாம் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். சில பாடல்கள் ஹிந்தி திரைப்படங்களின் டைட்டில் இசையிலிருந்தும் , பின்னனணி இசையிலிருந்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அவற்றை தமது ஆழ்ந்த ரசிப்பாலும் ,நுணுக்கரிய பார்வையாலும் அவற்றோடுணைந்து பாடிப்பார்ப்பதாலும் , அவர்கள் கையாண்ட மூலப்பாடல்களின் சுருதியும் , மெல்லிசைமன்னர்கள் கையாண்ட சுருதி மாறுபாடுகளும், வெவ்வேறாகவும் , சில சமயங்களில் அவற்றின் தாளநடை வித்தியாசமானவையாகவும் இருந்தாலும் அவற்றை வாத்திய இசையில் இசைத்து பார்ப்பதாலும், பாடிப்பார்ப்பதாலும் நுட்பத்திறன் உடையோர் இலகுவில் கண்டுபிடித்து விடலாம்

அவர்களது இசையில் ஊடுருவி நிற்கும் பிற இசையமைப்பாளர்களது இசை கூறுகளை தர விளைவதே இப்பகுதியின் நோக்கம்.

1950 களிலிருந்து இசையமைக்க ஆரம்பித்த மெல்லிசைமன்னர்கள் 1960களின் நடுப்பகுதியில் பிரிந்து சென்ற பின்பும் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் தனியே 1980களின் இறுதி வரை உற்சாகத்துடன் படைப்பில் ஈடுபட்ட பேராற்றல்மிக்க படைப்பாளியாவார். ஒவ்வொரு பத்தாண்டுகளில் வரிசைப்படி அவர் இசையமைத்த பாடல்களில் ஹிந்தி திரையிசையின் தாக்கத்தை கேட்க முடியும் என்ற வகையில் அந்தப் பாடல்கள் தரப்படுகின்றன. மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் ஹிந்தி இசையிலிருந்து பெற்றவை:

1950 களில் வெளிவந்த பாடல்கள்

01 எல்லாம் மாயை தானா - தேவதாஸ் [1953] பாடியவர் : ஆர்.பாலசரஸ்வதி தேவி - இசை; சி.ஆர்.சுப்பராமன் 02 ஆனந்தம் ஆனந்தம் ஆனேன் - ஜெனோவா 1953 - AB கோமளா - இசை: விஸ்வநாதன் 03 பரிதாபமே இல்லையா - ஜெனோவா 1953 - லீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 04 அன்பே வா அழைக்கின்ற எந்தன் மூச்சே - அவன் 1953 - AM ராஜா + ஜிக்கி - இசை: சங்கர் ஜெய்கிஷன் 05 தேவலோக தேவமாதா - ஜெனோவா 1953 - P லீலா - இசை: விஸ்வநாதன் 06 துணை நீயே தேவ மாதா - ஜெனோவா 1951 - பி.லீலா - விஸ்வநாதன் 07 சந்தோசம் வேணுமென்றால் - தேவதாஸ் 1953 - பாலசரஸ்வதி தேவி - இசை: விஸ்வநாதன் 08 செந் தமிழ் தென் மொழியாள் - மாலையிட்ட மங்கை 1958 - மகாலிங்கம் + கோமளா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 09 இரை போடும் மனிதருக்கே - பதிபக்தி 1958- P.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. *** "இரைபோடும் மனிதருக்கே " பாடலில் வரும் சாரங்கி இசை ஹிந்திப் பாடலின் சாரங்கி இசையும் ஒரே மாதிரி இருக்கும் 10 என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன் - தங்கப்பதுமை 1959 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி. 11 தென்றல் உறங்கிய போதும் - பெற்ற மகனை விற்ற அன்னை 1957 - AM ராஜா + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 12 ஆசையும் என் நேசமும் - குலேபகாவலி 1957 - கே.ஜமுனாராணி குழுவினர் - விஸ்வநாதன் ராமமூர்த்தி. 13 கசக்குமா இல்லை ருசிக்குமா - பத்தினித் தெய்வம் 1957 - TMS + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 14 காமுகர் நெஞ்சில் நீதியில்லை - படம்: மகாதேவி 1957 –ஜமுனாராணி -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 15 சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர - புதையல் 1957 - பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த் 16 அன்னம் போல பெண்ணிருக்க - மாலையிட்ட மங்கை 1958 - பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 17 துள்ளித் துள்ளி அலைகள் எல்லாம் - தலைக்கொடுத்தான் தம்பி 1957 - A.M.ராஜா + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 18 தென்றல் உறங்கிய போதும் - பெற்ற மகனை விற்ற அன்னை 1953 - AM ராஜா + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 19 உனக்காக எல்லாம் உனக்காக - புதையல் 1957 - JP சந்திரபாபு - விஸ்வநாதன் ராமமூர்த்தி.

1960 களில் வெளிவந்த பாடல்கள்

20 நடக்கும் என்பார் நடக்காது - படம்: பணக்காரங்க குடும்பம் 1963 – TMS -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 21 நாளாம் நாளாம் திருநாளாம் - படம்: காதலிக்க நேரமில்லை 1964 –BPS சுசீலா -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 22 அழகே வா அறிவே வா - ஆண்டவன் கட்டளை 1963- சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 23 சிலர் குடிப்பது போல் நடிப்பார் - சங்கே முழங்கு ௧௯௬௭ - LR ஈஸ்வரி - இசை விஸ்வநாதன் 24 உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன் 1965 - பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 25 குங்குமப் பொட்டின் மங்களம் - குடியிருந்த கோயில் 1967- TMS + பி.சுசீலா - இசை விஸ்வநாதன் 26 அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை 1962- BPS + P.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 27 உங்க பொன்னான கைகள் - காதலிக்க நேரமில்லை 1962- BPS + குழுவினர் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 28 சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - பாவமன்னிப்பு 1961 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 29 தொட்டால் பூ மலரும் - படகோட்டி 1964 - TMS சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 30 கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - பந்தபாசம் 1963 - TMS + BPS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 31 யாருக்கு மாப்பிள்ளை யாரோ - பார்த்தால் பசி தீரும் 1962- பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 32 மௌனமே பார்வையால் - கொடிமலர் 1968 - BPS - இசை:M .S.விஸ்வநாதன் [ நல்ல இன்ஸபிரேசன்] 33 வண்ணக்கிளி சொன்ன மொழி - தெய்வத்தாய் 1964 -TMS + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 34 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - பஞ்சவர்ணக்கிளி 1965- சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 35 முத்தான முத்தல்லவோ - நெஞ்சில் ஓர் ஆலயம் 1963 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 36 நாங்க மன்னருமில்லை - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் 1963 - GK வெங்கடேஷ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 37 வாழ நினைத்தால் வாழலாம் - பலே பாண்டியா 1962 - TMS BPS சுசீலா - ஜமுனாராணி - விஸ்வநாதன் ராமமூர்த்தி 38 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு - கற்பகம் 1962 - Pசுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 39 தேரோடும் எங்கள் [ பாகப்பிரிவினை ] 40 காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே - பாக்கியலட்சுமி 1960 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. 41 பாலிருக்கும் பழமிருக்கு - பாவமன்னிப்பு 1960 - சுசீலா + MSV - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 42 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் 1964 - சீர்காழி - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. 43 யார் அந்த நிலவு - சாந்தி 1967- TMS - இசை விஸ்வநாதன் ஹிந்திப்பாடலின் சாரங்கி இடையிசை இந்தப்பாடலின் இடையிசையை நினைவூட்டும் 44 கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு -பந்தபாசம் 1963- TMS+ BPS - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 45 கண்கள் இரண்டும் உன்னைக்கண்டு தேடுமோ -மன்னாதி மன்னன் 1960- சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. 46 இந்த நிலவை நாம் பார்த்தால் - பவானி - TMS BPS P சுசீலா LR ஈஸ்வரி - விஸ்வநாதன் 47 கண்ணுக்கு குலம் ஏது - கர்ணன் 1964- பி.சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி 48 முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும்வரை 1966- TMS + பி.சுசீலா - இசை விஸ்வநாதன். இந்தப்பாடல் படே குலாம் அலி கான் பாடிய ஹசல் இசையில் MeghMalkar ராகத்தில் பாடிய ஒரு பாடலிலிருந்து வந்ததே என்பர். 49 சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் பாவமன்னிப்பு – TMS - - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி . 50 நாளாம் நாளாம் திருநாளாம் - காதலிக்க நேரமில்லை 1964 - P .B.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி . 51 மஞ்சள் முகம் நிறம் மாறி - கர்ணன் 1964 - பி.சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி 52 ஒருவர் வாழும் ஆலயம் - நெஞ்சி ஓர் ஆலயம் 1962 - TMS + L R ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 53 ஒரே பாடல் உன்னை அழைக்கும் - எங்கிருந்தோ வந்தான் 1972 - TMS - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி 54 என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி – பி.பி. ஸ்ரீநிவாஸ் 55 பூமாலையில் ஓர் மல்லிகை – ஊட்டி வரை உறவு – T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா என்ற பாடலை 56 எங்களுக்கும் காலம் வரும் ” [ படம்: பாசமலர் ] T.M.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி 57 அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை - நெஞ்சம் மறப்பதில்லை 1963 - PBS + ஜானகி - விஸ்வநாதன் ராமமூர்த்தி 58 காதல் நிலவே கண்மணி ராதா - ஹல்லோ MR ஜமீன்தார் 1963 - PBS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 59 சொல்லத்தான் நினைக்கிறேன் " பாடல் சாயல் 60 பாலிருக்கும் பழமிருக்கும் - பாவ மன்னிப்பு 1961 - MSV + சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி இருபாடலிலும் வரும் எக்கோடியன் இசை ஒரே மாதிரி இருக்கும்.SDB 61 ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் - சாந்தி 1967 – சுசீலா -இசை : விஸ்வநாதன் 62 காதல் சிறகை காற்றினில் விரித்து - பாலும் பழமும் 1961 - சுசீலா + குழுவினர் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 63 பாட்டு வரும் பாட்டு வரும் - நான் ஆணையிட்டால் 1966 - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன் 64 ஹல்லோ மிஸ் எங்கே போறீங்க - என் கடமை - - TMS + சுசீலா - இசை விஸ்வநாதன் 65 நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா - காதலிக்க நேரமில்லை 1964 - ஜேசுதாஸ் + சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 66 உன்னைத்தான் நானறிவேன் - வாழ்க்கைப்படகு 1962 - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 67 என் உயிர்த்த தோழி கேளடி சேதி - கர்ணன் 1964 - சுசீலா + குழுவினர் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 68 பட்டத்துராணி பார்க்கும் பார்வை - சிவந்த மண் 1970 - எல்.ஆர்.ஈஸ்வரி =- இசை: எம்.எஸ் விஸ்வநாதன் 69 துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில் 1969- TMS+ ஈஸ்வரி + குழுவினர் - இசை : விஸ்வநாதன் மெட்டில் " பட்டத்துராணி " பாடலும் , தாள அமைப்பு மற்றும் வாத்திய அமைப்பில் " துள்ளுவதோ இளமை " பாடலின் அமைப்பையும் இந்த ஹிந்தியப்பாடலில் கேட்கலாம் மேல் சொன்ன பாடலின் பாதிப்பை துள்ளுவதோ இளமை என்ற பாடலும் விசுவநாதன் பின்னாளில் இசையமைத்த நினைத்தால் இனிக்கும் படத்தில் வரும் எங்கேயும் எப்போதும் பாடலில் " காலம் சல்லாபக் காலம் " என்ற வரிகளை நினைவூட்டும் பகுதிகளும் வரும். 70 தங்கச்சி சின்ன பொண்ணு - கருப்பு பணம் 1964- சீர்காழி + ஈஸ்வரி + குழுவினர் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 71 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி 1964 - TMS - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. 72 நடக்கும் என்பார் நடக்காது - பணக்காரக்குடும்பம் 1963 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா - பறக்கும் பாவை 1969 - TMS சுசீலா - விஸ்வநாதன் 73 கண் போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன் 1965 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 74 நடக்கும் என்பார் நடக்காது - பணக்காரக்குடும்பம் 1963 - TMS - விஸ்வநாதன் ன் ராமமூர்த்தி 75 உலகம் பிறந்தது எனக்காக - பாசம் 1962 - TMS - விஸ்வநாதன் ராமமூர்த்தி 76 ராதைக்கேற்ற கண்ணனோ - சுமைதாங்கி 1963 - எஸ்.ஜானகி - விஸ்வநாதன் ராமமூர்த் 77 காதலிலே பற்று வைத்தாள் - பார் மகளே பார் 1963 - பி.சுசீலா - விஸ்வநாதன் ராமமூர்த்தி 78 ஆறோடும் மண்ணில் எங்கும் - பழனி 1963 - TMS + BPS + சீர்காழி - விஸ்வநாதன் ராமமூர்த்தி. தமிழ் பாடலின் இடையே வரும் "போராடும் வேலையில்லை " என்ற பகுதி ஹிந்திப்பாடலின் மேட்டை ஒத்திருக்கும் .பாடல் முடிவில் வரும் தாள அமைப்பு தேவதாஸ் படத்தில் வரும் " சந்தோசம் தரும் சவாரி " தரும் பாடலை ஞாபகப்படுத்துவதை கேட்கலாம். 79 பச்சை மரம் ஒன்று - ராமு 1966 - BPS - விஸ்வநாதன் இந்தப்பாடலில் வரும் மவுத் ஓர்கன் வாசிப்பு ஹிந்தி பாடலை ஒத்திருக்கும். 80 மாதவிப் பொன் மயிலாள் - இருமலர்கள் - 1966- TMS - இசை : விஸ்வநாதன்

1970 களில் வெளிவந்த பாடல்கள்:

81 அடியேனைப் பாரம்மா பிடிவாதம் - வணக்கத்துக்குரிய காதலியே 1976- ஜோலி ஏப்ரகாம் - இசை: விஸ்வநாதன். 82 வழி வழியே வந்த தமிழ் பண்பாடு - நம்ம வீட்டு லட்சுமி 1970- சுசீலா - இசை: விஸ்வநாதன் 83 மஞ்சள் இட்ட நிலவாக - அவள் தந்த உறவு 1977- சுசீலா - இசை: விஸ்வநாதன் 84 ஒரு ராஜா ராணியிடம் - சிவந்த மண் 1971 - TMS + சுசீலா - விஸ்வநாதன் 85 யாதும் ஊரே யாவரும் கேளிர் - நினைத்தாலே இனிக்கும் 1978- SPB + பி.சுசீலா - இசை விஸ்வநாதன் 86 ஆனந்தம் விளையாடும் வீடு - நினைத்தாலே இனிக்கும் 1978- TMS + பி.சுசீலா - இசை விஸ்வநாதன் 87 பூமழை தூவி வசந்தங்கள் - நினைத்ததை முடிப்பவன் 1973- TMS - இசை விஸ்வநாதன் 88 மௌனம் கலைகிறது - என்னைப்போல் ஒருவன் 1978- TMS - இசை விஸ்வநாதன 89 கல்யாண சந்தையிலே - சுமதி என் சுந்தரி 1972 - சுசீலா - விஸ்வநாதன் 90 நான் பார்த்தால் பைத்தியக்காரன் - உழைக்கும் கரங்கள் 1974 - TMS - விஸ்வநாதன் 91 ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் - சுமதி என் சுந்தரி 1972 - TMS + சுசீலா - விஸ்வநாதன் 92 என்னை விட்டால் யாருமில்லை - நாளை நமதே 1975 - ஜேசுதாஸ் - இசை : விஸ்வநாதன். 93 வம்சாயி காதல் கவிதைகள் - உலகம் சுற்றும் வாலிபன் 1973 - TMS + P சுசீலா - இசை: விஸ்வநாதன் 94 ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு - காவியத்தலைவி 1973 -P சுசீலா - இசை: விஸ்வநாதன் 95 சிரித்து வாழ் வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன் 1973 - TMS - இசை : விஸ்வநாதன் 96 தமிழ்ப்பாடலின் பின் இசையை உற்று நோக்கினால் ஒற்றுமையை அவதானிக்கலாம். 97 மல்லிகை என் மன்னன் மயங்கும் - படம்: தீர்க்க சுமங்கலி 1972 – வாணி -இசை : விஸ்வநாதன். 98 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்- தெய்வ மகன் 1968 - TMS + சுசீலா - விஸ்வநாதன் 99 யாதும் ஊரே யாவரும் கேளிர் - நினைத்தாலே இனிக்கும் 1978 - SPB + சுசீலா - விஸ்வநாதன் 100 உனக்காக எல்லாம் உனக்காக - புதையல் 1957 - JP சந்திரபாபு - விஸ்வநாதன் ராமமூர்த்தி 101 அன்பு வந்தது என்னை ஆழ வந்தது - சுடரும் சூறாவளியும் 1972 - SPB - விஸ்வநாதன் 102 என் ராசாவின் ரோஜா முகம் - சிவகாமியின் செல்வன் 1974 - சுசீலா - விஸ்வநாதன் 103 அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் - அன்பைத்தேடி 1975 - ரோஜாரமணி - விஸ்வநாதன் 104 திருமுருகன் அருகினில் - மேஜர் மீனாட்ச்சி 1976- SPB+ வாணி - இசை விஸ்வநாதன் 105 ஊஞ்சலுக்குப் பூ சூட்டி - அவன் தான் மனிதன் 1975- TMS - இசை விஸ்வநாதன் 106 காதல் சரித்திரத்தை - என்னைப்போல்ஒருவன் 1974- TMS + சுசீலா - இசை விஸ்வநாதன் 107 மாந்தோரண வீதியில் -பாட்டும் பரதமும் 1974- ட்மஸ்+ சுசீலா - இசை விஸ்வநாதன். 108 வானிலே மேடை அமைந்தது - நினைத்தாலே இனிக்கும் – SPB 109 எங்கேயும் - நினைத்தாலே இனிக்கும் – SPB 110 ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன் தான் மனிதன் 1975- TMS - இசை விஸ்வநாதன் 111 மலரே குறிஞ்சி மலரே - படம்: DR சிவா 1975 – ஜேசுதாஸ் + ஜானகி -இசை : விஸ்வநாதன் 112 ஒத்தையடி பாதையிலே - நிமிர்ந்து நில் - 1973 - TMS + சுசீலா - இசை : விஸ்வநாதன் 113 அம்மம்மா தம்பி என்று நம்பி - ராஜபார்ட் ரங்கதுரை 1974 - TMS - விஸ்வநாதன் 114 எத்தனை மனிதர்கள் உலகத்திலே - நீதிக்குத்தலைவணங்கு 1974 - ஜெயச்சந்திரன் - விஸ்வநாதன் 115 தங்கத்தில் முகம் எடுத்து - மீனவ நண்பன் 1975 - ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் - விஸ்வநாதன் 116 காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் - வாழ்ந்து காட்டுகிறேன் 1975 - வாணி ஜெயராம் - விஸ்வநாதன்

1980 களில் வெளிவந்த பாடல்கள்:

117 தேடும் கண்பார்வை தவிக்க - மெல்லத் திறந்தது கதவு 1986- SPB எஸ்.ஜானகி - இசை :MSV + இளையராஜா 118 சிப்பியிருக்குது முத்தமிருக்குது - படம்: வறுமையின் நிறம் சிவப்பு 1980 – SPB + ஜானகி -இசை : விஸ்வநாதன் .

இந்தப்பாடல்கள் எல்லாம் நேரடியான தழுவல்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இந்தப்பாடல்களுக்கான இசை உந்துதல் இடையிசையாக , ஆரம்ப மெட்டாக , ஹம்மிங்காக என பலவிதங்களில் மெல்லிசைமன்னர் இசையில் ஊடுருவி நிற்கின்றன.

தமக்கு வெளியே உள்ள நல்லிசைகளை தேனீ போல சேகரித்து ,அவற்றை ஆங்காங்கே கலந்து தரும் ஒரு மெல்லிசைமன்னர்களின் ஆற்றலை எண்ணி வியக்கிறோம். அதே போல மெல்லிசைமன்னர்களின் படைப்பாற்றலின் மேதமையால் அவரது சமகால இசையமைப்பாளர்களும் பின் வந்த இசையமைப்பாளர்களும் அவரது படைப்புக்களை உள்வாங்கிய அ திசயத்தையும் காண்கிறோம்.


பெற்றதும் கொடுத்ததும்.

இதுவரை மெல்லிசை மன்னர்கள் ஹிந்தி இசையின் தமக்குப் பிடித்த ஒலிக்கூறுகளை எல்லாம் தமது இசைகளில் சாதாரண ரசிகர்கள் யாரும் இனம் கண்டுபிடிக்க முடியாத வகையில் இழைத்து கொடுத்தற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்த்தோம். ஹிந்திப்பாடல்கள் மட்டுமல்ல தென்னிந்திய திரைப்படங்களின் பாடல்களிலும் அவர்கள் இசை அனுபவங்களையும் பெற்றார்கள்.

மெல்லிசை மன்னர்களின் சமகால இசையமைப்பாளர்களின் பாடல்கள் சிலவற்றின் சாயல்கள் இருப்பதைக் காண்கிறோம். ஆண்டு வரிசையில் அவை மெல்லிசைமன்னர்களுக்கு முன் வந்த பாடல்கள் என்பதை வைத்து நாம் இதைக் காண்கிறோம்.

பெற்றது. வாவேக மன மோகனா - சாகு மகளு 1963 - பி.லீலா - இசை : டி.ஜி.லிங்கப்பா மாதவிப் பொன் மயிலாள் - இருமலர்கள் 1967 - டி.எம்.எஸ் - விஸ்வநாதன்

அகலே நீலஹாசம் - அத்தியதே கண்மணி 1969 - ஜேசுதாஸ் + ஜானகி - இசை பாபுராஜ் மலரே குறிஞ்சி மலரே - டாகடர் சிவா 1975 - ஜேசுதாஸ் + ஜானகி - இசை:விஸ்வநாதன்.

குரு நாத துணை செய்யும் - Njanappana Poonthanam - பி.லீலா - 1600 நூற்றாண்டு பக்திப்பாடல் கண்ணன் வந்தான் எங்கள் - ராமு 1966 - டி.எம்.எஸ் + சீர்காழி - விஸ்வநாதன்

நாம் சாதாரணமாக கேட்கும் ஒலிகளை ஒரு நல்ல கலைஞன் அதை எடுத்தாளும் போது உயர்வாக நிலைபெற்றுவிடுகின்றது. அதனூடே எழும் உணர்ச்சியலை நம்மை புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறது இந்த வகையிலேயே மெல்லிசை மன்னர்கள் பிற பாடல்களிருக்கும் இசைக்கூறுகளை உணர்வுத் திறனை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தினர்

சினிமா இசை என்பது பெரும்பான்மையான மக்களின் ரசனைக்குரியது ; அவர்களால் ரசிக்கப்படுகின்ற , மற்றெந்த இசையையும்விட .கட்டுப்பாடற்ற விரிந்த களத்தைக் கொண்டுள்ள அதேவேளை இந்த இசை மக்களின் உளப்பாங்கையும் , விருப்பங்களையும் வெளிப்படுத்தும் இசையாகும்.

நதி மூலமும் , ரிஷி மூலமும் காண்பது கடினம் என்பர். ரிஷிகள் உயர்வானவர்கள் என்ற சிந்தனையின் அடிப்படையில் அவர்களின் பூர்வீகம் மற்றும் அவர்கள் யாருக்குப் பிறந்தார்கள் என்பதெல்லாம் பார்க்கக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. அறிவும் ,நல்ல சிந்தனையும் எங்கிருந்தும் வரலாம்.. கண்டுபிடிக்க முடியாத பல நதிகளின் மூலங்களை எல்லாம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தேடுதல்களால் கண்டுபிடிதித்திருக்கிறார்கள். எல்லைகள் வகுக்கப்பாடாத காலத்திலிருந்து நதிகள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. மனிதனால் வகுக்கப்பட்ட எல்லைகள் ஊடாக அவை இன்று ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நதிகளின் ஊற்று மூலங்கள் வெவேறு பகுதிகளில் கண்காணாத இடங்களில் உருவாகுகின்றன.

இதற்கு உதாரணங்கள் பலவற்றை உலகெங்கும் காட்ட முடியும். ஓரிடத்தில் ஊறும் நீர் பெருகி ஓடும் பகுதிகள் அவற்றை உரிமை கொண்டாடுவதையும் நாம் காண்கின்றோம். நதிமூலம் , ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்ற கருத்தை மீறி மனிதனின் அறியும் ஆர்வம் அவற்றின் மூலங்களைக் கண்டடைந்துள்ளது. இந்தத்தேடுதல் இசையிலும் உண்டு.சாதாரண ஒரு இசைரசிகன் தான் கேட்கும் ஒரு பாடலின் சாயல் வேறு ஒருபாடலில் இருப்பதை உணர்கிறான். அதை நுட்பமாக சிந்தித்து ஆராயும் ரசிகன் அதன் சூட்சுங்களை அறியும்ஆவல் படைத்தவனாகிறான்.

கலைஞர்களிடம் ஒரு சிறு பொறியாக மூளும் அருட்டுணர்வு படைப்புணர்ச்சியை உண்டு பண்ணிவிடுகிறது. அக்கினிக்குஞ்சு என்று பாரதியால் வர்ணிக்கப்பட்ட சிறு நெருப்பு பொறி காட்டுத்தீயெயை உருவாக்குவது போல , சிறு துளி சேர்ந்து வெள்ளமாகி , பெருநதியாக மறுவதுபோல கலைஞர்களின் உள்ளத்திலும் சிறு பொறிகளின் தெறிப்புகழ்படைப்புகளுக்கு ஆதாரமாகின்றன.

மூன்று தசாப்தங்களாக தங்கள் இசையால் மக்களைக் கட்டி வைத்த மெல்லிசைமன்னர்களின் இசையும் ,அவற்றின் மூலங்களையும் , ஓட்டங்களை காண்பது எளிதான காரியமுமல்ல. இசையே வாழ்வாக வாழ்ந்த மெல்லிசைமன்னரின் இசை , அவரது ரசனை , படைப்பாற்றல் உந்துதல் போன்றவை குறித்து மிகக்குறைந்த அளவிலேயே அவரது உரையாடல்களில் அவர் சொல்லியிருக்கின்றார் என்பதால் இசைத்தாகம் மிக்க அவரது படைப்புகளிலேயே நாம் அவற்றை தேட வேண்டியுள்ளது.

படைப்பாற்றலில் ஓங்கியிருந்த அவரது வேகமும் , ஆற்றலும் அவர் பெற்ற மூலப்பொறிகளால் எங்கனம் வளம் பெற்றன என்பதையும் அறிய முடியும். அவரது படைப்பிலேயே நாம் அவரது ரசனையையும் தரிசிக்கின்றோம். அவர் காலத்தில் வாழ்ந்த அவரே ஆகர்ஷித்த இசையமைப்பாளர் வகுத்த இசைமரபின் உள்ளோட்டத்தில் சுழன்றது மட்டுமல்ல அதிலிருந்த பல வடிவ சோதனைகளும் அவரது படைப்பு ரகசியம் ஆகும். குறிப்பாக ஹிந்தி திரையிசையில் மாபெரும் எழுச்சியை தந்த நவுசாத் அலியின் இசை மீது அளவற்ற பிரியமும் , அவரை தனது வழிகாட்டியாகவும் கொண்டவர் என்பதை மெல்லிசைமன்னர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கின்றார். தனது தகமை , திறமை எல்லாவற்றிற்கும் நவுசாத்தின் இசையே காரணம் எனவும் கூறியிருக்கின்றார்.

ஆனாலும் அவரது படைப்பின் வீச்சு நவுசாத்தை தாண்டியும் எல்லை கடந்து பலதரப்பட்டதாக இருப்பதையும் நாம் காண்கிறோம். சென்ற பகுதியில் ஹிந்தி திரையிசையிலிருந்து நல்ல இசைக்கூறுகளையெல்லாம் தழுவியும் ,மருவியும் இசைவுபட வெளிப்படுத்திய பாங்கு அவரது கலாமேன்மையைக் காட்டுவனவாகும்.

தமிழ் திரையில் ஹிந்தியில் நிழல்படாத இசையமைப்பாளர்கள் இல்லை என்று சொல்லலாம். 1940கள் தொடங்கி 1980கள் வரை அதன்பாதிப்பை நாம் காணமுடியும்.நாம் பெரிதாக நினைக்கும் பல பழைய இசையமைப்பாளர்களும் ஹிந்திப்பாடல்களை அப்படியே தழுவி இசையமைத்திருக்கிறார்கள். அன்று முன்னணியிலிருந்த ஜி.ராமநாதன் தொடங்கி புதுமை முயற்சிகளை மேற்கொண்ட சி.ஆர்.சுப்பராமன் என அனைவரும் தங்கள் படைப்பூக்கத்தின் தூண்டு புள்ளியாக ஹிந்தி பாடல்களை பயன்படுத்தினர்.

அந்தக்காலத்து மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் இயங்கிய டி.ஆர்.சுந்தரம் நேரடியாக ஹிந்திப்பாடல்களை பிரதியெடுக்கும் படி இசையமைப்பாளர்களிடம் வேண்டிக் கொள்வாராம். ஆனாலும் " நம்மால் சொந்தமாகவும் இசையமைக்க முடியும் " என்று ஜி .ராமநாதன் விலகிச் சென்றார்.

ஆனாலும் ஹிந்திப்பாடல்களை ஆங்காங்கே பிரதி எடுக்கும் வேலை நடந்து கொண்டே தான் இருந்தது. 1970 கள் வரை மாடர்ன்தியேட்டர்ஸ் இசையமைப்பாளர் வேதா வை அமர்த்தி பல ஹிந்திப்பாடல்களை பிரதியெடுக்க வைத்தது. குறிப்பாக ஜெய்சங்கர் நடித்த படங்களில் அவை வெளிவந்தன. " நான் மலரோடு தனியாக " - " இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது " போன்ற இனிய பாடல்களும் , யார் நீ படத்தில் முழுமையாக முழுப்பாடல்களும் பிரதி செய்யப்பட்டு வெளிவந்தன.

பிரதி எடுப்பது , பிறரது இசையைக் கையாள்வது பற்றி பிரபல பாடகர் ஜேசுதாஸ் பின்வருமாறு கூறுகிறார் நான் பல இசையமைப்பாளர்களுடன் பழகியிருக்கிறேன். அவர்கள் சொன்னவைகளை மனதில் வைத்து சொல்கிறேன். ஒரு பாடல் என்பது முதலில் அவரது சொந்தமாக இருக்க வேண்டும். ஆனால் அதை கேட்பவர்கள் " இல்லை இது பத்து வருடத்திற்கு முன்னரேயே வேறு ஒரு இடத்தில் வந்திருக்கிறது " என்று யாரவது கூறினால் அது அவருடையது இல்லை என்றாகி விடுகிறது. அந்த மாதிரி யாரும் சொல்லக்கூடாது.  ஆனால் எல்லாம் ஒரே பாணியில் முழுமையாக , சுத்தமாக இருக்க முடியாது. இருக்கிறது ஏழு சுரங்கள் தான் : இருக்கிறதிலே செய்து கொண்டிருக்கின்றார்கள். அதிலே ஏதும் வரலாம் "

சில வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் கண்ணதாசன் நினைவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஸ்வநாதன் கண்ணதாசனின் மகள் விசாலி எழுதிய பாடலை ரசிகர்களுக்காக தான் இசையமைக்கும் முறையைக் காண்பித்த போது எங்கோ உருவான மெட்டு மெல்ல மாறி " எனக்கொரு காதலி இருக்கின்றாள் " என்ற பாடல் மெட்டுக்கு வந்து விட்டது. உடனே அதை உணர்ந்த விஸ்வநாதன் அதை மீண்டும் பாடி புதிய டியூனுக்கு மடை மாற்றிக் காட்டினார்.

ஜேசுதாஸ் கூறியது போல "இருப்பது ஏழு சுரங்கள்" , அதற்குள் எல்லாவிதமான இசையும் அடக்குவதால் இசையமைப்பாளர்கள் தாம் கேட்டு , ரசித்து ,இன்புற்ற இசையின் தாக்கம் அவர்களையறியாமலேயே வந்து விடுவதுண்டு. அது குறித்து விஸ்வநாதனே மிக அருமையாக பின்வருமாறு கூறுகிறார்/

” இந்த இசையமைப்பு ,பாட்டெழுதுவது என்கிற தொழிலிலே நமக்குப் பிடிச்ச விசயங்கள் எங்கோ நமக்கு அறியாமல் ,ஒளிஞ்சு நிற்கும். வேறு யாராவது கம்போசர்களைக் கேட்டாக் கூட அந்தச் சாயல் வந்திடும் , இல்லை அந்தச் சாயல் அறியாமல் வந்திடும். அதனாலே அதனைத் திருடினேன் என்று சொல்லக் கூடாது. பாக்கியுள்ளவர்கள் திருடினேன் என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒழிச்சு வைக்க வேணும்.அதனை ஓபன் ஆகத் திருடினேன் என்றளவுக்கு வைச்சுக்கக் கூடாது. நானும் காப்பி அடிச்சிருக்கேன் .என்னைப் பார்த்து சிலர் காப்பி அடிக்கிறதா சொல்லிக்கிறாங்க! இருக்கலாம் , But அதை ஒழிச்சு வைக்கணும்."

இசையில் தாம் அனுபவித்த பிற இசைகளின் சில இனிய இசைக்கூறுகளை , இசை ஒலிக்கூறுகளை எடுத்துக் கொண்டு அவற்றை ஆங்காங்கே இசை அடுக்குகளில் சேர்ப்பதும் , இனிய ஒலிநயங்களை சேர்ப்பதும் அதன் இயல்பிலே நிறைந்து ஒன்றுதலும் சற்றே விலகி அதன் மென் நளினங்களைக் காட்டி செல்வதும் எங்கோ தொடங்கி இனிமையை நீக்கமறக் கொடுக்கும் உத்திகளை உலகெங்கும் காண்கிறோம்.

மேலைத்தேய செவ்வியலிசையில் இந்த விதமாக இசையின் நுட்பங்களையெல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு பரீட்சாத்தமாக செய்து பார்த்தவர்கள் மேலைத்தேய இசைக்கலைஞர்கள். அவர்களில் ஜே.எஸ்.பாக் , மொசார்ட் , ஹைடன் போன்றவர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

மேலைத்தேய செவ்வியல் இசையின் இளமை குன்றாத இனிமைக்கு எடுத்துக்காட்டாடாக விளங்கியவர் மொஸாட் என்ற இசைக்கலைஞன். இவரது சமகாலத்தவரும், வயதில் மூத்தவருமான.ஹைடனின் பல படைப்புகளில் மொஸாட்டின் பாதிப்பு அதிகம் இருப்பதை நாம் காணலாம். அதனை அவர்கள் Musical variations என்று அழைத்தனர்.

இயற்கையில் தாம் காணும் நல்லவற்றை மனிதன் தன்வயப்படுத்தி வளர்ந்த நீண்ட பழக்க தோஷம் அழகியல் கலைவடிவங்களிலும் ஆழ தடம் பதித்துள்ளது. கால வளர்ச்சிக்கு ஏற்ப கலைவடிவங்களிலும் அவை மாற்றம் பெற்று வளர்ந்திருக்கிறது. ஒரு மூலத்திலிருந்து கிடைக்கும் அம்சங்களை ஒவ்வொரு கலைஞர்களும் தங்களுக்குரிய வகையில் பயன்படுத்தி மாறுபாடான பலவித பரிமாணங்களை எட்டுவதும் , அதன் விளைவாய் மாற்று வடிவங்களின் மீதான நுண்பார்வை பின் அதன் விளைவாய் அதை ஒப்பீடு செய்யும் ஒப்பியல் என்கிற ஆராய்ச்சி மனப்பாங்கையும் வளர்க்கிறது.

பிறரது படைப்புகளைக் கையாள்வது அவற்றை விரிவாக அழகு சேர்த்தெடுத்து செல்வது அல்லது இட்டுக்கட்டுவது மற்றும் பல முனைகளில் ஊடாடுவது , பரிமாற்ற உள்வினையாற்றுவது என படைப்பின் விஸ்தீரணங்களைக் காட்ட முயலும் போது அவை மீள , மீள பயன்படுவதால் அவை சலிப்புக்கும் விமர்சனங்களுக்கும் இலகுவில் உள்ளாக்கப்படுகின்றன. ஆனாலும் பொதுவாக கலைகளில் இவ்விதமான ஒரு சில முக்கிய கூறுகள் மீள மீள பயன்படுத்துவதும் மரபாக இருந்து வந்துள்ளதை காண முடியும். அவை கேலிக்கும் , விமர்சனங்களுக்கும் உள்ளானதை நாடக வரலாற்றிலும் காண்கிறோம்

ஆங்கிலேய காலனித்துவவாதிகளால் சேக்ஸ்பியரின் நாடகங்கள் உலகெங்கும் பரப்பபட்டன. தன்னிகரில்லாத மேதை என்று நாடக உலகில் பேசப்பட்ட சேக்ஸ்பியரின் நாடகங்களில் பல ஏற்கனவே பயன்படுத்தப்படட கதைகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

ஷேக்ஸ்பியரை தங்களது ஆதர்சக்கவிஞன் என அவருக்குப் பின்வந்த பலர் கூறிக்கொண்டனர். அவர்களில் ரொமாண்டிக் கவிஞர் ஜான் கீட்ஸ் (1795-1821) ஷேக்ஸ்பியரால் மிகவும் கவரப் பெற்றார், தனது மேசைக்கருகே சேக்ஸ்பியரின் மார்பளவு சிலை ஒன்றை அருகில் வைத்திருந்தார்.அதன் மூலம் ஷேக்ஸ்பியர் தனது படைப்பாற்றலைத் தூண்டுவார் என்று ஜான் கீட்ஸ் நம்பினார் . கீட்ஸின் கவிதைகளில் ஷேக்ஸ்பியரின் சாயல் இருப்பதாகவும் மற்றும் ஷேக்ஸ்பியரின் மனத்தகத் தோற்றங்கள் நிறைந்தவை என்றும் கூறப்படுகிறது.

ஷேக்ஸ்பியரை வணங்கியவர்களை " Bardolatry " என்று கேலி செய்தார் அறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா [1865-1950 ] . ஆனாலும் ஷேக்ஸ்பியரை ரகசியமாக பாராட்டினார் என்றும் தனது நெருங்கிய நண்பர்களிடம் அடிக்கடி சேக்ஸ்பியரின் மொழியறிவு குறித்த வியந்து பாராட்டியுமிருக்கின்றார் எனவும் அறியக்கிடைக்கின்றது.

இது போன்ற கருத்துக்கள் இருந்தாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் ஷேக்ஸ்பியரை முன்மாதிரியாகக் கொண்டது மட்டுமல்ல , பல நாவலாசிரியர்களும் தங்கள் படைப்புகளுக்கு சேக்ஸ்பியரின் தலைப்புகளை பயன்படுத்தினர்.

ஆங்கில இலக்கியத்தின் கொடுமுடி என புகழப்பட்ட ஷேக்ஸ்பியரின் படைப்புகளும் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. ஆங்கில நாடக வரலாற்றில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்ததாக அவரது காலத்தில் பெயர் எடுத்தவர் பென் ஜோன்சன்

சேக்ஸ்பியரின் சமகாலத்தவரான பென் ஜோன்சன் நாடக்கலைஞராவர். ஷேக்ஸ்பியரை விட ஒன்பது வயது இளையவர். சேக்ஸ்பியரின் வாரிசு என அறியப்பட்டவர். பின்னாளில் அவர் ஷேக்ஸ்பியர் பற்றி பல விமர்சனங்ககளை வைத்தார். ஷேக்ஸ்பியர் மீது முதன்முதலில் கடுமையான விமர்சனத்தை வைத்தவரும் பென் ஜோன்சனே ! அதில் முதன்மையானது ஷேக்ஸ்பியரிடம் கலை இல்லை என்பதாகும்.

பென் ஜோன்சன் [ Ben Jonson 1572 -1637 ] ,சேக்ஸ்பியர் குறித்து சொன்ன கருத்து மிகக்கடுமையானவையாக இருந்தன . சேக்ஸ்பியரின் படைப்புகள் எல்லாம் "பாசிபிடித்தவை " [ Mouldy ] என்றார். அவரது படைப்புகள் எல்லாம் அவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியவை மட்டுமல்ல. சேக்ஸ்பியரின் படைப்புகளில் The Tempest நாடகம் ஒன்று மட்டுமே பிற வடிவங்களிலிருந்து பெற்றது என்பதற்கான அடையாளம் காணப்படவில்லை என்றார் பென் ஜோன்சன். அதிகம் திருடியவர் என்ற திருட்டுப்பட்டம் பெற்றவர் சேக்ஸ்பியர்.

இது ஷேக்ஸ்பியர் பற்றிய கடுமையான ஓர் விமர்சனம் என்றாலும் சேக்ஸ்பியரின் தனித்தன்மையும் , அவரது படைப்பாற்றலின் திறனுக்கு அடிப்படைக்காரணங்களாக அவரது வாசிப்பு , அதனை உள்வாங்கும் சக்தி ,அதனூடே எழும் கற்பனைசக்தி, அவற்றை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் போன்றவை ஏனைய கவிஞர்களான ஸ்பென்சர், மில்டன், பர்ன்ஸ், கீட்ஸ் மற்றும் டென்னிசன் போன்றோரைவிட அதிகமாக இருந்தது என்பர். மத்திய காலத்தின் தலை சிறந்த ஆங்கிலேயக் கவிஞரும் , எழுத்தாளரும் ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனவும் போற்றப்படுகின்ற Geoffery Chaucer [ 1340 - 1400 ] என்பவர் சேக்ஸ்பியரின் பேரபிமானத்திற்குரியவராக திகழ்ந்தார். The Canterbury Tales என்ற படைப்பு Geoffery Chaucer ன் புகழுக்கு எடுத்துக்காட்டாகும்.இவரின் கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களை அமைத்தார்.

கிரேக்க தத்துவவாதியும் , சுயசரிதை எழுத்தாளருமான Plutarch [ கி.பி.46 - 120 ] என்பவர் எழுதிய Parallel Lives என்ற ஆக்கத்தின் மொழிபெயர்ப்பிலிருந்து தனது Antony and Cleopatra, Julius Caesar, Coriolanus, Timon of Athens போன்ற நாடகங்களுக்கான விஷயங்களை எடுத்தாண்டார். பலரது ஆக்கங்களை அவர் இரவல் வாங்கினாலும் அதை படைப்பூக்கத்துடன் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதுவே சேக்ஸ்பியரின் பலம் என்று அவரது படைப்புகளை ரசிப்பவர்கள் கருதுகின்றார்கள். ஆனாலும் இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி உலக இலக்கியத்தில் பெருங்கலைஞர்களுக்கு சமதையாக பேசப்படுபவர் சேக்ஸ்பியர்.

ஷேக்ஸ்பியர் பயன்படுத்தியது போலவே பண்டைய கதைகள் மீள , மீள சொல்லப்பட்டு வருகின்றன தென்கிழக்கு ஆசியாவில் மகாபாரதம் , ராமாயணம் போன்ற கதைகள் பல்வேறு சமூகங்களிலும் வெவ்வேறு விதமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. வால்மீகியின் உள்ளடகத்தை எடுத்துக் கொண்ட கம்பன் தனது கவித்திறத்தால் அதை கம்பராமாயணம் ஆக்கியது போல!

“ வால்மீகரின் சீதைப்படிமம் கம்பனாலும் , எழுத்தச்சனாலும் , துளசிதாசராலும் , குமாரனாசானாலும் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீதைப்படிமத்திலும் காலத்தின் சிந்தனையும் , கவிஞரின் அகவைய உள்ளடக்கத்தின் முத்திரையையும் காண்கிறோம் " என்பார் பேராசிரியர் வானமாமலை.[ இலக்கியத்தில் உருவமும் , உள்ளடக்கமும் - பக்கம் 17

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக அரங்கம் பார்சி நாடகத்தை உள்வாங்கி தமிழ் மக்கள் இசையையும் இணைத்த வண்ணம் வளர்ந்தது. சங்கரதாஸ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல சம்பந்தமுதலியாரின் நாடகங்கள் சேக்ஸ்பியரின்நாடக மொழி பெயர்ப்புகளுடன் வசனங்களையும் ,தமிழர் பாரம்பரியங்களையும் இணைத்து உருவாகின.

பழைய இலக்கியங்களும் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளது என்பதை இலக்கிய வரலாற்றில் நாம் காண்கிறோம். மக்கள் வாழ்வும் , நாகரீகமும் மாறும் போது கலைவடிவங்களிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. படைப்பு முனைப்பு அதிகம் உள்ளவர்கள் தங்கள் ஆற்றல்களுக்கேற்ப பல்வேறு நுட்பங்களுடன் கலந்து தரும் போது அவை புத்துப்பொலிவும் பெறுகின்றன. மக்களுக்கு நன்கு பழக்கமான பழங்காலக் கதைகள் மீண்டும்சொல்லப்படுவதும் ரசிக்கப்படுவதும் அதுவே மரபாக இருக்கிற சூழ்நிலையில் அவை மக்களின் சொத்தாகக் கருதப்படுகின்றன. பொதுச் சொத்தாக இருக்கும் அவற்றை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றை தங்களது என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது.

ஆனால் சினிமாப்பாடல்கள் என்பது புதியதொரு கலைவடிவமாக இருப்பதால் அதன் முன்னோடிகளாக மேல்நாட்டு இசையும் , அவர்களை அடியொற்றியே கலப்பிசையாக உருவான ஹிந்தி திரைப்பட இசையும் நாம் கேட்டுப் பழகாத சில ஒலிநயங்களை கொண்டிருக்கும் நிலையில் அதே போல தமிழிலும் அழகுடனும் ,சுவையுடனும் ,உணர்ச்சியுடனும் இழைத்து தரும் போது அவற்றின் வேறுபாடு புதிய எழுச்சியை உருவாக்குகின்றன.

மெல்லிசைமன்னர்கள் இசையில் அதிகமாக ஊடுருவிய லத்தீன் அமெரிக்க மற்றும் ஹிந்தித்திரையிசையின் இனிய பக்கங்களை நாம் காண முடியும். தமிழ் திரைப்பட இசையமைப்பு என்பது இயந்திரமாக்கப்பட்ட நிலையில் ஒரு படத்திற்கு ஐந்து ,ஆறு பாடல்கள் என விதிக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாடல்களுக்கான நிறைந்து ஒன்றக்கூடிய ஒலிநயங்களை தமிழுக்கு அப்பாலும் தேட வேண்டிய நிர்பந்தம் இசையமைப்பாளர்களுக்கு உண்டாகிறது.

ஒருவகையில் இதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் இந்தியாவின் மகாகவி என்று போற்றப்பட்ட ரவீந்திரநாத் தாகூர்! தாகூரின் உலக இசை ஈடுபாடு இந்திய இசையுடனான கலப்பிசைக்கு உந்துதல் கொடுத்தது.

ஆங்கிலக்கல்வியை முதலில் பெரும் வாய்ப்பைப் பெற்ற வங்கத்தில் தாகூரின் அறிவு ஒளி பலதிசைகளிலும் பரவிய நிலையில் மேற்கத்தேய இசையின் மீதான ஈடுபாடும் அமைந்தது. வங்காளத்தில் சத்யஜித்ராய் , சலீல் சௌத்ரி போன்ற கலைஞர்கள் தங்கள் குழந்தைப்பருவத்திலேயே மேற்கத்தேய செவ்வியலிசை கலைஞர்களின் படைப்புகளை இசைத்தட்டுக்களில் கேட்கும் வாய்ப்புகளை பெற்றனர்.

.பின்னாளில் சலீல் சௌத்ரி தனது வீரியமிக்க இசையால் ஹிந்தி திரையுலகில் வாத்தியக்கலவைகளில் மேலை சங்கீதத்தை மிக உன்னதமாகப் பயன்படுத்தி ஹிந்தி திரையிசையை மெருகேற்றினார்.

இதில் ஆச்சர்யம் கலந்த உண்மை என்னவென்றால் திரை இசையமைப்பாளர்களுக்கு ஏதோ ஒரு இசையில் இருந்து ஏதோ ஒரு துரும்பு கிடைத்தாலும் போதும் அதிலிருந்து அற்புதமான , இனிமைமிக்க இசையை முழு நிறைவுடன் வழங்கும் அற்புத ஆற்றல் இருந்தது. உதாரணமாக பீத்தோவன் இசையமைத்த ஒரு சிறிய பகுதியை வைத்துக் கொண்டு சலீல் சௌத்ரி ஒரு விதமாகவும் மெல்லிசைமன்னர் வேறு விதமாகவும் நிறைவான பாடலை தந்ததை நாம் இங்கே குறிப்பிடலாம்.

பீத்தோவனின் இசைவடிவமான Fur Elise என்ற படைப்பு தமிழில் " மெல்லிசைமன்னரின் இசையில் "என் மனது ஒன்று தான் " என்ற பாடலின் பல்லவையாக மட்டும் வெளிவந்தது. அதே போல ஹிந்தியில் அதற்கு முன்பே சலீல் சௌத்திரியின் இசையிலும் அப்பாடல் பல்லவையாக வெளிவந்தது. ஆயினும் இரண்டு பாடல்களும் ஆரம்பங்கள் ஒன்றாக இருந்த போதிலும் அவற்றின் பிபகுதிகள் வெவ்வேறு பாடல்களாக அமைந்தன.

பிற இசையமைப்பாளர்களிடமிருந்து மெல்லிசைமன்னர்கள் பெற்ற இசை அனுபவங்கள் இதுவரை பார்த்தோம்.

அவர்கள் தங்கள் இசைப்படைப்புகளுக்கு கலை உணர்வுடன் புதுப்புது ஆடைகளைப் புனைந்து மிக இயல்பாக வேறு வேறு பாடல்கள் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். சில சமயங்களில் தங்கள் மேல் திணிக்கும் பலவந்தங்களை திசை திருப்பும் வகையிலும் நான் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பது போல அவர்களை அறியாவண்ணம் அவர்களே நிராகரித்த மெட்டுக்களை அல்லது கேட்ட பாடல்களை , அவர்களே இது புதிதான பாடல் என்று உணர வைத்த சாமர்த்தியத்தையும் காண்கிறோம். மெல்லிசைமன்னர் தானே இசையமைத்த சில பாடல்களை எடுத்து அவற்றிற்கு புது ஆடை புனைந்து கொடுத்தது போல ஒரே மெட்டை வைத்து வெவ்வேறு ஜாலங்கள் காட்டி அல்லதுமேலே கூறியது போல பலவிதமான Musical Variations களில் அவற்றை அமைத்து காட்டினர். சில சமயங்களில் ஒரே சந்தத்தை வைத்து வித்தை காட்டினார்கள்.

வீடு வரை உறவு வீதி வரை மனைவி மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு பேசுவது கிளையா பெண்ணரசி மொழியா போன்ற பாடல்கள் ஒரே சந்தத்தில் அமைந்திருப்பதையும் , இவற்றை மாறி மாறிப் பாடிக்கொண்டு இருக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

நாளாம் நாளாம் திருநாளாம் நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை மல்லிகை முல்லை பூப்பந்தல் …

இந்தப்பாடல்களும் மேலே குறிப்பிட்ட பாடல்களைப் போலவே ஒன்றை ஒன்று மருவி பாடிக்கொண்டே இருக்கலாம்

01 சுதந்திர பூமியில் பலவகை - - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் பூமியில் பறப்பதும் வானத்தில் - சாந்தி நிலையம் - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்

02 கால்கள் நின்றது நின்றது தான் - பூஜைக்கு வந்த மலர் - ராகவன் + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் கன்னி ஒருத்தி மடியில் - நீரும் நெருப்பும் - டி.எம்.எஸ் சுசீலா - இசை : விஸ்வநாதன் இந்த இரு பாடல்களுள் " நாளாம் நாளாம் " பாடல் ஒளிந்திருக்கிறது

03 நினைக்கத்தெரிந்த மனமே - ஆனந்த ஜோதி - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி உறவு என்றொரு சொல் இருந்தால் - இதயத்தில் நீ - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04 அத்தை மக்கள் ரத்தினத்தை - பணக்காரக்குடும்பம் - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி யாருக்கு மாப்பிள்ளை யாரோ - பார்த்தால் பசிதீரும் - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05 அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை - பி.பி.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பருவத்தில் கொஞ்பணம் படைத்தவன் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

06 கல்லெல்லாம் மாணிக்க - ஆலயமணி டி.எம்.எஸ் + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பவளக்கொடியிலே முத்துக்கள் - பணம் படைத்தவன் - டி.எம்.எஸ் + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்ராம நாம் ஒருவரை ஒருவர் - குமரிக்கோட்டம் - டி.எம்.எஸ் + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

07 தேவியிடம் தேடித் போவேனோ - சில நேரங்களில் சில மனிதர்கள் - வாணி - இசை : விஸ்வநாதன் கைகொட்டி சிரிப்பார்கள் - அபூர்வ ராகங்கள் - ஷேக் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

08 தண்ணிநிலவு தேனிறைக்க - படித்தால் மட்டும் போதுமா - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி அத்தை மகனே - பாதகாணிக்கை - சுசீலா - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி நிலம் பார்த்து மெதுவாக உனைநாடாவா ….அத்தை மகனே ...யார் யார் யார் அவள் யாரோ.

09 அன்புள்ள மான்விழியே - குழந்தையும் தெய்வமும் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் கொடியில் இரண்டு மலர் உண்டு - குழந்தையும் தெய்வமும் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் - - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்

10 புது வீடு வந்த நேரம் - எங்க பாப்பா - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் மன்னிக்க வேண்டுகிறேன் - இருமலர்கள் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்

11 இளமை நாட்டிய சாலை - கல்யாணமாம் கல்யாணம் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் காதலின் போன் வீதியில் - பிள்ளையோ பிள்ளை - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்

12 காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் - பாக்கியலட்சுமி 1961 - சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆதி மனிதன் காதலுக்கு பின் - பலே பாண்டியா 1961 - பி.பி.எஸ். ஜமுனாராணி - இசை விஸ்வநாதன் ராம.

13 சொல்லவோ சுகமான கதை சொல்லவோ - பாக்கியலட்சுமி 1961 - சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி நினைத்தால் சிரிப்பு வரும் - பாமா விஜயம் - சுசீலா- இசை விஸ்வநாதன்

14 பொட்டு வைத்த முகமோ - Sumathi என் சுந்தரி 1961 - எஸ்.பி.பி - இசை விஸ்வநாதன் சுமை தங்கி சாய்ந்தால் - தங்கப்பதக்கம் 1971 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன்

16 ஓ.. லட்சுமி ஓ ஷீலா - நீல வானம் 1968 - எல்.ஆர்.ஈஸ்வரி - இசை விஸ்வநாதன் நல்வாழ்த்து நான் சொல்லுவேன் - பட்டிக்காடா பட்டணமா 1973 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் [ அது தான் மானம் …]

17 பாட்டொன்று தருவார் - சர்வர் சுந்தரம் 1968 - ஈஸ்வரி + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி சிலை எடுத்தான் ஒரு - சர்வர் சுந்தரம் 1968 - ஈஸ்வரி + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

18 ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ் - என் கடமை 1964 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி கடலோரம் வாங்கிய காற்று - ரிக்சாக்காரன் 1972 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன்

18 புன்னகையில் ஒரு பொருள் வந்தது - பவானி 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் சிரித்தாள் தங்கப்பதுமை - Kannan என் காதலன் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய் 1964 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதியபூமி 1968 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

19 அமைதியான ந்தியினிலே ஓடம் - ஆண்டவன் கட்டளை 1964 - டி.எம்.எஸ் + சுசீலா- விஸ்வநாதன் ராம. அந்த மாப்பிள்ளை காதலித்தான்- பணம் படைத்தவன் 1964 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் அம்மா கண்ணு சும்மா சொல்லு - ஞான ஒளி 1971 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் வட்ட வட்ட பாறையில் வந்து நிற்கும் - பழனி 1965 - சீர்காழி + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

20 வெத்திலை போட்ட பத்தினி - வீராதிருமகன் 1964 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி சொந்தமும்மில்லை பந்தமுமில்லை - ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார் 1964 - ஜி .கே. வெங்கடேஷ் - இசை வி

21 தானே தனக்குள் ரசிக்கின்றாய் - பேரும் புகழும் - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் அழகென்னும் ஓவியம் இங்கே - ஊருக்கு உழைப்பபவன் - ஜேசுதாஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன்

22 நானும் கூட ராஜா தானே - புன்னகை - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் - ராஜபார்ட் ரங்கதுரை - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் நான் பார்த்தா பைத்தியக்காரன் - உழைக்கும் கரங்கள் - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்

23 கண்ணனை நினைக்காத நாளில்லையே - சீர்வரிசை 1974- எஸ்.பி.பி + சுசீலா - இசை விஸ்வநாதன் ஜமுனா நதி இங்கே - கௌரவம் 1974 - எஸ்.பி.பி + சுசீலா - இசை விஸ்வநாதன்

24 பெற்றெடுத்த உள்ளம் என்றும் - கண்ணா நலமா 1972 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன் சத்தியத்தின் சோதனைக்கு - கிரககப்பிரவேசம் 1972 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்

25 இது மார்கழி மாசம் - பிராப்தம் 1973 - ஈஸ்வரி - இசை விஸ்வநாதன் கல்யாண வளையோசை - ஊருக்கு உழைப்பபவன் 1974 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன்

26 மார்கழி பனியில் - முத்தான முத்தல்லவோ 1976 - .எஸ்.பி.பி - இசை விஸ்வநாதன் மன்மத லீலை மயக்குது ஆளை - மன்மதலீலை 1976 - .எஸ்.பி.பி - இசை விஸ்வநாதன் எதற்கும் ஒரு காலம் உண்டு - சிவகாமியின் செல்வன் 1974 - .எம்.எஸ்.வி - இசை விஸ்வநாதன் வானிலே மேடை அமைந்தது - நினைத்தாலே இனிக்கும் 1979 - .எம்.எஸ்.வி - இசை விஸ்வநாதன்

27 தண்ணிலவு தேனிறைக்க - படித்தால் மட்டும் போதுமா 1962 - சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி அத்தை மகனே - பாதகாணிக்கை 1962 - சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி [ நிலம் பார்த்து மெதுவாக] * யார் ஆர் யார் அவள் யாரோ - பாசமலர் 1961 - பி.பி.எஸ் + சுசீலா- இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

28 மெல்ல வரும் காற்று - கௌரி கல்யாணம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் நல்ல இடம் நான் வந்த இடம் - கௌரி கல்யாணம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன்

29 கல்யாண வளையோசை கொண்டு - ஊருக்கு உழைப்பவன் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் கண்ணுபடப் போகுது கட்டிக்கையா - சொந்தம் - எல்.ஆர் ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன்

30 விளக்கேற்றி வைக்கிறேன் - சூதாட்டம் 1971 - சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் இதோ எந்தன் தெய்வம் - பாபு 1972 - டி.எம்.எஸ் - இசை : விஸ்வநாதன்

கொடுத்தது.

மெல்லிசைமன்னர்களின் இசையில் பிற இசைஅமைப்பாளர்களின் தாக்கத்தை காணும் நாம் , அவர்களுக்குப் பின்வந்த இசையமைப்பாளர்களும் , ஏன் அவர்களது சமகால இசையமைப்பாளர்களும் இவர்களுடைய இசையில் உந்துதல் பெற்றதையும் காண்கிறோம். தமிழில் அதிக புகழபெற்ற சில பாடல்களில் இவர்களது தாக்கத்தை நாம் வியப்புடன் பார்க்கின்றோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமாயின் " மன்னவன் வந்தானடி தோழி " என்ற புகழ் பெற்ற பாடலை எடுத்துக்கட்டாகக் கூறலாம்.

01 விந்தியம் வடக்காக - தெனாலி ராமன் 1956 - வி.என்.சுந்தரம் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி அம்பகிகாபதி படத்தில் வரும் தொகையறாக்கள் இவ்விதமாக இருக்கும்

02 வெட்கமாய் இருக்குதடி - பார் மகளே பார் 1964 - சூலமங்கலம் + லீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி மன்னவன் வந்தானடி - திருவருட்செல்வர் 1967 - சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்

03 கல்யாண வளையோசை கொண்டு - ஊருக்கு உழைப்பவன் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் மாம் பூவே சிறுமைனாவே - கல்யாணமாம் கல்யாணம் - ஜேசுதாஸ் + சுசீலா - இசை : சந்திரபோஸ்

04 ஒத்தையடி பாதையிலே - கல்யாணமாம் கல்யாணம் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் தன்னந்தனியாக நீ வந்த போது - சங்கமம் - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : ராமமூர்த்தி

05 நாளாம் நாளாம் - காதலிக்க நேரமில்லை - பி.பி.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் பூத்திருக்கும் விழியெடுத்து - கல்யாண மண்டபம் - பி.பி.எஸ் + சுசீலா - இசை : பார்த்தசாரதி

06 பிறந்த நாள் மன்னன் பிறந்த நாள் - தெனாலி ராமன் 1956 - வி.என்.சுந்தரம் - இசை விஸ்வநாதன் வர சொல்லடி அவனை - பாதுகாப்பு - சுசீலா - இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07 சித்திர பூவிழி வாசலிலே - இதயத்தில் நீ 1963 - சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி நவராத்திரி சிவ ராத்திரி - நவராத்திரி 1963 - சுசீலா - இசை : மகாதேவன்

08 ராஜாவின் பார்வை - அன்பே வா 1966 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் இந்த ராகமும் இந்த தாளமும் - என் ரத்தத்தின் ரத்தமே 1990 - சந்தியா - இசை : சங்கர் கணேஷ்

09 பொன்னெழில் பூத்தது - கலங்கரை விளக்கம் 1966 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் எனது விழியில் உனது பார்வை - நான் ஏன் பிறந்தேன் 1972 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : சங்கர் கணேஷ்

10 அழகுக்கு அழகு - வீரத்திருமகன் 1964 - சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி காலங்கள் தோறும் திருடர்கள் - இருவர் உள்ளம் 1964 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை கே.வி.மகாதேவன்

11 நான் பேச நினைப்பதெல்லாம் - பாலும் பழமும் 1961- டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் ராம கடலோரம் வீடு கட்டி - கஸ்தூரி திலகம் 1974 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை ஜி.தேவராஜன்

12 வெட்கமாய் இருக்குதடி - பார் மகளே பார் 1964 - சூலமங்கலம் + லீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி மன்னவன் வந்தானடி - திருவருட்செல்வர் 1967 - சுசீலா - இசை: கே.வி.மகாதேவன்

13 நான் நன்றி சொல்வேன் என் - குழந்தையும் தெய்வமும் 1965 - சுசீலா - இசை விஸ்வநாதன் பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு - தாய்க்கு தலை மகன் 1966 -டி.எம்.எஸ். + சுசீலா - இசை KVM

14 பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டிவரை உறவு 1967 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் கண் ஒரு பக்கம் - நிறைகுடம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : வி.குமார்

15 ஆறோடும் மண்ணில் எங்கும் - பழனி 1963 - டி.எம்.எஸ் + சீர்காழி + பி.பி.எஸ் - இசை : விஸ்வநாதன் நேரான நெடுஞ்சாலை - காவியத்தலைவி 1969 - எம்.எஸ்.வி - இசை : வி.குமார்

16 இறைவன் உலகத்தை படைத்தானா - உனக்காக நான் 1979 - ஜேசுதாஸ் - இசை : விஸ்வநாதன் பூ கொடியின் புன்னகை - இருவர் 1986 - சந்தியா - இசை : ஏ.ஆர். ரகுமான்

17 தங்கப்பதகத்தின் மேலே - எங்கள் தங்கம் 1968 - டி.எம்.எஸ் + சுசீலா - இசை : விஸ்வநாதன் என்ன விலை அழகே - காதலர் தினம் 1998 - உன்னி கிருஷ்ணன் - இசை : ஏ.ஆர். ரகுமான்

18 பாட்டுக்கு பாட்டெடுத்து - படகோட்டி1964- டி.எம்.எஸ் + சுசீலா - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பொன்மானைத் தேடி - எங்க ஊரு ராசாத்தி 1980 - வாசுதேவன் + சைலஜா - இசை கங்கை அமரன்

19 வா வெண்ணிலா - மெல்ல திறந்தது கதவு1986 - எஸ்.பி.பி + ஜானகி - இசை விஸ்வநாதன் ஏ வெண்ணிலா என் நெஞ்சமே - இது ஒரு தொடர் கதை 1986 - எஸ்.பி.பி + ஜானகி - இசை கங்கை அமரன்

இளையராஜா

01 ஓ ஓ.தேவதாஸ் - தேவதாஸ் 1953 - கே.ராணி + கே.ஜமுனாராணி - இசை : சுப்பராமன் /விஸ்வநாதன் ராமமூர்த்தி அடி வான்மதி என் காதலி - சிவா1990 - எஸ்.பி.பி. + சித்ரா - இசை : இளையராஜா ஓ..ஓ...பார்ட்டி நல்ல பார்ட்டி தான் - இதயம் 2991 - மலேசியா வாசு + குழு - இசை : இளையராஜா

02 நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை 1963 - சுசீலா + பி.பி.எஸ் - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி வான் உயர்ந்த சோலையிலே - இதயக்கோயில் 1986 - எஸ்.பி.பி. + Janaki - இசை : இளையராஜா

03 சிங்காரப்புன்னகை - மகாதேவி 1957 - எம்.எஸ்.ராஜேஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராசாத்தி உன்னை - வைதேகி காத்திருந்தாள் 1985 - ஜெயசந்திரன் - இசை : இளையராஜா

04 சித்திர பூவிழி வாசலிலே - இதயத்தில் நீ 1953 - சுசீலா + ஈஸ்வரி - இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி கொட்டிக் கிடக்குது செல்வங்கள் - வாழ்க வளர்க 1986 - சித்ரா - இசை : இளையராஜா.

மெல்லிசைமன்னரின் இசைமுறையை சங்கர் கணேஷ் , வி.குமார் நேரடியாக பின்பற்றினர். அவர்களுடைய பல பாடல்கள் மெல்லிசைமன்னரின் பாணியிலேயே இருக்கும். இவர்களும் பல இனிய பாடல்களை தந்ததை யாரும் மறுக்க முடியாது.

ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவையாகவும், வித்தியாசமான இனிய ஒலிகளையெல்லாம் ஒன்றறக் கலப்பதாகவும் அவற்றினூடே புதிய கலை அனுபவம் பெற வைப்பதும் புதிய இசைமரபின் வளர்ப்புப்பண்ணையாகவும் உருவாகிய மெல்லிசைமன்னர்களின் இசை தமிழ் திரை இசையை புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றது.

கொண்டாடப்பட்ட இசையாக இருக்கும் திரை இசையில் தமதுமரபு சார்ந்தும் பிற இசைமரபுகளையும் காலத்தேவை கருதி ஆங்காங்கே இணைத்து புதிய மறுபடைப்பாங்ககளாக உருவாக்கிக் காட்டி தமக்கு பின்வந்தவர்களுக்கு வழிகாட்டியாகவும் மெல்லிசைமன்னர் விளங்கினார்.

மறுபடைப்பாக்கங்களின் நுணுக்கம் புரியாத , இசையாற்றலற்ற சிலர் ரீமிக்ஸ் என்ற பெயரில் மெல்லிசைமன்னர்களின் பாடல்களை குதறிய கொடுமைகளும் 1990 க்கு பின் வந்தவர்களால் நிகழ்ந்தது. அதை மெல்லிசைமன்னர் " ரீமிஸ் என்பது கற்பழிப்புக்கு சமமானது " என்று கண்டித்ததும் நம் காலத்தில் தான் நிகழ்ந்தது.


மகாநதிகளின் சங்கமம்

1980களில் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது . ஒரு படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் என்பதே அது. அன்றைய காலத்தில் அது ஒரு புதுமையாக பேசவும் பட்டது.கே.வி. மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஸ் , சங்கர் கணேஷ் , இளையராஜா , அகத்தியர் போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள். ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒரு பாடல் என்ற வகையில் பாடல்களை இசையமைத்தார் படத்தின் பின்னணி இசையை இளையராஜா அமைத்தார்.

நான் ஒரு பொன்னோவியம் கண்டே எதிரே - இசை : இளையராஜா நான் உன்னை நினைச்சேன் நீ என்னை நினைச்சேன் - இசை : சங்கர் கணேஷ் நான் பார்த்த ரதிதேவி எங்கே - இசை : ஜி.கே.வெங்கடேஷ் போன்ற பாடல்கள் நினைவில் நிற்கின்றன.

பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைத்தார்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களின் பங்களிப்பு ஒவ்வொரு பாடல்களாகவே இருந்தது.

இது ஏன் புதுமையாக பேசப்பட்டது என்றால் ஏற்கனவே 1940 மற்றும் 1950 கள் வரையான காலப்பகுதியில் ஒரு படத்திற்கு இரண்டு அல்லது சில சமயம் மூன்று இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருந்ததும் , பின் அது 1960 ,1970 , 1980கள் வரையான காலப்பகுதியில் மறைந்தும் போன ஒரு சங்கதியாகவும் இருந்ததனாலேயே ஆகும்.

1930,1940களில் ஏன் 1950 களில் கூட இரு இசையமைப்பாளர்கள் பல படங்களில் பங்களிப்பு செய்தார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்:

01 மனோன்மணி [1941 ] இசை: ஜி.ராமநாதன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 02 ஜகதலப்பிரதாபன் [1944 ] இசை: ஜி.ராமநாதன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 03 மிஸ் மாலினி [1947 ] இசை: எஸ்.ராஜேஸ்வரராவ் + எஸ்.அனந்தராமன் 04 அபிமன்யூ [1948 ] இசை: சி.ஆர்.சுப்பராமன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 05 கீதாகாந்தி [1949 ] இசை: சி.என்.பாண்டுரங்கன் + லக்ஸ்மான் பிரதர்ஸ் 06 திகம்பரசாமியார் [1950 ] இசை: ஜி.ராமநாதன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 07 பாரிஜாதம் [1950 ] இசை: சுப்பராமன் + எஸ்.வி.வெங்கடராமன் 08 மர்மயோகி [1951 ] இசை: சுப்பராமன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 09 நிரபராதி [1951 ] இசை: கண்டசாலா + பத்மநாபசாஸ்திரி 10 கல்யாணி [1952 ] இசை: சுப்பராமன் + வி.தட்க்ஷிணாமூர்த்தி 11 தேவதாஸ் [1953 ] இசை: சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி 12 சொர்க்கவாசல் [1954 ] இசை: இசை: சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி

இவ்விதம் பல உதாரணங்களையும் காட்ட முடியும்.

பின்னாளில் தங்கள் தனித்துவங்களைக் காண்பித்து சிறந்த பாடல்களை தந்த இசையமைப்பாளர்கள் இவ்விதம் இருவராக பணியாற்றிய காலங்களில் வெளிவந்த திரைப்படப் பாடல்களைக் கேட்டால் யார் யார் எந்தப்பாடல்களை இசையமைத்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. எல்லா பாடல்களும் ஒரேவகையாக இருப்பதைக் காணமுடியும்.

மர்மயோகி படத்தில் இடம்பெற்ற சில அற்புதமான பாடல்களான " மனத்துக்கிசைந்த ராஜா " , " இன்பம் இதுவே இன்பம் " போன்ற பாடல்கள் யார் இசையமைத்தார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த இரண்டு பாடல்களையும் சுப்பராமன் இசையின் சாயல் இருப்பதைக் காணலாம். இது எனது ஊகம் மட்டுமே!

தேவதாஸ் படத்தின் சில பாடல்கள் இசையமைத்து முடிந்த நிலையில் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் அகால மரணமடைந்தார். அந்த நிலையில் அவர் ஒப்பந்தமாகிய வேறு சில படங்களை முடித்துக் கொடுக்கும் பொறுப்பு மெல்லிசைமன்னர்களின் பொறுப்பாய் அமைந்தது. தேவதாஸ் , சொர்க்கவாசல் ,சண்டிராணி போன்ற படங்களில் மெல்லிசைமன்னரின் கைவரிசையும் உண்டு. " வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே " என்ற பாடலை விஸ்வநாதன் இசையமைத்தார் என அவரே கூறியிருக்கின்றார்.

ஒரு படத்திற்கென இசையைக்கப்பட்ட பாடல்கள் வேறு படங்களில் பயன்பட்டிருப்பதை பழைய திரைப்படங்களில் நாம் காணலாம்

கூண்டுக்கிளி படத்திற்காக கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடலை தயாரிப்பாளரும் , இயக்குனருமான ராமண்ணா தனது இன்னொரு படமான குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக் கொண்டார். அந்தப்பாடல் தான் குலேபகாவலியில் இடம் பெற்ற இனிய ஜோடிப்பாடலான " மயக்கும் மாலை பொழுதே நீ போ போ " என்ற பாடல். அதே போலவே மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த " என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன் " என்ற பாடல் எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையமைத்த திருடாதே படத்தில் பயன்படுத்தப்பட்டது.

அமரதீபம் [ இசை: டி.சலபதிராவ் ] படத்தில் " நாடோடி கூட்டம் நாங்க " என்று தொடங்கும் ஒரு பாடல் ஜி.ராமநாதன் இசையில் இடம் பெற்றது.

இசையமைப்பாளர்களிடம் உதவியாளர்களாக இருக்கும் பலரும் இசையமைப்பில் வாத்தியங்களை ஒழுங்குபடுத்துவது , சில சமயங்களில் உதவியாளர்களின் மெட்டுக்களை இசையமைப்பாளர்கள் தங்கள் பெயரிலேயே போட்டுக் கொள்வதும் நடந்திருக்கின்றது.

வி.குமாரிடம் உதவியாளராக இருந்த சேகர் என்ற உதவியாளர் அமைத்த பாடல் தான் நீர்க்குமிழி படத்தில் இடம்பெற்ற " ஆடி அடங்கும் வாழ்க்கையடா " என்ற பாடலாகும். அன்றைய நிலையில் திறமையிருந்தாலும் உதவியாளர்கள் நிலைமை இவ்விதமாகவே இருந்தது.

"தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்த புண்ணியம்மா" என்ற பாடலை பொண்ணுக்கு தங்க மனசு [இசை : ஜி.கே.வெங்கடேஷ் ] படத்தில் உதவியாளராக இருந்த இளையராஜா முதன் முதலில் இசையமைத்தார். அவர் பெயர் கூட டைட்டில் எழுத்தில் கிடையாது.

மேலே குறிப்பிட்டபடி இரு இசையமைப்பாளர்கள் பங்குபெற்ற திரைப்படங்களில் அந்த இருவரும் சேர்ந்து இசையமைத்தார் என்பது பொருள் அல்ல. வெவ்வேறு நிலைகளில் தனித்தனியே இயக்குனரின் அல்லது தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க ஒருவருக்கு ஒருவர் தெரியாமலேயே இசையமைத்தார்கள் என்பதை பின்னாளில் சில சமயங்களில் இசையமைப்பாளர்களின் முத்திரை தெரியும் பாடல்கள் அமைந்தன.

திரைக்கு பின் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் ஹிந்தி திரையுலகிலும் இருந்திருக்கிறது. எஸ்.டி பர்மனின் உதவியாளராக ஜெய்தேவ் இருந்ததும், பிற்காலத்தில் 1970களில் எஸ்.டி.பர்மனின் இசையில் அவரது மகனான ஆர்.டி. பர்மன் பங்காற்றியது பற்றிய செய்திகள் வெளியாயின. குறிப்பாக எஸ்.டி.பர்மன் தனது கடைசிக் காலங்களில் இசையமைத்த திரைப்படங்களில் ஆர்.டி.பர்மனின் பங்களிப்பு இருந்தது என்பர்.

1950களில் புகழபெற்றிருந்த நௌசாத் , அணில் பிஸ்வாஸ் போன்ற பெரிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்த குலாம் முகம்ட் ,அக்காலத்திலேயே சில படங்களுக்கு இசையமைத்து பெரும் புகழ் பெற்றார். 1968ல் குலாம் முகமட் இசையமைத்த Pakeezah என்ற திரைப்படம் அவரது மரணத்தால் தடை பட்ட போது அந்த படத்தின் இசைப்பணிகளை நிறைவு செய்தவர் நௌசாத். அப்படம் பின்னர் 1972இல் வெளியாகி பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தன. அதிலும் குறிப்பாக ஆர்.டி. பர்மனின் இசை அதிக பிரபல்யமடைந்திருந்த நேரத்திலேயே செவ்வியலிசை பாணியில் அமைந்த குலாம் முகமட்டின் இசை பிரபல்யம் அடைந்தது.

பலர் தனித்தனியே இசையமைத்து கொண்டிருந்த காலத்தில் இருவர் இணைந்து இரட்டையர்களாக இசையமைத்ததையும் இந்திய திரையுலகில் காண்கிறோம். ஹிந்தியில் சங்கர் ஜெய்கிஷன் , கல்யாண்ஜி ஆனந்தஜி , லஷ்மிகாந்த் பியாரிலால் , தமிழில் லக்ஷ்மன் பிரதர்ஸ் , விசுவநாதன் ராமமூர்த்தி , சங்கர் கணேஷ் , மனோஜ் கியான் போன்றோர் நன்கு தெரிந்தவர்கள். இரட்டையர்களாக இருந்து இசையமைத்தார்களேயன்றி வேறு வகையில் யாரும் ஒன்றிணைந்து இசையமைக்கவில்லை என்று கூறலாம்.

ஆனால் தனித்தனியே பெரும் புகழ் பெற்ற இரு இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைத்தார்கள் என்ற ஒரு வரலாற்று பெருமை விஸ்வநாதனையும் இளையராஜாவையுமே சாரும்.

நட்சத்திர அந்தஸ்து பெற்ற இரு பெரும் இசையமைப்பாளர்களான விஸ்வநாதனும் இளையராஜாவும் சமகாலத்தவர்கள் என்ற போதும் விஸ்வநாதன் 15வயது மூத்தவர். விஸ்வநாதன் இசையால் பெரும் பாதிப்புக்குள்ளானவர் இளையராஜா.அவரது இலட்சிய இசையமைப்பாளர் விஸ்வநாதன். இயல்பாகவே புதுமை நாட்டமும் மரபு இசைசார்ந்த மெட்டுக்களை அமைப்பதிலும் வல்லவரான விஸ்வநாதனும் , வாத்திய இசையில் மாபெரும் பாய்ச்சலைக்காட்டி இந்திய இசையுலகை உலுக்கிய இளையராஜாவும் இணைந்தது தமிழ் திரையுலகின் வரலாற்று சம்பவமாகும்.

இருவரது இசைவரலாற்றிலும் இந்த சம்பவம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மரபு இசையிலும் ,அத்தோடிணைந்து நவீன இசைகளை உள்வாங்கி புதுமை செய்ததில் மெல்லிசைமன்னர் ஒரு படி முன்னே தமிழ் திரையிசையை நகர்த்தினார் என்றால் அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக மாபெரும் .பாய்ச்சலைக்காட்டிய இளையராஜா. மெல்லிசைமன்னரின் இசைத் தொடர்ச்சியாகவே இருந்தார். இருவரும் தமிழிசை மரபுகளிலும் மெல்லிசையிலும் ஊறித்திளைத்தவர்கள். மெல்லிசைமன்னரின் மெல்லிசை 1960, 1970களை உலுக்கியது என்றால் இளையராஜாவின் மெல்லிசை 1980, 1990களை உலுக்கியது

ஒலிகள் நம்மை ஆழமாகப் பாதிக்கின்றன. நாம் கருவில் இருக்கும் போதே கேட்கின்ற "ம்" என்ற அல்லது ஒருவித இரைச்சல் ஒலி [Drone ] அதிர்வுகள் நாம் பிறப்பதற்கு முன்பே இருக்கின்ற ஒலிகளாகும். இதனை குறிப்பிட்ட ஓர் ஒழுங்கில் . இயற்கையுடன் இசைந்த ஒத்திசைவாக இசையாக உருவாக்கும் போது ஆழ்மனத்தில் பரவச நிலையைத் தருகிறது. அவை ஆழ்நிலையில் நம்மைப் பாதிக்கின்றன.

இந்த ஒத்திசைவு [ Harmony ] இசையின் அழகுகளை மேலைத்தேய செவ்வியலிசை அற்புதமாக வெளிப்படுத்தியது. தமிழ் சூழலில் மெல்லிசைமன்னர்களே அதன் இனிய பக்கங்களைக் காண்பித்த முன்னோடிகள் ஆவர் . இதற்கு மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த "படிக்க படிக்க நெஞ்சில் இனிக்கும் பருவம் என்ற காவியம் " [ இரத்தினபுரி இளவரசி 1960 ] என்ற பாடலின் இனிய வாத்திய இசை சிறந்த உதாரணமாகும்.

ஒலிகளை பின்னணி இசையாக கையாண்டு இளையராஜா சாதனையின் சிகரத்தில் இருந்தார். அந்த இனிய இசையை மெல்லிசைமன்னரின் மெட்டுகளில் நெய்த்தெடுத்து தனது ரசனையின் அழகுகளை நனவோடை இசையாக மாற்றிக் காட்டினார் இளையராஜா.

தழுவி ,தாவித்தாவி வரும் மெட்டின் இனிமையை தான் எப்படியெல்லாம் ரசித்தாரோ அந்த விதங்களிலெல்லாம் இசை ரசிகர்களையும் தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வது போல பிரமிப்பூட்டும் பின்னணியாக அமைத்து மெட்டா , பின்னணி இசையா என்று பிரமிக்க வைத்தார் இசைஞானி !

அந்த இனிமையை மெல்லிசைமன்னர் விஸ்வநாதனும் , இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்த மெல்லத்திறந்தது கதவு , செந்தமிழ்பாட்டு , செந்தமிழ் செல்வன் , விஸ்வத்துளசி போன்ற படங்களில் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். மெல்லத்திறந்தது கதவு பாடல்களின் பின்னணி இசையின் சிறப்பை மெல்லிசை மன்னரே மதுரையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாராட்டினார்

சமகாலத்து இரு இசைமேதைகளின் ஒன்றிணைவு மெல்லத் திறந்தது கதவு படத்தில் ஏற்பட்டது. இளையராஜா புகழின் அதி உச்சநிலையிலிருந்த போது இந்த இணைவு ஏற்பட்டது. மெல்லிசைமன்னரின் விருப்பத்திற்காக இசைந்த இளையராஜா இந்த மாதிரியான ஓர் இணைவை நீண்ட காலமாக விரும்பியுமிருந்தார் எனபதை அவரே குறிப்பிட்டும் இருந்தார்.

எண்ணற்ற இனிய மெல்லிசைப்பாடல்களை இசையமைத்து குவித்த மாபெரும் கலைஞன் விஸ்வநாதன் தனது ரசிகனும் திறமைமிக்கவருமான இளையராஜாவுடன் இணைய விரும்பியதும் அதற்கு இளையராஜா இசைந்ததும் இரு மேதைகளின் பெருமைக்கும் ,பணிவுக்கும் எடுத்துக்காட்டாகும். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதென்றால் இளையராஜாவின் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாகும்.

இந்த இணைவு குறித்தும் அது பெற்ற வெற்றி பற்றியும் பின்னாளில் மெல்லிசைமன்னர் கூறும் போது " அது ஒரு ஆத்மார்த்தமான இணைவு " என்றும் பின்னாளில் வேறு சிலரும் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினார்கள் நான் அதை ஏற்கவில்லை என தெரிவித்தார்.

மெல்லத்திறந்தது கதவு படத்தில் இருவரும் இணைந்து நல்ல பாடல்களைத் தந்தார்கள்.கனியும் சுவையும் போல இரண்டறக்கலந்த அப்பாடல்களை விஸ்வநாதன் மெட்டமைக்க இளையராஜா வாத்திய இசையை அமைத்தார். கேட்பவர்களுக்கு உடனடியாக அவை இளையராஜா பாடல் போலத்தெரிந்தாலும் அதன் ஜீவன் மிக்க மெட்டுக்களை அமைத்தவர் விஸ்வநாதன் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். இருவரும் மெல்லிசையை அதிகம் கடைப்பிடிப்பதும், ஒன்றின் தொடர்ச்சியாய் மற்றொன்று இருப்பதால் இருவரின் இணைப்பும் மிக நேர்த்தியானதாக, ஆத்மார்த்தமானதாக அமைய காரணமாகியது.

கைதேர்ந்த இருமேதைகளின் இசையின் ஆழமிக்க ஒன்றிணைவுக்கும், இசையின் இனிமைக்கும் காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதும் மெட்டைக் குழப்பாத இனிய ஹார்மோனி இசையுமாகும். தனது முன்னோர்களின் இசையையும், அதன் அமைப்புகளில் இளையராஜாவுக்கிருந்த திளைப்பும் , ஞானமும் அதை பேராற்றலுடன் அந்த ஓட்டத்திலேயே எடுத்து செல்லும் கலா மேதமையுமாகும்.

அநாசாயமாகப் பாய்ந்து செல்லும் மெல்லிசைமன்னரின் மெட்டுக்களை தனது வாத்திய இசையால் மடக்கிப்பிடிக்கவும், அதையே விஸ்தரித்து மெட்டில் பொதிந்திருக்கும் உணர்ச்சி வேகங்களை வெளிப்படுத்தவும் சிந்தனை வெளிப்பாட்டில் மெல்லிசைமன்னருடன் ஒன்றித்து நிற்கும் இளையராஜாவால் மட்டுமே அது முடியும் என்பதை இந்த திரைப்படங்களின் பாடல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அது மட்டுமல்ல இருவருக்குமிடையே இருந்த அன்பும் புரிந்துணர்வும் இந்த இனிய இசையின் கூட்டணிக்கு மிகமுக்கியமானதாகும்.

மெல்லத்திறந்தது கதவு படத்தின் அனைத்துப் பாடல்களும் இருவரின் மேதமைக்கு எடுத்துக் காட்டாக இருந்ததது. அப்பாடல்கள் மட்டுமல்ல அடுத்தடுத்து இசையமைத்த சில படப்பாடல்களும் தனி சிறப்புமிக்கவையாக அமைந்தன.

செந்தமிழ் செல்வன் படத்தில் வரும் பாடல்கள்:

01 பாட்டு இசைப்பாட்டு - செந்தமிழ் செல்வன் 1994 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 02 குயிலே இள மாங்குயிலே - செந்தமிழ் செல்வன் 1994 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 03 கூடு எங்கே தேடி கிளி இரண்டும் - செந்தமிழ் செல்வன் 1994 - எஸ்.பி.பி + சித்ரா - இசை : விஸ்வநாதன் இளையராஜா 04 அடி கோமாதா - செந்தமிழ் பாட்டு 1992 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா " அடங் கொப்பரானே சத்தியமா நான் காவல்காரன் " என்ற காவல்காரன் பாடலை நினைவூட்டும்.

செந்தமிழ் பாட்டு படத்தில் வரும் பாடல்கள் 01 வண்ண வண்ண சொல்லெடுத்து - செந்தமிழ் பாட்டு 1992 - ஜிக்கி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 02 சின்ன சின்ன தூறல் என்ன - செந்தமிழ் பாட்டு 1992 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 03 அடி கோமாதா - செந்தமிழ் பாட்டு 1992 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா

இருவரும் இணைந்து இசையமைக்கும் முன்பே இளையராஜா தாய்க்கொரு தாலாட்டு[1985] படத்தில் "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்" புதிய பறவை [1964] படத்தின் தனிப் பாடலை " இளமைக்காலம் எங்கே என்று திரும்பும் இங்கே " என்று டூயட் ஆக மாற்றிக்காட்டினார். அது வாத்திய இசையின் ஜாலமிக்க எளிமைக்கும் ,இனிமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மெல்லிசை மன்னர்களின் படகோட்டி பாடலான " தொட்டால் பூ மலரும் " என்ற பாடல் Remix என்ற பெயரில் குத்திக் குதறியதை இசைரசிகர்கள் மறைந்திருக்கும் முடியாது. அதுஒரு பாடலை எப்படி அசிங்கம் செய்யலாம் என்பதற்கு இந்த வகை Remix ஐ உதாரணமாகக் கொள்ளலாம்.

1980 களில் இளையராஜா உச்சத்திற்கு வந்த போதும் மெல்லிசைமன்னரின் புகழ் மெல்ல மெல்ல குறைந்த போதும் அவரது இசையில் அருமையான பாடல்கள் வெளிவரத்தான் செய்தன. " கவிதை அரங்கேறும் நேரம் " , "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு " போன்ற பல பாடல்கள் ஆர்ப்பாட்டங்களில் மங்கியிருந்தாலும் இன்றும் அவை மெல்லிசையின் தரத்தில் உயரத்திலேயே நிற்கின்றன.

இளையராஜா தான் இசைத்துறைக்கு வருதற்கான காரணமே மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த " மாலைப்பொழுதில் மயக்கத்திலே " என்ற பாடல் தந்த பாதிப்பு என்றும் அவர்களின் இசை தனது நாடி நரம்புகளில் ஊறியிருக்கின்றது என்றும் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்.

சுருக்கமாகச் சொன்னால் எம்.எஸ்.விஸ்வநாதன் இளையராஜாவின் ஆதர்சபுருஷர்!

அந்த வகையில் மெல்லிசைமன்னர்களின் பாடல்கள் இளையராஜாவை பாதித்திருப்பது மட்டுமல்ல பாடல் அவரது இசைவெளிப்பாட்டு உத்திகளிலும் வெளிப்பட்டிருக்கின்றன. தனியே மெட்டுக்கள் சாயல்கள் மட்டுமல்ல வாத்திய அமைப்புகளிலும் அவை மறைமுகமாக ஊடுருவி நிற்கின்றன.

01 காற்று வந்தால் தலை சாயும் நாணல் - காத்திருந்த கண்கள் 1962 - பி.பி.எஸ் + சுசீலா = இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி A மாலை மயங்கினால் இரவாகும் - இனிக்கும் இளமை 1979 - பி.பி.எஸ்.-சைலஜா - இசை: இளையராஜா B முத்தம் போதாதே - எனக்குள் ஒருவன் 1985 - எஸ்.பி.பி - ஜானகி - இசை: இளையராஜா

பாடலுக்கிடையே தாலாட்டு அமைப்பை இணைப்பது ...

02 வீடுவரை உறவு - பாதகாணிக்கை 1962 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி A உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979 - எஸ்.பி.பி - இசை: இளையராஜா B காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள் 1985 - ஜெயசந்திரன் - இசை: இளையராஜா

03 தரை மேல் பிறக்கவைத்தான் - படகோட்டி 1964- டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி A கடலிலே எழும்பிற அலைகளைக் கேளடி - செம்பருத்தி 1992 - இளையராஜா - இசை இளையராஜா

இருவரது இசையில் உள்ள ஒற்றுமைகளை அதன் உள்ளோசைகளில் வெவ்வேறு கலைஞர்களின் இசைகளிலிருந்து எடுத்தாளும் சந்தங்களும் பாடல் வடிவ அமைப்புகளில் உள்ள நெருக்கமும் ஒன்றுக்குள் ஒன்று அகத்தூண்டுதல் பெற்று ஊடுருவிச் செல்வதையும் நாம் காண முடியும். பொதுவாக இந்த ஒப்பீட்டு முறையை நாட்டுப்புற இசை ஆராய்ச்சிகளிலும் நாம் காண முடியும்.

20ம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களாக விளங்கிய இந்தியாவின் மகாகவிகள் என்று போற்றப்படுகின்ற தாகூரும் , பாரதியும் சமகாலத்தவர்களாக இருந்த போதும் தம் வாழ்நாளில் சந்திக்கும் வாய்ப்பு பெறாதவர்கள்.

தமிழ் சினிமாவில் தமிழ் மரபிசையிலும், நவீன இசையிலும் தம் காலத்தின் அசைக்க முடியாத நாயகர்களாக தம்மை வளர்த்துக் கொண்டவர்கள் மெல்லிசைமன்னரும் இசைஞானி இளையராஜாவும். சமகாலத்து இசைமேதைகளான இருவரின் இந்த இணைப்பு இசைரசிகர்களுக்கு பேருவுகையாக அமைந்தது

இசையில் மெல்லிசைமன்னரின் பாதிப்பால் வளர்ந்த இளையராஜா யாரும் எண்ணிப் பார்க்க முடியாதவண்ணம் வாத்திய இசைமூலம் தனக்கென புதிய பாணியை அமைத்து மெல்லிசையின் பாதையையே மாற்றி அமைத்தார். இருவரும் பின்னாளில் சேர்ந்து இசையமைத்தாலும் இந்த இருவர் பற்றிய ஒப்பீடுகளும், விமர்சனங்களும் வெளிவரவும் செய்தன.

மேலைத்தேய இசையிலும் இருவரை இணைத்து அல்லது ஒப்பிட்டு பேசுவது வழக்கத்திலுள்ளது. உதாரணமாக ஹண்டேல் - பாக் என்று இரு இசைமேதைகளையும் மொஸாட் - பீத்தோவான் போன்றோர்கள் ஒப்பிட்டு பேசப்படுகின்றன. மிகச் சிறந்த இசை வழங்கியவர்களில் ஹண்டேல் - பாக் என்ற ஒப்பீட்டை எடுத்துக் கொண்டால் இருவரும் அதிசிறந்த கலைஞர்கள் எனக்கருதப்படுகின்றனர். இருவரும் அதி உச்ச இசையமைப்பாளர்கள் என்று கருதப்பட்டாலும் இருவரும் இருநிலைப்பட்ட இசையமைப்பாளர்களாகவும் இருந்தனர். பாக் முற்றுமுழுதாக மதம் சார்பான இசைக்கலைஞராகவும் , ஹண்டேல் மதம் சாராத இசைக்கலைஞராகவும் விளங்கினர். பாக் தேவாலயங்கள் சார்ந்து இயங்கியதும் ஹண்டேல் மதம்சாராத அரச நிகழ்வுகளுக்காகவும் இசை எழுதினார். அந்த வகையில் ஹண்டேல் ஒரு மதம் சார்பான இசையமைப்பாளர் அல்ல. மேற்கில் இசைவாணர்கள் மதம் சார்ந்தும் ,மதம் சாராத , கடவுள் நம்பிக்கையற்ற வகையில் இயங்கியதையும் காண்கிறோம்.

ஆனால் இந்திய இசையமைப்பாளர்கள் மிகுந்த தெய்வபக்தியுடையவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.! அந்த வகையில் விஸ்வநாதனும் இளையராஜாவும் விதிவிலக்கானவர்களுமல்ல. இங்கே தெய்வீகக் கடாட்சமிக்கவர்களாலேயே அது சாத்தியம் எனவும் நம்பப்படுகிறது.

பொதுவாக இசை என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு மனித மனங்களில் ஆழமான தாக்கத்தையும் , எழுச்சியையும் ஏற்படுத்துவதால் அது ஓர் தெய்வீக சக்தி என்பதாக நினைக்க வைக்கிறது. ஆனாலும் எந்தவித இசைப்பின்னணியுமற்ற குடும்பங்களிலிருந்து வந்த இந்த இரண்டு இசைமேதைகளும் தங்களது கடின உழைப்பாலும் முயற்சியாலுமே முன்னுக்கு வந்தார்கள் என்பதை இவர்கள் இசையமைத்த பாடல்கள் மூலம் நாம் அறிகின்றோம். எந்த ஒரு துறையிலும் தீவிர நாட்டமும் , ஆர்வமும் , முயற்சியும் , அதனுடன் பயிற்சியும் இருந்தால் யாரும் எந்தத்துறையிலும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த இரு இசைமேதைகளும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நிறைவாக …. விருது பெறுவதால் ஒரு கலைஞனின் பெருமை அளவிடப்படும் இன்றைய விசித்திர சூழ்நிலையில் ,அவரது திறமைக்கு கிடைக்க வேண்டிய குறிப்பிடத் தகுந்த அங்கீகாரமும் முக்கியமான விருதுகளும் பெறாமல் மறைந்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.அவர் இசையமைத்த பாடல்கள் சில தேசிய அளவில் விருதுகள் பெற்றாலும் அவருக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் விருதுகளுக்கு அப்பால் நல்லிசை ரகிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பவர் மெல்லிசைமன்னர்!

தனது படைப்புக்கள் பேசப்பட வேண்டும் என்றோ , விருகள் பெற வேண்டுமென்றோ முனைப்புக்காட்டாத அவர்,மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சினிமா இசை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைக்க முடியாத காலத்து மனிதராகவும் வாழ்ந்து மறைந்தார். அந்த ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டுமிருக்கிறது."உழைக்கத் தெரிந்தது , பிழைக்கத் தெரியவில்லை" என்பார்! .

அவரது பாடல்கள் எல்லாம் எம் ஜி ஆர் பாட்டு என்றும் , சிவாஜி பாட்டு என்றும் நாம் அடையாளம் கண்டு கொண்டாடினோம்! இசைப்பாரம்பரியமற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்தை நிகழ்த்திய மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழின் சகோதர மொழியான மலயாளம் தந்த ஈடு இணையற்ற இசையமைப்பாளனை தமிழ்த்திரையுலகம் தத்தெடுத்துக் கொண்டது.அதற்கு கைமாறாக அவர் தந்த இசைப்படைப்புகள் தமிழர்களை ,தமிழ்ப்பாடல்களை பிற மொழியினர் வியந்து பார்க்க வைத்தன. தமிழ்ப்பாடல்களைத் தலைநிமிர வைத்தன! தமிழ் திரையிசையைப் பொறுத்தவரையில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி கோலோச்சிய 1960 , 1970 கள் மிக முக்கியமான காலப்பகுதியாகும். திரை இசை வளர்ச்சியில் பின்வந்த தலைமுறையினரை அதிக பாதித்த நவீன இசைக்கலைஞர் என்றவகையில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.

தனது ஒப்பற்ற இசைத்திறனால் வளர்ந்து இசையின் இலக்கணமாக திகழ்ந்த , தனிப்பெரும் ஆளுமையான விஸ்வநாதனை முக்கிய காலகட்டத்தின் பிரதிநிதியாக காலம் கனிந்து தனதாக்கிக் கொண்டது. இசையமைப்பில் அவர் காட்டும் ஆர்வமும் , துடிப்பும் , உற்சாகமும் அவரது இறுதிக்காலம் வரை தொய்வின்றி இருந்தது. ஊரெல்லாம் உற்சாகமாகப் பாடித்திருந்த பழங்காலத்துப் பாணர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்ற எண்ணம் என்னுள் எழுவதுண்டு. " நியூஸ் பேப்பரைக் கொடுத்தாலும் விஸ்வநாதன் இசைமைப்பான் " என்று கண்ணதாசன் கேலியாக கூறினாலும் நம் காலத்து இசைப்பாணராகவே அவர் வாழ்ந்து மறைந்தார்.

பழங்காலத்து இசைப்பாணர்கள் போல எந்தவித சுமைகளுமற்ற சுதந்திர இசைப்பறவையாக வாழ வேண்டும் என்ற அவா அவர் மனதில் இருந்தது என்பதை அவர் பற்றி இசை ஆய்வாளர் வாமனன் எழுதிய குறிப்பொன்றில் பின்வருமாறு எழுதுகின்றார். இன்னொரு விஸ்வநாதன் உண்டு. திரை உலகை விரும்பாத விஸ்வநாதன் . இன்னொருஜென்மம் வேணும் .. புள்ள குட்டி எதுவுமே இல்லாம .. என் ஆர்மோனியம், நான். அவ்வளவுதான் இருக்கணும் .. ரோட்டுலே நான் ஆட்டுக்கு எந்தக்கவலையும் இல்லாம பாடிக்கிட்டே போகணும் ...

அவரது உடல் மறைந்தாலும் அவர் ஊறித்திளைத்த இசையும் அதிலிருந்து அவர் படைத்தளித்த அற்புதமான பாடல்களும் நம் நெஞ்சங்களை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. தலைமுறை தாண்டியும் அவரது மெல்லிசைப்பாடல்கள் இசை நிகழ்ச்சிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ராகத்தையும் செதுக்கிச் செதுக்கி அதில் உயிரைக் குடிக்கும் இசைவார்ப்புகளை நமக்கு விட்டு சென்ற மாமேதையை பாராட்ட வார்த்தைகள் போதவில்லை.

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்காத தெரியாதா " என்ற அதி உன்னதமான பாடலை நடபைரவி ராகத்தில் நமக்குத் தந்து நம்மை நெஞ்சுருக வைப்பது மட்டுமல்ல , இனிவரும் சந்ததிகளையும் உருக வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.

இசைவல்லாளன் எம்.எஸ்.விஸ்வநாதன் என்கிற மாமேதையின் பெயரும் காலங்களைக்கடந்து நிற்கும். “என்னுடைய நாடி, நரம்புகளிலெல்லாம் அவரது பாடல்கள் ஊறியிருக்கின்றன” என்று இசைஞானி இளையராஜா கூறியது வெறும் வார்த்தையல்ல!!

பல்லாயிரம் நல்லிசை ரசிகர்கள் மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.

முற்றும்.