Sunday 23 July 2017

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் : எட்டி உதைப்பதும் எகத்தாளமாகப் பேசுவதும்!

- கவிஞர் மகுடேசுவரன் 
 
 
 
 
நண்பர்களுடன் சுற்றுலா செல்கையில் பல்வேறு பொருள்களில் நாங்கள் கலந்துரையாடுவது வழக்கம். அவ்வாறு ஒருநாள் பேசப்பட்ட பொருள் தமிழ் நகைச்சுவை நடிகர்கள். தமிழ்த்திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் ஒரேயொருவர் பெயரைச் சொல்ல வேண்டுமென்றால் யாரைச் சொல்வீர்கள் என்பது கேள்வி. பலரும் பலரைச் சொல்கையில் நான் கவுண்டமணி பெயரைச் சொன்னேன். 
 
கவுண்டமணியின் நகைச்சுவையில் என்ன சிறப்பு என்று கேட்டார்கள். 
எப்போதும் நம்மை ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு பிறரைத் தாழ்த்திப் பேசிக்கொண்டிருப்போமே, அவ்விடத்திலிருந்து எழும் நகைச்சுவை அவருடையது, அதுதான் எல்லாருக்குமானது, அதனால்தான் அவர் சிறந்த நகைச்சுவை நடிகர் என்று கூறினேன். 
 
ஒரு பணக்காரன் இவ்வுலகையும் பிறரையும் எப்படி ஏளனமாகப் பார்ப்பானோ அதை பார்வையில்தான் ஒரு பிச்சைக்காரனும் பார்ப்பான். இருவரும் தம்மிடத்திலிருந்து பிறரை எள்ளலோடு காண்பதைத்தான் குணப்பாங்காகக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் மனித இயல்பும்கூட. பொதுமனிதப் பாங்காகிய அதை இறுக்கிப் பிடித்துக்கொண்டமைதான் கவுண்டமணி அடைந்த வெற்றிக்குக் காரணம். 
 
 
 
எட்டி உதைப்பதையும் எகத்தாளமாகப் பேசுவதையும் பிறர் கூறுவதைப்போல எளிமையாக விளங்கிக்கொள்ளக் கூடாது. உரிய வாய்ப்பு கிடைக்குமானால் நாம் பிறரை எட்டி உதைக்கவும் எடுத்தெறிந்து பேசவும் தயங்குவதேயில்லை. 
 
நகைச்சுவை நடிகர்களில் வேறு யார்க்குமே கிட்டாத ஓர் அரிய வாய்ப்பு கவுண்டமணிக்குக் கிட்டியது. ஏறத்தாழ நாற்பதாண்டுகள் அவர் தமிழ்த்திரையைக் கட்டி ஆண்டுவிட்டார். அவருடைய நகைச்சுவைக்கு மூன்று தலைமுறைச் சுவைஞர்கள் இருக்கிறார்கள். நகைச்சுவை நடிகராக இவ்வளவு பெருங்காலம் நின்று நீடித்தவர் கவுண்டமணியாகத்தான் இருக்க முடியும். 
 
பதினாறு வயதினிலே திரைப்படம்தான் அவர்க்கு முதற்படம் என்று ஒரு கணக்குக்கு வைத்துக்கொள்ளலாம். அதில் அவருடைய இயற்கையான தோற்றத்தில் தோன்றினார். முதற்படத்திலேயே தம் குரலாட்சியால் பார்வையாளர்களையும் சொல்ல வைத்தார் : "பத்த வைச்சிட்டியே பரட்டை...". அப்போதைய உடல் தோற்றத்தை வைத்துப் பார்க்கையில் அவர்க்கு நடுத்தர வயது இருக்கலாம் என்றே தோன்றுகிறது. 
 
வாழ்வின் பிற்பாதியில் வெற்றி கண்டவர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. அவர்களுக்கு ஓய்வுப்பேறு என்பதே இராது. கவுண்டமணி உள்பட்ட பலர்க்கும் அஃதே நடந்தது.
 
 
 
 பதினாறு வயதினிலே திரைப்படத்தை அடுத்து கிழக்கே போகும் இரயில். அதில் நாயகியின் அக்கா கணவர் பாத்திரம். "பாஞ்சாலி... நான் உன்னத் தூக்கிவுடுவனாம்... நீ அதை எடுத்துக் குடுப்பியாம்..." என்று நாயகியைப் பரண்மீது ஏற்றிவிடும் வேடம். அதற்கடுத்து வந்த புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் அமாவாசை என்ற பெயரில் ஊர்த்தலைவரின் அடிப்பொடியாக உடனொட்டி வரும் பாத்திரம். "என்ன அமாவாசை ?" என்றதும் "ஐயா... உள்ளதச் சொல்றீங்க..." என்று ஒத்தூதும் வசனம். இம்மூன்று படங்களும்தான் கவுண்டமணி என்னும் நடிகரை மக்கள் மனத்தில் பதிய வைத்தவை. 
 
பாரதிராஜா அறிமுகப்படுத்திய நகைச்சுவை நடிகர்கள் பெரும்பாலும் சோடை போனதில்லை. கவுண்டமணியை நன்கு வெளிச்சம்போட்டுக் காட்டிய படம் 'சுவரில்லாத சித்திரங்கள்.' நாயகி வீட்டுக்கு எதிரிலிருக்கும் ஒரு பெட்டிக்கடைத் தையற்காரர். அக்கடையைச் சாக்காக வைத்துக்கொண்டு அங்கே வரும் நாயகனிடமே தன் பராக்கிரமங்களைக் கூறுகின்ற வெள்ளந்தி. "அந்தப் பொண்ணுக்கு என்மேல ஒரு கண்ணு" என்று கதைவிடுபவர். 
 
பாக்யராஜுக்குத் தொடக்கக் காலங்களில் அறைத்தோழராக இருந்தவர் கவுண்டமணி. கல்லாப்பெட்டி சிங்காரம், கவுண்டமணி இருவரில் யாரைத் தம் படங்களில் நகைச்சுவை வேடத்திற்குத் தேர்வது என்ற குழப்பம் பாக்யராஜுக்கு வந்திருக்கிறது. முதிர்ச்சியின் அடிப்படையில் கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கே அவ்வாய்ப்புகளை வழங்கினார் பாக்யராஜ். 
 
பிறகு பாக்யராஜின் படங்களில் கவுண்டமணி நடிக்கவில்லை.  அவர்தான் கவுண்டமணி என்று நான் அறிந்துகொண்டது மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில்தான். கவுண்டமணி சின்ன பண்ணையாக நடித்த அப்படத்தில் செந்திலுக்கும் ஒரு வேடம். 
 
மம்பட்டியானிடம் அடிபட்டு கிழிகோலத்தில் வரும் சின்ன பண்ணையை ஒரு காவலர் விசாரிப்பார். "யோவ்... யாருய்யா நீ ?" "நான் யாருன்னு எனக்கே தெரியலயேப்பா..." "அதெல்லாம் இருக்கட்டும்... மூஞ்சில என்னய்யா சோறு ?" "அடிக்கணும்னு நினைக்கறவன் கையைக் கழுவிட்டு வந்தா அடிப்பான்... நினைச்சான் அடிச்சான்... முடிஞ்சு போச்சு..." இப்படம் வெளியாகையில் நான் இரண்டாம் வகுப்புச் சிறுவன். கவுண்டமணியின் இந்நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரித்தோம். இன்றைக்கு மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தைப் பற்றி ஒருவர்க்கும் தெரியாது. ஆனால், எண்பதுகளின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று அது. அப்படத்தில் இடம்பெற்ற எல்லாருமே பிற்பாடு பெரிய வளர்ச்சியை அடைந்தார்கள். 
 
 இடையிடையே ஆகாயகங்கை, குடும்பம் ஒரு கதம்பம் போன்ற படங்களில் பல்வேறு வேடங்களில் கவுண்டமணி நடித்தார். 
 
அவற்றிலெல்லாம் அவருடைய முழுத்திறனுக்குப் போதிய வாய்ப்புகள் இல்லை. கவுண்டமணியை இன்றுள்ள கவுண்டமணியாக மாற்றியதில் முதல் அடியை எடுத்து வைத்தவர் இயக்குநர் சுந்தரராஜன். இருவரும் கோவை மாவட்டத்தவர்கள். சுந்தரராஜன் உருவாக்கிய நகைச்சுவைப் பாத்திரங்களை மேலும் ஒரு சுற்று வனைந்தெடுப்பதில் கவுண்டமணி வெற்றிபெற்றார்.
 
 
வாடகை வீட்டு முதலாளியாகப் "பயணங்கள் முடிவதில்லை" திரைப்படத்தில் ஒரு வாய்ப்பு. "இந்தச் சென்னை மாநகரத்திலே..." என்னும் அவருடைய இழுப்பே ஒரு நகைச்சுவை. 
 
அடுத்த வந்த படம்தான் கவுண்டமணியைக் கவுண்டமணியாக்கியது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா. "டேய்... எனக்கிருக்கிற அறிவுக்கும் அழகுக்கும் நான் அமெரிக்காவுல பொறந்திருக்க வேண்டியவன்டா... என் நேரம் இந்த ஊர்ல வந்து பழனியப்பன் சைக்கிளுக்குப் பஞ்சர் ஒட்டறேன்..." என்று அவர் கிளப்பிய நகைச்சுவைப் புயற்காற்று பிறகு ஓயவேயில்லை. 
 
அதற்கடுத்த படம் 'நான் பாடும் பாடல்'. பாலுக்குக் காசு கேட்கும் பால்காரனிடம் "பாதிதான் கொடுப்பேன், மீதியை முனிசிபாலிடில கொண்டுபோய்க் கட்டிடறேன்..." என்று தண்ணீர்ப் பாலுக்குச் சொல்கிற அந்த எடுத்தெறிவும் எகத்தாளமும் பிறகு குறையவேயில்லை. கவுண்டமணி தம் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டம் கரகாட்டக்காரனுக்குப் பிறகு தொடங்குகிறது.

Saturday 15 July 2017

மகத்தான படங்களை இயக்கிய மகேந்திரன்!

இயக்குநர் மகேந்திரனைப் பற்றிப் பேசாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய எவ்வோர் உரையாடலோ கட்டுரைத் தொடரோ முழுமை பெற்றுவிடாது. தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர் மகேந்திரன். அவருடைய படங்கள் வெளியான காலகட்டத்தில் அவற்றின் பொருண்மை குறித்து தமிழ்ச் சமூகத்தில் போதுமான உரையாடல்கள் நிகழ்ந்தனவா என்பது நமக்குத் தெரியவில்லை. 
 
 



 
 
இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அவர் முனைந்து செயல்பட்ட காலத்திற்குப் பிறகு அவருடைய படங்களின் மதிப்பு மேன்மேலும் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஏன் மகேந்திரன் இன்றியமையாத ஓர் இயக்குநராக அறியப்படுகிறார் ? அவரைவிடவும் சிறப்பாக இயக்கியவர்கள் பலர் இருக்கின்றார்களே. ஆம், மகேந்திரனை விடவும் சிறப்பான இயக்குநர்கள் இருக்கிறார்கள்தாம். ஆனால், இங்கே மகேந்திரன் முன்னிற்கவில்லை. மகேந்திரன் இயக்கிய படங்கள் முன்னிற்கின்றன. 
 
கதை மாந்தர்களின் ஆழ்மனத்தைக் காட்சிப்படுத்தி, அதையே கலையாக்கி அவர் தம் படங்களில் வைத்துச் சென்றுள்ளார். கதை மாந்தர்களின் மனங்களை நமக்கு அடையாளம் காணத் தெரிந்துவிட்டது. 
 
 
 
 எழுதத் தெரிந்தவர் இயக்குநராய் வடிவெடுப்பதில் பலப்பல அருமைகள் வாய்க்கும் என்பதற்கு மகேந்திரன் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு கதைக்கு என்ன நியாயம் செய்ய வேண்டும் என்பதுதான் இயக்குநரின் வேலையே. தொடக்கத்தில் பல்வேறு படங்களுக்குக் கதையும் உரையாடலும் எழுதித் தந்தவர் மகேந்திரன். 
 
சிவாஜி கணேசனின் உரக்கப் பேசும் உரையாடல்களுக்குப் பெயர் பெற்ற தங்கப்பதக்கம் படத்திற்கு எழுதியவர். அவ்வரிசையில் ரிஷிமூலம், ஆடுபுலி ஆட்டம், காளி, பகலில் ஒரு இரவு என எண்ணற்ற படங்கள்.
 
 'முள்ளும் மலரும்' மூலம் இயக்குநர் ஆனார். முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நண்டு, மெட்டி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் அவருடைய இயக்கத்தில் வரிசையாக வந்தன. 
 
 
 
ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் தரத்திலானவை. தற்காலத்தினர் இப்படங்களைத் தவறவிடாமல் பார்க்க வேண்டும். ஓர் எழுத்தாளராக மகேந்திரன் தம் படங்களை இயல்பு குலையாமல் எடுப்பதற்குத்தான் தீர்மானம் செய்திருப்பார். கதை மாந்தர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே உரைத்தல் என்பதே அவருடைய இயக்கம். வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கிடக்கும் பாத்திரங்களின் எளிய தோற்றங்களையும், நினைப்புக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளியையும், துயரத்தின் கனத்த அமைதியையும், கையறு நிலையில் வெறுமனே பார்த்து நிற்றலையும் அவர் காட்சிப்படுத்துவதன் வழியாகவே பார்வையாளர்களுக்குள் ஒரு கலையுணர்ச்சியை வருவிக்கிறார். அவற்றையே அவர் தம் திரைமொழியாக ஆக்கிக்கொண்ட பிறகு மேலும் இரண்டு வித்தகங்கள் அவர் படங்களுக்குத் தோள்கொடுக்கின்றன. ஒளிப்பதிவும் இசையமைப்பும்தாம் அவ்விரண்டு. 
 
மகேந்திரனின் படங்களை இளையராஜாவின் இசை கலைச்செப்பம் செய்து தந்தது. முள்ளும் மலரும் பின்னணி இசையில் இளையராஜா விட்டுச் சென்ற மௌனப் பொழுதுகள்தாம் பார்வையாளர்களைத் திரையை நோக்கி உற்றுப் பார்க்க வைத்தன. அந்த உற்று நோக்கலே உணர்வுகளைக் கட்டிவிட்டது. 
 
உதிரிப் பூக்களின் கருவிசை (தீம் மியூசிக்) இளையராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலும் இசைக்கே முதலிடம். மகேந்திரன் படங்களில் இளையராஜா செய்து காட்டிய வித்தகங்கள் என்றே தனிப்பொருளில் எழுதிச் செல்லலாம். பின்னணி இசையோடு நிறுத்திக்கொண்டோம், பாடல் வளங்களை நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம். 'சங்கம் காணாதது தமிழும் அல்ல... தனை அறியாதவள் தாயும் அல்ல...' என்பதுதான் தாய்மைக்கே இலக்கணம். 
 
மகேந்திரன் படங்களுக்கு வாய்த்த இன்னொரு வித்தகம் ஒளிப்பதிவு. முள்ளும் மலரும் பாலுமகேந்திராவின் கலைவண்ணம். கிட்டத்தட்ட அப்படத்தைத் தம் படம்போன்ற மொழியில் பாலுமகேந்திரா கையாண்டிருப்பதைக் காணலாம். உதிரிப் பூக்களில் அசோக்குமார். தமிழ்த் திரையுலகின் புகழ் பாடப்படாத நாயகர்களின் பட்டியலில் அசோக்குமாரைச் சேர்க்கலாம். மகேந்திரன் எடுக்க நினைத்தது அசோக்குமாரின் கோணத்தில் அருமையான சுடுவுகளாக அமைந்தன. 
 
இன்றைக்கும் உதிரிப் பூக்கள் படமாக்கப்பட்ட மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுத் திக்கம் நான் அடிக்கடி செல்வதுண்டு. அந்தப் பகுதியே உதிரிப்பூக்கள் நிகழ்ந்த களமாகத்தான் எனக்குத் தென்படுகிறது. பெருவெள்ளம் சுழித்தோடும் பவானி ஆற்றங்கரையில் தாய்தந்தையற்ற இரண்டு மழலைச் செல்வங்கள் நடந்து செல்வதைப்போன்ற காட்சிப்பிழை அங்கே ஏற்படுவதுண்டு. அருமையாய் எடுக்கப்பட்ட எண்ணற்ற தமிழ்ப்படங்கள் வெற்றி பெறாமல் தோற்றுப் போயிருக்கின்றன. அதற்கு எதைக் காரணம் காட்டுவது ? கடவுளின் இருப்பு இல்லாமையைப் போன்றே விடை தெரியாத ஒன்று அது. அப்படித் தோற்றுப் போன படங்களில் தலையாயது என்று மகேந்திரனின் 'பூட்டாத பூட்டுகள்' படத்தைத்தான் சொல்வேன். மகேந்திரன் எடுத்த எந்தப் படத்தையும் விட்டுக்கொடுப்பேன். 
 
பூட்டாத பூட்டுகளை என்னால் விட்டுக்கொடுக்கவே இயலாது. அது எழுத்தாளர் பொன்னீலனின் கதை. திருமணமான பெண்ணொருத்தியின் மனத்தை அவ்வூர்க்கு வரும் ஓர் இளைஞன் கவர்ந்துவிடுவான். பிறகு ஊரைவிட்டு வெளியேறுவான் அவ்விளைஞன். தானுற்ற உணர்வுகளை உண்மையென்று நம்பும் அப்பெண் தன் வீட்டைத் துறந்து அவ்விளைஞனின் வீட்டுக்கே சென்று நிற்பாள். அங்கே அவளுக்கு வரவேற்பிருக்காது. இளைஞனும் புறக்கணிப்பான். "இங்கே எதுக்கு வந்தே ?" என்றுதான் கேட்பான். "நம்மப் பத்தி ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு. இனிமே உங்களோட வாழ்றதைத்தவிர வேற வழியே இல்லை" என்பாள் அவள். 
 
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்த முடியுமா ? பழகினோம் கொண்டோம்னா அது வேற விசயம். முதல்ல ஊர் போய்ச் சேரு... உன்னோட நிக்கறத மத்தவங்க பார்த்தாங்கன்னா என் பேரு கெட்டுப்போயிடும்..." என்பான் அவன். உயிரைத் துறக்கும் வலிவற்ற அப்பெண் தன் கணவனிடமே திரும்பிவிடுவாள். ஓரளவுக்கு நினைவிலிருந்து எழுதியுள்ளேன், இந்தக் கதையை மகேந்திரனின் இயக்கத்தில் ராஜாவின் பின்னணியிசையில் எண்ணிப் பாருங்கள். 
 
மகேந்திரன் எழுத்தாளர்களின் ஆக்கங்களிலிருந்து ஓரிழையை எடுத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர். கடைசியாக அவர் எடுத்த சாசனம் திரைப்படத்திற்கும் கந்தர்வனின் சாசனம் கதைக்கும் ஏதொரு தொடர்பையும் காண முடியவில்லை. அவர் ஒரு கதையில் தோன்றும் பாத்திரங்களால் கவரப்படுகிறார். அவர்களைக்கொண்டு தமக்கான திரைக்கதையை வடித்தெடுக்கிறார். நண்டு என்னும் படம் மட்டும் சிவசங்கரியின் எழுத்தை ஓரளவு ஒட்டியதாக அமைந்திருக்கக்கூடும். நம் கதைக் களஞ்சியங்களில் அவ்வளவு மனிதர்கள் நகமும் தசையுமாக நடமாடுகிறார்கள். அவற்றில் பட்டு நூலெடுத்து வித்தை செய்யும் மாபெரும் கலைஞராக மகேந்திரன் ஒருவரே தென்படுகிறார்.