Monday 25 May 2015

சமந்தாவின் கூச்சத்தை போக்கிய ஹீரோக்கள்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த பத்து எண்றதுக்குள்ள’படம் விரைவில் வெளியாகவுள்ளது.


 
அடுத்து, வேல்ராஜ் இயக்கும் வேலை இல்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இரண்டு தமிழ் படங்களும் கைவசம் உள்ளன. 
 
இந்நிலையில், தான் நடனம் கற்றது குறித்து சமந்தா கருத்து வெளியிட்டார்.
 
என் சினிமா வாழ்க்கை நல்லபடியாக போகிறது. இடையில் சிறிது ஓய்வு எடுத்தாலும் பட வாய்ப்புகள் குறையவில்லை. 
 
கதாநாயகர்களால் தான் நான் நடனம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் எனக்கு கூச்ச சுபாவம் இருந்தது. நான்கு பேர் சேர்ந்து இருந்தால் அந்த இடத்துக்கு போக பயப்படுவேன். பாடசாலை ஆண்டு விழாவில் நடனம் ஆடும் படி ஆசிரியை வற்புறுத்தினார். நிறைய ஆட்கள் பார்ப்பார்களே என்ற கூச்சத்தால் மறுத்து விட்டேன். அந்த கூச்சமும் பயமும் சினிமாவுக்கு வந்ததும் போய் விட்டது. 
 
படப்பிடிப்பு அரங்கில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இப்போது நடனம் ஆடுகிறேன். முதலில் எனக்கு ஆட வரவில்லை. பெரிய கதாநாயகர்களிடம் இருந்து நடனம் கற்று கொண்டேன் என சமந்தா கூறினார்.

மாஸ் என்கிற மாசிலாமணி - கேலிக்குள்ளாகும் வரிச்சலுகை

திமுக ஆட்சிக் காலத்தில் திரைத்துறையினரையும், அவர்களை சார்ந்து இயங்கும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில், தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு 30 சதவீத கேளிக்கை வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஒரு உத்தரவை அப்போதைய முதல்வர் கருணாநிதி பிறப்பித்தார்.
 
 
 
அந்த அறிவிப்பு வெளிவந்தவுடன், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற படத்தின் பெயர், உனக்கும் எனக்கும் என்று சுருங்கியது. ஜில்லுன்னு ஒரு காதல் சில்லுன்னு ஒரு காதலானது. எது தமிழ்? எவையெல்லாம் தமிழ் என்பது குறித்து அந்த அறிவிப்பு வெளியான போதே தடுமாற்றம் உருவானது. எம்டன் மகன் என்ற பெயரை எம் மகன் என்று மாற்றினர். எம்டன் என்பது இரண்டாவது உலகப்போர் நேரத்தில் சென்னையில் குண்டு வீசிய ஜெர்மன் கப்பலின் பெயர். அதை எப்படி தமிழ்ப்படுத்த முடியும்?

பெயர் சொற்களை அப்படியே பயன்படுத்த வேண்டும் மாற்றக் கூடாது என்பதே விதி. ஜெர்மன் என்பதும், அமெரிக்கா என்பதும், லெனின் என்பதும், மைக்கேல் என்பதும், டாவின்சி என்பதும் எப்படி மொழிக்கேற்ப மாற்ற முடியாதோ அதேபோல்தான் எம்டன் என்பதும். ஆனால், எம் மகன் என்று மாற்றினால்தான் வரிச்சலுகை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறியதால் எம்டன் மகன் எம் மகனானது.
 
இந்த பெயர்ச்சொல் பிரச்சனை இன்றும் தொடர்கிறது. வில்லன் என்பது ஆங்கிலச் சொல், வரிச்சலுகையில் பிரச்சனை கிளம்பும் என்பதால், மல்யுத்தம் செய்பவன் மல்லன், வில் யுத்தம் செய்பவன் வில்லன். ஆக, வில்லன் என்பது தமிழ்ச் சொல்தான் என்று உத்தம வில்லன் படத்தில் வசனமே வைத்திருந்தார் கமல்.  
 
கருணாநிதியின் பேரன்களில் ஒருவரான துரை தயாநிதி தயாரித்த படத்துக்கு குவார்ட்டர் கட்டிங் என்று பெயர் வைத்தார். அது ஆங்கிலச் சொல், வரிச்சலுகை கிடைக்காது என்பது அனைவருக்குமே தெரியும். படத்தை தணிக்கைக்கு அனுப்பும்வரை குவார்ட்டர் கட்டிங் என்பதை விளம்பரப்படுத்திவிட்டு, கடைசி நேரத்தில் வரிச்சலுகைக்காக படத்தின் பெயரை வ என்று மாற்றினர். வ -வின் கீழே கேப்ஸனாக கொட்டை எழுத்தில், குவார்ட்டர் கட்டிங். பெயர் தமிழில் இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் விதியே தவிர, கேப்ஷன் ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லையே?

இந்த மெகா சைஸ் ஓட்டையை திரைத்துறையினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
 
வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் மாஸ் படத்தின் பெயரை மாஸ் என்கிற மாசிலாமணி என்று நேற்றுமுதல் மாற்றியுள்ளனர். மாஸ் ஆங்கிலம். வரிச்சலுகை கிடைக்காது. ஆனால், வெங்கட்பிரபுவோ, மாசிலாமணி என்ற கதாநாயகனின் பெயர் சுருக்கம்தான் மாஸ், அதனால் அது தமிழ்தான் என்று விளக்கம் தந்தார். வரிச்சலுகை தருகிறவர்களை திருப்தி செய்ய அது போதவில்லை. அதனால், மாஸ் என்கிற மாசிலாமணி என்று படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.  
 
விளம்பரங்களில் இந்தப் பெயர் மாற்றத்தை நீங்கள் லென்ஸ் வைத்துதான் தேட வேண்டும். மாஸ் என்பதை பூதாகரமாக அச்சிட்டு அதன் கீழே யாருக்கும் தெரியாத அளவில், என்கிற மாசிலாமணியை அச்சிட்டிருக்கிறார்கள். விளம்பரங்களில், கன்டிஷன்ஸ் அப்ளை என்பதை மட்டும் கண்ணுக்கு தெரியாத சின்ன எழுத்துக்களில் குறிப்பிடுவது போல. 
 
மாஸ் என்பது பார்வையாளர்களின் மனதில் மாஸ் என்ற ஆங்கிலச் சொல்லாகவே பதியவைக்கப்பட்டுள்ள நிலையில், வரிச்சலுகைக்காக அரசின் உத்தரவு பகிரங்கமாக கேலி செய்யப்பட்டுள்ளது.
 
சினிமா மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் இதுபோன்ற விதி மீறில்களுடனே அரசு எந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நோட்டீஸ் ஒட்டாதீர் என்ற அரசுப் பேருந்தின் அறிவிப்பின் மீதே போஸ்டர்கள் ஒட்டுவதில்லையா?
 
மக்கள்தான் அரசு என்ற அடிப்படையில், இதுபோன்ற செயல்களால் நம்மை நாமே கேலி செய்து கொள்கிறோம். மேலும், நீதி, நியாயம், நேர்மை என்றெல்லாம் திரையிலும், திரைக்கு வெளியேயும் ஆவேசம் கொள்ளும் நாயகர்கள் இது குறித்தெல்லாம் வாயே திறப்பதில்லை என்பது முக்கியமானது.

கேன்ஸின் உயர்ந்த விருதை வென்ற முதல் ஈழத் தமிழர் படம் "தீபன்"

பாரிஸ்: கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் உயரிய விருதான தங்கப் பனை விருதை வென்றுள்ளது ஈழத் தமிழர்களின் அவல வாழ்வை எடுத்துக் கூறும் தீபன் திரைப்படம்.ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை முறையாக பதிவு செய்த முதல் ஐரோப்பியத் திரைப்படம் இது. 
 
 
 
இயக்கியிருப்பவர் ஈழத் தமிழர் அல்ல மாறாக பிரான்சின் பிரபல திரைப்பட இயக்குனர் ஜக்குவாஸ் ஓடியேட். ஈழத்தமிழரின் அவல வாழ்வியலைக் கூறும் திரைப்படம் ஒன்று உலகின் மிகப்பெரிய விருதுக்குத் தேர்வாகியிருப்பது இதுவே முதல்முறையாகும். 
 
 படத்தில் நாயகனாக ஜேசுதாசன் அந்தோணிதாசன், கதையின் நாயகியாக காளிஸ்வரி சீறிநிவாசன், சிறுமியின் வேடத்தில் கிளாடின் விநாசித்தம்பி நடித்திருந்த இந்தப் படம் பிரான்ஸ் நாட்டிற்கு அகதியாக தஞ்சம் கோரி செல்லும் மூன்று தனித் தனி ஈழத் தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக படம் காட்சிபடுத்தப் பட்டிருந்தது. 
 
பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் மூன்று பேரும்( நாயகன், நாயகி ,மற்றும் சிறுமி ) தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள் அங்கு அவர்கள் படும் அவலங்கள் மற்றும் துயரங்களை வலியுடன் எடுத்துக் கூறுகிறதுதீபன்.
 
இலங்கைத் தமிழர்களை பற்றி துணிச்சலாக ஒரு படம் எடுத்து அவர்களின் உண்மை வலிகளை பதிவு செய்ததற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ்.. பிற நாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் மனநிலை அவர்களின் வாழ்க்கை முறை பற்றி விரிவாக எடுத்துக் கூறிய இந்தப் படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பல முன்னணி விமர்சனகர்கள் படத்தைப் பார்த்து விட்டு அதில் நடித்தவர்களையும் படத்தையும் பெரிதும் பாராட்டியது குறிப்பிடத் தக்கது. 
 
தீபனுக்கு கிடைத்த விருது பல நல்ல படங்களை உலக சினிமாவிற்கு கொண்டுவர வழிவகுக்கட்டும்..

Thursday 21 May 2015

டி.ராஜேந்தர் மீது அடுக்கடுக்காகப் புகார் சொல்லும் பாண்டிராஜ் தரப்பு.

இதுநம்மஆளு படத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று இயக்குநர் பாண்டிராஜ் மீது டி.ராஜேந்தர் புகார் செய்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால் பாண்டிராஜோ அவர்கள் படமெடுக்கப்பாடலையும் படப்பிடிப்பு நடத்த பணத்தையும் கொடுத்தால் உடனே படத்தை முடித்துத் தரத்தயார் என்று சொல்லியிருக்கிறார்.



உண்மையில் என்னதான் நடக்கிறது? என்று பார்த்தால், தயாரிப்பாளரான டி.ராஜேந்தர் மீது அடுக்கடுக்கான புகார்கள் சொல்லப்படுகின்றன. இந்தப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துத் தர ஒப்புக்கொண்டு படத்தைத் தொடங்கியிருக்கிறார் பாண்டிராஜ். அப்போதே தமிழில் எடுக்கும் போது தெலுங்கிலும் எடுக்கலாம் என்று சிம்புவும் பாண்டிராஜூம் முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் தமிழுக்கு மட்டுமின்றி தெலுங்குக்கென்று தனியாகப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் பாண்டிராஜ், அதற்குத் தனியாகப் பணம் எதுவும் தரவில்லையென்பதால் அதில் பாண்டிராஜூக்குப் பல இலட்சங்கள் அதிகப்படியான செலவு ஏற்பட்டிருக்கிறதாம். அந்தப்பணத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் படப்பிடிப்புக்குப் பணம் கேட்டால் அதற்கும் பணம் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் மொத்தம் ஆறுபாடல்களாம். அவற்றில் மூன்றுபாடல்களை மட்டுமே குறளரசன் போட்டுக்கொடுத்திருக்கிறார். இன்னும் மூன்றுபாடல்கள் கொடுக்கவே இல்லையாம். அதைக் கொடுத்தால் தான் படப்பிடிப்பு நடத்தமுடியும் என்று இயக்குநர் தரப்பில் சொல்லப்படுகிறது.

2014 மே 27 அன்று இந்தப்படத்தின் டப்பிங் தொடங்கியது என்று பசங்கபுரொடக்ஷனஸ் டிவிட்டரில் இருக்கிறது. நயன்தாரா டப்பிங் பேசிக்கொண்டிருப்பது போலப்படமும் இருக்கிறது. அப்போது தொடங்கிய டப்பிங்கில் படத்தில் நடித்த எல்லோரும் பேசிவிட்டார்களாம். இன்னும் சிம்பு மட்டும் பேசவில்லை என்று சொல்லப்படுகிறது. சிம்புவுக்காகப் படமுறை டப்பிங் தியேட்டரை ஒப்பந்தம் செய்து வைத்துக் காத்திருப்பார்களாம் அவர் வரமாட்டாராம். அதனால் வெட்டியாகப் பணம் கொடுத்துவிட்டு வருவார்களாம். இப்படிப் பலமுறை நடந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இருக்கிறதென்று சொல்லி நயன்தாராவிடம் தேதி வாங்குவார்களாம். டி.ராஜேந்தர் பணம் தராததால் படப்பிடிப்பு நடத்தமுடியாது என்பதால் அவரிடம் வாங்கிய தேதிகள் வீணாகுமாம். இப்படி ஐந்துமுறை நடந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

டி.ராஜேந்தர் இப்போது எல்லாவற்றிற்கும் சோதிடம் பார்க்கத் தொடங்கிவிட்டார் என்றும் அதன் காரணமாகவே இந்தநாளில் படப்பிடிப்பு நடத்தினால் ஆகாது என்பதால் பணம் தாராமல் விட்டுவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

பாண்டிராஜ் ஒரு படத்தைத் தொடங்கினால் ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள் முடித்துவிடுவார் என்பதுதான் அவருடைய முந்தைய படங்களில் நடந்திருக்கிறது. இதுநம்மஆளு படம்தான் அவருக்கு மிகவும் தாமதமான படமென்றும் சொல்கிறார்கள். இந்தப்படத்தைத் தொடங்கிப் பல மாதங்கள் கழித்துத் தொடங்கப்பட்ட ஹைகூ படத்தின் படப்பிடிப்பையே அவர் முடித்துவிட்டார். அதற்கடுத்து அவர் விஷால் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கப்போகிறார் என்றவுடன்தான் இந்தப்படத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று டி.ராஜேந்தர் வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

எல்லாத் தவறுகளையும் தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு டி.ராஜேந்தர் எப்படி எங்கள் மீது புகார் தரமுடியும் என்று பாண்டிராஜ் தரப்பில் கேட்கப்படுகிறது. படத்தைப் பற்றி மிகநல்லவிதமான கருத்து திரையுலகில் இருக்கிறது. எனவே படம் தயாராகி வெளியே வந்தால் பாண்டிராஜ் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்குமே மிகநல்லபெயர் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

ஏன் இந்த பேய் மோகம்!

சமீபகாலமாக ஹீரோக்கள் ஆதீத ஆர்வம் காட்டி வருவது பேய்க்கதைகளில்தாம். சந்திரமுகியில்  ரஜினி செவ்வனே துவக்கி வைத்த இந்தப் பாதையில் தற்போது பெரும்பாலான ஹீரோக்கள் வரிசை கட்டத் துவங்கிவிட்டார்கள்.சரி பேய்ப் படங்களை அந்த அளவிற்கு ரசிக்கிறார்களா என்றால் ‘காஞ்ஜூரிங்’ படத்தையே கப்சா விடுறாங்க பாஸ் ரேஞ்சுக்கு சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் கலாய்க்க ஆரம்பித்து விட்டது.



என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமாவுக்கு? சிம்பிள் பட்ஜெட், ஒரு பங்களா, லைட் மேன் செலவு கூட குறைவுதான். வெறும் 4 பேர் கொண்ட குழுவை வைத்துக்கொண்டே இரண்டு மணி நேரப் படத்தை ஓட்டி விடலாம். இதுவே முதல் காரணம் என்கிறார் தமிழ் சினிமாவின் முக்கியஸ்தர் ஒருவர்.சரி பேய் என்பதே நம்மை சீட்டில் உறைய வைக்க எடுக்கப்படும் படங்கள் தான். ஆனால் அந்த வகையில் கடைசியாக வெளியான ’ஈவில் டெட் 2013’, ‘அன்னாபெல்’, ’ஓஜா’ என பல ஹாலிவுட் படங்களே அதில் பல்புதான் வாங்கியது. நமக்குத் தெரிந்து நம்மைச் சிறிதே ஆட்டிய படங்கள் ‘எக்ஸார்சிஸ்ட்’, ‘க்ரட்ஜ்’;’தி ரிங்’, ‘இட்’ , என மிகச்சில படங்களே உள்ளன. அந்தப் படங்களையும் இப்போது டிவிகளில் பார்க்கையில் சிரிப்பு தான் வருகிறது.

இவர்களைப் பார்த்து பாடம் கற்றார்களோ என்னவோ காமெடி ட்ராக்கில் பேயை வைத்து கிண்டல் செய்ய துவங்கிவிட்டார்கள் கோலிவுட் வாசிகள். தொட்டா பேய் வரும், கட்டிப்பிடிச்சா பேய் வரும், இப்படிப் பேய்கள் பல விதம். முன்பெல்லாம் பேய்ப் படங்கள் என்றாலே புதுமுக நடிகர்கள் மட்டுமே ஹீரோக்களாக வருவார்கள். பின்னர் நிழல்கள் ரவி, மோகன் என படையெடுத்தார்கள். ’சந்திரமுகி’ மூலம் ரஜினியே பேய்ப் பட ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அவ்வளவு தான் லாரன்ஸ், ஆதி, நந்தா, சுந்தர் சி, வினய், ஜி.வி.பிரகாஷ்,  அருள் நிதி, சிபிராஜ் இப்போது சூர்யா வரை இந்த பேய்ப் பட மோகம் தலை விரிக்கத் துவங்கிவிட்டது.

சரி இப்படி ஒரே நேரத்தில் பேயை வைத்து எல்லாரும் ஒரு காட்டு காட்டினால் கூட ஓகே , ஊரே பயப்படும் ஒரு கான்செப்டை காமெடி பீசாக அல்லவா மாற்றிவிட்டனர். அப்படியென்றால் பேய் பயம் மொத்தமாக போய் விட்டதா, இருட்டைக் காட்டியே நம்மை பயமுறுத்திய சினிமாக்கள் எங்கே? ஒவ்வொரு சீனையும் ஐஸ் க்ரீம் சாப்பிடக் கூட மறந்து பார்த்துக்கொண்டிருக்க ஐஸ்க்ரீம் உருகி கீழே வழிந்தோடிய காலங்கள் எங்கே? என ஏங்க வைத்துவிட்டனர் சினிமா படைப்பாளிகள். ’காஞ்சனா’ பார்த்து கதறிய குழந்தைகள் இப்போது தங்களது அப்பா , அம்மாவிடம் ஹையோ! இது பொம்மை, என சிரிக்கத் துவங்கிவிட்டனர். ’ வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாட்டா சொல்லி வைப்பாங்கன்னு’ சொன்ன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தோட வரிகள் பொய்யாகி வருகிறது என்பதுதான் உண்மை. நல்லது நடந்தா சரி.

Saturday 16 May 2015

"ஒன்லி கிளாமர் நோ செண்டிமெண்ட்" – காஜல் அகர்வால் அதிரடி!

ஹைதராபாத்: தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை காஜல் அகர்வால், இனி கிளாமர் கலந்த படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்து அவரது ரசிகர்களின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறார். 
 
தமிழில் பழனி படத்தில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால். பக்கம் பக்கமாக அதில் வசனம் பேசி பயமுறுத்தியிருப்பார். 
 
 
 
அதன் பின்னர் துப்பாக்கி, ஜில்லா, போன்ற வெற்றி படங்களில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையான காஜலுக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்த நிலையில்தான் கவர்ச்சியாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார் காஜல். 
 
 தமிழில் கைவசம் தனுசுடன் நடித்து வரும் மாரி, விஷாலுடன் பாயும் புலி, மர்ம மனிதன் போன்ற படங்களில் நடித்து வரும் காஜல் கிளாமர் குறைந்த மற்றும் வில்லத்தனமான வேடங்களில் நடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் ரசிகர்கள் என்னை கிளாமராகவே பார்க்க மட்டுமே ஆசைப்படுகிறார்கள் எனவே கிளாமர் குறைந்த வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்திருக்கிறார். 
 
கோடை வெயிலுக்கு ஏற்ற மாதிரி ஜில்லுனு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் காஜலுக்கு கோவில் கட்ட யாராவது கிளம்பினாலும் கிளம்பலாம்!

ஜெயகாந்தனின் சினிமா

தம் வாழ்நாளில் ஒரு தங்க வாய்ப்பையாவது  பெற்று விட முடியாதா என்கிற கனவுடன் தமிழ் எழுத்தாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான நபர்கள் தமிழ் சினிமாவுலகில் நுழைய முண்டியடித்துக் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சி ஊடகமும் அதிலுள்ள நபர்கள் இயங்கும் போலித்தனத்திற்காகவே அதை தம் எழுத்தில் தொடர்ந்து முற்றிலும் கறாராக விமர்சித்து, வெறுத்து ஒதுக்கிய ஒரு நபர் அதிலேயே சில காலம் இயங்கி சில திரைப்படங்கள் இயக்க நேர்ந்தது என்பது விதியின்  சதுரங்க ஆட்டத்தின் ஒரு சுவாரசியமான அசைவு போலவே இருக்கிறது. 
 
 
ஜெயகாந்தன் சில காலத்திற்கு முன் எழுதிய 'ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' நூலை வாசிக்கும் போது அவர் தமிழ் சினிமாவிற்கு வந்து விழுந்ததே ஒரு தற்செயலான விபத்து என்றே தோன்றுகிறது. அந்தளவிற்கு தம்முன் வந்த வாய்ப்புகளையெல்லாம் மிக மூர்க்கத்தனத்துடன் அவர் நிராகரித்துக் கொண்டேயிருந்தார். தன் படைப்புகளின் ஆன்மாவை தமிழ் சினிமா சிதைத்து விடும் என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி அவருக்கு இருந்திருக்கிறது. என்றாலும் நண்பர்களின் அன்பு கலந்த வற்புறுத்தல் காரணமாகவும் அதன் பின்விளைவாக நிகழும் சிலபல சிக்கலான தருணங்களைக் கடந்து வரவும்தான் அவர் திரைப்படம் தொடர்பான சில பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பதாகத் தெரிகிறது. ஒரு காலக்கட்டத்தில் எழுத்தை நிறுத்திக் கொண்ட கம்பீரத்தைப் போலவே பணத்தை அள்ளியும் கிள்ளியும் தந்த திரைப்படத்துறையிலிருந்தும் அவர் அதே கம்பீரத்துடன் விலகிய ஆளுமைக்குணம் எத்தனை பேருக்கு அமையும்?

'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட அவரின் சில படைப்புகள் மற்றவர்களால் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் அவரே நேரடியாக இயக்கிய திரைப்படங்கள் மூன்று. உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும். இதில் 'யாருக்காக அழுதான்' திரைப்படத்தின் பிரதி மாத்திரமே இன்று காணக் கிடைக்கிறது. உன்னைப் போல் ஒருவன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட காலத்தில் பார்த்திருக்கிருக்கிறேன். அதில் பிரதான நடிகர்களாக நடித்த காந்திமதி மற்றும் வீராச்சாமி போன்ற நடிகர்களின் மங்கலான உருவங்கள் மட்டுமே இன்று எனக்கு நினைவில் நிற்கிறது. புதுச்செருப்பு கடிக்கும் திரைப்படத்தைப் பார்த்த பாக்கியவான்களில் ஒருவராவது தமிழகத்தில் எவரேனும் இருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது.  அவரது தோழர்கள் உருவாக்கிய 'பாதை தெரியுது பார்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் தற்செயலானதொரு தருணத்தில் ஜெயகாந்தன் நடித்திருக்கிறார். அவர் முன்பு செய்து வைத்திருந்த கறாரான தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான காரியம் அது. எனவே மிக சாமர்த்தியமாக அந்தக் காட்சியை நீக்குவதற்கும் தாமே காரணமாக இருந்திருக்கிறார். அது நீக்கப்படாமலிருந்தால் ஜெயகாந்தனை தமிழ் திரையில் பார்க்குமொரு மகத்தான வாய்ப்பு இழக்கப்படாமலிருந்திருக்கும். 
இத்திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல் ஒன்றும் மிக பிரபலமானது. 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே. சிட்டுக்குருவி ஆடுது'. ஜெயகாந்தனின் எழுத்து பங்களிப்பில் உருவான திரைப்படங்கள் பலவற்றின் பிரதி இன்று நம்மிடமில்லை அல்லது கண்டுபிடிக்க இயலவில்லை. ஜெயகாந்தன் என்கிற ஆளுமையை சமகால வாசகர்கள் இன்னமும் விஸ்தாரமாக அணுக இத்திரைப்படங்களை காண முடியாது என்பது ஒரு சோகம். கலைகளை ஆவணப்படுத்துதலில் தமிழ் சமூகத்திற்கு இருக்கிற அலட்சியமும் அறியாமையும் இதன் மூலம் மறுபடியும் நிரூபணமாகிறது. என்றாலும் ரவி சுப்பிரமணியம் இயக்கியிருக்கும் ஜெயகாந்தன் குறித்த ஆவண்ப்படமானது ஒரு சிறந்த குறைந்தபட்ச ஆறுதல்.

***

ஒரு காலக்கட்டத்து கலையுலக அனுபவங்கள் வரை பதிவாகியிருக்கும் ஜெயகாந்தனின் நூலில் அவரால் இயக்கப்பட்ட முதல் இரண்டு திரைப்படங்களும் உருவான பின்னணிகள் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. வீனஸ் கிருஷ்ணமூர்த்தி என்கிற பிரபல தயாரிப்பாளர் ஜெயகாந்தனை தாமே அணுகி 'உங்களது படைப்பில் எதை வேண்டுமானாலும் திரைப்படமாக உருவாக்கலாம்' என்கிற நம்பிக்கையை விதைக்கிறார். என்றாலும் ஒரு திரைப்பட இயக்குநராவதற்கான அனுபவம் குறித்த போதாமைகளை தாமே உணர்ந்திருக்கிற ஜெயகாந்தன் 'என் மீதே அதற்கான நம்பிக்கை வரும் போது' இயக்குநர் ஆவதாக பதிலளிக்கிறார். என்றாலும் அந்த தயாரிப்பாளருடன் இரண்டு வங்காளித் திரைப்படங்களை தமிழில் உருமாற்றுவதற்கான பணிகளில் ஈடுபடுகிறார். ஆனால் சினிமாக்காரர்களின் அலட்சியமான மனோபாவமும் கலையை வணிகமாகவே பார்க்கும் போலித்தனமும் அங்கிருந்து அவரை விலகச் செய்கிறது. சில காலம் கழித்து இதே தயாரிப்பாளரை சந்தித்து தன் நம்பிக்கையை தெரிவிக்கிறார். திரைக்கதை உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்கதையை கேட்ட தயாரிப்பாளர் சட்டென்று ஒரு வணிகராக மாறி 'என்ன இது சமைப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதுமாய் வங்காளிப்படம் மாதிரி இருக்கிறதே' என்று அவநம்பிக்கையான கருத்தை தெரிவித்திருக்கிறார். தனது பிரத்யேக குணத்துடன் இதை எதிர்கொண்ட ஜெயகாந்தன் 'இதை நான் என் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி காட்டுகிறேன்' என்று ஆவேசமாக சொல்லி விட்டு வெளியேறியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு என்கிற ஆளுமையின் மீதான மரியாதையின் பேரில் அதன் பிறகு உருவானது, 'ஆசிய ஜோதி பிலிம்ஸ்'.

ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படங்களைக் காணும் போது அவற்றிலுள்ள பல நேரடியான குறைகள் நம் கண்களில் உடனே பட்டாலும் அவற்றை தாங்கிப் பிடிப்பது அவரது எழுத்துக்களைப் போலவே திரைப்படத்திலும் இருந்த யதார்த்தமான காட்சிகளும் அவற்றிலிருந்த நேர்மையும்தான். வெகுசன சினிமாவின் அபத்தமான போக்கிற்கு உடன்படாமல் தனித்து நின்ற அவரது கம்பீரமான வேறுபாடே அவரது ஆளுமையை தனித்து நிற்கச் செய்கிறது. இந்தக் காரணத்தினாலேயே  'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்திற்கு 1965-ம் ஆண்டிற்கான  தேசிய அளவிலான  விருது கிடைத்திருக்கிறது. கொள்கைகளின் படி இரண்டாம் விருது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நிலையில் சத்யஜித்ரே இயக்கிய சாருலதாவிற்கும் இதற்கும்தான் போட்டி. ஆனால் ஒருவகையில் ஜெயகாந்தனுக்கு ஆதர்சமாயிருந்த ரேவின் படைப்பே தகுதியில் உயர்ந்தது என்கிற எண்ணம் ஜெயகாந்தனுக்கு இருந்ததால் மூன்றாம் பரிசு குறித்து அவருக்கு மகிழ்ச்சியே. ஆனால் இந்தச் செய்தியை தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தது குறித்து வருத்தம். ஓர் எழுத்தாளரே இயக்குநர் அனுபவங்கள் ஏதுமல்லாது தன்னுடைய படைப்பை இயக்கி அதற்கு தேசிய அளவிலான விருது பெறுவது என்பது ஒரு மகத்தான சாதனை. உண்மையில் தமிழகமே திரண்டு இதைக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இத்திரைப்படத்தை வடஇந்திய பத்திரிகைகள் கொண்டாடியிருக்கின்றன.

திரைப்படம் காண்பதை வழக்கமல்லாததாக கொண்டுள்ள காமராஜ் இத்திரைப்படத்தைக் கண்டு "இந்தப் படத்தை அரசாங்கமே வாங்கி மக்களுக்கு இலவசமாக காட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். நம்முடைய பல கஷ்டங்களுக்குக் காரணம் நமது ரசனை கெட்டுப் போனதுதான்' என்று புகழுரை தந்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் ஜெயகாந்தனை அணுகி "படம் மிக யதார்த்தமாக வந்திருக்கிறது. பெரிய நடிகர்களைப் போட்டு இதை மறுபடியும் உருவாக்கலாம், அதற்கான உரிமையைக் கொடுங்கள்" என்ற போது இதை வர்த்தகமாக மாற்றுவதற்கு உடன்படாத ஜெயகாந்தன் அதை மறுத்திருக்கிறார். இதை விநியோகஸ்தர்களின் மூலம் வழக்கமான திரையிடலாக வெளியிட முடியாமல், தனிக்காட்சிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். சில திரையரங்கங்கள் வசூல் இல்லை என பொய்க்காரணம் சொல்லி இதை மாற்ற முயன்ற போது ஜெயகாந்தனே தடியுடன் காவல்காரன் போல நின்று காட்சிகளை நடத்தச் செய்திருக்கிறார் என்பது சுவாரசியமான வரலாறு.

***

எதையும் தனக்கேயுரிய முரட்டுத்தனமான, கம்பீரமான அகங்காரத்துடன் அணுகும் ஜெயகாந்தன் திரைப்பட படப்பிடிப்பில் துவக்கத்தில் அடைந்த தடுமாற்றங்களையும் வெளிப்படையாக பதிவு செய்யத் தவறவில்லை. முதல் நாள் படப்பிடிப்பில் எல்லோரும் இயக்குநரின் உத்தரவிற்காக காத்து நின்ற போது தமது உதவியாளரை இயக்கச் சொல்லி அதன் மூலம் கற்றிருக்கிறார். 'நான் ஒரு டைரக்டர் என்று என்னை மாற்றிக் கொள்வதற்கு முன்னால் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. எனவே எனது உதவியாளர்களிடமிருந்து நான் பயின்றேன். அது குறித்து எனக்கு மகிழ்ச்சியே' என்பது ஜெயகாந்தனின் கருத்து. இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு காட்சி அனுபவத்தை அதில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் பகிர்ந்து கொண்டதை எங்கோ வாசித்த நினைவிருக்கிறது.  நடிகை காந்திமதி தனது தலைமுடியை சீப்பால் வாரிக் கொண்டேயிருந்த பிறகு அந்த சீப்பு உடைய வேண்டும் என்பது காட்சி. காந்திமதி தொடர்ந்து தலைவாரிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் சீப்பு உடையவில்லை. 'இங்கு கட் செய்து சீப்பு உடையும் காட்சியை தனியாக ஒளிப்பதிவு செய்து இணைத்துக் கொள்ளலாம்' என்று ஒளிப்பதிவாளர் ஆலோசனை சொன்னாலும் அதை மறுத்த ஜெயகாந்தன் தொடர்ந்து அதை பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்.

'யாருக்கான அழுதான்' திரைப்படத்தை இன்று பார்க்கும் போது அதிலுள்ள நேரடியான குறைகள் கண்ணில் படுகின்றன. இவற்றை ஒப்புக் கொள்வதிலும் ஜெயகாந்தனுக்கு தயக்கமேதுமில்லை. பட விநியோகஸ்தர்களின் வற்புறுத்தல்களின் படி படத்தின் நீளத்திற்காக இணைக்கப்பட்ட பாடலும் (உருவத்திலே இவன் மனிதன், உள்ளத்திலே இவன் பறவை என்கிற அந்த அற்புதமான பாடலை எழுதியவர் ஜெயகாந்தனின் நண்பர் கண்ணதாசன்) சில காட்சிகளும் தாமே அறியாமையால் செய்த குறைகளும் படத்தை நீளமாக்கி நீர்த்துப் போகச் செய்திருககிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முதலில் நடிக்க சந்திரபாபு விரும்பியிருக்கிறார். நண்பர்தான் என்றாலும் படமாக்கி கெடுத்து விடுவார் என்கிற உணர்வு காரணமாக அவருக்கு கதைக்கான உரிமையைத் தர மறுத்திருக்கிறார் ஜெயகாந்தன். பின்பு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, ரங்காராவ் போன்ற நடிகர்களுடன் உருவாக்க திட்டமிடப்பட்டது. கதை பற்றி ஜெயகாந்தனுடன் ஸ்ரீதர் விவாதிக்கும் போது திரைக்கதைக்காக அதில் தாம் செய்யும் மாற்றங்களை விவரித்து 'இறுதிக் காட்சியில் சிலுவையின் முன்பு சோசப்பு விழுந்து இறந்து போகிறான்' என்று மெலோடிராமாக நீட்டிச் செல்லும் போது ஜெயகாந்தன் அதற்கு "எனில் படத்தின் தலைப்பை 'யாருக்காகச் செத்தான்" என்று மாற்றிக் கொள்ளுங்கள்' என்று தமக்கேயுரிய சினத்துடன் சொல்லியிருக்கிறார். ஆனால் வேறு சில காரணங்களால் அத்திரைப்படம் உருவாகாமல் நின்று போயிற்று. சில பல குறைகளுடன் உருவாகியிருந்தாலும் நாகேஷ் நடிப்பில் உருவான இறுதி வடிவமானது ஒரு நல்ல முயற்சி.

ஜெயகாந்தனின் திரைப்படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தால் காட்சி ஊடகத்தின் சாத்தியங்களை மேலதிகமாகக் கற்று அவர் ஒரு சிறந்த இயக்குநராக பரிணமிக்கும் அளவிற்கு காலம் மலர்ந்திருக்கும். ஆனால் காமராஜர் குறிப்பிட்டது போல அப்போது மட்டுமல்லாமல், இப்போதும் கூட தமிழ் சூழல் ரசனை என்பது மலினமான கேளிக்கைகளின் மீதே அமைந்திருப்பதால் அது சாத்தியப்படாமல் போவது இயல்புதான். ஜெயகாந்தனைப் போன்று இன்னமும் அதிகமான எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் புழங்கவும் அவர்கள் வெற்றி பெறுவதுமான சூழல் சாத்தியப்படுவது ரசனை மாற்றம் எனும் விஷயத்தின் மூலம்தான் நடைபெற முடியும்.
- அம்ருதா - மே 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: அம்ருதா)

Friday 15 May 2015

சூர்யாவின் சிங்கம்-3 படத்தில் ஸ்ருதிஹாசன்!

சூர்யாவின் சினிமா பயணத்தில் சிங்கம் படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப்படத்தை ஹரி இயக்கியிருந்தார்.



இப்படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் சூர்யாவை வைத்து ஹரி இயக்கியிருந்தார்.

சிங்கம்-2 என்ற பெயரில் வெளிவந்த இப்படம் சிங்கம் படத்தைவிட பெரிய வெற்றி பெற்றது.

இரண்டு வெற்றிகளை பெற்றுவிட்ட சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுக்க ஹரி முடிவு செய்துள்ளார். இந்த படத்திலும் சூர்யா-அனுஷ்கா நடிக்கவிருக்கின்றனர்.

மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கம் 2-ம் பாகத்தில் ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல்,

இந்த மூன்றாம் பாகத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க ஹரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூரியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்டர்நெட்டில் பரவும் நடிகை பூஜாகுமார் ஆபாச வீடியோ

நடிகை பூஜாகுமாரின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாகுமார் விஸ்வ ரூபம் படத்தில் கமல் ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார். உத்தம வில்லன் படத்திலும் அவருடன் நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீசானது.










ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பூஜாகுமார் ஒரு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ இணைய தளங்களிலும் வாட்ஸ்அப்களிலும் வேகமாக பரவுகிறது.

இந்த படத்தில் இருப்பது  மெக்சிக்கன் நாட்டை சேர்ந்த பெண். . ஆனால் பூஜாகுமார் என்ற பெயரிலேயே இவை பரவுகின்றன.

ஏற்கனவே அனுஷ்கா, லட்சுமிமேனன், ராதிகா ஆப்தே, ஹன்சிகா போன்றோரின் ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களில் வந்தன. இவர்கள் அப்படங்களில் இருப்பது நாங்கள் அல்ல என்று மறுத்துள்ளனர்.

ராதிகா ஆப்தே ஹாலிவுட் படமொன்றில் ஆபாசமாக நடித்த வீடியோவையும் திருட்டுத்தனமாக இன்டர் நெட்டில் வெளியிட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். படத்தின் டைரக்டர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இனி காமெடி வேடங்களில் நடிக்கத் தயார்: கதவை திறந்துவிட்ட வடிவேலு


வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள ‘எலி’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் வடிவேலு பேசும்போது,
இந்த படம் கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவையாக படத்தை எடுத்திருக்கிறோம். கொத்துக்கொத்தாக வந்து இந்த படத்தை பார்த்து குலுங்க குலுங்க சிரிப்பார்கள். இந்த படத்தில் சதா எனக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார்.


 
அவருடன் எனக்கு பாடல் காட்சிகளும் உண்டு. 1960-70 காலக்கட்டம் என்பது ஆங்கிலத்தை நாம் கற்றுக்கொள்ள தொடங்கிய காலம். ஆகவே, இந்த படத்தில் ஆங்கிலத்தை தவறாக உச்சரிக்கும் வசனங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும்.

எனது முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டதற்கு எதுவும் காரணம் இல்ல. ஒரு நல்ல தரமான படத்தை கொடுப்பதற்காகத்தான் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

இடைப்பட்ட காலத்தில் சிறு சிறு காமெடி வேடத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தது. இருப்பினும், இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட பின்தான் அடுத்த படத்தில் நடிக்கவேண்டும் என்று விடாபிடியாக இருந்ததால் இவ்வளவு இடைவெளி ஏற்பட்டு விட்டது.

தற்போது படம் எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. அதனால் இனிமேல் காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்றார்.

அரசியலில் மீண்டும் குதிப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதில் கூறும்போது, அதுபற்றி இப்பொழுது எதுவும் கூறமுடியாது. இப்போதைக்கு சினிமா ஷட்டரை திறந்து விட்டிருக்கிறேன். இது நன்றாக செல்கிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறினார்.

ரஜினி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

இன்று தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல மக்களை தன் காந்த சக்தியால் கட்டி போட்டு வைத்திருக்கும் அந்த மந்திரச் சொல் தான் "ரஜினி".  அவரைப் பற்றி சில தகவல்க உங்களுக்கு




1.ஜீஜாபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் என்ற மஹாராஷ்ரிய தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது கடைக்குட்டி தான் 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற  'சூப்பர் ஸ்டார்'.

2.தன்னுடைய இளமை பருவத்தில் பல வேலைகளை செய்து வந்தார்.  கூலியாகவும். பேருந்தில் நடத்துனராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய நண்பர் ராஜ் பகதூரின் தூண்டுதல் மற்றும் ஆதரவினால் தான் சென்னைக்கு நடிக்க வந்தார் ரஜினி.

 3.எதிர்மறையான பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், மெல்ல குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். பின் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். பைரவி நேர படத்தில் நடிக்கும் போது அதன் தயாரிப்பாளர் தானுவால் அவருக்கு வைக்கப்பட்ட பட்டமே சூப்பர் ஸ்டார்.

4.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். "ப்ளட் ஸ்டோன்" என்று இவர் நடித்த ஆங்கில படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது.

5.கமல் ஹாசனுடன் சேர்ந்து 18 படங்கள் சேர்ந்து நடித்துள்ளார். அவைகளில் 16 படங்கள் 1975-1979 வரை வெளிவந்தவை.

 6.ரஜினியை அறிமுகப்படுத்தியது பாலச்சந்தர் என்றாலும் கூட அவரை அதிகப்படங்களில் இயக்கியது எஸ்.பி.முத்துராமனே. ரஜினியை வைத்து அவர் இது வரை 25 படங்களை இயக்கியுள்ளார்.

7.ரஜினி, அமிதாப் பச்சனின் பல ஹிந்தி படங்களை ரீ-மேக் செய்து நடித்துள்ளார். பில்லா, தீ, படிக்காததவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், பாட்ஷா போன்ற படங்கள் இதில் அடங்கும்.

8.அவர் வள்ளி மற்றும் பாபா என இரு படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மேலும் மன்னன் மற்றும் கோச்சடையான் படங்களுக்காக தன் சொந்த குரலில் பாடலும் பாடியிருக்கிறார்.

9.அவருடைய ஒவ்வொரு படம் வெளிவந்த பின்பும் ஓய்வுக்காக இமயமலைக்கு செல்வது அவரின் பழக்கமாகும்.

10.ஸ்ரீ ராகவேந்திரர் அவருடைய நூறாவது படமாகும். படையப்பா அவருடைய நூற்றி ஐம்பதாவது படமாகும்.

11.அவர் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடித்த படம் 'முள்ளும் மலரும்'. அதை பார்த்து அவருடைய குருநாதர் திரு பாலசந்தர் அளித்த பாராட்டு கடிதத்தை இன்னமும் பத்திரமாக வைத்துள்ளார்.

12.ராக்கி பண்டிகையின் போது பௌர்ணமியன்று பாலச்சந்தரால் தான் சிவாஜி ராவ் என்ற நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறினார்.

13.ஆசியாவில் ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகப்படியாக சம்பளம் வாங்குபவர் நம் சூப்பர் ஸ்டாரே.

14.ஷூட்டிங்கின் இடைவேளையில் கேரவன் வண்டிக்குள் சென்று ஓய்வு எடுக்கும் பழக்கம் இல்லாதவர் ரஜினி. ஷூட்டிங் முடியும் வரை செட்டில் தான் இருப்பார். ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் செட்டிலேயே தலையில் ஒரு துண்டை போட்டு மூடி சற்று கண் அயர்வார்.

15.நீண்ட காலம் வரை பியட் மற்றும் அம்பாசடர் காரை மட்டுமே பயன்படுத்தி வந்தார். இப்போதும் கூட ஆடம்பர கார்களை பயன்படுத்தாத மிகவும் எளிய மனிதர்.

16.ஆன்மீகத்தில் அதிக நாட்டமுடையவர். ராகவேந்திரரின் பக்தரான இவர் பாபாஜியை வணங்குபவர். ஓய்வுக்கு இமையமலை செல்லும் இவர், அங்கே அனைவராலும் நுழைந்து விட முடியாத புகழ் பெற்ற பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுபடுவதுண்டு.

17.ஆன்மீகத்திற்கு அடுத்து அவர் அதிகமாக விரும்புவது சாதாரண மனிதனாக ஊர் சுற்றுவது. அவரை நகரின் சில பகுதியில் மாறு வேடத்தில் காண நேரிடலாம்.

18.தன்னுடைய ப்ரைவசியை தொலைத்து விட்டதால் சில நேரங்களில் சிறையில் அடைபட்ட கைதியை போல் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

19.தனக்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே.

20.ரஜினியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீ ப்ரியா. 21. 2000-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

21.இவர் முதன் முதலில் தயாரிப்பில் ஈடுபட்ட படம் மாவீரன். இதுவும் கூட அமிதாப் பச்சன் நடித்த ஹிந்தி படத்தின் ரீ-மேக்.

22.தன் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்துள்ளார் சூப்பர் ஸ்டார். அப்படி அவர் செய்தது பாபா மற்றும் குசேலன் ஆகிய படங்களுக்கு.

23.ரஜினிக்கு கருப்பு நிற உடைகளின் மீது ஆர்வம் அதிகம். ஆனால் சமீப காலமாக வெண்ணிற வேஷ்டி சட்டை மற்றும் காவி வேஷ்டியை அதிகமாக அணிகிறார்.

24.ஆன்மீகத்தில் தனக்கிருக்கும் ஈடுபாட்டை பற்றி அவர் இப்படி கூறியுள்ளார் - 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

Wednesday 13 May 2015

மூன்று கானா பாடகர்கள் இணைந்து பாடிய கானா பாடல்




மெலோடி, மேற்கத்திய இசை உள்ளிட்ட பல்வேறு ஸ்டைலில் பாடல்கள் வெளியாகி அவ்வபோது தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டாலும், தமிழ் சினிமாவிலும், ரசிகர்களிடத்திலும் கானா பாடல்களுக்கு என்று தனி இடம் உண்டு.



அந்த வகையில், தற்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் கானா பாடல் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்களிடையே மவுசு பெற்றிருக்கும் கானா பாடலில் ஒரு புதுமையை செய்ய நினைத்த புதுமுக இயக்குனர், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற மூன்று பிரபல கானா பாடகர்களை ஒன்று சேர்த்து ஒரு கானா பாடலை உருவாக்கியுள்ளார்.

வர்வின் புரொடக்ஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் கர்ணா, பி.ராமச்சந்திரன், இளவரசு ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தில் தான் இந்த புதிய முயற்சி அரங்கேறியுள்ளது.

சினிமா இசையமைப்பாளர்களில் கானா பாடல்களுக்கான ஸ்பெஷலிஸ்டான தேவா, தனது கானா பாடலின் மூலம் ஒரு படத்தின் வெற்றிக்கே காரணமாக இருந்த கானா உலகநாதன், தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான பாடகராக உள்ள கானா பாலா ஆகியோர் இணைந்து தான் இந்த கானா பாடலை பாடியுள்ளனர்.

ஒரு கானா பாடலுக்கு, மூன்று பிரபல கானா பாடகர்கள் இணைந்து குரல் கொடுத்திருப்பது தமிழ் சினிமாவில் இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கர் ராம் என்ற புதுமுக இசையமைப்பாளரின் இசையில், அந்தோணி பாக்யராஜ் என்ற புதுமுக பாடலாசிரியர் எழுதியுள்ள இப்பாடலின், பல்லவியை கானா பாலா பாட, சரணத்தை கானா உலகநாதன் தொடர, இசையமைப்பாளர் தேவாவின் குரலில் பாடல் முடிவடைகிறது.

இந்த மூவரில் ஒருவர் பாடினாலே பட்டி தொட்டியெல்லாம் ஹிட் என்ற நிலையில், இந்த மூன்று பேரும் இணைந்து பாடியிருக்கும் இந்த மெகா ஹிட் பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பி.எம்.தயானந்தன் இயக்குகிறார். புதுமுக இயக்குனரான இவர் இயக்குனர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

தற்போது இப்படத்தின் நாயகன், நாயகி மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. விரைவில் துவங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பை மதுரை திருப்பரங்குன்றத்தில் தொடங்கி சென்னையில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Friday 8 May 2015

சூர்யா, அஜீத் படங்களில் சந்தானத்தை 'தூக்கிய' சூரி!

சூர்யா நடிக்கும் சிங்கம் 3 மற்றும் அஜீத் நடிக்கும் 56 வது படம் ஆகியவற்றிலிருந்து சந்தானம் தூக்கப்பட்டார். அவருக்கு பதில் பிரதான காமெடியனாக சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
 
கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடியன் என்ற இடத்திலிருந்த சந்தானம் கதாநாயகனாக நடிக்கவே அதிகம் ஆசைப்படுகிறாராம். நம்மால்தானே இந்த பெரிய ஹீரோக்கள் படங்கள் ஓடுகின்றன.. நாமே தனித்து நடித்தால் நல்ல வரவேற்பிருக்கும் எண்ணத்தால், இப்போது இரு புதிய படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
 வருகிற புதுப்பட வாய்ப்புகளையும் உதறுவதிலேயே குறியாக இருக்கிறாராம். 
 
இன்னொரு பக்கம் வடிவேலு. அரசியல் பிரச்சினைகள் அனைத்தும் ஓய்ந்து, அவரது தெனாலிராமன் படம் வந்ததும், பல பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் அவரை காமெடி வேடங்களுக்கு அணுகியுள்ளனர். ஆனால் அதையெல்லாம் மறுத்துவிட்டு, எலி படத்தில் மீண்டும் கதாநாயகனாகியுள்ளார். இந்த இருவருமே நடித்தால் நாயகன் வேடம்தான் என்பதில் அடமாக இருப்பதால், இப்போது சூரிக்கு நம்பர் ஒன் காமெடியன் இடம் கிடைத்திருக்கிறது. அதன் விளைவு முன்னணி நடிகர்களான அஜீத், சூர்யாவுடன் இணைந்துள்ளார். சூர்யாவுடன் ஏற்கெனவே அவர் அஞ்சானில் நடித்துவிட்டார். ஆனால் அஜீத்துடன் நடிப்பது இதுதான் முதல் முறை.

வேட்டி விளம்பரத்தில் நடிக்காதது ஏன்? ஒவ்வொரு மனிதரையும் சிந்திக்க வைத்த ராஜ்கிரண் பதில்!

என்னதான் வர்த்தகமயமான சினிமா உலகில் வாழ்ந்தாலும், தனக்கென சில கொள்கைகளை விடாப்பிடியாக வைத்திருக்கும் அபூர்வ மனிதர்களும் அதே சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். வர்த்தக விளம்பரங்களில் என்றல்ல, எந்த விளம்பரத்திலுமே தோன்றுவதில்லை என்ற கொள்கையில் பல ஆண்டுகள் உறுதியாக நிற்பவர் ரஜினி. அடுத்து ராஜ்கிரண். 
 
 
இவர் ஒரேயடியாக விளம்பரங்களில் நடிக்க மறுப்பதில்லை. அது நல்லதா, சமூகத்தை பாதிக்கிறதா என்பதைப் பார்த்தே எதையும் ஒப்புக் கொள்கிறார். Why Rajkiran denies to appear in Dothi ad? 
 
 சமீபத்தில் அப்படி வந்த ஒரு பெரிய வாய்ப்பை உதறித் தள்ளியிருக்கிறார். இதுபற்றி விகடனில் வெளியாகியுள்ள அவரது பேட்டியின் ஒரு பகுதி: ''விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?'' 
 
''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்'னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க'ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.
 
 'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?'னு கேட்டாங்க. 
 
 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்'னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''