Saturday 13 October 2018

"கைப்புள்ளயா நொண்டுனது நடிப்புன்னா நினைச்சீங்க?" -- வடிவேலு ஸ்பெஷல்

ங்கிலிஷ் கலக்காம தமிழ் பேச முடியலைனு நிறைய பேர் சொல்றதைப் பார்க்க முடியும். ஆனா, இன்னைக்குப் பலரால வடிவேலுவின் காமெடி பன்ச் பேசாம அன்றாடம் பேசவே முடியிறதில்ல.

‘என்ன! சின்ன புள்ளத்தனமா இருக்கு’,
‘ஆணியே புடுங்க வேண்டாம்’
‘வட போச்சே’
- இதெல்லாம் சர்வ சாதாரணமா தினம் தினம் நம்மையே அறியாமல் பேசி, 'வடிவேலுயிஸத்தில்’ மாட்டிகிட்டு இருக்கோம் என்பதற்கான எடுத்துக்காட்டு. வடிவேலு ஒரு சகாப்தம். இன்னைக்கு இருக்கிற இ(ளை)ணைய தலைமுறையின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் வரை நாம் நின்னு பேசுவோம் என அவர் நினைச்சி நடிச்சிருக்காரு பாருங்க... அதாங்க, அவர்!
சார்லி சாப்ளினின் அப்பா குடிக்கு அடிமையாகிப்போனார், அவர் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டார் எனப் பல கஷ்ட நஷ்டங்களுக்கு நடுவில்தான் சாப்ளின் நம்மை சிரிக்க வைத்தார். அப்படித்தான் நம்ம வைகைப் புயலும் பல கஷ்டங்களுக்கு நடுவில்தான் சினிமா வந்து ஜெயித்திருக்கிறார். இவரையும் சார்லி சாப்ளினையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டா, அப்போகூட 'அவரு எவ்வளவு பெரிய உயரம் தொட்ட மனுஷன், நீங்க வேற ஏன்ணே?' எனச் சொன்ன வைகைப் புயல், 'ஒரு விஷயத்துல என்னையும் அவரையும் ஒப்பிடலாம்ணே... ரெண்டுபேரும் வறுமைக்கு வாக்கப்பட்டவர்கள்' என ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.

சோகத்தைத் தாங்கனும்னா, அதைல் கண்டுக்கவே கூடாதுணே... அது கொஞ்சம் பொறுத்து பொறுத்துப் பார்க்கும். அப்பறம் இவனை ஒன்னும் பண்ண முடியாதுனு இடத்தைக் காலி பண்ணிடும்ணே!' என தன் ஸ்ட்ரெஸ் ரீலிவிங் பத்தி சொல்றார். ஒருநாள் கால்ல பலத்த அடியாம் இவருக்கு. ஷூட்டிங் வேணாம்னு டாக்டர்ஸ் சொல்ல, அந்த நேரத்துலதான் வழக்கத்தைவிட அதிகமா ஷூட்டிங்ல கலந்துக்கிட்டு நடிச்சார். 'வின்னர்' படத்துல நொண்டி நொண்டி நடிச்சிருப்பாரே நம்ம கைப்புள்ள?! அது நடிப்பில்லை, வேதனையோட துடிப்பாம்.

இன்னைக்கு வைகைப் புயலுக்கு பெயர், புகழ், பணம் இருந்தாலும் அன்னைக்கு அவர்கிட்ட ஒரு லட்சம் ரூபாய் இல்லாத காரணத்தால அவரோட அப்பாவைக் காப்பாத்த முடியாம போனது வடிவேலு வாழ்க்கையில் மிகவும் வருத்தமான விஷயம். 'என்ன பண்றதுணே ஆண்டவன் ஒன்ன பறிச்சுட்டுத்தான் இன்னொன்ன கொடுக்குறான்' என்கிறார் வடிவேலு.
வடிவேலு சென்னை வந்த கதையே ரொம்ப சுவாரஸ்யம். சென்னை கிளம்பிய வைகைப்புயலுக்கு மனசுல நிறைய கனவு இருந்தது. ஆனா, பாக்கெட்டில் பத்து பைசா இல்லை. வீட்டுல இருந்த சமையல் சட்டியை வித்து 80 ரூபாயைத் தேத்தியிருக்கார் மனுஷன். 'வாழ்க்கையில ஜெயிக்கணும், இல்ல மெட்ராஸ்லேயே செத்துடணும்' என அவருக்குள்ளே சொல்லிட்டு சென்னைக்குக் கிளம்பிய வடிவேலு, பஸ்ல ஏறலை. சென்னை வரைக்கும் லாரியில டிரைவர்கூட பக்கத்துல உட்கார்ந்து வரணும்னா, 25 ரூபாய். லாரி டாப்ல படுத்துக்கிட்டு வரணும்னா 15 ரூபாய். லாரியில் போவோம் என யோசிச்ச வடிவேலு, 'லாரி டாப்ல படுத்துக்கிட்டு போறேண்ணே!' எனச் சொல்லிட்டு, 'ரைட் போலாம்' எனத் துண்டை உதறியிருக்கிறார். சினிமா கனவை நினைச்சுக்கிட்டே படுத்திருந்த வடிவேலுவுக்கு, செம குளிர். உடம்பு வெடுவெடுக்க, மனசைத் தேத்திக்கிட்டு நடுங்கிக்கிட்டே கெடந்திருக்கார், வடிவேலு. கண் அசந்த நேரம், பையில் இருந்த பைசா காத்துல பறந்துடுச்சு!

வண்டி மெல்ல நகர்ந்து சமயபுரம் வர, சாப்பிடுறதுக்கு டிரைவர் கீழே இறங்குறார். நம்ம வடிவேலு அழுதுகிட்டே மேலே இருந்து கீழே இறங்கி வர்றார். 'அண்ணே, வண்டியில படுத்திருந்தேனா, காசு காத்துல பறந்துடுச்சு!' என அழ, பக்கத்தில் இருந்தவங்கெல்லாம் 'டேய் உன்னை மாதிரி எத்தனையோ பேரைப் பார்த்திருக்கோம்' என சிரித்திருக்கிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு, 'சரிடா, சாப்பிட்டியா?' என டிரைவர் வடிவேலுவிடம் கேட்டு, அவரை அதிரவெச்சிட்டு, இரண்டு புரோட்டா வாங்கிக் கொடுத்து, புரோட்டாவுக்கான பணத்தை அவரே செட்டில் செய்து, 'விட்றா பார்த்துக்களாம்' எனத் தோளில் தட்டிக்கொடுத்திருக்கிறார். காலையில் தாம்பரம் வர, கீழே இறங்கிய வடிவேலுவுக்குக் கையில் கொஞ்சம் பணமும் திணித்து, அவரைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாராம், அந்த டிரைவர்.
அன்னைக்கு அந்த லாரி டிரைவர் வடிவேலுவுக்குக் கொடுத்தது பணம் மட்டுமில்ல, மனசுல தைரியமும்தான்.
நாம இன்னைக்கு வடிவேலு படம் பார்க்க கூட்டம் கூட்டமா தியேட்டருக்குப் படை எடுக்கிறோம். ஆனா, வடிவேலு ஆரம்ப காலத்துல படம் பார்த்த கதை தெரியுமா? படம் பார்க்க காசு கிடைக்காது என்பதால, வடிவேலுவும் அவர் ஃபிரெண்டும் நல்ல டீல் ஒன்னு பேசியிருக்காங்க. தியேட்டர் டிக்கெட் செலவு அவர் நண்பரோடது. அதுக்குப் பதிலா, அவரை சைக்கிள்ல டபுள்ஸ் அடிக்கிறது. அப்படி மாங்கு மாங்கென சைக்கிள் மிதிச்சுதான் பல எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசிச்சிருக்கார், வைகைப்புயல். பட இன்டர்வெல்ல, 'இரு மாப்ள... சைக்கிள் வெளியே நிக்குதானு பார்த்துட்டு வந்துட்றேன்' என நழுவுற அந்த நண்பன், கேண்டீன்ல போய் ரெண்டு முட்டை போண்டாவை முழுங்கிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி வடிவேலு முன்னாடி வந்து அமர்வாராம். வடிவேலும் எதுவும் தெரியாத மாதிரியே கடைசி வரை காட்டிக்கிட்டு இருந்துக்குவாராம். நடிகர் ஆனபிறகு, வடிவேலு அவரைக் கூட வெச்சிகிட்டாராம். ஆனா, நண்பன் வளர்ந்த பொறாமை தாங்க முடியாம, அவரே கொஞ்சநாள்ல போயிட்டாராம்.

வடிவேலுகிட்ட ஒருமுறை, 'படத்துல நீங்க பேசுன பல வசனங்கள் நீங்களே எழுதினதுதானே.. ஏன் நீங்க காப்பிரைட் கேட்கக்கூடாது?' எனக் கேட்டப்போ, 'அட ஏன்ணே நீங்க வேற! அதுக்கு அவசியமே இல்லணே, மக்களுக்கு அது பிடிச்சிருக்கு. அவங்க சந்தோஷத்தை எப்படிணே நான் பரிச்சுக்க முடியும்... நாம போட்ட சாப்பாட்டை ஒருத்தர் சாப்பிடும்போது, அதை அடிச்சுப் புடிங்கிட்டு வந்தா நல்லா இருக்குமா? அதுமாதிரிதான் காப்பிரைட் கேட்குறது. அவங்க நல்லா நிம்மதியா சாப்பிட்டுக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே!" எனச் சொல்கிறார், வடிவேலு. இந்த நல்ல மனசுக்கும் அவரது கடின உழைப்புக்கும்தான் வடிவேலு படங்கள் சமீபத்தில் ரீலிஸ் ஆகாமல் இருந்தாலும், அவர் முகம் தியேட்டர் திரையில் வராமல் இருந்தாலும், வடிவேலு வசனத்தை உச்சிரிக்காத வாய் இங்கே இருக்க முடியாது. வடிவேலு படத்தை வைக்காத ஒரு மீம் டெம்பிளேட் இருக்க முடியாது. அதனால, இந்தப் புயல் உலகத் தமிழர்கள் மனதில் இன்னைக்கு மையம் கொண்டிருக்கு.

தோற்றத்தாலும் நடிப்பாலும் உயர்ந்த நடிகர் - இரகுவரன்

தமிழ்த்திரையுலகு தந்த நடிகர்களில் இரகுவரனுக்குத் தனியிடமுண்டு. தோற்றத்தால் விளங்கிய உயரத்தை நடிப்பிலும் தொட்டவர் அவர். இந்தி நடிகர் திலீப்குமார் பார்த்து வியந்த தமிழ் நடிகர். உடைந்து தடுமாறுவதைப்போன்ற குருத்துக்குரலை வைத்துக்கொண்டு எதிர்நாயகப் பரப்பில் வன்மையான நடிகராக வலம்வந்தார். சத்தியராஜ், நிழல்கள் இரவி, இரகுவரன் ஆகிய மூவரும் எதிர்நிலை, இடைநிலை வேடங்களில் தொடர்ந்து நடித்தபடி முன்னேறியவர்கள். மூவரும் கோவைப்பின்னணி கொண்டவர்கள். வாட்ட சாட்டமானவர்கள்.


அம்மூவரில் சத்யராஜ் தொடர்ந்து சந்தை மதிப்பு தளராதவராயிருந்தார். நிழல்கள் இரவிக்கு நாயகப் படங்கள் பல அமைந்தாலும் அவரால் முன்னணி இடத்தைப் பெறமுடியவில்லை. இரவி நாயகனாக நடித்த "அம்மன் கோவில் திருவிழா, நான் புடிச்ச மாப்பிள்ளை" ஆகிய படங்கள் வெளிவந்தபோது திரையரங்குகளின் முன்னே கூடிய கூட்டம் நினைவிருக்கிறது. தம்மை வைத்துத் தொடர்ச்சியாகப் படமெடுக்கும் முதலாளிகளும் இயக்குநர்களும் அமையப்பெற்ற நடிகர் முன்னணி இடத்தைப் பிடிக்கிறார். நிழல்கள் இரவி பாரதிராஜாவின் அறிமுகம். அப்பெயரின் முன்னொட்டு அவர் அறிமுகமான படத்தைக் குறிப்பதுதான்.

அம்மூவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர் என்றாலும் இரகுவரனைத் தனித்துக் காட்டிய படம் ஒன்றுண்டு. 'மக்கள் என் பக்கம்' என்பது அப்படத்தின் பெயர். சாம்ராஜ் என்னும் கள்ளக்கடத்தல் தொழிலதிபர் வேடம் சத்தியராஜுக்கு. அவருடைய இரண்டு உதவியாளர்கள் இரகுவரனும் நிழல்கள் இரவியும். அரசியல்வாதிவாக வரும் இராஜேஷின் நோக்கம் சாம்ராஜினை அழித்துவிடவேண்டும் என்பது. இராஜேஷைக் கொன்றுவிட வேண்டும் என்று சாம்ராஜ் வகுத்த திட்டப்படி இரகுவரனும் நிழல்கள் இரவியும் இராஜேஷின் மகிழுந்து வரும் வழியை மறித்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவார்கள். அம்முயற்சியில் இரவி இறந்துவிட, படுகாயங்களோடு தப்பி வரும் இரகுவரன் சத்தியராஜின் மடியில் தம்முயற்சித் தோல்வியை நடிப்பால் சொல்லியபடி உயிர்விடுவார். அந்தக் காட்சியில் மட்டுமில்லை, அந்தப் படத்திலும்கூட இரகுவரனுக்கு உரையாடல்கள் பெரிதாய் இல்லை. ஆனால், துடிதுடித்து உயிர்விடும் காட்சியில் அவர் நடிப்பைப் பார்த்த பார்வையாளர்கள் திகைத்துப் போய்விட்டனர். இரகுவரன் திறமையான நடிகர் என்பது அன்று நிறுவப்பட்டது.


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டில் 'ஏழாவது மனிதன்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானபோதும் இரகுவரனை அடையாளங்காட்டிய முதற்படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. அம்மையப்ப முதலியாரும் அவருடைய மூத்த மகன் சிதம்பரமும் வீட்டுக்குள் மோதிக்கொள்ளும் காட்சியை இன்றைக்கு நினைத்தாலும் பதைபதைக்கிறது. உரையாடல்களை மடித்துத் தெறித்துப் பேசுவதில் வல்லவரான விசுவோடு நேர்நிகராக எதிர்த்து நடித்தார். உறவுகளின் பெற்றி அறியாமல் காசுக் கணக்கு பார்க்கும் பலரும் இரகுவரனின் உருவில் தம்மை உணர்ந்தனர். இரகுவரனின் பெயர் பரவத் தொடங்கியது. அவ்வாண்டிலேயே 'மிஸ்டர் பாரத்' என்ற படத்தில் அடிதடிக் காட்சி. எல்லா வகையானும் நடிக்கக் கூடியவர் என்பதைத் திரையுலகம் ஏற்றுக்கொண்டது.

மந்திரப் புன்னகை, ஊர்க்காவலன் போன்ற பெரிய படங்களில் இரகுவரனே எதிர்நாயகன். அதனால் சிறிய படங்களின் நாயகனாகும் வாய்ப்பு இரகுவரனைத் தேடி வந்தது. ஆர்.சி. சக்தி இயக்கிய "கூட்டுப் புழுக்கள்" என்ற திரைப்படம் வெற்றியும் பெற்றது. வேலையில்லாக் கொடுமையால் நிறைவேறாக் காதலோடு தளர்ந்து நிற்பவன். அவ்வேடத்திற்கு இரகுவரன் பிசிறின்றிப் பொருந்தினார். கைநாட்டு, மைக்கேல்ராஜ் போன்ற படங்கள் அவரை நாயகனாகத் தூக்கி நிறுத்தத் தவறின. அவ்வமயம் எதிர்நிலை, இடைநிலை வேடங்கள் அவர்க்கு வந்து குவியத் தொடங்கின.
இரகுவரனின் நடிப்புக்குத் தீனி போட்ட இரண்டு படங்கள் பாசில் இயக்கியவை. "பூவிழி வாசலிலே..." என்ற படத்தைப் பார்க்காதவர்கள் இப்போதே பாருங்கள். கொலையைப் பார்த்த குழந்தையைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடும் பெருந்தனக்காரன் வேடம் இரகுவரனுக்கு. அமைதித் திருவுருவாக இருந்தவாறே அவர் செய்கின்ற தீச்செயல்கள் உள்ளத்தை நடுங்க வைக்கும். பாசிலின் இன்னொரு படம் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு". தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தையைத் தேடி வரும் தந்தை. கெஞ்சாமல் கதறாமல் தன் மகளை வேண்டித் திரியும் தந்தையாக அப்படத்தில் வேறு உயரத்தைத் தொட்டார்.
"புரியாத புதிர்' என்ற திரைப்படத்தில் இரகுவரனுக்கு மனச்சிதைவுற்ற கணவன் வேடம். மனைவியை ஐயுற்றுத் துன்புறுத்துபவர். "ஐ நோ.. ஐ நோ... டேய் நோ... ஐ நோ..." என்று இரண்டு சொற்களை வைத்துக்கொண்டு அவர் ஆடிய ஆட்டத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இராம்கோபால் வர்மாவின் முதற்படமான சிவா 'உதயம்' என்ற பெயரில் தமிழுக்கு வந்தது. இரகுவரன் நடிப்புக்கு அப்படம் கொடுமுடி. ஆங்கிலப் படங்களில்தான் அப்படிப்பட்ட நடிப்பைப் பார்க்க முடியும். 'பவானி'யாக மிரட்டினார். அந்த வரிசையில் காதலன், பாட்சா, முத்து என்று அவர் வென்றாடிய வேடங்கள் பல.
பாலசேகரன் இயக்கிய 'லவ் டுடே' என்னும் திரைப்படத்திலிருந்து இரகுவரன் நடிப்பின் மூன்றாம் பாகம் தொடங்குகிறது. பாசத்திற்குரிய தந்தையாக அவர் நடித்தது பார்த்தோரின் கண்ணீரைப் பிழிந்தது. உல்லாசம் என்ற படத்தில் நல்லவனை வளர்த்துத் தரும் தீயவன் வேடம். அமர்க்களம் என்னும் படத்தினையும் மறந்திருக்க முடியாது. அவருடைய கடைசிக் காலப் படங்களில் ஒன்றான யாரடி நீ மோகினியிலும் அவர் முத்திரை பதிக்கத் தவறவில்லை.
வெறும் இருபத்தைந்தாண்டுகளில் முந்நூறு படங்கள் நடித்தார் இரகுவரன். கூடுதலாக முப்பதாண்டுகள் வாழ்ந்திருந்தால் மேலும் முந்நூறு படங்கள் நடித்திருக்கக் கூடும். அவற்றால் அவர் பன்மடங்கு உயரத்திற்குச் சென்றிருக்கலாம். ஒருவர் என்னவாக வேண்டுமோ அவ்வாறு ஆகாதபடி வீழ்த்துவது போதைப் பழக்கமாகத்தான் இருக்க முடியும். பெருங்கலைஞர்கள் பலரும் வீழ்ந்த அந்தப் படுகுழியில் இரகுவரனும் வீழ்ந்தார். அவருடைய நடிப்பு மட்டுமில்லை, வாழ்க்கையும் இக்காலத்தவர்க்கு ஒரு படிப்பனைதான்.
வெளியூர்க் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்குழாம் இருப்பூர்தியில் சென்னை திரும்பிக்கொண்டிருந்ததாம். இருப்பூர்திப் பெட்டி முழுவதும் கலைஞர்கள் நிரம்பியிருந்தனராம். திரையுலகில் அறிமுகமாகியும் பெயர்பெற முடியாத நிலையில் மனம் வெதும்பியிருந்த நடிகர் சூர்யாவும் இரகுவரனும் அப்பெட்டியில் அடக்கம். அப்போது இரகுவரனின் போதைக்குரல் சூர்யாவைக் கடுமையாய் அழைத்ததாம். "டேய் சூர்யா... முடியலல்ல... நீ எதுவுமே ஆக முடியலல்ல... எல்லாம் பண்ணிப் பார்த்தும் எதுவுமே நடக்கலல்ல... வெறுப்பா இருக்குமே... செத்துடலாம்போல இருக்குமே... எனக்கும் அப்படித்தான்டா இருந்துச்சு... மாத்துடா... எல்லாத்தையும் மாத்து... இதென்னடா முடி... இதை மாத்துடா... உடம்ப மாத்துடா.. பார்க்கிறது நடக்கிறது எல்லாத்தையும் மாத்துடா... அப்புறம் பார்றா... எல்லாமே மாறும்..." என்று அறிவுரை கூறினாராம். இரகுவரனின் அவ்வறிவுரையை தெய்வ வாக்காக ஏற்றுக்கொண்டு தம் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டார் நடிகர் சூர்யா. அதன் பிறகு அவரடைந்த ஏற்றங்களை நாடறியும்.

Saturday 6 October 2018

மழை பாடல் கொண்டாட்டம்

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மழை தொடர்பான சில பாடல்களை ரசிக்கலாம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் வாட்டி எடுக்கும் சென்னை தற்போது ஊட்டி போன்று குளிராக உள்ளது.
வெளியே மழை பெய்யும் இந்த நேரத்தில் மழையை கொண்டாடும் பாடல்களை கேட்கலாமே.

மழை


மழை வருவதற்கு முன்பு மேகங்கள் காட்டும் தோரணை, பறவைகளின் முன்னேற்பாடு, வறண்ட நிலத்தின் ஏக்கம் என இயற்கையின் பல செயல்பாடுகளை கரிசனமாகக் கையாண்டவர் இளையராஜா. மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே.. என்ற பாடலில் இறுதிவரை மழை வராது. ஆனால் மழை வரும் முன்பு இயற்கை ஆயத்தமாகும் உணர்வைக் கொடுத்திருப்பார் இளையராஜா. "வெயில் வருது.. வெயில் வருது... குடை கொண்டுவா.. கண்ணா உன் பேரன்பிலே... உன் தோளிலே பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா.." என பெண் பாடினாலும், அவளின் மாராப்புதான் குடையாக வேண்டுமென ஆண் செல்லமாக அடம்பிடிப்பது போல பாடலை இயற்றிய பெருமை கவிஞர் வாலிக்கே சேரும்.

வைரமுத்து


இளையராஜாவும் மழையும் என டைட்டில் வைத்தால் ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அதனால், 90 கிட்ஸ்களுக்கு பரிட்சயமான இசையமைப்பாளர்களில் யார் சிறப்பான மழைப்பாடல்கள் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது, மழை திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த "நீ வரும்போது நான் மறைவேனா.." பாடல் முக்கியமானது. பாடல் மட்டுமல்லாமல் படத்திலும் மழைக்கே முக்கியத்துவம். இப்படல் மழை என்ற ஒற்றை வார்த்தை தரும் ஆனந்தத்தையும் கொண்டாட்டத்தையும் சொன்ன பாடல். மழை ஒருவரின் சிறுவயதை திரும்பத்தரும் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட வரிகள் இவை. "கொள்ளை மழையே கொட்டி விடுக.. பிள்ளை வயதே மறுபடி வருக... நிற்க வேண்டும் சொற்பமாக... தாவனியெல்லாம் வெப்பமாக..." நகரத்திலுள்ள இளைஞி ஒருவள் சிறுமியாக மாறி ஆடைகளைக் களைந்து மழையோடு மழையாக மழையைக் கொண்டாட விரும்பும் உணர்வைக வரிகளில் காட்சிப்படுத்தியிருப்பார் வைரமுத்து. ஸ்ரேயாவை மறந்து நீங்கள் இந்த பாட்டை ரசித்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட இசை ரசிகர்தான்.


கண்ணதாசன்


அது என்ன பெண்கள் மட்டும்தான் மழையைக் கொண்டாடுவாங்களா? ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள் அவங்களும் மழையை கொண்டாடலாம் என ஜெமினிகணேசனைக் கொண்டாட வைத்தவர் கவியரசர் கண்ணதாசன். அவளுக்கென்ன ஒரே மனம் திரைப்படத்தில், மழையில் நனைந்து கொண்டு ஆனந்த ஆட்டம் போட்டிருப்பார் நம் காதல் மன்னன். " ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ... பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்.. எங்கே அந்த சொர்க்கம் ஹா... எங்கே அந்த சொர்க்கம் ... என்று துள்ளிக்குதிப்பார் ஜெமினி. "மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள் ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்.. கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ... " என காதல் கைகூடிய இளைஞனின் கொண்டாட்ட மனநிலையை மழையும் சேர்ந்து கொண்டாடுவது போல பாடல் அமைத்திருப்பார். இப்பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி, துள்ளலாகப் பாடுவதற்காக எஸ்பி.பாலசுப்பிரமணியத்தைப் பாடவைத்தார். கேட்டுப் பாருங்க... புதுமையான அனுபவமாக இருக்கும்.


ஏஆர்.ரஹ்மான்


ரஹ்மானும் வைரமுத்துவும் இணைந்தால் ஹிட் ஆகாத பாடல் ஏது? அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டமான பாடல்தான் குரு படத்தில் வரும் "வெண்மேகம் வெட்ட வெட்ட.." வீட்டை விட்டு வெளியேறும் ஒரு இளைஞிக்கு இருக்கும் ஆசைகளை மழையோடு பகிர்ந்துகொள்வாள். மழை பெய்யும்போது மேகக்கூட்டத்தினால் ஏற்படும் மெல்லிய இருட்டையும் விடாமல் மழையோடு மணிரத்னம் காட்சிப்படுத்தியிருப்பார். வெகுளித்தனமாக மாறியிருக்கும் ஷ்ரேயா கோஷலின் குரல் வைரமுத்துவின் வரிகளுக்கு உயிருட்டியிருக்கும். தற்போது வெளியான மழைக்குருவி பாடல் நம்ம ஊரில் பிறந்த சிட்டுக்குருவி வெளிநாட்டுக்கு போய் பிற கலாச்சாரங்களையும் மொழிகளையும் கற்றுக்கொண்டு, ஏதோ ஒரு நாட்டில் மழையைப் பார்த்த அனுபவத்தில் ஒரு பாட்டை பாடி அதை நம்ம ஊர் மழைக் காலத்துடன் ஒப்பிட முயல்வது போல இருந்தது.


அடடா மழைடா...


யுவன் ஷங்கர் ராஜாவின் அடடா மழைடா பாடலும் மழையின் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தக்கூடியதுதான். பாசமாக பக்கத்தில் உட்கார்ந்து கணக்கு சொல்லி கொடுக்கும் மூன்றாம் வகுப்பு டீச்சரைப் போல், மிக எளிமையான வரிகளையே கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார். தமன்னாவை பிக்கப் செய்ய வேண்டுமென்ற நோக்கில் கார்த்தி காரில் பிக்கப் செய்து போகும்போது இருவரையும் மழை ஒன்றிணைப்பதால் அவர் மழைக்கு நன்றி சொல்வதைப் போல பாடல் அமைந்திருக்கும். " பின்னி பின்னி மழையடிக்க.. மின்னல் வந்து குடை பிடிக்க வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு" போன்ற வரிகள் மூலம் மழை மற்றும் காதலின் பிரம்மாண்டத்தை கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார். வழக்கம்போல யுவன் முத்துக்குமார் மேஜிக்கில் கலக்கிய பாடல்.

டி.ராஜேந்தர்


கிளிஞ்சல்கள் திரைப்படத்தில் வரும் "அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது" பாடல் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மழைப்பாடல். ஐயய்யோ மழையில் மாட்டிகிட்டேனே என கதாநாயகி நினைக்கும் நேரத்தில் சுகமான தொல்லையாக காதலன் தோன்றுவது. மறுக்க நினைத்தாலும் முடியாமல் காதலி அதை ஏற்றுக்கொண்டு டூயட் பாடுவது போன்ற ஒரு சூழலில் அமைந்திருக்கும். "என்னைவிட்டு எங்கேயும் போகமுடியாது, நீ இந்த மழைபோல் என்னையும் ஏற்றுக்கொள்" என்று கதாநாயகன் லவ் டார்ச்சர் செய்வதுபோலவே பாடல் வரிகளையும், பாடலுக்கான இசையையும் அமைத்திருப்பார் டி.ராஜந்தர். மைக் மோகன் குடைபிடித்து பாடிய பாடல். மிஸ் பண்ணிடாதீங்க!

இளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்கள் - யார் சிறந்தவர் ?

சில பாடல்கள் நம்மை உருக்கிக் கூழாக்கி ஓரத்தில் ஊற்றிவிடும். அதிலிருந்து மீண்டும் உருப்பெற்று எழுவதற்குப் பன்னாழிகைகள் தேவைப்படும். பாடல் மட்டுமல்லாமல் பாடற்காட்சிகளும் அவ்வாறு செய்வதுண்டு. என்னை எப்போதும் அலைக்கழித்த பாடற்காட்சியாக சிப்பிக்குள் முத்து படத்தின் 'மனசு மயங்கும் மௌன கீதம் பாடு’ என்ற பாடலைச் சொல்ல முடியும். அந்தப் படம் வெளியானபோது நான் பார்க்க இயலவில்லை. பிற்காலத்தில் அதனைத் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில்தான் பார்த்தேன். அப்படியிருந்தும் என்னால் அந்தப் பாடல் காட்சியின் காதல் வலிமையைக் காணும் நெஞ்சுரம் போதவில்லை. பாட்டும் அதற்குச் செய்யப்பட்ட காட்சியும் உயிரை வதைப்பது ஏன் என்றே தெரியவில்லை. அப்பாடலைக் கண்டுமுடித்த ஒவ்வொரு முறையும் உள்ளுறுப்பில் ஏதோ ஒன்று குழைந்து மீள்கிறது. பாயும் குருதித் துகளில் பனித்தொற்று படிகிறது.



இளையராஜாவின் பாடல்கள் காதலுணர்ச்சியின் தனிப்பேரிசை என்றாலும் அதனைப் படமாக்கிய விதத்தில் நம் இயக்குநர்கள் எத்தகைய எல்லைக்கும் கீழிறங்கியே வந்திருக்கிறார்கள். அதனாற்றானோ என்னவோ அவர் இசையமைத்துக் கொடுத்த பாடல்கள் எவ்வாறு படமாக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்கும் ஆர்வத்தை இழந்திருக்கிறார், அதற்கு அவர்க்கு நேரமும் இருக்கவில்லைதான். 'மலையோரம் வீசும் காத்து’ பாடலைக் கடலோரம் படமாக்கியவர்கள் நம் இயக்குநர்கள். ஆனால், சில பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தில் அவருடைய இசைக்கோலங்களை நிகர்த்த காட்சிக் கோலங்களையும் காண முடியும். அவற்றில் ஒன்றுதான் 'மனசு மயங்கும் பாடல்’.
ஒரு பாடல் படத்தின் கதைச்சூழலில் நன்கு அமர்வதற்குக் காரணம் அப்படத்தின் இயக்குநர்தான். கதைச்சூழலைச் சொல்லி அதற்கு வேண்டிய பாடலைப் பெற்றுச் செல்லும் இயக்குநர் தாம் விரும்பியவாறு அதனைப் படமாக்கிக்கொண்டு வரவேண்டும். தமிழ்ப்படங்களில் பல பாடல்கள் இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. பாடலில் ஆடல் தேவைப்படுமென்றால் அது நேரடியாக ஆடலாசிரியரின் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும். அரங்கமைத்து எடுக்கப்படும் ஆடற்காட்சிகளை இயக்குபவர் அப்படத்தின் இயக்குநர் இல்லை என்பது பலர்க்கும் வியப்பாக இருக்கும். ஒரு படத்தின் பெரும்பொருட்செலவு பாடற்காட்சிக்கான அரங்குகளை அமைப்பதில்தான் செலவிடப்படும். ஆனால், அவ்விடத்தில் ஓர் இயக்குநரின் தலையைக் காண்பதே அரிதாக இருக்கும். நடனக்குழுவினரோடு தம் அடிப்பொடிகள் சூழ ஆடலாசிரியர்தான் அந்நடனக் காட்சியை எடுத்துக்கொண்டிருப்பார். படத்தின் பாடற்காட்சிகளை ஆடலாசிரியரும் சண்டைக் காட்சிகளை மோதலாசிரியரும் எடுத்துக்கொடுத்தது போக மீதமுள்ள காட்சிகளான உரையாடற்காட்சிகளை மட்டுமே ஓர் இயக்குநர் இயக்குகிறார். இதற்கு எதற்கு இயக்குநர் என்கிறீர்களா ? அஃதே உண்மை.
ஒரு படத்தின் முதன்மைப் படைப்பாளர் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி முதன்மை மேற்பார்வையாளராக மாறிப்போவதால்தான் இயக்குநர்கள் பலரும் தத்தம் பெருமையை இழந்து நிற்கின்றார்கள்.


பாரதிராஜாவைப் பற்றிய ஒரு செய்தி உண்டு. அவர் பாடற்காட்சிகளைத் தாமாகவே இயக்குவாராம். அதில் இடம்பெற வேண்டிய ஆடலையும் அவரே கற்றுக்கொடுத்து எடுத்து முடிப்பாராம். அதற்காக ஆடற்கலைஞர்கள் சங்கத்திலிருந்து 'ஒறுப்புக்கட்டணம்’ கேட்கப்பட்டாலும் அதனைச் செலுத்திவிடுவாராம். பாடலைப் படமாக்குவதில் அவர் அவ்வளவு முனைப்பைக் காட்டினார். ஆடலாசிரியர் கற்பித்து எடுத்துக்கொடுக்கும் பாடல்களால் அவர்க்கு நிறைவேற்படுவதில்லை என்பதனையே இது காட்டுகிறது. தம் படத்தின் ஒவ்வொரு சுடுவும் தாம் கற்பனை செய்தவாறு இருக்க வேண்டும் என்னும் பிடிவாதம். அதனாற்றான் பாரதிராஜா படங்களின் பாடற்காட்சிகள் தாழ்வில்லாமல் இருக்கின்றன. இளையராஜாவின் பாடல்களை நன்கு படமாக்கிக் காட்டியோருள் பாரதிராஜாவுக்கே முதலிடம். அதனைத் தம் முதற்படமான 'செந்தூரப்பூவே’ பாடற்காட்சியிலேயே மெய்ப்பித்துக் காட்டிவிட்டார்.
மகேந்திரன் படங்களில் இடம்பெறும் பாடல்கள் அவற்றின் உயிர்ப்பினை மேலும் ஈரமாக்கும் தன்மையோடு இடம்பெற்றன. “மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட’ என்னும் பாடலில் இழையும் 'கசப்பு மாறாத மகிழ்ச்சி மனநிலையை’ இன்னொருவர் படம்பிடித்துக் காட்டுவது கடினமே. இளையராஜாவின் பாடல்களை 'மாண்டேஜஸ்’ எனப்படும் காட்சித் தொகுதிக்கான பின்னணியாகப் பயன்படுத்துவதிலும் பலர் ஆர்வம் காட்டியிருக்கின்றனர். தம் படத்தில் ஒரு பாடலையேனும் அவ்வாறு வைத்துக்கொள்வதைப் பாலுமகேந்திரா விரும்பினார். திரைப்படங்களுக்கு வகுக்கப்பட்ட மேனாட்டு இலக்கணங்களின்படி காட்சித் தொகுதியின் பின்பாட்டாகவே இசைக்கோப்பு இடம்பெற வேண்டும்.

இளையராஜா பாடல்களை வேற்றுத் தளத்திற்கு நகர்த்திச் சென்றதில் மணிரத்தினத்திற்கும் பங்குண்டு. 'பூமாலையே தோள் சேரவா’ பாடலிலேயே அதற்குரிய ஊக்கத்தைக் காட்டியவர் மணிரத்தினம். அதன் பிறகு வந்த படங்களான மௌனராகம், அக்னிநட்சத்திரம், தளபதி ஆகிய படங்களில் ஒரு பாடலை எவ்வளவு மேன்மையாகப் படமாக்கலாம் என்றுணர்த்தினார். பிசி ஸ்ரீராம் போன்ற ஒளிப்பதிவாளர்கட்கு ஓர் இசைக்கோப்புக்கு எத்தகைய காட்சிக் கலையை முன்வைக்க வேண்டும் என்பது தெரியும். ஒரு பாடலைக் கண்ணுக்கினிய காட்சி விருந்தாக்கிய பெருமையே பிசி ஸ்ரீராமையே சாரும். உறுத்தாமல் பொருத்தமாய்ப் பாடற்காட்சிகளை வைப்பதில் பாலசந்தரும் இளைத்தவரல்லர். சில படங்கள்தாம் என்றாலும் அவற்றிலேயே சிறப்பாகச் செய்தவர். சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள் படப்பாடற் காட்சிகளை யாரால் மறக்க முடியும் ?
எல்லா இயக்குநர்கட்கும் இளையராஜாவின் பாடல்கள் மணிமணியாய்க் கிடைத்தன என்றாலும் அதனைத் தம் படங்களில் சிறப்பான காட்சிகளாக்கி வென்றவர்கள் சிலரே. கங்கை அமரனுக்குக் கிடைத்தவை எல்லாம் பிற இயக்குநர்கட்குக் கிடைக்கவேயில்லை. செல்வமணி, செந்தில்நாதன், மணிவண்ணன், பாக்கியராஜ், மனோபாலா, எஸ்பி முத்துராமன், ஆர் சுந்தரராஜன் என்று பட்டியல் நீளும். 'தாயம் ஒன்னு’ என்ற திரைப்படத்திற்கு முத்தான பாடல்கள் கிடைத்திருந்தும் அதனைத் தம் குழப்பமான திரைக்கதையால் வீணடித்தமைக்காக அதன் இயக்குநர் வருந்திக்கூறியது நினைவுக்கு வருகிறது.
இளையராஜாவின் பிறமொழிப் பங்களிப்பினையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். கே. விஸ்வநாத் இயக்கிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் தமிழ்ப் பாடல்களுக்கு ஒருபடியேனும் மேலாக விளங்கின. மொழிமாற்றுப் படங்களின் பாடல்களும் இங்கே புகழ்பெற்றன. இதயத்தைத் திருடாதே, உதயம், சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி ஆகிய படத்தின் பாடல்கள் தெலுங்குக்குச் செய்யப்பட்டவை. அவற்றில் சலங்கை ஒலிக்கும் சிப்பிக்குள் முத்துக்கும் தலைமை இடம் தரவேண்டும். தம் படத்தின் பாடற்காட்சிகளை இழைத்து இழைத்து உருவாக்கிய கற்றச்சராய்த் தோற்றமளிக்கிறார் கே. விஸ்வநாத். தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ள பெரியவரான கே. விஸ்வநாத் தெலுங்குத் திரையுலகிற்குச் செய்துள்ள பங்களிப்பு வாயடைக்கச் செய்கிறது. ஆந்திரத்தின் பேராற்றங்கரைகளில் அவர் ஆக்கியளித்த படக்காட்சிகள் பாடல்களை நிகர்த்து நிற்கின்றன.