Wednesday 29 April 2020

இர்ஃபான் கான்- `ஜுராசிக் பார்க்' பார்க்க காசில்லாதவர், `ஜுராசிக் வேர்ல்டு'-ல் நடித்த சாதனை!

சிறு வயதில் அவருக்கு ஓர் ஆசை இருந்திருக்கிறது. படங்களில் வருவதுபோல், ஒரு பெட்டி நிறைய பணத்தோடு தன் அம்மாவை சந்திக்க வேண்டுமென. அந்த ஆசையை நிகழ்த்தி, தன் அம்மாவை சந்தோஷப்படுத்தினாரா எனத் தெரியவில்லை. நிச்சயம் உலகம் கொண்டாடும் ஒரு நடிகனாகத் தன் அம்மாவை சந்தோஷப்படுத்தியிருப்பார்.


ஒரு நடிகனின் வேலை இன்னொருவனாக மாறுவது அல்ல. அந்த கதாபாத்திரத்தில் மறைந்துள்ள நிஜத்தை வெளிக்கொண்டுவருவதுதான். அப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அதன் உண்மையை நமக்கு உணர்த்தியவர், நடிகர் இர்ஃபான் கான். பாலிவுட்டில், கடந்த 20 ஆண்டுகளில் இர்ஃபான் நிகழ்த்தியவை யாரும் நினைத்துப் பார்க்க முடியாதவை. ஆனால் அந்த இடத்தை அடைந்து, அதைச் செய்துமுடிக்க அவர் செய்த நீண்ட காத்திருப்பும், கடின உழைப்பும் ஏராளம்.

1967-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தில் செல்வந்தர் வீட்டு மகனாகப் பிறந்தார் இர்ஃபான் கான். அவருடைய முழுப்பெயர் சஹாப்சாதே இர்ஃபான் அலி கான். இர்ஃபானுக்கு முதல் காதல், கிரிக்கெட் மீதுதான். கிரிக்கெட்டர் ஆகும் கனவோடு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி, ரன்களை விரட்டிக்கொண்டிருந்த அவருக்கு, ஒரு பெரிய தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருடைய பெற்றோர் அவரை விளையாட அனுமதிக்கவில்லை. அதனால் கிரிக்கெட் மீதான காதலைப் புதைத்துவிட்டு, படிப்பிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினார் இர்ஃபான்.



1984-ம் ஆண்டு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனக்குள் ஒளிந்திருக்கும் திறமையான நடிகனை அங்குதான் அவர் கண்டுகொண்டார். ஒருபுறம் எம்.ஏ டிகிரியும் படித்துக்கொண்டு, இன்னொருபுறம் நடிப்புக் கல்வியும் பயின்ற இர்ஃபான், நாடகக் கலையில் டிப்ளமோவும் முடித்தார். அவர் மும்பைக்கு வந்த நாள்களில், ஏர் கன்டிஷனர் மெக்கானிக்காகவும் பணிபுரிந்தார். அவர் முதன்முறையாக ஏர் கன்டிஷனர் பழுதி நீக்கியது, பாலிவுட்டின் லெஜெண்ட் ராஜேஷ் கண்ணா வீட்டில்.


1988-ம் ஆண்டு கோர்ஸ் முடியும் தருவாயில், மீண்டும் ஒரு அற்புதமான வாய்ப்பு இர்ஃபானைத் தேடி வந்தது. ஆஸ்கரின் சிறந்த அயல்நாட்டு சினிமா பிரிவில், இந்தியா சார்பாகப் பரிந்துரைக்கப்பட்ட 'சலாம் பாம்பே" திரைப்படத்தில் நடிக்க இர்ஃபானை தேர்வுசெய்தார், படத்தின் இயக்குநர் மீரா நாயர். ஆனால், சில காரணங்களால் படத்தின் ஒரே ஒரு காட்சியில் மட்டும்தான் மீராவால் இர்ஃபானை பயன்படுத்த முடிந்தது. இர்ஃபானின் 6 அடி 1 அங்குலம் உயரமே அதற்கு காரணமாகவும் சொல்லப்பட்டது. மனமுடைந்த இர்ஃபான், பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில், சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.



1995-ம் ஆண்டு, நேஷனல் ஸ்கூல் டிராமாவின் சக மாணவியும், எழுத்தாளருமான சுதாபா சிக்தாரை திருமணம் செய்துகொண்டார். இந்த இணையரின் காதலுக்கு, பபில் மற்றும் அயன் என இரு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 12 வருடங்கள் இப்படியே கடந்து சென்றன. ஒரு கட்டத்தில், நடிப்புத்தொழிலையே மொத்தமாக விட்டுவிடலாம் என எண்ணியவருக்கு, கடல் கடந்து ஒரு வாய்ப்பு வந்தது. பிரிட்டிஷ் இயக்குநரான ஆசிஃப் கபாடியா, தன்னுடைய 'தி வாரியர்' படத்தின் கதாநாயகன் வேடத்தை இர்ஃபானுக்குத் தந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்தார். பாலிவுட்டில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், நல்ல நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடிக்க ஆரம்பித்தார் இர்ஃபான். பிரமாதமான நடிகனாகப் பரிணமித்தார்.

2005-ல் வெளியான `ராக்' திரைப்படம், இர்ஃபான் ஹீரோவாக நடித்த முதல் கமர்ஷியல் படமாக அமைந்தது. அவர் பெயரில் இருக்கும் கூடுதலான ஒரு `R'-க்கு காரணம், நியூமராலஜி அல்ல. அவ்வாறாக அழுத்தி தன் பெயரை உச்சரிப்பது, அவருக்குப் பிடிக்கும் என்பதுதான். 'மெட்ரோ', 'பான் சிங் டோமர்', 'தி லன்ச்பாக்ஸ்' என வித்தியாசமான கேரக்டர்கள் முலம் அனைவரையும் வியக்கவைத்தார். இந்திய சினிமாவைத் தாண்டி உலக அளவிலும் தனக்கான முத்திரையைப் பதித்தார் இர்ஃபான். 'ஸ்லம்டாக் மில்லினியர்', 'லைஃப் ஆஃப் பை', 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்', 'இன்ஃபெர்னோ' என உலகம் முழுதும் தன் நடிப்புக்கு தனி ரசிகர்களை உருவாக்கினார். ஆஸ்கர் விழாவில் இவரைப் பார்த்த ஜூலியா ராபர்ட்ஸ் 'நான் உங்கள் ரசிகை' என சொல்லிச் சென்றிருக்கிறார்.



மாபெரும் ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், தனது `இன்டர்ஸ்டெல்லார்' படத்தின் முக்கியமான வேடத்தில் நடிக்கவேண்டி இர்ஃபானை அணுகினார். ஆனால், அப்போது `லன்ச் பாக்ஸ்' மற்றும் `டி டே' கமிட்டாகியிருந்த காரணத்தினால் மறுத்துவிட்டார். `ஸ்லம்டாக் மில்லினியர்' மற்றும் `லைஃப் ஆஃப் பை' என இரண்டு ஆஸ்கர் திரைப்படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் இர்ஃபான்தான். தன் நடிப்பிற்கான பல அங்கீகாரங்களைப் பெற்ற இர்ஃபான், இன்று நம்மோடு இல்லை. அவர் தாய் இறந்து மூன்றே நாள்களில் அவரும் பிரிந்துவிட்டார். சிறு வயதில் அவருக்கு ஓர் ஆசை இருந்திருக்கிறது. படங்களில் வருவதுபோல், ஒரு பெட்டி நிறைய பணத்தோடு தன் அம்மாவை சந்திக்க வேண்டுமென. அந்த ஆசையை நிகழ்த்தி தன் அம்மாவை சந்தோஷப்படுத்தினாரா எனத் தெரியவில்லை. நிச்சயம் உலகம் கொண்டாடும் ஒரு நடிகனாக உயர்ந்து, தன் அம்மாவை சந்தோஷப்படுத்தியிருப்பார்.





1993-ம் ஆண்டு `ஜுராசிக் பார்க்' வெளியானபோது, அதற்கு டிக்கெட் எடுக்க காசில்லாமல் இருந்த இர்ஃபான், பின்னாளில் `ஜுராசிக் வேர்ல்டு' படத்தில் நடித்தார். அவர் ஆறடி உயரத்திற்குக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக, அவர் நிராகரிப்புக்கும் ஆளாகியிருக்கலாம். ஆனால், புகழின் இந்த உயரத்தை அடைய, அவர் மட்டுமே காரணம். அவர் கடின உழைப்பும் விடா முயற்சியுமே காரணம். அதில் அவரை யாராலும் நிராகரிக்க முடியாது. காலம் கடந்து நிற்கக்கூடிய பெரும் கலைஞன் இர்ஃபான்.

Sunday 26 April 2020

மலையாள சினிமா - நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை.

மலையாள திரைப்படங்கள் என்பதே தமிழனுக்கு எதிரானது போல.
தமிழகத்தில் ஏன்? மலையாளபடமும் மலையாள நடிகர் நடிகைகளை கொண்டாட வேண்டும். தடுத்தால் என்ன??
மலையாள சினிமா - நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை.
நான் ஏன் திராவிடன் இல்லை?
இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான்.
தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன.



80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும், நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.)
பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.
கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார்.
“சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர். இதை நான் வெளியே சொல்லமுடியாது. சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று. பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு.


மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா, சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.
கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள்.
80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம். துல்லியமான middile cinema உருவாகியிருந்தது. ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும், எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.
மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயமே. திலகனுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன். லோகிதாசை ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.
அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன். பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு நெருக்கமே.
20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன். அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம். (கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.)
கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன். முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.
இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை.
மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள்.
மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது. தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.
வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான்.
பொள்ளாச்சி கவுண்டராக,  உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால் அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா” என மாரில் ஏறி மிதிப்பார்.
பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா? (கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்) தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார். இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.

மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷநாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார்.
மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம் போதவில்லை.
கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது. அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள். அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும் ”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள்.

(இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.) கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா…..?
சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது. கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.) இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு.

தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள்.
கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு. இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள்வாங்கவில்லை. கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”. வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள். (ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது.

தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா
அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.
அரசியல், முல்லை பெரியாறு அணை, தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன் (முதல் மரியாதை), ரகுமான், கரண், வினித், ஜெயராம்,  அஜித், பரத், நரேன், அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும். நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை. தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு.

எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது. அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது. இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே.

கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே. மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள்.
இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும், கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு. தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை.
பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம் படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.
எனக்குத் தெரிந்து மலையாளப்படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான். 81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ) அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார். அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை. கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார். அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை.
ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத்திரையில் தென்படுவதுண்டு. பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான். பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.
இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார். இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை. அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள். பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.
அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள். ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என. இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை.
பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள். உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள். பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே. ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்). அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே. இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.
பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே. பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.
பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே. அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார். முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது. சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.
ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை. மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே.
கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.

அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை. ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது. சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?
ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.
சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது. மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார். முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது. சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.
அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள். திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார். இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர். எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள். தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.
இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா. இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது. வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே.

விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக். அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.
சரி கேரளத்துக்குத் திரும்புவோம். சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.
”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது. ஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது. சேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே. அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’ நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.
இந்தப் பாண்டிகளின் தலைநகரில்தான் மலையாள் நடிக, நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன். மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது.
ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது.

ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’. ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார். அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.
தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன. காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர, "பாவம் இந்தப் பாண்டிகள்" என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள்.
கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட செய்ய முடியாது. திரையரங்கம் சூறையாடப்படும். ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.
தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார். மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள். வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.
நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு. கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே.
இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது. மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம், ”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.
தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு. அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம். ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர் விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில்  ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும், ’சொப்பன சுந்தரிகளும்’  ’அடிமாடு’ களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு. அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு. (மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள். நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்).
கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக்கூடியவர்கள்.
வாதிடக்கூடியவர்கள். அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.
கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு. ”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.
1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது.

(முழுமையான பட்டியல் வெகு நீளமானது)
1. நாடோடிக் காற்று-
மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்
2. நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986
3. யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987
4. இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983
5. சித்ரம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989
6. நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990
7. முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987
8. வந்தனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991
9. மிதுனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
10. விஷ்ணு – மம்முட்டி - - 1993
11. கிலுக்கம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
12. பிங்காமி - மோகன்லால் – சிபிமலயில் – 1997
13. மழவில் காவடி – ஜெயராம் – 1990
14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990
15. ஐட்டம் –மோகன்லால் - 1985
16. மணிசித்ரதாழ் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994
17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008
18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006
19. தாழ்வாரம் – பரதன் – 1987
20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005
21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000
22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998
23. சேக்ஸ்பியர் M.A இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008
24. பிளாக் – மம்முட்டி – 2004
25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006
26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004
27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005
28. பளிங்கு - மம்முட்டி – பிளஸ்ஸி – 2006
29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007
30. பிரம்மரம் - மோகன்லால் – பிளஸ்ஸி – 2009
31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003
32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999
33. நரன் – மோகன்லால் – 2005
34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002
35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001
36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி - சத்யன் அந்திக்காடு – 2005
37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005
38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002
39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003
40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000
41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி - 1998
42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000
43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999
44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006
45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001
46.ஏகேஜி – 2007
47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998
48. பகல் பூரம் – முகேஷ் – 2000
49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992
50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு - 2003
இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும்.
மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.
எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது.
மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் . தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் "இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார்.
M.G.R ன் விரிவாக்கம் அதுவே.. அவர் ராமசந்திரன் அல்ல ராம்சந்தர் தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன். அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும். 1972ல் பெரியார் மலையாள எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார். சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார். …….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்)

ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது.
சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.

நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை. நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .
மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர். எல்லோர் கையிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது. சேகுவாரா தேசமே நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் நாம்?. நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.
நன்றி சாம்ராஜ்
8 ஜூன், 12:47 AM ·
M Boopathy Raja அவர்களின் பதிவு.
நன்றி- குறவன் மக்கள் நலச் சங்கம்

Wednesday 15 April 2020

காலத்தை வென்ற காவியத் தலைவன்

நல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில் மட்டுமன்றி உலக மக்கள் மனதிலும் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறார். இவரின் புகழை எந்தக் காலத்திலும் எவராலும் எட்டிவிட முடியாது.


தர்மத்தின் காவலனாய், கொடையிலே கர்ணனாய், கலையிலே மன்னனாய், கருணையிலே பொன்மனச் செம்மலாய், கருத்துக்கொள்கையிலே புரட்சித் தலைவராய், ஏழைகள் இதயத்திலே மன்னாதி மன்னனாய், மக்கள் மனதிலே திலகமாய் ஒளிர்ந்த எம்.ஜி.ஆர். மனிதருள் மாணிக்கமாகத் திகழ்ந்தார். இவரது கருணைப் பார்வை பட்டு எண்ணற்ற மக்கள் வளமான வாழ்வு பெற்றனர். இவர் ஏழைகள் மீது தன் உயிரையே வைத்திருந்தார்.
இந்தியாவிலுள்ள கேரளாவிலிருந்து வந்து ஈழவள நாட்டின் கண்டிமா நகரிலே குடியிருந்த மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியவதி அம்மையாருக்கும் 17.01.1917ஆம் ஆண்டு கடைக்குட்டியாக எம்.ஜி. இராச்சந்திரன் பிறந்தார். இவருடைய உண்மைப் பெயர் ராம்சந்தர் நாயர். இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கவே ஈழத்தினின்றும் தமிழகத்திற்குத் தன் பிள்ளைகளுடன் குடிபெயர்ந்த அன்னை சத்தியவதி, வறுமையின் கோரப்பிடியில் வாடினார். பிள்ளைகளுக்கு ஒருநேரக் கஞ்சி ஊற்றவே கதியற்றுக் கலங்கினார். இதனால், எம்.ஜி.ஆர். 3ஆம் தரத்துடன் கல்விக்கு முழுக்குப் போட்டார்.
அன்னை தான் தெய்வம் என நினைந்து, தாய் சொல் தட்டாத உத்தமபுத்திரனாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தன் அன்னை வறுமையால் வாடுவதைச் சகிக்க முடியாத இவர், தனது 7ஆவது வயதில் அண்ணன் சக்ரபாணியுடன் இணைந்து நாடக மன்றங்களில் நடித்து வந்தார். பின்னர் 19ஆவது வயதில் ‘சதிலீலாவதி’ எனும் திரைப்படத்துடன் திரையுலகில் காலடி பதித்தார். தனது 30ஆவது வயதில் அதாவது, 1947ஆம் ஆண்டு ‘ராஜகுமாரி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்துப் பெற்றார். எனினும், வறுமை அவரை விட்டுப் போவதாக இல்லை.
இவ்வுலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கார்ல் மார்க்ஸின் தத்துவத்திற்கிணங்க எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் மாற்றம் வந்தது. 30 வயதுக்கு மேல் ‘சந்திரோதயம்’ 40இற்கு மேல் ‘சூரியோதயம்’ என்று சடுதியாகத் திரையுலகில் வளர்ந்தார், இமயமென உயர்ந்தார். அறிஞர் அண்ணாவின் நிழலில் அருமைத் தம்பியாக வளர்ந்த இவர், நன்றி மறவாத நல்மனம் படைத்தவராகக் கடைசிவரை வாழ்ந்தார். தனது திரைப்பாடல்கள் மூலம் அண்ணாவை அவர் போற்றிவந்தார்.
கலையுலகில் சந்திரனாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த வேளை, 1977ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சரானார். அரசியல், சமுதாய நோக்கம் நிறைவேறக் கலை சிறந்த சாதனம் என்பதை நிரூபித்துக் காட்டிய எம்.ஜி.ஆர், தமிழகத்தில் முதலமைச்சராகிய முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர். தனது கலையுலக வாரிசான செல்வி ஜெயலலிதா ஜெயராமை அரசியலிலும் வாரிசாக்கி, தான் வரித்துக்கொண்ட அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமித்தார்.
பெரியார் வழி நின்று, பெருந்தலைவர் காமராஜர் கொள்கையைப் பின்பற்றி ஏழைகள் வாழ்வு ஏற்றம் காண உண்மையாக உழைத்த உத்தமரான எம்.ஜி.ஆர், ஏழைகளுக்குக் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தவர். ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை, பாடசாலைகள் ஸ்தாபித்தவர். ஏழைச் சிறார்களுக்கெனச் சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர். தன் சொத்துக்கள் யாவையுமே ஏழைகளின் இதய வங்கிகளில் வைப்புச் செய்தவர். பெண்கள் மீது தனி மரியாதை செலுத்தி, எல்லோரையுமே அன்னையராய், அன்புச் சகோதரிகளாய் மதித்தவர். அம்புலி காட்டி அமுதூட்டும் அன்னையர் வாழும் தமிழ் நாட்டில் – சந்திரனே வந்து அன்னையர்க்கும் சோறூட்டிய கலியுக வள்ளலாகத் திகழ்ந்தவர்.
ஈழத் தமிழர்கள் பால் அளவற்ற பற்றும் பாசமும் கொண்ட இவர், ஈழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தனது சொந்த நிதியிலிருந்து இருகட்டங்களாக மொத்தம் 6 கோடியே 37 இலட்சம் ரூபாவைக் கொடுத்து உதவியவர். அதுமட்டுமன்றி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருடனும் நெருங்கிப் பழகிய இவர், ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர்.
மக்கள் துயர் துடைத்து – மக்கள் பணி புரிந்து – மக்களுக்காகவே இறுதிவரை வாழ்ந்ததால், ‘மக்கள் திலகம்’ என்றும் – புன்சிரிப்போடு பொன் பொருளை வாரி வாரி வழங்கியதால், ‘பொன்மனச் செம்மல்’ என்றும் – நடிப்புலகில் புதுமைகளைப் புகுத்தியதால், ‘புரட்சித் தலைவர்’ என்றும் – மக்களுக்கெல்லாம் தன் நடிப்பின் மூலம் பாடம் புகட்டி வந்ததால், ‘வாத்தியார்’ என்றும் – பாரத நாட்டின் ஒப்பற்ற தலைமகன்களில் ஒருவராக விளங்கியதால், ‘பாரத ரத்னா’ என்றும் – கலையுலகில் இணையற்று விளங்கியதால், ‘கலையுலக மன்னன்’ என்றும் பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் வென்ற எம்.ஜி.ஆர். உண்மையில் ஒரு தனிப்பிறவி தான்.
பெயருக்குள் பொதிந்திருக்கும் எண் பொருத்தத்தில் மேலை நாட்டவர்களும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில், இவரது மூன்றெழுத்து இரகசியம் (எம்.ஜி.ஆர்.) ஜோதிட உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதாவது, மருதூரைக் குறிக்கும் ஆ எழுத்தையும் தகப்பனாரான கோபாலமேனனின் முதல் எழுத்தான பு எழுத்தையும் இராமச்சந்திரன் என்கின்ற தனது முதல் எழுத்தான சு ஐயும் உன்றிணைத்து ஆ.பு.சு. என்று தனது பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொண்டவர். இப்பெயர்ச் சுருக்கத்தின் அதிர்ஷ்ட பலனே அவரது அனைத்து வெற்றிகளுக்கும் உறுதுணையாக அமைந்திருந்தது என்று ஜோதிட உலகில் வியப்புடன் பேசப்படுகிறது. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்…” என்று அவர் பாடி நடித்ததைப் போன்று அவரது புகழ் என்றுமே அழியாது.
மேலும், “காலத்தை வென்றவன் நீ, காவிய நாயகன் நீ…” என்று அடிமைப்பெண் திரைப்படத்தில் ஜெயலலிதா பாடி நடித்தது போன்று எம்.ஜி.ஆர். காலத்தை வென்று வாழ்கிறார். இவர் மண்ணுலகிலே மூன்று தடவைகள் உயிர் பிரியும் அளவுக்குக் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு மக்கள் பிரார்த்தனையால் தப்பியவர். நான்காவது தடவை ஏற்பட்ட அந்நோயினால் இவ்வுலகை விட்டுப் பிரிந்தவர்.
எல்லோருக்கும் நல்லவரான, ஏழைகளின் இதயத்தில் நிறைந்தவான எம்.ஜி.ஆர்., சொல்லும் செயலும் ஒன்றாய்ச் சேர்ந்த சாதனைத் தலைவர். இன்று அவர் எம்மத்தியில் இல்லை. இப்படி ஒருவர் பிறந்ததில்லை, இனியும் ஒருவர் பிறப்பதில்லை எனும் அளவிற்கு வாழ்ந்து காட்டியவர். நீதிக்குத் தலைவணங்கிய நல்ல இதயம், நாடோடி மன்னனாக வலம் வந்த அன்பு உள்ளம் தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து 24.12.1987ஆம் ஆண்டு பிரிந்து சென்றுவிட்டது.
காலத்தை வென்றவர், காவிய நாயகர், கருணையின் தூதுவர் எம்.ஜி.ஆர். கடையெழு வள்ளல்கள் வடிவினில் உலவிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். தோன்றிற் புகழொடு தோன்றுக ன்ற குறளுக்குச் சான்றாய் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர் துயர்;தனைத் துடைத்திட மீண்டும் இந்த மண்ணிலே பிறக்க வேண்டும் எம்.ஜி.ஆர்.