Sunday 1 July 2012

கோலிவுட்டைக் கலக்கும் சூடான வதந்தி!



கோலிவுட்டில் ஒரு செய்திதான் படு ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது வதந்தியாகத்தான் இப்போது பரபரப்பாகிக் கிடக்கிறது என்றாலும் உண்மையானதாகவும் கூறப்படுகிறது.

நல்ல கருப்பு நிறமுடைய உயரமான நடிகர் அவர். தற்போதைய இளம் ஹீரோக்களில் நல்ல டிமாண்ட் உடையவர். அதிரடி படங்களிலும், அட்டகாசமான கெட்டப் சேஞ்சிலுமாக கலக்கியவர். முத்திரை இயக்குநரின் 'டபுள் ஹீரோ' படத்தில் வித்தியாசமான 'கெட்டப்பில்' கலக்கலாக நடித்தவர்.

இவருக்கும், முக்கியமான சீனியர் நடிகரின் முதல் மனைவியின் மகளுக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டிருக்கிறதாம். இதுதான் கோலிவுட்டில் இப்போது படு ஹாட்டாக பேசப்படுகிறது.

இந்த செய்தியால் அந்த சீனியர் நடிகர் படு கோபமாக இருக்கிறாராம். அவரே ஒரு 'பஞ்சாயத்து'ப் பேசும் நடிகர், அவரது வீட்டுக்கே பஞ்சாயத்து வந்து விட்டதே என்று சீனியர் நடிகரின் சுற்றத்தார் டென்ஷனாகிக் கிடக்கிறார்களாம்.

இளம் நடிகரைப் பாய்ந்து கடித்துக் குதறி விடுவது என்று கோபத்தில் கொந்தளித்த நடிகரை, அவரது 2வது மனைவிதான் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தி வைத்துள்ளாராம்.

மகளையும் கண்டிக்க முடியாமல், அந்த நடிகரையும் கண்டிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சீனியர் நடிகர், விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள முயற்சித்து வருவதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே இந்த இளம் நடிகரின் குடும்பத்தார் மீது படத் தயாரிப்பு தொடர்பாக சீனியர் நடிகரின் 2வது மனைவி பஞ்சாயத்துக் கிளப்பியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே, இளம் நடிகர், சீனியர் நடிகரின் மகளுடன் நட்பு பாராட்டுவது பழி வாங்கும் படலமா என்ற சந்தேகப் பார்வையும் கோலிவுட்டில் எழுந்துள்ளதாம்.

ஆனால் இதைப் பற்றி இளம் நடிகர் கவலையேபடவில்லையாம். அதேபோல சீனியர் நடிகரின் மகளும் கவலைப்படவில்லையாம். இருவரும் சேர்ந்து இப்போது ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்த செய்தியின் ஹைலைட்டாகும்.

கண்ணதாசன் ஸ்டைலில் நா.முத்துக்குமார்



8 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருப்பவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
நினைத்து நினைத்து பார்த்தேன், அக்கம் பக்கம் யாருமில்லா, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என அவருடய பல நூற்றுக்கணக்கான பாடல்கள் அவரது தனித்தன்மையை உறுதி செய்துகொண்டு, இசையுலகில் பிரபலமாக திகழ்பவை.

நான் கவிஞர் கண்ணதாசன் போல இசையமைப்பாளர் முன்னிலையில் உட்கார்ந்து, மெட்டு போட்டவுடன் பாடல் எழுதுவதையே விரும்புகிறேன். அதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எனும் நா.முத்துக்குமாரிடம், அவருடைய கவிப்பயணம் குறித்து கேட்ட போது,

ஒருபாடல் எழுத அரைமணியிலிருந்து, 2 மணி நேரத்துக்குள் ஆகும். ஒரு படத்துக்கு 5 இலிருந்து 6 பாடல்கள் தேவைப் பட்டாலும் அதை ஒரே நாளிலேயே எழுதி முடித்து விடுவேன். மிக எளிமையான நடையில், ஆழமான கருத்துக்களை இனிமையாகவும் கொடுத்து விடுவதாக இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் சொல்கிறார்கள். நானும் அப்படிக் கொடுப்பதைத்தான் கொள்கையாக வைத்திருக்கிறேன். அதோடு நான் எழுதும் பாடல் வரிகள் காட்சிப்பூர்வமாக இருப்பதாகவும், கதையை விளக்கி சொல்ல வசதியாகவும் இருப்பதாக இயக்குனர்கள் சொல்கிறார்கள்.

நடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்றாலும், உணர்ச்சிப் பூர்வமாக பாடல் வரிகளை விரைவில் கொண்டுவருவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால்தான் பாடல் வரிகளே காட்சியை விவரிக்கும் படி என்பாடல்கள் அமைந்து விடுகிறது. தோனி திரைப்படத்தில் வரும் வாங்கும் பணத்துக்கும் பாக்குற வேலைக்கும் சம்மந்தமில்லை என்கிற பாடல் இளைஞர்களைக் கவரும் விதமாக அமைந்திருந்தது.

நிறைய இளைஞர்கள் என்னைப் பாராட்டினார்கள். தோனி படத்தில் அனைத்துப் பாடல்களும் நான்தான் எழுதினேன். இப்போது கவுதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் 8 பாடல்களும் நான்தான் எழுதியிருக்கேன். மும்பையில் எழுதி பதிவு செய்தோம். அதன்பிறகு சிம்பொனி இசைக்காக கவுதம் மேனனும், இசைஞானியும் லண்டன் சென்றார்கள்.

நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் அத்தனைப் பாடல்களும் மிக நன்றாக வந்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள இசைஞானியின் ரசிகர்களுக்கு இது நல்ல விருந்தாக இருக்கும் என்கிறார்.

இவரின் கைவண்ணத்தில் 60 க்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட திரைப்படங்கள் வெளிவரத் தயார்நிலையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Friday 11 May 2012

நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!



நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.

திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர்.

முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை

ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.

Wednesday 9 May 2012

'கல்யாணத்தை' பெரும் தொகைக்கு விற்ற சினேகா - பிரசன்னா ஜோடி!



கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், நாளை மறுநாள் தம்பதியராகப் போகும் சினேகாவும் பிரசன்னாவும்.

தங்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையை விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்கள் இந்த இருவரும்.

பொதுவாக முன்பெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியின் வீடியோவை இலவசமாகத்தான் கொடுத்து வந்தார்கள் டிவிக்களுக்கு.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் ஸ்பான்சர்கள் பிடித்து டிவி நிறுவனங்கள் கல்லா கட்டுவதைப் பார்த்ததால், 'நாம லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் திருமண நிகழ்ச்சியை வைத்து இவர்கள் சம்பாதிக்கும்போது, அதில் கணிசமான பங்கை நமக்குக் கொடுத்தால் என்ன?' என்ற எண்ணத்தோடு சினேகாவும் பிரசன்னாவும் ரேட் பேச, டிவி நிறுவனமும் பெரும் தொகை தர சம்மதித்துவிட்டதாம்.

மொய் வருதோ இல்லையோ, திருமண வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே பெரும் தொகை கல்யாண வீடியோவுக்கு விலையாகக் கிடைத்திருப்பதில் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் செம சந்தோஷமாம்.

போகிற போக்கைப் பார்த்தால் வரும் நாட்களில் நடிகர் நடிகைகள் வீட்டு, காது குத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வளைகாப்புகள் என எல்லா நிகழ்வுகளின் வீடியோக்களுமே விற்பனைக்கு வரும் போலிருக்கிறது!

டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!!



பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது, நாத்தனாரின் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மகனிடம் இருந்து மருமகளை பிரித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது எப்படி என்றுதான் இந்த சீரியல்கள் பெரும்பாலும் கவலைப்படுகின்றன.

இன்னொரு கொடுமை, கஸ்தூரி, உறவுகள், இளவரசி, தங்கம், தென்றல், செல்லமே, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திற்கு இரண்டு மனைவி கண்டிப்பாக இருக்கும்.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் கொஞ்சம் மரியாதை இருந்தது. தென்றல் சீரியல் மூலம் அந்த பெயர் பாதி கெட்டுப்போனது. மீதியை திருமதி செல்வம் இப்போது கெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவள் கணவனை அதுவும் நேற்றுவரை நண்பனாக கருதியவனை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டமிட்டு சாதிக்கிறது ஒரு கதாபாத்திரம் பார்க்கும் போதே எரிச்சலும், அந்த இயக்குநர் மீது ஆத்திரமும் ஏற்படுகிறது பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் மத்தியில் செல்வத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது அதை கெடுத்து விட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறானாம், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாளாம். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்களாம். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக இருக்கிறாளாம். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாளாம். சினிமாவில்தானய்யா இப்படியெல்லாம் வரும்.. டிவி சீரியலிலுமா...

இனி சொல்லவே வேண்டாம். கணவர் ராமனாகவே இருந்தாலும் குல குத்துவிளக்குகள் நம்பப்போவதில்லை. எத்தனை தம்பதிகள் பிரிய காரணமாக இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டாரோ இந்த இயக்குநர். இவரேதான் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரையும் இயக்குகிறார். அந்த தொடரில் கேட்கவே வேண்டாம் கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். தமிழ் கூறும் நல்லுலகம் இதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

இதுதான் என்றில்லை, கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இப்படித்தான் கன்றாவிக் கட்சிகள் களேபரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.

நல்லவேளையாப் போச்சு, தமிழ்நாட்டில் 75 சதவிகித ஊர்களில் அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. தப்பின குடும்பங்கள்!...

Monday 9 April 2012

சிங்கத்தோட சேரும் துப்பாக்கி!



இயக்குநர் ஹரி, நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க இருக்கிறார் என கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவரை இயக்குநர் ஹரி படத்தில் விஜய் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘வேலாயுதம்’ வெற்றிக்குப் பின்னர் விஜய்யை, ஹரி சந்தித்ததாகவும் அப்போது ஒரு லைன் ஸ்க்ரிப்ட் ஒன்றை விஜய்யிடம் சொல்லி உடனே ஓகே வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ‘துப்பாக்கி’யில் விஜய்யும், ‘சிங்கம் 2′ல் ஹரியும் பிஸியாக இருப்பதால், முறையே தங்களது புராஜெக்டுகளை முடித்துக் கொண்டு புதிய படத்திற்காக இருவரும் இணைவார்கள் என கூறப்படுகிறது.

கோச்சடையான் - புயல் வேக ரஹ்மான்



ரஹ்மானிடம் டியூன் வாங்குவது புயலுக்கு நடுவில் பூ பறிக்கிறதுக்கு சமம். திண்டாடிவிடுவார்கள். இந்திப் படவுலகின் ஜம்பவான்கள் டியூன் கிடைக்க ரஹ்மான் ஸ்டுடியோவில் தவம் இருப்பதுண்டு. ஆனால் இருவருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறார் இசைப்புயல். ஒருவர் மணிரத்னம். இன்னொருவர் ர‌ஜினி.

கோச்சடையானின் முதல் ஷெட்யூல் லண்டனில் முடிந்திருக்கிறது. இரண்டாவது ஷெட்யூல் கேரளாவில் விரைவில் தொடங்க உள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என ர‌ஜினியே உத்தரவாதமளித்திருக்கிறார். ரஹ்மான் இசையமைக்கும் ஒரு படம் இத்தனை வேகத்தில் தயாராவதஅதிசயம்.

ர‌ஜினியின் படம் என்பதால் முதல் ஷெட்யூல் முடிவதற்குள் மொத்தம் உள்ள ஐந்து பாடல்களில் நான்குப் பாடல்களை கம்போஸ் செய்து சிலவற்றின் ஒலிப்பதிவையும் முடித்திருக்கிறார் ரஹ்மான்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ர‌ஜினியுடன் சரத்குமார், ஜாக்கிஷெராப், நாசர், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday 8 April 2012

அடுத்து, பாண்டவர்களின் நாயகி திரவுபதியாகிறார் நயனதாரா!



ராமனின் மனைவி சீதையாக நடித்து கலக்கிய நயனதாரா அடுத்து பஞ்ச பாண்டவர்களின் மனைவியான திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயனதாரா. அவர் இந்த வேடத்தில் நடிக்க வரும்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பெண்ணிடமிருந்து அவரது கணவரைக் கவர துடிக்கும் நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதா என்பதே இந்த எதிர்ப்புக்கு காரணம்.

இருந்தாலும் தெலுங்குப் பட நாயகன் என்டிஆர் பாலகிருஷ்ணா அதைப் பொருட்படுத்தாமல் நயனதாராவை சீதையாக நடிக்க வைத்தார். படமும் வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சீதைக்குத்தான் செம வரவேற்பு.

இதனால் புளகாங்கிதமடைந்து போன பாலகிருஷ்ணாவை மறுபடியும் நயனதாராவை வைத்து இன்னொரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த முறை நயனதாராவை திரவுபதியாக்கப் போகிறாராம் பாலு. பல வருடங்களுக்கு முன்பு திரவுபதி கதையை படமாக்க முடிவு செய்திருந்தார் இவர். அந்த வேடத்தில் மறைந்த செளந்தர்யாவை நடிக்க முடிவு செய்து படமும் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் படத்தை கைவிட்டார் பாலகிருஷ்ணா.

தற்போது நயனதாராவின் அபாரமான நடிப்பால் அசந்து போய் விட்ட பாலகிருஷ்ணா, அவரையே திரவுபதி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இதுதொடர்பாக நயனதாராவிடம் பேசியுள்ளாராம். அவரும் சம்மதிப்பார் என்று தெரிகிறது.

படத்திற்கு நர்த்தன சாலா என்று பெயரிட்டுள்ளார் பாலகிருஷ்ணா. நயனதாரா தலையை ஆட்டியவுடன், படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணா.

படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு என்ன கேரக்டர் என்று தெரியவில்லை. ஒரு வேளை திரவுபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ணராக நடிப்பாரா அல்லது தர்மன் வேடத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.

'பெப்சி' விவகாரத்தில் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார் பாரதிராஜா-அமீர் புகார்



பெப்சி தொழிலாளர்கள் விவகாரத்தில் எனது போக்கு பிடிக்காத காரணத்தால், தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து என்னை நீக்கி என்னை பயமுறுத்தப் பார்க்கிறார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

பெப்சி தொழிலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா தலையிடுவார், நமக்கு சாதகமாக செயல்படுவார் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் நினைத்தது. இருப்பினும் ஜெயலலிதா இதைக் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் தொழிலாளர் நலத்துறை வசம் இப்பிரச்சினையை அது ஒப்படைத்துள்ளது.

தொழிலாளர் நலத்துறை தரப்பில் பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. ஆனால் தொழிலாளர் நலத்துறையினர் தங்களை அவமானப்படுத்தும் வகையில் நடத்துவதாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், தற்போது பெப்சிக்குப் போட்டியாக தயாரிப்பாளர்கள் ஒரு சங்கத்தை ஆரம்பித்து படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கும், அமீருக்கும் இடையிலான மோதல் முற்றத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாது, அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அதையும் மீறி தனது அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தின் நாயகனாக அமீரை புக் செய்தார் பாரதிராஜா.அப்போதே பலருக்கும் சந்தேகம், இது ஒத்துவருமா, நடக்குமா என்று.

இப்போது பெப்சி விவகாரத்தை வைத்து இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். பெப்சிக்கு படு தீவிர ஆதரவு கொடுத்து வரும் அமீரை வைத்து படம் எடுப்பதா என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பில் பாரதிராஜாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக கேள்வி. பாரதிராஜாவுக்குமே கூட அமீர் பெப்சிக்கு தீவிர ஆதரவு தெரிவிப்பதில் எரிச்சல்தான் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அன்னக்கொடி படத்திலிருந்து அமீ்ரை தூக்கி விட்டார் பாரதிராஜா.

இதுகுறித்து அமீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் நான் தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறேன். இது பாரதிராஜாவுக்கு பிடிக்கவில்லை. நான் தொழிலாளர் பக்கம் நின்றது தவறு என்று கருதி என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார்.

நான் தொழிலாளர் பக்கம் நின்றது தவறு என்றால் தொடர்ந்து அந்த தவறைச் செய்வேன். தனது படத்திலிருந்து தூக்கி என்னை பயமுறுத்துகிறார் பாரதிராஜா. ஆனால் நான் அவருக்கு பயப்படமாட்டேன். தொடர்ந்து தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்பேன்.

பெப்சி விவகாரத்தில் தற்போது தமிழக அரசு தலையிட்டுள்ளது. மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அப்போது சுமூக முடிவு காணப்படும் என்றார்.

பிரியாமணியின் கவர்ச்சி மலையாளத்தில் பிசு பிசுப்பு: அண்மைய படம் படுதோல்வி!



பிரியாமணியின் ஆரம்ப கால தமிழ் படங்கள் பெரிதாய் போகவில்லை. தமிழில் ராசியில்லாத நடிகையாக வலம் வந்தவர். ”பருத்தி வீரன்” படத்தில் முத்தழகு பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையானார்.
அதன் பின்னர் அவரது போதாத காலம், தமிழில் அடுத்து வந்த படங்கள் தோல்வியை தழுவியதால் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் தலைகாட்ட தொடங்கியவர், அங்கு படு கவர்ச்சியாக, முகம் சுழிக்க வைக்கும் பாத்திரங்களில் துணிந்து நடித்து வந்தார்.
அவரது அத்து மீறிய கவர்ச்சி மலையாள ரசிகர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாலோ என்னவோ அவரது அண்மைய மலையாள படமான ”பிரஞ்சியத்தன்” படுதோல்வி அடைந்துள்ளது.

இதனால் பிரியாமணியின் மார்க்கெட் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மம்முட்டி நடிக்கும் ”தப்பன்னா” படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பிரியாமணி, அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இச் செய்தியை பிரியாமணி மறுத்துள்ளார். யாரும் ”தப்பன்னா” படத்தில் நடிக்க தன்னை அணுகவில்லை என தெரிவித்துள்ளார்.

Saturday 7 April 2012

சினிமா தாண்டி நானும் சல்மானும் அவ்வளவு நெருக்கம்... - சொல்கிறார் அசின்



சினிமாவுக்கு வெளியிலும் நானும் சல்மான் கானும் நெருக்கமான நண்பர்கள். அதனால்தான் எங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது, என்கிறார் அசின்.

சல்மான் - அசின் நெருக்கம் குறைத்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. சினிமாவைத் தாண்டி இருவருக்குள்ளும் உறவிருப்பதாக மும்பை பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே செய்தி வெளியிட்டு வருகின்றன.

அசினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் சல்மான் என்று கூட செய்தி உண்டு. ஆனால் அதையெல்லாம் மறுத்து வந்தார் அசின்.

இந்த நிலையில் இப்போது, தங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் கச்சிதமாக வரக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அவர் தந்துள்ளார்.

அசின் கூறுகையில், "நிஜத்திலும் இணக்கான மனநிலை இருந்தால்தான் திரையில் ஜோடிப் பொருத்தம் சரியாக வரும். எனக்கும் சல்மானுக்கு வெளியிலும் நல்ல உறவு உள்ளது. அதுதான் நட்பு. வேறு எதையும் கற்பனை செய்ய வேண்டாம். சல்மானுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு.

அவரது அந்த நகைச்சுவையை சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டேன். நாங்கள் இரண்டு படங்கள் சேர்ந்து செய்தோம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அதுதான் எங்களை நல்ல ஜோடியாக திரையில் காட்ட உதவுகிறது," என்றார்.

நெருக்கம், நல்ல புரிதல், ஜோடிப் பொருத்தம்... எல்லாமே நட்புதானா? என்னமோ போங்க..!

Friday 6 April 2012

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்!



ஹாரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை படம் 21 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்பிறகு 16 கோடி ரூபாய் அதிகமாக விற்பனை ஆகி இருக்கும் படம் 3தான். இத்தனைக்கும் சென்னையின் விநியோக உரிமையை தனது சம்பளமாக தனது மாமனாரிடம் வாங்கிக் கொண்டாராம்.

ஆனால் 37 கோடி ரூபாயை 3 வசூல் செய்யுமா என்றால் 15 கோடி ரூபாயை எம்.ஜி அடிப்படையில் வாங்கியிருக்கும் விநியோககஸ்தர்களுக்கு திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புலிகள்.

இத்தனைக்கும் 20 கோடியை மல்லுக்கட்டி இழுக்கவே இன்னும் பத்து நாட்களாவது தியேட்டரில் படம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இதற்கிடையில் 3 படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து ஓய்ந்து விட்ட சூழ்நிலையில்,
படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களை நீக்கி வீட்டுக் கொடுங்கள், உலக திரைப்பட விழாக்களில் சிறந்த ஆசிய இயக்குனருக்கான விருதுகள் கூட கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஐஸ்வர்யா தனுசுக்கு போன் போட்டு உற்சாகப் படுத்துகிறார்களாம் பெஸ்டிவல் புரோக்கர்கள்.

இந்த செய்திகளுக்கு நடுவே தற்போது சூடு பிடித்திருக்கும் முக்கியச் செய்தி, கௌதம் வாசுதேவ் மேனன், தனுஷ் இருவரும் இணைய இருக்கிறார்கள் என்பதுதான்! இது ஆடுகளம் படத்தை பார்த்து விட்டு கௌதம் விடுத்த அழைப்பாம்.

இருவருமே ரகசியம் காத்த அந்த கூட்டணியின் ரகசியம் தற்போது கசிந்து விட்டது. இந்தப் படத்துக்கு அனிரூத் இசை என்பதை தற்போது முடிவு செய்திருகிறார்களாம் கௌதமும் தனுஷும்.

தனுஷ் ஹிந்தியில் ராஞ்சான, பிறகு பரத்பாலா இயக்கத்தில் ரஹ்மான் இசையில் நடிக்கும் படம் ஆகியவற்றை முடித்து விட்டு கௌதம் படத்துக்கு வருகிறாராம். கலக்குங்க மக்கா!

விபச்சாரி வேடத்தில் துணிந்து நடித்த அனுஷ்கா, டார்ட்டி பிக்‌ஷரில் நடிக்க மறுப்பது ஏன்?



இந்தி படமான ”டார்ட்டி பிக்‌ஷர்” தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
தென் இந்திய புகழ்பெற்ற நடிகையான அனுஷ்காவை தயாரிப்பாளர் குழு அணுகியபோது, அப் படத்தில் நடிக்க அனுஷ்கா மறுத்துள்ளார்.

தற்பொழுது அனுஷ்கா செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ”இரண்டாம் உலகம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அனுஷ்கா கார்த்தி க்கு ஜோடியாக அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலும், விக்ரமுக்கு ஜோடியாக தாண்டவம் படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் தேசிய விருது பெற்ற திரைப்படம் டார்ட்டி பிக்‌ஷர், வானம் படத்தில் கவர்ச்சியாக விபச்சாரி வேடத்தில் நடித்து புகழ் பெற்ற அனுஷ்கா, இப் படத்தை நிராகரித்தமைக்கான காரணம் சரிவர தெரியவரவில்லை!

கொலவெறி பாடல் தடை செய்யப்படுமா? கொலவெறிக்கு வந்த கொலவெறி நிலைமை!



உலக பிரசித்தி பெற்றுள்ள, 3 திரைப்பட பாடலான ”வொய் திஸ் கொலவெறி” பாடலுக்கு எதிராக அப் பாடலை தடை செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ் ”கொலவெறி” பாடல் இளைஞர்களின் மனதை தீயவழிப்படுத்துவதாக கூறியே மேற்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தபால் உதவியாளராக பணிபுரியும், எம். மாடஸ்வாமி என்பவராலேயே ”கொலைவெறி” பாடலுக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப் பாடல் வரிகள் வன்முறையை தூண்டுவதாகவும், இது இளைஞர்களை தவறான வழிக்கு இட்டு செல்லுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆதாரமாக அமெரிக்காவின் லோவா ஸ்டேட் பல்கலைகழகம், வன்முறை பாடல்கள் தொடர்பில் வெளியிட்ட ஆராட்சி முடிவையும் சமர்ப்பித்துள்ளார் மனுதாரர்.