Tuesday 24 July 2018

தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த ஸ்ரீவித்யா!

தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த ஸ்ரீவித்யாவின் பிறந்தநாள் இன்று.

தமிழ்த்திரையுலகில் எத்தனையோ அம்மாக்கள் தோன்றியிருக்கிறார்கள். பண்டரிபாய், எம்.வி.ராஜம்மா, கண்ணம்பா என்று பலர் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் சில வேறுபாடுகள் உண்டு. மற்ற அம்மா நடிகைகள் எல்லாம் உண்மையிலேயே அம்மாவுக்குரிய வயதும் தோற்றமும் உடையவர்கள். ஆனால் 23 வயதிலேயே அதாவது ஒரு சராசரி கதாநாயகியைவிட குறைவான வயதிலேயே அம்மாவாக நடித்தவர்தான் ஸ்ரீவித்யா. அதுவும் ஒரு கைகுழந்தைக்கோ, சிறுமிக்கா அல்ல, வயது வந்த ஜெயசுதாவிற்கு "அபூர்வராகங்க"ளில்.

கொடிகட்டி பறந்தார்




1970களில் தொடங்கி 2000 வரை என சுமார் 30 ஆண்டுகள் மிகத் துல்லியமான நடிப்பு, நேர்த்தியான வசன உச்சரிப்பு, பேசும் விழிகளாலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களையே தன்னகத்தே வைத்திருந்தார் ஸ்ரீவித்யா. கர்நாடக இசையின் தேவகானக்குயில் எனப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள். இசை, நாட்டியம், இரண்டையும் கற்ற ஸ்ரீவிதியா சினிமா உலகினரால் வித்தி என அன்போடு அழைக்கப்பட்டார். "திருவருட்செல்வர்" படத்தில் நடிப்பின் பிள்ளையர் சுழி போட, சிறிது காலத்திலேயே புகழில் கொடிகட்டி பறக்க தொடங்கினார்.

கம்பீரமாக நடைபோட்டார்




நாட்டியம், நடிப்பு, இசை என அசாத்திய திறமைகளை ஒருசேரப்பெற்று, திரைத்துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் ஒருசிலரே. அதில் முக்கிய இடம் ஸ்ரீவித்யாவுக்குத்தான் போய்சேரும். தங்கையாய், காதலியாய், மனைவியாய், தாயாய், அண்ணியாய், தோழியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் அனைத்து முக்கிய பரிணாமத்தையும் படங்களில் குறைவின்றி வெளிப்படுத்தியவர்.

மணவாழ்க்கையில் கசப்பு




கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனமே அவரது வாழ்க்கையை புரட்டி போட வைத்தது. 35 வயதுக்கு பின்னர், மணவாழ்க்கையில் விதி விளையாட துவங்கியது. மண வாழ்க்கையில் சறுக்கி விழுந்தார். 9 வருட கால போராட்டத்துக்கு பின்னர் தனித்து வாழ்ந்தாலும், காலை சுற்றின பாம்பு கூடவே இருந்தது. குழந்தையிலிருந்து ஸ்ரீவித்யாவுக்கு இருக்கும் ஆன்மீக ஈடுபாடு அவரை பண்படுத்தின. பக்குவப்படுத்தியது. பல கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நிறைவாக நடித்தார். தளபதி, காதலுக்கு மரியாதை, புன்னகை மன்னன் போன்ற படங்களில் அவரது சாந்தமான முகம்-கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், இயல்பான நடிப்பு, பக்குவமான உணர்வு போன்றவை மறக்க முடியாதது.

நம்பி ஒப்படைத்த சொத்துக்கள்


ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அடியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கறையான் அரிக்க துவங்கியது. பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூன்யமாகி போனது. அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை. சொத்துக்களின் கதி இதுவரை என்னவென்றும் தெரியவில்லை.

காலத்தின் கோலம்


திரைத்துறையில் எப்பேர்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் சிக்குண்டு போய்விடுகிறார்கள் என்பதும், காலம் அவர்களை ஒரு புரட்டு புரட்டியே போட்டு தன்னுடன் அழைத்து சென்றுவிடுகிறது என்பதற்கும் ஸ்ரீவித்யா உதாரணம். அவர் எந்த அளவிற்கு விசால மனம் படைத்தவர் என்பதற்கும், அவரது மாபெரும் மனித நேயத்திற்கும், நாட்டியக்கலை மீது இருந்த பற்றுக்கும் அவர் எழுதி வைத்த உயிலே சாட்சியாகும். இதமான இதயத்தை அது பிரதிபலித்தது. இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒருவன் அவருக்கு கணவராக இருந்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். தாய்மையடைந்த போதெல்லாம் அந்த வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்ட இந்த திரைத்தாயினால் கடைசிவரை நிஜத்தாயாக வாழமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே!