Sunday 24 June 2018

கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்

M.G.R. -க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.


எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

அது ஏன் "மே மே"ன்னு கண்ணதாசன் எழுதினார்னு தெரியுமா..?

'அன்பு நடமாடும் கலை கூடமே ஆசை மழை மேகமே.. என்ற பாடல் வாட்ஸ்அப்பில் தற்போது வைரலாக வருகிறது. இந்த பாடல் 1975-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மஞ்சுளா நடித்து வெளிவந்த 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் இடம் பெறுவது.


இந்த பாடலின் அத்தனை அடிகளுமே "மே" என்றுதான் முடியும்...! கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டிருப்பார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இப்பாடலை இவ்வளவு காலம் இல்லாமல் மே மாத சிறப்பு பாடலாக வாட்ஸ் அப் வாசிகள் புகழ் பாடி வருகின்றனர். என்றாலும் "மே" என முடியும் வகையில் இந்த பாடலை கண்ணதாசன் ஏன் எழுதினார் என கேட்கும் ஆவல் ஏற்பட்டது.

அதற்கு கவியரசர் கண்ணதாசனின் மகனும், கண்ணதாசன் பதிப்பகத்தின் நிறுவனருமான காந்தி கண்ணதாசன் இவ்வாறு கூறுகிறார்: "இதற்கு முன்பு இந்த பாடலை மையப்படுத்தி சில கட்டுக்கதைகளையெல்லாம் பலமுறை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். அவை எதுவுமே உண்மை கிடையாது. கவியரசர் தன் மனதில் அந்த சமயத்தில் என்ன நினைப்பாரோ, அந்த நேரத்தில் என்ன தோன்றுமோ அதையே பாட்டாக எழுதிவிடுவார். அதுதான் அவரது சிறப்பே. அதுபோல்தான் இந்த பாடலும். 'அவன்தான் மனிதன்' படக்காட்சிக்காக படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமாநுஜம் கேட்க, கவியரசும் பாட்டு எழுதி தர ஒப்புக்கொண்டார். ஆனால் படக்காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்க இருப்பதால், நடிகர், நடிகைகள் அனைவரும் வருகிற மே மாதம் சிங்கப்பூர் செல்லவிருக்கிறோம் என்று சொல்லவும், அதனை மையப்படுத்தியே கவியரசர் 'மே'-எழுத்தில் முடியுமாறு எழுதி கொடுத்தார்" என்றார்.

4 பேர் கூடினாலே கவிஞர் இருப்பார்


அதேபோல், திரைப்பட தயாரிப்பாளரும், கண்ணதாசனின் அண்ணன் ஸ்ரீநிவாசனின் மருமகளுமாகிய ஜெயந்தி கண்ணப்பன் இந்த பாடல் குறித்து நம்மிடம் பேசினார். அப்போது, "வாட்ஸ்அப்பில் கண்ணதாசனின் பாடல்கள் வலம் வருவது கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு பேர் ஒன்று கூடி எதைப்பற்றி பேசினாலும், அங்கும் கண்ணதாசன்தான் இருப்பார். இந்த பாடல்களை இளைய தலைமுறைகள் கேட்பது இரட்டிப்பது மகிழ்ச்சி, இந்த பாடலை கண்ணதாசனை தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக எழுதியிருக்க முடியுமா என்று தெரியவில்லை" என்றார்.

அர்த்தம்-அழகு-இனிமை


உண்மைதான். ஒற்றை எழுத்து முடியுமாறு பாடல் எழுதுவது மிகவும் கடினம். பாடலின் முடிவில் ஏதோ ஒற்றை எழுத்து வந்தால் போதும் என எழுத முடியாது. அப்படியே எழுதினாலும் அதில் அர்த்தம் பொதிந்திருக்க வேண்டும், இசைக்கு பொருந்தி வரவேண்டும். பாடல் கேட்கும்போது இனிமை தரவேண்டும். இதையெல்லாவற்றையும் சேர்ந்து அளித்திருப்பார் கண்ணதாசன். இது ஒரு பாட்டு என்று மட்டுமல்ல, இதுபோன்ற ஏராளமான பாடல்களில் புது புது யுக்திகளில் வெளிப்படுத்திய அழியா கலைஞன் கண்ணதாசன். இன்றைய நாளில் இந்த பாட்டு ட்ரெண்டு என்பதைபோல், அனைத்து பாடல்களுமே ட்ரெண்ட் ஆனால் நன்றாக இருக்கும் என அடிமனதில் நினைக்க தோன்றுகிறது.

உலக இலக்கியம் - கண்ணதாசன்


அப்போதுதான் இளையதலைமுறைகளுக்கு, அக்கால வாழ்க்கை நெறிமுறைகளை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்க முடியும். ஏனெனில் காதல், அன்பு, பாசம், தாய்மை, வீரம், மொழிப்பற்று, தேசப்பற்று, ஏக்கம், வெட்கம் என அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் எவ்வாறு சமூகத்தில் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு சான்று கண்ணதாசனின் அனைத்து வகை பாடல்களுமே. சங்க இலக்கிய செழுமையும், யதார்த்த வாழ்வியலின் எளிமையும் பாமரனும் சென்றடைய எழுதிய பாங்கே கண்ணதாசனின் என்னும் மகாகவியின் வெற்றியின் ரகசியம் இதுவரை வெற்றிநடை போட்டு வருகிறது. வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் தெரிந்துகொள்ள உலக இலக்கியங்கள் தேவையில்லை-கண்ணதாசனின் பாடல்களே போதும். மெட்டுக்குள் கட்டுப்படுகிற வார்த்தைகளில் வாழ்வியலின் உணர்வுகள் அத்தனையும் தெறித்து அழகியல்நடை போடும் கவியரசரின் பாடல்களில். அதனால்தான் கண்ணதாசன் இன்றும் காலத்தின் பொற்கனியாய் இனித்து கொண்டிருக்கிறார்.

தாழையாம் பூ முடிச்சு.. தடம் பார்த்து நடை நடந்து.. இது யாரை நினைத்து கவியரசர் எழுதினார் தெரியுமா?

கவிஞர் கண்ணதாசன் கலையுலகத்திற்கு வழங்கிய பாடல்கள் அனைத்துமே அற்புதம்தான்.


ஆனால் அவற்றில் சில பாடல்கள் தன் குடும்பத்தினரை மையப்படுத்தியும், மனதில் வைத்தும் எழுதினார் என்று கேள்விப்படும்போது கவிஞரின் தன் குடும்பத்தினரிடம் அளவு கடந்த பிரியம் எவ்வளவு வைத்திருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.
கண்ணதாசனின் மூத்த மகள் அலமேலு கண்ணதாசன் அதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். படியுங்கள் வாசகர்களே.

பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி


நான் மூத்த பெண் என்பதால், என் மேல ரொம்ப பாசமா இருப்பாரு. என்னை டாக்டராக்கனும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. அது முடியாம போச்சு. எனக்கு கல்யாணம் செய்யறதுக்காக அப்பா மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தார். அந்த சமயத்தில் எழுதிய பாட்டுதான் "பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி" என்ற பாடல். அந்த பாட்டை எழுதிமுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அப்பா என்னிடம், உனக்கு சீக்கிரமா கல்யாணம் நிச்சயம் ஆயிடும்"ம்மா என்றார். அது மாதிரியே நிச்சயமும் ஆகி கல்யாணமும் செஞ்சு வச்சார். எங்களுக்கு நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொடுப்பார்.

என் பையன் மேல அவ்ளோ ஆசை


என் 2-வது பையனுக்கு அவருடைய பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு அப்பா சொன்னார், "நீ கண்ணதாசன்னு வெச்சுக்கோ. ஆனா கிருஷ்ணர் அடிக்கடி என் கனவில வர்றார். அதனால் நீ கிருஷ்ணா"னுதான் கூப்பிடணும் னு சொன்னார். எவ்வளவு பெரிய மீட்டிங்கா நடந்துட்டு இருந்தாலும் சரி, என் பையனைதான் மடிமேல தூக்கி வச்சிப்பார். அவனுக்கு பத்மா சேஷாத்ரி ஸ்கூல்லகூட அப்பாதான் சீட் வாங்கி கொடுத்தாரு. அவ்வளவு ப்ரியம் அவன்மேல.

தாழையாம் பூ முடிச்சு..


"தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா"ன்னு ஒரு பாட்டு வருமே.. அது எங்க அம்மாவுக்காகவே எழுதின பாடல். எங்க அம்மா பொன்னம்மா. எங்க அம்மாவுக்காக ஒரு கவிதை கூட எழுதியிருக்காரு. அப்பாவுக்கு எங்க அம்மா சமையல்ன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்மா செஞ்ச தக்காளி பச்சடியும், வெல்ல பணியாரத்தையும் ரொம்ப ருசிச்சு சாப்பிடுவார். அது கவிஞரின் கவிதை தொகுப்பில் கூட வெளிவந்திருக்கு. அப்பாவோட அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சிட்டு என்கிட்டேயே நிறைய பார் பாராட்டுவாங்க. எழுத்தாளர் லட்சுமிகூட என்னிடம் சொன்னாங்க "எப்பவுமே ஒரு எம்.எஸ்,விஸ்வநாதன்தான்.. ஒரு சுசிலாதான்.. ஒரு கண்ணதாசன்தான்... ஒரு டி.எம்எஸ்.தான்"னு.

நிறைய பாட்டுக்களை எழுதிட்டு வந்து வீட்டில எங்ககிட்ட அதை பத்தி சொல்லுவார். அம்பிகை அழகு தரிசனம் என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதேபோல, கந்தசஷ்டி கவசம் போலவே கிருஷ்ண கவசம் எழுதியிருப்பார் அப்பா. அதுவும் நான் அடிக்கடி விரும்பி படிக்கும் புத்தகம். நாளாம் நாளாம் திருநாளாம், கங்கைகரைதோட்டம் இந்த பாட்டெல்லாம் ரொம்ப விரும்பி அடிக்கடி கேப்பேன். அவர் உயிரோட இருந்திருந்தா, இலக்கியங்கள் நிறைய எழுதியிருப்பார். அப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்க கூடாதான்னு அடிக்கடி நினைச்சிப்போம்.

எந்த நிலையிலும் இவருக்கு மரணமில்லை... கண்ணதாசன்!

உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிங்காரமாக சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.


கவிஞரை நினைவு கூர்ந்து ஐரோப்பிய கண்ணதாசன் ரசிகர்கள் பகிர்ந்து கொண்ட ஒரு பிளாஷ் பேக் பதிவு:
தமிழ் எழுத்துலகில் ஆரம்பித்து திரை உலகத்திலே புகுந்து கலைவாணி இட்ட கட்டளையை கட்சிதமாக செய்து முடித்த ஒரே கவியரசன் என்ற பெயருக்கு தகுதியானவர். இவர் வருகைக்கு பின்புதான் திரையுலகத்திலே பாடல்கள் பெருமை பெற்றன. இன்றுவரை இந்தக்கவியரசை வெல்ல ஒருவரும் வரவில்லை.
தமிழர்கள் மரபிலே எத்தனையோ கவிஞ்சர்கள் தோன்றி மறைந்திருக்கின்றர்கள். ஆனாலும் தமிழர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய எழுத்துக்களை, பாடல்களை, படைப்புக்கள் வழங்கியவர் கண்ணதாசன். அவர் எழுத்துக்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லிவிட முடியாது எல்லா எழுத்துக்களும் ஒவ்வொரு தரப்பினர்க்கும் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றால் போல் அமைந்ததுதான் கண்ணதாசனின் சிறப்பு.திரை உலகில் பெயர் பெற்றாலும் தன் தமிழ்ப்பற்றையும் சரியான முறையிலே பதிவு செய்தவர். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது தொடங்கி, அங்கு தமிழருக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லம் குரல் கொடுத்தவர் கவியரசர்.


"அர்த்தமுள்ள இந்துமதம்".. இது ஒரு உபயோகமுள்ள வாழ்க்கைக்கு அர்த்தத்தை சொல்லித்தரும் அற்புதமான காலக் களஞ்சியம். தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அவரவர் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் இன்பமாகட்டும், துன்பமாகட்டும், காதல், பிரிவு, கடமை, தொழில், சோதனகள், வேதனைகள் ஏற்பட்டாலும் அங்கே ஆறுதல் சொல்வது போல் இவரது பாடல்கள் வந்து துணை நிற்கும். இது தான் கண்ணதாசனின் சிறப்பு.
''நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'' என்று சொன்னது போலவே இன்றும் வாழ்ந்து கொண்டு மற்றவர்க்கு தனது பாடல்களால் ஆறுதல் தந்து கொண்டிருக்கும் கவியரசரே நீங்கள் இந்தத் தமிழ் உலகம் வாழும் வரை வாழ்வீர்கள்.



Tuesday 12 June 2018

நாட்டிய பேரொளி பத்மினி..

கலையே குடும்பம், கலையே வாழ்க்கை, கலையே மூச்சு, கலையே சகலமும் என்று வாழ்ந்தவர்  நாட்டிய பேரொளி பத்மினி .


சிறந்த நடனமங்கையாக இருந்தவரை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். தாய்மொழி மலையாளம் என்றாலும் இன்றைய தமிழர்களால் கூட பேச முடியாத அளவிற்கு நீண்டநெடிய வசனங்களை மனப்பாடம் செய்து - ஏற்ற இறக்கத்துடன் - பிசிறில்லாமல் - உச்சரிப்பு மாறாமல் - உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய அவரது அற்புதமான ஆற்றல் சாதாரணமானதல்ல.
இன்றைய இரண்டாம் தர, மூன்றாம்தர நடிகைகள் போல கதாநாயகிகள் என்று சொல்லிக் கொண்டு ஆபாச படமாகவும், அரை நிர்வாண ஓடமாகவும் - பின்னணி குரலில் ஒழுங்காக வாயசைக்கக்கூட முடியாமல் நடனம் என்ற பெயரில் வலிப்பு வந்தவர்போல் பேயாட்டம் போட்ட நடிகை அல்ல பத்மினி.
பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி என்று இந்தியாவின் பெரும்பான்மையான நடன உத்திகளை நுட்பமாக பயின்றவர். பரதம் உள்ளிட்ட அனைத்து நடனங்களையும் கற்றுத்தேர்ந்து கதாநாயகியாகவும் நடித்த நடிகைகள் இரண்டே பேர்கள்தான். ஒருவர் பத்மினி, இன்னொருவர் வைஜெயந்திமாலா.

சபாஷ் சரியான போட்டி!




"வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தில் இவர்கள் இணைந்து அரங்கேற்றிய போட்டி நடனம் வெள்ளித்திரையில் வரலாறாகிவிட்டது. பாடலின் நடுவே வரும் "சபாஷ்... சரியான போட்டி" என்ற அந்த வசனம்கூட இன்றைய இளையதலைமுறைகளால் பெரிதும் ரசிக்கப்படுபவை. இனி அது போன்ற நடனத்தை எக்காலத்திலும் நாம் பார்க்க முடியாது. இந்திய படங்களிலேயே மிகச்சிறந்த போட்டி நடனம் எது என்றால் இந்த பாடலை துணிச்சலோடும் கர்வத்தோடும் பெருமையோடும், சொல்லலாம். அமரதீபம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி, சித்தி, புனர்ஜென்மம், தில்லானா மோகனாம்பாள் போன்ற பல படங்கள் பத்மினியின் பண்பட்ட நடிப்பில் காவியங்களாயின.

தபால்தலை வெளியீடு


அதனால்தான் அவருக்கு தபால் தலையை வெளியிட்டு சோவியத் யூனியன் பல்லாண்டுகளுக்கு முன்பே பெருமைப்படுத்தியது. ஒரு கலைஞர் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் கலைஞர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் பத்மினி. தான்தோன்றித்தனமாக உளறிக் கொட்டாமல் - காட்டுக் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்யாமல் - அரை வேக்காட்டுத்தனமாக அலட்டிக் கொள்ளாமல் தன்னடக்கம் கொண்ட நடிகையாக அவர் வாழ்ந்தார். அரசியல் ரீதியாக, ஒரே சமயத்தில் கருணாநிதியையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மதித்து போற்றிய அவரது பெருந்தன்மையை இன்றைய திரைப்பட நடிகைகள் கற்றுக் கொள்வது அவசியம்.

பக்குவப்பட்ட நடிகை


விரும்பி நேசித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ள முடியாமல். அவனது தந்தையையே மணந்து வாழ வேண்டிய அவலத்திற்கு நடுவில் - காதலனே மகனாக திரும்பி வந்த பிறகு - ஒரு பெண்ணின் இதயம் எந்த அளவிற்கு வேதனையால் வதைபடும் என்பதை "எதிர்பாராதது" படத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும் பதமினியின் நடிப்பு அபாரமானது.கணவனின் சந்தேகத்திற்கு இரையாகி தன் மீதான பழியை துடைக்க போராடும் ஒரு பெண்ணின் மன உணர்வு எவ்வாறு இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது .
"தெய்வப்பிறவி".நாட்டியத்தையும் நடிப்பையும் சரிபாதியாக கலந்து ஒரு சிறந்த பொழுது போக்கு படைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள்.. பல படங்களில் குணச்சித்திர நடிப்பை பதித்திருந்தாலும், தன்னால் கதாநாயகியாக மட்டுமல்ல பாட்டியாகவும் நடித்து தான் ஒரு பக்குவப்பட்ட நடிகை என்பதை "பூவே பூச்சூடவா" படத்தில் நிரூபித்தார்.

எந்த நிலையிலும் மரணமில்லை


கோடி கோடியாய் சம்பாதித்தாலும் - சொர்க்க பூமி என்று போற்றப்படும் அமெரிக்காவிலேயே வாழும் வாய்ப்பு கிடைத்தாலும் - தாய் நாட்டில்தான் வாழ்வேன் - தமிழ்நாட்டில்தான் சாவேன் என்று கூறி அதேபோல தமிழ் மண்ணில் தன்னை கரைத்து கொண்ட தன்னிகரற்ற தேசபக்தர்தான் நடிகை பத்மினி. அவர் மறைந்தபோது நடிகர் கமலஹாசன் தனது இரங்கல் செய்தியில், "தொலைக்காட்சிகள் ஒரு வரப்பிரசாதம். பத்மினி அம்மா இறந்து போனார்கள் என்கிற உணர்வு கூட இல்லாமல் அவர் நடித்த படங்களையும், ஆடிய நடனங்களையும் நாம் பார்.த்து கொண்டு இருக்கலாம்" என்றார்.
மக்கள் மனதில் ஆழப்பதிந்து போன யாராக இருந்தாலும் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடியபடி "எந்த நிலையிலும் மரணமில்லை"தான். இது நாடு போற்றும் நாட்டிய பேரொளி பத்மினிக்கும் பொருந்தும்.