Sunday, 9 July 2023

சொர்ணலதா

 1991 ல் வெளிவந்த ‘சின்னத்தம்பி’ திரைப்படத்தில்




🌹 “நீ எங்கே ….என் அன்பே…” என்ற பாடலில் சொர்ணலதா அவர்கள் குரலில் இருக்கும் தேடல் காற்றில் கலந்து நம் மனதை முகம்தெரியாத ஒரு காதலை நிச்சயம் தேட வைத்துவிடும். ....வள்ளி
2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அலைபாயுதே ‘ திரைப்படத்தில் ”

🌹எவனோ ஒருவன் வாசிக்கிறான் …..” பாடல் நம் மனம் வாழ்க்கையில் தொலைத்த யாரையோ தேடவைத்து விடுகிறது. இசைக்கருவிகளில் புல்லாங்குழலுக்கு என்று ஒரு இனிமை உண்டு. அதையும் மிஞ்சிவிடக் கூடிய இனிமை சொர்ணலதா அவர்களின் குரலிற்கு உண்டு என்பது இசைப் பிரியர்களுக்கு தெரிந்த உண்மை.
விருப்பமான சொர்ணலதாவின் பாடல்களை

🌹நட்புகள் தொடரலாம்...
பொதுவாக இசை என்பது செவி வழி நமக்குள் செல்லக்கூடிய ஒன்று. ஆனால் சொர்ணலதா அவர்கள் குரல் மட்டும் ஒரு கூர்மையான அம்பு போல நேரடியாக நம் இதயத்திற்குள் செல்லக்கூடிய வல்லமை பெற்றது.
ஜானகி அம்மா, S.P.B போன்றவர்களின் குரலை நம்மால் எந்தப் பாடலிலும் எளிதாய் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் சொர்ணலதா அவர்கள் குரல் ஒவ்வொரு பாடல்களிலும் தனித்துவமாய் அமைந்து இருக்கும்.

🌹 ஏக்கப்பாடல், காதல் பாடல், ரொமான்ஸ் பாடல், கிராமியப் பாடல், துள்ளல் பாடல்கள் என்று எந்தமாதிரியான பாடல்களிலும் சொர்ணலதா அவர்களின் குரல் தனித்து ஒலிக்கும். மேலும் இசையமைப்பாளர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கும் நிச்சயம் ஹிட் கொடுத்து விடக் கூடிய மந்திரக் குரல் அது......
80 மற்றும் 90 களில் பெண்களுக்கு தாங்கள் நினைப்பதை எல்லாம் சொல்ல இப்போது போல.

🌹facebook , twitter , whatsapp என்று எதுவும் கிடையாது. அவர்கள் வாழ்வின் அத்தனை ரகசியமும் அவர்கள் மனதைத் தாண்டி அதிக பட்சம் அவர்கள் டைரிகளுக்குள்தான் ரகசியமாய் மறைந்து இருக்கும்.
பல பெண்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களின் வரிகளை தங்கள் டைரியில் எழுதி வைத்து இருப்பர்.
இன்றும் அந்த வரிகளை வாசிக்கும் போது உங்கள் மனதில் சொர்ணலதாவின் குரலும் சேர்ந்தே ஒலிக்கும். சொர்ணலதா அவர்களின் குரல் பலருடைய உணர்வுகளின் உச்சம் என்றே சொல்லலாம்.

🌹அந்த அரபிக் கடலோரம்……
🌹திருமண மலர்கள் தருவாயா….. போன்ற பாடல்கள் சொர்ணலதா குரலில் இன்றும் கேட்கையில் கல்லூரியின் இனிப்பான நினைவுகள் மனதிற்குள் தேனைப் போல ஊறுகிறது.....

இன்றும் ‘வள்ளி’ படத்தில் வரும்.

🌹“என்னுள்ளே… என்னுள்ளே…” பாடலை பலர் whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் போதும், சூப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சிகளில் வளரும் இளம் பாடகர்கள் அவரது பாடல்களை விரும்பிப் பாடுவதைப் பார்க்கும் போதும்...

சத்ரியன் திரைப்படத்தில்
🌹மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ ஓ ஓ மோகம் வந்ததோ
பலருடைய பேருந்துப் பயணங்களின் தனிமையில் ஒரு தாயாய், காதலியாய், சினேகிதியாய் சொர்ணலதா தன் குரல்களால் நம்மோடு பயணித்து இருக்கிறார்.
இன்றும் சில பாடல்களில் சொர்ணலதா குரலைக் கேட்கும் போது படத்தின் காட்சி அமைப்பை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதை விட அவரது குரலிற்குள் நாம் பொதித்து வைத்த அந்த நினைவுகள்தான் நமக்குள் மெல்ல அசைவாடும்.

இதுவே சொர்ணலதாவை
“அவருக்கு முன்பும், அவருக்குப் பின்னும் யாரும் அவர் போல இல்லை”
என்ற தனித்துவ அடையாளத்துடன் அவரது எண்ணற்ற ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா தேவதையாக அவரை வாழவைத்துக் கொண்டு இருக்கிறது.
சொர்ணலதா அவர்கள் குரலில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை எடுத்து அதில் மென்சோகம் என்று வகைப்படுத்தி அப்பாடல்களை வரிசையாகக் கேட்டால் உங்கள் மனம் அந்தக் குரலுக்கு அடிமையாகி அந்த சோகத்தை சுமக்க ஆயத்தமாகிவிடும்.

தொடர்ந்து அவரது துள்ளல் பாடல்கள் தொகுப்பைக் கேட்டால் அவர் குரலுடன் நம் மனதும் ஆட்டம் போடத் தொடங்கிவிடும்.
அவரது காதல் குரல் நமக்கொரு காதல் இல்லையே என்று ஏங்க வைத்து விடும். இப்படி நான் மட்டும் அல்ல, இந்தியா முழுக்க ஏன், உலகளவிலும் கூட அவருக்கு ரசிகர்கள் உண்டு.
இந்திய மொழிகள் பலவற்றிலும் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்
🌹சொர்ணலதா உயிரை உலகில் இருந்து எடுத்துச் சென்ற எமனால் ஒருநாளும் சொர்ணலதாவின் குரலை நம்மைவிட்டு, இந்த உலகை விட்டு எடுத்துச் செல்லவே முடியாது எனத் தோன்றும்.....வள்ளி

🌹சொர்ணலதா அவர்கள் என்றும் என்றென்றும் நம்மோடு சதாகாலங்களிலும் தம்முடைய குரலால் உயிரோடே இருக்கிறார், இருப்பார்.

Monday, 20 March 2023

சார்லி

 கே டிவியில் எபோது போடபட்டாலும் பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று "வெற்றிக் கொடி கட்டு". இன்றைய நெகட்டிவிட்டி உலகில் பாசிட்டிவிட்டியை அள்ளி தரும் படம். பார்த்திபன், வடிவேலும் காமெடியை தாண்டி படத்தில் வரும் ஒரு காட்சியை மட்டும் தவறவிடவே மாட்டேன். வெளிநாடு செல்லும் ஆசையில் பண்த்தை தொலைத்தவர்களின் கதை. அதில் ஒருவரான சார்லி ஊர் ஊராக அலைந்து கொண்டிருப்பார். படத்தில் இடையில் பார்த்திபனை பார்க்க வந்து மனோரமா கையால் சாப்பிடுவார். பிறகு திரும்ப செல்லும்போது பார்த்திபனும் பேசிக்கொண்டேச் செல்லும் காட்சி தான் அது. பணத்தை தொலைத்த ஏமாற்றம், எதுவும் செய்ய முடியாத இயலாமை, எதிர்காலம் பற்றிய தெளிவின்மை எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் நிலையில் தான் சார்லியின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும். பார்த்திபன் உடன் ஆற்றாமையோடு பேசிக்கொண்டே வரும் போது, ஒரே நொடியில் " அவந் மட்டும் என் கையில கிடைச்சான், அவன் ரத்ததை குடிக்காம விட மாட்டேன்" என்று கடும் ஆவேசமாகி, அடுத்த நொடியில் அதே இயலாமை, ஏமாற்ற உணர்வை வெளிப்படுத்தும் அந்த காட்சி தான் சார்லி என்னும் யானைக்கு கிடைத்த சோளப்பொறி. நடந்து வரும் பார்த்திபன் ஒரு நொடி தடுமாறி நிற்பார். அடுத்தமுறை அந்த படத்தை பார்க்கும் போது, இந்த காட்சியை காணத் தவறாதீர்கள். 






நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று திரையில் பார்த்துக் கொண்டே இருப்பதால் சார்லியின் மகத்துவம் நமக்கு தெரியவில்லை. வெளியில் இருந்து வருபவர்களை வரவேற்று, உபசரித்து,சேவகம் செய்யும் நாம் எப்போதும் வீட்டில் இருப்பவர்களை கண்டு கொள்ள மாட்டோம். அதே போல தான் சார்லியும் நம் வீட்டைச் சேர்ந்தவர் போன்ற ஒரு நபர். அவருக்கு இன்னும் பெரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம். 

முரளி, சின்னி ஜெயந்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் நீண்ட காலம் காலேஜ் ஸ்டூண்டாக நடித்த பெருமை சார்லிக்கு உண்டு. மோதிரக்கையால் குட்டுப்பட்டவர் சார்லி. இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் திரையில் அறிமுகபடுத்தபட்டவர் தான் சார்லி. அதனால் அவரின் படங்களின் சார்லியின் பங்கு எப்போதும் இருக்கும். 1982ல் அறிமுகமான சார்லிக்கு தமிழ் சினிமாவில் இது 40வது வருடம். நகைச்சுவை நடிகனாக தனி ஆவர்த்தனம் செய்ததைவிட கும்பலாக இவர் நடித்தது தான் அதிகம் என்று நினைக்கிறேன். மற்ற நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதில் எந்த ஈகோவும் பார்க்காத நல்ல மனதுக்கரர். . சூப்பர் ஸ்டாருடன் தர்மத்தின் தலைவன் படத்தில் கரப்பான் பூச்சி காமெடி இன்றளவும் ரசிக்க வைக்கும். அதன் பிறகு தளபதி, வீரா படங்களில் இணைந்து நடித்திருப்பார். கமலுடன் சிங்காலவேலன் படம் தான் நினைவில் இருக்கிறது. 

சார்லிக்கு பெயர் சொல்லும் ஒரு படம் அது புது வசந்தம் தான். அந்த படத்தில் விகரமனுடன் ஏற்பட்ட நட்பு தான் அவருக்கு பூவே உனக்காக, உன்னை நினைத்து படங்களை பெற்றுத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரஜினி, கமல், முரளி விஜய்காந்து என சீனியர் நடிகர்களுடன் நடித்தவர் அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், பிரசாந்த் உடனும் கூட்டணி போட்டார். பாலச்சந்தர் பட்டறை என்பதால் இயக்குனர் சரண் படங்களிலும் தொடர்ந்து நடித்திருப்பார். 

இயக்குனர் வி.சேகரின் படங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. ஒன்னா இருக்க கத்துக்கனும், பொngகலோ பொங்கல். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும், என தொடர்ந்து அவர் படங்களில் நடித்திருக்கிறார்.1980 களிலேயே சார்லிக்கு தனிப்பாடல் ஒன்று கிடைத்தது. நியாயத்தராசு படத்தில் "வெண்ணிலா என்னோடு வந்து ஆடவா" பாடலில் சார்லி தான் லீட் ஆர்டிஸ்ட். இணைந்த கைகள் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார். 

 2000த்துக்கு பிறகு வடிவேலுவுடன் கூட்டணி சேர்ந்து இவர் நடித்தது எல்லாமே அதிரிபுதிரி ஹிட். ப்ரெண்ட்ஸ், கோவில் இரண்டும் மணிமகுடம். சார்லி நல்ல நகைச்சுவை நடிகர் என்று சொல்வதை விட மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்று சொல்லலாம். அதற்கான உதாரணம் தான் வெற்றிக் கொடி கட்டு படம். சமீபத்தில் மாநகரம், ஜீவா இரு படங்களும் சார்லியின் நடிப்புக்கு தீனி போட்டவை. சென்னையை பற்றி தவறாக பேசும் போது, "நாம கேட்ருக்கோமா சார்" என்று சார்லி கேட்கும் வசனம் யாராலும் மறக்க முடியாது. அதே போல் தான் ஜீவா படத்தில் அவரின் கேரக்டர். 

சார்லி கோவில்பட்டி அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர். காலேஜ் படிக்கும் போதே அவர் ஸ்டேஜ் ஆர்டிஸ்ட். நடிக்க வந்த பிறகும் மேல்படிப்பை முடித்திருக்கிறார். 2019 ம் ஆண்டு "தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்கு" என்ற தலைப்பில் பி எச்டி செய்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். 2004ல் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 

Monday, 12 September 2022

நடிகை ஸ்ரீவித்யா உச்சக்கட்டம்!

 நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் மிக சிறந்த முகபாவங்களில்...




இசையும் வரிகளும் இணைந்து,சிறப்பாய் விரிந்தது ஒரு பாடல் விருந்து..!
சாதாரணமாக ஒரு திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சி சரியாக அமைய வேண்டுமானால் அதில் இசையமைப்பாளரின் பங்கு மிகவும் முக்கியமானது,
அது மசாலா படமாக இருந்தால் - கட்டாயம் உச்சக்கட்ட காட்சி என்பது ஒரு சண்டைக்காட்சியாகத்தான் இருக்கவேண்டும். காட்சிக்கு விறுவிறுப்பை ஏற்றி ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்.
சமூகப் படமாக - குடும்பக் கதைப்படமாக இருந்தால் தாய்க்குலங்களின் புடவை தலைப்பை நனைக்கும் அளவுக்கு காட்சிக்கு உருக்கத்தை இசையால் ஏற்படுத்த வேண்டும்.
இதுதான் பொதுவாக நமது தமிழ் திரைப்படங்களின் எழுதப்படாத சட்டம்.
இந்தச் சட்டத்துக்கு விதிவிலக்காக படத்தின் உச்சகட்ட காட்சிக்கான பரபரப்பை ஒரு கர்நாடக இசைக் கச்சேரி பாடல் காட்சி மூலம் அமைத்தால் ....அது சரிப்பட்டு வருமா?
அதுவும் விறுவிறுப்பான வயலின்களின் வீச்சோ, தபேலா, ட்ரம்ஸ், பாங்கோஸ் ஆகியவற்றின் வேகமான தாளக்கட்டோ, கிடார் பியானோக்களின் இடைமீட்டல்கள் எதுவும் இல்லாமல், வெறும் கர்நாடக இசைக்க கச்சேரி மேடைகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை வயலின், ஒற்றை மிருதங்கம், கட்டம், கஞ்சீரா, மோர்சிங் ஆகியவற்றை மட்டுமே வைத்து அமைத்தால் ... சரியாக வருமா? க்ளைமாக்ஸ் சிறப்பாக அமையுமா?
அமையும். அந்தக்காட்சிக்கு இசை அமைப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனாக இருந்தால் ...
நூற்றுக்கு நூறு சிறப்பான ஒரு க்ளைமாக்ஸ் காட்சியை இயக்குனரால் கொடுக்க முடியும்.
இதற்கு மிகச்சரியான உதாரணம் 1975-இல் வெளிவந்த கே. பாலசந்தரின் "அபூர்வ ராகங்கள்".
முதல் முதலாக ஒரு பாடல் மூலம் உச்சகட்ட காட்சி அமைக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் "அபூர்வ ராகங்கள்" தான்.
அந்த வகையில் இந்தக் காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஒரு வசனகர்த்தாவின் வேலையை கவியரசரும் இயக்குனரின் பணியை மெல்லிசை மன்னரும் மேற்கொண்டதுதான்.
இவர்கள் இருவரும் இல்லை என்றால் இப்படி ஒரு பாடல் காட்சியை உச்சகட்ட காட்சியாக அமைக்கும் எண்ணம் இயக்குனருக்குத் தோன்றியே இருக்காது.
அந்த அளவுக்கு பாடலும் இசையும் காட்சியாக சங்கமித்த அற்புதம் இதுதான்.
பிரிந்து சேர்ந்த ஒரு தந்தையும் மகனும் மீண்டும் சந்திக்கிறார்கள்.
எப்படிப்பட்ட சூழ்நிலையில்...
தந்தை மறுமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்ணின் தாயை மனக்கவிருக்கும் மகனாக .. அதாவது தந்தைக்கு மகனே மாமனாராக, தாய்க்கு மகளே மாமியாராக..
இப்படி ஒரு சிக்கலின் ஆரம்பகர்த்தாவான மகன்தான் ஒரு தீர்வு சொல்லவேண்டிய இடத்தில் இருக்கிறான். அவன்தானே "கேள்வியின் நாயகன்."
இதோ கவிஞர் வார்த்தைகளால் விளையாடுகிறார்...
பாடலின் பல்லவியிலேயே மெல்லிசை மன்னர் தர்பாரி கானடா ராகத்தை உச்சத்திலேற்றி தனது இசை விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்.
"கேள்வியின் நாயகனே. இந்த கேள்விக்கு பதில் ஏதய்யா" சட்டென்று மேலே ஏறி அதே வேகத்தில் கீழே இறங்கி.. ஒற்றை வயலினில் ஒரு ராக சஞ்சாரம்.
"இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை
எல்லோரும் பார்க்கின்றோம் நாமே எல்லோரும் ரசிக்கின்றோம்."
ஒரு இசைக்கச்சேரியில் பாடகியான அம்மா பாட, கீழே மகளும், மகனை பிரிந்த தந்தையும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, அவரது மகன் மேடையில் மிருதங்கம் வாசிக்க...
அவனுக்கு நிதர்சனத்தை உணர்த்தும் வண்ணம் மேடையில் பாடகி இசைக்கிறாள். அவளும் உணர்ச்சிக்கொந்தளிப்பில் தானே இருக்கிறாள்!
அந்தக் கொந்தளிப்பை இசையில் ஒற்றை வயலின், மிருதங்கம், கடம் ஆகியவற்றின் சேர்க்கையோடு மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதை எத்தனை லாவகமாக நமது மெல்லிசை மன்னர் செய்திருக்கிறார்!

"பசுவிடம் கன்று வந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும் போதா காளை வரும்.
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம்
சிந்தை செய்தால் உனக்கும் பிறக்கும் வெட்கம்.
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா - வேலிக்கு
மேலொருவன் வேலி உண்டா.
கதை இப்படி அதன் முடிவெப்படி..
கதை இப்படி அதன் முடிவெப்படி...
மிருதங்கத்தை சிறப்பான தாளக் கட்டோடு முதல் சரணம் முடிய அதற்கு முத்தாய்ப்பாக வயலின் தர்பாரி கனடாவை ஒரு வீச்சு மூலம் பிரதிபலிக்க...
இசையின் துணையோடு ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும் திருப்புமுனைக் கட்டம்...

"தோம்..தோம்.." என்று மிருதங்கத்தின் தொப்பியிலிருந்து வரும் அதிர்வு .. காட்சியோடு சேர்ந்து நம்மையும் அதிர வைக்கிறது.
மேடைப்பாடகியை காதலித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கி விட்டு சென்ற காதலன் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது அந்த அரங்கின் கடைசியில் நின்று கொண்டிருக்கிறான். அங்கிருக்கும் ஒரு சிறுமியின் கையில் ஒரு சிறு காகிதத்தை கொடுத்து பாடகியிடம் அனுப்புகிறான்.
மேடையில் தனி ஆவர்த்தனம் களை கட்டி மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் ஆகியவற்றின் துரிதமான இசைக் கார்வைகள் விறுவிறுப்பை கூட்டி அடுத்தகணம் வயலினின் வீச்சுக்கேற்ப சர்வ லகுவுக்கு நகர்த்துகிறார் நமது மெல்லிசை மன்னர். பாடகி தன்னிடம் கொடுக்கப்பட்ட துண்டுச்சீட்டை நேயர் விருப்பப் பாடலைக் கேட்டு அனுப்பப்பட்ட சீட்டாக எண்ணி சாதாரணமாக பார்க்க - பரபரத்து போகிறாள். அவளது கண்கள் பாடிக்கொண்டே தனது தலைவனை தேடுகின்றன.

"தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான்.
மங்கை தர்ம தரிசனத்தை தேடுகின்றாள் .. தேடுகின்றாள் ..
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ - நங்கை
அவனோடு திருமலைக்கு செல்வாளோ ..செல்வாளோ..
சரணத்தை முடித்து முத்தாய்ப்பாக கடைசி வரியில் பக்க வாத்தியங்கள் அடங்க...
உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருக்கும் அவள் பாட முடியாமல் திணற...
"கேள்வியின் நாயகனே .. இந்தக் கேள்விக்கு.. " மெல்லிய விசும்பலோடு அவள் தடுமாற , "தத்திங்கின்னத்தோம்ம்" என்று தாளவாத்தியங்கள் இடைவெளியை இட்டு நிரப்ப...
சமாளித்துக்கொண்டு மீண்டும் தொடர்கிறாள் அவள்.
""கேள்வியின் நாயகனே .. இந்தக் கேள்விக்கு.. ".. மேலே பாடமுடியாமல் பாடகி தவிக்க..."பதில் ஏதய்யா " என்று இன்னொரு குரல் எடுத்துக்கொடுக்க...
திரும்பிப்பார்த்தால்... பிரிந்து சென்ற மகள் மீண்டும் வந்து தாயினிடம் அமர்கிறாள்..
தாயும் மகளும் ஒன்று பிரிந்தவர் கூடினால்...பேச்சே எழாமல் சந்தோஷம், துக்கம், பரவசம் இன்னதுதான் என்று இனம் பிரித்து சொல்லமுடியாத தவிப்பும், உணர்ச்சிக்கொந்தளிப்பும் .. அனைத்தையுமே ஒற்றை வயலினில் வீச்சில் அற்புதமாக கொண்டுவந்து விடுகிறார் மெல்லிசை மன்னர். இதுவரை பவனி வந்த தர்பாரி கானடாவிலிருந்து சட்டென்று ராகத்தை மாற்றி விட உணர்ச்சிப்பெருக்கை "அமிர்தவர்ஷிணி" ராகத்தை கையாண்டு மழையாக பிரவகிக்க வைக்கிறார் மெல்லிசை மன்னர்.
கவிஞரின் வரிகளும் தாய் மகள் சம்பாஷணையாக வந்து விழுகின்றன.
இதுவரை இருந்த மென்னடை மாறி இப்போது துரிதகால பிரயோகமாக இந்தச் சரணத்தை அமைத்து மகிழ்ச்சிப்பெருக்கை இடை வெளி இல்லாமல் வேகமாக பிரயோகங்களும் சங்கதிகளும் வருமாறு கையாண்டு இருக்கிறார் மெல்லிசை மன்னர்.
தாய்: ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் ..
மகள் : பார்த்துக்கொண்டால் ..
தாய்: அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
மகள் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன.
தாய்: பேதம் மறைந்ததென்று கூறடி கண்ணே..
மகள் : நமது வேதம் தன்னை மறந்து நடக்கும் முன்னே.
தாய்: கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
மகள்: உன்னை காண பிரிந்திருந்தேன் வேறே என்ன?
தாய்: உடல் எப்படி?
மகள்: முன்பு இருந்தாற்படி
தாய்: மனம் எப்படி?
மகள் : நீ விரும்பும்படி..
அமிர்தவர்ஷினியை உச்சத்தில் ஏற்றி சட்டென்று மீண்டும் பல்லவிக்கு வரும்போது தர்பாரி கானடாவை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறார் மெல்லிசை மன்னர்.
இப்போது ஒரு சிறுமாறுதலுடன் ...
"கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதிலேதம்மா
இல்லாத மேடை தன்னில் எழுதாத நாடகத்தை
எல்லோரும் பார்க்கின்றோம் நாமே எல்லோரும் ரசிக்கின்றோம்.
கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதிலேதம்மா..
இப்போது உச்சக்கட்டம் முடிவுக்கு வரும் நேரம். சாதாரணமாக ஒரு கர்நாடக இசைக்கச்சேரியின் முடிவில் பாடப்படும் ராகம் மத்யமாவதி. இந்த மேடை சம்ப்ரதாயம் மீறாத வண்ணம்.. இப்போது கடைசி சரணத்தை மத்யமாவதி ராகத்தைக் கையாண்டு அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இது பிரிந்த தந்தையையும் மகனையும் ஒன்று சேர்க்கும் சரணமாக கவிஞரின் கைவண்ணத்தில் மலர்கிறது..

"பழனி மலையில் வாழும் வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா.
பிடிவாதம் தன்னை விட்டு விடு முருகா - வந்து
பிரியத்துடன் பக்கத்திரு முருகா.
திரு முருகா..திரு முருகா.."
என்று மத்யமாவதியை உச்சத்தில் ஏற்றிவைத்து உச்ச கட்டக் காட்சியை கச்சிதமாக முடித்துவைக்கிறார் மெல்லிசை மன்னர்.
வாணி ஜெயராம் - பி.எஸ். சசிரேகாவின் குரல்களில் வெளிப்படும் உணர்ச்சிகள் - பாடலுக்கு ஏற்றபடி காட்சி அமைப்புகள் .
இந்த இறுதிக்கட்ட காட்சியில் வென்றவர் இயக்குனர் கே. பாலசந்தரா - கவியரசரா - மெல்லிசை மன்னரா ? ஆண்டவனே வந்தாலும் தீர்ப்பு சொல்வது கடினம்.
மெல்லிசை மன்னரை கேட்டால் "நான் என்ன செய்தேன்? எல்லாம் அவங்க சிச்சுவேஷன் வச்சு அதுக்கு ஏத்தபடி பாட்டு கேட்டாங்க. நான் போட்டுக்கொடுத்தேன். அவ்வளவுதான்." என்று தான் சொல்வார்.
அதனால்தான் அவர் மெல்லிசை மன்னர்!
இணையத்திலிருந்து..
அரசரையும் மன்னரையும் வணங்கி மகிழ்வோம்!

Wednesday, 15 June 2022

ஈ வி சரோஜா

 தமிழ்த் திரையில் பத்மினி வைஜெயந்திமாலா எல் விஜயலட்சுமி போன்ற பல நடிகைகள் நடனத்தில் ஜாம்பவான்களாக கலக்கி இருக்கின்றனர்.


ஆனால் இவர்களை எல்லாம் தனது துள்ளல் நடனத்தால் மிஞ்சும் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஈ வி சரோஜா ஒருவர் தான்.




ஈ வி சரோஜாவின் நடனத்தில் உள்ள துள்ளல், நளினம் இரண்டுமே கவனத்தை ஈர்க்கக் கூடியவை.

நடிகர்கள் சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் என்று நகைச்சுவை நடிகர்களுக்கும் இணையாக நடித்தவர். அதிலும் குறிப்பாக சந்திரபாபுவுடன், அவரின் வேகமெடுக்கும் பாடல்களுக்கு ஏற்ப அதே துரித கதியில் ஆடுவதும் அசாத்தியமானதுதான்.
மான் குட்டியைப் போல் துள்ளிக் குதிப்பதில் ஆகட்டும், கால் தரையில் படாமல் அந்தரத்தில் மிதப்பது போல் மிக வேகமாகக் கால்களை மாற்றி சில நடனங்களை அவரால் எளிதாக ஆடிக் காண்பிக்க முடிந்திருக்கிறது.
‘புதுமைப்பித்தன்’ படத்தில் அரண்மனை அடிமைப்பெண்களில் ஒருத்தியான அபராஜிதாவாக ஆடிய ஆட்டங்கள் நினைவில் நிற்பவை.
என் தங்கை’ படத்தின் பிரதான பாத்திரமான தங்கை மீனாவாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்தான் ஈ.வி. சரோஜா.
கண் பார்வையற்ற தங்கை மீனாவாக, சோக ரசம் சொட்டச் சொட்ட அறிமுகப் படத்திலேயே தன் நடிப்பால் அனைவரையும் கண் கலங்க வைத்தார் ஈ.வி.சரோஜா. அவரைச் சுற்றியே படத்தின் கதையும் பின்னப்பட்டிருந்தது.
கண் பார்வையில்லாமல் ஒரு பெண் இந்த உலகில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதைக் கதை விவரித்தது.
நடிப்பின் வழியாக அறியப்பட்டதை விட நடனங்கள், பாடல்கள் வாயிலாகவே பெரிதும் மக்களால் அடையாளம் காணப்படுபவராக இருக்கிறார் ஈ.வி.சரோஜா.
‘தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா…’
‘குல்லா போட்ட நவாப்பு…. செல்லாது உங்க ஜவாப்பு...’
வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப் பாத்துப் போங்க…’
‘தேன் மதுவை வண்டினம் தேடி வரும்…’
‘அழகைப் பார்… நீ பழகிப் பார், எனதன்பே என்னைப் பார்’
என எத்தனை பாடல்கள், அதற்கான நளினம் மிகு நடனங்கள்.
‘மதுரை வீரன்’ படத்தில் மானைத் துரத்தி வரும் வேடனாக எம்.ஜி.ஆர். பெண்களின் அந்தப்புர நந்தவனத்துக்குள் நுழைந்துவிட, அவரிடம் எகத்தாளமாகப் பேசி நையாண்டி செய்வதில் ஆரம்பித்து,
கேலியும் கிண்டலுமாகத் தொடரும் ‘வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப் பார்த்துப் போங்க….’ பாடலில் தரையிலிருந்து இரண்டடி உயரத்துக்கு மேலாக அவர் துள்ளிக் குதிப்பது, மான் துள்ளலாகவே இருக்கும்.
‘பட்டணந்தான் போகலாமடி பொம்பள, பணங்காசு தேடலாமடி’ ரேடியோ காலத்திலிருந்து இன்றைய யூடியூப் காலம் வரை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாடல்.
நாடோடிகளாகத் தெருவில் ஆடிப் பாடிப் பிழைக்கும் ஒரு ஜோடி பாடுவதாக அமைந்த இப்பாடல் ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
ஈ.வி.சரோஜாவுக்கு நடிப்பதற்கான அற்புதமான வாய்ப்பையும் வழங்கியபடம் மணப்பந்தல்.
‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன். அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே’
என்ற பாடல் இந்தப்படத்தில் ஈ.வி.சரோஜாவுக்குக் கிடைத்த அற்புதமான பாடல்களில் ஒன்று.
‘படிக்காத மேதை’ படத்தில் பணக்காரக் குடும்பத்துச் செல்லப் பெண்ணாக
அந்தச் செல்லப் பெண் பாத்திரம் ஈ.வி.சரோஜாவுக்கு இயல்பாய் அமைந்தது.
சிவாஜி இவரை கேலி செய்து பாடும் ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு, சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு…’ பாடலும் திருமண வீடுகளில் அந்நாட்களில் போடப்படும் ரெக்கார்டுகளில் முதன்மை பெற்ற ஒன்று.
ஈ.வி.சரோஜாவின் திரைப் பாத்திரங்களில் சற்றே வித்தியாசமானது ‘வீரத்திருமகன்’ படத்தில் ஏற்ற வீரமங்கை பாத்திரம்.
கொடுங்கோலாட்சி நடக்கும் மன்னராட்சியில், அதை எதிர்த்து நிற்கும் புரட்சிகரக் குழுவில் ஒருத்தியாகவும், அதே நேரத்தில் தளபதி ரவீந்திரன் மீது ஒருதலையாகக் காதல் கொள்பவளாகவும் நடித்திருப்பார்.
ரவீந்திரனாக நடித்த ஆனந்தன், தன் காதலி தான் மறைவில் நிற்கிறாள் என்றெண்ணி ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’ என
சரோஜாவிடம் இந்தப் பாடலைப் பாடுவார்.
பாக்கியலட்சுமி திரைப்படத்தில் எக்காலத்திலும் எல்லோர் மனதையும் மயக்கும் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடல் காட்சியில் ஈ.வி.சரோஜாவும் தோன்றுவார்.
எம்.ஜி.ஆருடன் இணையாக நடித்த ஒரே படம் ‘கொடுத்து வைத்தவள்’. இப்படத்தைத் தயாரித்தவர் சரோஜாவின் சகோதரர் ஈ.வி.ராஜன்.
சொந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் நாயகியாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தன் நாட்டிய வகுப்புத் தோழியான எல்.விஜயலட்சுமிக்கு இரண்டாவது நாயகி வாய்ப்பையும் அளித்தார்.ஆனால், படம் பெரிதாகப் பேசப்படவில்லை.
எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானவர் அவரது இணையாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதுடன் படவுலகை விட்டும் ஒதுங்கினார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் 100 படங்களுக்கும் குறைவாகவே நடித்தார்.
என் தங்கை, நீதிபதி, விளையாட்டு பொம்மை, பெண்ணரசி, மதுரை வீரன், அமரதீபம், மணப்பந்தல், கொடுத்து வைத்தவள், நல்லவன் வாழ்வான்.
குலேபகாவலி, புதுமைப்பித்தன், நன்னம்பிக்கை, மறுமலர்ச்சி, ரம்பையின் காதல், பாசவலை, மணாளனே மங்கையின் பாக்கியம்.
எங்க வீட்டு மகாலட்சுமி, நீலமலைத்திருடன், கடன் வாங்கிக் கல்யாணம், குடும்ப கௌரவம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
பிள்ளைக் கனியமுது, சுமங்கலி, தங்கப்பதுமை, மனைவியே மனிதனின் மாணிக்கம், ஆட வந்த தெய்வம், படிக்காத மேதை, கைதி கண்ணாயிரம்.
பாட்டாளி யின் வெற்றி, விடிவெள்ளி, இரத்தினபுரி இளவரசி, ராணி லலிதாங்கி, வீரத்திருமகன், நல்லதங்காள்.
போன்றபடங்கள் அவர் நடிப்பில் குறிப்பிடத்தக்கவை.
2002 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியிடமிருந்து முத்தமிழ்ப் பேரவையின் ‘நாட்டியச் செல்வம்’ விருது பெற்றார்.
திரைத்துறையில் நிகழ்த்திய வாழ்நாள் சாதனைக்காக 2002 ஆம் ஆண்டுக்கான ‘எம்.ஜி.ஆர். விருது’ 2004 ஆம் ஆண்டு தமிழக அரசால் இவருக்கு வழங்கப்பட்டது.
இயக்குநர் ராமண்ணா ஏற்கனவே நடிகை பி.எஸ்.சரோஜாவை மணந்து கொண்டவர். இரண்டாவதாக ஈ.வி.சரோஜாவையும் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
மனைவியர் இருவருமே ஒரே பெயரைக் கொண்டவர்கள் என்பது அரிதிலும் அரிது. இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. 2006 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் தம் 70 வது வயதில் காலமானார். ஓயாமல் ஆடிய பாதங்கள் நிரந்தர ஓய்வு பெற்றன.

இயக்குனர் மணிவண்ணன்.

 தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் இயக்குனர் மணிவண்ணன். கதாசிரியராக இயக்குனராக நடிகராக என அனைத்திலும் கொடி கட்டி பறந்தவர். தனக்கென ஒரு அரசியல் பார்வையோடு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். ஒரு முறை இயக்குனர் கரு.பழனியப்பன் சொன்னது, ஒரு இயக்குனர்ன்னா அது மணிவண்ணன் மாதிரி இருக்கனும் அவர் 50 படம் பண்ணிட்டாரு ஆனா ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஜானர் மணிவண்ணன் சாரோடு முத படத்தை வச்சு அடுத்த படம் இப்படிதான் இருக்கும்ன்னு ஜட்ஸ் பண்ணிட முடியாதுன்னு, அது உண்மைதான். மற்ற இயக்குனர்களை போல எந்த ஒரு வட்டத்துக்குள்ளயும் சிக்காதவர். இயக்கத்துல மட்டும் இல்லை. நடிப்புலயும் அப்படிதான் வில்லனா தொடங்கி நகைச்சுவை குணச்சித்திரம்ன்னு பட்டையை கிளப்புனவரு.



அவர் கடைசியா நடிச்ச இளைஞன் படத்துல ஏற்பட்ட விபத்து, அதுக்கு நடந்த சிகிச்சையில பிழைன்னு அவர் நடக்க முடியாம இருந்தப்பவும் தீவிரமான வாசிப்புலயும் முக்கிய நிகழ்வுகளிலும் தவறாம பங்கெடுத்துக்கிட்டவர். அந்த ஓய்வு காலத்துல பலருக்கும் உபயோகமா தன்னை அர்ப்பணிச்ச காலகட்டத்துலதான் நான் அவரை சந்திச்சேன்.

2011 தி சண்டே இந்தியன் பத்திரிகை நடத்துன ஒரு செமினார்ல, தமிழ் சினிமாவும் டிஜிட்டல் புரட்சியோ ஏதோ ஒரு தலைப்பு, அதுக்கு பாலு மகேந்திரா சார், மணி சார், வெற்றிமாறன், பிரபு சாலமன் மற்றும் ஆண்மை தவறேல் குழந்தை வேலப்பன் கலந்துகிட்டாங்க.

பாலு சார் ரொம்ப சீனியர், மறந்துட்டேன் பூ சசியும் வந்திருந்தாரு. பாலு சாரை மணி சாரே அப்பான்னுதான் சொல்லுவாரு. இதை ஏன் சொல்றேன்னா பாலு சார் தினமும் க்ளாஸ் எடுத்து பழக்கம், அன்னைக்கும் அவர் நல்ல சினிமான்னா என்ன கெட்ட சினிமான்னா என்னங்குறதுக்கு கொடுத்த விளகத்தை எப்பவும் மறக்க மாட்டேன். அவர் எப்பவும் போல வெறுங்கையோடு வந்து பேசலாம். ஆனா மத்தவங்க எல்லாம் கொடுத்த தலைப்பை மறந்துட்டும் இன்னும் சொல்ல போனா நமக்கு தெரியாததா பாத்துக்கலான்னு ஒரு அலட்சியத்தோடதான் அங்க வந்துருந்தாங்க. அதை அவங்களே கூட ஒத்துப்பாங்க.

ஆனா, மணிவண்ணன் சார், அவர் முறை வந்ததும் அவர் தலைப்புக்கான தயாரிப்புகளை எடுத்து காட்டுனப்ப ஒரு பிரமிப்பு எனக்கு மட்டுமில்ல எல்லோருக்குமே. ஒரு விஸ்காம் ஸ்டூடண்ட் கூட அப்படி ரெடி பண்ணி க்ளாஸ்க்கு வரத நான் பாத்ததில்ல.

அதை தயார் பண்ண அவர் 3 நாட்களை செலவிட்டுருந்தாரு. ரொம்ப ஜாலியான ஆள்ன்னு தெரியும்,ஆனா இவ்வளவு சின்சியரான ஆளுன்னு அப்பதான் தெரிஞ்சுகிட்டேன். அவரோட செமினார் தமிழ் சினிமா உலக சினிமாவில் அரசியல்ன்னு நினைக்கிறேன். அரசியல் பத்தின அவரோட செமினார் மறக்க முடியாதது.

அப்ப அவருக்கே உரித்தான நகைச்சுவையில் சமகாலத்து தமிழ் சினிமா போக்கை விமர்சிக்கவும் செஞ்சாரு. அதுல மறக்க முடியாதது. ஜெயா டிவில ஹாசினி பேசும் படம்ன்னு அப்ப சுஹாசினியோட விமர்சனம் பத்தி அவர் சொன்னது, "இப்ப சுஹாசினி ஒரு விமர்சனம் பண்ணுது, அதுல இப்ப ஏதோ ஒரு படம் வந்துச்சுல்ல என்னது பதினெட்டோ நூத்திஎட்டோன்னு ( அது சித்தார்த் நடிச்ச 180 ன்னு அவருக்கே தெரியும்) உடனே நாங்கெல்லாம் சார் அது 180 ன்னோம். உடனே அவரு " ஏதோ ஒன்னு, அந்த படத்த விமர்சனம் பண்றன்ன பண்ணிட்டு போக வேண்டியதுதான, அந்த அம்மா அதுல சொல்லுது, யப்பா எவ்வளவு நாளாச்சு தமிழ் சினிமாவுல இப்படி ஒரு அழகா ஹேன்ட்ஸம்மா ஒரு ஹீரோவ பாத்து, ஏன்னா, இப்பல்லாம் தமிழ் சினிமாவுல ஹீரோன்னாலே அழுக்கு லுங்கியும் தாடியும் பரட்டை தலையும்ன்னு, இல்ல நான் கேக்குறேன் ஏன் ஹீரோன்னா அது நீங்க சொல்ற ஆளுகதான் இருக்கனுமா?! என் ஊர்ல அப்படிதான் இருப்பான்" அப்படி பேசிட்டு எங்கள பாத்து சொன்னாரு, அந்த அம்மாவை எங்கயாச்சும் பாத்தா அவங்க்கிட்ட சொல்லுங்க நான் இப்படி சொன்னதா, நானே போன் அடிச்சேன் அந்தம்மா எடுகலன்னு சொல்லிட்டு, அடுத்து டைரக்டர் ஷங்கரை வார போனவரு முடிச்சுட்டு அப்ப சொன்னாரு, இதை போய் சங்கர்ட்ட யாரும் சொல்லிடாதிங்க, மணிவண்ணன் உங்களை இப்படி பேசுனாருன்னு, ஏதோ அவரு நமக்கு அப்ப அப்ப சின்ன வேஷம் கொடுக்குறாரு அதுல வேட்டு வச்சுட்டு போயிடாதிங்கன்னப்ப அந்த காமெடியை லைவா அங்க இருந்தப்ப எப்படி உணர்ந்துருப்போன்னு பாருங்க. இப்படி நிறைய பேசிட்டு, இந்த டிஜிட்டல் டெக்னாலாஜிக்கு வந்து ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க, அது வேற லெவல்.


என்னான்னா, " சார் இப்ப நான் பழைய கார்ல என் வீட்டுலருந்து எக்மோர் வர ஒன் ஹவர் ஆகுது, புது கார் வாங்குறேன் அதுல நான் எவ்வளவு நேரத்துல வரனும், அதுல பாதி நேரம் குறைய வேண்டாம் கொஞ்சம் காவாசி நேரமாச்சும் குறையனும்ல்ல, ஆனா, பாருங்க புது கார்ல வர ஒன் ஹவர்க்கு இப்ப 2ஹவர் ஆகுது அப்ப எதுக்கு புது காரு எனக்குன்னவரு. தன்னோட நூறாவது நாள் படத்தை ரீரெக்கார்டிங்கோடு சேத்து பதினாறரை நாள்ல அவர் முடிச்ச விஷயத்தை அவர் சொன்னப்ப அந்த எக்ஸாம்பிள் எங்களை பிரம்மிக்க மட்டும் இல்லை யோசிக்கவும் வச்சுது.

Friday, 6 August 2021

தமிழ் ஊடகங்களில் பெண்கள்:

 சன் மியூசிக்கில் "மச்சான் பேரு மதுர, நீ நின்னு பாரு எதிர" பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் பாட்ட மியூட் பண்ணிப் பாத்தீங்கனா 

 ஹீரோயினோடு விஜய் ஆடும்போது நடன அசைவுகள் கிட்டத்தட்ட பிட்டுப்படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு Soft Porn கொடுக்கும் அதே அனுபவம்.




இது இன்று நேற்று அல்ல, எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கி சிவாஜி,ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சிம்பு என கதாநாயகனோடு ஹீரோயின் நடனமாடும் பாடல்களை மியூட் பண்ணிப்பார்த்தால் இது தான் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழர்களின் கலை உணர்வு என்பது பாலியல் மன வக்கிரங்களின் நீட்சி.

இந்த எழவுக் கருமாந்திரத்தைத் தான் குடும்பத்தோடு தாத்தாப் பாட்டி அப்பா அம்மா பேரப்பிள்ளைகள் சகிதம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

இந்த பாலியல் அருவருப்பை, வக்கிரங்களை பார்த்து வளரும் ஆண் குழந்தைகள் அனைவரும் மனதளவில் ரேப்பிஸ்டுகளாகத் தான் வளர்வார்கள், வளர்ந்திருக்கிறார்கள். பெண்களுக்கு Resistance உணர்வு அதிகம் என்பதால் பெரும்பாலும் துணியமாட்டார்கள். அபூர்வமாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றும் அபத்தங்கள் நிகழும்.

ஆண்களுக்கு கட்டுப்படுத்தும் திறன் இயற்கையிலேயே மிகமிகக் குறைவு. அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த இச்சையைப் போக்கிக் கொள்ள ஒரு வடிகால் தேவைப்படுகிறது. அந்த இச்சையை கையாளத் தெரியாதவர்கள் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்கிறார்கள், சிலர் தப்பித்து விடுகிறார்கள், மீதமிருக்கும் பெரும்பாலனவர்கள் உத்தமர்கள் என்று எண்ணிவிட வேண்டாம், அவர்கள் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் இல்லை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

பெண்களுக்கு எதிரான நம் சமூகக் குற்றங்கள் தனிமனிதக் குற்றங்கள் அல்ல, இது மெல்ல குழந்தைப்பருவத்தில் இருந்தே மீடியா மூலம் அது சினிமா, டிவி, பத்திரிக்கை, டிக் டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டா என எந்த ஊடகத்தை எடுத்தாலும் அங்கே பெண்கள் வெறும் உடலாகத் தான் முன் வைக்கப்படுகிறார்கள். நிர்வாணத்தின் அளவு மட்டும் தான் மாறுபடும் சினிமாவில் தூக்கலாக, டிவியில் கொஞ்சம் கம்மி, முகநூல், இன்ஸ்டாவில் இன்னும் கொஞ்சம் கம்மி. 

முகநூலில் கூட, தங்களை எழுத்தாளராக, அரசியல் ஆக்டிவிஸ்டாக, கவிஞராக, ஓவியராக, பாடகியாக அதாவது ஒரு துறையில் ஆளுமையாக முன்வைக்கும் பெண்கள் அபூர்வம். 

பெரும்பாலும் தங்களை வெறும் உடலாக, அழகாக, சதையாக, காட்டிக்கொள்ளாத பெண்களைக் அரிதினும் அரிது, அது எளிமையாக இருப்பதால் பெண்களும் அதைத்தான் செய்கிறார்கள், விரும்புகிறார்கள்.