Wednesday 15 June 2022

இயக்குனர் மணிவண்ணன்.

 தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் இயக்குனர் மணிவண்ணன். கதாசிரியராக இயக்குனராக நடிகராக என அனைத்திலும் கொடி கட்டி பறந்தவர். தனக்கென ஒரு அரசியல் பார்வையோடு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். ஒரு முறை இயக்குனர் கரு.பழனியப்பன் சொன்னது, ஒரு இயக்குனர்ன்னா அது மணிவண்ணன் மாதிரி இருக்கனும் அவர் 50 படம் பண்ணிட்டாரு ஆனா ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஜானர் மணிவண்ணன் சாரோடு முத படத்தை வச்சு அடுத்த படம் இப்படிதான் இருக்கும்ன்னு ஜட்ஸ் பண்ணிட முடியாதுன்னு, அது உண்மைதான். மற்ற இயக்குனர்களை போல எந்த ஒரு வட்டத்துக்குள்ளயும் சிக்காதவர். இயக்கத்துல மட்டும் இல்லை. நடிப்புலயும் அப்படிதான் வில்லனா தொடங்கி நகைச்சுவை குணச்சித்திரம்ன்னு பட்டையை கிளப்புனவரு.



அவர் கடைசியா நடிச்ச இளைஞன் படத்துல ஏற்பட்ட விபத்து, அதுக்கு நடந்த சிகிச்சையில பிழைன்னு அவர் நடக்க முடியாம இருந்தப்பவும் தீவிரமான வாசிப்புலயும் முக்கிய நிகழ்வுகளிலும் தவறாம பங்கெடுத்துக்கிட்டவர். அந்த ஓய்வு காலத்துல பலருக்கும் உபயோகமா தன்னை அர்ப்பணிச்ச காலகட்டத்துலதான் நான் அவரை சந்திச்சேன்.

2011 தி சண்டே இந்தியன் பத்திரிகை நடத்துன ஒரு செமினார்ல, தமிழ் சினிமாவும் டிஜிட்டல் புரட்சியோ ஏதோ ஒரு தலைப்பு, அதுக்கு பாலு மகேந்திரா சார், மணி சார், வெற்றிமாறன், பிரபு சாலமன் மற்றும் ஆண்மை தவறேல் குழந்தை வேலப்பன் கலந்துகிட்டாங்க.

பாலு சார் ரொம்ப சீனியர், மறந்துட்டேன் பூ சசியும் வந்திருந்தாரு. பாலு சாரை மணி சாரே அப்பான்னுதான் சொல்லுவாரு. இதை ஏன் சொல்றேன்னா பாலு சார் தினமும் க்ளாஸ் எடுத்து பழக்கம், அன்னைக்கும் அவர் நல்ல சினிமான்னா என்ன கெட்ட சினிமான்னா என்னங்குறதுக்கு கொடுத்த விளகத்தை எப்பவும் மறக்க மாட்டேன். அவர் எப்பவும் போல வெறுங்கையோடு வந்து பேசலாம். ஆனா மத்தவங்க எல்லாம் கொடுத்த தலைப்பை மறந்துட்டும் இன்னும் சொல்ல போனா நமக்கு தெரியாததா பாத்துக்கலான்னு ஒரு அலட்சியத்தோடதான் அங்க வந்துருந்தாங்க. அதை அவங்களே கூட ஒத்துப்பாங்க.

ஆனா, மணிவண்ணன் சார், அவர் முறை வந்ததும் அவர் தலைப்புக்கான தயாரிப்புகளை எடுத்து காட்டுனப்ப ஒரு பிரமிப்பு எனக்கு மட்டுமில்ல எல்லோருக்குமே. ஒரு விஸ்காம் ஸ்டூடண்ட் கூட அப்படி ரெடி பண்ணி க்ளாஸ்க்கு வரத நான் பாத்ததில்ல.

அதை தயார் பண்ண அவர் 3 நாட்களை செலவிட்டுருந்தாரு. ரொம்ப ஜாலியான ஆள்ன்னு தெரியும்,ஆனா இவ்வளவு சின்சியரான ஆளுன்னு அப்பதான் தெரிஞ்சுகிட்டேன். அவரோட செமினார் தமிழ் சினிமா உலக சினிமாவில் அரசியல்ன்னு நினைக்கிறேன். அரசியல் பத்தின அவரோட செமினார் மறக்க முடியாதது.

அப்ப அவருக்கே உரித்தான நகைச்சுவையில் சமகாலத்து தமிழ் சினிமா போக்கை விமர்சிக்கவும் செஞ்சாரு. அதுல மறக்க முடியாதது. ஜெயா டிவில ஹாசினி பேசும் படம்ன்னு அப்ப சுஹாசினியோட விமர்சனம் பத்தி அவர் சொன்னது, "இப்ப சுஹாசினி ஒரு விமர்சனம் பண்ணுது, அதுல இப்ப ஏதோ ஒரு படம் வந்துச்சுல்ல என்னது பதினெட்டோ நூத்திஎட்டோன்னு ( அது சித்தார்த் நடிச்ச 180 ன்னு அவருக்கே தெரியும்) உடனே நாங்கெல்லாம் சார் அது 180 ன்னோம். உடனே அவரு " ஏதோ ஒன்னு, அந்த படத்த விமர்சனம் பண்றன்ன பண்ணிட்டு போக வேண்டியதுதான, அந்த அம்மா அதுல சொல்லுது, யப்பா எவ்வளவு நாளாச்சு தமிழ் சினிமாவுல இப்படி ஒரு அழகா ஹேன்ட்ஸம்மா ஒரு ஹீரோவ பாத்து, ஏன்னா, இப்பல்லாம் தமிழ் சினிமாவுல ஹீரோன்னாலே அழுக்கு லுங்கியும் தாடியும் பரட்டை தலையும்ன்னு, இல்ல நான் கேக்குறேன் ஏன் ஹீரோன்னா அது நீங்க சொல்ற ஆளுகதான் இருக்கனுமா?! என் ஊர்ல அப்படிதான் இருப்பான்" அப்படி பேசிட்டு எங்கள பாத்து சொன்னாரு, அந்த அம்மாவை எங்கயாச்சும் பாத்தா அவங்க்கிட்ட சொல்லுங்க நான் இப்படி சொன்னதா, நானே போன் அடிச்சேன் அந்தம்மா எடுகலன்னு சொல்லிட்டு, அடுத்து டைரக்டர் ஷங்கரை வார போனவரு முடிச்சுட்டு அப்ப சொன்னாரு, இதை போய் சங்கர்ட்ட யாரும் சொல்லிடாதிங்க, மணிவண்ணன் உங்களை இப்படி பேசுனாருன்னு, ஏதோ அவரு நமக்கு அப்ப அப்ப சின்ன வேஷம் கொடுக்குறாரு அதுல வேட்டு வச்சுட்டு போயிடாதிங்கன்னப்ப அந்த காமெடியை லைவா அங்க இருந்தப்ப எப்படி உணர்ந்துருப்போன்னு பாருங்க. இப்படி நிறைய பேசிட்டு, இந்த டிஜிட்டல் டெக்னாலாஜிக்கு வந்து ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க, அது வேற லெவல்.


என்னான்னா, " சார் இப்ப நான் பழைய கார்ல என் வீட்டுலருந்து எக்மோர் வர ஒன் ஹவர் ஆகுது, புது கார் வாங்குறேன் அதுல நான் எவ்வளவு நேரத்துல வரனும், அதுல பாதி நேரம் குறைய வேண்டாம் கொஞ்சம் காவாசி நேரமாச்சும் குறையனும்ல்ல, ஆனா, பாருங்க புது கார்ல வர ஒன் ஹவர்க்கு இப்ப 2ஹவர் ஆகுது அப்ப எதுக்கு புது காரு எனக்குன்னவரு. தன்னோட நூறாவது நாள் படத்தை ரீரெக்கார்டிங்கோடு சேத்து பதினாறரை நாள்ல அவர் முடிச்ச விஷயத்தை அவர் சொன்னப்ப அந்த எக்ஸாம்பிள் எங்களை பிரம்மிக்க மட்டும் இல்லை யோசிக்கவும் வச்சுது.

No comments:

Post a Comment