Wednesday 15 June 2022

ஈ வி சரோஜா

 தமிழ்த் திரையில் பத்மினி வைஜெயந்திமாலா எல் விஜயலட்சுமி போன்ற பல நடிகைகள் நடனத்தில் ஜாம்பவான்களாக கலக்கி இருக்கின்றனர்.


ஆனால் இவர்களை எல்லாம் தனது துள்ளல் நடனத்தால் மிஞ்சும் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஈ வி சரோஜா ஒருவர் தான்.




ஈ வி சரோஜாவின் நடனத்தில் உள்ள துள்ளல், நளினம் இரண்டுமே கவனத்தை ஈர்க்கக் கூடியவை.

நடிகர்கள் சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் என்று நகைச்சுவை நடிகர்களுக்கும் இணையாக நடித்தவர். அதிலும் குறிப்பாக சந்திரபாபுவுடன், அவரின் வேகமெடுக்கும் பாடல்களுக்கு ஏற்ப அதே துரித கதியில் ஆடுவதும் அசாத்தியமானதுதான்.
மான் குட்டியைப் போல் துள்ளிக் குதிப்பதில் ஆகட்டும், கால் தரையில் படாமல் அந்தரத்தில் மிதப்பது போல் மிக வேகமாகக் கால்களை மாற்றி சில நடனங்களை அவரால் எளிதாக ஆடிக் காண்பிக்க முடிந்திருக்கிறது.
‘புதுமைப்பித்தன்’ படத்தில் அரண்மனை அடிமைப்பெண்களில் ஒருத்தியான அபராஜிதாவாக ஆடிய ஆட்டங்கள் நினைவில் நிற்பவை.
என் தங்கை’ படத்தின் பிரதான பாத்திரமான தங்கை மீனாவாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்தான் ஈ.வி. சரோஜா.
கண் பார்வையற்ற தங்கை மீனாவாக, சோக ரசம் சொட்டச் சொட்ட அறிமுகப் படத்திலேயே தன் நடிப்பால் அனைவரையும் கண் கலங்க வைத்தார் ஈ.வி.சரோஜா. அவரைச் சுற்றியே படத்தின் கதையும் பின்னப்பட்டிருந்தது.
கண் பார்வையில்லாமல் ஒரு பெண் இந்த உலகில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதைக் கதை விவரித்தது.
நடிப்பின் வழியாக அறியப்பட்டதை விட நடனங்கள், பாடல்கள் வாயிலாகவே பெரிதும் மக்களால் அடையாளம் காணப்படுபவராக இருக்கிறார் ஈ.வி.சரோஜா.
‘தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா…’
‘குல்லா போட்ட நவாப்பு…. செல்லாது உங்க ஜவாப்பு...’
வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப் பாத்துப் போங்க…’
‘தேன் மதுவை வண்டினம் தேடி வரும்…’
‘அழகைப் பார்… நீ பழகிப் பார், எனதன்பே என்னைப் பார்’
என எத்தனை பாடல்கள், அதற்கான நளினம் மிகு நடனங்கள்.
‘மதுரை வீரன்’ படத்தில் மானைத் துரத்தி வரும் வேடனாக எம்.ஜி.ஆர். பெண்களின் அந்தப்புர நந்தவனத்துக்குள் நுழைந்துவிட, அவரிடம் எகத்தாளமாகப் பேசி நையாண்டி செய்வதில் ஆரம்பித்து,
கேலியும் கிண்டலுமாகத் தொடரும் ‘வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப் பார்த்துப் போங்க….’ பாடலில் தரையிலிருந்து இரண்டடி உயரத்துக்கு மேலாக அவர் துள்ளிக் குதிப்பது, மான் துள்ளலாகவே இருக்கும்.
‘பட்டணந்தான் போகலாமடி பொம்பள, பணங்காசு தேடலாமடி’ ரேடியோ காலத்திலிருந்து இன்றைய யூடியூப் காலம் வரை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாடல்.
நாடோடிகளாகத் தெருவில் ஆடிப் பாடிப் பிழைக்கும் ஒரு ஜோடி பாடுவதாக அமைந்த இப்பாடல் ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
ஈ.வி.சரோஜாவுக்கு நடிப்பதற்கான அற்புதமான வாய்ப்பையும் வழங்கியபடம் மணப்பந்தல்.
‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன். அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே’
என்ற பாடல் இந்தப்படத்தில் ஈ.வி.சரோஜாவுக்குக் கிடைத்த அற்புதமான பாடல்களில் ஒன்று.
‘படிக்காத மேதை’ படத்தில் பணக்காரக் குடும்பத்துச் செல்லப் பெண்ணாக
அந்தச் செல்லப் பெண் பாத்திரம் ஈ.வி.சரோஜாவுக்கு இயல்பாய் அமைந்தது.
சிவாஜி இவரை கேலி செய்து பாடும் ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு, சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு…’ பாடலும் திருமண வீடுகளில் அந்நாட்களில் போடப்படும் ரெக்கார்டுகளில் முதன்மை பெற்ற ஒன்று.
ஈ.வி.சரோஜாவின் திரைப் பாத்திரங்களில் சற்றே வித்தியாசமானது ‘வீரத்திருமகன்’ படத்தில் ஏற்ற வீரமங்கை பாத்திரம்.
கொடுங்கோலாட்சி நடக்கும் மன்னராட்சியில், அதை எதிர்த்து நிற்கும் புரட்சிகரக் குழுவில் ஒருத்தியாகவும், அதே நேரத்தில் தளபதி ரவீந்திரன் மீது ஒருதலையாகக் காதல் கொள்பவளாகவும் நடித்திருப்பார்.
ரவீந்திரனாக நடித்த ஆனந்தன், தன் காதலி தான் மறைவில் நிற்கிறாள் என்றெண்ணி ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’ என
சரோஜாவிடம் இந்தப் பாடலைப் பாடுவார்.
பாக்கியலட்சுமி திரைப்படத்தில் எக்காலத்திலும் எல்லோர் மனதையும் மயக்கும் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடல் காட்சியில் ஈ.வி.சரோஜாவும் தோன்றுவார்.
எம்.ஜி.ஆருடன் இணையாக நடித்த ஒரே படம் ‘கொடுத்து வைத்தவள்’. இப்படத்தைத் தயாரித்தவர் சரோஜாவின் சகோதரர் ஈ.வி.ராஜன்.
சொந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் நாயகியாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தன் நாட்டிய வகுப்புத் தோழியான எல்.விஜயலட்சுமிக்கு இரண்டாவது நாயகி வாய்ப்பையும் அளித்தார்.ஆனால், படம் பெரிதாகப் பேசப்படவில்லை.
எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானவர் அவரது இணையாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதுடன் படவுலகை விட்டும் ஒதுங்கினார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் 100 படங்களுக்கும் குறைவாகவே நடித்தார்.
என் தங்கை, நீதிபதி, விளையாட்டு பொம்மை, பெண்ணரசி, மதுரை வீரன், அமரதீபம், மணப்பந்தல், கொடுத்து வைத்தவள், நல்லவன் வாழ்வான்.
குலேபகாவலி, புதுமைப்பித்தன், நன்னம்பிக்கை, மறுமலர்ச்சி, ரம்பையின் காதல், பாசவலை, மணாளனே மங்கையின் பாக்கியம்.
எங்க வீட்டு மகாலட்சுமி, நீலமலைத்திருடன், கடன் வாங்கிக் கல்யாணம், குடும்ப கௌரவம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
பிள்ளைக் கனியமுது, சுமங்கலி, தங்கப்பதுமை, மனைவியே மனிதனின் மாணிக்கம், ஆட வந்த தெய்வம், படிக்காத மேதை, கைதி கண்ணாயிரம்.
பாட்டாளி யின் வெற்றி, விடிவெள்ளி, இரத்தினபுரி இளவரசி, ராணி லலிதாங்கி, வீரத்திருமகன், நல்லதங்காள்.
போன்றபடங்கள் அவர் நடிப்பில் குறிப்பிடத்தக்கவை.
2002 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியிடமிருந்து முத்தமிழ்ப் பேரவையின் ‘நாட்டியச் செல்வம்’ விருது பெற்றார்.
திரைத்துறையில் நிகழ்த்திய வாழ்நாள் சாதனைக்காக 2002 ஆம் ஆண்டுக்கான ‘எம்.ஜி.ஆர். விருது’ 2004 ஆம் ஆண்டு தமிழக அரசால் இவருக்கு வழங்கப்பட்டது.
இயக்குநர் ராமண்ணா ஏற்கனவே நடிகை பி.எஸ்.சரோஜாவை மணந்து கொண்டவர். இரண்டாவதாக ஈ.வி.சரோஜாவையும் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
மனைவியர் இருவருமே ஒரே பெயரைக் கொண்டவர்கள் என்பது அரிதிலும் அரிது. இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. 2006 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் தம் 70 வது வயதில் காலமானார். ஓயாமல் ஆடிய பாதங்கள் நிரந்தர ஓய்வு பெற்றன.

No comments:

Post a Comment