Monday 10 June 2019

வெறும் மோகன் ‘கிரேஸி’ மோகன் ஆனது எப்படித் தெரியுமா?

தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
நாடக ஆசிரியரான இவர் பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோதே, நடுநடுவே நாடகங்களை போடுவார்.
அப்படி இவரது நாடகத்தை பார்க்க வந்த, இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாராட்டி தள்ளி விட்டார். அதுதான் சினிமாவுக்குள் கிரேஸியை உள்ளே புகுத்தியது. பொய்க்கால் குதிரை படம் மூலம் சினிமா பயணம் தொடங்கியது.


மோகன் ரங்காச்சாரி எனும் இயற்பெயரைக் கொண்டவர், கிரேஸி மோகனாக மாறிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.
பொய்க்கால் குதிரையில் ஆரம்பித்து, இன்று வரை தமிழ் சினிமாவின் சிரிப்பு மருந்தாக திகழ்ந்தவர் கிரேஸி மோகன். நாடகங்கள், சினிமாக்கள், தொலைக்காட்சி என எல்லாவற்றிலும் சிரிப்பு ராஜ்ஜியம் நடத்தியவர் இவர்.
மோகன் ரங்காச்சாரி என்பது தான் கிரேஸி மோகனின் இயற்பெயர். மெக்கானிக் எஞ்சீனியரிங் படித்த மோகன், எழுத்துறைக்கு வந்த கதைச் சுவாரஸ்யமானது. வெறும் மோகனாக இருந்த அவரது பெயருக்கு முன்னால் கிரேஸி என்ற பெயர் ஒட்டிக் கொள்ள காரணமாக இருந்தது ஒரு நாடகம் தான்.


கல்லூரிக் காலங்களில் ஸ்கிட் எனப்படும் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டு வந்தவர் மோகன். படித்து முடித்ததும், நல்ல வேலை கிடைத்தது. ஆனால், எழுத்தின் மீது இருந்த தீராக்காதலால் நாடகம் போடும் முயற்சியில் ஈடுபட்டார்.
எஸ்.வி.சேகர் இவருக்கு பள்ளியில் சீனியர். அந்த நட்பில் அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அப்படித்தான் அவரது முதல் நாடகமான கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் மேடையேறியது. பயங்கர ஹிட்டான அந்த நாடகத்தின் பிரபல வசனங்கள் வார இதழில் தொடராக வந்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானது.
இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட முறை கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் அரங்கேற்றம் ஆகியுள்ளது. அந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தான் சினிமாவுக்குச் சென்றார் மோகன். ஆனால், சினிமாவில் வசனம் எழுதிய போதும், தொடர்ந்து நாடகங்கள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.


முதல் வெற்றி எப்போதும் பெயரோடு ஒட்டிக் கொள்வது வழக்கம் தானே. அப்படித்தான் சி.மோகன், கிரேஸி மோகன் ஆனார். அந்த நாடகத்திற்குப் பிறகு அவர் எவ்வளவோ நாடகங்கள் எழுதியபோதும், கிரேஸி மட்டும் அவரது பெயரோடே சிரிப்பு பசையால் ஒட்டிக் கொண்டது. கிரேஸி என்பது அவரது அடையாளமாகவே மாறிப் போனது. பலருக்கும் அவரது மோகன் என்ற பெயரைவிட கிரேஸி என்பது தான் மனதில் பதிந்து போயுள்ளது.
"டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி.." இதுதான் கிரேஸி மோகனின் தாரக மந்திரம். அது அவரது பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். படங்களில் காமெடி இருக்கும். ஆனால் காமெடியையே ஒரு முழு படமாக எழுதும் திறமை கிரேஸிக்கு மட்டுமே உண்டு. இதனை மிக சரியாக பயன்படுத்தி கொண்டவர் கமல்ஹாசன்தான்!

இதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியதே சாட்சி!

லட்சக்கணக்கானோர் மனதுக்கு பிடித்தமான கிரேஸி மோகன் அற்புதமான மனிதர் மட்டுமல்ல.. காயம்பட்ட இதயத்துக்கு மருந்தானவரும்கூட. ரொம்ப வேகமாக வேகமாக பேசுவார்.. எப்பவுமே இவரது பேச்சில் ஒரு ஸ்பிரிட் இருக்கும். வெத்திலை - பாக்கு - சீவல்தான் இவரது ட்ரேட் மார்க்!

ஒரு காமெடியை பார்த்து சிரித்து முடிப்பதற்கு முன்பேயே இன்னொரு காமெடி வந்து நம்மை திக்குமுக்காட செய்வதுதான் கிரேஸியின் டச் & பஞ்ச்! கடந்த சில வருடங்களாக இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. எனினும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார்.


இந்நிலையில், தீவிர கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கவலைக்கிடமான நிலையில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபலங்களும், பொதுமக்களும் கிரேஸி மோகன் உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று இணையத்தில் ட்வீட்கள், கமெண்ட்கள் போட்டு பிரார்த்தனை செய்து வந்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனின்றி கிரேஸி மோகன் காலமானார். இந்த தகவலை கேட்டதும், சினிமா, நாடக உலகமே பெரும் சோகம் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது.



No comments:

Post a Comment