Saturday 4 April 2015

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும்

இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாடல்கள் எடுப்பதில் வல்லவர். அவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் புதுமை நிறைந்ததாக இருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெறும், சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒன்றே போதும், அவரது திறமையை அறிய.


 
தூர்தர்ஷனில் காவிய கவிஞர் வாலி தனது மலரும் நினைவுகளை பதிவு செய்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரமும் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை நடத்தியவர் நெல்லை ஜெயந்தா. அந்த அருமையான நிகழ்ச்சி நூலாகவும் வெளிவந்துள்ளது. 
 
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் விழிகளில் கண்டேனே என்ற வாலியின் அற்புதமான பாடல் குறித்தும், அந்தப் பாடல் தனக்கு கற்றுத் தந்த பாடம் குறித்தும் இயக்குனர் சிகரம் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
"மதுரையில் பறந்த மீன்கொடியை உன் விழிகளில் கண்டேனே ரொம்ப அற்புதமான பாட்டு. எல்லா ஊர்ப் பெயர்களும் அதில் வரும். ஆனால் அதில ஒரு டிராஜடி ஆகிப்போச்சு. நான் ரொம்ப ரசித்த பாட்டு, ஜெமினி பிரமாதமாக நடிச்சிருப்பார். அந்தப் பாடல் இடைவேளையில் வரும். ஏற்கனவே ஒன்றரை மணிநேரம் தம்மடிக்காம தம்பிடிச்சு உட்கார்ந்திருக்காங்க. அப்ப இந்தப் பாட்டு வந்தவுடன் பாதிபேர் எழுந்து வெளியே போயிட்டாங்க. அப்போ எல்லாம் உள்ளுக்குள்ள சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருந்தது. பல தியேட்டர்களிலும் இதே நிலை.
 
"எப்பவுமே இடைவேளை வரும்போது டைரக்டர் ஜாக்கிரதையாக இருக்கணும். அங்கபோயி இந்த மாதிரி ஸ்லோ உள்ள காட்சியை வைக்காமல் இடைவேளைக்குப் பிறகு கொடுத்தால் ரசிப்பாங்க. இடைவேளை நேரத்தில் இந்தப் பாட்டை கொடுத்ததால் எழுந்து போயிட்டாங்க. கொடுத்தது என் தப்பு. ஃபோன் பண்ணி பார்த்தால் எல்லா ஊர்களிலும் இதேநிலை என்றார்கள்.  கஷ்டமா போச்சு. மதுரை ஆடியன்ஸ்கூட எழுந்து போனார்கள்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டு அந்தப் பாட்டை எல்லா ஊர்களிலும் நீக்க சொல்லிட்டேன். 
 
"இதிலிருந்து என்ன கத்துகிட்டேன்னா... ஒரு படத்துல பாட்டு வைக்கிற இடத்தக்கூட கவனமா பண்ணணும்னு. வெறும் சீனுன்னு நான் எழுதுறேன். நான் டைரக்ட் பண்ணிட்டு போயிடறேன். பாட்டு சீன் அப்படியில்ல. பாட்டுன்னா ஒரு கவிஞர் வர்றாரு. ஒரு மியூஸிக் டைரக்டர் வர்றாரு. நான் உட்கார்ந்துக்கிறேன். அப்புறம் நடன இயக்குனர். இவ்வளவு பேரும் சேர்ந்து பண்ற உழைப்பு வீணாகிப் போயிடக் கூடாதில்லையா? அதனால ஒரு பாட்ட எந்த இடத்தில் போடணும், போடக் கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்."
 
 - இயக்குனர் சிகரத்தின் இந்த வார்த்தைகளிலிருந்து அவர் ஒரு திரைப்படத்தை, திரைப்பட ரசிகர்களின் மனநிலையை எப்படி நுட்பமாக அணுகி புரிந்து வைத்துள்ளார் என்பதை அறியலாம். 

பாடல்களை படமாக்குவதைப் போலவே அதனை எழுதி வாங்குவதிலும் தனித்துவமானவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அதுபற்றி வாலி கூறியதை நெல்லை ஜெயந்தா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
இனி வாலியின் அனுபவம்.
"பாடல் எழுதி வாங்குவதில் பாலசந்தருக்கும் அண்ணாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நான் எம்.ஜி.ஆருக்கு எழுதின முதல் படம், நல்லவன் வாழ்வான். அண்ணாதான் டயலாக். அண்ணா வந்து, இந்தப் பாட்டில் இந்தக் கருத்தெல்லாம் வரலாம் அப்படீன்னு எழுதிக் கொடுத்திடுவாரு. உடுமலை நாராயண கவி எல்லாம் அண்ணா எழுதின வரிகளை பல்லவி ஆக்கியிருக்காங்க. அண்ணா மாதிரி பாலசந்தரும் பாட்டுல என்னென்ன வேணும்னு சொல்லிடுவாரு. பாட்டுக்கு மெட்டீரியல் தர்றதுங்கிறது அண்ணாவுக்கு பிறகு இவர்தான். இரு கோடுகள் படத்துல வர்ற புன்னகை மன்னன் பாட்டு பட்டிமன்றம் மாதிரி இருக்குன்னு சொல்றீங்க. அந்தப் பாட்டு அப்படி இருக்கணும்னு சொன்னதே அவர்தான்."
 
ஒரு படத்துக்கு ஒரு பாடலாசிரியரை பயன்படுத்தவே பாலசந்தர் விரும்புவார். அது ஏன்?
 
"ஒரு படத்துக்கு ஒரு கவிஞர்னு சொல்லிட்டா, அவர்கிட்ட முழு கதையையும் சொல்லிடுவோம். அப்பவே அவர்களும் கதைக்குள்ள வந்துவிடுவார்கள். எப்ப பாட்டு வேணும்னு நாம கேட்டாலும் உடனே எழுதித்தர முடியும். ஒருமுறை வாலி தன்னுடைய புதுக்கவிதை புத்தகம் ஒன்றை என்கிட்ட கொடுத்தாரு. அப்போ நான் அக்னி சாட்சின்னு ஒரு படம் பண்ணலாம்னு இருந்தேன். அப்போ வாலி எழுதின, நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன், என் நிழலையோ பூசிக்கிறேன், அதனால்தான் உன் நிழல் விழுந்த மண்ணைக்கூட என் நெற்றியில், நீறுபோல் இட்டுக் கொள்கிறேன் என்ற புதுக்கவிதை என் நினைவுக்கு வந்தது. 
 
"அது என்னை ஏதோ செய்தது. உடனே வாலிகிட்ட இதைக் கொஞ்சம் முன்னும் பின்னும் மாற்றி மியூசிக் பண்ணி எடுத்துக்கிறேன்னு சொன்னேன். அந்தப் பாட்டு பிரமாதமாக வந்தது. அவருடைய நிறைய புதுக்கவிதைகளை நான் அவரிடம் இருந்து திருடி என் படத்துல வச்சிருக்கேன்னு அவர்கிட்ட சொல்வேன். எனக்கு புதுக்கவிதை மேல அப்படியொரு மோகம்."
 
பாலசந்தர் படத்தில் வாலி எழுதிய அனேக நல்ல பாடல்களில் முக்கியமானது, எதிர்நீச்சல் படத்தில் வருகிற, வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இது பற்றி பாலசந்தர் பெருமிதமாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
 
"எதிர்நீச்சல் படத்தில் கஷ்டப்பட்டு ஒருத்தன் முன்னுக்கு வர ஆசைப்படுகிறான். ஒரு தன்னம்பிக்கை பாட்டு, டைட்டில் பாடலா வைக்கணும்னு கேட்டேன். கவிஞர் உடனே எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல்தான், வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இந்தப் பாட்டைப் பற்றி இன்னொரு விஷயம் சொல்லணும். அப்போ அண்ணா அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த சமயத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார். 45 நிமிடம் பேசினார். படம் முழுவதும் பார்த்திட்டு, படம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த, வெற்றி வேண்டுமா பாட்டை யார் எழுதினதுன்னு கேட்டார். நான், வாலி எழுதினார்னு சொன்னேன். உடனே அவர், ரொம்ப நல்லா இருக்குன்னு அவர்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லச் சொன்னார்."

No comments:

Post a Comment