Wednesday, 15 March 2017

தமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை!

நகைச்சுவைப் படங்களுக்கு நம் தமிழ் மக்களிடையே எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மிகப் பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவைப் படங்கள் என்று எதனையும் கூறிவிட முடியாது. காரணம் அனைவரும் அறிந்ததே.
 
 
 
 அவ்வளவு நல்ல நகைச்சுவைப் படங்கள் எதுவும் வரவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், வெளியான ஒருசில நல்ல நகைச்சுவைப் படங்களும் மக்களை திரையரங்கிற்கு ஈர்க்கவில்லை என்பதே உண்மை. நம் மக்கள் நகைச்சுவைப் படப் பிரியர்கள்தான் என்றாலும் அவர்கள் நம்பி திரையரங்கிற்குச் செல்வதற்கு ஒரு நல்ல நகைச்சுவையாளர் தேவைப்படுகிறார். இன்றைய சூழலில் அப்படி யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

ஒரு காலத்தில் கவுண்டமணி-செந்தில் காம்பினேஷன் இருந்தாலே எதைப் பற்றியும் யோசிக்காமல் திரையரங்கிற்கும் செல்லும் வழக்கம் இருந்தது. அதே போல்தான் விவேக்கிற்கும், வடிவேலுவிற்கும். பின் சிறிது காலம் சந்தானம். கவுண்டமணி செந்தில் ஓய்வு பெறும் சூழலில் எப்படி வடிவேலு மற்றும் விவேக் அவர்கள் இடத்தை ஓரளவிற்கு நிரப்ப முயற்சி செய்தார்களோ அதே போல வடிவேலு, விவேக்கின் படங்கள் குறையத் தொடங்கும் நேரத்தில் சந்தானம் அதனை நிவர்த்தி செய்தார். ஆனால் சந்தானத்திற்குப் பிறகு அவ்வளவு பெரிய பொறுப்பை சுமக்கும் அளவுக்கு வேறு நகைச்சுவையாளர்கள் தற்பொழுது இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே. 
 
 மேற்கூறிய அனைவருமே நகைச்சுவையாளராகத் தொடராததற்கு வெவ்வேறு காரணங்கள். கவுண்டருக்கு முதுமை. வடிவேலுவுக்கு சிலபல அரசியல் காரணங்கள். விவேக்கிற்கு குடும்ப வாழ்க்கை... சந்தானத்திற்கு கதை நாயகன் ஆசை. இவர்கள் அனைவருமே ஒவ்வொரு காலகட்டத்தில் சம்பளத்தொகையில் தயாரிப்பாளர்களை அலற வைத்தவர்கள்தான். கவுண்டர் 90 களிலேயே 40 லட்சம் வரை வாங்கியவர். கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் அவருக்குத் தரப்பட்டது. கவுண்டர் அதற்கு ஒர்த்தானவர். அவரால்தான் பட படங்கள் ஓடின, என்கிறார்கள் கவுண்டரின் திரையுலக ரசிகர்கள். வடிவேலுவின் சம்பளத்தைக் கேட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடிய இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களும் நாம் நன்கறிவோம். 
 
இவருக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை என சுந்தர்.சி ஓப்பனாக பேட்டியும் கொடுத்தார்.
 
மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டிகளைப் போல் நாள் சம்பளம், ஒவ்வொரு ட்ராக்கிற்கும் சம்பளம் என நகைச்சுவையாளர்களின் சம்பளம் எங்கெங்கோ எகிறியிருந்தது. சந்தானம் காமெடியனாக நடித்த பொழுது அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு கால்ஷீட்டிற்கு பதினைந்து லட்சம் (அவ்வ்). மேலும் அதிகரித்திருக்கலாம். சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களைக் காட்டிலும் இவர்களின் ஊதியம் அதிகம். 
 
வருமான உயர்வு என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு செய்தி. ஆனால் ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் ஒருவனுடைய மாத வருமானம் 48 லட்சத்தைத் தாண்டும் பொழுது, அதன் பின் வருகிற வருமான உயர்வு அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்கிறது. (48 லட்சமா? 30 ரூவாடா... 30 ரூவா குடுத்தா 3 நாள் கண்ணு முழிச்சி வேலை செய்வேண்டா என்ற வசனம் உங்கள் மனதில் வந்து போனால் கம்பெனி பொறுப்பல்ல). 
 
வருமானத் தேவை பூர்த்தியாகும் பொழுது பிறகு அதை விட பவர்ஃபுல்லான பேர், புகழ், இடம், பதவி, முன்னிலை போன்றவற்றிற்கு மனது ஆசைப்படுகிறது. ஒரு அளவிற்கு மேல் மக்களிடத்தில் வரவேற்பு எகிறும்போது அவர்களின் குணாதியங்களும் மாறிப்போகின்றன. புகழ் போதை கண்களை மறைக்கத் துவங்குகிறது. நம்மை எதற்காக மக்கள் விரும்புகிறார்கள் என்பதை மறந்து நகைச்சுவையாளர்கள் மனது கதை நாயகன் இடத்தைக் குறி வைக்கிறது 
 
நகைச்சுவையாளர்கள் கதாநாயகன் ஆகக் கூடாது என்பது என்னுடைய கூற்று அல்ல. அதற்கான கதை அமையும் போது நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மக்கள் அவர்களைக் ஒரு நகைச்சுவையாளராகத்தான் அதிகம் ரசிக்கிறார்களே தவிர ஒரு கதையின் நாய்கனாக அல்ல. மேற்கூறிய எந்த நகைச்சுவையாளரும் அதற்கு விதிவிலக்கல்ல. கவுண்டர் முதல் சந்தானம் வரை அத்தனை பேருக்கும் அதே ஆசை இருந்தது. நடித்தனர். ஆனால் அந்த ஆசையிலிருந்து மீண்டு தன்னிலை திரும்புவதில்தான் இருக்கிறது சிக்கல். கவுண்டருக்கும் சரி வடிவேலுவுக்கும் சரி கதாநாயகனாக நடித்த பின்னர் மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து மீண்டும் நகைச்சுவையாளராக நடிக்க சிக்கல் இருக்கவில்லை. ஆனால் சந்தானத்திற்கு அது மிகவும் சிரமமே... 
 
இப்போது நம் பதிவு சந்தானத்தையே ஏன் குறிவைக்கிறது என்றால், இவ்வளவு பிச்சனைகளும் அவர் ஒருவரால்தான். அவர் எப்பொழுதும் போல நடித்துக் கொண்டிருந்தால் இப்படி புலம்புவதற்கு வேலையே இருந்திருக்காது. இப்பொழுது இருப்பவர்களில் பெரிய காமெடியன் யார் என்று பார்த்தல் சூரிதான் முதலில் ஞாபகம் வருகிறார் (நிலமை அப்டி ஆகிப்போச்சு).
 
 அவருக்கு அடுத்தபடியாக சதீஷ் (கஷ்டகாலம்) இதற்கடுத்தாற்போல் கருணாகரன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சாமிநாதன் போன்ற பார்ட் டைம் காமெடியர்கள் ராஜ்ஜியம் தான் இப்பொழுது தமிழ் சினிமாவில். பத்தில் ஒரு படத்தில்தான் இவர்களின் காமெடி எடுபடுகிறது. 
 
மேலும் நகைச்சுவை வறட்சி என நம்மை உணர வைப்பதற்கு தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியும் புது இயக்குநர்களின் வருகையும் கூட ஒரு முக்கியக் காரணம் என்றே கூறலாம். மேலும் இப்பொழுது வரும் நகைச்சுவைகள் வெறும் வசனங்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. வெறும் வசனங்களைத் தாண்டி, காட்சி அமைப்புகளும் நகைச்சுவையாளர்களின் உடல் மொழிகளுமே ஒரு நகைச்சுவையின் வெற்றிக்கு மிக முக்கியம். அது தற்பொழுது இருக்கும் நகைச்சுவையாளர்களிடம் மிகவும் குறைவு.
 
 இளம் இயக்குநர்கள் அயல்நாட்டுப் படங்களின்பால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் படங்களில் black comedy வகைகளையே பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற black comedy கள் பெரும்பாலும் திரையரங்கில் பார்ப்பவர்களை மட்டுமே சிரிக்க வைக்கும். அதுவும் ஒரே ஒரு முறை. நமக்கு ஆதி முதல் இன்றுவரை பழக்கப்பட்டதும் விரும்புவதும் உடல் மொழிகளை அதிகம் உபயோகிக்கும் Slapstick வகை நகைச்சுவைகளே. நகைச்சுவைப் படங்களுக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே இன்று தடுமாறி நிற்கின்றனர். 
 
கவுண்டர், வடிவேலு மற்றும் சந்தானம் இவர்கள் அனைவருடைய அதிகபட்ச நகைச்சுவையை வெளிக்கொணர்ந்தவர் சுந்தர்.சி. அவர் நிலமையே இப்பொழுது டண்டனக்காவாகி இருக்கிறது. 
 
சூரியை வைத்துக்கொண்டு சுராஜ் என்னசெய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபு போன்றவர்களே தற்பொழுது ஓரளவு நம்பிக்கையைக் கொடுக்கிறார்கள். 
 
சந்தானத்தை தெரிவு செய்தவர்களின் அடுத்த தெரிவு தற்பொழுது ரோபோ ஷங்கர் அல்லது யோகி பாபு பக்கம் லேசாகத் திரும்பியிருக்கிறது. ஓரளவு திறமையுள்ளவர்களும் கூட. இவர்வகளை வைத்து எப்படியாவது தப்பித்துக்கொண்டால் தான் உண்டு. வெறும் பகுதிநேர பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு எப்படி ஒரு ஆட்டத்தில் ஜெயிப்பது கடினமோ அதேபோலத்தான் நகைச்சுவைப் படங்களில் ஜெயிக்கவும் பகுதிநேர நகைச்சுவையாளர்கள் மட்டுமின்றி மெயில் தல ஒன்று தேவைப்படுகிறது. விரைவில் ஒருவரை உருவாக்குங்கள்!

Sunday, 17 April 2016

நம்மையெல்லாம் அருமையா ஏமாற்றிய அறிவியலுக்கு எதிரான சினிமா மரணங்கள் பற்றிய தொகுப்பே இது

திரைப்படக்காட்சி ஒன்றில்.. ஒரு நபர் கூர்மையான கத்தியால் குத்தப்பட்டாலோ.. அல்லது ஒரு உயரமான மலையில் இருந்து கீழே விழுந்தாலோ.. அல்லது மிகவும் கொடுமையான விஷப்பாம்பு ஒன்றிடம் கடி வாங்கினாலோ... அடுத்தது என்ன நடக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும் - மரணம் தான்..!

சினிமாவில் ஏற்படும் மரணம் என்றாலே அது போலி தான் பொய் தான் அதுக்காக அறிவியலின் கீழ் சாத்தியமே இல்லாத ஒன்றை சாத்தியம் தான் என்பது போல் திரைப்படக் காட்சி அமைப்பது எவ்வளவு பெரிய ஏமாத்து வேலை..!? அப்படியாக, நம்மையெல்லாம் 'ரொம்ப அருமையா' அறிவியலுக்கு எதிரான சினிமா மரணங்கள் பற்றிய தொகுப்பே இது..!


ஏமாத்து வேலை நம்பர் #5 :

கொதிக்கும் எரிமலை குழம்பிற்குள் மூழ்கி சாவது..!

அறிவியல் உண்மை :

எரிமலை குழம்பு மரணம் தர வல்லமை யானது தான் அதில் சந்தேகமில்லை. அதற்காக நீச்சல் குளத்திற்குள் மூழ்குவது போல எரிமலை குழம்பிற்க்குள் எதுவும் மூழ்கிடாது என்பது தான் அறிவியல்..!

முதல் வேலை :

1,295 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து 2,282 டிகிரி வரை கொதிக்கும் எரிமலை லாவாவின் மேற்பரப்பானது எந்த விதமான மேற்ப்பரப்பையும் உடைக்கும் வெப்பநிலை கொண்டது. அதன் முதல் வேலை கொலை தான்..!

நடக்காத காரியம் :

எரிமலைக்குழம்பு குறைந்தது 100,000 மடங்கு பிசுபிசுப்புள்ள, தண்ணீரை விட மூன்று மடங்கு கனமானதாக மற்றும் அடர்த்தியானதாக இருக்கும். ஆகையால் அதுனுள் மனிதர் ஒருவர் மூழ்கி சாவது என்பது நடக்காத காரியம் ஆகும்.!

8jB6Bye.jpg

ஏமாத்து வேலை நம்பர் #4 :

மூச்சுதிணறவைத்து கொலை செய்யும் முறை..!

அறிவியல் உண்மை :

ஒரு நபரை மூச்சுதிணறவைக்கும் முறையானது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறை ஆகும். திரைப்பட காட்சிகளில் வருவது போல தலையணை ஒன்றை வைத்து-அழுத்தி ஒருவரை கொலை செய்து விட இயலாது.

எதிர்வினை :

அறிவியலின்கீழ் மூச்சடைக்கப்பட்ட பின்பு மனித உடல் ஆனது ஒரு எதிர்வினை போல தானாகவே நிர்பந்தமாக சுவாசிக்க தொடங்கும்.

மூளை :

இரத்தத்தில் ஆக்சிஜனை பயன்படுத்த மனித உடல் ஆனது 15 நொடிகள் எடுத்துக்கொள்ளும், பின்பு ஒரு நிமிடம் சுவாசம் தடை செய்யப்பட்டால் மூளை செல்கள் பாதிப்படையும், பின்பு மூளை மிகவும் மோசமாக பாதிப்படைய 3 நிமிடங்கள் தேவைப்படும்..!

அரிய நிகழ்வுகள் :

சுவாசம் இல்லாது 40 முதல் 60 நிமிடங்களுக்கு பின்பு கூட உயிர் பிழைத்த அரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்துள்ளது.

dvYE2dX.jpg

ஏமாத்து வேலை நம்பர் #3 :

சுறா ஒரு மனித வேட்டையாடி, சுறா மனிதர்களை தேடித்தேடி கடித்து கொல்லும்..!

அறிவியல் உண்மை :

நம்பினால் நம்புங்கள், உண்மையில் சுறாக்கள் மிகவும் கூச்சப் பிராணிகள் ஆகும். சொல்லப்போனால் மனிதர்களை சுறாக்கள் பின் தொடர்ந்து வந்து தாக்கி கடித்துக் கொல்லும் பிராணிகள் அல்ல..!

தொடர்பு :

பெரும்பாலான சுறா தாக்குதல் எல்லாம் சுறாக்கள் மக்களால் தூண்டப்படுவதாலேயே நிகழ்ந்துள்ளன. பிற பிராணிகளை போலவே தான் சுறாக்களும் மனிதர்களோடு தொடர்பு கொள்ள விழைகிறது என்ற கருத்தும் உண்டு..!

Tj7RXLF.jpg

ஏமாத்து வேலை நம்பர் #2 :

கிரேனடுகள் அதாவது கையெறி குண்டுகள் உடனடி மரணத்தை ஏற்படுத்தும்..!

அறிவியல் உண்மை :

கையெறி குண்டுகள் அதன் கில்லிங் ரேடியஸ் (Kiling Radius) என்ற எல்லைக்குள் இல்லாத வரையிலாக அது ஒன்றும் உங்களை உடனடியாக துண்டு துண்டாக சிதற வைத்து கொன்று விடாது. நூற்றுக்கணக்கான கிரேனட் வகைகளும் ஒவ்வொன்றிக்கும் தனிப்பட்ட கில்லிங் ரேடியஸ் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

scopXS5.jpg

ஏமாத்து வேலை நம்பர் #1 :

புதை மணல் ஆனது மனிதர்களை உள்ளே இழுத்து கொள்ளும்.!

அறிவியல் உண்மை :

நீச்சல் குளத்திற்குள் குதிப்பது போல நேராக தலையை முதலில் திணிக்காத பட்சத்தில் புதை மணலில் உங்களால் மூழ்கவே முடியாது.

அடர்த்தி :

எரிமைலை குழம்பை போலவே புதை மணலும் மனித உடலை விட மிகவும் அடர்த்தியாக இருப்பதால் மிஞ்சி மிஞ்சிப்போனால் அது உங்கள் இடுப்பு வரை உள்ளே இழுக்கும் அவ்வளவு தான்..!

Thursday, 12 November 2015

அமெரிக்காவிலும் தூங்காவனத்தை விரட்டும் வேதாளம்

தமிழ்நாடு முழுவதிலும் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் வேதாளம் படம் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. முதல் நாள் வசூலாக சுமார் 20 கோடி ரூபாய் வரையில் வசூலித்திருக்கலாம் எனச் சொல்லப்படும் வேதாளம் படத்தின் வசூல் இரண்டாவது நாளிலும் முதல் நாளைப் போலவே சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறார்கள். தமிழ்நாடு வசூலைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் எந்திரன், கத்தி ஆகிய படங்களின் வசூல் சாதனையை வேதாளம் முறியடித்து விட்டது மட்டும் உண்மை என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இதனிடையே, அமெரிக்கா என்றாலே அது கமல்ஹாசனின் கோட்டை என பட வெளியீட்டிற்கு முன்னர் சொன்னார்கள். ஆனால், அமெரிக்காவிலும் தூங்காவனம் படத்தை பின்னுக்குத் தள்ளி வேதாளம் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமே இது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“அமிஞ்சிக்கரையோ அமெரிக்காவோ தல தான் ஓபனிங்குக்கெல்லாம் ராஜா. அமெரிக்காவில் தூங்காவனம் படத்தின் வசூல் 87 திரையரங்குகளில் 76,115 டாலர்கள். வேதாளம் படத்தின் வசூல் 65 திரையரங்குகளில் 92,392 டாலர்கள்” என அறிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் வேதாளம் படத்தின் வசூலை தூங்காவனம் படத்தால் நெருங்க முடியாது என்றே சொல்கிறார்கள். அஜித், விஜய் ஆகியோர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கமல்ஹாசன் தன்னுடைய பட வெளியீட்டை தவிர்ப்பதே சிறந்தது என்று வினியோகஸ்தர்களே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

Saturday, 17 October 2015

தமிழ் சினிமா கதாநாயகர்கள் சிறுவர்களிடையே புகைத்தலை தூண்டுகிறார்களா?

தென்னிந்தியாவிலிருந்து வரும் திரைப்படங்கள் மூலம் இலங்கையில் தமிழ் சிறார்கள் மத்தியில் புகைத்தல் பழக்கம் தூண்டப்படுவதாக அடிக் என்ற மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தன்னார்வ தொண்டுநிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.
 
 
தமிழ்த் திரைப்பட கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும் காட்சிகளால் தூண்டப்பட்டு பல சிறார்கள் முதலில் புகைக்கத் துவங்கியதாக கூறியிருந்ததை மேற்கோள்காட்டியே அந்த நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது.
 
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தங்களின் போதைப் பழக்கத்தை சிகரெட்டிலிருந்தே ஆரம்பிப்பதாகவும் அடிக் நிறுவனம் தெரிவித்திருந்தது.
 
பெரும்பாலானவர்கள் தங்களின் சிகரெட் பழக்கத்தை அவர்களின் பதின்ம பருவத்திலேயே துவங்குவதாக அடிக் நிறுவனத்தின் பணிகளில் பங்கெடுத்திருந்த உளவியல் மருத்துவர் எம். கணேஷன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
உதாரண புருஷர்களை பின்பற்றுகின்ற வழக்கம் சிறார்கள் மத்தியில் இருப்பதால், சினிமா கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும்போது அவர்களை பின்பற்ற நினைக்கும் சிறார்களும் புகைத்தலுக்கு தூண்டப்படுகிறார்கள் என்றும் மருத்துவர் கணேஷன் தெரிவித்தார்.
 
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சிகரெட்டுக்கு விளம்பரம் செய்யமுடியாத நிலை இருப்பதால் சிகரெட் நிறுவனங்கள் புகைத்தல் காட்சிகளை ஊக்குவிப்பதற்காக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் கணேஷன் குற்றம்சாட்டினார்.
 
நேரடி விளம்பரம் இல்லாமல் பொருளை காட்சிப்படுத்துவதன் மூலம் மறைமுக விளம்பரம் செய்யும் முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இதனிடையே, ஆசியாவில் புகைத்தல் பழக்கம் குறைந்து வரும் ஒரே நாடு இலங்கை தான் என்று கூறிய மருத்துவர் கணேஷன், ஆனால் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புகைத்தல் பழக்கம் அதிகரித்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.

ஆதரவு கேட்கப் போய் சேதாரமானவர்கள்

பாம்புக்கு தலையும், தவளைக்கு வாலும் ஒரே நேரத்தில் டிஸ்பிளே செய்தால் மட்டுமே இந்த கலியுகத்தில் பிடித்து நிற்க முடியும்.

அதுவும் டாப்பில் இருப்பவர்களின் நிலைமை, கொஞ்சம் பேலன்ஸ் தவறினாலும் தொபுக்கடீர்தான். 
 
உச்சத்தின் ஆதரவு கிடைத்தால் மிச்சத்தை நாமே பார்த்துக் கொள்ளலாம் என நடிகர்களின் இரு அணிகளும் கணக்குப் போட்டு அவரை சந்தித்தன. போட்டிபோட்டு உச்சத்துக்கு சொந்தமான மண்டபத்தில் கூட்டத்தையும் நடத்தினர்.
 
இலவசமாக இடம் கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு, லட்சங்களில் வந்த பில் கரண்டை கையில் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. அட, டிஸ்கவுண்ட்கூட தரலையாம் உச்சம்.
 
மாங்காய்னு நினைச்சு தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதைதான்.

Monday, 12 October 2015

தெலுங்கு திரையுலகத்தை அதிரவைத்த அனிருத்!

தனுஷ் நடிப்பில் 3  படத்தின் ஓய் திஸ் கொலவெறிடி பாடலின் மூலம் உலகளவில் முதல் படத்திலேயே ஹிட் கொடுத்து தமிழில் முன்னனி இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதை தொடர்ந்து தெலுங்குத் திரையுலகில் கால் பதிக்கவிருக்கிறார் அனிருத். தெலுங்கில் தேவிஸ்ரீபிரசாத், தமன் இருவரின் பாடல்களே ஹிட் அடிக்கும் நிலையில் இவர்கலுக்கு போட்டியாக கலத்தில் குதிக்கிரார் அனிருத்.



ஒவொவ்வொரு முரயும் தேவிஸ்ரீ பிரசாத்துடன் கை கோர்க்கும் இயக்குநர் த்ரிவிக்ரம் இந்த முறை அனிருத்தை அவர் படத்திற்கு ஓகே செய்திருக்கிறார். நிதின், சமந்தா நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு அ… ஆ… ( அனுஷ்யா ராமலிங்கம் VS ஆனந்த் விகாரி ) என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு 1.5 கோடி சம்பளம் அனிருத்திற்குத் தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கில் இதுவரை இசையமைத்த தமன் 60 முதல் 80 லட்சம் வரையிலும், தேவி ஸ்ரீபிரசாத் 1கோடி வரையிலுமே சம்பளம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முலம் தெலுங்குப் பட உலகில் அனிருத் அனைவருக்கும் போட்டியாக இருப்பார் என்று தெலுங்கு வட்டாரம் கிசுகிசுக்கிறது.

மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1943ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.



குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது. நடிப்பு, பாட்டு, வசன உச்சரிப்பு, நடனம் என்று அனைத்திற்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.

வைரம் நாடக சபா உள்ளிட்ட தொழில்முறை நாடக நிறுவனங்கள் பலவற்றில் நடித்துக்கொண்டிருந்த மனோரமாவை மேடை நாடகக் கலைஞராக பெரிய அளவில் அடையாளம் காட்டியது திராவிட இயக்கத்தின் பிரச்சார நாடகங்கள்தான்.

திமுக நிறுவனர் அண்ணா, மு. கருணாநிதி, எஸ் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி திராவிட இயக்கத்தலைவர்களுடன் அவர் மேடை நாடகங்களில் நடித்தார். அவரது தெளிவான வசன உச்சரிப்பும், உச்சஸ்தாயியில் அநாயாசமாக பாடும் வல்லமையும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன.

மாலையிட்ட மங்கையாக திரைப்படத்துறைக்குள் வந்தார்
நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவியரசு கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958 ஆம் அண்டு வெளியான “மாலையிட்ட மங்கை” என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.

மனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் “கொஞ்சும் குமரி”. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம்.

அதேசமயம் மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முதல் திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள் படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.

அந்த திரைப்படத்தின் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாரமணி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார் மனோரமா.

ஜில் ஜில் ரமாமணியாக சிரிக்கவைத்தார்

ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாக மனோரமா புகழ் பதித்த பல திரையுலக பாத்திரங்களில் முக்கியமானதாக இன்றுவரை பேசப்படுகிறது.

அரை நூற்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகின் கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருக்கு ஈடுகொடுத்து நடித்து புகழ் பெற்றவர் மனோரமா.

அவர் திரைத்துறையில் அறிமுகமானபோது தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் துவங்கி கமல், ரஜினி படங்களில் அவர்களுக்கு போட்டி போட்டு நடித்தவர், நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், கவுண்டமணி எனப் பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தவர், பாக்கியராஜ், சத்யராஜ் என்று பலதரப்பட்ட நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்

மனோரமா.நகைச்சுவையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் மனோரமாவின் நடிப்பு முத்திரை பதித்தது. தனித்துவம் வாய்ந்தது.

நகைச்சுவைக்கு மட்டுமல்ல நவரசங்களுக்கும் நாயகி என பாராட்டப்பட்டார்
நகைச்சுவை நடிப்போடு அவரது தனித்துவமான குரலில் பாடிய பாடல்களும் இன்றளவும் நினைவில் நிற்கின்றன. மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். மகளே உன் சமத்து என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.

பொம்மலாட்டம் படத்தில் வி.குமாரின் இசையில் ‘வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டேன்” என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல்; கருந்தேள் கண்ணாயிரம் படத்தில், ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே..” என்று அவர் பாடிய பாடல்; பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே‘ என்ற பாடல்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், ‘மெட்ராஸை சுத்திப்பார்க்கப் போறேன்‘ என்கிற பாடல் என மனோரமாவின் கம்பீரமான குரலில் ஒலித்தபாடல்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றன.

ஆயிரம் படங்களைத்தாண்டிய ஆச்சி

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா. அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு அதிகம். உலகின் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நாடகங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தியவர் அவர்.

பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளுடன் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான இந்திய தேசிய விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.

தமிழ் திரைப்படத்துறையில் கலைவாணரில் தொடங்கி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு.

ஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை. நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

ஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். அரை நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக அசைக்கமுடியாத நடிகையாக தமிழ்த் திரையுலகில் நிலைத்திருந்தவர் ஆச்சி என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா. அவரின் புகழ் அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.