கவிமொழி
Monday, 7 June 2021
கவிமொழி இரவுக்ககாயிரம் கண்கள், ...
Sunday, 17 January 2021
போட்டிப் பாடல்களும் பாடகர்கள் போட்டியும்!
போட்டிப் பாடல்கள் என்று திரைப்படங்களில் பலவிதமாக அமைவது உண்டு. சிறைச்சாலையில்– சன்னியாசமா, சம்சாரமா என்ற போட்டி வெடித்து, கைதிகள் தப்புவதற்கு ஒரு திரைப்பாடல் காரணமாக அமைகிறது (கணவனே கண்கண்ட தெய்வம்). சிரிப்பு நடிகர் பிரண்டு ராமசாமியின் பாட்டுக்குரலை நாம் அபூர்வமாகக் கேட்கும் பாடல் இது.
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
''பஸ்ஸில் பிறந்தவன் இந்தக் கண்ணதாசன்!''
புதுக்கோட்டையிலிருந்து 'திருமகள்' என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.
Saturday, 26 September 2020
பன்முகத் திறன் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியன் பற்றிய சில முக்கிய தகவல்கள்...
1.ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம் தந்தை இசைக்கலைஞர். காலஹஸ்தி பள்ளியில் எஸ்எஸ்எல்சியும் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யூ.சி முடித்தார். பாலசுப்பிரமணியம் தனது இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
2.தெலுங்கு சங்கம் நடத்திய பாட்டுப்போட்டி 3 ஆண்டுகள் முதல் பரிசு வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் பாலசுப்பிரமணியம் முதல் பரிசைப் பெற மூன்றாம் ஆண்டு வெற்றி பெற்றால் வெள்ளிக் கோப்பை கொடுக்க வேண்டி வரும் என வேண்டுமென்றே இரண்டாவது பரிசை அறிவித்தனர். ஆனால் அப்போட்டியில் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகியான எஸ் ஜானகி பாலசுப்பிரமணியம் தான் அனைவரையும் விட நன்றாகப் பாடினார் என வாதாடி முதல் பரிசைப் பெற்றுக் கொடுத்தார்.
3.சென்னை பொறியியல் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்காததால் தொழில் கல்வியை பயின்றார். 1966ஆம் ஆண்டு கோதண்டபாணி இசைத்த தெலுங்கு படத்தில் பாலசுப்ரமணியம் முதன்முதலாக பாடினார். அதனைத் தொடர்ந்து பல பாடல்களை அவர் பாடத் தொடங்கினார்.
4.தமிழில் இவர் முதன்முதலாக பாடல் பாடியது சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் தான். ஆனால் அத்திரைப்படம் வெளிவரும் முன்னரே எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த அடிமைப்பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளி வந்துவிட்டது.
5.ஏராளமான வாய்ப்புகள் குவிய இளையராஜா, எம் எஸ் விஸ்வநாதன், யுவன்சங்கர், எஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.
6.கர்நாடக இசையை முறையாக பயிலாத பாலசுப்பிரமணியம் சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களை மிகவும் சிறந்த முறையில் பாடி உலகம் முழுவதிலும் பிரபலமானவர் ஆனார் அத்திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
7.தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் எந்த மொழியில் பாடல் பாடினாலும் இயல்பான உச்சரிப்புடன் பாடுவதே இவரது சிறப்பு அம்சம்.
8.40 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக பாடி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்தவர். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்றவர்.
9.கர்நாடக தமிழக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கியவர்.
10.1981 ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்த ரெக்கார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 21 கன்னட பாடல்களை இசையமைப்பாளர் உபேந்திர குமார் என்பவருக்காக பாடி சாதனை புரிந்தார். 19 பாடல்களை தமிழில் ஒரே நாளில் பாடிய சாதனையும் இவருக்கு உண்டு. ஆறு மணி நேரத்தில் 16 ஹிந்தி பாடல்களை பாடியவர் இவர்.
11.ரஜினி கமல் பாக்யராஜ் உட்பட பலருக்கும் பல மொழி படங்களில் பின்னணி குரல் கொடுத்தவர் பாலசுப்ரமணியம்.
12.தென்னிந்திய மொழிகளில் 70க்கும் அதிகமான படங்களில் தனது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளார் கன்னடம் தெலுங்கு தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் 45க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
13.நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை சேரும்.
திரையுலகம் முதல் இசை ரசிகர்கள் வரை அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துவிட்டு, தற்போது மீளா துயில் கொண்டிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவரைப் பலரும் அறியாத 5 தகவல்களை தற்போது பார்க்கலாம்..
அந்த 5 தகவல்கள் :-
1. ரஜினியின் துடிக்கும் கரங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் எஸ்.பி.பி.
2. இசையில் மட்டுமில்லாது, கிரிக்கெட்டிலும் எஸ்.பி.பி-க்கு மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இதன்காரணமாக, சச்சின் தான் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை, எஸ்.பி.பி-க்கு பரிசளித்திருக்கிறார்.
3. இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் முதல் மரியாதை. இந்த படத்தில், சிவாஜிக்கு பதில் நடிக்க வேண்டியவர் எஸ்.பி.பி தான். கால்ஷீட் பிரச்சனை காரணமாக, நடிக்க முடியாமல் போனது.
4. பாடுவதில் மட்டும் தான் SPB வல்லவர் என்று அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், புல்லாங்குழல் வாசிப்பதிலும், ஓவியம் வரைவதிலும் மிகுந்த திறமைக்கொண்டவர் எஸ்.பி.பி.
5. எஸ்.பி.பியின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்பம் முதல் இன்றுவரை அவருடன் இருக்கிறார். எஸ்.பி.பியின் கால்ஷீட், உணவு, உடல்நலம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பார்த்துக்கொள்பவர் அவர் தான்.
உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகளை நடத்திய எஸ்.பி.பி, ரஷ்யாவில் மட்டும் தான் ஒரு முறை கூட கச்சேரியை நடத்தவில்லை..
சுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..
ஆரம்பத்தில் எஸ்.பி.பி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டுமே பாடல்களை பாடி வந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான், எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது…
எம்.ஜி.ஆர் படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்காக, ஸ்டுடியோ ஒன்றில் எஸ்.பி.பி பாடிக்கொண்டு இருந்தார். அப்போது, எஸ்.பி.பியின் குரலைக் கேட்ட எம்.ஜி.ஆர், தனது அடுத்த படத்தில் எஸ்.பி.பி பாட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
இதையடுத்து, எஸ்.பி.பி பற்றி இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். பிறகு எஸ்.பி.பி வீட்டிற்கு சென்ற கே.வி. மகாதேவன், சின்னவர் ( எம்.ஜி.ஆர்) தனது படத்தில் நீங்கள் பாட வேண்டும் என விரும்புகிறார் என்று கூறியிருக்கிறார்.
உடனே, மகிழ்ச்சியடைந்த எஸ்.பி.பி, எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தாலும் பிறகு சுசீலாவுடன் இணைந்து ஆயிரம் நிலவே வா பாடலை பாடிப் பயிற்சி எடுத்தார். பாடலை ஒலிப்பதிவு செய்வதற்குள் எஸ்.பி.பி-க்கு டைஃபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டதால், பாடலை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்ய முடியவில்லை.
ஒரு வாரத்தில் அந்த பாடலுக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதால், எஸ்.பி.பி மிகவும் வருந்தியுள்ளார். எம்.ஜி.ஆர் படத்தில் பாட இருந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன் என்று நினைத்திருக்கிறார். மீண்டும் உடல் நலம் தேறிய பிறகு, எஸ்.பி.பிக்கு அழைப்பு வந்துள்ளது.
அதில், மீண்டும் பாடல் பாட வாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள். இதனைக்கேட்டு ஆச்சரியமடைந்த எஸ்.பி.பி, அந்த பாடலை பாடிக்கொடுத்தார். பிறகு அவர் பாடியதைக் கேட்டு எம்.ஜி.ஆரும் பாராட்டியுள்ளார். ஆர்வம் தாங்காமல் இந்தப் பாடலைத் தன்னையே பாட வைத்தது ஏன் எனக் கேட்டுள்ளார் எஸ்.பி.பி.
இதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர், என்னுடைய படத்துக்குப் பாடுகிறேன் என நண்பர்களிடம் சொல்லியிருப்பீர்கள்.
இப்போது உங்களுக்குப் பதிலாக வேறொரு பாடகரைப் பாட வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? எனக்கு உங்களின் குரல் பிடிக்கவில்லை என்பதால் தான் பாடகரை மாற்றிவிட்டேன் என வெளியே செய்தி வரும். இந்தத் துறையில் நீங்கள் முன்னேறுவதற்கு அது தடையாக அமையும்.
எனவே தான் நீங்கள் தேறி வரும் வரை படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இதைக் கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார் எஸ்.பி.பி.
SPB பெற்ற விருதுகள் என்னென்ன..? ஓர் பார்வை..!
பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மைக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 16 மொழிகளில், இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர், கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார். இதுவரை 6 முறை தேசிய விருது வென்ற இவர், பல்வேறு என்னனெற்ற விருதுகளை பெற்றிருக்கிறார். அந்த விருதுகள் பற்றிய முக்கிய தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
எஸ்.பி.பி பெற்ற முக்கியமான விருதுகளின் தொகுப்பு..
இந்திய அரசின் முக்கிய விருது :-
1. பத்மஸ்ரீ விருது – 2001-ஆம் ஆண்டு
2. பத்ம பூஷன் – 2011-ஆம் ஆண்டு
தேசிய விருது :-
1. சங்கராபரணம் – தெலுங்கு – 1979 ஆம் ஆண்டு
2. ஏக் துஜே கேலியே – இந்தி – 1981 ஆம் ஆண்டு
3. சாகார சங்கமம் – தெலுங்கு – 1983 ஆம் ஆண்டு
4. ருத்ரவீணா – தெலுங்கு – 1988 ஆம் ஆண்டு
5. சங்கீத சாகரா கணயோகி பஞ்சக்ஷரா காவாய் – கன்னடா – 1995 ஆம் ஆண்டு
6. மின்சார கனவு – தமிழ் – 1996 ஆம் ஆண்டு
தமிழக அரசு விருது :-
1. அடிமைப்பெண், சாந்தி நிலையம் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1969 ஆம் ஆண்டு
2. நிழல்கள் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1980 ஆம் ஆண்டு
3. கேளடி கண்மணி – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1990 ஆம் ஆண்டு
4. ஜெய் ஹிந் – சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது – 1994 ஆம் ஆண்டு
5. ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 1981-ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார்.
அஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..! குட்டியாக ஒரு பிளாஷ்பேக்..!
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குறித்து பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஜித் நடிப்பதற்கு SPB காரணமாக இருந்த விஷயம் பற்றிய குட்டி பிளாஷ்பேக்கை பார்க்கலாம்..
நடிகர் அஜித் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்ப்புகளை தேடி வந்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போது, சில விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், அஜித்திற்கு ஹேமா என்ற விளம்பரப்பட ஒருங்கிணைப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டது. இவ்வாறு நடந்துக்கொண்டிருக்க, ஒரு நாள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பார்க்க சென்ற ஹேமா, தல அஜித்தின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
“என்னுடைய நண்பர் தான் இவர். சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு ஏதேனும் இருந்தால் கூறுங்கள்” என்று கேட்டிருக்கிறார் ஹேமா. “சரி” என்று புகைப்படத்தை கையில் வாங்கிக்கொண்டார் எஸ்.பி.பி. அடுத்த நாள், தனது நண்பரும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளருமான பூர்ணசந்திர ராவை சந்திக்க சென்றார் எஸ்.பி.பி.
அப்போது, “எனது புதிய படத்திற்கு ஹீரோ கிடைக்கவில்லை. பார்ப்பதற்கு மிகவும் அழகான முகமாக இருக்க வேண்டும். அப்படியொரு ஹீரோ இன்னும் கிடைக்கவில்லையே” என்று புலம்பியிருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.
இந்த சமயத்தில் தான் அஜித்தின் புகைப்படம் எஸ்.பி.பி-க்கு தோன்றியிருக்கிறது. அந்த தயாரிப்பாளரிடம் புகைப்படத்தை எடுத்துக்காட்டினார். உடனே பிடித்துப்போக, அஜித்தையே ஹீரோவாக மாற்றிவிட்டார் அந்த தயாரிப்பாளர். அந்த படம் தான், அஜித் அறிமுகமாகிய பிரம்ம புஸ்தகம்..
அந்த படத்தைத் தொடர்ந்து தான், அஜித் தமிழில் அமராவதி படத்தில் அறிமுகமாகினார். அஜித்தின் பல்வேறு பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உல்லாசம் என்ற படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
Wednesday, 9 September 2020
கமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’
பொதுவாக முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இருக்காது. இது சார்ந்த கிண்டல்களும் நமட்டுச்சிரிப்புகளும் ரசிகர்களிடையே நெடுங்காலமாக உண்டு.
நடுத்தர வயதைத் தாண்டியும் ‘கல்லூரி மாணவனாகவே’ முரளி நடித்த திரைப்படங்கள் ஏராளம். இந்த நோக்கில் ரஜினி மீதான கிண்டல்களுக்கு பஞ்சமேயில்லை. தெலுங்கு நடிகர்கள் இந்த விஷயத்தில் செய்ததெல்லாம் மாபெரும் பாதகம் என்றே சொல்லலாம். நடிப்பில் சாதனைகள் புரிந்த சிவாஜி கணேசன் கூட ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு கோட், சூட் அணிந்து ஸ்ரீதேவி போன்ற இளம் நடிகைகளுடன் மூச்சு வாங்க டூயட் பாடிய அநியாயமெல்லாம் நடந்தது.
இந்த வரிசையில் கமலும் விதிவிலக்கல்ல. நடுத்தர வயதைத் தாண்டியும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி, நாயகியுடன் மறைவில் சென்று உதட்டைத் துடைத்துக் கொண்டே வரும் அபத்தத்தை அவரும் செய்திருக்கிறார். ஆனால் ரஜினி போல தொடர்ந்து அடம்பிடிக்காமல் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்க அவர் தயங்கியதில்லை. ‘கடல் மீன்கள்’ ‘ஒரு கைதியின் டைரி’ போன்ற திரைப்படங்களில் வயதான தோற்றத்தில் நடித்த போது அவருடைய வயது முப்பதுக்கும் குறைவாகத்தான் இருந்தது.
தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை கமல்ஹாசன் ஏற்றாரா என்னும் நோக்கில், 2000-ம் ஆண்டிலிருந்து அவர் நடித்த திரைப்படங்கள், அதிலுள்ள சிறப்பம்சங்கள், தோல்விகள் போன்ற விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
உடம்பு சுருங்கி இறுதிப் படுக்கையில் கிடக்கும் கிழவர் பாத்திரம், காதல் பொங்கி வழியும் கணவன், சாமியார் கோலத்தில் குற்றவுணர்வுடன் இரண்டாம் திருமணத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கும் ஆசாமி, முறுக்கு மீசையுடன் புது மனைவியுடன் ஐக்கியமாகத் துவங்கும் நபர், அனைத்தையும் துறந்து விட்டு பழிவாங்கப் புறப்படும் கோபக்காரர் என்று ஐந்து விதமான தோற்றங்களில் ‘சாஹேத்ராமனாக’ விதம் விதமாக அவதாரம் எடுத்தார் கமல்.
ஒப்பனை என்கிற சமாச்சாரம் வெறுமனே அழகைக் கூட்டுவதற்காக என்பது அல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை அதன் மூலம் எப்படியெல்லாம் வேறுபடுத்திக் காட்ட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு கச்சிதமான உதாரணம். அத்தனை தோற்றங்களிலும் கமல் ‘நச்’சென்று பொருந்தினார்.
இதே ஆண்டில்தான் ‘தெனாலி’ திரைப்படம் வெளியானது. போர் சூழல் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவராக கமல் நடித்திருந்தார். ஈழத்தமிழ் பேசி அவர் நடித்திருந்தது சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது. ‘எதைக் கண்டாலும் பயம்’ என்பதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் பலவீனம். ஆனால் அதன் நல்லியல்புகள் காரணமாக இதே பலவீனம்தான் அதன் பலமாகவும் பல காட்சிகளில் வெளிப்படுகிறது. இந்த சுவாரசியமான முரணை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் சுவாரசியமாக வெளிப்பட்டிருக்கும். இவற்றைத் தாண்டி இதுவொரு வணிகநோக்குத் திரைப்படமே.
கமலின் சில சிறந்த திரைப்படங்கள், தாமதமாகத்தான் அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும் என்றொரு பரவலான கருத்து உண்டு. அதற்கு பொருத்தமான திரைப்படங்களுள் ஒன்றான ‘ஆளவந்தான்’ 2001-ல் வெளியானது.
திடகாத்திரமும் மூர்க்கமும் மொட்டைத் தலையும் கொண்ட ‘நந்து’ பாத்திரம் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. சித்தியின் கொடுமையினால் பாதிக்கப்படும் ஒரு சிறுவன் பிறகு எப்படி மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பெண் வெறுப்பாளனாகவும் மாறுகிறான் என்பதை தனது மிரட்டலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் கமல்.
இதில் வரும் விபரீதமான காட்சியொன்றில், வன்முறையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்ட அனிமேஷன் வடிவில் படமாக்கப்பட்டது. இந்த உத்தியைப் பார்த்து பிரமித்து தன்னுடைய திரைப்படம் ஒன்றில் பயன்படுத்திக் கொண்டதாக ஹாலிவுட் இயக்குநர் க்வென்டின் டரான்டினோ ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஹாலிவுட் படங்களில் இருந்து கமல் நிறைய உருவியிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்த புகார்களுக்கு மாற்றாக நிகழ்ந்த விஷயம் இது.
பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற திரைப்படங்களை சாய்ஸில் விட்டுவிடலாம். அபாரமான நகைச்சுவைத் திரைப்படங்கள் என்பதைத் தாண்டி குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அவற்றில் எந்த வித்தியாசமும் நிகழ்வில்லை.
2003-ல் வெளியான ‘அன்பே சிவம்’, கமலின் பயணத்தில் ஒரு முக்கியமான படம். ‘தன் அழகான தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க முன்வருபவனே சிறந்த நடிகன்’ என்று சிவாஜி அடிக்கடி கூறுவாராம். அந்த வகையில் ‘குணா’ முதற்கொண்டு பல பரிசோதனை முயற்சிகளை கமல் துணிந்திருக்கிறார். அன்பே சிவமும் அதில் ஒன்று. சோடாபுட்டி கண்ணாடி, தழும்புகளால் நிறைந்திருக்கும் அவலட்சணமான முகம், சார்லி-சாப்ளினை லேசாக நினைவுப்படுத்தும் உடை என்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். இதன் எதிர்முனையில் தோற்றத்திலும் சிந்தனையிலும் ஒரு நவீன இளைஞனை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இந்த முரண் படத்தின் சுவாரசியத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.
படம் முழுக்க ‘வித்தியாசமான தோற்றத்திலேயே’ வந்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ என்கிற தயக்கம் எப்போதுமே நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் போல. எனவே பிளாஷ் பேக்கில் முறுக்கு மீசையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட தெரு நாடகக் கலைஞனாகவும் வந்து நாயகியுடன் ‘ரொமான்ஸ்’ செய்து இதை சமன் செய்தார் கமல். இந்த உத்தியை பல திரைப்படங்களில் காணலாம்.
2004-ல் வெளியான ‘விருமாண்டி’யும் கமலின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றியில் விபூதிப்பட்டை, குங்குமம், முரட்டு மீசை, அலட்சியமாக வாரப்பட்ட தலைமுடி, முன்கோபம் என்று தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை மிக கச்சிதமாக கண் முன்னால் நிறுத்தியிருந்தார் கமல். பல்வேறு கோணங்களில் வெளியாகும் வாக்குமூலங்களைக் கொண்டு ‘உண்மை என்பது எது? என்பதைத் தத்துவார்த்தமாக தேடிய ‘ரஷோமான்’ திரைப்பட உத்தி இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது. மதுரையின் வழக்கு மொழியை கமல் சிறப்பாக கையாண்டிருந்தார்.
2005-ல் வெளியான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ வணிகரீதியாக தோல்வியடைந்த படம் என்றாலும் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. ‘பிளாக் ஹியூமர்’ என்னும் அவல நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் சினிமா என்று இதை அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டும்.
‘சூப்பர் ஹீரோக்களுக்கு’ நிகரான ‘அந்தர்பல்டி’ சாகசங்களை இதர நாயகர்கள் செய்து கொண்டிருக்கும் போது, காது கேட்பதில் குறைபாடு உள்ள இயல்பான நடுத்தர வயது ஆசாமியாக இதில் வருவார் கமல். படம் முழுவதும் இம்சைகளை ஏற்படுத்தும் மென்மையான நகைச்சுவைக் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கும்.
ஒரு காவல்துறை அதிகாரிக்கு வைப்பாட்டியாக இருக்கும் இன்னொரு நடுத்தர வயதுள்ள பாத்திரம்தான் இந்தத் திரைப்படத்தின் நாயகி. பதினெட்டு வயதிற்கு குறையாத இளம் பெண்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் இதர நாயகர்களின் திரைப்படங்களுக்கு இடையில் இது வியப்பூட்டும் அம்சம் எனலாம். மூன்று அமெச்சூர் திருடர்கள், தவறுதலாக வேறொரு சிறுவனை கடத்தி வந்து விட்டு படும் பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். (இதே விஷயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படத்திலும் ஒரு பகுதியாக வரும்).
தனது பிரத்யேக ஸ்டைலில் திரைப்படங்களை உருவாக்குபவர் கெளதம் வாசுதேவ மேனன். ரொமான்ஸ் + ஆக்ஷன் என்பதுதான் இவரது பாணி. இவரும் கமலும் ‘வேட்டையாடு விளையாடு’ (2006) என்கிற திரைப்படத்தில் இணைந்த போது அது புதிய வண்ணத்தில் அமைந்தது. துப்பறியும் அதிகாரியை நாயகனாகக் கொண்டு பல ஹாலிவுட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் அப்படியொரு பாணியில் வந்த முயற்சியாக ‘வேட்டையாடு விளையாடு’ (2006) அமைந்தது.
கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஒரு பெண்தான் இதில் நாயகி. அந்தச் சூழலில் இருந்து அவரை விடுவித்து நாயகன் மறுமணம் புரிவார். பொதுவாக ஹீரோக்களுக்கு ஒவ்வாத இது போன்ற விஷயங்களையெல்லாம் கமல் இயல்பாகச் செய்து கொண்டிருந்தார்.
சிவாஜியின் ‘நவராத்திரி’யை தாண்டிச் செல்லும் நோக்கும் நோக்கத்திலோ, என்னவோ.. கமல் பத்து வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ (2008) ஒரு முக்கியமான முயற்சி. இதில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்யேகமான தோற்றங்களை உருவாக்கி, அதை திரையில் சித்தரிப்பதற்காக கமல் மிகவும் மெனக்கெட்டிருந்தார். ரங்கராஜ நம்பி, பல்ராம் நாயுடு, வின்செட் பூவவராகன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு வழக்கு மொழி, பாணி, பின்னணி என்று ரகளையாக நடித்திருந்தார் கமல். குறிப்பாக கிழவி பாத்திரத்தில் அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அபாரம்.
ஆனால் இவற்றை தனித்தனியாக பார்க்கிற போது சுவாரசியமாக இருந்ததே ஒழிய, ஒட்டு மொத்த சித்திரமாகப் பார்க்கிற போது பொழுதுபோக்கு சினிமா என்கிற அளவைத் தாண்டி இதில் விசேஷமாக எதுவும் இல்லை. ‘தன் திரைப்படங்களில் தன்னை மிகவும் முன்நிறுத்திக் கொள்வார்’ என்று கமல் மீது பொதுவாக சொல்லப்படும் விமர்சனத்தை ஆழமாக உறுதிப்படுத்துவதாக ‘தசாவதாரம்’ அமைந்தது. பத்து வேடங்களிலும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் செயற்கையாகத் தெரிந்தது.
இதர மாநிலங்களில் உருவான சிறந்த திரைப்படம் என்றால் அதை தமிழில் ரீமேக் செய்ய கமல் எப்போதும் தயங்கியதில்லை என்பதற்கு ‘குருதிப்புனல்’ முதற்கொண்டு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் 2009-ல் வெளியான திரைப்படம் ‘உன்னைப் போல் ஒருவன்’. மத தீவிரவாதத்தை அரசு இயந்திரமானது ஆதாய அரசியலோடும் மெத்தனத்தோடும் கையாளும் போது ஒரு சராசரி மனிதனுக்கு எழும் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். குறுந்தாடியுடன் ஒரு கல்லூரி பேராசிரியரின் நடுத்தரவர்க்க தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். அசல் வடிவத்தை ஏறத்தாழ சிதைக்காமல் தமிழில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இதிலும் அவரின் வயதுக்கேற்ற பாத்திரம்தான்.
2015-ல் வெளியான ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை, ஏறத்தாழ கமலின் Mini Bio-graphical version எனலாம். அந்த அளவிற்கு அவருடைய அசல் வாழ்க்கையின் தடயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் திரைப்படத்தில் நிறைந்திருந்தன. மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகன், அபத்தங்களால் நிறைந்திருந்த தன் அதுவரையான வாழ்க்கையை சிறிதாவது அர்த்தபூர்வமானதாக ஆக்க பாடுபடுகிறான். ‘மனோரஞ்சன்’ என்னும் நடிகனாக கமல் நடித்த சில காட்சிகள், அவர் எத்தனை திறமையான நடிகர் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தன.
‘Spy Thriller’ எனப்படும் வகைமையான அதுவரையான தமிழ் சினிமாவில் மிக அமெச்சூராகத்தான் கையாளப்பட்டது. இதை ஏறத்தாழ ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘விஸ்வரூபம்’ I & II. முதல் பகுதியில் இருந்த இடைவெளிகளுக்கான பதில்கள் இரண்டாம் பகுதியில் இருக்கும் அளவிற்கு அபாரமான திரைக்கதையால் கட்டப்பட்டவை. இந்திய உளவாளி ஒருவன் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்வதுதான் இதன் மையம்.
பெண்மையின் சாயல் கொண்ட விஸ்வநாதன், எரிமலையின் ஆற்றலோடு விஸாமாக வெளிப்படும் காட்சி, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆக்ஷன் காட்சிகளுள் ஒன்றாக இருக்கும். ‘படம் புரியவில்லை’ என்கிற பரவலான கருத்து இதன் மீது எழுந்தது. ஆனால் நிதானமாகப் பார்த்தால் எத்தனை நுட்பமான விஷயங்களை இவற்றில் அடுக்கியிருக்கிறார் என்பது புரியும்.
கமலின் ரீமேக் வரிசையில் இன்னொரு அபாரமான முயற்சி ‘பாபநாசம்’ (2015). மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ தமிழில் திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டு வெளியானது. அன்பான மனைவி, இரண்டு மகள்கள் கொண்ட நடுத்தர வயது பாத்திரத்தில் ‘சுயம்புலிங்கமாக’ கமல் நடித்திருந்தார். இதில் அவர் வழக்கம் போல் தன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தாலும் மலையாளத்தில் மோகன்லால் செய்தததோடு ஒப்பிட்டால் கமல் சற்று பின்தங்கியிருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.
டூயட், காமெடி, ஆக்ஷன் என்று ஒரு தேய்வழக்கு திரைக்கதையுடன் நெடுங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் நிறத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருவதில் கமல்ஹாசனுக்கு பிரதான பங்குண்டு. அந்த வகையில் ‘தூங்காவனம்’ (2015) ஒரு அற்புதமான முயற்சி. பிரெஞ்சு திரில்லர் திரைப்படத்தின் ரீமேக். தமிழ் வடிவத்திற்காக அசட்டு மசாலாக்கள் எதுவும் திணிக்கப்படாமல் யோக்கியமாக உருவாக்கப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு முன்னணி நாயகனுக்குரிய தேய்வழக்குகளை கமல் கொண்டிருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இவற்றிலிருந்து அவர் தொடர்ந்து மீற முயற்சித்துக் கொண்டே இருப்பதை கவனிக்க முடியும்.
‘மகாநதி’ திரைப்படத்தில் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக நடிப்பதைக் கண்ட ஒரு சீனியர் நடிகர் ‘இவ்வாறெல்லாம் நடித்தால் உன் இமேஜ் போய்விடும்’ என்று எச்சரித்தாராம். ஆனால் கமலின் சிறந்த திரைப்படங்களை கணக்கெடுத்தால் ‘மகாநதி’ அதில் உறுதியாக இடம்பெறும் என்பதுதான் வரலாறு. இந்த தொலைநோக்குப் பார்வையும் துணிச்சலும் பாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் மெனக்கெடலும் கமலிடம் எப்போதும் இருந்திருக்கிறது.