Thursday, 2 July 2015

தமிழ்த் திரையுலகில் கேரள வரவுகள்!

தமிழ்த் திரையுலக நடிகைகளில் மலையாள வரவுகளின் எண்ணிக்கை எப்போதும் கணிசமான அளவில் இருந்தே வந்திருக்கிறது .



சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைக்க பாரதி கண்ட கனவு திரையுலகின் மூலம்தான் நிறைவேறி வருகிறது. தமிழ்க் கதாநாயகர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் அவ்வப்போது சேர நன்னாட்டிளம் பெண்களுடனே டூயட் பாடியே வந்திருக்கிறார்கள் ; வளர்ந்திருக்கிறார்கள்.

இது பற்றிய ஒரு பின்னோக்கிய பார்வை பார்த்தோமானால், அந்தக் காலத்து வி.என்.ஜானகி, லலிதா,பத்மினி,ராகினி

எல்லாம் மலையாள வரவுகளே. இடைக் காலத்தை எடுத்துக் கொண்டால்,கே.ஆர்.விஜயா,, சுஜாதா போன்ற சிலரும் கேரள வரவுகளே.

ரஜினி, கமல் காலத்தை எடுத்துக் கொண்டால் மலையாள நாயகிகள் ராதா, அம்பிகா என்று கொடி கட்டிப் பறந்தனர். இவர்கள் இருவருமே அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வெற்றி நாயகிகளாக, வெற்றி நட்சத்திரங்களாக வலம் வந்தனர்.

ராதா, அம்பிகா சகோதரிகளில் இப்போதும் ராதாவின் மகள்கள் கார்த்திகாவும். துளசியும் நடித்து வருகின்றனர்.

கார்த்திகா கோ முதல் புறம்போக்கு வரை பல படங்களில் நடித்தார். துளசி மணிரத்னத்தின் கடல் முதல் நீர்ப்பறவை என்று நடித்தவர் மேலும் நடித்து வருகிறார்.,பிறகு பெரிய வரவேற்பைப் பெற்ற நதியா மும்பையில் பிறந்தவர் என்றாலும் இவரும் ஒரு மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவரே.

ஒருகாலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது இந்த மலையாள நடிகைகள் வரவு. போகப்போக அதிகமாகி அதிகரிக்கத் தொடங்கி தற்காலத்தில் மலையாள நடிகைகள் ஆக்கிரமித்து வருகின்றனர்.மும்பை மோகம் மாறத்தொடங்கியுள்ளது ஒரு மாற்றமாகும்.கேரளத்து .நடிகைகளில் தமிழில் நிலைத்து நின்ற, நிலைத்து நிற்கும் சிலரைப் பார்ப்போம்.



லிசி

மலையாளத்தில் மோகன்லாலுடன் 19 படங்கள் மம்முட்டியுடன் 23 படங்கள் நடித்தவர் லிசி. தமிழில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தார். சில படங்களில் நடித்தவர் பிறகு மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். இயக்குநர் பிரியதர்ஷனை திருமணம் செய்து கொண்டார்.

சீமா

ஐ வி. சசியைத் திருமணம் செய்த சீமா மலையாளத்தில் பிரபலம் தமிழில் குணச்சித்திர வேடத்தில் வந்தார். இப்போது தமிழில் டிவி தொடர்களில் வருகிறார்.



ஊர்வசி

காலம் கடந்து நிற்பவர் ஊர்வசி, முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நூற்றுக் கணக்கான படங்களில் நடித்தவர் அனைத்து முன்னணி நாயகர்களுடன் இணைந்தவர். ஒரு கட்டத்தில் கதாநாயகியிலிருந்து நகைச்சுவைக்கு மாறி இன்றும் நடிப்பில் கலகலப்பூட்டி வருகிறார்.

மீனா

மலையாள வரவுகளில் அம்பிகா, ராதாவுக்குப் நிலைத்து நின்றவர் மீனா.கன்னூர் மாவட்டம் இவரது பூர்வீகம்.. .தமிழ்நாடு அரசின் 4 விருதுகள்,மற்றும் ஆந்திரஅரசின் நந்திவிருதுகள் 2ம் பெற்றவர்.

இவர் தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத் என பலருடன் இணைந்து நடித்தவர். மம்முட்டி மோகன்லால், வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, விஷ்ணுவர்தன் என்று தென்னிந்திய நாயகர்களுடன் வலம் வந்தவர். திருமணமான பின்னும் மோக

ன்லாலுடன் இவர் நடித்த த்ரிஷ்யம் படம் பெரிய வெற்றிவெற்றது இன்றும் மதிப்புள்ள நடிகையாக வலம் வருகிறார்.

அசின்

குடும்பப் பாங்கு தவிர்த்து சற்று கவர்ச்சியில் தாராளம் காட்டி அறிமுகமான அசின், தமிழில் கமலுடன் தசாவதாரம் பட வாய்ப்பு பெற்றதும் உயரே சென்றார்.

விஜய், அஜித்,சூர்யா,ஆர்யா, ஷாம் என்று என்று நடித்தவர் அதன் பிறகு இந்தியில் நுழைந்து அங்கும் ஓரிடத்தைப் பெற்றார். அதிகப் பணவரவு என்று இந்திக்குப் போன போது தமிழில் இடைவெளி விழவே இங்கு படங்கள் இல்லை. வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல வேறு நடிகைகள் அவர் இடத்தை நிரப்பிக் கொண்டார்கள்.



அபிராமி

திருவனந்தபுரத்துக்காரரான அபிராமி தான் ஒரு தமிழ்ப்பெண் என்று கூறுவார். குழந்தை நட்சத்திரமாக 7 படங்களில் நடித்துவிட்டு வளர்ந்ததும் நாயகியானவர். வானவில், மிடில் கிளாஸ் மாதவன், சமஸ்தானம், சார்லி சாப்ளின் என்று நடித்தவர், கமலுடன் விருமாண்டியில் நடித்ததும் பல படிகள் மேலேறினார். சமீபத்தில் வந்த 36 வயதினிலே படத்தில் கூட நடித்துள்ளார்.

ஷாலினி

பேபி ஷாலினியாக கலக்கிய இவர் பேபியாகவே 35 படங்கள் நடித்தவர். நாயகியாக முதல் படம் அனியத்தி பிராவு மலையாளப்படம் ..பிறகு விஜய்யுடன் காதலுக்கு மரியாதையில் நடித்தார் அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது அவரது காதலுக்கு மரியாதை செய்தார் மீண்டும் விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு, மாதவனுடன் அலைபாயுதே, பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும என நடித்து அஜித்தை திருமணம் செய்து கொண்டு திரையுலகிற்கு விடைகொடுத்து விட்டார்.

கோபிகா

இந்த திருச்சூர்க்கார கோபிகா 4 த பீப்பிள் மூலம் பிரலமானார்.சேரனின் ஆட்டோகிராப் மூலம் தமிழுக்கு வந்தார் பிறகு கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, அரண், எம்டன் மகன் வெள்ளித்திரை என்று நடித்தவர் இரண்டாம் கட்ட நடிகர்களுடன் மட்டும் நடித்தவர் என்ற நிலையில் திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.

அஞ்சு அரவிந்த்

பூவே உனக்காக படத்தில் விஜய்யுடன் நடித்தவர் மூக்கும் முழியுமாக வசீகரமான குடும்பப் பாங்கான முகம்தான். அதன்பின் அவர் ஏற்ற படங்கள் அவரை உயர்த்த வில்லை அருணாசலத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். ஆனாலும் எனக் கொரு மகன் பிறப்பான், ஒன்ஸ்மோர், சூர்ய வம்சம், குருப்பார்வை போன்ற படங்களில் நடித்தும் முக்கியத்துவம் பெறாததால் காணாமல் போனார்.

மோனிகா

குழந்தை நட்சத்திரமாக 15 படங்களில் நடித்த இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வாங்கியுள்ளவர். குமரியானதும்அழகி படம் மூலம் குடும்பப் பாங்கான அடையாளம் பெற்றார்.பிறகு நடித்த சிலபடங்கள் பெரிதாக கை கொடுக்க வில்லை. இவர். இம்சைஅரசன் ,சிலந்தி போன்ற படங்களில் தரம் இறங்கினார். . இப்போது முஸ்லிமாக மாறித் திருமணம் செய்து கொண்டு விட்டார்.

பாவனா

திருச்சூர்காரரான பாவனா, மிஷ்கினின் சித்திரம் பேசுதடியில் தமிழுக்கு அறிமுகமானார். பிறகு கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், வாழ்த்துகள். என்று இரண்டாம் நிலை நடிகர்களுடன் நடித்தார். என்ன பிரச்சினையோ தெரியவில்லை.பிறகு மேலே வரமுடியவில்லை.

மீராஜாஸ்மின்

துறு துறு முகம் குடும்பப் பாங்கான தோற்றம் என்றிருக்கும் மீராஜாஸ்மின் தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, 3 பிலிம்பேர்விருதுகள், 4 ஆசியாநெட்விருதுகள் என பல விருதுகளை அள்ளியவர். ரன்னில் மாதவனுடன் அறிமுகமானார் விஜய்யுடன் புதிய கீதையிலும் அஜித்துடன் ஆஞ்சநேயாவிலும் நடித்தவர். விஷாலுடன் சண்டக் கோழி, தனுஷுடன் பரட்டை என்கிற அழகு சுந்தரம், பரத்துடன் நேபாளி, பிரசாந்துடன் மம்பட்டியான் என்று நடித்தவர். கவர்ச்சியாக நடிப்பவரல்ல தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்கிற பெயர் பெற்று தனக்கென ஓரிடம் பெற்றவர்.

ஜோதிர்மயி

தமிழில் இதயத்திருடன்அறிமுகம். முதல் படம் நடிக்கும் முன்பே மலையாளத்தில் 16 படங்கள் முடித்தவர். தலைநகரம், பெரியார், சபரி, நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேசன் போல கலந்துகட்டி நடித்தார். இவருக்கு பெரிய இடம் கிட்ட வில்லை.

மல்லிகா

ஆட்டோகிராபில் அறிமுகமாகி ஆட்டோகிராப் மல்லிகா என்றழைக்கப்பட்டவர். திருப்பாச்சியில் விஜய் தங்கையானார். திருப்பதியில் சுமாரானவேடம் தோட்டா, சென்னையில் ஒரு நாள் என சிறு சிறு பங்களிப்புகள் பியாரி மொழியில் படமொன்றில் நடித்து தேசியவிருது பெற்று விட்டவர், வணிகரீதியாக வளரவில்லை..

அமலாபால்

மைனா படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் என்று 35 படங்களில் நடித்தவர். விஜய்யுடன் தலைவா வில் நடித்த போது படத்தில் கேமராவுக்கு முன் விஜய்யுடனும் பின் இயக்குநர் விஜய்யுடன் டூயட் பாடியவர் . நிஜ க்ளைமாக்ஸில்இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு விட்டார்.

அனன்யா

நாடோடிகள் மூலம் அறிமுகமான அனன்யா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 35 படங்கள் முடித்தாலும் சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், அதிதி, இரவும் பகலும் என்று நடித்தாலும் மேலேவர போராடும் நிலையில்தான் இருக்கிறார்.

பூர்ணா

படங்களில் பூர்ணா என்கிற பெயரில் நடிக்கும் ஷாம்னா காசிம் கன்னூர்க்காரர். முனியாண்டி விலங்கியல் 3 ஆம் ஆண்டு கொடைக்கானல், துரோகி, ஆடுபுலி, வித்தகன், தகராறு என்று நடித்தவர்,ஜெயம்ரவியுடன் அப்பா டக்கர் நடிக்கும் வரை மிதமான வெற்றிகளால் போராடினார். இவர் கையில் உள்ள படம் படம் பேசும் வாய்ப்பு.

அனுமோல்

பாலக்காட்டுக்காரரன அனுமோல் ஒரு பொறியியல் பட்டதாரி. தேர்ந்தெடுத்து நடிப்பவர் கண்ணுக்குள்ளே, ராமர் சூரன் படங்களைத் தொடர்ந்து திலகரில் நடித்துள்ளார். பாத்திரம்அறிந்துமட்டுமே நடிப்பவர்.

நஸ்ரியா

குறுகிய காலத்தில் பரபரப்பாகி திடுதிப்பென திருமணம் செய்து கொண்டவர் நஸ்ரியா. இந்த நஸ்ரியாவுக்கு அந்தக்கால நதியா போல வியர்க்க வைக்கும் விசிறிகள் பெருகினர். நேரம் இவரது முதல்படம். பிறகு தனுஷுடன் நய்யாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்காஹ் என்று நடித்தவர் பரபரப்பானார். ஆனால் மதிப்பு மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

ஓவியா

வாய்ப்புகளைத் தேடி அடைவது ஒருரகம். வருவதை ஏற்பது இன்ொரு ரகம் என்றால் ஒவியா இரண்டாவது ரகம். களவாணியில் அறிமுகம் ஆனார் பிறகு முத்துக்கு முத்தாக, மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு யாமிருக்க பயமே என்று நடித்தார்.சரத்துடன் நடித்த சண்டமாருதம். இவருக்கு 12 வது படம். .அந்த அளவுக்கு வருவதை ஏற்றுக் கொண்டு நடித்தார். இப்போது அகராதி, சீனி என நடிக்கிறார்.

நயன்தாரா

ஐயாவில் சரத்துடன் அறிமுகமானாலும் பிறகு நடித்த ரஜினி படம் சந்திரமுகி, சூர்யாவுடன் கஜினி, விஜய்யுடன் சிவகாசி என்று நடித்தார். முக்கியத்துவம் இல்லாத பாத்திரங்கள் என்றாலும் வெற்றிப்பட ராசி வந்தது. பிறகு விஜய்யுடன் வில்லு, அஜித்துடன் பில்லா,ஆரம்பம், தனுஷுடன் யாரடிநீ மோகினி ,சூர்யாவுடன் மாஸ் என்று விஸ்வருப மெடுத்தார். அவ்வப்போது கிசுகிசுக்களில் காதல் வளர்த்து பரபரப்பும் விளம்பரம் தேடிக் கொண்டு இன்று 3 கோடி சம்பளம் வரை போனவர். இப்போதும் ஜீவா, சிம்பு, கார்த்தி என்று இணைந்து வருபவர் இன்றும் தமிழில் கைநிறைய படங்களுடன் இருக்கிறார்.

லட்சுமி மேனன்

கும்கியில் அறிமுகமானார். பிறகு இவர் காட்டில் மழை விக்ரம்பிரபுவுடன் இவன் வேறமாதிரி விஷாலுடன் பாண்டியநாடு, கார்த்தியுடன் கொம்பன், சசிகுமாருடன் சுந்தரபாண்டியன் என நடித்தவர் வெற்றிப் படங்கள் மூலம்தன் மதிப்பைக் கூட்டிக் கொண்டார். இப்போது அஜித் படம் உள்பட பல படங்கள் இவர்கையில்

ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்க வெற்றிக்குப் பின் வெள்ளக்காரதுரை நடித்து இன்று வேகமாக வளர்ந்து வருபவர்.

மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் ரஜினிமுருகன், இது எனன மாயம், பாம்பு சட்டை என தமிழிலும் தென்னக மொழிகளிலும் நடித்து நம்பிக்கை தருகிறார்.இப்படி நம்பிக்கை தரும் நல்வரவுகள் சிலருண்டு.



மலையாள நடிகைகளில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தும் சரியாக பயன்படுத்திக் கொண்டு வளராதவர் சித்தாரா.சில படங்களுடன் ஆளே காணவில்லை..

சபாஷ் கண்ணன் வருவான், வேதம், என்று நடித்த திவ்யா உன்னிக்கு பாளையத்து அம்மனில் பக்தி சொட்டச் சொட்ட நடித்தும் திருப்புமுனை அமையவில்லை சரியான வெற்றி கிடைக்காதவர்கள், வெற்றிக்குப் போராடிவர்கள் வரிசையில் மம்தா மோகன்தாஸ், தேசியவிருது, பத்ம விருது பெற்றும் தமிழில் காலூன்ற முடியாமல் தவிக்கும் வித்யாபாலன், ,குடும்பப் பாங்காக நடித்தும் உயரம் தொட முடியாத நவ்யாநாயர் இந்த வரிசையில் நிற்கும் சிந்து மேனன், ரேஷ்மிமேனன், பார்வதிநாயர் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

மிட்டாய், திருப்பூர், அறியாதவன் புரியாதவன் போன்ற படங்களில் நடித்த உன்னிமாயாவும் உயரவில்லை.

என்மன வானில், நம்நாடு, திண்டுக்கல் சாரதி, மகிழ்ச்சி, என்று நடித்த கார்த்திகாவால் மேலே வர முடியவில்லை.

சூரியன் சட்டக் கல்லூரி, காவலன், புத்தனின் சிரிப்பு என்று நடித்த மித்ரா குரியன் கையில் நந்தனம் என்கிற ஒரு படம்தான் உள்ளது.

மலையாளத்தில் 20 படங்கள் நடித்தாலும் மனதோடு மழைக்காலம் நாயகி நித்யாதாஸுக்கு தமிழில் நல்ல காலம் அமையவில்லை.

தனக்கென தனியான இடமில்லாமல் தவிக்கும் இனியா இன்னும் போராடுகிறார்.தேர்ந்தெடுத்து நடித்தும் மணிரத்னத்தின் ஒகே கண்மணியில் நடித்தும் வெற்றியை கொடுக்க முடியாத நித்யாமேனன்.இன்னொருவர்.

இப்படி காவ்யாமாதவன், ஹிமாநாயர் என்று பலரும் போராடி வருகிறார்கள்.

சினிமாவில் அழகு திறமை, வரவேற்பு என்பவை வெற்றியை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றன. வெற்றிக்குப் பின்தான் மற்றவை. எனவே நடிகைகளின் படவெற்றிகள் என்கிற அளவு கோலின்படியே அவரவர்களுக்கான இடம் அமைகிறது. ஓரிடத்திலிருந்து போராடி மேலே வர முயற்சிகள் நடக்கின்றன. எப்படியாயினும் மலையாள வரவுகள். வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்..

இடையிடையே மும்பை வரவுகளின் படையெடுப்புகள் இருந்தாலும் அவர்களில் குஷ்பூ ,சிம்ரன்,ஜோதிகா போல சிலர் நிலைத்து நின்றாலும் மலையாள முகங்களுக்கான ஆதரவும் வரவேற்பும் இருந்துதான் வந்திருக்கிறது.இன்று தமிழ் நடிகைகளுக்கான வெவ்வேறு வகையான போட்டி அடுக்குகளில் மலையாள வரவுகள் களத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மும்பை முகங்களை பளபள நிறத்துக்காக கவர்ச்சிக்காக ரசிக்கலாம் ஆனால் அவர்களை ரசிகர்கள் தம்மில் ஒருவராக நினைக்கத் தயங்குகிறார்கள். என்பதே உண்மை.




வசீகரமான நிறம், நமக்கு நெருக்கமான முகம், உடல் தோற்றம் இருப்பதால் மலையாள நடிகைகளை தமிழ் பாத்திரங்களில் அமர வைப்பது எளிது ஆகிறது. ஆயிரம் இருந்தாலும் மலையாள மரபில் இருப்பது தென்னக,திராவிட வேரல்லவா?

எனவே அவர்களது தோற்றம் காலமாற்றத்தால் இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. என்பதை இதன் பின்னுள்ள உளவியல் உண்மையாகக் கூறுகிறார்கள்.

Thursday, 21 May 2015

ஏன் இந்த பேய் மோகம்!

சமீபகாலமாக ஹீரோக்கள் ஆதீத ஆர்வம் காட்டி வருவது பேய்க்கதைகளில்தாம். சந்திரமுகியில்  ரஜினி செவ்வனே துவக்கி வைத்த இந்தப் பாதையில் தற்போது பெரும்பாலான ஹீரோக்கள் வரிசை கட்டத் துவங்கிவிட்டார்கள்.சரி பேய்ப் படங்களை அந்த அளவிற்கு ரசிக்கிறார்களா என்றால் ‘காஞ்ஜூரிங்’ படத்தையே கப்சா விடுறாங்க பாஸ் ரேஞ்சுக்கு சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் கலாய்க்க ஆரம்பித்து விட்டது.



என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமாவுக்கு? சிம்பிள் பட்ஜெட், ஒரு பங்களா, லைட் மேன் செலவு கூட குறைவுதான். வெறும் 4 பேர் கொண்ட குழுவை வைத்துக்கொண்டே இரண்டு மணி நேரப் படத்தை ஓட்டி விடலாம். இதுவே முதல் காரணம் என்கிறார் தமிழ் சினிமாவின் முக்கியஸ்தர் ஒருவர்.சரி பேய் என்பதே நம்மை சீட்டில் உறைய வைக்க எடுக்கப்படும் படங்கள் தான். ஆனால் அந்த வகையில் கடைசியாக வெளியான ’ஈவில் டெட் 2013’, ‘அன்னாபெல்’, ’ஓஜா’ என பல ஹாலிவுட் படங்களே அதில் பல்புதான் வாங்கியது. நமக்குத் தெரிந்து நம்மைச் சிறிதே ஆட்டிய படங்கள் ‘எக்ஸார்சிஸ்ட்’, ‘க்ரட்ஜ்’;’தி ரிங்’, ‘இட்’ , என மிகச்சில படங்களே உள்ளன. அந்தப் படங்களையும் இப்போது டிவிகளில் பார்க்கையில் சிரிப்பு தான் வருகிறது.

இவர்களைப் பார்த்து பாடம் கற்றார்களோ என்னவோ காமெடி ட்ராக்கில் பேயை வைத்து கிண்டல் செய்ய துவங்கிவிட்டார்கள் கோலிவுட் வாசிகள். தொட்டா பேய் வரும், கட்டிப்பிடிச்சா பேய் வரும், இப்படிப் பேய்கள் பல விதம். முன்பெல்லாம் பேய்ப் படங்கள் என்றாலே புதுமுக நடிகர்கள் மட்டுமே ஹீரோக்களாக வருவார்கள். பின்னர் நிழல்கள் ரவி, மோகன் என படையெடுத்தார்கள். ’சந்திரமுகி’ மூலம் ரஜினியே பேய்ப் பட ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அவ்வளவு தான் லாரன்ஸ், ஆதி, நந்தா, சுந்தர் சி, வினய், ஜி.வி.பிரகாஷ்,  அருள் நிதி, சிபிராஜ் இப்போது சூர்யா வரை இந்த பேய்ப் பட மோகம் தலை விரிக்கத் துவங்கிவிட்டது.

சரி இப்படி ஒரே நேரத்தில் பேயை வைத்து எல்லாரும் ஒரு காட்டு காட்டினால் கூட ஓகே , ஊரே பயப்படும் ஒரு கான்செப்டை காமெடி பீசாக அல்லவா மாற்றிவிட்டனர். அப்படியென்றால் பேய் பயம் மொத்தமாக போய் விட்டதா, இருட்டைக் காட்டியே நம்மை பயமுறுத்திய சினிமாக்கள் எங்கே? ஒவ்வொரு சீனையும் ஐஸ் க்ரீம் சாப்பிடக் கூட மறந்து பார்த்துக்கொண்டிருக்க ஐஸ்க்ரீம் உருகி கீழே வழிந்தோடிய காலங்கள் எங்கே? என ஏங்க வைத்துவிட்டனர் சினிமா படைப்பாளிகள். ’காஞ்சனா’ பார்த்து கதறிய குழந்தைகள் இப்போது தங்களது அப்பா , அம்மாவிடம் ஹையோ! இது பொம்மை, என சிரிக்கத் துவங்கிவிட்டனர். ’ வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாட்டா சொல்லி வைப்பாங்கன்னு’ சொன்ன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தோட வரிகள் பொய்யாகி வருகிறது என்பதுதான் உண்மை. நல்லது நடந்தா சரி.

Saturday, 16 May 2015

ஜெயகாந்தனின் சினிமா

தம் வாழ்நாளில் ஒரு தங்க வாய்ப்பையாவது  பெற்று விட முடியாதா என்கிற கனவுடன் தமிழ் எழுத்தாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான நபர்கள் தமிழ் சினிமாவுலகில் நுழைய முண்டியடித்துக் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சி ஊடகமும் அதிலுள்ள நபர்கள் இயங்கும் போலித்தனத்திற்காகவே அதை தம் எழுத்தில் தொடர்ந்து முற்றிலும் கறாராக விமர்சித்து, வெறுத்து ஒதுக்கிய ஒரு நபர் அதிலேயே சில காலம் இயங்கி சில திரைப்படங்கள் இயக்க நேர்ந்தது என்பது விதியின்  சதுரங்க ஆட்டத்தின் ஒரு சுவாரசியமான அசைவு போலவே இருக்கிறது. 
 
 
ஜெயகாந்தன் சில காலத்திற்கு முன் எழுதிய 'ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' நூலை வாசிக்கும் போது அவர் தமிழ் சினிமாவிற்கு வந்து விழுந்ததே ஒரு தற்செயலான விபத்து என்றே தோன்றுகிறது. அந்தளவிற்கு தம்முன் வந்த வாய்ப்புகளையெல்லாம் மிக மூர்க்கத்தனத்துடன் அவர் நிராகரித்துக் கொண்டேயிருந்தார். தன் படைப்புகளின் ஆன்மாவை தமிழ் சினிமா சிதைத்து விடும் என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி அவருக்கு இருந்திருக்கிறது. என்றாலும் நண்பர்களின் அன்பு கலந்த வற்புறுத்தல் காரணமாகவும் அதன் பின்விளைவாக நிகழும் சிலபல சிக்கலான தருணங்களைக் கடந்து வரவும்தான் அவர் திரைப்படம் தொடர்பான சில பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பதாகத் தெரிகிறது. ஒரு காலக்கட்டத்தில் எழுத்தை நிறுத்திக் கொண்ட கம்பீரத்தைப் போலவே பணத்தை அள்ளியும் கிள்ளியும் தந்த திரைப்படத்துறையிலிருந்தும் அவர் அதே கம்பீரத்துடன் விலகிய ஆளுமைக்குணம் எத்தனை பேருக்கு அமையும்?

'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட அவரின் சில படைப்புகள் மற்றவர்களால் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் அவரே நேரடியாக இயக்கிய திரைப்படங்கள் மூன்று. உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும். இதில் 'யாருக்காக அழுதான்' திரைப்படத்தின் பிரதி மாத்திரமே இன்று காணக் கிடைக்கிறது. உன்னைப் போல் ஒருவன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட காலத்தில் பார்த்திருக்கிருக்கிறேன். அதில் பிரதான நடிகர்களாக நடித்த காந்திமதி மற்றும் வீராச்சாமி போன்ற நடிகர்களின் மங்கலான உருவங்கள் மட்டுமே இன்று எனக்கு நினைவில் நிற்கிறது. புதுச்செருப்பு கடிக்கும் திரைப்படத்தைப் பார்த்த பாக்கியவான்களில் ஒருவராவது தமிழகத்தில் எவரேனும் இருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது.  அவரது தோழர்கள் உருவாக்கிய 'பாதை தெரியுது பார்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் தற்செயலானதொரு தருணத்தில் ஜெயகாந்தன் நடித்திருக்கிறார். அவர் முன்பு செய்து வைத்திருந்த கறாரான தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான காரியம் அது. எனவே மிக சாமர்த்தியமாக அந்தக் காட்சியை நீக்குவதற்கும் தாமே காரணமாக இருந்திருக்கிறார். அது நீக்கப்படாமலிருந்தால் ஜெயகாந்தனை தமிழ் திரையில் பார்க்குமொரு மகத்தான வாய்ப்பு இழக்கப்படாமலிருந்திருக்கும். 
இத்திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல் ஒன்றும் மிக பிரபலமானது. 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே. சிட்டுக்குருவி ஆடுது'. ஜெயகாந்தனின் எழுத்து பங்களிப்பில் உருவான திரைப்படங்கள் பலவற்றின் பிரதி இன்று நம்மிடமில்லை அல்லது கண்டுபிடிக்க இயலவில்லை. ஜெயகாந்தன் என்கிற ஆளுமையை சமகால வாசகர்கள் இன்னமும் விஸ்தாரமாக அணுக இத்திரைப்படங்களை காண முடியாது என்பது ஒரு சோகம். கலைகளை ஆவணப்படுத்துதலில் தமிழ் சமூகத்திற்கு இருக்கிற அலட்சியமும் அறியாமையும் இதன் மூலம் மறுபடியும் நிரூபணமாகிறது. என்றாலும் ரவி சுப்பிரமணியம் இயக்கியிருக்கும் ஜெயகாந்தன் குறித்த ஆவண்ப்படமானது ஒரு சிறந்த குறைந்தபட்ச ஆறுதல்.

***

ஒரு காலக்கட்டத்து கலையுலக அனுபவங்கள் வரை பதிவாகியிருக்கும் ஜெயகாந்தனின் நூலில் அவரால் இயக்கப்பட்ட முதல் இரண்டு திரைப்படங்களும் உருவான பின்னணிகள் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. வீனஸ் கிருஷ்ணமூர்த்தி என்கிற பிரபல தயாரிப்பாளர் ஜெயகாந்தனை தாமே அணுகி 'உங்களது படைப்பில் எதை வேண்டுமானாலும் திரைப்படமாக உருவாக்கலாம்' என்கிற நம்பிக்கையை விதைக்கிறார். என்றாலும் ஒரு திரைப்பட இயக்குநராவதற்கான அனுபவம் குறித்த போதாமைகளை தாமே உணர்ந்திருக்கிற ஜெயகாந்தன் 'என் மீதே அதற்கான நம்பிக்கை வரும் போது' இயக்குநர் ஆவதாக பதிலளிக்கிறார். என்றாலும் அந்த தயாரிப்பாளருடன் இரண்டு வங்காளித் திரைப்படங்களை தமிழில் உருமாற்றுவதற்கான பணிகளில் ஈடுபடுகிறார். ஆனால் சினிமாக்காரர்களின் அலட்சியமான மனோபாவமும் கலையை வணிகமாகவே பார்க்கும் போலித்தனமும் அங்கிருந்து அவரை விலகச் செய்கிறது. சில காலம் கழித்து இதே தயாரிப்பாளரை சந்தித்து தன் நம்பிக்கையை தெரிவிக்கிறார். திரைக்கதை உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்கதையை கேட்ட தயாரிப்பாளர் சட்டென்று ஒரு வணிகராக மாறி 'என்ன இது சமைப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதுமாய் வங்காளிப்படம் மாதிரி இருக்கிறதே' என்று அவநம்பிக்கையான கருத்தை தெரிவித்திருக்கிறார். தனது பிரத்யேக குணத்துடன் இதை எதிர்கொண்ட ஜெயகாந்தன் 'இதை நான் என் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி காட்டுகிறேன்' என்று ஆவேசமாக சொல்லி விட்டு வெளியேறியிருக்கிறார். ஜவஹர்லால் நேரு என்கிற ஆளுமையின் மீதான மரியாதையின் பேரில் அதன் பிறகு உருவானது, 'ஆசிய ஜோதி பிலிம்ஸ்'.

ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படங்களைக் காணும் போது அவற்றிலுள்ள பல நேரடியான குறைகள் நம் கண்களில் உடனே பட்டாலும் அவற்றை தாங்கிப் பிடிப்பது அவரது எழுத்துக்களைப் போலவே திரைப்படத்திலும் இருந்த யதார்த்தமான காட்சிகளும் அவற்றிலிருந்த நேர்மையும்தான். வெகுசன சினிமாவின் அபத்தமான போக்கிற்கு உடன்படாமல் தனித்து நின்ற அவரது கம்பீரமான வேறுபாடே அவரது ஆளுமையை தனித்து நிற்கச் செய்கிறது. இந்தக் காரணத்தினாலேயே  'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்திற்கு 1965-ம் ஆண்டிற்கான  தேசிய அளவிலான  விருது கிடைத்திருக்கிறது. கொள்கைகளின் படி இரண்டாம் விருது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நிலையில் சத்யஜித்ரே இயக்கிய சாருலதாவிற்கும் இதற்கும்தான் போட்டி. ஆனால் ஒருவகையில் ஜெயகாந்தனுக்கு ஆதர்சமாயிருந்த ரேவின் படைப்பே தகுதியில் உயர்ந்தது என்கிற எண்ணம் ஜெயகாந்தனுக்கு இருந்ததால் மூன்றாம் பரிசு குறித்து அவருக்கு மகிழ்ச்சியே. ஆனால் இந்தச் செய்தியை தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தது குறித்து வருத்தம். ஓர் எழுத்தாளரே இயக்குநர் அனுபவங்கள் ஏதுமல்லாது தன்னுடைய படைப்பை இயக்கி அதற்கு தேசிய அளவிலான விருது பெறுவது என்பது ஒரு மகத்தான சாதனை. உண்மையில் தமிழகமே திரண்டு இதைக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் இத்திரைப்படத்தை வடஇந்திய பத்திரிகைகள் கொண்டாடியிருக்கின்றன.

திரைப்படம் காண்பதை வழக்கமல்லாததாக கொண்டுள்ள காமராஜ் இத்திரைப்படத்தைக் கண்டு "இந்தப் படத்தை அரசாங்கமே வாங்கி மக்களுக்கு இலவசமாக காட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். நம்முடைய பல கஷ்டங்களுக்குக் காரணம் நமது ரசனை கெட்டுப் போனதுதான்' என்று புகழுரை தந்திருக்கிறார். ஏவிஎம் செட்டியார் ஜெயகாந்தனை அணுகி "படம் மிக யதார்த்தமாக வந்திருக்கிறது. பெரிய நடிகர்களைப் போட்டு இதை மறுபடியும் உருவாக்கலாம், அதற்கான உரிமையைக் கொடுங்கள்" என்ற போது இதை வர்த்தகமாக மாற்றுவதற்கு உடன்படாத ஜெயகாந்தன் அதை மறுத்திருக்கிறார். இதை விநியோகஸ்தர்களின் மூலம் வழக்கமான திரையிடலாக வெளியிட முடியாமல், தனிக்காட்சிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். சில திரையரங்கங்கள் வசூல் இல்லை என பொய்க்காரணம் சொல்லி இதை மாற்ற முயன்ற போது ஜெயகாந்தனே தடியுடன் காவல்காரன் போல நின்று காட்சிகளை நடத்தச் செய்திருக்கிறார் என்பது சுவாரசியமான வரலாறு.

***

எதையும் தனக்கேயுரிய முரட்டுத்தனமான, கம்பீரமான அகங்காரத்துடன் அணுகும் ஜெயகாந்தன் திரைப்பட படப்பிடிப்பில் துவக்கத்தில் அடைந்த தடுமாற்றங்களையும் வெளிப்படையாக பதிவு செய்யத் தவறவில்லை. முதல் நாள் படப்பிடிப்பில் எல்லோரும் இயக்குநரின் உத்தரவிற்காக காத்து நின்ற போது தமது உதவியாளரை இயக்கச் சொல்லி அதன் மூலம் கற்றிருக்கிறார். 'நான் ஒரு டைரக்டர் என்று என்னை மாற்றிக் கொள்வதற்கு முன்னால் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. எனவே எனது உதவியாளர்களிடமிருந்து நான் பயின்றேன். அது குறித்து எனக்கு மகிழ்ச்சியே' என்பது ஜெயகாந்தனின் கருத்து. இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு காட்சி அனுபவத்தை அதில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் பகிர்ந்து கொண்டதை எங்கோ வாசித்த நினைவிருக்கிறது.  நடிகை காந்திமதி தனது தலைமுடியை சீப்பால் வாரிக் கொண்டேயிருந்த பிறகு அந்த சீப்பு உடைய வேண்டும் என்பது காட்சி. காந்திமதி தொடர்ந்து தலைவாரிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் சீப்பு உடையவில்லை. 'இங்கு கட் செய்து சீப்பு உடையும் காட்சியை தனியாக ஒளிப்பதிவு செய்து இணைத்துக் கொள்ளலாம்' என்று ஒளிப்பதிவாளர் ஆலோசனை சொன்னாலும் அதை மறுத்த ஜெயகாந்தன் தொடர்ந்து அதை பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்.

'யாருக்கான அழுதான்' திரைப்படத்தை இன்று பார்க்கும் போது அதிலுள்ள நேரடியான குறைகள் கண்ணில் படுகின்றன. இவற்றை ஒப்புக் கொள்வதிலும் ஜெயகாந்தனுக்கு தயக்கமேதுமில்லை. பட விநியோகஸ்தர்களின் வற்புறுத்தல்களின் படி படத்தின் நீளத்திற்காக இணைக்கப்பட்ட பாடலும் (உருவத்திலே இவன் மனிதன், உள்ளத்திலே இவன் பறவை என்கிற அந்த அற்புதமான பாடலை எழுதியவர் ஜெயகாந்தனின் நண்பர் கண்ணதாசன்) சில காட்சிகளும் தாமே அறியாமையால் செய்த குறைகளும் படத்தை நீளமாக்கி நீர்த்துப் போகச் செய்திருககிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முதலில் நடிக்க சந்திரபாபு விரும்பியிருக்கிறார். நண்பர்தான் என்றாலும் படமாக்கி கெடுத்து விடுவார் என்கிற உணர்வு காரணமாக அவருக்கு கதைக்கான உரிமையைத் தர மறுத்திருக்கிறார் ஜெயகாந்தன். பின்பு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, ரங்காராவ் போன்ற நடிகர்களுடன் உருவாக்க திட்டமிடப்பட்டது. கதை பற்றி ஜெயகாந்தனுடன் ஸ்ரீதர் விவாதிக்கும் போது திரைக்கதைக்காக அதில் தாம் செய்யும் மாற்றங்களை விவரித்து 'இறுதிக் காட்சியில் சிலுவையின் முன்பு சோசப்பு விழுந்து இறந்து போகிறான்' என்று மெலோடிராமாக நீட்டிச் செல்லும் போது ஜெயகாந்தன் அதற்கு "எனில் படத்தின் தலைப்பை 'யாருக்காகச் செத்தான்" என்று மாற்றிக் கொள்ளுங்கள்' என்று தமக்கேயுரிய சினத்துடன் சொல்லியிருக்கிறார். ஆனால் வேறு சில காரணங்களால் அத்திரைப்படம் உருவாகாமல் நின்று போயிற்று. சில பல குறைகளுடன் உருவாகியிருந்தாலும் நாகேஷ் நடிப்பில் உருவான இறுதி வடிவமானது ஒரு நல்ல முயற்சி.

ஜெயகாந்தனின் திரைப்படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தால் காட்சி ஊடகத்தின் சாத்தியங்களை மேலதிகமாகக் கற்று அவர் ஒரு சிறந்த இயக்குநராக பரிணமிக்கும் அளவிற்கு காலம் மலர்ந்திருக்கும். ஆனால் காமராஜர் குறிப்பிட்டது போல அப்போது மட்டுமல்லாமல், இப்போதும் கூட தமிழ் சூழல் ரசனை என்பது மலினமான கேளிக்கைகளின் மீதே அமைந்திருப்பதால் அது சாத்தியப்படாமல் போவது இயல்புதான். ஜெயகாந்தனைப் போன்று இன்னமும் அதிகமான எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் புழங்கவும் அவர்கள் வெற்றி பெறுவதுமான சூழல் சாத்தியப்படுவது ரசனை மாற்றம் எனும் விஷயத்தின் மூலம்தான் நடைபெற முடியும்.
- அம்ருதா - மே 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: அம்ருதா)

Friday, 15 May 2015

ரஜினி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

இன்று தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல மக்களை தன் காந்த சக்தியால் கட்டி போட்டு வைத்திருக்கும் அந்த மந்திரச் சொல் தான் "ரஜினி".  அவரைப் பற்றி சில தகவல்க உங்களுக்கு




1.ஜீஜாபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் என்ற மஹாராஷ்ரிய தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது கடைக்குட்டி தான் 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற  'சூப்பர் ஸ்டார்'.

2.தன்னுடைய இளமை பருவத்தில் பல வேலைகளை செய்து வந்தார்.  கூலியாகவும். பேருந்தில் நடத்துனராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய நண்பர் ராஜ் பகதூரின் தூண்டுதல் மற்றும் ஆதரவினால் தான் சென்னைக்கு நடிக்க வந்தார் ரஜினி.

 3.எதிர்மறையான பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், மெல்ல குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். பின் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். பைரவி நேர படத்தில் நடிக்கும் போது அதன் தயாரிப்பாளர் தானுவால் அவருக்கு வைக்கப்பட்ட பட்டமே சூப்பர் ஸ்டார்.

4.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். "ப்ளட் ஸ்டோன்" என்று இவர் நடித்த ஆங்கில படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது.

5.கமல் ஹாசனுடன் சேர்ந்து 18 படங்கள் சேர்ந்து நடித்துள்ளார். அவைகளில் 16 படங்கள் 1975-1979 வரை வெளிவந்தவை.

 6.ரஜினியை அறிமுகப்படுத்தியது பாலச்சந்தர் என்றாலும் கூட அவரை அதிகப்படங்களில் இயக்கியது எஸ்.பி.முத்துராமனே. ரஜினியை வைத்து அவர் இது வரை 25 படங்களை இயக்கியுள்ளார்.

7.ரஜினி, அமிதாப் பச்சனின் பல ஹிந்தி படங்களை ரீ-மேக் செய்து நடித்துள்ளார். பில்லா, தீ, படிக்காததவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், பாட்ஷா போன்ற படங்கள் இதில் அடங்கும்.

8.அவர் வள்ளி மற்றும் பாபா என இரு படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மேலும் மன்னன் மற்றும் கோச்சடையான் படங்களுக்காக தன் சொந்த குரலில் பாடலும் பாடியிருக்கிறார்.

9.அவருடைய ஒவ்வொரு படம் வெளிவந்த பின்பும் ஓய்வுக்காக இமயமலைக்கு செல்வது அவரின் பழக்கமாகும்.

10.ஸ்ரீ ராகவேந்திரர் அவருடைய நூறாவது படமாகும். படையப்பா அவருடைய நூற்றி ஐம்பதாவது படமாகும்.

11.அவர் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடித்த படம் 'முள்ளும் மலரும்'. அதை பார்த்து அவருடைய குருநாதர் திரு பாலசந்தர் அளித்த பாராட்டு கடிதத்தை இன்னமும் பத்திரமாக வைத்துள்ளார்.

12.ராக்கி பண்டிகையின் போது பௌர்ணமியன்று பாலச்சந்தரால் தான் சிவாஜி ராவ் என்ற நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறினார்.

13.ஆசியாவில் ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகப்படியாக சம்பளம் வாங்குபவர் நம் சூப்பர் ஸ்டாரே.

14.ஷூட்டிங்கின் இடைவேளையில் கேரவன் வண்டிக்குள் சென்று ஓய்வு எடுக்கும் பழக்கம் இல்லாதவர் ரஜினி. ஷூட்டிங் முடியும் வரை செட்டில் தான் இருப்பார். ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் செட்டிலேயே தலையில் ஒரு துண்டை போட்டு மூடி சற்று கண் அயர்வார்.

15.நீண்ட காலம் வரை பியட் மற்றும் அம்பாசடர் காரை மட்டுமே பயன்படுத்தி வந்தார். இப்போதும் கூட ஆடம்பர கார்களை பயன்படுத்தாத மிகவும் எளிய மனிதர்.

16.ஆன்மீகத்தில் அதிக நாட்டமுடையவர். ராகவேந்திரரின் பக்தரான இவர் பாபாஜியை வணங்குபவர். ஓய்வுக்கு இமையமலை செல்லும் இவர், அங்கே அனைவராலும் நுழைந்து விட முடியாத புகழ் பெற்ற பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுபடுவதுண்டு.

17.ஆன்மீகத்திற்கு அடுத்து அவர் அதிகமாக விரும்புவது சாதாரண மனிதனாக ஊர் சுற்றுவது. அவரை நகரின் சில பகுதியில் மாறு வேடத்தில் காண நேரிடலாம்.

18.தன்னுடைய ப்ரைவசியை தொலைத்து விட்டதால் சில நேரங்களில் சிறையில் அடைபட்ட கைதியை போல் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

19.தனக்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே.

20.ரஜினியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீ ப்ரியா. 21. 2000-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

21.இவர் முதன் முதலில் தயாரிப்பில் ஈடுபட்ட படம் மாவீரன். இதுவும் கூட அமிதாப் பச்சன் நடித்த ஹிந்தி படத்தின் ரீ-மேக்.

22.தன் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்துள்ளார் சூப்பர் ஸ்டார். அப்படி அவர் செய்தது பாபா மற்றும் குசேலன் ஆகிய படங்களுக்கு.

23.ரஜினிக்கு கருப்பு நிற உடைகளின் மீது ஆர்வம் அதிகம். ஆனால் சமீப காலமாக வெண்ணிற வேஷ்டி சட்டை மற்றும் காவி வேஷ்டியை அதிகமாக அணிகிறார்.

24.ஆன்மீகத்தில் தனக்கிருக்கும் ஈடுபாட்டை பற்றி அவர் இப்படி கூறியுள்ளார் - 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

Tuesday, 14 April 2015

நடிகர், இயக்குனர்களின் சொந்தப்பட முடிவு ஏன்?

நடிகர்களும், இயக்குனர்களும் சொந்தப்பட தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில வருடங்களில் தயாரிப்பாளர்களான இயக்குனர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனை தொடுகிறது.
 


படம் தயாரிப்பது தற்கொலைக்கு சமமாக மாறிவரும் சூழலில் நடிகர்கள், இயக்குனர்கள் மட்டும் படத்தயாரிப்பில் ஆர்வம் காட்டுவது ஏன்?
 
பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் பிசாசு படத்தை தயாரித்தார். மிஷ்கின் படங்களுக்கு மினிமம் ஐந்து கோடி வியாபாரமிருக்கிறது. புதுமுகம் நடித்திருந்தாலும். பிசாசு மூன்றரை கோடியில் தயாரானது. அதனை ஐந்தரை கோடிக்கு அவர் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு தந்தார். உட்கார்ந்த இடத்தில் இரண்டு கோடி லாபம். பாலா என்ற பெயருக்கு இருக்கும் விளம்பர வெளிச்சத்தால் அவரால் இரண்டு கோடி சம்பாதிக்க முடிந்தது. 
 
சுசீந்திரன், ஆதலால் காதல் செய்வீர் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்தார். அதாவது, ஒரு கதையைச் சொல்லி, அதனை படமாக்க ஐந்து கோடியோ இல்லை பத்து கோடியோ ஆகும். அதற்குள் படத்தை முடித்துவிடுவேன் என்று ஒப்பந்தம் போட்டு, தயாரிப்பாளரிடமிருந்து பணத்தை வாங்கி படமெடுத்து முதல் காப்பியை தயாரிப்பாளரிடம் தருவது. ஒப்பந்தத்தைத் தாண்டி பட்ஜெட் எகிறினால் அது தயாரிப்பாளரின் கவலையில்லை, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை எடுத்துத்தர முன்வந்தவர்தான் அப்பணத்துக்கு பொறுப்பு.
 
சுசீந்திரன், ஆதலால் காதல் செய்வீர் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துத் தருவதாக பெரிய தொகை ஒன்றை வாங்கி, மிகக்குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடித்தார். அந்தவகையில் அவருக்கு மூன்று கோடிக்கு மேல் லாபம் பார்த்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
இப்போது பல இயக்குனர்கள் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் படம் இயக்குகின்றனர். யுடிவு தொடர் தோல்விகளை சந்தித்தபின், படத்தை இயக்குகிறவர்களை தயாரிப்பில் துணைக்கழைத்துக் கொள்கிறது. ஆரம்பம் படத்தில் விஷ்ணுவர்தன், அஞ்சானில் லிங்குசாமி, புறம்போக்கில் ஜனநாதன். இயக்குனரையும் ஒரு தயாரிப்பாளராக சேர்த்துக் கொள்ளும்போது யுடிவியின் ரிஸ்க் குறைகிறது.
 
குறித்த நேரத்தில் படம் வெளியாகாத கோபத்தில் விஷால் தயாரிப்பாளரானார். அவர் தயாரித்த இரு படங்களும் குறித்த நேரத்தில் வெளியாயின. விஷாலே ஒரு தயாரிப்பாளர் எனும் போது, அவரை வைத்து படம் தயாரிக்க படநிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
 
சூர்யா, கார்த்தி படங்கள் பல கோடிகள் லாபம் சம்பாதிப்பதால் அவர்களே படத்தை தயாரிக்க ஆரம்பித்தனர். அதனால்..
 
சம்பளத்துடன், ஒரு தயாரிப்பாளருக்கு கிடைக்கும் லாபமும் அவர்களை சென்றடைகிறது.
 
சிவ கார்த்திகேயனும் இனி சொந்தப் படங்கள் தயாரிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். அவர் ஒரு படம் தயாரிப்பார். அதனை யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ, அவர்கள் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்.
 
ஏன் இப்படியொரு முடிவு?
 
சிவ கார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காக்கி சட்டை. கதையாகப் பார்த்தால் சுமாரான படம். ஆனால் வசூல்? 14 கோடியில் தயாரான படம் 50 கோடிக்கு மேல் வசூலித்ததாக சிவ கார்த்திகேயனே ட்விட்டரில் கூறினார். 50 கோடி வசூலித்த படத்துக்கு - தனுஷ் தயாரிப்பாளர் என்பதால் - ஐந்து கோடி அளவுக்கே சம்பளம் வாங்கியிருப்பார் சிவ கார்த்திகேயன். வெளி தயாரிப்பாளர் என்றால், எட்டு கோடிவரை கிடைக்கும். 
 
சிவ கார்த்திகேயன் இதே காக்கி சட்டையை அவரது சம்பளம் போக பத்து கோடியில் தயாரித்திருந்தால், குறைந்தபட்சம் 30 கோடிகளுக்கு விற்றிருக்கலாம். லாபம் 20 கோடிகள். 
 
சிவ கார்த்திகேயன் படம் என்றால் பத்து கோடி சேட்டிலைட் உரிமையே போகிறது. திரையரங்கு வியாபாரம் வெளிநாட்டு உரிமை என்று முப்பது கோடி உறுதி. நடிகர்கள் தயாரிப்பாளராகும் போது நடிகராக சம்பாதிப்பதைவிட மூன்று மடங்கு ஒரே படத்தில் சம்பாதிக்கலாம்.
 
ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் இருந்தால் அதுவே ஒரு பலம். சன் பிக்சர்ஸ் படம் தயாரித்தால் சன் தொலைக்காட்சியில் புரமோட் செய்யலாம். இதுவே வேறு ஒருவர் என்றால் விளம்பரத்துக்கே கோடிகள் அழவேண்டும். நடிகரோ, இயக்குனரோ தயாரிப்பில் இறங்கும் போது தயாரிப்பின் ரிஸ்க் குறைகிறது. அதனை இன்றைய தலைமுறை அறுவடை செய்ய முயல்வதன் விளைவே நடிகர்கள், இயக்குனர்களின் தயாரிப்பு அவதாரம்.
 

Saturday, 4 April 2015

ஜானி - ரஜினியின் இன்னொரு முகம்

"தங்கையை நம்பி ஒப்படைக்கலாம் போன்ற முகம் " என்று ரஜினியின் முக வசீகரம் பற்றி ஒருமுறை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. பாலசந்தரால் அறிமுகம் செய்யபட்ட ரஜினி என்ற நடிகரின் திறமையான முகங்கள் வெளிப்பட்டது இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இலக்கிய தரமான படங்களில்தான்.

முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை குறிப்பாய் ....ஜானி .கதாநாயகன் இரட்டை வேடங்கள் ஏற்கும் படங்களில் தனித்துவம் மிக்க, எனக்கும், எல்லோருக்கும் எப்பவும் பிடித்த ஜானி படம் பற்றிய ஒரு பார்வை.

கமர்ஷியல் சினிமாவுக்கும், அழகியல் அம்சம் உள்ள கலை படத்திற்க்கும் இடையே பயணிக்கும் மகேந்திரன் அவர்களின் திரைக்கதை, ரஜினி - ஸ்ரீதேவி பாந்தமான நடிப்பு, கதையோடு உணர்வு பூர்வமாக கலந்து இருக்கும் இசைஞானி அவர்களின் இசை.....இவை எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக உருவாக்கபட்டு இருக்கிறது ஜானி.

ஜானி , வித்யாசாகர் என இரு வேடங்களில் ரஜினி. அர்ச்சனாவாக ஸ்ரீதேவி. பாமாவாக தீபா. இந்த நான்கு கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கதை.

இரண்டு ரஜினிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மீசை மற்றும் மூக்கு கண்ணாடி. ஆனால், பார்வையிலையே பெரும் வித்தியாசம் காட்டுகிறார் ரஜினி. முகபாவனைகள் மூலம் ஒரு தேர்ந்த நடிகராக பரிணாமிதது இருக்கிறார்.


ஜானி : தனது தந்தையின் கடன்களை தீர்ப்பதர்க்கு, மன உறுததலொடு திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்.பாடகி அர்ச்சனாவின் குரலில் மனத்துக்கு அமைதியை தேடுகிறார்.

வித்யாசாகர் : முடிவெட்டும் தொழிலாளியாக இருப்பவர். தனது தோட்டத்தில் இருக்கும் பூக்களை கூட எண்ணி வைக்கும் சிக்கனம். அதே சமயம், " காசு விஷயத்துல கருமியா இருக்கறது தப்பில்ல. ஆனா, பிரத்தியாருக்கு அன்பு செலுத்துரத்தில் யாரும் கருமியா இருக்கக்கூடாது." என்று கொள்கையொடு இருப்பவர்.

அர்ச்சனா : புகழும்,பணமும் பெற்ற ஒரு பாடகி. தனிமையில் வாடும், அன்புக்கு எங்கும் பெண். புடவையில், பாந்தமும், அடக்கமும், எளிமையும் உள்ள இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி கச்சிததமாய் பொருந்துவது கதைக்கு பெரிய ப்ளஸ்.

பாமா : எதிலும் திருப்தி அடையாத ஏழை பெண்ணாக தீபா. கிழிசல் உடையில் கவர்ச்சியாய் தோன்றும் வேடம் இவருக்கும் opt.

தான் செய்யும் தவறுகள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை உள்ள அப்பாவி வித்யாசாகரை போலீஸ் தொல்லை செய்வதை அறிந்து, நேரில் வந்து வித்யாசாகரை சந்தித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது கைரேகையை அவரிடம் ஒப்படைத்து இன்னும் பத்து நாளில் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜானி சொல்லும் காட்சி படத்தின் ஹை லைட்.

"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் " பாடலை கேட்டு ஒரு ரசிகராக அர்ச்சனாவிடம் அறிமுகம் ஆகும் ஜானி, படிப்படியாக அவரிடம் நட்பு கொள்கிறார். அர்ச்சனா சிததார் இசைக்கும் போதும், தனது பிறந்த நாளின் போதும் தாயின் நினைவுகளை பகிர்கிறார்.ஜானிக்காக அர்ச்சனா பாடுவதாக வரும் "என் வானிலே ஒரே வெண்ணிலா " கண்ணதாசன் வரிகளில், ராஜாவின் இசையில் உலக தரம். இந்த இரண்டு பாடல்களின் தேன் குரல் வண்ணம் ஜென்சி.


நட்பு காதல் ஆகிறது. குற்ற உணர்வு காரணமாக அர்ச்சனாவின் காதலை ஜானி ஏற்க மறுப்பதும், அதற்கு காரணமாக தான் பல பேர் முன்பு மேடையில் பாடும் பெண் என்பதால்தான் என அர்ச்சனா நினைப்பதும், பின் இருவரும் சமாதானம் அடைவதும் கவிதைகள்.

இந்த காதல் கவிதை என்றால், வித்யாசாகர் - பாமா இடையே ஆன காட்சிகள் சிறுகதை. அனாதையான பாமாவை தனது வீட்டு வேலைக்காரியாக்கி , பின் தனது மனைவி ஆக்க விரும்பும் வித்யாசாகரிடம் "நாளைக்கு நமக்கு பிறக்கும் குழந்தைக தங்கள் அப்பா ஒரு பார்பார் என சொல்லிக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படும்" என்று பாமா கூறும் காட்சி யதார்த்தம். இதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு கடைக்கு போகும் காட்சியில் ஒரு பணக்கார இளைஞனை அறிமுக படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன். அவன் கையில் இருக்கும் புத்தகத்தின் பெயர் future shock.

நாம் எதிர்பார்த்தபடி, பாமா அந்த பணக்கார இளைஞனுடன் ஓட முயலும் போது, வித்யாசாகர் அவர்களை சுட்டு கொன்று விடுகிறார். ஒரே உருவம் கொண்ட ஜானி, வித்யாசாகர் இருவரையும் போலீஸ் தூரத்துகிறது.

சந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு ஆதிவாசி கூட்டத்தில் பதுங்குகிறார் ஜானி. "ஆசைய காத்துல தூது விட்டு " பாடலும், அதில் வரும் நடனமும், இசையும்,எஸ். பி ஷைலஜாவின் ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது.

அதைப்போல, ஜானி என நினைத்து வித்யாசாகருக்கு அடைக்கலம் தருகிறார் அர்ச்சனா. பாமாவை போலவே எல்லா பெண்களையும் எண்ணும் வித்யாசாகர் அங்கேயே நிரந்தரமாக தங்கி, அர்ச்சனாவின் அழகையும், பணத்தையும் அனுபவிக்க முடிவு செய்கிறார். பின், கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறார். அர்ச்சனாவின் கண்ணீரும், ஜானி மீது அவர் வைத்து இருக்கும் பரிசுத்தமான அன்பும் எப்படி வித்யாசாகரின் மிருக தன்மையை அழிக்கின்றது என்பதே மீதி கதை.

"நான் உங்க ஜானி இல்லை " என்று வெளியேறும் காட்சியில் அர்ச்சனாவிடம் வித்யாசாகர் பேசும் வசனத்தில் தனது அழுத்தமான முத்திரையை பதிக்கிறார் மகேந்திரன்."நான் பார்பார் by profession , murderer by accident , இன்னைக்கு மனுஷன் உங்களாலே, thank you very much"..

இறுதி காட்சியில், வித்யாசாகர் சொன்னபடி, கொட்டும் மழையில். தனியாக கச்சேரி செய்யும் அர்ச்சனாவை தேடி வருகிறார் ஜானி. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே .." .என்று கதையின் சுகமான முடிவை ஜானகியின் இனிய குரலில், நம் மனதுக்குள் மழையாய் பொழிகிறார் இசை என்கிற இளையராஜா .

ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை. அதுதான் நம் தமிழ் சினிமா.இன்றைக்கு சினிமாவில், ஜப்பான் உட்பட உலகம் எங்கும் ரசிகர்களை கொண்டவராக, மற்ற நடிகர்கள் யாரும் நெருங்க கூட முடியாத முதல் இடத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த் .

மலையாள திரை உலகில், சர்வதேச தரத்திலான அமரம்,பரதம், வான்ப்பிரஸ்தம் போன்ற படங்களில், அந்தந்த கதாபாத்திரங்களில் எந்த அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பினை வழங்கி,வாழ்ந்து இருப்பார்கள் மம்முட்டியும், மோகன்லாலும்.

அவர்களுக்கு இணையாக தமிழில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த கூடிய ஒரே நடிகர் ரஜினி அவர்கள்தான். ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, மற்றும் ஜானி போன்ற படங்கள் அதற்க்கு சரியான உதாரணங்கள்.

சூப்பர் ஸ்டார் என்ற வெகு ஜன ஒப்பனை முகத்துக்கு பின் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறந்த யதார்த்த நடிகரின் முகம் தெரிகிறதா உங்களுக்கு?

அது,, நமது கரவொலிகளில், விசில் சத்தங்களில், கட் அவுட்களின் நிழல்களில், காணாமலே போய்விட்ட முகம்...ரஜினி அவர்களின் இன்னொரு முகம்.

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும்

இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாடல்கள் எடுப்பதில் வல்லவர். அவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் புதுமை நிறைந்ததாக இருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெறும், சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒன்றே போதும், அவரது திறமையை அறிய.


 
தூர்தர்ஷனில் காவிய கவிஞர் வாலி தனது மலரும் நினைவுகளை பதிவு செய்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரமும் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை நடத்தியவர் நெல்லை ஜெயந்தா. அந்த அருமையான நிகழ்ச்சி நூலாகவும் வெளிவந்துள்ளது. 
 
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் விழிகளில் கண்டேனே என்ற வாலியின் அற்புதமான பாடல் குறித்தும், அந்தப் பாடல் தனக்கு கற்றுத் தந்த பாடம் குறித்தும் இயக்குனர் சிகரம் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
"மதுரையில் பறந்த மீன்கொடியை உன் விழிகளில் கண்டேனே ரொம்ப அற்புதமான பாட்டு. எல்லா ஊர்ப் பெயர்களும் அதில் வரும். ஆனால் அதில ஒரு டிராஜடி ஆகிப்போச்சு. நான் ரொம்ப ரசித்த பாட்டு, ஜெமினி பிரமாதமாக நடிச்சிருப்பார். அந்தப் பாடல் இடைவேளையில் வரும். ஏற்கனவே ஒன்றரை மணிநேரம் தம்மடிக்காம தம்பிடிச்சு உட்கார்ந்திருக்காங்க. அப்ப இந்தப் பாட்டு வந்தவுடன் பாதிபேர் எழுந்து வெளியே போயிட்டாங்க. அப்போ எல்லாம் உள்ளுக்குள்ள சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருந்தது. பல தியேட்டர்களிலும் இதே நிலை.
 
"எப்பவுமே இடைவேளை வரும்போது டைரக்டர் ஜாக்கிரதையாக இருக்கணும். அங்கபோயி இந்த மாதிரி ஸ்லோ உள்ள காட்சியை வைக்காமல் இடைவேளைக்குப் பிறகு கொடுத்தால் ரசிப்பாங்க. இடைவேளை நேரத்தில் இந்தப் பாட்டை கொடுத்ததால் எழுந்து போயிட்டாங்க. கொடுத்தது என் தப்பு. ஃபோன் பண்ணி பார்த்தால் எல்லா ஊர்களிலும் இதேநிலை என்றார்கள்.  கஷ்டமா போச்சு. மதுரை ஆடியன்ஸ்கூட எழுந்து போனார்கள்னு சொன்னாங்க. சரின்னு சொல்லிட்டு அந்தப் பாட்டை எல்லா ஊர்களிலும் நீக்க சொல்லிட்டேன். 
 
"இதிலிருந்து என்ன கத்துகிட்டேன்னா... ஒரு படத்துல பாட்டு வைக்கிற இடத்தக்கூட கவனமா பண்ணணும்னு. வெறும் சீனுன்னு நான் எழுதுறேன். நான் டைரக்ட் பண்ணிட்டு போயிடறேன். பாட்டு சீன் அப்படியில்ல. பாட்டுன்னா ஒரு கவிஞர் வர்றாரு. ஒரு மியூஸிக் டைரக்டர் வர்றாரு. நான் உட்கார்ந்துக்கிறேன். அப்புறம் நடன இயக்குனர். இவ்வளவு பேரும் சேர்ந்து பண்ற உழைப்பு வீணாகிப் போயிடக் கூடாதில்லையா? அதனால ஒரு பாட்ட எந்த இடத்தில் போடணும், போடக் கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்."
 
 - இயக்குனர் சிகரத்தின் இந்த வார்த்தைகளிலிருந்து அவர் ஒரு திரைப்படத்தை, திரைப்பட ரசிகர்களின் மனநிலையை எப்படி நுட்பமாக அணுகி புரிந்து வைத்துள்ளார் என்பதை அறியலாம். 

பாடல்களை படமாக்குவதைப் போலவே அதனை எழுதி வாங்குவதிலும் தனித்துவமானவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். அதுபற்றி வாலி கூறியதை நெல்லை ஜெயந்தா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
இனி வாலியின் அனுபவம்.
"பாடல் எழுதி வாங்குவதில் பாலசந்தருக்கும் அண்ணாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நான் எம்.ஜி.ஆருக்கு எழுதின முதல் படம், நல்லவன் வாழ்வான். அண்ணாதான் டயலாக். அண்ணா வந்து, இந்தப் பாட்டில் இந்தக் கருத்தெல்லாம் வரலாம் அப்படீன்னு எழுதிக் கொடுத்திடுவாரு. உடுமலை நாராயண கவி எல்லாம் அண்ணா எழுதின வரிகளை பல்லவி ஆக்கியிருக்காங்க. அண்ணா மாதிரி பாலசந்தரும் பாட்டுல என்னென்ன வேணும்னு சொல்லிடுவாரு. பாட்டுக்கு மெட்டீரியல் தர்றதுங்கிறது அண்ணாவுக்கு பிறகு இவர்தான். இரு கோடுகள் படத்துல வர்ற புன்னகை மன்னன் பாட்டு பட்டிமன்றம் மாதிரி இருக்குன்னு சொல்றீங்க. அந்தப் பாட்டு அப்படி இருக்கணும்னு சொன்னதே அவர்தான்."
 
ஒரு படத்துக்கு ஒரு பாடலாசிரியரை பயன்படுத்தவே பாலசந்தர் விரும்புவார். அது ஏன்?
 
"ஒரு படத்துக்கு ஒரு கவிஞர்னு சொல்லிட்டா, அவர்கிட்ட முழு கதையையும் சொல்லிடுவோம். அப்பவே அவர்களும் கதைக்குள்ள வந்துவிடுவார்கள். எப்ப பாட்டு வேணும்னு நாம கேட்டாலும் உடனே எழுதித்தர முடியும். ஒருமுறை வாலி தன்னுடைய புதுக்கவிதை புத்தகம் ஒன்றை என்கிட்ட கொடுத்தாரு. அப்போ நான் அக்னி சாட்சின்னு ஒரு படம் பண்ணலாம்னு இருந்தேன். அப்போ வாலி எழுதின, நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன், என் நிழலையோ பூசிக்கிறேன், அதனால்தான் உன் நிழல் விழுந்த மண்ணைக்கூட என் நெற்றியில், நீறுபோல் இட்டுக் கொள்கிறேன் என்ற புதுக்கவிதை என் நினைவுக்கு வந்தது. 
 
"அது என்னை ஏதோ செய்தது. உடனே வாலிகிட்ட இதைக் கொஞ்சம் முன்னும் பின்னும் மாற்றி மியூசிக் பண்ணி எடுத்துக்கிறேன்னு சொன்னேன். அந்தப் பாட்டு பிரமாதமாக வந்தது. அவருடைய நிறைய புதுக்கவிதைகளை நான் அவரிடம் இருந்து திருடி என் படத்துல வச்சிருக்கேன்னு அவர்கிட்ட சொல்வேன். எனக்கு புதுக்கவிதை மேல அப்படியொரு மோகம்."
 
பாலசந்தர் படத்தில் வாலி எழுதிய அனேக நல்ல பாடல்களில் முக்கியமானது, எதிர்நீச்சல் படத்தில் வருகிற, வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இது பற்றி பாலசந்தர் பெருமிதமாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
 
"எதிர்நீச்சல் படத்தில் கஷ்டப்பட்டு ஒருத்தன் முன்னுக்கு வர ஆசைப்படுகிறான். ஒரு தன்னம்பிக்கை பாட்டு, டைட்டில் பாடலா வைக்கணும்னு கேட்டேன். கவிஞர் உடனே எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல்தான், வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். இந்தப் பாட்டைப் பற்றி இன்னொரு விஷயம் சொல்லணும். அப்போ அண்ணா அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த சமயத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார். 45 நிமிடம் பேசினார். படம் முழுவதும் பார்த்திட்டு, படம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த, வெற்றி வேண்டுமா பாட்டை யார் எழுதினதுன்னு கேட்டார். நான், வாலி எழுதினார்னு சொன்னேன். உடனே அவர், ரொம்ப நல்லா இருக்குன்னு அவர்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லச் சொன்னார்."