Thursday 21 May 2015

ஏன் இந்த பேய் மோகம்!

சமீபகாலமாக ஹீரோக்கள் ஆதீத ஆர்வம் காட்டி வருவது பேய்க்கதைகளில்தாம். சந்திரமுகியில்  ரஜினி செவ்வனே துவக்கி வைத்த இந்தப் பாதையில் தற்போது பெரும்பாலான ஹீரோக்கள் வரிசை கட்டத் துவங்கிவிட்டார்கள்.சரி பேய்ப் படங்களை அந்த அளவிற்கு ரசிக்கிறார்களா என்றால் ‘காஞ்ஜூரிங்’ படத்தையே கப்சா விடுறாங்க பாஸ் ரேஞ்சுக்கு சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் கலாய்க்க ஆரம்பித்து விட்டது.



என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமாவுக்கு? சிம்பிள் பட்ஜெட், ஒரு பங்களா, லைட் மேன் செலவு கூட குறைவுதான். வெறும் 4 பேர் கொண்ட குழுவை வைத்துக்கொண்டே இரண்டு மணி நேரப் படத்தை ஓட்டி விடலாம். இதுவே முதல் காரணம் என்கிறார் தமிழ் சினிமாவின் முக்கியஸ்தர் ஒருவர்.சரி பேய் என்பதே நம்மை சீட்டில் உறைய வைக்க எடுக்கப்படும் படங்கள் தான். ஆனால் அந்த வகையில் கடைசியாக வெளியான ’ஈவில் டெட் 2013’, ‘அன்னாபெல்’, ’ஓஜா’ என பல ஹாலிவுட் படங்களே அதில் பல்புதான் வாங்கியது. நமக்குத் தெரிந்து நம்மைச் சிறிதே ஆட்டிய படங்கள் ‘எக்ஸார்சிஸ்ட்’, ‘க்ரட்ஜ்’;’தி ரிங்’, ‘இட்’ , என மிகச்சில படங்களே உள்ளன. அந்தப் படங்களையும் இப்போது டிவிகளில் பார்க்கையில் சிரிப்பு தான் வருகிறது.

இவர்களைப் பார்த்து பாடம் கற்றார்களோ என்னவோ காமெடி ட்ராக்கில் பேயை வைத்து கிண்டல் செய்ய துவங்கிவிட்டார்கள் கோலிவுட் வாசிகள். தொட்டா பேய் வரும், கட்டிப்பிடிச்சா பேய் வரும், இப்படிப் பேய்கள் பல விதம். முன்பெல்லாம் பேய்ப் படங்கள் என்றாலே புதுமுக நடிகர்கள் மட்டுமே ஹீரோக்களாக வருவார்கள். பின்னர் நிழல்கள் ரவி, மோகன் என படையெடுத்தார்கள். ’சந்திரமுகி’ மூலம் ரஜினியே பேய்ப் பட ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அவ்வளவு தான் லாரன்ஸ், ஆதி, நந்தா, சுந்தர் சி, வினய், ஜி.வி.பிரகாஷ்,  அருள் நிதி, சிபிராஜ் இப்போது சூர்யா வரை இந்த பேய்ப் பட மோகம் தலை விரிக்கத் துவங்கிவிட்டது.

சரி இப்படி ஒரே நேரத்தில் பேயை வைத்து எல்லாரும் ஒரு காட்டு காட்டினால் கூட ஓகே , ஊரே பயப்படும் ஒரு கான்செப்டை காமெடி பீசாக அல்லவா மாற்றிவிட்டனர். அப்படியென்றால் பேய் பயம் மொத்தமாக போய் விட்டதா, இருட்டைக் காட்டியே நம்மை பயமுறுத்திய சினிமாக்கள் எங்கே? ஒவ்வொரு சீனையும் ஐஸ் க்ரீம் சாப்பிடக் கூட மறந்து பார்த்துக்கொண்டிருக்க ஐஸ்க்ரீம் உருகி கீழே வழிந்தோடிய காலங்கள் எங்கே? என ஏங்க வைத்துவிட்டனர் சினிமா படைப்பாளிகள். ’காஞ்சனா’ பார்த்து கதறிய குழந்தைகள் இப்போது தங்களது அப்பா , அம்மாவிடம் ஹையோ! இது பொம்மை, என சிரிக்கத் துவங்கிவிட்டனர். ’ வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாட்டா சொல்லி வைப்பாங்கன்னு’ சொன்ன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தோட வரிகள் பொய்யாகி வருகிறது என்பதுதான் உண்மை. நல்லது நடந்தா சரி.

No comments:

Post a Comment