Tuesday 3 March 2015

எங்கு போனாலும் ஆசை போகாது

சந்திரோதயம் என்ற திரைப்படம் 1966இல் வெளிவந்தது. எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, ஜெயலலிதா, பாரதி, நம்பியார், அசோகன், நாகேஸ், மனோரமா, பண்டாரிபாய் என பிரபல்யங்கள் நடித்திருந்தார்கள்.

அது தினத்தந்தி ஆசிரியர் ஆதித்தனாரோடு அறிஞர் அண்ணாவும் தி.மு.கவும் முரண்பட்டிருந்த காலம்.

ஒரு பத்திரிகை ஆசிரியர் எப்படி இருக்கக் கூடாது, எந்தவித செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்ல வந்த திரைப்படம்தான் சந்திரோதயம். அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த எம்.ஆர்.ராதாவின் பாத்திரம் ஆதித்தனாரையே குறிவைத்து எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் இருந்தன. மற்றும்படி எம்.ஜி.ஆருக்கான மசாலாக்களோடு படம் இருந்தது.
சந்திரோதயம் திரைப்படத்தில் எனக்குப் பிடித்தது அதில் இடம் பெற்ற பாடல்களே. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர்கள் பிரிந்த நேரம்.

இசையில் விஸ்வநாதன் தனித்து நின்று அதிக ஈடுபாடு காட்டியிருப்பார். பாடல்கள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. சந்திரோதயம் படத்தில் கதையென்று பெரிதாக எதுவுமே இல்லை. ஆனால் பாடல்கள் மட்டும் அசத்தல். எங்காவது அந்தப் படப் பாடல்கள் ஒலிக்கும் பொழுது, செய்து கொண்டிருக்கும் வேலைகளை அப்படியே விட்டு விட்டு பாடல்களுடன் ஒன்றி விடுகிறது மனது.

சந்திரோதயம் திரைப்படத்தில் எழுத்தோட்டத்துடன் ஆரம்பிக்கிறது சீர்காழி கோவிந்தராஜன் பாடல். 'புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரல் மேலும் உணர்ச்சியைக் கூட்டி எம்மைக் கட்டிப் போட்டு விடும்.

'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?', 'எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்' என்று ஆளை இழுத்து இருத்தி வைத்துக் கேட்க வைக்கும் பாடல்கள் அந்தப் படத்தில் இருக்கின்றன. ஆனால் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட இன்னும் ஒரு பாடல் அந்தப் படத்தில் இருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த பாடல் அது. 'காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி' என்ற பாடலே அது. சீர்காழி கோவிந்தராஜனும், ரி.எம் சௌந்தரராஜனும் இணைந்து பாடி இருப்பார்கள். பாடல் வரிகள் கவிஞர் வாலி. மேடைப் பேச்சுக்களிலேயே கவிஞர் வாலியிடம் நக்கலும், நகைச்சுவையும் இருக்கும். இங்கே பாடலிலும் அது இருக்கிறது.

வாலியின் நகைச்சுவைப் பாடல்கள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக 'அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா..', 'வரவு எட்டணா செலவு பத்தணா..', 'சேதி கேட்டோ சேதி கேட்டோ..' என்று பலதைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எம்.ஜி.ஆர் படங்களிலும் நகைச்சுவைப் பாடல்கள் இருந்திருக்கின்றன. அப்படி இடம்பெறும் நகைச்சுவைப் பாடல்களை நகைச்சுவை நடிகர் பாடுவது போன்றே அமைத்து இருப்பார்கள். சந்திரோதயம் திரைப்படத்தில் அது விதிவிலக்கு. இங்கே எம்.ஜி.ஆரும், நாகேசும் இணைந்து நகைச்சுவையாகப் பாடுவதுபோல் அமைத்திருந்தார்கள். கூடவே மனோரமாவும் நடித்திருந்தார். அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடலாகவும் இது இருந்திருக்கிறது.

<p>எங்கு போனாலும் ஆசை போகாது</p>
https://www.youtube.com/watch?v=A1UhTax2liY

எம்.ஆர்.ராதா நகைச்சுவைக் காட்சியில் நடிக்கும் பொழுது சிலசமயங்களில் இறுக்கமாக, ஆணவமாக நின்று அதிகார தோணையில் கட்டளை இடுவது போல் தனது நகைச்சுவையை வெளிப்படுத்துவார். இன்னொரு சமயம் தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்து ஏளனமாகப் பேசி குரலை உயர்த்தியும், தாழ்த்தியும் வசனத்தின் உள்ளே பொடி வைத்து நகைச்சுவையைக் காண்பிப்பார்.

பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஆர்.ராதாவிற்கு பண்ணையார் வேடம். கோவிலில் சாமி கும்பிடுவது போல் ஒரு காட்சி இருக்கும். நிஜ வாழ்க்கையில் எம்.ஆர்.ராதாவோ கடைந்தெடுத்த நாத்திகர். சினிமாவிலும் நடிக்க வேண்டும். தனது கொள்கையில் பிறளவும் கூடாது என்பதற்காக சாமி கும்பிடும் பொழுதே நகைச்சுவையைக் காண்பிப்பார். பொன்னார் மேனியனே என்று தேவாரம் பாடும் பொழுது தேவாரப்பாடலின் இடையில் தனக்கே உரித்தான பாணியில் வசனம் ஒன்றைப் பேசி இருப்பார்.

'அப்பனே நாளைக்கு புது நெல் போரடிக்கிறோம். பலன் ஒண்ணுக்கு நூறாய் கிடைச்சால்
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைப்பேனோ'
என்று தேவாரத்தைப் பாடி முடிப்பார்.

https://www.youtube.com/watch?v=rmRlWmVH-H8

பலே பாண்டியாவில் சிவாஜியுடனான 'மாமா மாப்பிளே' பாடலில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பு அசத்தல். இந்தப் பாடல் காட்சியையும், அடுத்த வீட்டுப் பெண் படத்தில் வரும், 'கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே..' பாடல் காட்சியையும் பிரதி செய்து, இரண்டையும் கலந்து 'மாமா நீ மாமா..' என்ற ஒரு பாடல் காட்சியை சுந்தர்.சி தனது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனையும், கவுண்டமணியையும் நடிக்க வைத்து படமாக்கி இருந்தார். ஆனாலும் அடுத்தவீட்டுப் பெண்ணில் தங்கவேலுவும், ரி.ஆர்.ராமச்சந்திரனும், பலேபாண்டியாவில் எம் .ஆர். ராதாவும், சிவாஜி கணேசனும்தான் உள்ளத்தை அள்ளிச் சென்றவர்கள்.

வழமையாக நாகேசுக்கு ஏ.எல்.ராகவன்தான் பாடலுக்கான குரல் தருவார். ஏ.எல்.ராகவன் குரலில் ஒரு இனிமை குழைந்து இருக்கும். ஆரம்பத்தில் நல்ல நல்ல மெலடிகளை தன் குரலில் குழைத்துத் தந்த ஏ.எல்.ராகவன் பின்னாளில் நகைச்சுவையான பாடலுக்குள் தன்னை அடக்கிக் கொண்டார்.

தி.மு.கவை விட்டு கவிஞர் கண்ணதாசன் பிரிந்து சென்ற பொழுது, அறிஞர் அண்ணா கண்ணதாசனுக்காக சொன்ன வார்த்தைகள் 'எங்கிருந்தாலும் வாழ்க'
அண்ணா சொன்ன வார்த்தைகளை முதலாகக் கொண்டு கவிஞர் கண்ணதாசன் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்திற்கு எழுதிய பாடல்தான் 'எங்கிருந்தாலும் வாழ்க.. உன் இதயம் அமைதியில் வாழ்க..'. இந்தப் பாடலுக்கு அற்புதமாக அமைந்தது ஏ.எல்.ராகவனின் குரல்தான்.

கசடதபற வல்லினமாம், ஙஞணநமன மெல்லினமாம், யரலவழள இடையினமாம் என்று 'அன்று ஊமைப் பெண்ணல்லவோ இன்று பேசும் பெண்ணல்லவோ...' என்ற பாடலில் தமிழும் சொல்லித் தந்தவர்தான் இந்த ஏ.எல்.ராகவன். இவரது குரல் எம்.ஆர்.ராதாவுக்கும் பொருந்திப் போயிருந்தது.
இருவர் உள்ளம் என்ற திரைப்படம். எழுத்தாளர் லக்சுமியின் பெண்மனம் என்ற கதையை வைத்து கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்கராவ், பி.சரோஜாதேவி, ரி.பி.முத்துலக்சுமி நடித்து 1963இல் வெளிவந்த திரைப்படம்.

'பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்',
'கண்ணெதிரே தோன்றினாள், கனிமுகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்',
'இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா?',
'நதியெங்கே போகிறது கடலைத்தேடி'
'அழகு சிரிக்கிறது.. ஆசை துடிக்கிறது'
'ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய்?'
என்று ஏகப்பட்ட இனிமையான பாடல்கள் அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன. கே.வி. மகாதேவன் இசைக்கு, பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார். நான் இங்கே குறிப்பிடவருவது அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவைப் பாடலையே.

இருவர் உள்ளம் படத்தில் ஆறு பிள்ளைகளுக்கு அப்பாவாக எம் ஆர் ராதா நடித்திருந்தார். எம்.ஆர். ராதாவுக்கு மனைவியாக ரி.பி.முத்துலட்சுமி நடித்திருந்தார். திரைப்படத்தில் இருவரும் இணைந்து பாடுவது போல் ஒரு தாலாட்டுப் பாடல் இருக்கும்.

'புத்திசிகாமணி பெற்ற பிள்ளை இது புன்னகை செய்யுது சின்னப்பிள்ளை..' என்பதே அந்தப் பாட்டு.

அந்தப் பாட்டின் இடையில் 'அசட்டுப்பய பிள்ளை ஆராரோ' என்ற வரி வரும். ஒரு தந்தையே தன் மகனுக்கு தன்னை அசடன் என்று சொல்லி தாலாட்டுப் பாடுவது ரசிக்கக் கூடியதாக இருந்தது.

காசி ராமேஸ்வரம் போய் ஆறு குளம் எல்லாம் குளித்து வந்தாலும் மனிதனுக்கு ஆசை என்பது போகாது என்பதை பாடலில் நோகாமல் சொல்லி இருப்பார்கள். எம் ஆர் ராதா தான் இப்படியான வசனங்களுக்குப் பொருத்தமானவர் ஆனால் பாடலில் ரி.பி.முத்துலட்சுமி சொல்வது போல் அமைந்திருக்கும்.

ஏ.எல்.ராகவன், எல்.ஆர் ஈஸ்வரி இணைந்து பாடிய இந்தப் பாடலும் அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டதுதான்.
https://www.youtube.com/watch?v=YYto4UqG46g

No comments:

Post a Comment