Sunday, 24 June 2018

கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்

M.G.R. -க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.



எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

தாழையாம் பூ முடிச்சு.. தடம் பார்த்து நடை நடந்து.. இது யாரை நினைத்து கவியரசர் எழுதினார் தெரியுமா?

கவிஞர் கண்ணதாசன் கலையுலகத்திற்கு வழங்கிய பாடல்கள் அனைத்துமே அற்புதம்தான்.
ஆனால் அவற்றில் சில பாடல்கள் தன் குடும்பத்தினரை மையப்படுத்தியும், மனதில் வைத்தும் எழுதினார் என்று கேள்விப்படும்போது கவிஞரின் தன் குடும்பத்தினரிடம் அளவு கடந்த பிரியம் எவ்வளவு வைத்திருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.
கண்ணதாசனின் மூத்த மகள் அலமேலு கண்ணதாசன் அதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். படியுங்கள் வாசகர்களே.

பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி


நான் மூத்த பெண் என்பதால், என் மேல ரொம்ப பாசமா இருப்பாரு. என்னை டாக்டராக்கனும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. அது முடியாம போச்சு. எனக்கு கல்யாணம் செய்யறதுக்காக அப்பா மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தார். அந்த சமயத்தில் எழுதிய பாட்டுதான் "பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி" என்ற பாடல். அந்த பாட்டை எழுதிமுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அப்பா என்னிடம், உனக்கு சீக்கிரமா கல்யாணம் நிச்சயம் ஆயிடும்"ம்மா என்றார். அது மாதிரியே நிச்சயமும் ஆகி கல்யாணமும் செஞ்சு வச்சார். எங்களுக்கு நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொடுப்பார்.

என் பையன் மேல அவ்ளோ ஆசை


என் 2-வது பையனுக்கு அவருடைய பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு அப்பா சொன்னார், "நீ கண்ணதாசன்னு வெச்சுக்கோ. ஆனா கிருஷ்ணர் அடிக்கடி என் கனவில வர்றார். அதனால் நீ கிருஷ்ணா"னுதான் கூப்பிடணும் னு சொன்னார். எவ்வளவு பெரிய மீட்டிங்கா நடந்துட்டு இருந்தாலும் சரி, என் பையனைதான் மடிமேல தூக்கி வச்சிப்பார். அவனுக்கு பத்மா சேஷாத்ரி ஸ்கூல்லகூட அப்பாதான் சீட் வாங்கி கொடுத்தாரு. அவ்வளவு ப்ரியம் அவன்மேல.

தாழையாம் பூ முடிச்சு..


"தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா"ன்னு ஒரு பாட்டு வருமே.. அது எங்க அம்மாவுக்காகவே எழுதின பாடல். எங்க அம்மா பொன்னம்மா. எங்க அம்மாவுக்காக ஒரு கவிதை கூட எழுதியிருக்காரு. அப்பாவுக்கு எங்க அம்மா சமையல்ன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்மா செஞ்ச தக்காளி பச்சடியும், வெல்ல பணியாரத்தையும் ரொம்ப ருசிச்சு சாப்பிடுவார். அது கவிஞரின் கவிதை தொகுப்பில் கூட வெளிவந்திருக்கு. அப்பாவோட அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சிட்டு என்கிட்டேயே நிறைய பார் பாராட்டுவாங்க. எழுத்தாளர் லட்சுமிகூட என்னிடம் சொன்னாங்க "எப்பவுமே ஒரு எம்.எஸ்,விஸ்வநாதன்தான்.. ஒரு சுசிலாதான்.. ஒரு கண்ணதாசன்தான்... ஒரு டி.எம்எஸ்.தான்"னு.

நிறைய பாட்டுக்களை எழுதிட்டு வந்து வீட்டில எங்ககிட்ட அதை பத்தி சொல்லுவார். அம்பிகை அழகு தரிசனம் என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதேபோல, கந்தசஷ்டி கவசம் போலவே கிருஷ்ண கவசம் எழுதியிருப்பார் அப்பா. அதுவும் நான் அடிக்கடி விரும்பி படிக்கும் புத்தகம். நாளாம் நாளாம் திருநாளாம், கங்கைகரைதோட்டம் இந்த பாட்டெல்லாம் ரொம்ப விரும்பி அடிக்கடி கேப்பேன். அவர் உயிரோட இருந்திருந்தா, இலக்கியங்கள் நிறைய எழுதியிருப்பார். அப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்க கூடாதான்னு அடிக்கடி நினைச்சிப்போம்.

Tuesday, 12 June 2018

நாட்டிய பேரொளி பத்மினி..

கலையே குடும்பம், கலையே வாழ்க்கை, கலையே மூச்சு, கலையே சகலமும் என்று வாழ்ந்தவர்  நாட்டிய பேரொளி பத்மினி .


சிறந்த நடனமங்கையாக இருந்தவரை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். தாய்மொழி மலையாளம் என்றாலும் இன்றைய தமிழர்களால் கூட பேச முடியாத அளவிற்கு நீண்டநெடிய வசனங்களை மனப்பாடம் செய்து - ஏற்ற இறக்கத்துடன் - பிசிறில்லாமல் - உச்சரிப்பு மாறாமல் - உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய அவரது அற்புதமான ஆற்றல் சாதாரணமானதல்ல.
இன்றைய இரண்டாம் தர, மூன்றாம்தர நடிகைகள் போல கதாநாயகிகள் என்று சொல்லிக் கொண்டு ஆபாச படமாகவும், அரை நிர்வாண ஓடமாகவும் - பின்னணி குரலில் ஒழுங்காக வாயசைக்கக்கூட முடியாமல் நடனம் என்ற பெயரில் வலிப்பு வந்தவர்போல் பேயாட்டம் போட்ட நடிகை அல்ல பத்மினி.
பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி என்று இந்தியாவின் பெரும்பான்மையான நடன உத்திகளை நுட்பமாக பயின்றவர். பரதம் உள்ளிட்ட அனைத்து நடனங்களையும் கற்றுத்தேர்ந்து கதாநாயகியாகவும் நடித்த நடிகைகள் இரண்டே பேர்கள்தான். ஒருவர் பத்மினி, இன்னொருவர் வைஜெயந்திமாலா.

சபாஷ் சரியான போட்டி!





"வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தில் இவர்கள் இணைந்து அரங்கேற்றிய போட்டி நடனம் வெள்ளித்திரையில் வரலாறாகிவிட்டது. பாடலின் நடுவே வரும் "சபாஷ்... சரியான போட்டி" என்ற அந்த வசனம்கூட இன்றைய இளையதலைமுறைகளால் பெரிதும் ரசிக்கப்படுபவை. இனி அது போன்ற நடனத்தை எக்காலத்திலும் நாம் பார்க்க முடியாது. இந்திய படங்களிலேயே மிகச்சிறந்த போட்டி நடனம் எது என்றால் இந்த பாடலை துணிச்சலோடும் கர்வத்தோடும் பெருமையோடும், சொல்லலாம். அமரதீபம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி, சித்தி, புனர்ஜென்மம், தில்லானா மோகனாம்பாள் போன்ற பல படங்கள் பத்மினியின் பண்பட்ட நடிப்பில் காவியங்களாயின.

தபால்தலை வெளியீடு


அதனால்தான் அவருக்கு தபால் தலையை வெளியிட்டு சோவியத் யூனியன் பல்லாண்டுகளுக்கு முன்பே பெருமைப்படுத்தியது. ஒரு கலைஞர் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் கலைஞர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் பத்மினி. தான்தோன்றித்தனமாக உளறிக் கொட்டாமல் - காட்டுக் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்யாமல் - அரை வேக்காட்டுத்தனமாக அலட்டிக் கொள்ளாமல் தன்னடக்கம் கொண்ட நடிகையாக அவர் வாழ்ந்தார். அரசியல் ரீதியாக, ஒரே சமயத்தில் கருணாநிதியையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மதித்து போற்றிய அவரது பெருந்தன்மையை இன்றைய திரைப்பட நடிகைகள் கற்றுக் கொள்வது அவசியம்.

பக்குவப்பட்ட நடிகை


விரும்பி நேசித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ள முடியாமல். அவனது தந்தையையே மணந்து வாழ வேண்டிய அவலத்திற்கு நடுவில் - காதலனே மகனாக திரும்பி வந்த பிறகு - ஒரு பெண்ணின் இதயம் எந்த அளவிற்கு வேதனையால் வதைபடும் என்பதை "எதிர்பாராதது" படத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும் பதமினியின் நடிப்பு அபாரமானது.கணவனின் சந்தேகத்திற்கு இரையாகி தன் மீதான பழியை துடைக்க போராடும் ஒரு பெண்ணின் மன உணர்வு எவ்வாறு இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது .
"தெய்வப்பிறவி".நாட்டியத்தையும் நடிப்பையும் சரிபாதியாக கலந்து ஒரு சிறந்த பொழுது போக்கு படைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள்.. பல படங்களில் குணச்சித்திர நடிப்பை பதித்திருந்தாலும், தன்னால் கதாநாயகியாக மட்டுமல்ல பாட்டியாகவும் நடித்து தான் ஒரு பக்குவப்பட்ட நடிகை என்பதை "பூவே பூச்சூடவா" படத்தில் நிரூபித்தார்.

எந்த நிலையிலும் மரணமில்லை


கோடி கோடியாய் சம்பாதித்தாலும் - சொர்க்க பூமி என்று போற்றப்படும் அமெரிக்காவிலேயே வாழும் வாய்ப்பு கிடைத்தாலும் - தாய் நாட்டில்தான் வாழ்வேன் - தமிழ்நாட்டில்தான் சாவேன் என்று கூறி அதேபோல தமிழ் மண்ணில் தன்னை கரைத்து கொண்ட தன்னிகரற்ற தேசபக்தர்தான் நடிகை பத்மினி. அவர் மறைந்தபோது நடிகர் கமலஹாசன் தனது இரங்கல் செய்தியில், "தொலைக்காட்சிகள் ஒரு வரப்பிரசாதம். பத்மினி அம்மா இறந்து போனார்கள் என்கிற உணர்வு கூட இல்லாமல் அவர் நடித்த படங்களையும், ஆடிய நடனங்களையும் நாம் பார்.த்து கொண்டு இருக்கலாம்" என்றார்.
மக்கள் மனதில் ஆழப்பதிந்து போன யாராக இருந்தாலும் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடியபடி "எந்த நிலையிலும் மரணமில்லை"தான். இது நாடு போற்றும் நாட்டிய பேரொளி பத்மினிக்கும் பொருந்தும்.

Thursday, 17 May 2018

``தன் இறுதிக்காலத்தை முன்பே உணர்ந்த சித்தர் பாலகுமாரன்" - நெகிழும் எழுத்தாளர்கள்!

ழுத்து சித்தர் பாலகுமாரன் காலமாகிவிட்டார். இது அவரது வாசகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனது எழுத்தின்மூலம் ஆயிரக்கணக்கான இதயங்களைக் கொள்ளையடித்தவர்.  வாழ்க்கையை அணுகுவதில் பலருக்கு முன்மாதிரியாக இருந்தவர். 


``இலக்கியத்தில் தொடர்ச்சியாக 40 ஆண்டுகள் இயங்கியவர் பாலகுமாரன். பொதுவாக ஒரு 10 ஆண்டுகள்தான் ஒரு எழுத்தாளர் தீவிரமாக எழுதுவார். அடுத்த பத்து ஆண்டுகளில் அந்த வீச்சு குறைந்துபோய்விடும். அவர்களுடைய வாசகப் பரப்பே இடம் மாறிப்போய்விடும். இந்தச் சமூக வாழ்க்கையில் அதே முனைப்போடு ஒருவர் தொடர்ந்து இயங்குவது மிக மிகக் கடினம். ஆனால், பாலகுமாரனுடைய வீச்சு நாற்பது ஆண்டுகாலம் தொடர்ச்சியாக இருந்தது. அவருடைய முதல் படைப்பான ‘மௌனமே காதலாக’,  தொடங்கி, கடைசியாக அவர் எழுதிய பத்திகள் வரைக்கும் எழுத்தின் மீதும் சமூகப் பரப்பின்மீதும் செலுத்திய ஆதிக்கம் குறையவேயில்லை. அதுதான் பாலகுமாரனின் மிகச் சிறந்த ஆளுமையாக நினைக்கிறேன். இனியொரு நாற்பது ஆண்டுகள் இப்படியொரு எழுத்தாளர் நம் சமூகத்துக்கு கிடைப்பாரா? என்பது தெரியவில்லை. 
1970-ம் ஆண்டுகளிலேயே எழுதத் தொடங்கியவர் பாலகுமாரன். அந்தத் தருணத்தில் தீவிர இலக்கியத் தன்மையோடு 'கணையாழி' இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் எழுதுபவர்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். அந்தப் பத்திரிகை சார்பில் மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். அப்போது இளைஞர்களாக இருந்த பாலகுமாரன், சுப்பிரமண்ய ராஜு போன்றவர்கள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்று, அதன் வழியாக எழுத்துலகில் நுழைந்தார்கள். இதையெல்லாம் பாலகுமாரனே தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அதையெல்லாம் வாசித்துதான் என்னைப் போன்ற பலர் 1990-களில் இலக்கியத்துக்கு வந்தார்கள். கணையாழியின் வழியே, மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனால் வளர்த்தெடுக்கப்பட்டவர் பாலகுமாரன். 'அடுத்தது என்ன?' என்ற கேள்வி தோன்றியபிறகுதான் அவர் வெகுசன பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். ‘ஆனந்த விகடன்’ போன்ற இதழ்களில் வெளியாகும் அவரது படைப்புகள் வாசகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டன. 
சமூக இறுக்கங்களை உடைத்தெறிந்த எழுத்து பாலகுமாரனுடையது. பெண்ணியம் சார்ந்து, அவர்களுடைய வெளிப்பாடுகள் சார்ந்து நிறைய எழுதினார். அது தன்னியல்பாகவே அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. பெண்களுக்கான விடுதலை உணர்ச்சியை அப்போதே விதைத்தார் பாலகுமாரன். 

இப்போதெல்லாம் காதல், இயல்பான ஒரு சமூக விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் காதல் என்பது கெட்டவார்த்தையாக, சமூகக்கோளாறாக, நோய்மையாகக் கருதப்பட்டது. காதலிப்பவர்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவங்கள் எல்லாம் நடந்தேறின.  அதுகுறித்த பல மனத்தடைகளை தன் எழுத்தின் மூலம் உடைத்தெறிந்து, சமூகத்துக்குப் புத்துணர்ச்சி அளித்தவர் பாலகுமாரன். 
மறைந்த பிரபல இயக்குநர் பாலசந்தரிடம், ‘புன்னகை மன்னன்’, ‘சிந்து பைரவி’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஒரு படத்தின் திரைமொழி என்பது சொற்கள் தான். ஒரு படத்தில் பாலகுமாரன் வசனம் எழுதினால், அந்தப் படமே அவருடைய பாணிக்கு மாறிவிடும். இயக்குநரின் பாணியில் இருக்காது. ‘குணா’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘மன்மதன்’, ‘உல்லாசம்’ போன்ற படங்களில் அதை நீங்கள் கவனிக்கலாம். பாட்ஷாவில் “நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி..”, காதலனில் “சந்தோஷமோ.. துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு.. நிதானத்துக்கு வருவ..” என அவர் எழுதிய எல்லா வசனங்களிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். காதலர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவரின் நாவலில் வருகிற பாத்திரங்கள் பேசுவது போலவே இருக்கும். திரைமொழியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்த எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரன்தான். 
தமிழின் தொடர்ச்சியான ஒருபெருங்கன்னி அறுந்துவிட்டது. அது பேரிழப்பு தான். அவர் இன்னும் பத்து ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கலாம். தமிழுக்கு இன்னும் நிறையப் படைப்புகள் கிடைத்திருக்கும்” என்று நெகிழ்ச்சியாக பேசுகிறார் மகுடேசுவரன் 


பாலகுமாரனுக்கும் தனக்குமான நட்பு பற்றி பேசுகிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா..
``யோகியைச் சந்தித்ததில் இருந்தே பாலகுமாரனின் பாதை வேறு மாதிரி ஆகிவிட்டது. வாசகர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவருடைய,  'இதுபோதும்' என்ற நூலை எனக்கு வாசிக்கக் கொடுத்தார். 'இந்த நூலைக் கண்டிப்பாக வாசித்தே ஆகணும்'னு என்னிடம் கேட்டுக்கொண்டார். யோகியிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அந்தப் புத்தகத்தில் சாரமாகக் கொடுத்திருப்பார். அவர் எழுதியதில் முக்கியமான புத்தகம் அது. 
தன்னுடைய இறுதிக்காலத்தை முன்கூட்டியே உணர்ந்த சித்தர் அவர். போன வருடம் முகநூலில் தன்னுடைய இறப்பு குறித்து, ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். எல்லா மனிதனையும் சமமாகப் பாவித்தவர். பெண்கள், பாலகுமாரனிடம் பழகும்போது, கிடைக்கிற சுதந்திரத்தை, வேறு யாரிடமும் உணரமுடியாது. நிபந்தனையற்ற அன்பு கொண்டவர். அன்பின் சொரூபம் அவர். அதனால்தான் பெண்களுக்கு அவரை அதிகம் பிடித்திருந்தது.

சினிமாவில் வித்தியாசமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியிருக்கிறார். ‘நாயகன்’, ‘பாட்ஷா’வை எல்லோருக்கும் தெரியும். ‘புதுப்பேட்டை’ போன்ற ஹார்ட் பிரேக்கிங் படத்துக்கும் அவர் எழுதியுள்ளார். அவருடைய இடத்தில் இருந்து,  தரைமட்டமான ஒரு இடத்துக்கு எழுதியிருப்பது ஆச்சர்யமான விஷயம். வசனத்தில் இளங்கோவன், கருணாநிதிக்கு இணையாக எழுதியவர் பாலகுமாரன். 

சினிமாவில் வசனத்தை மிகுந்த உயரத்துக்குக் கொண்டுபோனதில் அவரின் பங்கும் அளப்பரியது. இலக்கியத்தில் எதிர்காலம் குறித்து எழுதியவர் சுஜாதா. இலக்கியத்தை வரலாறு நோக்கி நகர்த்தியவர் பாலகுமாரன். அவரைப்போல அன்பான மனிதனைப் பார்ப்பது கஷ்டம்!” என்று, கண்ணீர் தளும்ப பேசினார் எழுத்தாளர் சாரு நிவேதிதா
.

Sunday, 13 May 2018

அஜித் குமார்: சில பதிவுகள்....

பிறந்தநாள் : 01 May 1971


வயது : 47






அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியபடுகின்றார்.

 அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர், 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். 

பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.


2014-ம் ஆண்டு புனே முதல்  சென்னை வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.

Saturday, 17 February 2018

சிவகார்த்திகேயன் வாழ்க்கை

தனியாக பவுலிங் போட்டு, தனியாக பேட்டிங் செய்து..., ஈஸியா ஜெயிச்சாரா சிவகார்த்திகேயன்?



ஒருவர் மிக வேகமாக வளர்ந்தால் ஒன்று சந்தேகம் வரும் அல்லது வயிற்றெரிச்சல் வரும். சிவா விஷயத்தில் இரண்டாவதுதான் அதிகம் நடந்தது. ஆனால் உண்மை என்னவென்பது சிவகார்த்திகேயனின் நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும்.
2012 சிவா எதிர் நீச்சல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 3, மெரீனா, மனம் கொத்தி பறவை என்று நடிகராக ஃபார்மாகிவிட்டார். ஆனாலும் இந்த சமூகம் அதுவரை ஒரு ஹீரோ மெட்டீரியலாக ஏற்றுக்கொள்ளவில்லை. சிவாவை ஜாலி பேட்டி எடுங்கள் என்று சொன்னார்கள் வார இதழில். கேள்விகளை தயாரிக்கும்போது 'நீங்க ஆர்யா மாதிரி ப்ளேபாயா? இல்லை ராமராஜன் மாதிரி கவ்பாயா?' என்று ஒரு கேள்வி ஆசிரியர் குழுவிடம் இருந்து சேர்க்கப்பட்டது. கேட்டதற்கு சிவா 'ரெண்டுமே வேண்டாம். நான் ஏரியால ஏதோ புகை போடற பாய்னு வெச்சுக்குங்க...' என்றார்.


சமீபத்தில் சிவாவை ரஜினியுடன் பார்த்தேன். 'இப்போதைய சூப்பர் ஸ்டார் ப்ளஸ் அடுத்த சூப்பர் ஸ்டார் ரெண்டு பேர் கூடவும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன்' என்றேன். 'நமக்கு சூப்பர் ஸ்டார்கற பேர்லாம் வேண்டாம்ணே... அது அவர் ஒருத்தர்தான். எனக்கு சிவகார்த்திகேயன்கற பேர் போதும்' என்றார். ஆக, அவர் மாறவில்லை. நாம்தான் மாறிக்கொண்டிருக்கிறோம். சிவாவை சுற்றிலும் நின்று பார்க்கும் நாம் அவரது வளர்ச்சியை வைத்து அவரது கேரக்டரை பற்றிய பிம்பத்தை மாற்றிக்கொள்கிறோம். ஆனால் அது உண்மையில்லை.
இப்போதைய நிலையில் ஓப்பனிங்தான் ஒரு ஹீரோவின் பொசிஷனிங்கை தீர்மானிக்கிறது. தமிழ்நாட்டில் ஓப்பனிங் இருக்கும் ஹீரோக்கள் நான்கே பேர் தான். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன். எனவேதான் இந்த நான்கு பேரின் படங்களை மட்டும் எம்ஜி எனப்படும் மினிமம் கேரண்டி முறையில் வாங்கத் தயாராக இருக்கின்றனர் தியேட்டர் அதிபர்கள்.



இந்த வளர்ச்சிக்கு பின்னால் எத்தனை அவமானம், எத்தனை நிராகரிப்புகள், எத்தனை வேதனைகள் இருக்கிறது என்பது சிவாவை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

சிவா செடியாக இருக்கும்போது வளர வேண்டும் தண்ணீர் ஊற்றியவர்களை விட கருக வேண்டும் என்று வெந்நீர் ஊற்றியவர்கள்தான் அதிகம். ஆனால் எல்லோரையும் சிறு புன்னகையோடே கடந்துகொண்டிருக்கிறார். சிவாவின் வளர்ச்சிக்கு தான்தான் காரணம் என்று மார் தட்டிக்கொள்ள துடிப்பவர்கள் கூட சிவாவின் ஏதாவதொரு கட்டத்தில் அவரை வளரவிடாமல் செய்ய துடித்திருக்கிறார்கள். யாரிடமும் பகைமை காட்டாமல் பழி வாங்கத் துடிக்காமல் ஒரு மனிதன் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி உழைத்தது மட்டும்தான் சிவாவின் வளர்ச்சிக்கு காரணம்.
அப்பாவுக்கு சிறையில் பணி என்பதால் குற்றவாளிகளை அவர்களது தண்டனை காலத்தில் பார்த்து வளர வேண்டிய சூழல் சிவாவுக்கு. குற்றவாளிகளை தண்டனை காலத்தில் பார்ப்பது எவ்வளவு பக்குவத்தை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு ஊரில் நண்பர்கள் செட் ஆவதற்குள்ளாகவே அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனால் நண்பர்கள் இல்லாமல் பல நேரம் தனியாக பவுலிங் போட்டு, தனியாக பேட்டிங் செய்து, தனியாக ஃபீல்டிங் செய்து விளையாண்டிருக்கிறார். பதின் பருவம் முடிந்து கல்லூரியில் கலாடி எடுத்து வைத்த சில மாதங்களுக்குள் அப்பாவை இழந்து குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைமை. தனக்குள்ளே இருந்த மிமிக்ரி என்னும் திறமையை வெளிக்கொணர அவர் பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வெறும் கைதட்டலுக்காக ஒரு மணி நேரம் மிமிக்ரி செய்துவிட்டு வீட்டுக்கு வந்து அடுத்த இரண்டு நாட்கள் தொண்டை வலியோடு துடித்திருக்கிறார். அம்மாவிடமோ அக்காவிடமோ சொன்னால் மிமிக்ரிக்கு தடை விழுந்துவிடுமோ என்று அதையும் மறைத்திருப்பார்.

கலக்கப்போவது யாரு? டைட்டில் ஜெயித்தபிறகு அதே டிவியில் காம்பியரிங் பண்ண வாய்ப்பு வருகிறது. ஆனால் ரிஜெக்ட் செய்கிறார்கள். அன்று அவர் அடைந்த வேதனை. வளர்ந்துகொண்டிருக்கும்போதே திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் சம்மதித்தால் கழுத்தை நெரிக்கிறது பொருளாதார சூழல். வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அதிக கூட்டம் வந்துவிட அவர்களை சாப்பிட வைக்க அம்மாவுக்கே தெரியாமல் எங்கெங்கோ கடன் கேட்க வேண்டிய சூழல். அதை அடைக்க பட்ட பாடு... இது எல்லாமே சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மட்டும்தான்... சினிமாவுக்கு வந்த பின்னர் இதை போல பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
இப்போது சிவாவை சந்தோஷப்படுத்துவது ஓப்பனிங் அல்ல. அவரது மகள் ஆராதனா. மனைவி ஆர்த்தி. அம்மா, அக்கா. இந்த நால்வர்தான் சிவாவின் சந்தோஷம். கடந்த 6 ஆண்டுகளாக சிவா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை மாற்றவில்லை. 'கீப் யுவர் பேரண்ட்ஸ் ஹேப்பி... லைஃப் வில் பி தெ ஹேப்பியஸ்ட்...'
சினிமாவில் பார்ட்டி நடந்தால் ஒரு ஓரமாக நின்று மற்றவர்கள் குடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஜுஸ் மட்டும் குடித்துக்கொண்டிருப்பார். அது அவர் அம்மாவுக்கு அவர் செய்து கொடுத்த சத்தியம்.
சிவாவின் வாழ்க்கை எப்போதுமே சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கான பாடம். உண்மையிலேயே எதிர் நீச்சல் அடித்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் சிவா. இன்னும் எதிர் நீச்சல்தான். அது இனிமேலும் தொடரும். சிவா முன்னேறிக்கொண்டே தான் இருப்பார்.

திரைத்தொழிலின் அச்சாணியாக விளங்கிய இயக்குநர் - எஸ்பி முத்துராமன்

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்று 'ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் இருவர் வழமையான வாழ்க்கையையும் பொருள்பொதிந்த வாழ்க்கையும் தேர்த்தெடுத்தது குறித்த' வழக்குப்பொருள் ஒன்றைக் காட்டியது. ஒரு தரப்பினர் சமூக ஈடேற்றத்திற்கான மேம்பட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள். மற்றொரு தரப்பினர் சமூகத்திற்கு வேண்டியதைச் செய்து வாழ்கின்ற இயல்பான வாழ்முறையைத் தேர்த்தெடுத்தவர்கள். அவ்விரு தரப்பினரும் அவ்வாறு தேர்ந்தெடுத்ததைத் தற்போது எவ்வாறு உணர்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுக்குரிய மாந்தர்களைக்கொண்டு பேசிச்சென்றது. அந்நிகழ்ச்சிக்கு இரு தரப்பிற்கும் வந்த சிறப்பு விருந்தினர்கள் சுப வீரபாண்டியனும் எஸ்பி முத்துராமனும். இருவரும் உடன்பிறப்புகள். ஆனால், வெவ்வேறு வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்துகொண்டவர்கள். அந்நிகழ்ச்சியின் பார்வையானது சுபவீ பொருள்மிக்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துச் சிறப்புற்றார் என்பதைப் போன்றும், எஸ்பி முத்துராமன் வணிகப் படங்களின் இயக்குநராக வழமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார் என்பதைப் போன்றும் அமைந்துவிட்டது. எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. இருவரும் இருவேறு திசைகளில் தத்தமக்குரிய தேர்வின்படி ஆற்றலுடன் செயல்பட்டவர்கள் என்று ஒரே தட்டில் வைத்துச் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும். வானூர்தி ஓட்டுவது எவ்வளவு பொறுப்பான மதிப்பான செயலோ அதற்குச் சற்றும் குறைந்ததில்லை சென்னைப் போக்குவரத்து நெரிசலில் பேருந்து ஓட்டுவது.

எண்பதுகளின் அறிவுத் தரப்புக்கு ஒரே முகம்தான் இருந்தது. இடதுசாரி முற்போக்கு முகம். அந்தத் தரப்பில் எஸ்பி முத்துராமன் என்னும் வணிகத் திரைப்பட இயக்குநரை மிகவும் எளிமையாக மதிப்பிட்டார்கள். வெற்றி என்பது அத்துணை எளியதுமன்று. அதைத் தொடர்ந்து ஈட்டியமைக்காகத்தான் ஒருவர் அறிவுத்தரப்பின் மதிப்பீட்டுக்கே வருகிறார். இன்றுள்ள இயக்குநர்களின் படாடோபங்களைப் பார்த்தவர்கள், "முத்துராமனைப் போன்றவர்களே திரைத்தொழில் துறையின் அச்சாணியாக விளங்கினார்கள்," என்பதை ஏற்றுகொள்வார்கள். கே. விஜயன், எஸ்பி முத்துராமன் - இவ்விருவரும் இயக்கிய திரைப்படங்கள் பிசிறில்லாத செய்ந்நேர்த்தியோடு இருந்தன.


எஸ்பி முத்துராமன் எப்படிப் பணியாற்றுவார் என்பதைப் பஞ்சு அருணாசலம் தம் நூலில் வியந்து குறிப்பிடுகிறார். "கடுமையான உழைப்பாளி. ஒரு வாரம் கூடத் தூங்காமல் இருந்து வேலை செய்வார்". புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்திற்காக வெளியூர்ப் படப்பிடிப்புக்குச் சென்றபோது பத்து நாள்கள் படப்பிடிப்பே நடைபெறவில்லை. புயலும் மழையுமாகப் பெய்ததால் படப்பிடிப்பு நடக்கவில்லை. பதினைந்து நாள்கள்தாம் வெளியூர்ப் படப்பிடிப்புத் திட்டம். மீதம் நான்கைந்து நாள்கள் சென்னைப் படப்பிடிப்புத் தளத்தில் ஒட்டுவேலைகளுக்கென்று செலவிடலாம். இவ்வளவுக்குத்தான் தயாரிப்பாளரால் இயலும். வெளியூர்ப் படப்பிடிப்பு கெட்டுப் போனதால் அந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கவே முடியாது. ஆனால், 'பேட்ச்வொர்க்' எனப்படுகின்ற பின்னொட்டுப் படப்பிடிப்பு நாள்களுக்குள்ளாகவே இராவும் பகலுமாய் அரங்கிற்குள்ளேயே படத்தை எடுத்து முடித்துக்கொடுத்திருக்கிறார் முத்துராமன். ஒரே நாளில் பத்துக் காட்சிகள் எடுத்தாராம். இரண்டாவது எடுப்புக்கே (டேக்) செல்லவில்லை. படம் குப்பையாக வந்துவிடுமோ என்று திரைக்கதை வசனம் எழுதிய பஞ்சு அருணாசலம் போன்றவர்களே அஞ்சியிருக்கிறார்கள். ஆனால், இறுதி வடிவத்தில் அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அயர்ந்துபோய்விட்டார்கள். அவ்வளவு சிறப்பாக வந்திருந்தது. படமும் வெற்றி. ஓர் இயக்குநரின் இந்தத் திறமையும் உழைப்புமே தயாரிப்பாளர்களைக் காப்பாற்றும். சந்தை மதிப்புடைய கலைஞர்களை உருவாக்கும்.


பிரியா திரைப்படத்திற்காகச் சிங்கப்பூர் சென்ற படப்பிடிப்புக் குழுவில் இரஜினிகாந்த், ஸ்ரீதேவி போன்றவர்களுக்குத்தான் விடுதியறைகள். மற்றவர்கள் தங்கிக்கொள்ள வாடகைக்கு வீடு எடுத்துக்கொள்ளப்பட்டதாம். "நான் விடுதியில் தங்கமாட்டேன், படப்பிடிப்புக் குழுவினருடனேயே தங்கிக்கொள்கிறேன்," என்று விடுதியறையை விடுவித்துக்கொண்டு வந்து சேர்ந்தவர் இரஜினிகாந்த். அரசு சார்ந்த இடங்களுக்கு மட்டும்தான் படப்பிடிப்புக் கட்டணமில்லை என்பதால் அத்தகைய இடங்களிலேயே படப்பிடிப்பு வைத்துக்கொள்ளப்பட்டதாம். வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்று பெருமையாகச் சென்றுவிட்டார்களே ஒழிய, ஒரே மகிழுந்தில் எழுவர் எண்மர் என்று புளிமூட்டையாய் அடைந்துகொண்டு படப்பிடிப்புப் பகுதிகளுக்குச் சென்றார்களாம். இத்தனைக்கும் அந்தப் படம் தமிழ், கன்னடம் என்று இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டது. எண்ணி எண்ணிச் செலவிட்டு எடுத்தால்தான் ஒரு வணிகப் படத்தைக்கூட முடிக்க முடியும். அதற்கு முத்துராமனைப் போன்ற இயக்குநர்கள் வேண்டும்.


ஓரிரண்டு படங்களை எடுத்த இளநிலை இயக்குநர்கள் என்னென்னவோ மிதமிஞ்சிப் பேசுகின்றார்கள். முத்துராமன் அதிர்ந்தோ கூடுதலாகப் பேசியோ எங்கும் பார்த்ததில்லை. இந்த அமைதி எங்கிருந்து வந்தது? அதுதான் அவர் வளர்ந்த இடம். ஏவிஎம் திரைப்படக் கூடத்தில் ஒரு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர். திருலோகசந்தர் போன்றவர்களிடம் உதவியாளராக இருந்து படிப்படியாகக் கற்றவர். அவை அனைத்திற்கும் மேலாக எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி எண்ணற்ற பெருங்கலைஞர்களுடன் தம் திரைவாழ்க்கையில் ஒன்றாய்ப் பணியாற்றியவர். இரஜினிகாந்தின் இருபத்தைந்துக்கும் மேலான படங்களை இயக்கியமை. எல்லாமே வெற்றிப் படங்கள்.
பாண்டியன் என்ற திரைப்படத்திற்குப் பின்னர் அவர் படங்கள் இயக்குவதைக் குறைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு தமிழ்நாட்டரசு கேட்டுக்கொண்டமைக்காகவே 'தொட்டில் குழந்தை' என்ற படத்தை இயக்கினார். அறுபதாம் அகவையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதைப்போன்றே தம் ஓய்வுக் காலத்தை அமைத்துக்கொண்டார். பாண்டியன் படப்பிடிப்பு நடந்தபோது அவருடைய துணைவியார் இறந்துபோய்விட, போவினைக்காக ஒரேயொருநாள் சென்று அவர்க்குரிய இறுதிக்கடமை ஆற்றிவிட்டு மறுநாள் படப்பிடிப்புக்கு வந்துவிட்டாராம். சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கையிலும் இவ்வாறே ஒரு துயரம் நேர்ந்தது. 

அவர் இங்கிலாந்தில் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிக்கொண்டிந்தபோது அவரை ஓர் ஆட்டக்காரராக ஆக்கியளித்த தந்தையார் இறந்துபோனார். அப்போது இந்திய அணி சச்சினின் மட்டைப் பங்களிப்பையே பெரிதும் நம்பியிருந்தது. ஆடிக்கொண்டிருப்பது உலககோப்பைப் போட்டி. தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கவந்த தெண்டுல்கர் அடுத்த விமானத்திலேயே மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். அடுத்த போட்டியில் பங்கேற்று விளையாடினார். தொழிலதிபர் இந்துஜாவின் வாழ்க்கை வரலாற்று நூலிலும் இதுபோன்றே ஒரு நிகழ்வு வருகிறது. காலம் முழுவதும் தொழில் தொழில் என்று உலகம் சுற்றியவர் இனி என் ஒவ்வொரு நொடியும் என் மனைவிக்கே என்று முடிவெடுத்தபோது அவ்வம்மையார் இறந்துவிட்டார். தம் வாழ்நாள் முழுவதும் எதற்கும் நொடி நேரமில்லாமல் திரைப்படங்களே வாழ்க்கை என்று வாழ்ந்த முத்துராமனுக்கு மனைவி இழந்த துயரம் மனத்தைப் பிழிந்திருக்க வேண்டும். அது அவர் மனத்தைப் பெரிதும் வடுப்படுத்தியிருக்கலாம். அழுது மனந்தேற்றிக் கொள்வதற்குச் சிறுபொழுதில்லாத இது என்ன வாழ்க்கை என்று வெடிப்பான ஓர் அழுகையோ ஒரு துளிக்கண்ணீரோ அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கலாம். அந்த நொடியில் அவர் தம் ஓய்வு முடிவை எடுத்திருக்க வேண்டும்.

- கவிஞர் மகுடேசுவரன்