Sunday, 12 July 2020

இளமை காதல், மரபை உடைத்த `புரட்சி' க்ளைமாக்ஸ்... 80-களில் புதிய அலையை உண்டாக்கிய `அலைகள் ஓய்வதில்லை!'

18 ஜூலை 1981 அன்று வெளியான `அலைகள் ஓய்வதில்லை’, அந்தக் காலத்தில் மகத்தான வெற்றியையும் கவனத்தையும் பெற்ற ஒரு cult திரைப்படம். குறிப்பாக, இதன் பரபரப்பான க்ளைமாக்ஸுக்காக அதிக சர்ச்சைகளையும் அதே சமயத்தில் முற்போக்குவாதிகளிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றது. இவற்றைத் தாண்டி பொதுஜனம் இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டதுதான் இதன் உண்மையான வெற்றி.


"காதலுக்கு குறுக்கே மதம் வரும்போது அதைத் தூக்கி எறி” என்று மதத்தைப் பின்னுக்குத் தள்ளி காதலுக்கு முக்கியத்துவம் தந்த காரணத்தால் இளைய தலைமுறை ரசிகர்கள் இதைக் கொண்டாடியதில் ஆச்சர்யமில்லை.
இதன் பிரமாண்டமான வெற்றிக்கு மணிவண்ணனின் புத்துணர்ச்சியான கதை - வசனம், பாரதிராஜாவின் பிரத்யேக அழகியல் பாணி இயக்கம், B.கண்ணனின் அழகான ஒளிப்பதிவு, இளையராஜாவின் அற்புதமான இசை போன்றவை அடிப்படைக் காரணங்களாக இருந்தன.

ஆனால், என்னளவில் இந்தத் திரைப்படம் குறித்தான சில எதிர்மறை அம்சங்களும் இருக்கின்றன. அவற்றைப் பிற்பாடு பார்ப்போம்.
தமிழ் சினிமாக் கதைகளின் முக்கியமான கச்சாப்பொருளில் ஒன்று காதல். காதலின் குறுக்கே சாதி, மதம், வர்க்கம், சமூக அந்தஸ்து உள்ளிட்டவை குறுக்கே வந்து உக்கிரமாக மறித்து நிற்கும். காதலர்கள் அவற்றுடன் போராடுவார்கள். சில பல சம்பவங்களுக்குப் பிறகு காதலை மறித்தவர்கள் மனம் மாறுவார்கள். இதுவே அதுவரையான காதல் திரைப்படங்களின் பொதுவான அம்சம்.

இதில் வர்க்கம் என்பது கையாள்வதற்கு எளிதான விஷயம். ஏழையின் காதலை உன்னதப்படுத்தி பணக்காரர்களைத் திட்டி பல ஆவேசமான வசனங்களை எழுதிவிடலாம். ஆனால் சாதி, மதம் போன்றவை வரும்போது அவற்றில் கைவைப்பது எரிமலையில் கைவைப்பதுபோல. எந்தவொரு பேனாவும் நடுங்கும்.


சினிமா என்பது ஒரு சமூகத்தின் அனைத்து விதமான பார்வையாளர்களை நம்பி இயங்கும் ஒரு வணிக சமாசாரம் என்பதால் அவர்களின் ஆதாரமான உணர்வுகளை கையாள்வதில் சினிமாக்காரர்கள் கவனமாக இருப்பார்கள். ``இவையெல்லாம் ஆடியன்ஸுக்குப் புரியாது” என்று பல கிளிஷேக்களை அப்படியே வைத்திருப்பது போல ``இதெல்லாம் ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டான் சார்... பிரச்னை வரும்... படம் அடி வாங்கும்” என்று அவர்களாகவே முடிவு செய்துகொண்டு பாதுகாப்பான திசையை நாடிச் செல்வார்கள். இந்த மரபை உடைத்து எறிந்த இயக்குநர்களும் கதாசிரியர்களும் மிகக் குறைவே.
இந்த வரிசையில், "உண்மையான காதலின் இடையில் மதம் குறுக்கே வருமானால் அந்த மத அடையாளத்தைத் தூக்கி எறிய தயங்காதே” என்கிற புரட்சிகரமான கருத்தை துணிச்சலுடன் `அலைகள் ஓய்வதில்லை’ முன்வைத்தது. ஒருவகையில் இது விஷப் பரீட்சைதான். ஆனால், பெரும்பான்மையான பார்வையாளர்கள் இந்த `முற்போக்கான’ கருத்தை ஏற்றுக் கொண்டதால் படம் வெற்றியடைந்தது. இதை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்றுவார்களோ, இல்லையோ, குறைந்தபட்சம் ஒரு நிழல் வாழ்க்கையில் நடந்த முடிவை ஒப்புக் கொண்டதே நல்ல முன்னேற்றம்தான்.

சுதந்திர இந்தியாவுக்குப் பின்னான இந்தியா என்பது பலவகைகளிலும் முன்னேற்றப் பாதையில் நடந்துகொண்டிருந்த சமயம். பிற்போக்கான சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் எதிரான தீவிரமான பிரச்சாரங்கள் முற்போக்கு கருத்துக்களைக் கொண்ட தலைவர்களால் முன்வைக்கப்பட்டன. இந்த நோக்கில் பெரியார் ஒரு நல்ல உதாரணம்.

எனவே திரைப்படம், இலக்கியம், ஓவியம் போன்ற கலை சார்ந்த விஷயங்களிலும் இவ்வகையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு மக்களின் மனமாற்றத்துக்கு காரணமாக இருந்தன. இன்று ஒரு திரைப்படத்தில் ஒரு பிரதான பாத்திரம் என்ன மாதிரியான சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ துல்லியமான நுண்விவரங்களுடன் படைத்து விட முடியும். ஆனால், முந்தைய திரைப்படங்களில் அப்படியில்லை. இயக்குநர்களுக்கு இவ்வகையான துணிச்சலைத் தந்த முன்னோடி திரைப்படங்களுள் ஒன்று `அலைகள் ஓய்வதில்லை.’



இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்ல வேண்டும். இதில் வரும் கிறிஸ்துவப் பெண் பாத்திரத்தை இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணாக வைத்துதான் முதலில் கதை எழுதப்பட்டிருந்ததாம். ஆனால், இதற்கு அப்போது நிறைய எதிர்ப்பு வரும் என்று யூகிக்கப்பட்டதால் பாத்திரத்தின் மதம் மாற்றப்பட்டது.

`இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை, தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை, கோயிலில் காதல் தொழுகை’ என்று வைரமுத்து முன்பே எழுதிவிட்ட வரிகளே இதற்கு சாட்சி. `கோயிலில் காதல் தொழுகை’ என்பது இந்து - முஸ்லிம் பாத்திரங்களையொட்டி எழுதப்பட்டது.

ஆக... பின்னாளில் மணிரத்னத்தின் `பம்பாய்’ போன்ற திரைப்படங்கள் வருவதற்கான முற்போக்குப் பாதையை துணிச்சலாக அமைத்தது `அலைகள் ஓய்வதில்லை’ போன்ற முன்னோடித் திரைப்படங்கள்தான் என்றால் மிகையாகாது.
அது சிறுகதையோ, நாவலோ, திரைப்படமோ… ஒரு படைப்பு எதைப் பற்றி உரையாடப் போகிறது... அதன் மையம் என்ன..? என்பதை முதலிலேயே பார்வையாளர்களுக்கு தெளிவுப்படுத்தி விடுவது ஒரு நல்ல படைப்பாளிக்கு அழகு. அந்த வகையில் `அலைகள் ஓய்வதில்லை’யின் தொடக்க காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. ஒரு பிராமணச் சிறுவனுக்கு பூணூல் அணிவிக்கப்படும் சடங்கு ஒருபுறம் காண்பிக்கப்படும். இன்னொரு புறம், கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ஒரு சிறுமிக்கு ஞானஸ்நானம் அருளப்படும் காட்சி காண்பிக்கப்படும்.

ஆக... இந்தப் பையனும் சிறுமியும் இவர்கள் சார்ந்திருக்கும் மதமும் இந்தக் கதைக்கு முக்கியமான விஷயங்களாக அமையப் போகின்றன என்பதை தொடக்கத்திலேயே பாரதிராஜா உணர்த்திவிடுவார்.


பிரதான பாத்திரங்களில் நடித்த கார்த்திக், ராதா ஆகிய இருவருமே இந்தத் திரைப்படத்தில்தான் அறிமுகமானார்கள். ஸ்டார் நடிகர்களை விடுத்து எவ்வித அனுபவமும் இல்லாத புதிய நபர்களை அறிமுகப்படுத்தி அந்தப் படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவதென்பது இயக்குநரின் திறமையையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. அது பாரதிராஜாவிடம் ஏராளமாக இருந்தது.

விச்சு என்கிற பிராமண இளைஞனின் பாத்திரத்துக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் சுரேஷ். வாக்குறுதி அளித்திருந்தபடி `பன்னீர் புஷ்பங்களில்’ நடிக்க சுரேஷ் சென்றுவிட்டதால் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக்கை இறுதி நேரத்தில் அழைத்தார்கள். எவ்வித தயக்கமும் இன்றி ஒரு துணிச்சலுடன் ஒப்புக் கொண்டார் கார்த்திக்.பின்னாள்களில் கார்த்திக் ஒரு வசீகரமான, பெண்களுக்குப் பிடித்த கதாநாயகனாக மாறினாலும் முதல் படத்தில் அவரது தோற்றமும் நடிப்பும் சுமாரானதாகத்தான் இருந்தது. எந்தவொரு முதிராத அறிமுக நாயகனைப் போலவே இயக்குநர் சொல்லித் தந்ததை இயன்ற அளவுக்கு அப்படியே பிரதிபலிக்க முயன்றார். கார்த்திக்குக்கு பின்னணி குரல் தந்தவர் பாடகர் எஸ்.என்.சுரேந்தர்.

`அலைகள் ஓய்வதில்லை’ வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நட்சத்திர விழா மேடையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த அனுபவங்களைக் கார்த்திக்கும் ராதாவும் பகிர்ந்து கொண்டார்கள். இருவருமே பாரதிராஜாவிடம் எந்தவொரு திட்டும் அடியும் வாங்காமல் சமர்த்தாக நடித்து முடித்தார்களாம்.




இந்த மேடையில் கார்த்திக் சொன்ன ஒரு டைமிங் காமெடி அருமை. ஒரு காட்சியில் காதலனின் வருகைக்காகக் காதலி நீண்ட நேரம் காத்திருப்பாள். அவன் வந்தவுடன் "ஏன் லேட்டு?” என்று கேட்பாள். இதுதான் இவர்கள் இருவரையும் எடுத்து பதிவு செய்யப்பட்ட முதல் காட்சி.

``பாருங்க... `ஏன் லேட்டு?’ என்ற வசனத்தை வைத்துதான் வந்த முதல் நாளே பாரதிராஜா என்னை நடிக்க வெச்சார். ஆக... சூட்டிங்குக்கு லேட்டா வர்றதுக்கு நான் பொறுப்பில்ல" என்பது போல் கார்த்திக் சொல்ல கீழே அமர்ந்திருந்த பாரதிராஜா உள்ளிட்ட பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். படப்பிடிப்புகளுக்கு வராமல் இருப்பது அல்லது மிகத் தாமதமாக வரும் கார்த்திக்கின் வழக்கம் தெரிந்தவர்கள் இதிலுள்ள நகைச்சுவையை உணர முடியும்.

`அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ராதாதான் என்பதை கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்ய அந்தக் காலத்து இளைஞர்கள் தயாராக இருந்தார்கள். அப்படியொரு பேரழகியாக அனைத்துக் காட்சிகளிலும் தென்பட்டார் ராதா.

தென்னிந்தியப் பெண்களுக்கே உரிய பளபளப்பான மாநிறம், மிக அழகான கரிய விழிகள், சற்று மேடேறிய நெற்றி, சற்று ஓவர் டோஸாக எட்டிப் பார்க்கும் மூக்கு, எந்த ஆடையும் பொருந்திப் போகும் கச்சிதமான உடல்வாகு என்று ஒரு தேவதையைப் போலவே படம் பூராவும் உலவினார் ராதா. B.கண்ணனின் ரசனையான கோணங்களும் ஷாட்களும் இவரைப் பேரழகியாகக் காட்டின. இவருக்கு குரல் தந்தவர் பிரபல `டப்பிங் ஆர்ட்டிஸ்ட்’ அனுராதா.



வெங்காயத்தை இரண்டாக அரிந்து கக்கத்தில் வைத்துக் கொண்டால் உத்தரவாதமாகக் காய்ச்சல் வரும் என்கிற அரிய மருத்துவத் தகவல் இந்தப் படத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தைப் பிற்பாடு தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தபோது, தேர்விலிருந்து தப்பிக்க நானும்கூட இந்த உத்தியை முயன்று பார்த்தேன். ம்...ஹூம் காய்ச்சல் வரவில்லை. ராதாவையே பார்த்துக்கொண்டிருந்ததால், அது பெரிய வெங்காயமா... சின்ன வெங்காயமா என்பதை கவனிக்கத் தவறி விட்டேன். ஆனால், காய்ச்சல் வந்தது, ராதாவைப் பார்த்துதான் என்பதென்னமோ உண்மை.

`காதல் ஓவியம்’ திரைப்படத் தோல்வியின் காரணத்தினால் `இதானே உங்களுக்கு வேண்டும்?’ என்கிற கோபத்தில் `வாலிபமே... வா... வா...’ என்கிற கவர்ச்சியான படத்தை இயக்கிய பாரதிராஜா, அந்தக் கோபத்தை முன்பே இந்தப் படத்தில் ரிகர்சல் பார்த்துவிட்டாரோ என்னமோ!
`அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்துக்கு முன்பு பாரதிராஜா இயக்கிய படமான `நிழல்கள்’ சரியான வரவேற்பைப் பெறாததால், அடுத்த படைப்பை எப்படியாவது வெற்றிப் படைப்பாக்கி விட வேண்டும் என்கிற நெருக்கடியை உருவாக்கிக் கொண்டாரோ... என்னமோ. இதன் காட்சிகளிலும் பாடல்களிலும் கவர்ச்சியான அம்சங்கள் கூடுதலாக இருந்தன. அதிலும் `ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலில் `ஆதாம் ஏவாள்’ கோலத்தில் கார்த்திக்கும் ராதாவும் பூக்களின் நடுவில் படுத்திருந்த காட்சியானது பல இளைஞர்களின் தூக்கத்தைக் கலைக்கும் காட்சியாக அப்போது இருந்திருக்கும்.

அது போலவே ஒரு சிறுமியும் சிறுமியும் அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவது, இன்னொரு காட்சியில் சிறார்கள் முத்தமிட்டுக் கொள்வது, ஆற்றங்கரையில் குளிக்கும் பெண்களிடம் கார்த்திக் டீம் குறும்பு செய்யும்போது வெளிப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவை முகஞ்சுளிக்க வைத்தன.


`கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் காதலர்களுக்கிடையே ரயிலைத் தூது போக வைத்த பாரதிராஜா, இந்தத் திரைப்படத்தில் அதற்காக ஹார்மோனியத்தைப் பயன்படுத்திக் கொண்டார். காதலர்களின் சந்திப்பு தடைபடும்போது ஹார்மோனியத்தில் கடிதங்களை ஒளித்து வைப்பார் கார்த்திக். (ஏன்... இவர்கள் சந்திக்கும் போதே... அடுத்த முறை எப்படி சந்திப்பது என்பதை பேசிக்கொள்ள மாட்டார்களா? ரிஸ்க் எடுத்து ஏன் ஹார்மோனியத்தில் கடிதம் வைக்க வேண்டும் என்றெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாது).

`அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னொரு நடிகர் தியாகராஜன். இவருக்கு நடிப்பதில் எந்தவொரு ஆர்வமும் இருந்ததில்லை. அதற்கான முயற்சிகளும் எடுத்ததில்லை. தயாரிப்பாளர் பாஸ்கரின் நண்பரான இவரை ஒரு முறை சந்தித்தபோது நீண்ட நேரம் கூர்ந்து பார்த்திருக்கிறார் பாரதிராஜா. `ஏன் இவரையும் நடிக்க வைக்கப் போகிறீர்களா?” என்று பாஸ்கர் கேட்க, ``ஆமாம்... இந்தப் படத்துல வில்லன் பாத்திரத்துக்கு” என்று சொன்ன பாரதிராஜா, தியாகராஜனை வில்லனாக ஒப்பந்தம் செய்துவிட்டார்.

கூலிங்கிளாஸும் சரிகை வேட்டியும் வெள்ளை நிற ஜிப்பாவும் கைகளில் காப்பும், கழுத்தில் தங்கச் சங்கிலி மின்ன, என்பீல்ட் பைக்கில் `டபடபவென்ற சத்தத்துடன் வலம் வரும் தியாகராஜனைப் பார்த்து அந்த ஊரே அஞ்சும். முதற்காட்சியிலேயே தியாகராஜனின் குணாதிசயத்தை வலுவாகப் பதிவு செய்துவிடுவார் பாரதிராஜா.



முதற்படத்தில் எப்படியோ ஒப்பேற்றிவிட்டாலும் இன்று வரை தியாகராஜனை நடிக்க வைக்க எந்தவொரு சூப்பர் இயக்குநராலும் முடியவில்லை என்பதே காலம் நிரூபித்த உண்மை. முகத்தில் எவ்வித உணர்ச்சிகளும் வெளிப்படாமல் நடிப்பதில் தியாகராஜன் ஒரு தனிப்பாதையை வகுத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இவருக்கு குரல் தந்தவர் பாரதிராஜா.


இந்தப் படத்தின் இனிய ஆச்சர்யம் என்று `சில்க்’ ஸ்மிதாவைச் சொல்லலாம். இந்தத் திரைப்படத்துக்கு முன்னரும் பின்னரும் சரி, பெரும்பாலும் கவர்ச்சி பிம்பமாகவே அறியப்பட்ட ஸ்மிதாவை குணச்சித்திர நடிகையாக சிந்திக்க ஒரு துணிச்சல் வேண்டும். அது இயக்குநர் பாரதிராஜாவுக்கு இருந்தது.
இதில் நாயகியின் அண்ணியாக நன்கு நடித்திருந்தார் ஸ்மிதா. முதலில் கணவனுக்கு ஆதரவாக நின்றாலும், அவர் தனக்குச் செய்யும் துரோகத்தை அறிந்து காதலர்களுக்கு ஆதரவாக மாறுவது நல்ல திருப்பம்.

இது தொடர்பான காட்சிகள் மிக அருமையாக இயக்கப்பட்டிருக்கும். தங்கள் வீட்டில் பணியாற்றும் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் வீட்டுக்குள் தன் கணவன் நுழைந்துவிடுவதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பார் ஸ்மிதா. அந்தச் சமயத்தில் வேலைக்காரியின் கணவன் வரும்போது என்ன செய்வது என்று தெரியாத திகைப்புடன் அவனை அப்புறப்படுத்துவதில் அவசரம் காட்டுவார். என்றாலும் பிறகு உண்மை அம்பலப்பட்டுவிடும்.

செல்வாக்கு மிகுந்த தியாகராஜனை எதிர்க்க முடியாமல் அந்த வேலைக்காரரின் குடும்பம் துயரத்துடன் புறப்படும். "எங்கடா போற?” என்கிற தியாகராஜனின் கேள்விக்கு "மனுஷங்க இருக்கற ஊருக்கு” என்று அசத்தலாகப் பதில் சொல்வார் அந்தப் பணியாளர். அவர்களிடம் பணத்தை எறிவார் தியாகராஜன். ``நான் விசுவாசமாக இருந்ததுக்கு நீங்கதான் நல்ல கூலி கொடுத்திட்டீங்களே எஜமான். இந்தக் கூலி உங்க சம்சாரத்துக்குதான் சேரணும்… ஏன்னா.. அவங்கதானே கஷ்டப்பட்டு உங்களுக்காக காவல் காத்தாங்க” என்று சொல்லி விட்டு சென்றுவிடுவார் அந்தப் பணியாள்.


முகத்தில் அறைவது போல் உணர்ச்சிகரத்துடன் வசனம் எழுதுவது எப்படி என்பதற்கான சிறந்த உதாரணம் இது. பணியாளின் இந்தக் கேள்வி ஸ்மிதாவை பல விதங்களில் சுட்டெரிக்கும். அந்தக் கோபத்தை கணவரிடம் சிறப்பாக வெளிப்படுத்துவார். கணவரின் எதிர்ப்பையும் மீறி காதலர்களை இணைக்கவும் துணிவார். ஸ்மிதாவின் நடிப்பை அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மிகவும் சிலாகித்து பாராட்டினதாக ஒரு தகவல் உண்டு.

தந்தையில்லாத ஒரு வீட்டின் பொருளாதாரச் சுமையை தன் உழைப்பால் தூக்கிப் பிடிக்கும் ஒரு தாயின் நடிப்பை அருமையாகத் தந்திருப்பார் கமலா காமேஷ். தியாகராஜன், வீட்டுக்கு வந்து மிரட்டும்போது தன் கையறு நிலையைச் சொல்லி புலம்புவதும் கதறுவதும் நல்ல நடிப்பு.

`அடுத்த வீட்டுக் குழந்தையையே... மிக அன்புடனும் பாசத்துடனும் கவனித்துக் கொள்ளும் ஒரு தாய், தன் வீட்டு குழந்தை என்னும்போது கூடுதல் பாசம் காட்டாமலா போவாள்..?’ இது இளையராஜாவின் குடும்ப தயாரிப்பு என்பதால் பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி, தன் அசாதாரணமான இசைத்திறமையை அளவின்றி கொட்டியிருப்பார் இளையராஜா.

இதில் வரும் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். இன்றைக்கும் கேட்பதற்கு இனிமையாக உள்ள தேன்குடங்கள். கிராமங்களில் பெண்கள் பாடும் கும்மிப்பாடலின் மெட்டை அப்படியே `ஆயிரம் தாமரை மொட்டுக்களே’வாக மாற்றினார் இளையராஜா.

இந்தப் பாடலின் வரியை வாசித்த அடுத்த கணத்தில் மிருதங்க சத்தம் உங்கள் மூளைக்குள் தன்னிச்சையாக ஒலித்ததென்றால் நீங்கள் ராஜாவின் மிகச்சிறந்த ரசிகர் என்று பொருள். மிருதங்கம் என்னும் வாத்தியம் மிக மிக அசத்தலாகப் பயன்படுத்தப்பட்ட பாடல்களில் ஒன்று `ஆயிரம் தாமரை மொட்டுக்களே.’


புல்லாங்குழல், வயலின், கோரஸ் உள்ளிட்ட அனைத்துமே மிக ரசிக்கும் வகையில் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும். எஸ்.பி.பியும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள். குறிப்பாக ஜானகியின் ஹம்மிங்கும் ராதாவின் பரவசமான க்ளோசப்களும் அத்தனை அருமையாகப் பொருந்தியிருக்கும்.

ஒரு பாடலில் வைரமுத்து இருப்பதை சொல்லாமலேயே அவரது எழுத்தின் ரசிகர்கள் மிக எளிமையாகக் கண்டுபிடித்துவிடலாம். அந்த அளவுக்கு மிக பிரத்யேகமான முத்திரை வரிகளை செதுக்குவதில் வல்லவர் வைரமுத்து. `புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை, ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை’ போன்ற அபாரமான வரிகள் எல்லாம் வைரமுத்துவின் மேதமையையும் இருப்பையும் அடையாளம் காட்டும்.

இந்த ஆல்பத்தின் இன்னொரு அட்டகாசமான பாடல் `காதல் ஓவியம்... பாடும் காவியம்.’ நம்பவே முடியாதவகையில் மிக இனிமையான குரலில் வசீகரம் காட்டியிருப்பார் ராஜா. ஜென்ஸியின் குரல் எப்போதுமே பிரத்யேகமானது. யாருமில்லாத வனாந்தரத்தில் ஏக்கத்துடன் குரலெழுப்பும் குயிலின் இனிமைச் சோகத்துடன் ஜென்ஸியின் குரலை ஒப்பிடலாம். இந்தப் பாடலில் ராஜாவுடன் இணைந்து இனிமையைக் கூட்டியிருப்பார் ஜென்ஸி. `தென்றலிலே மிதந்துவரும் தேன் மலரே...’ போன்ற வரிகளில் ரொமான்ஸின் உச்சத்துக்கே சென்றிருப்பார் வைரமுத்து.

`விழியில் விழுந்து இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே’ என்கிற இன்னொரு அருமையான பாடலில் `இரவும் பகலும் உரசிக் கொள்ளும், அந்திப் பொழுதில் வந்து விடு’ என்பது போன்ற அற்புதமான வரிகளை இணைத்திருப்பார்.

`நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும், நீ மல்லிகை பூவைச் சூடிக்கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும், நீ பட்டுப் புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்’ போன்ற காதலுணர்வு பொங்கி வழியும் வைரமுத்துவின் வரிகளை மேற்கோள் காட்டினால் எந்தப் பெண்ணையும் கவர்ந்துவிடலாம்.

`வாடி என் கப்பங்கெழங்கே...’ என்கிற நையாண்டிப் பாடல் அந்தச் சமயத்தில் இளசுகளின் தேசிய கீதமாக இருந்தது. இந்தப் படத்தின் நாயகிக்காக அலைந்து திரிந்து ராதாவைக் கண்டுபிடித்து ராஜாவின் முன் நிறுத்தியவுடன் "ஓ... இவர்தான் அந்தக் கப்பங்கெழங்கா” என்று கேட்டு சிரித்தாராம் ராஜா. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே உருவாகிவிட்ட பாடல் இது. இதைக் கேட்டு புரியாமல் விழித்தாராம் ராதா. இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன்.

கிறிஸ்துவப் பள்ளியில் படித்தவன் என்கிற காரணத்தினால் ‘ஸ்தோத்திரம் பாடியே’ என்கிற பாடல் அப்போதே என் மனதுக்கு நெருக்கமானதொன்று. வைரமுத்து, கங்கை அமரன் எழுதியது தவிர இதர பாடல்களை எழுதியவர் இளையராஜாவேதான்.

ராஜாவின் மிகச் சிறந்த பாடலை பயன்படுத்தாமல் விட்டுவிடுவதென்பது பாரதிராஜாவின் கெட்ட வழக்கங்களில் ஒன்று. `நிழல்கள்’ திரைப்படத்தில் `தூரத்தில் நான் கண்ட முகம்’ பாடலை விட்டு விட்டார் என்றால், இதில் `புத்தம் புது காலை.’

இது நாயகியை அறிமுகப்படுத்தும் பாடலாக இருந்திருக்க வேண்டும். பாடலை மிக அழகாகப் படம் பிடித்து, படத்தில் இணைத்தும் விட்டிருக்கிறார்கள். ஆனால், படத்தின் நீளம் காரணமாக வேறு வழியேயின்றி இதை நீக்க வேண்டியிருந்ததாக சமீபத்திய வீடியோ ஒன்றில் ஆதங்கம் வழிய சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.

ஆனால், ஆறுதல் தரும் வகையில் இதே பாடல், ராஜாவின் நவீன இசையில் `மேகா’ படத்தில் இடம் பெற்றது. இந்தப் படத்தின் பின்னணி இசையிலும் பல இடங்களில் கலக்கியிருப்பார் ராஜா. `ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலுக்கு முன்பு வரும் இசை இதற்கு சிறந்த உதாரணம். போலவே ஈரல் வறுவலை எடுத்துக்கொண்டு கார்த்திக், ராதாவைத் தேடிச் செல்லும் காட்சியில் ஒலிக்கும் வயலின் இசையை ஒரு மினி `சிம்பொஃனி’ விருந்து எனலாம்.


இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் B.கண்ணனைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பாடல் காட்சியிலும் இவர் வைத்த, கோணங்கள், ஃபிரேம்கள் அனைத்துமே பார்வையாளனுக்கு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும்.

இது அடிப்படையில் காதல் திரைப்படம் என்பதால் காதலர்களுக்கிடையே உள்ள நெருக்கம், பிரிவு, ஏக்கம் போன்றவற்றை பொருத்தமான கோணங்களில் பதிவு செய்திருப்பார்.

பாடல் காட்சிகள் என்றல்ல, இதர காட்சிகளிலும் B.கண்ணனின் முத்திரை அழுத்தமாகப் பதிந்திருக்கும். உதாரணத்துக்கு தியாகராஜனின் அறிமுகக்காட்சியில், அவரது வீட்டின் முன் ஏழை மீனவர்கள் நின்றிருக்க, இவர் பைக்கில் வந்தபடியே அவர்களைப் பார்க்கும் காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கும் விதம் அற்புதமானது.

கன்னியாகுமரியில் உள்ள முட்டம் கிராமத்தில் இதன் பெரும்பான்மையான காட்சிகள் மிகுந்த அழகியலுடன் படமாக்கப்பட்டிருக்கின்றன. அங்குள்ள அழகான சர்ச்சும், கடற்கரையும் அலையும், மணலும், பாறையும், சாயங்காலத்தின் மஞ்சள் வெளிச்சமும்... என ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் போல அலங்கரித்திருப்பார் கண்ணன்.

இளமை பொங்க காதலைச் சொன்ன விதத்திலும் சரி, புத்துணர்ச்சியுடன் காட்சிகளைப் பதிவாக்கியதிலும் சரி, மரபை உடைத்த அந்த க்ளைமாக்ஸும் சரி... 80-களில் உருவான புதிய அலைத் திரைப்படங்களின் ஒரு முக்கியமான படம் என்று `அலைகள் ஓய்வதில்லை’ படத்தைச் சொல்லலாம்.

ஆனால், விடலைப் பருவத்தின் காதலை மிக அதிகமாக ரொமாண்டிசைஸ் செய்த விதத்தில் இயக்குநரின் பொறுப்பற்ற தன்மையையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். இனக்கவர்ச்சி காரணமாக இளமைப்பருவத்தில் பரஸ்பரமான பாலியல் ஈர்ப்பு ஏற்படுவது சகஜமே. அந்தச் சமயத்தில் இளைஞர்களுக்கு வானத்தை வில்லாக வளைத்துப் பார்க்கும் வீரமெல்லாம் ஏற்படும். ஆனால், எதார்த்தம் என்பது வேறானது.

அது உண்மையான காதல்தானா அல்லது தற்காலிக ஈர்ப்பா என்பதை அறிய மிகப் பொறுமை வேண்டும். பெரியவர்களின் வழிகாட்டுதல் வேண்டும். ஓர் உண்மையான காதல் என்பது அதன் பொறுமையிலும் முதிர்ச்சியிலும்தான் இருக்கிறது. இதில் வரும் காதலர்கள், சினிமா வழக்கப்படி முதலில் சற்று முட்டிக்கொண்டு பிறகு உடனே பிரிக்க முடியாத காதலில் எளிதில் விழுந்து விடுவார்கள். உடனே `நம்தனநம்தன’ தான்!

மதம் அவர்களைத் தடுக்கும்போது அந்த மரபுச் சுவரை உடைத்துக் கொண்டு அவர்கள் முன்னேறுவது சரிதான். சாதி ஒழிப்புக்கு காதல் திருமணம் ஒரு முக்கியமான காரணி என்பதே முற்போக்கு அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், அந்த ஊரை விட்டுச் சென்ற பின் சோற்றுக்கு என்ன செய்வார்கள்? முத்தத்தால் மட்டுமே பசியாறி விட முடியுமா? பாதுகாப்பாக எங்கு தங்குவார்கள்? இப்படி நடைமுறை எதார்த்தம் எழுப்பும் பல கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இருக்கிறதா?

இந்தப் படத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வீட்டை விட்டு ஓர் இளம் ஜோடி வெளியேறி சில ஆபத்துக்களைச் சந்தித்தால் அதற்கு இது போன்ற திரைப்படங்களை இயக்குபவர்கள்தானே பொறுப்பாவார்கள்?

இதே காலகட்டத்தில் வெளிவந்த `பன்னீர் புஷ்பங்கள்’ இந்த விஷயத்தை பக்குவமாக அணுகியது. அதுவும் விடலைப் பருவத்தின் காதல் கதைதான். ஆனால், துளிகூட விரசமின்றி காதலைச் சொன்ன அதே சமயத்தில், ஓடிப் போகும் காதலர்களுக்கு உள்ள ஆபத்தையும் எடுத்துச் சொன்னது. இந்த வகையில் பாரதிராஜாவைவிடவும் பாரதி-வாசு மேலே நிற்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இதே ராதாவை வைத்து நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு காதலை மிக முதிர்ச்சியாகவும் கண்ணியமாகவும் படமெடுத்தார் பாரதிராஜா. அந்த `பாரதிராஜா’தான் நமக்கு அதிகம் தேவையானவர்.
இது போன்ற விமர்சனங்களைத் தாண்டி, இளம் காதலர்களின் முன் நிற்கும் சமூகப் பிரச்னைகளை மிக சுவாரஸ்யமாகவும் அழகியல் உணர்ச்சியுடனும் சொன்ன விதத்தில் `அலைகள் ஓய்வதில்லை’ ஒரு முன்னோடித் திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, மரபை உடைத்த இதன் க்ளைமாக்ஸ்.
எனவேதான் இந்தத் திரைப்படம்… சிறந்த படம், சிறந்த இயக்குநர்... என்று தமிழ்நாடு அரசின் எட்டு விருதுகளை அந்தச் சமயத்தில் வென்றது. பிற்பாடு தெலுங்கிலும் (1981), இந்தியிலும் (1983) இதே இயக்குநரால் ரீமேக் செய்யப்பட்டது.

Wednesday, 29 April 2020

இர்ஃபான் கான்- `ஜுராசிக் பார்க்' பார்க்க காசில்லாதவர், `ஜுராசிக் வேர்ல்டு'-ல் நடித்த சாதனை!

சிறு வயதில் அவருக்கு ஓர் ஆசை இருந்திருக்கிறது. படங்களில் வருவதுபோல், ஒரு பெட்டி நிறைய பணத்தோடு தன் அம்மாவை சந்திக்க வேண்டுமென. அந்த ஆசையை நிகழ்த்தி, தன் அம்மாவை சந்தோஷப்படுத்தினாரா எனத் தெரியவில்லை. நிச்சயம் உலகம் கொண்டாடும் ஒரு நடிகனாகத் தன் அம்மாவை சந்தோஷப்படுத்தியிருப்பார்.


ஒரு நடிகனின் வேலை இன்னொருவனாக மாறுவது அல்ல. அந்த கதாபாத்திரத்தில் மறைந்துள்ள நிஜத்தை வெளிக்கொண்டுவருவதுதான். அப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அதன் உண்மையை நமக்கு உணர்த்தியவர், நடிகர் இர்ஃபான் கான். பாலிவுட்டில், கடந்த 20 ஆண்டுகளில் இர்ஃபான் நிகழ்த்தியவை யாரும் நினைத்துப் பார்க்க முடியாதவை. ஆனால் அந்த இடத்தை அடைந்து, அதைச் செய்துமுடிக்க அவர் செய்த நீண்ட காத்திருப்பும், கடின உழைப்பும் ஏராளம்.

1967-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தில் செல்வந்தர் வீட்டு மகனாகப் பிறந்தார் இர்ஃபான் கான். அவருடைய முழுப்பெயர் சஹாப்சாதே இர்ஃபான் அலி கான். இர்ஃபானுக்கு முதல் காதல், கிரிக்கெட் மீதுதான். கிரிக்கெட்டர் ஆகும் கனவோடு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி, ரன்களை விரட்டிக்கொண்டிருந்த அவருக்கு, ஒரு பெரிய தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவருடைய பெற்றோர் அவரை விளையாட அனுமதிக்கவில்லை. அதனால் கிரிக்கெட் மீதான காதலைப் புதைத்துவிட்டு, படிப்பிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினார் இர்ஃபான்.



1984-ம் ஆண்டு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனக்குள் ஒளிந்திருக்கும் திறமையான நடிகனை அங்குதான் அவர் கண்டுகொண்டார். ஒருபுறம் எம்.ஏ டிகிரியும் படித்துக்கொண்டு, இன்னொருபுறம் நடிப்புக் கல்வியும் பயின்ற இர்ஃபான், நாடகக் கலையில் டிப்ளமோவும் முடித்தார். அவர் மும்பைக்கு வந்த நாள்களில், ஏர் கன்டிஷனர் மெக்கானிக்காகவும் பணிபுரிந்தார். அவர் முதன்முறையாக ஏர் கன்டிஷனர் பழுதி நீக்கியது, பாலிவுட்டின் லெஜெண்ட் ராஜேஷ் கண்ணா வீட்டில்.


1988-ம் ஆண்டு கோர்ஸ் முடியும் தருவாயில், மீண்டும் ஒரு அற்புதமான வாய்ப்பு இர்ஃபானைத் தேடி வந்தது. ஆஸ்கரின் சிறந்த அயல்நாட்டு சினிமா பிரிவில், இந்தியா சார்பாகப் பரிந்துரைக்கப்பட்ட 'சலாம் பாம்பே" திரைப்படத்தில் நடிக்க இர்ஃபானை தேர்வுசெய்தார், படத்தின் இயக்குநர் மீரா நாயர். ஆனால், சில காரணங்களால் படத்தின் ஒரே ஒரு காட்சியில் மட்டும்தான் மீராவால் இர்ஃபானை பயன்படுத்த முடிந்தது. இர்ஃபானின் 6 அடி 1 அங்குலம் உயரமே அதற்கு காரணமாகவும் சொல்லப்பட்டது. மனமுடைந்த இர்ஃபான், பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில், சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.



1995-ம் ஆண்டு, நேஷனல் ஸ்கூல் டிராமாவின் சக மாணவியும், எழுத்தாளருமான சுதாபா சிக்தாரை திருமணம் செய்துகொண்டார். இந்த இணையரின் காதலுக்கு, பபில் மற்றும் அயன் என இரு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 12 வருடங்கள் இப்படியே கடந்து சென்றன. ஒரு கட்டத்தில், நடிப்புத்தொழிலையே மொத்தமாக விட்டுவிடலாம் என எண்ணியவருக்கு, கடல் கடந்து ஒரு வாய்ப்பு வந்தது. பிரிட்டிஷ் இயக்குநரான ஆசிஃப் கபாடியா, தன்னுடைய 'தி வாரியர்' படத்தின் கதாநாயகன் வேடத்தை இர்ஃபானுக்குத் தந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்தார். பாலிவுட்டில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல், நல்ல நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடிக்க ஆரம்பித்தார் இர்ஃபான். பிரமாதமான நடிகனாகப் பரிணமித்தார்.

2005-ல் வெளியான `ராக்' திரைப்படம், இர்ஃபான் ஹீரோவாக நடித்த முதல் கமர்ஷியல் படமாக அமைந்தது. அவர் பெயரில் இருக்கும் கூடுதலான ஒரு `R'-க்கு காரணம், நியூமராலஜி அல்ல. அவ்வாறாக அழுத்தி தன் பெயரை உச்சரிப்பது, அவருக்குப் பிடிக்கும் என்பதுதான். 'மெட்ரோ', 'பான் சிங் டோமர்', 'தி லன்ச்பாக்ஸ்' என வித்தியாசமான கேரக்டர்கள் முலம் அனைவரையும் வியக்கவைத்தார். இந்திய சினிமாவைத் தாண்டி உலக அளவிலும் தனக்கான முத்திரையைப் பதித்தார் இர்ஃபான். 'ஸ்லம்டாக் மில்லினியர்', 'லைஃப் ஆஃப் பை', 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்', 'இன்ஃபெர்னோ' என உலகம் முழுதும் தன் நடிப்புக்கு தனி ரசிகர்களை உருவாக்கினார். ஆஸ்கர் விழாவில் இவரைப் பார்த்த ஜூலியா ராபர்ட்ஸ் 'நான் உங்கள் ரசிகை' என சொல்லிச் சென்றிருக்கிறார்.



மாபெரும் ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், தனது `இன்டர்ஸ்டெல்லார்' படத்தின் முக்கியமான வேடத்தில் நடிக்கவேண்டி இர்ஃபானை அணுகினார். ஆனால், அப்போது `லன்ச் பாக்ஸ்' மற்றும் `டி டே' கமிட்டாகியிருந்த காரணத்தினால் மறுத்துவிட்டார். `ஸ்லம்டாக் மில்லினியர்' மற்றும் `லைஃப் ஆஃப் பை' என இரண்டு ஆஸ்கர் திரைப்படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் இர்ஃபான்தான். தன் நடிப்பிற்கான பல அங்கீகாரங்களைப் பெற்ற இர்ஃபான், இன்று நம்மோடு இல்லை. அவர் தாய் இறந்து மூன்றே நாள்களில் அவரும் பிரிந்துவிட்டார். சிறு வயதில் அவருக்கு ஓர் ஆசை இருந்திருக்கிறது. படங்களில் வருவதுபோல், ஒரு பெட்டி நிறைய பணத்தோடு தன் அம்மாவை சந்திக்க வேண்டுமென. அந்த ஆசையை நிகழ்த்தி தன் அம்மாவை சந்தோஷப்படுத்தினாரா எனத் தெரியவில்லை. நிச்சயம் உலகம் கொண்டாடும் ஒரு நடிகனாக உயர்ந்து, தன் அம்மாவை சந்தோஷப்படுத்தியிருப்பார்.





1993-ம் ஆண்டு `ஜுராசிக் பார்க்' வெளியானபோது, அதற்கு டிக்கெட் எடுக்க காசில்லாமல் இருந்த இர்ஃபான், பின்னாளில் `ஜுராசிக் வேர்ல்டு' படத்தில் நடித்தார். அவர் ஆறடி உயரத்திற்குக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்காக, அவர் நிராகரிப்புக்கும் ஆளாகியிருக்கலாம். ஆனால், புகழின் இந்த உயரத்தை அடைய, அவர் மட்டுமே காரணம். அவர் கடின உழைப்பும் விடா முயற்சியுமே காரணம். அதில் அவரை யாராலும் நிராகரிக்க முடியாது. காலம் கடந்து நிற்கக்கூடிய பெரும் கலைஞன் இர்ஃபான்.

Wednesday, 15 April 2020

காலத்தை வென்ற காவியத் தலைவன்

நல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் எம்.ஜி. இராச்சந்திரன். ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில் மட்டுமன்றி உலக மக்கள் மனதிலும் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறார். இவரின் புகழை எந்தக் காலத்திலும் எவராலும் எட்டிவிட முடியாது.


தர்மத்தின் காவலனாய், கொடையிலே கர்ணனாய், கலையிலே மன்னனாய், கருணையிலே பொன்மனச் செம்மலாய், கருத்துக்கொள்கையிலே புரட்சித் தலைவராய், ஏழைகள் இதயத்திலே மன்னாதி மன்னனாய், மக்கள் மனதிலே திலகமாய் ஒளிர்ந்த எம்.ஜி.ஆர். மனிதருள் மாணிக்கமாகத் திகழ்ந்தார். இவரது கருணைப் பார்வை பட்டு எண்ணற்ற மக்கள் வளமான வாழ்வு பெற்றனர். இவர் ஏழைகள் மீது தன் உயிரையே வைத்திருந்தார்.
இந்தியாவிலுள்ள கேரளாவிலிருந்து வந்து ஈழவள நாட்டின் கண்டிமா நகரிலே குடியிருந்த மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியவதி அம்மையாருக்கும் 17.01.1917ஆம் ஆண்டு கடைக்குட்டியாக எம்.ஜி. இராச்சந்திரன் பிறந்தார். இவருடைய உண்மைப் பெயர் ராம்சந்தர் நாயர். இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கவே ஈழத்தினின்றும் தமிழகத்திற்குத் தன் பிள்ளைகளுடன் குடிபெயர்ந்த அன்னை சத்தியவதி, வறுமையின் கோரப்பிடியில் வாடினார். பிள்ளைகளுக்கு ஒருநேரக் கஞ்சி ஊற்றவே கதியற்றுக் கலங்கினார். இதனால், எம்.ஜி.ஆர். 3ஆம் தரத்துடன் கல்விக்கு முழுக்குப் போட்டார்.
அன்னை தான் தெய்வம் என நினைந்து, தாய் சொல் தட்டாத உத்தமபுத்திரனாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தன் அன்னை வறுமையால் வாடுவதைச் சகிக்க முடியாத இவர், தனது 7ஆவது வயதில் அண்ணன் சக்ரபாணியுடன் இணைந்து நாடக மன்றங்களில் நடித்து வந்தார். பின்னர் 19ஆவது வயதில் ‘சதிலீலாவதி’ எனும் திரைப்படத்துடன் திரையுலகில் காலடி பதித்தார். தனது 30ஆவது வயதில் அதாவது, 1947ஆம் ஆண்டு ‘ராஜகுமாரி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்துப் பெற்றார். எனினும், வறுமை அவரை விட்டுப் போவதாக இல்லை.
இவ்வுலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கார்ல் மார்க்ஸின் தத்துவத்திற்கிணங்க எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் மாற்றம் வந்தது. 30 வயதுக்கு மேல் ‘சந்திரோதயம்’ 40இற்கு மேல் ‘சூரியோதயம்’ என்று சடுதியாகத் திரையுலகில் வளர்ந்தார், இமயமென உயர்ந்தார். அறிஞர் அண்ணாவின் நிழலில் அருமைத் தம்பியாக வளர்ந்த இவர், நன்றி மறவாத நல்மனம் படைத்தவராகக் கடைசிவரை வாழ்ந்தார். தனது திரைப்பாடல்கள் மூலம் அண்ணாவை அவர் போற்றிவந்தார்.
கலையுலகில் சந்திரனாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த வேளை, 1977ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சரானார். அரசியல், சமுதாய நோக்கம் நிறைவேறக் கலை சிறந்த சாதனம் என்பதை நிரூபித்துக் காட்டிய எம்.ஜி.ஆர், தமிழகத்தில் முதலமைச்சராகிய முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர். தனது கலையுலக வாரிசான செல்வி ஜெயலலிதா ஜெயராமை அரசியலிலும் வாரிசாக்கி, தான் வரித்துக்கொண்ட அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமித்தார்.
பெரியார் வழி நின்று, பெருந்தலைவர் காமராஜர் கொள்கையைப் பின்பற்றி ஏழைகள் வாழ்வு ஏற்றம் காண உண்மையாக உழைத்த உத்தமரான எம்.ஜி.ஆர், ஏழைகளுக்குக் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தவர். ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை, பாடசாலைகள் ஸ்தாபித்தவர். ஏழைச் சிறார்களுக்கெனச் சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர். தன் சொத்துக்கள் யாவையுமே ஏழைகளின் இதய வங்கிகளில் வைப்புச் செய்தவர். பெண்கள் மீது தனி மரியாதை செலுத்தி, எல்லோரையுமே அன்னையராய், அன்புச் சகோதரிகளாய் மதித்தவர். அம்புலி காட்டி அமுதூட்டும் அன்னையர் வாழும் தமிழ் நாட்டில் – சந்திரனே வந்து அன்னையர்க்கும் சோறூட்டிய கலியுக வள்ளலாகத் திகழ்ந்தவர்.
ஈழத் தமிழர்கள் பால் அளவற்ற பற்றும் பாசமும் கொண்ட இவர், ஈழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தனது சொந்த நிதியிலிருந்து இருகட்டங்களாக மொத்தம் 6 கோடியே 37 இலட்சம் ரூபாவைக் கொடுத்து உதவியவர். அதுமட்டுமன்றி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருடனும் நெருங்கிப் பழகிய இவர், ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர்.
மக்கள் துயர் துடைத்து – மக்கள் பணி புரிந்து – மக்களுக்காகவே இறுதிவரை வாழ்ந்ததால், ‘மக்கள் திலகம்’ என்றும் – புன்சிரிப்போடு பொன் பொருளை வாரி வாரி வழங்கியதால், ‘பொன்மனச் செம்மல்’ என்றும் – நடிப்புலகில் புதுமைகளைப் புகுத்தியதால், ‘புரட்சித் தலைவர்’ என்றும் – மக்களுக்கெல்லாம் தன் நடிப்பின் மூலம் பாடம் புகட்டி வந்ததால், ‘வாத்தியார்’ என்றும் – பாரத நாட்டின் ஒப்பற்ற தலைமகன்களில் ஒருவராக விளங்கியதால், ‘பாரத ரத்னா’ என்றும் – கலையுலகில் இணையற்று விளங்கியதால், ‘கலையுலக மன்னன்’ என்றும் பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் வென்ற எம்.ஜி.ஆர். உண்மையில் ஒரு தனிப்பிறவி தான்.
பெயருக்குள் பொதிந்திருக்கும் எண் பொருத்தத்தில் மேலை நாட்டவர்களும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில், இவரது மூன்றெழுத்து இரகசியம் (எம்.ஜி.ஆர்.) ஜோதிட உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதாவது, மருதூரைக் குறிக்கும் ஆ எழுத்தையும் தகப்பனாரான கோபாலமேனனின் முதல் எழுத்தான பு எழுத்தையும் இராமச்சந்திரன் என்கின்ற தனது முதல் எழுத்தான சு ஐயும் உன்றிணைத்து ஆ.பு.சு. என்று தனது பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொண்டவர். இப்பெயர்ச் சுருக்கத்தின் அதிர்ஷ்ட பலனே அவரது அனைத்து வெற்றிகளுக்கும் உறுதுணையாக அமைந்திருந்தது என்று ஜோதிட உலகில் வியப்புடன் பேசப்படுகிறது. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்…” என்று அவர் பாடி நடித்ததைப் போன்று அவரது புகழ் என்றுமே அழியாது.
மேலும், “காலத்தை வென்றவன் நீ, காவிய நாயகன் நீ…” என்று அடிமைப்பெண் திரைப்படத்தில் ஜெயலலிதா பாடி நடித்தது போன்று எம்.ஜி.ஆர். காலத்தை வென்று வாழ்கிறார். இவர் மண்ணுலகிலே மூன்று தடவைகள் உயிர் பிரியும் அளவுக்குக் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு மக்கள் பிரார்த்தனையால் தப்பியவர். நான்காவது தடவை ஏற்பட்ட அந்நோயினால் இவ்வுலகை விட்டுப் பிரிந்தவர்.
எல்லோருக்கும் நல்லவரான, ஏழைகளின் இதயத்தில் நிறைந்தவான எம்.ஜி.ஆர்., சொல்லும் செயலும் ஒன்றாய்ச் சேர்ந்த சாதனைத் தலைவர். இன்று அவர் எம்மத்தியில் இல்லை. இப்படி ஒருவர் பிறந்ததில்லை, இனியும் ஒருவர் பிறப்பதில்லை எனும் அளவிற்கு வாழ்ந்து காட்டியவர். நீதிக்குத் தலைவணங்கிய நல்ல இதயம், நாடோடி மன்னனாக வலம் வந்த அன்பு உள்ளம் தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து 24.12.1987ஆம் ஆண்டு பிரிந்து சென்றுவிட்டது.
காலத்தை வென்றவர், காவிய நாயகர், கருணையின் தூதுவர் எம்.ஜி.ஆர். கடையெழு வள்ளல்கள் வடிவினில் உலவிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். தோன்றிற் புகழொடு தோன்றுக ன்ற குறளுக்குச் சான்றாய் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர் துயர்;தனைத் துடைத்திட மீண்டும் இந்த மண்ணிலே பிறக்க வேண்டும் எம்.ஜி.ஆர்.

Monday, 10 June 2019

கிரிஷ் கர்னாட்: ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மொழி உரிமைக்கும் ஒலித்த குரல்

நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர்,இலக்கியவாதி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்ட கிரிஷ் கர்னாட், தனது 81 வது வயதில் இன்று காலமானார். தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரமாக வலம் வந்த இவர், வில்லன் நடிகர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிடக் கூடியவர் அல்ல, இந்திய சினிமா உலகில் ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றவர்.




பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற அரசு விருதுகளையும், பிலிம் பேர் போன்ற திரைத்துறைகள் சார்ந்து பல விருதுகளும் பெற்றவர். இதிகாச, வரலாற்று கதைகளை நவீன சிக்கல்களோடு தொடர்புபடுத்தி நிறைய நாடகங்களை எழுதியவர். இந்திய இலக்கிய உலகில் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஞான பீட விருதினை பெற்ற எழுத்தாளர்.
 
மஹாராஷ்டிராவில் உள்ள மாதேரன் என்னும் மலைப்பிரதேசத்தில் பிறந்தவர். பள்ளிப்பருவம் வரை மராட்டிய மாநிலத்தில் படித்த கிரிஷ் பின்பு கர்நாடகாவிற்கு வந்தவர். கர்நாடக பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியலில் இளங்கலைப்பட்டமும் , ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் தத்துவப்படிப்பில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.
 
1963ம் ஆண்டில் ஆக்ஸ் போர்ட் யூனியனின் தலைவராக இருந்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக பதிப்பகத்தில் எழுத்தாளராகவும் இருந்தார். கர்நாடகாவிற்கு வந்த பிறகு நாடக குழுக்களோடு இணைந்து செயல்பட ஆரம்பித்த இவர், கன்னட மொழியில் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1961ல் தனது 23வது வயதில் யயாதி என்னும் நாடகத்தினை எழுதி வெளியிட்டார். இவரது திப்பு சுல்தான் கதை இன்று வரை புகழ் பெற்றதாய் இருக்கிறது. இவரது எழுத்துக்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.



 
1970 ல் , சம்ஸ்காரா என்னும் கன்னட சினிமாவில் தொடங்கியது இவரது திரைப்பயணம், அப்படத்தின் திரைக்கதை ஆசிரியராகவும் இருந்தார் கிரிஷ் கர்னாட். திரைப்படம் குடியரசுத்தலைவரின் தங்கத் தாமரை விருதினை பெற்றது. அதன் பிறகு பல தென்னிந்திய மொழிகளிலும், இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், ரட்சகன், நான் அடிமை இல்லை, காதலன், மின்சாரக் கனவு மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.
 
இந்தியில் 2012ல் வெளியான ஏக்தா டைகர் திரைப்படத்தில் டாகட்ர் செனாய் என்னும் பெயரில் தலைமை உளவுத் துறை அதிகாரியாக நடித்து இருந்தார், அப்படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹை 2017ல் வெளியானது. அதிலும் டாக்டர் செனாய் ஆக நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட், இதுவே இவரது கடைசித் திரைப்படம் ஆனது.
 
கிரிஷ் கர்னாட், ஒற்றை தேசக் கொள்கைகளுக்கு எதிரானவர். இந்துத்துவா அமைப்புகளையும் , செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்தவர். இந்தியா என்பது பல வேறு பண்பாடுகளையும், பல மொழி பேசும் மக்களையும் கொண்டது, அந்த பன்முகதன்மையினையும், மொழிகளையும் இழக்க முடியாது என்ற கருத்தினை வலியுறுத்தி வந்தார். எழுத்தாளர் கல்புர்கி கொலையினை தொடர்ந்து , கருத்துரிமைக்காக தொடர்ந்து குரல் வந்தார். கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட பொழுது, இவரும் வலதுசாரி அமைப்புகளால் குறிவைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது.
 
வலது சாரி இந்துத்துவ அமைப்புகள், இந்துத்துவாவிற்கு எதிராக செயல்படுகின்ற எழுத்தாளர்களை குறிவைத்துள்ளதாகவும், அதில் முக்கியமாக இடம் பெற்றுள்ள நபர் கிரிஷ் கர்னாட் எனவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று கூறும் விதமாக , கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு 'Me Too Urban Naxal' என்று பொறிக்கப்பட்ட அட்டையினை கழுத்தில் அணிந்து கலந்து கொண்டார்.
 
கிரிஷ் கர்னாட் வாழ்ந்த சிர்ஸியில் வசிக்கும், செயல்பாட்டாளர் பாண்டு ரங்கே ஹெக்டே , கிரிஷ் கர்னாட்டின் எழுத்துக்கள் குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். கிரிஷ் கர்னாட் , எப்பொழுதும் தனது எழுத்துப் பயணத்தின் அடித்தளம் அமைந்த இடம் இதுதான் என்று சிர்ஸியினை பற்றி கூறுவார். இங்குள்ள வட்டார நாடக குழுக்களின் மூலமாகவே அவரது நாடக பயணங்கள் வலுவடைந்தது. அவரது எழுத்துக்கள் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கும், வரலாற்று புதினங்கள், நாட்டார் வழக்குகளில் உள்ள கதாபாத்திரங்களை எடுத்து , நவீன சூழல்களில் பொருத்தி ஆழமான கருத்துக்களை எளிய வடிவில் , மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவர். அவரது எழுத்துக்கள் மிக எளிமையானவை, எளிய மனிதர்கள் பயன்படுத்தும் மொழியினையே அதிகம் பயன்படுத்துவார்.பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் வலிமையான கருத்துடையவர் கிரிஷ் கர்னாட் . அவர், மிக சிறப்பான ஆங்கிலப்புலமையுடையவர் எனினும் , பெரும்பான்மை படைப்புகள் கன்னடத்தில் தான் இருக்கும். மராத்தி சமேதானத்திலும் தலைவராக இருந்துள்ளார்.
 
பண்பாட்டு பன்முகத்தன்மையும் , பன்மொழிதன்மையும் தான் இந்தியாவின் அடித்தளமாய் இருக்க வேண்டும் என்று கிரிஷ் கர்னாட் அடிக்கடி கூறுவார் என்கிறார் பாண்டு ரங்கே ஹெக்டே.
 
கிரிஷ் கர்னாட்டின் மறைவிற்கு கர்னாடக அரசு ஒரு நாள் விடுமுறையும், மூன்று நாள்கள் அரசுமுறைத் துக்கமும் அறிவித்துள்ளது.

வெறும் மோகன் ‘கிரேஸி’ மோகன் ஆனது எப்படித் தெரியுமா?

தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
நாடக ஆசிரியரான இவர் பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோதே, நடுநடுவே நாடகங்களை போடுவார்.
அப்படி இவரது நாடகத்தை பார்க்க வந்த, இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாராட்டி தள்ளி விட்டார். அதுதான் சினிமாவுக்குள் கிரேஸியை உள்ளே புகுத்தியது. பொய்க்கால் குதிரை படம் மூலம் சினிமா பயணம் தொடங்கியது.


மோகன் ரங்காச்சாரி எனும் இயற்பெயரைக் கொண்டவர், கிரேஸி மோகனாக மாறிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.
பொய்க்கால் குதிரையில் ஆரம்பித்து, இன்று வரை தமிழ் சினிமாவின் சிரிப்பு மருந்தாக திகழ்ந்தவர் கிரேஸி மோகன். நாடகங்கள், சினிமாக்கள், தொலைக்காட்சி என எல்லாவற்றிலும் சிரிப்பு ராஜ்ஜியம் நடத்தியவர் இவர்.
மோகன் ரங்காச்சாரி என்பது தான் கிரேஸி மோகனின் இயற்பெயர். மெக்கானிக் எஞ்சீனியரிங் படித்த மோகன், எழுத்துறைக்கு வந்த கதைச் சுவாரஸ்யமானது. வெறும் மோகனாக இருந்த அவரது பெயருக்கு முன்னால் கிரேஸி என்ற பெயர் ஒட்டிக் கொள்ள காரணமாக இருந்தது ஒரு நாடகம் தான்.


கல்லூரிக் காலங்களில் ஸ்கிட் எனப்படும் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டு வந்தவர் மோகன். படித்து முடித்ததும், நல்ல வேலை கிடைத்தது. ஆனால், எழுத்தின் மீது இருந்த தீராக்காதலால் நாடகம் போடும் முயற்சியில் ஈடுபட்டார்.
எஸ்.வி.சேகர் இவருக்கு பள்ளியில் சீனியர். அந்த நட்பில் அவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். அப்படித்தான் அவரது முதல் நாடகமான கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் மேடையேறியது. பயங்கர ஹிட்டான அந்த நாடகத்தின் பிரபல வசனங்கள் வார இதழில் தொடராக வந்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானது.
இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட முறை கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் அரங்கேற்றம் ஆகியுள்ளது. அந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தான் சினிமாவுக்குச் சென்றார் மோகன். ஆனால், சினிமாவில் வசனம் எழுதிய போதும், தொடர்ந்து நாடகங்கள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.



முதல் வெற்றி எப்போதும் பெயரோடு ஒட்டிக் கொள்வது வழக்கம் தானே. அப்படித்தான் சி.மோகன், கிரேஸி மோகன் ஆனார். அந்த நாடகத்திற்குப் பிறகு அவர் எவ்வளவோ நாடகங்கள் எழுதியபோதும், கிரேஸி மட்டும் அவரது பெயரோடே சிரிப்பு பசையால் ஒட்டிக் கொண்டது. கிரேஸி என்பது அவரது அடையாளமாகவே மாறிப் போனது. பலருக்கும் அவரது மோகன் என்ற பெயரைவிட கிரேஸி என்பது தான் மனதில் பதிந்து போயுள்ளது.
"டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி.." இதுதான் கிரேஸி மோகனின் தாரக மந்திரம். அது அவரது பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். படங்களில் காமெடி இருக்கும். ஆனால் காமெடியையே ஒரு முழு படமாக எழுதும் திறமை கிரேஸிக்கு மட்டுமே உண்டு. இதனை மிக சரியாக பயன்படுத்தி கொண்டவர் கமல்ஹாசன்தான்!


இதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியதே சாட்சி!

லட்சக்கணக்கானோர் மனதுக்கு பிடித்தமான கிரேஸி மோகன் அற்புதமான மனிதர் மட்டுமல்ல.. காயம்பட்ட இதயத்துக்கு மருந்தானவரும்கூட. ரொம்ப வேகமாக வேகமாக பேசுவார்.. எப்பவுமே இவரது பேச்சில் ஒரு ஸ்பிரிட் இருக்கும். வெத்திலை - பாக்கு - சீவல்தான் இவரது ட்ரேட் மார்க்!

ஒரு காமெடியை பார்த்து சிரித்து முடிப்பதற்கு முன்பேயே இன்னொரு காமெடி வந்து நம்மை திக்குமுக்காட செய்வதுதான் கிரேஸியின் டச் & பஞ்ச்! கடந்த சில வருடங்களாக இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. எனினும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார்.



இந்நிலையில், தீவிர கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கவலைக்கிடமான நிலையில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபலங்களும், பொதுமக்களும் கிரேஸி மோகன் உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று இணையத்தில் ட்வீட்கள், கமெண்ட்கள் போட்டு பிரார்த்தனை செய்து வந்தனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனின்றி கிரேஸி மோகன் காலமானார். இந்த தகவலை கேட்டதும், சினிமா, நாடக உலகமே பெரும் சோகம் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது.



Saturday, 25 May 2019

பேட்டி கிடையாது; பார்ட்டி கிடையாது. கவுண்டமணி அந்தக் காலத்து அஜித்!

100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள தமிழ் சினிமாவைக் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம், தன்னுடைய நக்கல் பேச்சுகளாலும், நய்யாண்டித்தன நகைச்சுவையாலும் ஆட்சி செய்தவர், நடிகர் கவுண்டமணி.  வயது பேதமில்லாமல், எல்லோராலும் கொண்டாடப்பட்ட வெகுசில கலைஞர்களில் ஓர் அதிசயக் கலைஞர் அவர். இன்று 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கவுண்டமணி பற்றிய சில தகவல்கள் இவை.
இளம் வயதிலேயே நாடகங்கள், திரைப்படங்களில் தலைகாட்டியிருந்தாலும், கிட்டத்தட்ட நடுத்தர வயதை எட்டும்போதுதான் கவுண்டமணிக்கு சரியான வாய்ப்புகள் வரத்தொடங்கின. நாகேஷ் நடித்த `சர்வர் சுந்தரம்' படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், எம்.ஜி.ஆர் நடித்த `கண்ணன் என் காதலன்’ படத்தின் மூலம்தான் திரையில் `நட ஸ்டேஷனுக்கு!' என்ற தனது முதல் வசனத்தைப் பதிவு செய்தார், கவுண்டமணி. கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தமிழ் சினிமாவின் இருபெரும் துருவங்களைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த '16 வயதினிலே' படம்தான் கவுண்டமணியையும் தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டியது. அதில், அவர் பேசிய 'பத்த வெச்சிட்டியே பரட்ட' வசனம் கொண்டாடப்பட்டது. பிறகுதான், கவுண்டமணிக்காகவே தனியாக காமெடி டிராக்ஸ் உருவாக்கப்பட்டது.



கவுண்டமணியோடு இணைந்து நடிக்கும் கதாநாயகர்களெல்லாம் தவறாது சொல்லும் ஒரு விஷயம், கவுண்டமணியின் டைமிங் சென்ஸ். காட்சியைப் படமாக்கிக்கொண்டிருக்கும்போது கவுண்டமணியின் டைமிங் சென்ஸ் அந்தளவிற்குக் கச்சிதமாக இருக்குமாம். அதேசமயத்தில், எப்பேர்ப்பட்ட கதாநாயகர்களுக்கும் கவுண்டமணியுடன் நடிப்பதென்றால் சற்று பயம்தான்.  காரணம், காட்சி படமாகிக் கொண்டிருக்கும்போதே கவுண்டமணி  ஏதாவது கவுன்டர் அடித்துவிட, கதாநாயகர்களும் அடக்க முடியாமல் சிரித்து விழ, அந்த ஷாட் மீண்டும் மீண்டும் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுமாம். கூடவே, கவுண்டமணி என்னதான் வயதில் மூத்தவராக இருந்தாலும், எல்லா இளம் கதாநாயகர்களுக்கும் ஈடுகொடுத்து நடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருவகையில் பார்த்தால், அதுதான் கவுண்டமணியின் வெற்றி.




பலருடன் நடித்திருந்தாலும், சத்யராஜூடன் கூட்டணி சேரும்போது மட்டும் கவுண்டமணியின் `லொள்ளு' கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இந்தக் கூட்டணி முதன்முறையாக இணைந்து நடித்த `வேலை கிடச்சிடுச்சு' முதல் `பொள்ளாச்சி மாப்பிள்ளை' வரை சினிமாவில் இவர்கள் இருவரும் அடித்த லூட்டிகளுக்கு அளவில்லை. 

ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டால், படப்பிடிப்பிலிருந்து டப்பிங் வரை... சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் வந்துவிடுவாராம், கவுண்டமணி. சில நேரங்களில், துணை இயக்குநர்களை அழைத்துக்கொண்டு டப்பிங் பேசிவிட்டு வந்துவிட, அதன் பிறகுதான் படத்தின் இயக்குநருக்கே கவுண்டமணி டப்பிங் பேசிய விஷயம் தெரியவருமாம். அந்தளவிற்கு, தனது வேலைகளைச் சிரமெடுத்து முடிப்பார்.




ஆரம்ப காலங்களில் தனியாகவே நகைச்சுவை செய்து கொண்டிருந்த இவர், பின்னாள்களில் செந்திலுடன் இணைந்து பட்டையைக் கிளப்பினார். 80, 90-களிலிருந்து, இன்றுவரை... கவுண்டமணி - செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவின்  பொக்கிஷக் கூட்டணியாக இருக்கிறது. கதாநாயகர்களைத் தாண்டி, இவர்களது கூட்டணி மிகப்பெரிய வியாபார வாய்ப்பாகப் பார்க்கப்பட்ட காலமும் இருக்கிறது. 80-களிலிருந்து, 90-களின் இறுதிவரை பல படங்களின் பெயர்கள், தற்போதைய இளவட்டத்தின் நினைவுகளில் தேங்கியிருக்கிறதென்றால், அதற்குக் காரணம் இந்தக் கூட்டணிதான். நல்லவேளையாக, கமல் - ரஜினி எடுத்த முடிவுபோல `பிரிந்து நடிப்போம்' என்ற முடிவை இந்தக் கூட்டணி எடுக்கவில்லை.

செந்திலை அடித்து, உதைத்து, திட்டித்தான் கவுண்டமணி பிரபலமானார்  என்ற விமர்சனம் இன்றுவரை இருக்கிறது. உண்மையில், அவர் செந்தில் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருந்ததால்தான், மக்களுக்கு அவரை அதிகம் பிடித்துப்போனது. இவர்களது காலத்தில் புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தவர்களையெல்லாம், அடுத்த தலைமுறை மறந்துவிட்டது அல்லது கேலிக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால், கவுண்டமணியை மட்டுமே `நக்கல் மன்னன்’ என்ற அடைமொழியுடன் போற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், செந்தில் இல்லாமல் `மேட்டுக்குடி', `மன்னன்' போன்ற பல திரைப்படங்களில் தனியாக நடித்து தன்னை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், கவுண்டமணி.




செந்திலை அடித்து, உதைத்து, திட்டித்தான் கவுண்டமணி பிரபலமானார்  என்ற விமர்சனம் இன்றுவரை இருக்கிறது. உண்மையில், அவர் செந்தில் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருந்ததால்தான், மக்களுக்கு அவரை அதிகம் பிடித்துப்போனது. இவர்களது காலத்தில் புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தவர்களையெல்லாம், அடுத்த தலைமுறை மறந்துவிட்டது அல்லது கேலிக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால், கவுண்டமணியை மட்டுமே `நக்கல் மன்னன்’ என்ற அடைமொழியுடன் போற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், செந்தில் இல்லாமல் `மேட்டுக்குடி', `மன்னன்' போன்ற பல திரைப்படங்களில் தனியாக நடித்து தன்னை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், கவுண்டமணி.

செந்திலை அடித்து உதைத்து நடித்துக்கொண்டிருந்த அதே காலத்தில்தான், தான் ஏமாறும்படியான வேடத்திலும் மனமுவந்து நடித்தார். அதற்கு சிறந்த உதாரணம், `சேதுபதி ஐ.பி.எஸ்' திரைப்படம். நம்பியாரிடம் எடுத்தெறிந்து பேசிவிட்டு, செந்திலிடம் சென்று வேலை பற்றிக் கேட்க, அவர் வேலை பற்றிச் சொல்ல, கவுண்டமணி அடையும் ஏமாற்றம் அதகள சிரிப்பு.  

நகைச்சுவை மட்டுமல்ல, சில படங்களில் 'பகீர்' கிளப்பும் வில்லனாகவும் வருவார். திடீரென குணச்சித்திர கதாபாத்திரமாக மனதில் நிற்பார். தமிழ் சினிமாவின் ஹிட் படங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்து வடிகட்டிப் பார்த்தால், அதில் பல படங்களின் வெற்றிக்கும், அள்ளிய வசூலுக்கும் காரணமாக தன் பெயரைப் பதிந்து வைத்திருப்பார், அவர். 

கவுண்டமணி ஒரு வித்தியாசமான மனிதரும்கூட!. பெரும்பாலும் எந்தப் படத்திற்காகவும், எந்த நிகழ்ச்சிக்காகவும் தொலைக்காட்சிகளின் பக்கம் தலைகாட்டியதில்லை. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற எல்லாத்  தொலைக்காட்சிகளிலும் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறாத நாள்களே இல்லை. அந்தளவிற்குப் பலதரப்பட்ட மக்களையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார், இந்த நகைச்சுவை வள்ளல். முதல் மகளின் திருமணத்தின்போதுதான், இவருக்கு கல்யாண வயதில் பெண் இருக்கும் விவரமே வெளியுலகத்துக்குத்  தெரியவந்தது. அந்தளவுக்கு மீடியாவை விட்டு விலகியே இருக்கிறார். அதேபோல, விழாக்கள், பார்ட்டிகள் என எதிலும் கலந்துகொள்ளும் வழக்கமும் இவருக்குக் கிடையாது. இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, `இவர் அந்தக் காலத்து அஜித்குமார்' என ஒரு நிகழ்ச்சியில் கவுண்டமணியை வைத்தே கலாய்த்தார், சந்தானம். 

`தமிழ்ப் படங்கள் தவிர்த்து வேறு எந்த மொழிப் படங்களிலும் நடிக்கமாட்டேன்' என்று சொன்னதோடு, அதை நிகழ்த்தியும் காட்டியவர், கவுண்டமணி. `கிழக்கே போகும் ரயில்' படத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட வசனத்தோடு, எக்ஸ்ட்ரா இரண்டு வசனங்கள் சேர்த்துப் பேசிவிட, இயக்குநர் பாரதிராஜாவிடம் கன்னத்தில் அடிவாங்கினார், கவுண்டமணி. அப்படியே காலங்கள் சுழல பின்னாளில், ஒரு நாளைக்குப் பல லட்சங்கள் கொடுக்கத் தயாராக இருந்தும், கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்காமல் பல முண்ணனி இயக்குநர்கள் தவம் கிடக்கும் நிலையைத் தனது உழைப்பின் மூலம் உருவாக்கினார் இவர். 

இவர் நடிக்க வந்த புதிதில் ஷூட்டிங் முடிந்தவுடன் பெரிய நடிகர்களை நல்ல காரில் அனுப்பி வைப்பார்களாம். கவுண்டமணி போன்ற துணை நடிகர்களைக் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு வண்டியில் ஏற்றிவிடுவார்களாம். ஒருநாள் நேரம் கூடிக்கொண்டேபோக, துணை நடிகர்கள் செல்லும் வண்டி கிளம்பவில்லை. உடனே, நடக்க ஆரம்பித்துவிட்டார் கவுண்டமணி. இதைப் பார்த்த ரஜினி, காரிலிருந்து இறங்கி இவருடன் நடந்து, 'ஒரு நாள் பாருங்க.. நீங்க வாரத்திற்கு ஏழு விதமான காரில் படப்பிடிப்பிற்கு வருவீங்க' என்றாராம், ரஜினி. அவர் சொன்னது அப்படியே நடந்தது. 

கவுண்டமணியின் சிறப்பம்சம், அவரது தனித்துவம்தான். அவரிடம், எந்த நடிகரின் சாயலும் இல்லை. எவரையும் முன்மாதிரியாகக் கொண்டு நடிக்கவில்லை. சினிமாவுக்காக தனது நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் மனிதர்களின் யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் நடிக்கத் தவறவில்லை. அவர் பேசும் வசனங்கள் மற்றவர்களை ஏளனமாகப் பேசுவதாக இருந்தாலும், உண்மையை உணர்த்துவதாக இருந்தது. அதனால்தான் ரசிகர்கள் இவரது நகைச்சுவைகளைப் பெரிதும் ரசித்தனர்; வரவேற்றனர்.  

இவர் நகைச்சுவை நடிகர் மட்டும்தானா... கிடையவே கிடையாது. `சின்னக்கவுண்டர்' படத்தில் விஜயகாந்த் மீது பழிசொல்லும் ஊரார்கள் துணியை இனி துவைக்க மாட்டேன் என்று சொல்லும் அந்தக் காட்சியில், கதைக்குள் பயணிக்கும் பாத்திரமாக மாறி நெஞ்சங்களை நெகிழச் செய்தார். 

வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளிலும், ஊடங்களிலும் கவுண்டமணி இறந்துவிட்டதாகச் செய்திகள் வரும்போது, `ஏன்டா, ஒரு மனுஷன எத்தனவாட்டிடா சாகடிப்பீங்க?’ என அதையும் நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டார். ஒருமுறை படப்பிடிப்புக்காக வெளியூரில் இருந்த சிவாஜி, `மனசு சரியில்ல, யாராவது கவுண்டமணியின் நகைச்சுவை கேஸட்டை வாங்கி வாங்கப்பா' எனச் சொன்னதைக் கேட்டு, கலங்கிவிட்டாராம்.  

ட்விட்டரில் முன்னனி நடிகர்களின் பிறந்தநாளின்போது மட்டும்தான் ரசிகர்கள் வாழ்த்துகளை அள்ளிக்குவித்து டிரெண்ட் ஆக்குவார்கள். முதல்முறையாக நகைச்சுவை நடிகர் ஒருவரின் பெயர் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது, கவுண்டமணிக்குத்தான்!. தற்போது சினிமாவில்  நடிக்காவிட்டாலும், இன்று மீம்ஸ்களின் நாயகனாக வலம் வருகிறார், கவுண்டமணி. இணையதளத்தில் நுழைந்தால் இவரது படத்தையும், வசனத்தையும் வைத்து வராத மீம்ஸ்களே இல்லை. இப்பொழுது புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும், ரசிகர்கள் இவரை தினம்தினம் கொண்டாடித் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனெனில், ரசிகர்கள் மனதில் கவுண்டமணி என்றைக்குமே கதாநாயகன்தான்!

Thursday, 2 May 2019

’தன்னைத் தானே செதுக்கியவன்’ – அஜித்

சிலரின் வாழ்க்கையைத் திரும்பி பார்த்தால் அவர்கள் இருக்கும் இடத்தை அடைய அவர்கள் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு அதற்காக கடினமாக உழைத்து இப்போது இருக்கும் இடத்தை அடைந்திருப்பார்கள். ஆனால் சிலரின் வாழ்க்கை எதிர்பாராத சில விபத்துகளால் தடம்புரண்டு அவர்கள் நினைக்காத ஏதோ ஒரு இடத்தின் உச்சத்தில் அவர்களைக் கொண்டுவந்து வைத்திருக்கும்.



நடிகர் அஜித் இதில் இரண்டாவது ரகம். சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது அவரது ஆசை அல்ல. ரேஸ்களில் கலந்துகொள்வதற்கும் தனக்குப் பிடித்த பைக்குகள் மற்றும் கார்கள் போன்றவற்றை வாங்குவதற்கும் தேவையானப் பணத்திற்காக மாடலிங் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவருக்கு எதிர்பாராமல் பிரேம புஸ்தகம் எனும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைக்கிறது. அதையடுத்து உடனடியாக தமிழில் அமராவதி வாய்ப்புக் கிடைக்கிறது.


அப்போதெல்லாம் சினிமாவில் நாம் தொடர்ந்து நடிக்கப்போகிறோம் என அஜித்துக்கு துளியும் நம்பிக்கையில்லை. படவாய்ப்புகள் கிடைக்கும் வரை சம்பாதித்துவிட்டு தனக்குப் பிடித்த பைக் ரேஸ் துறையில் ஈடுபடவேண்டும் என்பதே அவரது ஆசை. 



அதெல்லாம் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்கள் வெளியாகும் வரைதான். அந்தப் படங்களின் வெற்றி ரசிகர்கள் மனதில் அழியாத இடத்தை அஜித்திற்குக் கொடுத்தது. இடையில் ரேஸ் பந்தயங்களில் ஈடுபட்டு சில விபத்துகளை சந்தித்ததால் சில மாதங்கள் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழல் உருவானது. அடுத்து என்ன செய்வது ?...


இதனால் பழையபடி மீண்டும் ரேஸ்களில் ஈடுபடுவதில் பிரச்சனைகள் எழுந்தன. தமிழ் சினிமாவிலும் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உருவாக ஆரம்பித்து அவருக்கென்று ரசிகர்கள் வட்டம் உருவாக ஆரம்பித்து வருகிறது. என்ன செய்வதேன யோசித்த தனது கனவான பைக் ரேஸிங்கை சில மாதங்களுக்கு ஒத்திவைக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறாட். சில படங்கள் வெற்றி… சில படங்கள் தோல்வி… ஆனால் ரசிகர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது.



தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என சொல்லப்பட்ட அஜித் தனது அடுத்த அவதாரத்தை நோக்கி செல்கிறார். தீனா, வில்லன் போன்ற ஆக்‌ஷன் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாகிறார். முதலில் கிடைத்த பெரும் வெற்றி போகப்போக கிடைக்கவில்லை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெரிய வெற்றிகள் எதுவும் இல்லாமல் தோல்விப் படங்களாகவே கொடுக்கிறார். தனது சக நடிகர்கள் எல்லோரும் ஹிட் படங்களாக கொடுத்து மேலே மேலே போகின்றனர். போட்டி நடிகர்களின் ரசிகர்கள் அஜித் ரசிகர்களைக் கேலி செய்ய ஆரம்பிக்கின்றனர்.


ஆனாலும் அஜித்தும் அவர் ரசிகர்களும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றனர். தொடர் தோல்வி படங்களுக்குப் பிறகு அஜித்தின் வரலாறு படம் வெளியாகிறது. மூன்று கதாபாத்திரங்களில் அஜித் நடிப்பில் பிரமாதப்படுத்த அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.



அதன் பின்னர் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என இளைஞர்களைக் குறிவைத்து அஜித்தின் படங்கள் வெளியாக பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் வருவது குறைகிறது. அந்த குறையைப் போக்க அஜித் சிறுத்தை சிவாவோடுக் கைகோர்க்கிறார். வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என பிளாக்பஸ்டர் ஹிட்களைக் கொடுக்கிறது இந்த காம்போ. அதிலும் கடைசியாக ரிலிஸான விஸ்வாசம் தமிழ்நாடு ஆல்டைம் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக கிரிடம் சூடியுள்ளது.




எல்லாம் ஒருபுறமிருக்க அஜித்தின் சினிமா வாழ்க்கையை ஒருநிமிடம் திரும்பிப் பார்த்தோமானால் வெற்றியை விட தோல்விகளே அதிகம்….  விருதுகளை விட அவமானங்களே அதிகம்… ஆனால் அஜித் என்றும் தோல்விகளால் துவண்டதில்லை. விழும்போதெல்லாம் எழுவார்… எழுந்து வேகமாக ஓடுவார்… அவரின் ஒவ்வொரு சிறு முன்னேற்றத்தையும் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.