Saturday, 6 October 2018

மழை பாடல் கொண்டாட்டம்

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மழை தொடர்பான சில பாடல்களை ரசிக்கலாம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் வாட்டி எடுக்கும் சென்னை தற்போது ஊட்டி போன்று குளிராக உள்ளது.
வெளியே மழை பெய்யும் இந்த நேரத்தில் மழையை கொண்டாடும் பாடல்களை கேட்கலாமே.


மழை


மழை வருவதற்கு முன்பு மேகங்கள் காட்டும் தோரணை, பறவைகளின் முன்னேற்பாடு, வறண்ட நிலத்தின் ஏக்கம் என இயற்கையின் பல செயல்பாடுகளை கரிசனமாகக் கையாண்டவர் இளையராஜா. மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே.. என்ற பாடலில் இறுதிவரை மழை வராது. ஆனால் மழை வரும் முன்பு இயற்கை ஆயத்தமாகும் உணர்வைக் கொடுத்திருப்பார் இளையராஜா. "வெயில் வருது.. வெயில் வருது... குடை கொண்டுவா.. கண்ணா உன் பேரன்பிலே... உன் தோளிலே பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா.." என பெண் பாடினாலும், அவளின் மாராப்புதான் குடையாக வேண்டுமென ஆண் செல்லமாக அடம்பிடிப்பது போல பாடலை இயற்றிய பெருமை கவிஞர் வாலிக்கே சேரும்.


வைரமுத்து


இளையராஜாவும் மழையும் என டைட்டில் வைத்தால் ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அதனால், 90 கிட்ஸ்களுக்கு பரிட்சயமான இசையமைப்பாளர்களில் யார் சிறப்பான மழைப்பாடல்கள் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது, மழை திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த "நீ வரும்போது நான் மறைவேனா.." பாடல் முக்கியமானது. பாடல் மட்டுமல்லாமல் படத்திலும் மழைக்கே முக்கியத்துவம். இப்படல் மழை என்ற ஒற்றை வார்த்தை தரும் ஆனந்தத்தையும் கொண்டாட்டத்தையும் சொன்ன பாடல். மழை ஒருவரின் சிறுவயதை திரும்பத்தரும் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட வரிகள் இவை. "கொள்ளை மழையே கொட்டி விடுக.. பிள்ளை வயதே மறுபடி வருக... நிற்க வேண்டும் சொற்பமாக... தாவனியெல்லாம் வெப்பமாக..." நகரத்திலுள்ள இளைஞி ஒருவள் சிறுமியாக மாறி ஆடைகளைக் களைந்து மழையோடு மழையாக மழையைக் கொண்டாட விரும்பும் உணர்வைக வரிகளில் காட்சிப்படுத்தியிருப்பார் வைரமுத்து. ஸ்ரேயாவை மறந்து நீங்கள் இந்த பாட்டை ரசித்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட இசை ரசிகர்தான்.



கண்ணதாசன்


அது என்ன பெண்கள் மட்டும்தான் மழையைக் கொண்டாடுவாங்களா? ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள் அவங்களும் மழையை கொண்டாடலாம் என ஜெமினிகணேசனைக் கொண்டாட வைத்தவர் கவியரசர் கண்ணதாசன். அவளுக்கென்ன ஒரே மனம் திரைப்படத்தில், மழையில் நனைந்து கொண்டு ஆனந்த ஆட்டம் போட்டிருப்பார் நம் காதல் மன்னன். " ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ... பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்.. எங்கே அந்த சொர்க்கம் ஹா... எங்கே அந்த சொர்க்கம் ... என்று துள்ளிக்குதிப்பார் ஜெமினி. "மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள் ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்.. கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ... " என காதல் கைகூடிய இளைஞனின் கொண்டாட்ட மனநிலையை மழையும் சேர்ந்து கொண்டாடுவது போல பாடல் அமைத்திருப்பார். இப்பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி, துள்ளலாகப் பாடுவதற்காக எஸ்பி.பாலசுப்பிரமணியத்தைப் பாடவைத்தார். கேட்டுப் பாருங்க... புதுமையான அனுபவமாக இருக்கும்.



ஏஆர்.ரஹ்மான்


ரஹ்மானும் வைரமுத்துவும் இணைந்தால் ஹிட் ஆகாத பாடல் ஏது? அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டமான பாடல்தான் குரு படத்தில் வரும் "வெண்மேகம் வெட்ட வெட்ட.." வீட்டை விட்டு வெளியேறும் ஒரு இளைஞிக்கு இருக்கும் ஆசைகளை மழையோடு பகிர்ந்துகொள்வாள். மழை பெய்யும்போது மேகக்கூட்டத்தினால் ஏற்படும் மெல்லிய இருட்டையும் விடாமல் மழையோடு மணிரத்னம் காட்சிப்படுத்தியிருப்பார். வெகுளித்தனமாக மாறியிருக்கும் ஷ்ரேயா கோஷலின் குரல் வைரமுத்துவின் வரிகளுக்கு உயிருட்டியிருக்கும். தற்போது வெளியான மழைக்குருவி பாடல் நம்ம ஊரில் பிறந்த சிட்டுக்குருவி வெளிநாட்டுக்கு போய் பிற கலாச்சாரங்களையும் மொழிகளையும் கற்றுக்கொண்டு, ஏதோ ஒரு நாட்டில் மழையைப் பார்த்த அனுபவத்தில் ஒரு பாட்டை பாடி அதை நம்ம ஊர் மழைக் காலத்துடன் ஒப்பிட முயல்வது போல இருந்தது.



அடடா மழைடா...


யுவன் ஷங்கர் ராஜாவின் அடடா மழைடா பாடலும் மழையின் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தக்கூடியதுதான். பாசமாக பக்கத்தில் உட்கார்ந்து கணக்கு சொல்லி கொடுக்கும் மூன்றாம் வகுப்பு டீச்சரைப் போல், மிக எளிமையான வரிகளையே கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார். தமன்னாவை பிக்கப் செய்ய வேண்டுமென்ற நோக்கில் கார்த்தி காரில் பிக்கப் செய்து போகும்போது இருவரையும் மழை ஒன்றிணைப்பதால் அவர் மழைக்கு நன்றி சொல்வதைப் போல பாடல் அமைந்திருக்கும். " பின்னி பின்னி மழையடிக்க.. மின்னல் வந்து குடை பிடிக்க வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு" போன்ற வரிகள் மூலம் மழை மற்றும் காதலின் பிரம்மாண்டத்தை கையாண்டிருப்பார் நா.முத்துக்குமார். வழக்கம்போல யுவன் முத்துக்குமார் மேஜிக்கில் கலக்கிய பாடல்.

டி.ராஜேந்தர்


கிளிஞ்சல்கள் திரைப்படத்தில் வரும் "அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது" பாடல் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மழைப்பாடல். ஐயய்யோ மழையில் மாட்டிகிட்டேனே என கதாநாயகி நினைக்கும் நேரத்தில் சுகமான தொல்லையாக காதலன் தோன்றுவது. மறுக்க நினைத்தாலும் முடியாமல் காதலி அதை ஏற்றுக்கொண்டு டூயட் பாடுவது போன்ற ஒரு சூழலில் அமைந்திருக்கும். "என்னைவிட்டு எங்கேயும் போகமுடியாது, நீ இந்த மழைபோல் என்னையும் ஏற்றுக்கொள்" என்று கதாநாயகன் லவ் டார்ச்சர் செய்வதுபோலவே பாடல் வரிகளையும், பாடலுக்கான இசையையும் அமைத்திருப்பார் டி.ராஜந்தர். மைக் மோகன் குடைபிடித்து பாடிய பாடல். மிஸ் பண்ணிடாதீங்க!

Tuesday, 24 July 2018

தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த ஸ்ரீவித்யா!

தன் விழியழகால், பண்பட்ட நடிப்பால் அனைவரையும் ஈர்த்த ஸ்ரீவித்யாவின் பிறந்தநாள் இன்று.



தமிழ்த்திரையுலகில் எத்தனையோ அம்மாக்கள் தோன்றியிருக்கிறார்கள். பண்டரிபாய், எம்.வி.ராஜம்மா, கண்ணம்பா என்று பலர் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் சில வேறுபாடுகள் உண்டு. மற்ற அம்மா நடிகைகள் எல்லாம் உண்மையிலேயே அம்மாவுக்குரிய வயதும் தோற்றமும் உடையவர்கள். ஆனால் 23 வயதிலேயே அதாவது ஒரு சராசரி கதாநாயகியைவிட குறைவான வயதிலேயே அம்மாவாக நடித்தவர்தான் ஸ்ரீவித்யா. அதுவும் ஒரு கைகுழந்தைக்கோ, சிறுமிக்கா அல்ல, வயது வந்த ஜெயசுதாவிற்கு "அபூர்வராகங்க"ளில்.

கொடிகட்டி பறந்தார்





1970களில் தொடங்கி 2000 வரை என சுமார் 30 ஆண்டுகள் மிகத் துல்லியமான நடிப்பு, நேர்த்தியான வசன உச்சரிப்பு, பேசும் விழிகளாலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களையே தன்னகத்தே வைத்திருந்தார் ஸ்ரீவித்யா. கர்நாடக இசையின் தேவகானக்குயில் எனப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள். இசை, நாட்டியம், இரண்டையும் கற்ற ஸ்ரீவிதியா சினிமா உலகினரால் வித்தி என அன்போடு அழைக்கப்பட்டார். "திருவருட்செல்வர்" படத்தில் நடிப்பின் பிள்ளையர் சுழி போட, சிறிது காலத்திலேயே புகழில் கொடிகட்டி பறக்க தொடங்கினார்.

கம்பீரமாக நடைபோட்டார்





நாட்டியம், நடிப்பு, இசை என அசாத்திய திறமைகளை ஒருசேரப்பெற்று, திரைத்துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் ஒருசிலரே. அதில் முக்கிய இடம் ஸ்ரீவித்யாவுக்குத்தான் போய்சேரும். தங்கையாய், காதலியாய், மனைவியாய், தாயாய், அண்ணியாய், தோழியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் அனைத்து முக்கிய பரிணாமத்தையும் படங்களில் குறைவின்றி வெளிப்படுத்தியவர்.

மணவாழ்க்கையில் கசப்பு





கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனமே அவரது வாழ்க்கையை புரட்டி போட வைத்தது. 35 வயதுக்கு பின்னர், மணவாழ்க்கையில் விதி விளையாட துவங்கியது. மண வாழ்க்கையில் சறுக்கி விழுந்தார். 9 வருட கால போராட்டத்துக்கு பின்னர் தனித்து வாழ்ந்தாலும், காலை சுற்றின பாம்பு கூடவே இருந்தது. குழந்தையிலிருந்து ஸ்ரீவித்யாவுக்கு இருக்கும் ஆன்மீக ஈடுபாடு அவரை பண்படுத்தின. பக்குவப்படுத்தியது. பல கதாபாத்திரங்களை துணிந்து ஏற்று நிறைவாக நடித்தார். தளபதி, காதலுக்கு மரியாதை, புன்னகை மன்னன் போன்ற படங்களில் அவரது சாந்தமான முகம்-கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், இயல்பான நடிப்பு, பக்குவமான உணர்வு போன்றவை மறக்க முடியாதது.

நம்பி ஒப்படைத்த சொத்துக்கள்


ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அடியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கறையான் அரிக்க துவங்கியது. பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூன்யமாகி போனது. அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை. சொத்துக்களின் கதி இதுவரை என்னவென்றும் தெரியவில்லை.

காலத்தின் கோலம்


திரைத்துறையில் எப்பேர்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் சிக்குண்டு போய்விடுகிறார்கள் என்பதும், காலம் அவர்களை ஒரு புரட்டு புரட்டியே போட்டு தன்னுடன் அழைத்து சென்றுவிடுகிறது என்பதற்கும் ஸ்ரீவித்யா உதாரணம். அவர் எந்த அளவிற்கு விசால மனம் படைத்தவர் என்பதற்கும், அவரது மாபெரும் மனித நேயத்திற்கும், நாட்டியக்கலை மீது இருந்த பற்றுக்கும் அவர் எழுதி வைத்த உயிலே சாட்சியாகும். இதமான இதயத்தை அது பிரதிபலித்தது. இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒருவன் அவருக்கு கணவராக இருந்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். தாய்மையடைந்த போதெல்லாம் அந்த வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்ட இந்த திரைத்தாயினால் கடைசிவரை நிஜத்தாயாக வாழமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே!

Sunday, 24 June 2018

கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்

M.G.R. -க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.



எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

தாழையாம் பூ முடிச்சு.. தடம் பார்த்து நடை நடந்து.. இது யாரை நினைத்து கவியரசர் எழுதினார் தெரியுமா?

கவிஞர் கண்ணதாசன் கலையுலகத்திற்கு வழங்கிய பாடல்கள் அனைத்துமே அற்புதம்தான்.
ஆனால் அவற்றில் சில பாடல்கள் தன் குடும்பத்தினரை மையப்படுத்தியும், மனதில் வைத்தும் எழுதினார் என்று கேள்விப்படும்போது கவிஞரின் தன் குடும்பத்தினரிடம் அளவு கடந்த பிரியம் எவ்வளவு வைத்திருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.
கண்ணதாசனின் மூத்த மகள் அலமேலு கண்ணதாசன் அதை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். படியுங்கள் வாசகர்களே.

பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி


நான் மூத்த பெண் என்பதால், என் மேல ரொம்ப பாசமா இருப்பாரு. என்னை டாக்டராக்கனும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. அது முடியாம போச்சு. எனக்கு கல்யாணம் செய்யறதுக்காக அப்பா மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தார். அந்த சமயத்தில் எழுதிய பாட்டுதான் "பூ முடிப்பாள்.. இந்த பூங்குழலி" என்ற பாடல். அந்த பாட்டை எழுதிமுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அப்பா என்னிடம், உனக்கு சீக்கிரமா கல்யாணம் நிச்சயம் ஆயிடும்"ம்மா என்றார். அது மாதிரியே நிச்சயமும் ஆகி கல்யாணமும் செஞ்சு வச்சார். எங்களுக்கு நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொடுப்பார்.

என் பையன் மேல அவ்ளோ ஆசை


என் 2-வது பையனுக்கு அவருடைய பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு அப்பா சொன்னார், "நீ கண்ணதாசன்னு வெச்சுக்கோ. ஆனா கிருஷ்ணர் அடிக்கடி என் கனவில வர்றார். அதனால் நீ கிருஷ்ணா"னுதான் கூப்பிடணும் னு சொன்னார். எவ்வளவு பெரிய மீட்டிங்கா நடந்துட்டு இருந்தாலும் சரி, என் பையனைதான் மடிமேல தூக்கி வச்சிப்பார். அவனுக்கு பத்மா சேஷாத்ரி ஸ்கூல்லகூட அப்பாதான் சீட் வாங்கி கொடுத்தாரு. அவ்வளவு ப்ரியம் அவன்மேல.

தாழையாம் பூ முடிச்சு..


"தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா"ன்னு ஒரு பாட்டு வருமே.. அது எங்க அம்மாவுக்காகவே எழுதின பாடல். எங்க அம்மா பொன்னம்மா. எங்க அம்மாவுக்காக ஒரு கவிதை கூட எழுதியிருக்காரு. அப்பாவுக்கு எங்க அம்மா சமையல்ன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் அம்மா செஞ்ச தக்காளி பச்சடியும், வெல்ல பணியாரத்தையும் ரொம்ப ருசிச்சு சாப்பிடுவார். அது கவிஞரின் கவிதை தொகுப்பில் கூட வெளிவந்திருக்கு. அப்பாவோட அர்த்தமுள்ள இந்து மதம் படிச்சிட்டு என்கிட்டேயே நிறைய பார் பாராட்டுவாங்க. எழுத்தாளர் லட்சுமிகூட என்னிடம் சொன்னாங்க "எப்பவுமே ஒரு எம்.எஸ்,விஸ்வநாதன்தான்.. ஒரு சுசிலாதான்.. ஒரு கண்ணதாசன்தான்... ஒரு டி.எம்எஸ்.தான்"னு.

நிறைய பாட்டுக்களை எழுதிட்டு வந்து வீட்டில எங்ககிட்ட அதை பத்தி சொல்லுவார். அம்பிகை அழகு தரிசனம் என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதேபோல, கந்தசஷ்டி கவசம் போலவே கிருஷ்ண கவசம் எழுதியிருப்பார் அப்பா. அதுவும் நான் அடிக்கடி விரும்பி படிக்கும் புத்தகம். நாளாம் நாளாம் திருநாளாம், கங்கைகரைதோட்டம் இந்த பாட்டெல்லாம் ரொம்ப விரும்பி அடிக்கடி கேப்பேன். அவர் உயிரோட இருந்திருந்தா, இலக்கியங்கள் நிறைய எழுதியிருப்பார். அப்பா இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்க கூடாதான்னு அடிக்கடி நினைச்சிப்போம்.

Tuesday, 12 June 2018

நாட்டிய பேரொளி பத்மினி..

கலையே குடும்பம், கலையே வாழ்க்கை, கலையே மூச்சு, கலையே சகலமும் என்று வாழ்ந்தவர்  நாட்டிய பேரொளி பத்மினி .


சிறந்த நடனமங்கையாக இருந்தவரை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். தாய்மொழி மலையாளம் என்றாலும் இன்றைய தமிழர்களால் கூட பேச முடியாத அளவிற்கு நீண்டநெடிய வசனங்களை மனப்பாடம் செய்து - ஏற்ற இறக்கத்துடன் - பிசிறில்லாமல் - உச்சரிப்பு மாறாமல் - உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய அவரது அற்புதமான ஆற்றல் சாதாரணமானதல்ல.
இன்றைய இரண்டாம் தர, மூன்றாம்தர நடிகைகள் போல கதாநாயகிகள் என்று சொல்லிக் கொண்டு ஆபாச படமாகவும், அரை நிர்வாண ஓடமாகவும் - பின்னணி குரலில் ஒழுங்காக வாயசைக்கக்கூட முடியாமல் நடனம் என்ற பெயரில் வலிப்பு வந்தவர்போல் பேயாட்டம் போட்ட நடிகை அல்ல பத்மினி.
பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி என்று இந்தியாவின் பெரும்பான்மையான நடன உத்திகளை நுட்பமாக பயின்றவர். பரதம் உள்ளிட்ட அனைத்து நடனங்களையும் கற்றுத்தேர்ந்து கதாநாயகியாகவும் நடித்த நடிகைகள் இரண்டே பேர்கள்தான். ஒருவர் பத்மினி, இன்னொருவர் வைஜெயந்திமாலா.

சபாஷ் சரியான போட்டி!





"வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தில் இவர்கள் இணைந்து அரங்கேற்றிய போட்டி நடனம் வெள்ளித்திரையில் வரலாறாகிவிட்டது. பாடலின் நடுவே வரும் "சபாஷ்... சரியான போட்டி" என்ற அந்த வசனம்கூட இன்றைய இளையதலைமுறைகளால் பெரிதும் ரசிக்கப்படுபவை. இனி அது போன்ற நடனத்தை எக்காலத்திலும் நாம் பார்க்க முடியாது. இந்திய படங்களிலேயே மிகச்சிறந்த போட்டி நடனம் எது என்றால் இந்த பாடலை துணிச்சலோடும் கர்வத்தோடும் பெருமையோடும், சொல்லலாம். அமரதீபம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி, சித்தி, புனர்ஜென்மம், தில்லானா மோகனாம்பாள் போன்ற பல படங்கள் பத்மினியின் பண்பட்ட நடிப்பில் காவியங்களாயின.

தபால்தலை வெளியீடு


அதனால்தான் அவருக்கு தபால் தலையை வெளியிட்டு சோவியத் யூனியன் பல்லாண்டுகளுக்கு முன்பே பெருமைப்படுத்தியது. ஒரு கலைஞர் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் கலைஞர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் பத்மினி. தான்தோன்றித்தனமாக உளறிக் கொட்டாமல் - காட்டுக் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்யாமல் - அரை வேக்காட்டுத்தனமாக அலட்டிக் கொள்ளாமல் தன்னடக்கம் கொண்ட நடிகையாக அவர் வாழ்ந்தார். அரசியல் ரீதியாக, ஒரே சமயத்தில் கருணாநிதியையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மதித்து போற்றிய அவரது பெருந்தன்மையை இன்றைய திரைப்பட நடிகைகள் கற்றுக் கொள்வது அவசியம்.

பக்குவப்பட்ட நடிகை


விரும்பி நேசித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ள முடியாமல். அவனது தந்தையையே மணந்து வாழ வேண்டிய அவலத்திற்கு நடுவில் - காதலனே மகனாக திரும்பி வந்த பிறகு - ஒரு பெண்ணின் இதயம் எந்த அளவிற்கு வேதனையால் வதைபடும் என்பதை "எதிர்பாராதது" படத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும் பதமினியின் நடிப்பு அபாரமானது.கணவனின் சந்தேகத்திற்கு இரையாகி தன் மீதான பழியை துடைக்க போராடும் ஒரு பெண்ணின் மன உணர்வு எவ்வாறு இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது .
"தெய்வப்பிறவி".நாட்டியத்தையும் நடிப்பையும் சரிபாதியாக கலந்து ஒரு சிறந்த பொழுது போக்கு படைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள்.. பல படங்களில் குணச்சித்திர நடிப்பை பதித்திருந்தாலும், தன்னால் கதாநாயகியாக மட்டுமல்ல பாட்டியாகவும் நடித்து தான் ஒரு பக்குவப்பட்ட நடிகை என்பதை "பூவே பூச்சூடவா" படத்தில் நிரூபித்தார்.

எந்த நிலையிலும் மரணமில்லை


கோடி கோடியாய் சம்பாதித்தாலும் - சொர்க்க பூமி என்று போற்றப்படும் அமெரிக்காவிலேயே வாழும் வாய்ப்பு கிடைத்தாலும் - தாய் நாட்டில்தான் வாழ்வேன் - தமிழ்நாட்டில்தான் சாவேன் என்று கூறி அதேபோல தமிழ் மண்ணில் தன்னை கரைத்து கொண்ட தன்னிகரற்ற தேசபக்தர்தான் நடிகை பத்மினி. அவர் மறைந்தபோது நடிகர் கமலஹாசன் தனது இரங்கல் செய்தியில், "தொலைக்காட்சிகள் ஒரு வரப்பிரசாதம். பத்மினி அம்மா இறந்து போனார்கள் என்கிற உணர்வு கூட இல்லாமல் அவர் நடித்த படங்களையும், ஆடிய நடனங்களையும் நாம் பார்.த்து கொண்டு இருக்கலாம்" என்றார்.
மக்கள் மனதில் ஆழப்பதிந்து போன யாராக இருந்தாலும் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடியபடி "எந்த நிலையிலும் மரணமில்லை"தான். இது நாடு போற்றும் நாட்டிய பேரொளி பத்மினிக்கும் பொருந்தும்.

Thursday, 17 May 2018

``தன் இறுதிக்காலத்தை முன்பே உணர்ந்த சித்தர் பாலகுமாரன்" - நெகிழும் எழுத்தாளர்கள்!

ழுத்து சித்தர் பாலகுமாரன் காலமாகிவிட்டார். இது அவரது வாசகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனது எழுத்தின்மூலம் ஆயிரக்கணக்கான இதயங்களைக் கொள்ளையடித்தவர்.  வாழ்க்கையை அணுகுவதில் பலருக்கு முன்மாதிரியாக இருந்தவர். 


``இலக்கியத்தில் தொடர்ச்சியாக 40 ஆண்டுகள் இயங்கியவர் பாலகுமாரன். பொதுவாக ஒரு 10 ஆண்டுகள்தான் ஒரு எழுத்தாளர் தீவிரமாக எழுதுவார். அடுத்த பத்து ஆண்டுகளில் அந்த வீச்சு குறைந்துபோய்விடும். அவர்களுடைய வாசகப் பரப்பே இடம் மாறிப்போய்விடும். இந்தச் சமூக வாழ்க்கையில் அதே முனைப்போடு ஒருவர் தொடர்ந்து இயங்குவது மிக மிகக் கடினம். ஆனால், பாலகுமாரனுடைய வீச்சு நாற்பது ஆண்டுகாலம் தொடர்ச்சியாக இருந்தது. அவருடைய முதல் படைப்பான ‘மௌனமே காதலாக’,  தொடங்கி, கடைசியாக அவர் எழுதிய பத்திகள் வரைக்கும் எழுத்தின் மீதும் சமூகப் பரப்பின்மீதும் செலுத்திய ஆதிக்கம் குறையவேயில்லை. அதுதான் பாலகுமாரனின் மிகச் சிறந்த ஆளுமையாக நினைக்கிறேன். இனியொரு நாற்பது ஆண்டுகள் இப்படியொரு எழுத்தாளர் நம் சமூகத்துக்கு கிடைப்பாரா? என்பது தெரியவில்லை. 
1970-ம் ஆண்டுகளிலேயே எழுதத் தொடங்கியவர் பாலகுமாரன். அந்தத் தருணத்தில் தீவிர இலக்கியத் தன்மையோடு 'கணையாழி' இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் எழுதுபவர்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். அந்தப் பத்திரிகை சார்பில் மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். அப்போது இளைஞர்களாக இருந்த பாலகுமாரன், சுப்பிரமண்ய ராஜு போன்றவர்கள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்று, அதன் வழியாக எழுத்துலகில் நுழைந்தார்கள். இதையெல்லாம் பாலகுமாரனே தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அதையெல்லாம் வாசித்துதான் என்னைப் போன்ற பலர் 1990-களில் இலக்கியத்துக்கு வந்தார்கள். கணையாழியின் வழியே, மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனால் வளர்த்தெடுக்கப்பட்டவர் பாலகுமாரன். 'அடுத்தது என்ன?' என்ற கேள்வி தோன்றியபிறகுதான் அவர் வெகுசன பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். ‘ஆனந்த விகடன்’ போன்ற இதழ்களில் வெளியாகும் அவரது படைப்புகள் வாசகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டன. 
சமூக இறுக்கங்களை உடைத்தெறிந்த எழுத்து பாலகுமாரனுடையது. பெண்ணியம் சார்ந்து, அவர்களுடைய வெளிப்பாடுகள் சார்ந்து நிறைய எழுதினார். அது தன்னியல்பாகவே அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. பெண்களுக்கான விடுதலை உணர்ச்சியை அப்போதே விதைத்தார் பாலகுமாரன். 

இப்போதெல்லாம் காதல், இயல்பான ஒரு சமூக விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் காதல் என்பது கெட்டவார்த்தையாக, சமூகக்கோளாறாக, நோய்மையாகக் கருதப்பட்டது. காதலிப்பவர்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவங்கள் எல்லாம் நடந்தேறின.  அதுகுறித்த பல மனத்தடைகளை தன் எழுத்தின் மூலம் உடைத்தெறிந்து, சமூகத்துக்குப் புத்துணர்ச்சி அளித்தவர் பாலகுமாரன். 
மறைந்த பிரபல இயக்குநர் பாலசந்தரிடம், ‘புன்னகை மன்னன்’, ‘சிந்து பைரவி’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஒரு படத்தின் திரைமொழி என்பது சொற்கள் தான். ஒரு படத்தில் பாலகுமாரன் வசனம் எழுதினால், அந்தப் படமே அவருடைய பாணிக்கு மாறிவிடும். இயக்குநரின் பாணியில் இருக்காது. ‘குணா’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘மன்மதன்’, ‘உல்லாசம்’ போன்ற படங்களில் அதை நீங்கள் கவனிக்கலாம். பாட்ஷாவில் “நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி..”, காதலனில் “சந்தோஷமோ.. துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு.. நிதானத்துக்கு வருவ..” என அவர் எழுதிய எல்லா வசனங்களிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். காதலர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவரின் நாவலில் வருகிற பாத்திரங்கள் பேசுவது போலவே இருக்கும். திரைமொழியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்த எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரன்தான். 
தமிழின் தொடர்ச்சியான ஒருபெருங்கன்னி அறுந்துவிட்டது. அது பேரிழப்பு தான். அவர் இன்னும் பத்து ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கலாம். தமிழுக்கு இன்னும் நிறையப் படைப்புகள் கிடைத்திருக்கும்” என்று நெகிழ்ச்சியாக பேசுகிறார் மகுடேசுவரன் 


பாலகுமாரனுக்கும் தனக்குமான நட்பு பற்றி பேசுகிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா..
``யோகியைச் சந்தித்ததில் இருந்தே பாலகுமாரனின் பாதை வேறு மாதிரி ஆகிவிட்டது. வாசகர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவருடைய,  'இதுபோதும்' என்ற நூலை எனக்கு வாசிக்கக் கொடுத்தார். 'இந்த நூலைக் கண்டிப்பாக வாசித்தே ஆகணும்'னு என்னிடம் கேட்டுக்கொண்டார். யோகியிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அந்தப் புத்தகத்தில் சாரமாகக் கொடுத்திருப்பார். அவர் எழுதியதில் முக்கியமான புத்தகம் அது. 
தன்னுடைய இறுதிக்காலத்தை முன்கூட்டியே உணர்ந்த சித்தர் அவர். போன வருடம் முகநூலில் தன்னுடைய இறப்பு குறித்து, ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். எல்லா மனிதனையும் சமமாகப் பாவித்தவர். பெண்கள், பாலகுமாரனிடம் பழகும்போது, கிடைக்கிற சுதந்திரத்தை, வேறு யாரிடமும் உணரமுடியாது. நிபந்தனையற்ற அன்பு கொண்டவர். அன்பின் சொரூபம் அவர். அதனால்தான் பெண்களுக்கு அவரை அதிகம் பிடித்திருந்தது.

சினிமாவில் வித்தியாசமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியிருக்கிறார். ‘நாயகன்’, ‘பாட்ஷா’வை எல்லோருக்கும் தெரியும். ‘புதுப்பேட்டை’ போன்ற ஹார்ட் பிரேக்கிங் படத்துக்கும் அவர் எழுதியுள்ளார். அவருடைய இடத்தில் இருந்து,  தரைமட்டமான ஒரு இடத்துக்கு எழுதியிருப்பது ஆச்சர்யமான விஷயம். வசனத்தில் இளங்கோவன், கருணாநிதிக்கு இணையாக எழுதியவர் பாலகுமாரன். 

சினிமாவில் வசனத்தை மிகுந்த உயரத்துக்குக் கொண்டுபோனதில் அவரின் பங்கும் அளப்பரியது. இலக்கியத்தில் எதிர்காலம் குறித்து எழுதியவர் சுஜாதா. இலக்கியத்தை வரலாறு நோக்கி நகர்த்தியவர் பாலகுமாரன். அவரைப்போல அன்பான மனிதனைப் பார்ப்பது கஷ்டம்!” என்று, கண்ணீர் தளும்ப பேசினார் எழுத்தாளர் சாரு நிவேதிதா
.

Sunday, 13 May 2018

அஜித் குமார்: சில பதிவுகள்....

பிறந்தநாள் : 01 May 1971


வயது : 47






அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியபடுகின்றார்.

 அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.

அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர், 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். 

பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.


2014-ம் ஆண்டு புனே முதல்  சென்னை வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.