Thursday, 7 September 2017

எம்என் நம்பியார்.. வில்லனல்ல, ஹீரோ!

ஏதோ ஒரு ஊரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும் எம்.என்.நம்பியாரும் மோதிக்கொண்டிருந்தார்கள். இருவரும் உருண்டு புரண்டு வாள் சண்டைப்போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி நடந்துக் கொண்டிருக்கின்ற சண்டையில் எம்.ஜி.ஆர் வாளை நம்பியார் தட்டிவிடுவார். எம்.ஜி.ஆர். நிராயுதபாணியாக ஆபத்தில் சிக்கிக் கொள்வார். அப்போது டெண்ட்டு கொட்டகையில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் 'தலைவரே இந்தாங்க கத்தி... பிடித்துக் கொள்ளுங்கள்' என்று தன்னிடம் உள்ள கத்தியை, ஒடிக்கொண்டிருப்பது படம் என்றுகூட தெரியாமல் திரையின் மீது வீசி எறிந்தார். கத்திப்பட்டதும் இறுக்கமாககட்டப்பட்டிருந்த துணியால் ஆனதிரை கிழிந்துவிட்டது.
 
 
 

அதே போல் எம்.ஜி.ஆர் தேர்தலுக்காக ஒட்டுக் கேட்டு வரும்போது ஒரு வயதானபாட்டி கற்பூரம் ஏற்றிஆரத்தி எடுத்திருக்கிறார். அப்போது நீங்க அந்தப் பாவி நம்பியாரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க தம்பி என்றுச் சொல்லி நெற்றியில் பொட்டு வைத்தாராம். 
 
இந்த இரண்டுமே பின்னாளில் திரையில் காட்சிகளாகவும் வந்துவிட்டன. இப்படித்தான் டைரக்டர் வி.சேகரின் 'நீங்களும் ஹீரோதான்' படத்தில் நடிப்பதற்காகநம்பியார் ஒரு கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கிறார். இவரைப் பார்த்த வயதான ஊர்ப் பெண்கள், "ஐயோ இவனா... படங்களில் பல பெண்களைக் கற்பழித்தவனாச்சே...", என்று பயந்து ஒடியிருக்கிறார்கள். 
 
இப்படி பல படங்களில் வில்லனாக நடித்து படம் பார்த்தவர்களையே பயமுறுத்தி நிஜம் என்று நம்பும்படி தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி படம் பார்த்தவர்களுக்கெல்லாம் நிஜமாகவே எதிரி போல் தெரிந்தவர் எம்.என்.நம்பியார்.




எம்.ஜி.ஆர். படம் பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் இவர் விரோதியாகவே தெரிந்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இவர் பரம விரோதியாகவே அறியப்பட்டார். அந்த அளவிற்கு இவரது வில்லன் நடிப்பு எம்.ஜி.ஆர். படங்களில் கொடூரமாகவே இருக்கும். இவர் நடித்த பலபடங்களில் குடிப்பார். பெண்களை துரத்தி துரத்திகற்பழிப்பார். ஹீரோவை அடிப்பார், குழந்தைகளை, முதியோர்களை துன்புறுத்துவது போல் நடிப்பார். இந்த நடிப்பைப் பார்த்துதான் கெட்டவர்களை பார்த்தால் 'நீ என்ன பெரிய நம்பியாராடா' என்று கேட்டபார்கள். அப்படிப்பட்ட வில்லன் வேடங்கள் அவருக்கு அமைந்தன. 
 
நிஜ வாழ்க்கையில் தெய்வப்பக்தி கொண்டவராகவும் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவராகவும் இருந்தார். சைவ உணவைத் தவிரஅசைவ உணவை அறவே வெறுத்து 60 வருடங்களாக சபரிமலைக்கு புனிதயாத்திரை மேற்கொண்டவர். ஒரே மனைவியுடன் இறுதிவரை உண்மையான அன்புடன் வாழ்ந்த இவரை இறக்கும் வரை படங்களில் பார்த்த காட்சிகளை மனதில் வைத்துக் கொண்டு அவரை நிஜமான வில்லனாக சிலர் பார்த்தார்கள். அதுதான் மிகவும் கொடுமை. அந்த அளவிற்கு சினிமாவை நேசித்தார். தான் ஏற்றுக் கொண்ட வேடங்களில் ஈடுபாடு காட்டி நடித்தவர் எம்.என். நம்பியார்.

இவரது கலைப் பயணம் நாடகத் துறையிலிருந்து தொடங்கியது. அதுவும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தொடங்கியது. நவாப் ராஜமணிக்கம், ஸ்ரீ மதுரை தேவி வினோத பாலகான சபாக்களிலும் 12 வருடங்களாக நாடக நடிகராக பணியாற்றியிருக்கிறார். 
 
சக்தி நாடகச் சபா தயாரித்த 'கவியின் கனவு' நாடகம் இவருக்கு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. இவர் நடித்த 'பக்த ராமதாஸ்' நாடகம் படமாக்கப்பட்ட போது நாடகத்தில் இவர் ஏற்று நடித்த மந்திரி மாதண்ணா, வேடத்தை படத்திலும் ஏற்று நடித்து தமிழ் சினிமாவுக்கும் புதுமுக நடிகராக அறிமுகமானார்.
 
 'திகம்பரசாமியார்' படத்தில் 11 விதமான கெட்டப்பில் தோன்றி அசத்தினார். அந்த வகையில் சிவாஜ், கமலுக்கெல்லாம் முன்னோடி நம்பியார்.
 
 'கல்யாணி கஞ்சன்', 'நல்லதங்கை' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். 'கவிதா', 'வித்யாபதி', 'ராஜகுமாரி', 'மர்மயோகி', 'மோகினி', 'தூறல் நின்னுப்போச்சு' போன்ற படங்களில் காமெடி கலந்த வேடங்களில் நடித்திருக்கிறார். கொடூரமான வில்லனாக நடித்த இவர் 'ரகசிய போலீஸ 115', 'கண்ணே பாப்பா', 'சுபதினம்', 'பாசமலர்', 'மக்களைப் பெற்ற மகராசி', 'வேலைக்காரி' போன்ற படங்களில் நல்லவராகவும் நடித்திருக்கிறார்.
 
 
 
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் 'ராஜகுமாரி' முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.என்.நம்பியார் இணைந்து நடித்திருக்கிறார். இதில் 'மந்திரிகுமாரி', சர்வாதிகாரி', 'எங்க வீட்டு ப்பிள்ளை', 'குடியிருந்த கோயில்', 'நான் ஆணையிட்டால்', 'புதிய பூமி', 'ஆயிரத்தில் ஒருவன்', 'திருடாதே', 'வேட்டைக்காரன்', 'படகோட்டி', 'உலகம் சுற்றும் வாலிபன்' போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். 
 
 நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 'தங்கப் பதுமை', 'ராஜபக்தி', 'அன்னை இல்லம்', 'தெய்வமகன்', 'லட்சுமி கல்யாணம்', 'நிச்சயதாம்பூலம்', 'குலமா குணமா', ' சிவந்தமண்', 'திரிசூலம் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். 
 
தொடர்ந்து ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். 'தேவதாஸ்', மிஸ்ஸியம்மா', போன்ற படங்களிலும் 'நெஞ்சம் மறப்பதில்லை', படத்தில் திகிலூட்டும் வகையில் வில்லத்தனம் காட்டியிருப்பார். எம்.என்.நம்பியார் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பிறமொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். 'ஜங்கிள்' என்ற ஆங்கிலப் படத்திலும், 'தேவதா' என்ற இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார்.
 
 
'பக்த ராமதாஸ்' (1935) முதல் விஜயகாந்த் நடித்த 'சுதேசி' (2006) வரை 750 படங்களுக்குமேல் நடித்து முடித்திருக்கிறார். நீண்ட நெடுநாளைய கலைப் பயணமிருந்தும் இவரைப்பற்றி எந்த கிசு கிசுவும் பத்திரிகைகளில் வந்ததில்லை. 
 
இவர் தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா திரைக்கதை, வசனம் எழுதிய 'வேலைக்காரி', 'நல்லவன் வாழ்வான்' படங்களிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதிய 'அபிமன்யூ', 'அரசிளங்குமாரி', 'ராஜகுமாரி', போன்ற படங்களிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் பலபடங்களிலும், வி.என்.ஜானகியுடன் 'வேலைக்காரி', மோகினி' ஆகியப் படங்களிலும் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதாவுடன் பல படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவுடனும் நடித்திருக்கிறார். 
 
தமிழக அரசிடமிருந்து 1967ஆம் ஆண்டு கலைமாமணி வருது, 1990ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருது, 1992 ஆம் ஆண்டு ஜெயலலிதா விருது என்றபல விருதுகளைப் பெற்றிருக்கிறார். 
 
எம்.என்.நம்பியார் 5.3.1919 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணனூர் தாலுக்காவில் மஞ்சேரி என்ற சிற்றூரில் பிறந்தார். மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்ற தனது பெயரை சுருக்கி எம்.என்.நம்பியார் என்று வைத்துக் கொண்டார். 1946ஆம் ஆண்டு ருக்குமணி என்ற பெண்மணியை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு சுகுமாரன், மோகன் என்ற 2 மகன்களும், சிநேகலதா என்ற ஒரு பெண்ணும் உண்டு. 
 
திரைப்படத் துறையில் 71 ஆண்டுகள் தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்த எம்.என்.நம்பியார்,  19.11.2008 ஆம் ஆண்டு தனது கலைப்பயணத்தை முடித்துக்கொண்டு இறைவனடி சேர்ந்தார். நம்பியாரின் மூத்த மகன் சுகுமாறன் நம்பியார் 2012-ல் காலமானார். எம்.என்.நம்பியார் போன்ற தலைச்சிறந்தகலைஞர்கள் அதிலும் பன்முகம் கொண்ட கலைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு இனி கிடைப்பார்களா? கிடைக்க மாட்டார்கள் அதுதான் காலகாலத்துக்கும் நமக்குள் இருக்கப் போகிற ஏக்கமும் ஏமாற்றமும்!


- பெரு துளசிபழனிவேல்

எம்.ஜி.ஆரை திரையுலகின் முடிசூடா மன்னனாக்கிய படங்கள்!

தமிழ்த் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து 'சதிலீலாவதி' (1936) முதல் ஸ்ரீமுருகன், சுலோச்சனாவரை சுமார் 15 படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி வளர்ந்து வந்த எம்.ஜி.ஆர், 'ராஜகுமாரி' (1947) படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் புரட்சி நடிகரானார்... மக்கள் திலகமானார். அவர் புரட்சித் தலைவராக புகழ்பெற்று, கடைசியாக நடித்த படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)'. அந்தப் படம் வெளியாவதற்குள் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார் (1977). 
 
 
 
 
 115 படங்கள்வரை கதாநாயகனாக நடித்து தமிழ்த் திரையுலகில் வெற்றி நாயகனாக உலாவந்தவர் எம்.ஜி.ஆர். அவர் கதாநாயகனாக நடித்த பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களாகவும், வசூலை வாரிக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன. 100 நாட்கள் ஓடாத அவரது சில படங்களும் கூட தோல்விப் பட லிஸ்டில் சேர்ந்ததில்லை. 
 
 
 
 எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகில் 42 ஆண்டுகள் வெற்றிகரமாக உலாவந்தாலும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் பலசோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தார். அப்படிப்பட்ட சோதனைகளும், வேதனைகளும் எம்.ஜி.ஆரை நெருங்கி நிலைகுலைய வைத்த போது திரையுலகைச் சேர்ந்தவர்களில் சிலர் 'எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் இத்தோடு முடிந்தது இனி அவரால் கதாநாயகனாக வெற்றி பெற முடியாது. மக்களும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்று அவரது காதுபடவே கேலியும், கிண்டலுமாக பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி அவர் நடித்த சிலப டங்கள் அவருக்கு சோதனையான காலகட்டத்திலும் மக்களைக் கவரும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து அவரது திரையுலக வாழ்க்கைகே திருப்பு முனையாகத் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரை நம்பி படம் எடுக்கவந்தவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தன. சோதனையான வேதனையான காலகட்டத்தில் அவரது சினிமா மார்க்கெட் வீழ்ந்து விடாமல் தூக்கி நிறுத்தி வெற்றி நாயகனாக அவரை வலம் வர வைத்த சில படங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். 
 
 ராஜகுமாரி (1947) 
 
எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடங்களில் நடிப்பதற்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த காலம் அது. கதாநாயனாக நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை, இலட்சியத்தை 1947ஆம் ஆண்டு வெளிவந்த ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ராஜகுமாரி' படம் தான் நிறைவேற்றிக் கொடுத்தது. மாலதி என்ற நடிகை ஜோடியாக நடித்தார். ஏ.எஸ்.ஏ.சாமி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் உதவி வசனம் என்று மு.கருணாநிதி பெயர் போடப்பட்டது. துணை நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த ‘ராஜகுமாரி' படம்தான். 
 
மருதநாட்டு இளவரசி (1950) 
 
 கோவிந்தன் கம்பெனி மூலம் தயாரிக்கபட்ட படம் ‘மருதநாட்டு இளவரசி'. ஏ.காசிலிங்கம் இயக்கிய இந்தப் படத்திற்கு வசனம் மு.கருணாநிதி என்று முதல் முதலில் டைட்டிலில் பெயர் வந்தது. கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் முதன்முறையாக இணைந்து நடித்தார் வி.என். ஜானகி. 133 நாட்கள் ஓடி அதிக வசூலை கொடுத்ததால் இந்தப்படத்திற்கு பிறகு எம்.ஜி.அரை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வைத்து படங்களை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது ‘மருதநாட்டு இளவரசி' படம். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கையிலும் திருப்பத்தைத் தந்த படம் இது. 
 
மர்மயோகி (1951) 
 
 ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் கே.ராம்நாத் இயக்கத்தில் தயாரித்த படம் ‘மர்மயோகி' 151 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார். எம்.ஜி.ஆரை அன்றிருந்த கதாநாயகர்களின் வரிசையில் முதல் வரிசையில் கொண்டுபொய் உட்கார வைத்த படம் ‘மர்மயோகி'. ஏழை எளியவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக போராடுகின்ற நாயகன் எம்.ஜி.ஆர்தான் நல்ல என்ற நல்ல பெயரை மக்களிடம் பெறுகின்ற அளவிற்கு அமைந்தது ‘மர்மயோகி'. 
 
மலைக் கள்ளன் (1954) 
 
 ஸ்ரீராமுலு நாயுடு பக்ஷிராஜா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கிய படம் ‘மலைக்கள்ளன்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என்று பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஜோடியாக நடித்தவர் பி.பானுமதி. ஸ்ரீராமுலு நாயுடு நாமக்கல் கவிஞரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 150 நாட்கள் ஓடி எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளிக் கொடுத்து முதல்வரிசையில் இருந்த எம்.ஜி.ஆரை திரையுலக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சக்கரவர்த்தியாக மாற்றிய படம் ‘மலைக் கள்ளன்'. 
 
நாடோடி மன்னன் (1958) 
 
எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்து தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கிய முதல் படம் ‘நாடோடி மன்னன்'. இவருக்கு ஜோடியாக பி.பானுமதி, சரோஜா தேவி நடித்திருந்தார்கள். கவியரசர் கண்ணதாசன் படத்திற்கான வசனத்தை எழுதியிருந்தார். படம் வெளியாவதற்கு முன் 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் இல்லை என்றால் நாடோடி' என்று பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர். பேட்டிக் கொடுத்திருந்தார். இந்தப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை வாரிக்குவித்து நல்ல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தை ஏற்று சிறப்பாக நடிக்க கூடிய நடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டாடிய படம். மக்கள் மனதில் இன்று வரை மன்னனாக எம்.ஜி.ஆர் அமர்ந்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம் ‘நாடோடி மன்னன்'. 
 
திருடாதே (1961) 
 
 ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல். சீனிவாசன் ப.நீலகண்டன் இயக்கத்தில் தயாரித்த படம் ‘திருடாதே'. வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து முதல் முதலில் ‘திருடாதே' படம் எடுக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு தாமதமானதால் படம் தாமதமாக வந்தது. ‘நாடோடி மன்னன்' சீக்கிரமாக வெளிவந்துவிட்டது. அதுவரையில் சரித்திர படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரால் சமூகப் படங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்த படம் ‘திருடாதே'. 161 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடியதால் தொடர்ந்து பல சமூகப் படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்கான திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்த படம் ‘திருடாதே'. 
 
தாய் சொல்லைத் தட்டாதே (1961) 
 
 ‘திருடாதே' படத்தை எடுத்து முடிக்க சந்தர்ப்ப சூழ்நிலையால் பல மாதங்கள் ஆனதால் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால் வெளிவருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்ற ஒரு அவப்பெயர் எம்.ஜி.ர் மீது சுமத்தப்பட்டது. அந்தப் அவப் பெயரை நீக்கிய படம் ‘தாய் சொல்லைத் தட்டாதே' சாண்டோ சின்னப்ப வேரின் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தால் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விரைவாக வெளிவந்த படம். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜா தேவி ஜோடியாக நடித்தார். 133 நாட்கள் ஓடி வசூலை வாரித் தந்தது. 
 
எங்க வீட்டுப் பிள்ளை (1965) 
 
எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை நீக்கிய படம் ‘எங்க வீட்டுப்பிள்ளை'. 236 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக விழா கொண்டாடிய படம். 1965, ஜனவரியில் வெளியானது. பி.நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரிப்பில், சாணக்கியா இயக்கத்தில் வெளி வந்து தமிழ்த்திரையுலகிற்கே திருப்புமுனையை தந்தபடம். இதில் சரோஜாதேவியும், புதுமுக நடிகை ரத்னாவும் ஜோடியாக நடித்தார்கள். வசனத்தை சக்தி கிருஷ்ணாசாமி எழுதியிருந்தார். 13 தியேட்டர்களில் 100 நாட்கள், 7 அரங்குகளில் 175 நாட்கள், 3 அரங்குகளில் 236 நாட்கள் ஓடிய படம் இது. 
 
ஆயிரத்தில் ஒருவன் (1965) 
 
 எம்ஜிஆர் கிட்டத்தட்ட சரித்திரப் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த நேரத்தில், ஒப்புக் கொண்ட சரித்திரப் படம் ஆயிரத்தில் ஒருவன். சிவாஜியின் ஆஸ்தான இயக்குநராக இருந்த பிஆர் பந்துலு, கர்ணன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைத் தொடர்ந்து எம்ஜிஆரிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். மறுப்பேதும் சொல்லாமல் எம்ஜிஆரும் நடித்துக் கொடுத்தார். எங்க வீட்டுப் பிள்ளை என்ற ப்ளாக்பஸ்டர் வெளியான அதே 1965-ம் ஆண்டு, ஜூலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படி ஒரு வெற்றி வேறு எந்த நடிகருக்கும் அமையாது எனும் அளவுக்கு பிரமாண்ட வெற்றிப் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இனி எம்ஜிஆரை மிஞ்ச ஒரு நடிகர் திரையுலகில் இல்லை என்று அழுத்தமாக உணர வைத்த படம் ஆயிரத்தில் ஒருவன். முதல் வெளியீட்டில் வெள்ளி விழா கண்ட இந்தப் படம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ல் மீண்டும் வெளியிடப்பட்டபோது, 190 நாட்கள் ஓடி கோடிகளை அள்ளி, எம்ஜிஆர் என்ற ஆளுமையின் பெருமையை உணர வைத்தது. 
 
காவல்காரன் (1967) 
 
ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘காவல்காரன்'. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக செல்லி ஜெயலலிதா நடித்திருந்தார். ப.நீலகண்டன் படத்தை இயக்கியிருந்தார். வித்வான் வே.லட்சுமணன் வசனத்தை எழுதியிருந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர். தனது சொந்தக் குரலில் பேசி நடித்தப் படம் ‘காவல்காரன்'. குண்டடிப்பட்டு பாதிக்கப்பட்டு பேசிய எம்.ஜி.ஆரின் சொந்தக் குரலை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று அனைவரும் சந்தேகத்தை கிளப்பிய போது, ஏற்றுக் கொள்வோம் என்று மக்கள் ‘காவல்காரன்' படத்தையே மாபெரும் வெற்றிப் படமாக்கி 160 நாள் வெற்றிகரமாக ஓடவைத்து வசூலிலும் சாதயைப் படைக்க வைத்தார்கள். எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையே காவல்காரனுக்கு முன், காவல்காரனுக்குப் பின் என்றாகிவிட்டது. 
 
குடியிருந்த கோயில் (1968) 
 
ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘குடியிருந்த கோயில்.' இதிலும் மாறுபட்ட இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக செல்வி ஜெயலலிதா, ராஜஸ்ரீ நடித்திருந்தனர். கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். வசனம் கே.சொர்ணம், சிறந்த நடிருக்கான விருதை தமிழ்நாடு அரசிடமிருந்து முதன் முதலில் எம்.ஜி.ஆருக்கு பெற்றுத் தந்தபடம். 146 நாட்கள் ஓடி பெரிய வசூலைத் தந்தது. 
 
ஒளிவிளக்கு (1968) 
 
எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆரை மாறுபட்ட கதாபாத்திரத்தில் துனிச்சலாக நடிக்க வைத்து எடுத்த படம் ‘ஒளிவிளக்கு'. இது எம்.ஜி.ஆருக்கு 100வது படம். படத்தை சாணக்யா இயக்கியிருந்தார். கே.சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். செல்வி ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை நடித்திராத முரட்டுத்தனம், திருட்டுத்தனம் கொண்ட குடிகாரன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இப்படிப்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகத்தைப் போக்கி 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியப் படம் ‘ஒளி விளக்கு'. 
 
அடிமைப் பெண் (1969) 
 
எம்.ஜி.ஆர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து, தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் உருவாக்கிய படம் ‘அடிமைப் பெண்'. செல்வி ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சொந்தக் குரலில் ‘அம்மா என்ற அன்பு....' என்று ஒரு பாடலையும் பாடியிருந்தார். வசனத்தை கே.சொர்ணம் எழுதியிருந்தார். இந்தப் படத்தின் கதை வரலாற்று கதையுமல்லாமல், சமூக கதையுமல்லாமல், மந்திர ஜாலங்களைக் கொண்ட கதையுமில்லாமல், ஆனால் எல்லாம் கலந்த கதையாக இருந்தது. இப்படி ஒரு கதையை வெற்றிப் பெற வைப்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. அப்படிப்பட்ட படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு 176 நாட்கள் ஓட வைத்து வெற்றி விழா கொண்டாட வைத்தார்கள். 
 
மாட்டுக்கார வேலன் (1970) 
 
 எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம். செல்லி ஜெயலலிதா, லட்சுமி ஜோடியாக நடித்திருந்தார்கள். ப.நீலகண்டன் இயக்கத்தில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்தது. ஏ.எல். நாராயணன் வசனம் எழுதியிருந்தார். முதலில் இந்தப் படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்குவதாக இருந்தது பிறகு அவருக்கு அதிக வேலைகள் இருந்ததால், ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். இந்த டைரக்டர் படத்தை இயக்குவார் என்று சொல்லிவிட்டு வேறொரு டைரக்டரை வைத்துப் படத்தை எடுக்கும் போது படம் சரியாக வருமா, வெற்றி பெறுமா? என்று விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் சந்தேகத்தை எழுப்பியதால் படத்திற்கு சிக்கல் வந்தது. ஆனால் எல்லா சிக்கலையும் மீறி இந்தப் படத்தை சிறப்பாக தயாரித்தார் தயாரிப்பாளர் கனகசபை. மக்களும் ஏற்றுக் கொண்டு 177 நாட்கள் ஒட வைத்தார்கள். வசூலிலும் சாதனைப் படைத்தது. 
 
ரிக்ஷாக்காரன் (1971)
 
 எம்.ஜி.ஆர். ரிக்ஷா தொழிலாளியாக நடித்த படம் ‘ரிக்ஷாக்காரன்' ஆர். எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. எம்.கிருஷ்ணன் படத்தை இயக்கியிருந்தார். ஆர்.கே.சண்முகம் வசனத்தை எழுதியிருந்தார். புதுமுக நடிகையான மஞ்சுளா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்தப் படம் எடுக்கும்போது சிலர் ஒடாது, வெற்றி பெறாது என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால் படம் வெளிவந்து 167 நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் சாதனைப் புரிந்தது. ‘ரிக்ஷாக்காரன்' எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருதினைக் கொடுத்து கௌரவித்தது இந்திய அரசு. ரிக்ஷாவில் இருந்துக் கொண்டே எம்.ஜி.ஆர் சிலம்பு சண்டைப் பேட்டது அனைவராலும் பேசப்பட்டது, பாராட்டப்பட்டது. 
 
 
உலகம் சுற்றும் வாலிபன் (1973) 
 
எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்து தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம். ‘உலகம் சுற்றும் வாலிபன்'. லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை ரூங்ரேட்டா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். கே.சொர்ணம் வசனம் எழுதினார். இந்தப்படம் வெளிவருவதற்கு பல தடைகள் ஏற்பட்டன. அதை எல்லாம் முறியடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்து சாதனைப் புரிந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்' அன்றைய காலகட்டத்தில் 3 கோடிக்கு ‘இன்றைய கால கட்டத்தில் (300 கோடி) மேல் வசூலை தந்து அரசாங்கத்திற்கு 1.25 கோடிக்கு வரியைக் கட்ட வைத்த முதல் தென்னகப் படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்'.

-பெரு துளசிபழனிவேல்

Tuesday, 15 August 2017

ரோஜா... ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்ரியர்களிடம் கொடுத்த கோல்டன் விசிட்டிங் கார்ட்! #25YearsOfRoja

பொதுவான நண்பர் ஒருவரது பார்ட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இளைஞரை சந்திக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் அப்போது வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட முடியாது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். விளம்பர ஜிங்கிள்ஸில் பிஸியும் கூட. ‘ரோஜா படத்துக்கு அவருக்குக் கிடைத்த சம்பளம் 25000. அதை மூன்று நாட்களில் விளம்பரத்துக்கு இசையமைத்து சம்பாதிக்கும் நிலையில்தான் அவர் இருந்தார். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அவரது லியோ காபி (என்ன ஒரு ஒற்றுமை. அதில் நடித்திருந்தவர் அரவிந்த்சாமி!) விளம்பர ஜிங்கிள்ஸுக்காக , விளம்பர உலகில் பெரும் பாராட்டுகள், விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானை வந்து சேர்ந்து கொண்டிருந்த நேரம் அது.



மணிரத்னத்தை தனது ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு அழைக்கிறார் ரஹ்மான். அவ்வளவு பெரிய டைரக்டர். வருவாரா என்று தெரியாது. ஆனால், வருகிறார் மணிரத்னம். ஒன்றிரண்டு ட்யூன்களை வாசிக்கச் சொல்கிறார்.
“நான் அசந்துபோனேன். ஒரு கார்ஷெட்டை, ரெகார்டிங் ஸ்டூடியோவாக மாற்றியிருந்தார் ரஹ்மான். இந்த இடத்தில் இருந்து இப்படி அசத்தலான ட்யூன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரா என்று வியந்தேன். அத்தனை வசீகரிக்கற இசைத்துணுக்குகளை அந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவில்லை” என்கிறார் மணிரத்னம்.

“அந்த சமயம் நான் விளம்பரங்களுக்கெல்லாம் இசையமைத்துக் கொண்டிருந்த காலம். அங்கே 100 ட்யூன் போட்டால், அவற்றிலிருந்து ஒன்றிரண்டுதான் தேர்வாகும். ஆகவே நான் ஒரு ஜென் நிலையில்தான் இருந்தேன். அவருக்கு என் ட்யூன்ஸ் பிடிக்குமா என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்தது வேறு!” -என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

 மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை.


சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை


கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை


தி
ருப்பூரில் பாளையக்காடு FC குடோனில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன் நான்.  ‘செகண்ட் ரயில்வே கேட்’ அருகே  கவுண்டர் மெஸ் என்றொரு கடை இருந்தது. டோக்கன் வாங்கிக்கொண்டு க்யூவில் அமர்ந்து, நம் வரிசை வரும்போதுதான் போய் சாப்பிட முடியும். அங்கே, வெளியில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்துதான் இந்த வரிகளை முதன்முதலில் கேட்டேன். சின்ன வயதிலிருந்தே பாடல்களின் பைத்தியமாக இருந்தேன்.  இளையராஜாவின் தீவிர ரசிகனான (இன்றும்) எனக்கு, ‘இது ராஜா ம்யூசிக் இல்லையே’ என்று தோன்றியது. போய்ப் பார்த்தபோது ‘ரோஜா’ கேசட்டைக் காண்பித்தார் கடைக்காரர். பாலசந்தர் தயாரிப்பு. மணிரத்னம் படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை.

இரண்டாம் இடையிசையில், கோலாட்டம் போல ஆரம்பித்து, ‘ஏலேலோ.. ஏலே.. ஏலேலோ’ அப்படி ஈர்த்தது.  இந்தப் பாடலின் மூலம் தமிழர்களின் வீடெங்கும் தன் இசையைப் படரவிட்ட ரஹ்மான், அதன்பின் அடைந்த உயரங்கள், இமயத்தைத் தாண்டிய சிகரங்கள். “அந்தப் பாட்டைக் கேட்டதுமே அழுதுட்டேன். ஏன்னா, சினிமாவுக்குப் போட்ட முதல் பாட்டில்லையா?” என்றார் அவரது அம்மா. படத்தின் தயாரிப்பாளர், கே.பாலசந்தர், இந்தப் பாடலைக் கேட்டதும்  மணிரத்னத்தை அழைத்துச் சொன்னது ‘Its going To Be Song of The Decade". ஆனால் அந்தப் பாடலைப் பற்றி இரண்டு  Decades கடந்தும் பேசிக் கொண்டிருக்கிறோம்.. பேசுவோம்.
என்னைக் கவர்ந்தது அந்தப் பாடலில் பல உண்டு. பல்லவி முடிந்ததும் தனியே ஒலிக்க ஆரம்பிக்கும் வயலின், ஒரு இடத்தில் ‘சின்னச் சின்ன ஆசை’யைத் தொடர்ந்து ஒலிக்கும் வயலின், அந்த ‘ஏலேலோ’க்களுக்கு இடையே ஒலிக்கும் வீணை, ‘மீன்பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’யைத் தொடர்ந்து ஒலிக்கும் புல்லாங்குழல், மொத்தப்பாடலும் முடியும்போது  ‘ஆசை!’ என்று சட்டென்று முடியும் இடம் என்று நிறைய.
தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இந்தக் கலைஞன், என் போன்ற இசைப்ரியர்களிடம் நீட்டிய கோல்டன் விசிட்டிங் கார்ட் இந்தப் படத்தின் பாடல்கள்!

ரஹ்மான் அப்போது செய்தது, இசையை விட ஒலித்தரத்தில் மேஜிக். துல்லிய ஒலித்தரம் என்பது அவரது ஸ்பெஷாலிட்டி. 6 வயது முதல் அப்பாவுடன் ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு செல்வார் ரஹ்மான். 9 வயதில் தந்தை இறந்துவிடுகிறார். ரஹ்மானுக்கு பள்ளிக் காலம்தொட்டே எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இவற்றின்மீது மோகம் அதிகம். அவை சார்ந்த துறைகள்மீதுதான் ஆவல். ஆனால், தந்தை இறந்துவிட்டதால், ‘கொஞ்சம் இசை தெரியுமே உனக்கு.. தெரிந்த தொழிலைச் செய்’ என்ற அன்னையின் கட்டளைப்படிதான் அவர் இசைக்கூடங்களுக்குச் செல்கிறார். சின்னச் சின்ன ஆர்கஸ்ட்ரைசேஷன் வேலைகள், செய்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார்.  இசை சார்ந்த தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால் அவருக்கு Sounding மீது மிகப்பெரும் அறிவும், ஆவலும் உண்டு.

ரோஜா  இசையமைத்து பாடல்களெல்லாம் ஹிட் ஆனாலும், தியேட்டரில் அவற்றைக் கேட்கும்போது மிகவும் மனம் தளர்ந்து போகிறார் ரஹ்மான். Sounds குறித்த அறிவு வாய்க்கப்பெற்ற அவருக்கு, தியேட்டர்களின் ஒலித்தரம் ஏமாற்றமளித்தது.  “இப்படியா கேட்கும் தியேட்டர்களில்? இப்படியானால் நான் சினிமாவுக்கு இசையமைக்க மாட்டேன்” என்கிறார். மணிரத்னம், சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் இருவரும்தான் ‘இந்த நிலை மாறும்’ என்று நம்பிக்கையளித்தவர்கள். அதன்பிறகே சமாதானமாகிறார்.

ரஹ்மானின் இந்த ‘சவுண்ட் க்வாலிட்டி கறார்த்தனம்’ பற்றி சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர் சொன்னது முக்கியமானது: “புல்லாங்குழலில் வரும் காற்று மட்டும்தான் வேண்டும். அந்த ’Base' பாடலில் கேட்கக்கூடாது ” என்பாராம். கீழுள்ள வீடியோவில் 1.25ல் கேளுங்கள்.

பல்லவி முடிந்து, முதல் இடையிசையில் ‘லலலல லலலா’ எனும் பெண்குரலுக்கு முன் வரும் புல்லாங்குழலிசையைக் கேட்டால் அது புரியும். அந்த ஷார்ப் - துல்லியம் - ரஹ்மானிசம்! காதல் ரோஜாவே பாடலின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, சோகத்தை அத்தனை எளிமையாகக் கடத்துகிற மெட்டு. மனைவியைப் பிரிந்தவன் ஏற்கெனவே பெரும் சோகத்தில் இருப்பான். அவன் சோகத்தை ராகங்களாகும்போது,

சிக்கல்களில்லாத எளிமை மிக முக்கியம் என்று ரஹ்மான் நினைத்திருக்க வேண்டும். அத்தனை எளிய மெட்டு. (அதாவது கேட்பதற்கு. இசையமைக்க அல்ல!)


வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்றுபோ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்ததில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்துபோ
பாவையில்லை பாவை... தேவையென்ன தேவை...
ஜீவன்போன பின்னே.. சேவையென்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல்.. சொல்!
ஏமாற்றத்தையும் சோகத்தையும் இயலாமையையும் ஒருசேரக்கடத்துகிற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். அத்தனை எளிமையாகவும் அழுத்தமாகவும் அமைந்த வைரமுத்துவின் வரிகள் என்று அது ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்!

‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடலைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் வரும். மதுபாலாவின் கண்களை மூடியிருக்கும் தன் கைகளை, அரவிந்த்சாமி விடுவிக்கும் தருணத்திலிருந்து பாடல் தொடங்கும். அதன்பின் 10 நொடிகளுக்குப் பிறகு கண்ணாடி உடைவதைப் போன்ற ஒரு ஃப்யூஷன். அதன்பின் மெலிதான கோரஸ். தொடர்ந்து வயலினின் ஒரு இழுப்பு. இதற்குப் பிறகுதான் ‘புது வெள்ளை மழை’ என்று சுஜாதாவின் குரல் தொடங்கும். படத்தைக் காட்சி வடிவில் பார்க்கும்போதெல்லாம், இந்த விஷுவல்ஸ்குப் பிறகு அமைத்த இசையோ என்று தோன்றும். அந்த அளவுக்கு, காஷ்மீரின் அழகை மதுபாலா வியந்து பார்ப்பதை, கண்ணை மூடி நாம் கேட்டாலும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இசையாகக் கொடுத்திருப்பார் ரஹ்மான்.

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் சேராத பெண்நிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ



பாடல் முழுவதுமே ஒரு நேர்கோட்டில், ஒரே மாதிரியான ஒரு இசை பின் தொடர ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘உந்தன் காதோடு யார் சொன்னது’ எனும் வரிகளில் ஒரு அருவி விழுவதை உணரலாம்.

‘ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்’ இந்த ஆல்பத்தின் மற்ற பாடல்களைவிட, குறைந்த அளவு பேசப்பட்ட பாடல். ஆனாலும் அதன் ஆர்க்கஸ்ட்ரைசேஷன்.. அபாரம். பெரும்பாலும், பாடகர்களை வைத்தே - A cappella பாணியில் பல இடங்களில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார். ஜுகல்பந்தி பாணியில் தபேலாவும், ட்ரம்ஸும் போட்டிபோடும் இரண்டாம் இடையிசையும் டாப்.

ரோஜாவுக்குப் பின் ஒன்றிரண்டு படங்கள்  வந்த புதிதில், பேட்டிகளில் உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல் எது என்று ரஹ்மானிடம் கேட்கப்பட்டால் ‘தமிழா தமிழா’, ‘சின்னச் சின்ன ஆசை’ என்றுதான் டக்கென்று பதில் வரும்.  தாய் மண்ணே வணக்கம், செம்மொழிப் பாடல் என்று தொடங்கி  ஆஸ்கர் பெற்றுத் தந்த ஜெய்ஹோ வரை இந்த மாதிரியான ஜானர் பாடல்களில் தனி முத்திரை பதிப்பதற்கான ஆரம்பப் புள்ளி இந்தப் பாடல் எனலாம்.
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னைக் காக்கும் இல்லையா

படத்தில் ஒரு ஆல் டைம் ஃபேவரைட் பாடலாக இந்தப் பாடல் அமைந்தது. ‘தமிழா தமிழா’. பல்லவி, இடையிசை, சரணம் என்ற வகைக்குள் இதை அடக்க முடியாது. ஹரிஹரனின் மென்குரலில் ‘தமிழா தமிழா’ என்று ஆறுதல் வரிகளோடு வரும் பாடலில், நாடி நரம்பை உசுப்பேற்றும் இசையும், ‘இம்மண்ணிலா பிளவென்பது?’ என்று முறுக்கேற்றும் வரிகளுமாய்.. ஒரு புதிய அனுபவம் தந்தது இந்தப் பாடல்.
25 வருடங்களுக்கு முன், இதே ஆகஸ்ட் 15ல் வெளியான 'ரோஜா' படம் பல்வேறு சாதனைகளைப் படைத்தது. மணிரத்னம் எனும் கலைஞனை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது. இந்தியிலும் ரோஜா படமும், பாடல்களும் ஹிட்டடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் அங்கும் பிரபலமானார். மூன்று இந்திப் படங்கள் ஒப்பந்தமாக அவற்றில் முதலில் வெளியான ‘ரங்கீலா’ வடக்கத்தியவர்களைப் பித்துப் பிடிக்க வைத்தது. அதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது ரோஜா தான்.

ரோஜா என்ற திரைப்படம்தான்... ரஹ்மானுக்கு ஃப்லிம்ஃபேர் விருது, மாநில அரசின் விருது என்று துவங்கி தேசிய விருதுவரை பெற்றுத் தந்தது.  வைரமுத்துவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. மணிரத்னத்திற்கு மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுத்தந்தது. அரவிந்த்சாமிக்கு விருதைப் பெற்றுத் தந்தது. சரி... ரசிகர்களுக்கு?

ஏ.ஆர். ரஹ்மான் எனும் பெருங்கலைஞனை அடையாளம் காட்டியது! எத்தனை கொடுத்தாலும் பத்தாத இசைப்ரியர்களெனும் யானைகளுக்கு  ‘ரஹ்மானிசம்’ என்ற மதம்பிடிக்க வைத்தது!


பரிசல் கிருஷ்ணா

இன்னும் வாழ்வதை அறியாமல் இறந்து போனவன்! - நா.முத்துக்குமார் நினைவுதினக் கட்டுரை

“வாழ்க்கை என்னும் நதி, மரணம் என்னும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு திசைகளிலும் வெவ்வேறு மேடு பள்ளங்களிலும் ஓடவேண்டியிருக்கிறது.”
  - நா.முத்துக்குமார்




நண்பர்களே... நான் இப்போது தரமணி ரயில்வே ஸ்டேஷனில் நின்றுகொண்டிருக்கிறேன். இங்கு  என் முன்னால் ஒரு ரயில் வண்டி நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் `நா.முத்துக்குமார் எனும் பேரன்பு எக்ஸ்ப்ரஸ்’ என எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரயில், ஓடிக் களைத்து நிற்கிறது என்பது அதன் மெளனத்திலேயே உணர முடிகிறது. மெளனமாக இருப்பதால் அதன் பயண இலக்கு என்னவென்பது யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அது இனிமேல் எங்கும் பயணிக்காது என்ற உண்மை இங்கு உள்ள எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அந்த ரயிலுக்கும்தான்! ஆனால், அந்த ரயிலுக்கு அதுகுறித்த எந்த வருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இறப்பதற்கு முன்பே தன் இறப்பை அறிய விரும்பி, அறிந்தும்கொண்ட ரயில் அது.  

அது, தண்டவாளத்தில் ஓடக்கூடிய இரும்பு ரயில் அல்ல;  வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் மிதக்கும் பனித்துளிகளால் ஆன கடலுக்குள் பயணிக்கும் விசேஷ ரயில். ஆனாலும்,   அந்த ரயில் மிகமிகச் சாதாரணமாக இருந்தது. ஓடாத ரயில் சாதாரணமாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான். ஆனால், இது அசுர வேகத்தில் ஓடும்போதுகூட இதேபோல்தான் இருந்தது. அந்த ரயிலில் கூட்டம் கும்மியபோதும், எல்லோரும் அதைப் பார்த்து வியந்தபோதும், சிலாகித்தபோதும், அதில் இடம்பிடிக்க பலர் அடித்துக்கொண்டபோதும், அது தன் பாதையை நோக்கி கவிதை கூவியபடி ஓடிக்கொண்டிருந்ததேயொழிய அது வேறு எதுவும் செய்யவில்லை. எத்தனையோ மனிதர்களை எங்கெங்கோ கூட்டிச்சென்ற அந்த ரயிலில் ஏறி பார்க்க, யாருக்குதான் ஆசை வராது? எனக்கும் வந்தது, ஏறினேன்.

முதல் பெட்டியில்  ‘தூசிகள்’ என்றும் கடைசிப் பெட்டியில்  ‘பேரன்பின் ஆதி ஊற்று’ என்றும் எழுதப்பட்டிருந்ததை என் கண்கள் கவனித்தன. `மனதில் உள்ள தூசிகளை எல்லாம் தட்டினால்தான் பேரன்பின் ஆதி ஊற்றை அடைய முடியுமோ?' என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.  ஓராயிரம் பாடல்கள் அந்த ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக  ஒலிக்க ஆரம்பித்தன. காதல், சிநேகம், காமம், ஏக்கம், துரோகம் என இருக்கும் எல்லா உணர்வுகளையும் எளிய வரிகளாக்கிச் செய்யப்பட்ட அந்தப் பாடல்களில் பேரன்பு வழிந்துகொண்டிருந்தது. அந்த அன்பின் அழுத்தத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்தேன்.  திடீரென ஒரு  விரல்   ஒரே அழுத்தில் அந்தப் பாடல்களை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தால் யாருமில்லை! ஏதோ ஒரு பெட்டியிலிருந்து பெரும் சத்தம்... அந்தப் பெட்டியை நோக்கி ஓடினேன்.  ‘அணிலாடும் முன்றில்’ என எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில்,  அம்மா, அப்பா,  அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன், தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப்பெண்கள்,  சித்தப்பா, அண்ணி, மைத்துனன், மனைவி, மகன்  என சகல உறவுகளின் பெயரிலும் தனித்தனி அறைகள் இருந்தன.

தங்கை இல்லாதவன் என்கிற தவிப்பு எனக்கு இயல்பிலேயே இருப்பதால், முதலில் `தங்கை' என எழுதப்பட்டிருந்த அறையைத் திறந்தேன். “ஆஹா... அது எத்தனை அற்புதமான அறை! அதில் தங்கையின் சின்னச் சின்ன அசைவுகளும் அத்தனை நுணுக்கமாக அல்லவா செதுக்கப்பட்டிருந்தது.  அண்ணன்மேல் தங்கைகொள்ளும் அன்பும் பாசமும் இத்தனை அலாதியானவையா? தங்கையுடன் பிறக்காத அத்தனை அண்ணன்களும் துரதிர்ஷ்டசாலிகள் என்ற மெய் உணர்ந்த கணம் அது.  தங்கையின் அருமை பெருமைகளைச் சொல்லிவிட்டு, கடைசியில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர மட்டுமா அக்காவும் தங்கையும்? அந்த அறை கேட்ட ஒற்றைக் கேள்வி... அக்காவையும் தங்கையையும் சுமையாக நினைக்கும் அண்ணன் தம்பிகளின் மனதை உலுக்கும் ஓராயிரம் கேள்விக்குச் சமம். 

அடுத்ததாக `அம்மா' என எழுதப்பட்ட அறையைத் திறந்தேன்.  “மன்னிக்க... அந்த அனுபவத்தை என்னால் எழுத்தில் கொண்டுவர முடியவில்லை. அங்கு பார்த்த அன்பின் எடை இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த எடையையும்விட கூடுதலானது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.  

அடுத்ததாக `அப்பா' என்ற அறையைத் திறந்தேன், “காலம் காலமாக ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாக்களின் முகம், அன்பு அப்பாக்களின் முகம், ஆசை அப்பாக்களின் முகம் அங்கு இருந்ததை என்னால் உணர முடிந்தது. செத்துப்போன என் அப்பாவை ஒரு கணம் கும்பிட்டுக்கொண்டேன். அவருக்காக நான் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் அவரைப் பற்றிய அத்தனை சித்திரங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையும் அங்கே எனக்குள் முளைத்தது.

இப்படியாக, நான் எல்லா உறவுகளின் அறையும் திறந்துப் பார்க்கப் பார்க்க  வியந்துபோனேன். `அட... இது எதையுமே நாம் உணரவில்லையே... ரசிக்கவில்லையே! என்ன வாழ்க்கை வாழ்கிறோம்? பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட இந்த வாழ்க்கை, எத்தனை மோசமானது! ரசனை இல்லாதது' என்பதும் `அப்படி வாழும் மனிதர்கள்  முதுகெலும்பு இல்லாத மனிதர்கள்' என்பதும் விளங்கிற்று. அந்த நொடி முதல் இருக்கும் உறவுகளின் மீது தீராத பற்றும், இல்லாத உறவுகளின் மீது ஏக்கமும் பிறந்தது.
அணிலாடும் முன்றிலைப் பார்த்த பரவசத்தில், அடுத்தடுத்த பெட்டிகளைப் பார்க்க பேராவல்கொண்டேன்; துள்ளிக் குதித்து ஓடினேன். “ `பட்டாம்பூச்சி விற்பவன்', `நியூட்டனின் மூன்றாம் விதி', `குழந்தைகள் நிறைந்த வீடு', `அனா ஆவன்னா', `என்னைச் சந்திக்க கனவில் வராதே' எனத்  தங்கத்தால் ஆனா குட்டிக் குட்டி அறைகள் இருந்தன. ஒவ்வோர் அறையையும் திறக்கும்போதுதான் தெரிந்தது, மேலே மட்டும்தான் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது என்ற உண்மை. உள்ளே அத்தனை வேலைப்பாடுகளும் மயிலறகால் செய்யப்படிருந்தன. பள்ளிக்கூடக் காதலிகள் அங்கே சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள்.  தன் மனதில் உள்ள அழுக்கை தூர்வாராமல் கிணற்றைத் தூர்வாரும் அப்பாவின் தவறு அங்கே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கீழ் வீட்டுக்காரனைத் தொல்லை செய்யும் மேல் வீட்டுக்காரனுக்குப் பாடம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது, தன்னை காலம் முழுக்க தீண்டியவளின் பிரிவை எண்ணி அழும் தையல் மெஷின்கள் அங்கு இருந்தன. கிழிந்து தேய்ந்துபோன சைக்கிள் டயர், தான் கடந்து வந்த பாதைகளை காற்றோடுப் பேசிக்கொண்டிருக்கும் அதிசயத்தை அங்கே பார்க்க முடிந்தது. 

பிறந்த வீட்டை துறந்து புகுந்த வீட்டிற்கு போகும் பெண்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் தவித்தார்கள். பனித்துளிகள், புற்களின் மீது தூங்கிக்கொண்டிருந்தன. இன்னும் இத்தியாதி... இத்தியாதி... அவற்றை எல்லாவற்றையும் ஒருவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ‘பேரன்பின் ஆதி ஊற்றில்’ நனைந்ததால் எனக்கு அன்பின் நடுக்கம் தாங்கவில்லை. அந்த ரயிலிலிருந்து குதிக்க ஆயத்தமானேன். “என் ப்ரிய நண்பா... பிணத்தை எரித்துவிட்டு சுடுகாட்டிலிருந்து கிளம்புகிறவர்களிடம் சொல்வதைப்போல் சொல்கிறேன். ‘திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ' ” என்றது ஒரு குரல்.  அந்தக் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில்  திரும்பிப் பார்க்காமல் முன்னே சென்று குதித்தேன். அந்த ஓராயிரம் பாடல்களும் மீண்டும் ஒன்றன் பின் ஒன்றாக ரயிலுக்குள் ஒலிக்கும் சத்தம் கேட்டது.

எம்.புண்ணியமூர்த்தி

Saturday, 15 July 2017

மகத்தான படங்களை இயக்கிய மகேந்திரன்!

இயக்குநர் மகேந்திரனைப் பற்றிப் பேசாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய எவ்வோர் உரையாடலோ கட்டுரைத் தொடரோ முழுமை பெற்றுவிடாது. தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர் மகேந்திரன். அவருடைய படங்கள் வெளியான காலகட்டத்தில் அவற்றின் பொருண்மை குறித்து தமிழ்ச் சமூகத்தில் போதுமான உரையாடல்கள் நிகழ்ந்தனவா என்பது நமக்குத் தெரியவில்லை. 
 
 



 
 
இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அவர் முனைந்து செயல்பட்ட காலத்திற்குப் பிறகு அவருடைய படங்களின் மதிப்பு மேன்மேலும் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஏன் மகேந்திரன் இன்றியமையாத ஓர் இயக்குநராக அறியப்படுகிறார் ? அவரைவிடவும் சிறப்பாக இயக்கியவர்கள் பலர் இருக்கின்றார்களே. ஆம், மகேந்திரனை விடவும் சிறப்பான இயக்குநர்கள் இருக்கிறார்கள்தாம். ஆனால், இங்கே மகேந்திரன் முன்னிற்கவில்லை. மகேந்திரன் இயக்கிய படங்கள் முன்னிற்கின்றன. 
 
கதை மாந்தர்களின் ஆழ்மனத்தைக் காட்சிப்படுத்தி, அதையே கலையாக்கி அவர் தம் படங்களில் வைத்துச் சென்றுள்ளார். கதை மாந்தர்களின் மனங்களை நமக்கு அடையாளம் காணத் தெரிந்துவிட்டது. 
 
 
 
 எழுதத் தெரிந்தவர் இயக்குநராய் வடிவெடுப்பதில் பலப்பல அருமைகள் வாய்க்கும் என்பதற்கு மகேந்திரன் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு கதைக்கு என்ன நியாயம் செய்ய வேண்டும் என்பதுதான் இயக்குநரின் வேலையே. தொடக்கத்தில் பல்வேறு படங்களுக்குக் கதையும் உரையாடலும் எழுதித் தந்தவர் மகேந்திரன். 
 
சிவாஜி கணேசனின் உரக்கப் பேசும் உரையாடல்களுக்குப் பெயர் பெற்ற தங்கப்பதக்கம் படத்திற்கு எழுதியவர். அவ்வரிசையில் ரிஷிமூலம், ஆடுபுலி ஆட்டம், காளி, பகலில் ஒரு இரவு என எண்ணற்ற படங்கள்.
 
 'முள்ளும் மலரும்' மூலம் இயக்குநர் ஆனார். முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நண்டு, மெட்டி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் அவருடைய இயக்கத்தில் வரிசையாக வந்தன. 
 
 
 
ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் தரத்திலானவை. தற்காலத்தினர் இப்படங்களைத் தவறவிடாமல் பார்க்க வேண்டும். ஓர் எழுத்தாளராக மகேந்திரன் தம் படங்களை இயல்பு குலையாமல் எடுப்பதற்குத்தான் தீர்மானம் செய்திருப்பார். கதை மாந்தர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே உரைத்தல் என்பதே அவருடைய இயக்கம். வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கிடக்கும் பாத்திரங்களின் எளிய தோற்றங்களையும், நினைப்புக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளியையும், துயரத்தின் கனத்த அமைதியையும், கையறு நிலையில் வெறுமனே பார்த்து நிற்றலையும் அவர் காட்சிப்படுத்துவதன் வழியாகவே பார்வையாளர்களுக்குள் ஒரு கலையுணர்ச்சியை வருவிக்கிறார். அவற்றையே அவர் தம் திரைமொழியாக ஆக்கிக்கொண்ட பிறகு மேலும் இரண்டு வித்தகங்கள் அவர் படங்களுக்குத் தோள்கொடுக்கின்றன. ஒளிப்பதிவும் இசையமைப்பும்தாம் அவ்விரண்டு. 
 
மகேந்திரனின் படங்களை இளையராஜாவின் இசை கலைச்செப்பம் செய்து தந்தது. முள்ளும் மலரும் பின்னணி இசையில் இளையராஜா விட்டுச் சென்ற மௌனப் பொழுதுகள்தாம் பார்வையாளர்களைத் திரையை நோக்கி உற்றுப் பார்க்க வைத்தன. அந்த உற்று நோக்கலே உணர்வுகளைக் கட்டிவிட்டது. 
 
உதிரிப் பூக்களின் கருவிசை (தீம் மியூசிக்) இளையராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலும் இசைக்கே முதலிடம். மகேந்திரன் படங்களில் இளையராஜா செய்து காட்டிய வித்தகங்கள் என்றே தனிப்பொருளில் எழுதிச் செல்லலாம். பின்னணி இசையோடு நிறுத்திக்கொண்டோம், பாடல் வளங்களை நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம். 'சங்கம் காணாதது தமிழும் அல்ல... தனை அறியாதவள் தாயும் அல்ல...' என்பதுதான் தாய்மைக்கே இலக்கணம். 
 
மகேந்திரன் படங்களுக்கு வாய்த்த இன்னொரு வித்தகம் ஒளிப்பதிவு. முள்ளும் மலரும் பாலுமகேந்திராவின் கலைவண்ணம். கிட்டத்தட்ட அப்படத்தைத் தம் படம்போன்ற மொழியில் பாலுமகேந்திரா கையாண்டிருப்பதைக் காணலாம். உதிரிப் பூக்களில் அசோக்குமார். தமிழ்த் திரையுலகின் புகழ் பாடப்படாத நாயகர்களின் பட்டியலில் அசோக்குமாரைச் சேர்க்கலாம். மகேந்திரன் எடுக்க நினைத்தது அசோக்குமாரின் கோணத்தில் அருமையான சுடுவுகளாக அமைந்தன. 
 
இன்றைக்கும் உதிரிப் பூக்கள் படமாக்கப்பட்ட மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுத் திக்கம் நான் அடிக்கடி செல்வதுண்டு. அந்தப் பகுதியே உதிரிப்பூக்கள் நிகழ்ந்த களமாகத்தான் எனக்குத் தென்படுகிறது. பெருவெள்ளம் சுழித்தோடும் பவானி ஆற்றங்கரையில் தாய்தந்தையற்ற இரண்டு மழலைச் செல்வங்கள் நடந்து செல்வதைப்போன்ற காட்சிப்பிழை அங்கே ஏற்படுவதுண்டு. அருமையாய் எடுக்கப்பட்ட எண்ணற்ற தமிழ்ப்படங்கள் வெற்றி பெறாமல் தோற்றுப் போயிருக்கின்றன. அதற்கு எதைக் காரணம் காட்டுவது ? கடவுளின் இருப்பு இல்லாமையைப் போன்றே விடை தெரியாத ஒன்று அது. அப்படித் தோற்றுப் போன படங்களில் தலையாயது என்று மகேந்திரனின் 'பூட்டாத பூட்டுகள்' படத்தைத்தான் சொல்வேன். மகேந்திரன் எடுத்த எந்தப் படத்தையும் விட்டுக்கொடுப்பேன். 
 
பூட்டாத பூட்டுகளை என்னால் விட்டுக்கொடுக்கவே இயலாது. அது எழுத்தாளர் பொன்னீலனின் கதை. திருமணமான பெண்ணொருத்தியின் மனத்தை அவ்வூர்க்கு வரும் ஓர் இளைஞன் கவர்ந்துவிடுவான். பிறகு ஊரைவிட்டு வெளியேறுவான் அவ்விளைஞன். தானுற்ற உணர்வுகளை உண்மையென்று நம்பும் அப்பெண் தன் வீட்டைத் துறந்து அவ்விளைஞனின் வீட்டுக்கே சென்று நிற்பாள். அங்கே அவளுக்கு வரவேற்பிருக்காது. இளைஞனும் புறக்கணிப்பான். "இங்கே எதுக்கு வந்தே ?" என்றுதான் கேட்பான். "நம்மப் பத்தி ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு. இனிமே உங்களோட வாழ்றதைத்தவிர வேற வழியே இல்லை" என்பாள் அவள். 
 
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்த முடியுமா ? பழகினோம் கொண்டோம்னா அது வேற விசயம். முதல்ல ஊர் போய்ச் சேரு... உன்னோட நிக்கறத மத்தவங்க பார்த்தாங்கன்னா என் பேரு கெட்டுப்போயிடும்..." என்பான் அவன். உயிரைத் துறக்கும் வலிவற்ற அப்பெண் தன் கணவனிடமே திரும்பிவிடுவாள். ஓரளவுக்கு நினைவிலிருந்து எழுதியுள்ளேன், இந்தக் கதையை மகேந்திரனின் இயக்கத்தில் ராஜாவின் பின்னணியிசையில் எண்ணிப் பாருங்கள். 
 
மகேந்திரன் எழுத்தாளர்களின் ஆக்கங்களிலிருந்து ஓரிழையை எடுத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர். கடைசியாக அவர் எடுத்த சாசனம் திரைப்படத்திற்கும் கந்தர்வனின் சாசனம் கதைக்கும் ஏதொரு தொடர்பையும் காண முடியவில்லை. அவர் ஒரு கதையில் தோன்றும் பாத்திரங்களால் கவரப்படுகிறார். அவர்களைக்கொண்டு தமக்கான திரைக்கதையை வடித்தெடுக்கிறார். நண்டு என்னும் படம் மட்டும் சிவசங்கரியின் எழுத்தை ஓரளவு ஒட்டியதாக அமைந்திருக்கக்கூடும். நம் கதைக் களஞ்சியங்களில் அவ்வளவு மனிதர்கள் நகமும் தசையுமாக நடமாடுகிறார்கள். அவற்றில் பட்டு நூலெடுத்து வித்தை செய்யும் மாபெரும் கலைஞராக மகேந்திரன் ஒருவரே தென்படுகிறார்.

Wednesday, 15 March 2017

தமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை!

நகைச்சுவைப் படங்களுக்கு நம் தமிழ் மக்களிடையே எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மிகப் பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவைப் படங்கள் என்று எதனையும் கூறிவிட முடியாது. காரணம் அனைவரும் அறிந்ததே.
 
 
 
 அவ்வளவு நல்ல நகைச்சுவைப் படங்கள் எதுவும் வரவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், வெளியான ஒருசில நல்ல நகைச்சுவைப் படங்களும் மக்களை திரையரங்கிற்கு ஈர்க்கவில்லை என்பதே உண்மை. நம் மக்கள் நகைச்சுவைப் படப் பிரியர்கள்தான் என்றாலும் அவர்கள் நம்பி திரையரங்கிற்குச் செல்வதற்கு ஒரு நல்ல நகைச்சுவையாளர் தேவைப்படுகிறார். இன்றைய சூழலில் அப்படி யாரும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

ஒரு காலத்தில் கவுண்டமணி-செந்தில் காம்பினேஷன் இருந்தாலே எதைப் பற்றியும் யோசிக்காமல் திரையரங்கிற்கும் செல்லும் வழக்கம் இருந்தது. அதே போல்தான் விவேக்கிற்கும், வடிவேலுவிற்கும். பின் சிறிது காலம் சந்தானம். கவுண்டமணி செந்தில் ஓய்வு பெறும் சூழலில் எப்படி வடிவேலு மற்றும் விவேக் அவர்கள் இடத்தை ஓரளவிற்கு நிரப்ப முயற்சி செய்தார்களோ அதே போல வடிவேலு, விவேக்கின் படங்கள் குறையத் தொடங்கும் நேரத்தில் சந்தானம் அதனை நிவர்த்தி செய்தார். ஆனால் சந்தானத்திற்குப் பிறகு அவ்வளவு பெரிய பொறுப்பை சுமக்கும் அளவுக்கு வேறு நகைச்சுவையாளர்கள் தற்பொழுது இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே. 
 
 மேற்கூறிய அனைவருமே நகைச்சுவையாளராகத் தொடராததற்கு வெவ்வேறு காரணங்கள். கவுண்டருக்கு முதுமை. வடிவேலுவுக்கு சிலபல அரசியல் காரணங்கள். விவேக்கிற்கு குடும்ப வாழ்க்கை... சந்தானத்திற்கு கதை நாயகன் ஆசை. இவர்கள் அனைவருமே ஒவ்வொரு காலகட்டத்தில் சம்பளத்தொகையில் தயாரிப்பாளர்களை அலற வைத்தவர்கள்தான். கவுண்டர் 90 களிலேயே 40 லட்சம் வரை வாங்கியவர். கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் அவருக்குத் தரப்பட்டது. கவுண்டர் அதற்கு ஒர்த்தானவர். அவரால்தான் பட படங்கள் ஓடின, என்கிறார்கள் கவுண்டரின் திரையுலக ரசிகர்கள். வடிவேலுவின் சம்பளத்தைக் கேட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடிய இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களும் நாம் நன்கறிவோம். 
 
இவருக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை என சுந்தர்.சி ஓப்பனாக பேட்டியும் கொடுத்தார்.
 
மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டிகளைப் போல் நாள் சம்பளம், ஒவ்வொரு ட்ராக்கிற்கும் சம்பளம் என நகைச்சுவையாளர்களின் சம்பளம் எங்கெங்கோ எகிறியிருந்தது. சந்தானம் காமெடியனாக நடித்த பொழுது அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு கால்ஷீட்டிற்கு பதினைந்து லட்சம் (அவ்வ்). மேலும் அதிகரித்திருக்கலாம். சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களைக் காட்டிலும் இவர்களின் ஊதியம் அதிகம். 
 
வருமான உயர்வு என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு செய்தி. ஆனால் ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் ஒருவனுடைய மாத வருமானம் 48 லட்சத்தைத் தாண்டும் பொழுது, அதன் பின் வருகிற வருமான உயர்வு அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்கிறது. (48 லட்சமா? 30 ரூவாடா... 30 ரூவா குடுத்தா 3 நாள் கண்ணு முழிச்சி வேலை செய்வேண்டா என்ற வசனம் உங்கள் மனதில் வந்து போனால் கம்பெனி பொறுப்பல்ல). 
 
வருமானத் தேவை பூர்த்தியாகும் பொழுது பிறகு அதை விட பவர்ஃபுல்லான பேர், புகழ், இடம், பதவி, முன்னிலை போன்றவற்றிற்கு மனது ஆசைப்படுகிறது. ஒரு அளவிற்கு மேல் மக்களிடத்தில் வரவேற்பு எகிறும்போது அவர்களின் குணாதியங்களும் மாறிப்போகின்றன. புகழ் போதை கண்களை மறைக்கத் துவங்குகிறது. நம்மை எதற்காக மக்கள் விரும்புகிறார்கள் என்பதை மறந்து நகைச்சுவையாளர்கள் மனது கதை நாயகன் இடத்தைக் குறி வைக்கிறது 
 
நகைச்சுவையாளர்கள் கதாநாயகன் ஆகக் கூடாது என்பது என்னுடைய கூற்று அல்ல. அதற்கான கதை அமையும் போது நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மக்கள் அவர்களைக் ஒரு நகைச்சுவையாளராகத்தான் அதிகம் ரசிக்கிறார்களே தவிர ஒரு கதையின் நாய்கனாக அல்ல. மேற்கூறிய எந்த நகைச்சுவையாளரும் அதற்கு விதிவிலக்கல்ல. கவுண்டர் முதல் சந்தானம் வரை அத்தனை பேருக்கும் அதே ஆசை இருந்தது. நடித்தனர். ஆனால் அந்த ஆசையிலிருந்து மீண்டு தன்னிலை திரும்புவதில்தான் இருக்கிறது சிக்கல். கவுண்டருக்கும் சரி வடிவேலுவுக்கும் சரி கதாநாயகனாக நடித்த பின்னர் மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து மீண்டும் நகைச்சுவையாளராக நடிக்க சிக்கல் இருக்கவில்லை. ஆனால் சந்தானத்திற்கு அது மிகவும் சிரமமே... 
 
இப்போது நம் பதிவு சந்தானத்தையே ஏன் குறிவைக்கிறது என்றால், இவ்வளவு பிச்சனைகளும் அவர் ஒருவரால்தான். அவர் எப்பொழுதும் போல நடித்துக் கொண்டிருந்தால் இப்படி புலம்புவதற்கு வேலையே இருந்திருக்காது. இப்பொழுது இருப்பவர்களில் பெரிய காமெடியன் யார் என்று பார்த்தல் சூரிதான் முதலில் ஞாபகம் வருகிறார் (நிலமை அப்டி ஆகிப்போச்சு).
 
 அவருக்கு அடுத்தபடியாக சதீஷ் (கஷ்டகாலம்) இதற்கடுத்தாற்போல் கருணாகரன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சாமிநாதன் போன்ற பார்ட் டைம் காமெடியர்கள் ராஜ்ஜியம் தான் இப்பொழுது தமிழ் சினிமாவில். பத்தில் ஒரு படத்தில்தான் இவர்களின் காமெடி எடுபடுகிறது. 
 
மேலும் நகைச்சுவை வறட்சி என நம்மை உணர வைப்பதற்கு தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியும் புது இயக்குநர்களின் வருகையும் கூட ஒரு முக்கியக் காரணம் என்றே கூறலாம். மேலும் இப்பொழுது வரும் நகைச்சுவைகள் வெறும் வசனங்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. வெறும் வசனங்களைத் தாண்டி, காட்சி அமைப்புகளும் நகைச்சுவையாளர்களின் உடல் மொழிகளுமே ஒரு நகைச்சுவையின் வெற்றிக்கு மிக முக்கியம். அது தற்பொழுது இருக்கும் நகைச்சுவையாளர்களிடம் மிகவும் குறைவு.
 
 இளம் இயக்குநர்கள் அயல்நாட்டுப் படங்களின்பால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் படங்களில் black comedy வகைகளையே பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற black comedy கள் பெரும்பாலும் திரையரங்கில் பார்ப்பவர்களை மட்டுமே சிரிக்க வைக்கும். அதுவும் ஒரே ஒரு முறை. நமக்கு ஆதி முதல் இன்றுவரை பழக்கப்பட்டதும் விரும்புவதும் உடல் மொழிகளை அதிகம் உபயோகிக்கும் Slapstick வகை நகைச்சுவைகளே. நகைச்சுவைப் படங்களுக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே இன்று தடுமாறி நிற்கின்றனர். 
 
கவுண்டர், வடிவேலு மற்றும் சந்தானம் இவர்கள் அனைவருடைய அதிகபட்ச நகைச்சுவையை வெளிக்கொணர்ந்தவர் சுந்தர்.சி. அவர் நிலமையே இப்பொழுது டண்டனக்காவாகி இருக்கிறது. 
 
சூரியை வைத்துக்கொண்டு சுராஜ் என்னசெய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபு போன்றவர்களே தற்பொழுது ஓரளவு நம்பிக்கையைக் கொடுக்கிறார்கள். 
 
சந்தானத்தை தெரிவு செய்தவர்களின் அடுத்த தெரிவு தற்பொழுது ரோபோ ஷங்கர் அல்லது யோகி பாபு பக்கம் லேசாகத் திரும்பியிருக்கிறது. ஓரளவு திறமையுள்ளவர்களும் கூட. இவர்வகளை வைத்து எப்படியாவது தப்பித்துக்கொண்டால் தான் உண்டு. வெறும் பகுதிநேர பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு எப்படி ஒரு ஆட்டத்தில் ஜெயிப்பது கடினமோ அதேபோலத்தான் நகைச்சுவைப் படங்களில் ஜெயிக்கவும் பகுதிநேர நகைச்சுவையாளர்கள் மட்டுமின்றி மெயில் தல ஒன்று தேவைப்படுகிறது. விரைவில் ஒருவரை உருவாக்குங்கள்!

Sunday, 17 April 2016

நம்மையெல்லாம் அருமையா ஏமாற்றிய அறிவியலுக்கு எதிரான சினிமா மரணங்கள் பற்றிய தொகுப்பே இது

திரைப்படக்காட்சி ஒன்றில்.. ஒரு நபர் கூர்மையான கத்தியால் குத்தப்பட்டாலோ.. அல்லது ஒரு உயரமான மலையில் இருந்து கீழே விழுந்தாலோ.. அல்லது மிகவும் கொடுமையான விஷப்பாம்பு ஒன்றிடம் கடி வாங்கினாலோ... அடுத்தது என்ன நடக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும் - மரணம் தான்..!

சினிமாவில் ஏற்படும் மரணம் என்றாலே அது போலி தான் பொய் தான் அதுக்காக அறிவியலின் கீழ் சாத்தியமே இல்லாத ஒன்றை சாத்தியம் தான் என்பது போல் திரைப்படக் காட்சி அமைப்பது எவ்வளவு பெரிய ஏமாத்து வேலை..!? அப்படியாக, நம்மையெல்லாம் 'ரொம்ப அருமையா' அறிவியலுக்கு எதிரான சினிமா மரணங்கள் பற்றிய தொகுப்பே இது..!


ஏமாத்து வேலை நம்பர் #5 :

கொதிக்கும் எரிமலை குழம்பிற்குள் மூழ்கி சாவது..!

அறிவியல் உண்மை :

எரிமலை குழம்பு மரணம் தர வல்லமை யானது தான் அதில் சந்தேகமில்லை. அதற்காக நீச்சல் குளத்திற்குள் மூழ்குவது போல எரிமலை குழம்பிற்க்குள் எதுவும் மூழ்கிடாது என்பது தான் அறிவியல்..!

முதல் வேலை :

1,295 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து 2,282 டிகிரி வரை கொதிக்கும் எரிமலை லாவாவின் மேற்பரப்பானது எந்த விதமான மேற்ப்பரப்பையும் உடைக்கும் வெப்பநிலை கொண்டது. அதன் முதல் வேலை கொலை தான்..!

நடக்காத காரியம் :

எரிமலைக்குழம்பு குறைந்தது 100,000 மடங்கு பிசுபிசுப்புள்ள, தண்ணீரை விட மூன்று மடங்கு கனமானதாக மற்றும் அடர்த்தியானதாக இருக்கும். ஆகையால் அதுனுள் மனிதர் ஒருவர் மூழ்கி சாவது என்பது நடக்காத காரியம் ஆகும்.!

8jB6Bye.jpg

ஏமாத்து வேலை நம்பர் #4 :

மூச்சுதிணறவைத்து கொலை செய்யும் முறை..!

அறிவியல் உண்மை :

ஒரு நபரை மூச்சுதிணறவைக்கும் முறையானது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறை ஆகும். திரைப்பட காட்சிகளில் வருவது போல தலையணை ஒன்றை வைத்து-அழுத்தி ஒருவரை கொலை செய்து விட இயலாது.

எதிர்வினை :

அறிவியலின்கீழ் மூச்சடைக்கப்பட்ட பின்பு மனித உடல் ஆனது ஒரு எதிர்வினை போல தானாகவே நிர்பந்தமாக சுவாசிக்க தொடங்கும்.

மூளை :

இரத்தத்தில் ஆக்சிஜனை பயன்படுத்த மனித உடல் ஆனது 15 நொடிகள் எடுத்துக்கொள்ளும், பின்பு ஒரு நிமிடம் சுவாசம் தடை செய்யப்பட்டால் மூளை செல்கள் பாதிப்படையும், பின்பு மூளை மிகவும் மோசமாக பாதிப்படைய 3 நிமிடங்கள் தேவைப்படும்..!

அரிய நிகழ்வுகள் :

சுவாசம் இல்லாது 40 முதல் 60 நிமிடங்களுக்கு பின்பு கூட உயிர் பிழைத்த அரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்துள்ளது.

dvYE2dX.jpg

ஏமாத்து வேலை நம்பர் #3 :

சுறா ஒரு மனித வேட்டையாடி, சுறா மனிதர்களை தேடித்தேடி கடித்து கொல்லும்..!

அறிவியல் உண்மை :

நம்பினால் நம்புங்கள், உண்மையில் சுறாக்கள் மிகவும் கூச்சப் பிராணிகள் ஆகும். சொல்லப்போனால் மனிதர்களை சுறாக்கள் பின் தொடர்ந்து வந்து தாக்கி கடித்துக் கொல்லும் பிராணிகள் அல்ல..!

தொடர்பு :

பெரும்பாலான சுறா தாக்குதல் எல்லாம் சுறாக்கள் மக்களால் தூண்டப்படுவதாலேயே நிகழ்ந்துள்ளன. பிற பிராணிகளை போலவே தான் சுறாக்களும் மனிதர்களோடு தொடர்பு கொள்ள விழைகிறது என்ற கருத்தும் உண்டு..!

Tj7RXLF.jpg

ஏமாத்து வேலை நம்பர் #2 :

கிரேனடுகள் அதாவது கையெறி குண்டுகள் உடனடி மரணத்தை ஏற்படுத்தும்..!

அறிவியல் உண்மை :

கையெறி குண்டுகள் அதன் கில்லிங் ரேடியஸ் (Kiling Radius) என்ற எல்லைக்குள் இல்லாத வரையிலாக அது ஒன்றும் உங்களை உடனடியாக துண்டு துண்டாக சிதற வைத்து கொன்று விடாது. நூற்றுக்கணக்கான கிரேனட் வகைகளும் ஒவ்வொன்றிக்கும் தனிப்பட்ட கில்லிங் ரேடியஸ் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

scopXS5.jpg

ஏமாத்து வேலை நம்பர் #1 :

புதை மணல் ஆனது மனிதர்களை உள்ளே இழுத்து கொள்ளும்.!

அறிவியல் உண்மை :

நீச்சல் குளத்திற்குள் குதிப்பது போல நேராக தலையை முதலில் திணிக்காத பட்சத்தில் புதை மணலில் உங்களால் மூழ்கவே முடியாது.

அடர்த்தி :

எரிமைலை குழம்பை போலவே புதை மணலும் மனித உடலை விட மிகவும் அடர்த்தியாக இருப்பதால் மிஞ்சி மிஞ்சிப்போனால் அது உங்கள் இடுப்பு வரை உள்ளே இழுக்கும் அவ்வளவு தான்..!