பொதுவான நண்பர் ஒருவரது பார்ட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இளைஞரை
சந்திக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் அப்போது வாய்ப்பு
தேடிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட
முடியாது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். விளம்பர
ஜிங்கிள்ஸில் பிஸியும் கூட. ‘ரோஜா படத்துக்கு அவருக்குக் கிடைத்த சம்பளம்
25000. அதை மூன்று நாட்களில் விளம்பரத்துக்கு இசையமைத்து சம்பாதிக்கும்
நிலையில்தான் அவர் இருந்தார். இதை அவரே ஒரு பேட்டியில்
சொல்லியிருக்கிறார். அவரது லியோ காபி (என்ன ஒரு ஒற்றுமை. அதில்
நடித்திருந்தவர் அரவிந்த்சாமி!) விளம்பர ஜிங்கிள்ஸுக்காக , விளம்பர உலகில்
பெரும் பாராட்டுகள், விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானை வந்து சேர்ந்து கொண்டிருந்த
நேரம் அது.
மணிரத்னத்தை தனது ரெகார்டிங் ஸ்டூடியோவுக்கு அழைக்கிறார் ரஹ்மான்.
அவ்வளவு பெரிய டைரக்டர். வருவாரா என்று தெரியாது. ஆனால், வருகிறார்
மணிரத்னம். ஒன்றிரண்டு ட்யூன்களை வாசிக்கச் சொல்கிறார்.
“நான் அசந்துபோனேன். ஒரு கார்ஷெட்டை, ரெகார்டிங் ஸ்டூடியோவாக
மாற்றியிருந்தார் ரஹ்மான். இந்த இடத்தில் இருந்து இப்படி அசத்தலான
ட்யூன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரா என்று வியந்தேன். அத்தனை
வசீகரிக்கற இசைத்துணுக்குகளை அந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவில்லை”
என்கிறார் மணிரத்னம்.
“அந்த சமயம் நான் விளம்பரங்களுக்கெல்லாம் இசையமைத்துக் கொண்டிருந்த
காலம். அங்கே 100 ட்யூன் போட்டால், அவற்றிலிருந்து ஒன்றிரண்டுதான்
தேர்வாகும். ஆகவே நான் ஒரு ஜென் நிலையில்தான் இருந்தேன். அவருக்கு என்
ட்யூன்ஸ் பிடிக்குமா என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நடந்தது வேறு!”
-என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை.
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை
திருப்பூரில் பாளையக்காடு FC குடோனில் ஒரு
கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன் நான். ‘செகண்ட் ரயில்வே கேட்’
அருகே கவுண்டர் மெஸ் என்றொரு கடை இருந்தது. டோக்கன் வாங்கிக்கொண்டு
க்யூவில் அமர்ந்து, நம் வரிசை வரும்போதுதான் போய் சாப்பிட முடியும். அங்கே,
வெளியில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்துதான் இந்த வரிகளை முதன்முதலில்
கேட்டேன். சின்ன வயதிலிருந்தே பாடல்களின் பைத்தியமாக
இருந்தேன். இளையராஜாவின் தீவிர ரசிகனான (இன்றும்) எனக்கு, ‘இது ராஜா
ம்யூசிக் இல்லையே’ என்று தோன்றியது. போய்ப் பார்த்தபோது ‘ரோஜா’ கேசட்டைக்
காண்பித்தார் கடைக்காரர். பாலசந்தர் தயாரிப்பு. மணிரத்னம் படம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை.
இரண்டாம் இடையிசையில், கோலாட்டம் போல ஆரம்பித்து, ‘ஏலேலோ.. ஏலே.. ஏலேலோ’
அப்படி ஈர்த்தது. இந்தப் பாடலின் மூலம் தமிழர்களின் வீடெங்கும் தன்
இசையைப் படரவிட்ட ரஹ்மான், அதன்பின் அடைந்த உயரங்கள், இமயத்தைத் தாண்டிய
சிகரங்கள். “அந்தப் பாட்டைக் கேட்டதுமே அழுதுட்டேன். ஏன்னா, சினிமாவுக்குப்
போட்ட முதல் பாட்டில்லையா?” என்றார் அவரது அம்மா. படத்தின் தயாரிப்பாளர்,
கே.பாலசந்தர், இந்தப் பாடலைக் கேட்டதும் மணிரத்னத்தை அழைத்துச் சொன்னது ‘Its going To Be Song of The Decade". ஆனால் அந்தப் பாடலைப் பற்றி இரண்டு Decades கடந்தும் பேசிக் கொண்டிருக்கிறோம்.. பேசுவோம்.
என்னைக் கவர்ந்தது அந்தப் பாடலில் பல உண்டு. பல்லவி முடிந்ததும் தனியே
ஒலிக்க ஆரம்பிக்கும் வயலின், ஒரு இடத்தில் ‘சின்னச் சின்ன ஆசை’யைத்
தொடர்ந்து ஒலிக்கும் வயலின், அந்த ‘ஏலேலோ’க்களுக்கு இடையே ஒலிக்கும் வீணை,
‘மீன்பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’யைத் தொடர்ந்து ஒலிக்கும்
புல்லாங்குழல், மொத்தப்பாடலும் முடியும்போது ‘ஆசை!’ என்று சட்டென்று
முடியும் இடம் என்று நிறைய.
தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள இந்தக் கலைஞன், என்
போன்ற இசைப்ரியர்களிடம் நீட்டிய கோல்டன் விசிட்டிங் கார்ட் இந்தப் படத்தின்
பாடல்கள்!
ரஹ்மான் அப்போது செய்தது, இசையை விட ஒலித்தரத்தில் மேஜிக். துல்லிய
ஒலித்தரம் என்பது அவரது ஸ்பெஷாலிட்டி. 6 வயது முதல் அப்பாவுடன் ரெகார்டிங்
ஸ்டூடியோவுக்கு செல்வார் ரஹ்மான். 9 வயதில் தந்தை
இறந்துவிடுகிறார். ரஹ்மானுக்கு பள்ளிக் காலம்தொட்டே எலக்ட்ரானிக்,
கம்ப்யூட்டர் இவற்றின்மீது மோகம் அதிகம். அவை சார்ந்த துறைகள்மீதுதான்
ஆவல். ஆனால், தந்தை இறந்துவிட்டதால், ‘கொஞ்சம் இசை தெரியுமே
உனக்கு.. தெரிந்த தொழிலைச் செய்’ என்ற அன்னையின் கட்டளைப்படிதான் அவர்
இசைக்கூடங்களுக்குச் செல்கிறார். சின்னச் சின்ன ஆர்கஸ்ட்ரைசேஷன் வேலைகள்,
செய்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார். இசை சார்ந்த தொழில்நுட்ப அறிவை
வளர்த்துக் கொண்டே இருக்கிறார். அதனால் அவருக்கு Sounding மீது மிகப்பெரும்
அறிவும், ஆவலும் உண்டு.
ரோஜா இசையமைத்து பாடல்களெல்லாம் ஹிட் ஆனாலும், தியேட்டரில் அவற்றைக்
கேட்கும்போது மிகவும் மனம் தளர்ந்து போகிறார் ரஹ்மான். Sounds குறித்த
அறிவு வாய்க்கப்பெற்ற அவருக்கு, தியேட்டர்களின் ஒலித்தரம் ஏமாற்றமளித்தது.
“இப்படியா கேட்கும் தியேட்டர்களில்? இப்படியானால் நான் சினிமாவுக்கு
இசையமைக்க மாட்டேன்” என்கிறார். மணிரத்னம், சவுண்ட் இஞ்சினியர் ஸ்ரீதர்
இருவரும்தான் ‘இந்த நிலை மாறும்’ என்று நம்பிக்கையளித்தவர்கள். அதன்பிறகே
சமாதானமாகிறார்.
ரஹ்மானின் இந்த ‘சவுண்ட் க்வாலிட்டி கறார்த்தனம்’ பற்றி சவுண்ட்
இஞ்சினியர் ஸ்ரீதர் சொன்னது முக்கியமானது: “புல்லாங்குழலில் வரும் காற்று
மட்டும்தான் வேண்டும். அந்த ’Base' பாடலில் கேட்கக்கூடாது ” என்பாராம்.
கீழுள்ள வீடியோவில் 1.25ல் கேளுங்கள்.
பல்லவி முடிந்து, முதல் இடையிசையில் ‘லலலல லலலா’ எனும் பெண்குரலுக்கு
முன் வரும் புல்லாங்குழலிசையைக் கேட்டால் அது புரியும். அந்த ஷார்ப் -
துல்லியம் - ரஹ்மானிசம்! காதல் ரோஜாவே பாடலின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி,
சோகத்தை அத்தனை எளிமையாகக் கடத்துகிற மெட்டு. மனைவியைப் பிரிந்தவன்
ஏற்கெனவே பெரும் சோகத்தில் இருப்பான். அவன் சோகத்தை ராகங்களாகும்போது,
சிக்கல்களில்லாத எளிமை மிக முக்கியம் என்று ரஹ்மான் நினைத்திருக்க
வேண்டும். அத்தனை எளிய மெட்டு. (அதாவது கேட்பதற்கு. இசையமைக்க அல்ல!)
வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்றுபோ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்ததில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்துபோ
பாவையில்லை பாவை... தேவையென்ன தேவை...
ஜீவன்போன பின்னே.. சேவையென்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல்.. சொல்!
ஏமாற்றத்தையும் சோகத்தையும் இயலாமையையும் ஒருசேரக்கடத்துகிற
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். அத்தனை எளிமையாகவும் அழுத்தமாகவும்
அமைந்த வைரமுத்துவின் வரிகள் என்று அது ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்!
‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடலைப் பார்க்கும்போதெல்லாம்
எனக்கு ஒரு சந்தேகம் வரும். மதுபாலாவின் கண்களை மூடியிருக்கும் தன் கைகளை,
அரவிந்த்சாமி விடுவிக்கும் தருணத்திலிருந்து பாடல் தொடங்கும். அதன்பின் 10
நொடிகளுக்குப் பிறகு கண்ணாடி உடைவதைப் போன்ற ஒரு ஃப்யூஷன். அதன்பின்
மெலிதான கோரஸ். தொடர்ந்து வயலினின் ஒரு இழுப்பு. இதற்குப் பிறகுதான் ‘புது
வெள்ளை மழை’ என்று சுஜாதாவின் குரல் தொடங்கும். படத்தைக் காட்சி வடிவில்
பார்க்கும்போதெல்லாம், இந்த விஷுவல்ஸ்குப் பிறகு அமைத்த இசையோ என்று
தோன்றும். அந்த அளவுக்கு, காஷ்மீரின் அழகை மதுபாலா வியந்து பார்ப்பதை,
கண்ணை மூடி நாம் கேட்டாலும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இசையாகக்
கொடுத்திருப்பார் ரஹ்மான்.
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் சேராத பெண்நிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ
பாடல் முழுவதுமே ஒரு நேர்கோட்டில், ஒரே மாதிரியான ஒரு இசை பின் தொடர
ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘உந்தன் காதோடு யார் சொன்னது’ எனும் வரிகளில்
ஒரு அருவி விழுவதை உணரலாம்.
‘ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்’ இந்த ஆல்பத்தின் மற்ற
பாடல்களைவிட, குறைந்த அளவு பேசப்பட்ட பாடல். ஆனாலும் அதன்
ஆர்க்கஸ்ட்ரைசேஷன்.. அபாரம். பெரும்பாலும், பாடகர்களை வைத்தே - A cappella
பாணியில் பல இடங்களில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார். ஜுகல்பந்தி பாணியில்
தபேலாவும், ட்ரம்ஸும் போட்டிபோடும் இரண்டாம் இடையிசையும் டாப்.
ரோஜாவுக்குப் பின் ஒன்றிரண்டு படங்கள் வந்த புதிதில், பேட்டிகளில்
உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல் எது என்று ரஹ்மானிடம் கேட்கப்பட்டால்
‘தமிழா தமிழா’, ‘சின்னச் சின்ன ஆசை’ என்றுதான் டக்கென்று பதில் வரும்.
தாய் மண்ணே வணக்கம், செம்மொழிப் பாடல் என்று தொடங்கி ஆஸ்கர் பெற்றுத்
தந்த ஜெய்ஹோ வரை இந்த மாதிரியான ஜானர் பாடல்களில் தனி முத்திரை
பதிப்பதற்கான ஆரம்பப் புள்ளி இந்தப் பாடல் எனலாம்.
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னைக் காக்கும் இல்லையா
படத்தில் ஒரு ஆல் டைம் ஃபேவரைட் பாடலாக இந்தப் பாடல் அமைந்தது. ‘தமிழா
தமிழா’. பல்லவி, இடையிசை, சரணம் என்ற வகைக்குள் இதை அடக்க முடியாது.
ஹரிஹரனின் மென்குரலில் ‘தமிழா தமிழா’ என்று ஆறுதல் வரிகளோடு வரும் பாடலில்,
நாடி நரம்பை உசுப்பேற்றும் இசையும், ‘இம்மண்ணிலா பிளவென்பது?’ என்று
முறுக்கேற்றும் வரிகளுமாய்.. ஒரு புதிய அனுபவம் தந்தது இந்தப் பாடல்.
25 வருடங்களுக்கு முன், இதே ஆகஸ்ட் 15ல் வெளியான 'ரோஜா' படம் பல்வேறு
சாதனைகளைப் படைத்தது. மணிரத்னம் எனும் கலைஞனை இந்தியா முழுமைக்கும் கொண்டு
சேர்த்தது. இந்தியிலும் ரோஜா படமும், பாடல்களும் ஹிட்டடிக்க ஏ.ஆர்.ரஹ்மான்
அங்கும் பிரபலமானார். மூன்று இந்திப் படங்கள் ஒப்பந்தமாக அவற்றில் முதலில்
வெளியான ‘ரங்கீலா’ வடக்கத்தியவர்களைப் பித்துப் பிடிக்க வைத்தது.
அதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது ரோஜா தான்.
ரோஜா என்ற திரைப்படம்தான்... ரஹ்மானுக்கு ஃப்லிம்ஃபேர்
விருது, மாநில அரசின் விருது என்று துவங்கி தேசிய விருதுவரை பெற்றுத்
தந்தது. வைரமுத்துவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. மணிரத்னத்திற்கு
மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுத்தந்தது. அரவிந்த்சாமிக்கு
விருதைப் பெற்றுத் தந்தது. சரி... ரசிகர்களுக்கு?
ஏ.ஆர். ரஹ்மான் எனும் பெருங்கலைஞனை அடையாளம் காட்டியது! எத்தனை
கொடுத்தாலும் பத்தாத இசைப்ரியர்களெனும் யானைகளுக்கு ‘ரஹ்மானிசம்’ என்ற
மதம்பிடிக்க வைத்தது!
“வாழ்க்கை என்னும் நதி, மரணம் என்னும் கடலில் கலக்கும் வரை வெவ்வேறு திசைகளிலும் வெவ்வேறு மேடு பள்ளங்களிலும் ஓடவேண்டியிருக்கிறது.”
- நா.முத்துக்குமார்
நண்பர்களே... நான் இப்போது தரமணி ரயில்வே
ஸ்டேஷனில் நின்றுகொண்டிருக்கிறேன். இங்கு என் முன்னால் ஒரு ரயில் வண்டி
நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் `நா.முத்துக்குமார் எனும் பேரன்பு
எக்ஸ்ப்ரஸ்’ என எழுதப்பட்டிருக்கிறது. அந்த ரயில், ஓடிக் களைத்து நிற்கிறது
என்பது அதன் மெளனத்திலேயே உணர முடிகிறது. மெளனமாக இருப்பதால் அதன் பயண
இலக்கு என்னவென்பது யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அது இனிமேல் எங்கும்
பயணிக்காது என்ற உண்மை இங்கு உள்ள எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அந்த
ரயிலுக்கும்தான்! ஆனால், அந்த ரயிலுக்கு அதுகுறித்த எந்த வருத்தமும்
இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், இறப்பதற்கு முன்பே தன் இறப்பை அறிய
விரும்பி, அறிந்தும்கொண்ட ரயில் அது.
அது, தண்டவாளத்தில் ஓடக்கூடிய இரும்பு
ரயில் அல்ல; வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் மிதக்கும் பனித்துளிகளால் ஆன
கடலுக்குள் பயணிக்கும் விசேஷ ரயில். ஆனாலும், அந்த ரயில் மிகமிகச்
சாதாரணமாக இருந்தது. ஓடாத ரயில் சாதாரணமாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லைதான்.
ஆனால், இது அசுர வேகத்தில் ஓடும்போதுகூட இதேபோல்தான் இருந்தது. அந்த
ரயிலில் கூட்டம் கும்மியபோதும், எல்லோரும் அதைப் பார்த்து வியந்தபோதும்,
சிலாகித்தபோதும், அதில் இடம்பிடிக்க பலர் அடித்துக்கொண்டபோதும், அது தன்
பாதையை நோக்கி கவிதை கூவியபடி ஓடிக்கொண்டிருந்ததேயொழிய அது வேறு எதுவும்
செய்யவில்லை. எத்தனையோ மனிதர்களை எங்கெங்கோ கூட்டிச்சென்ற அந்த ரயிலில் ஏறி
பார்க்க, யாருக்குதான் ஆசை வராது? எனக்கும் வந்தது, ஏறினேன்.
முதல் பெட்டியில் ‘தூசிகள்’ என்றும்
கடைசிப் பெட்டியில் ‘பேரன்பின் ஆதி ஊற்று’ என்றும் எழுதப்பட்டிருந்ததை என்
கண்கள் கவனித்தன. `மனதில் உள்ள தூசிகளை எல்லாம் தட்டினால்தான் பேரன்பின்
ஆதி ஊற்றை அடைய முடியுமோ?' என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்.
ஓராயிரம் பாடல்கள் அந்த ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்க ஆரம்பித்தன.
காதல், சிநேகம், காமம், ஏக்கம், துரோகம் என இருக்கும் எல்லா உணர்வுகளையும்
எளிய வரிகளாக்கிச் செய்யப்பட்ட அந்தப் பாடல்களில் பேரன்பு
வழிந்துகொண்டிருந்தது. அந்த அன்பின் அழுத்தத்துக்குத் தாக்குப்பிடிக்க
முடியாமல் தத்தளித்தேன். திடீரென ஒரு விரல் ஒரே அழுத்தில் அந்தப்
பாடல்களை நிறுத்தியது. நிமிர்ந்து பார்த்தால் யாருமில்லை! ஏதோ ஒரு
பெட்டியிலிருந்து பெரும் சத்தம்... அந்தப் பெட்டியை நோக்கி ஓடினேன்.
‘அணிலாடும் முன்றில்’ என எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில், அம்மா,
அப்பா, அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன்,
தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப்பெண்கள், சித்தப்பா,
அண்ணி, மைத்துனன், மனைவி, மகன் என சகல உறவுகளின் பெயரிலும் தனித்தனி
அறைகள் இருந்தன.
தங்கை இல்லாதவன் என்கிற தவிப்பு எனக்கு
இயல்பிலேயே இருப்பதால், முதலில் `தங்கை' என எழுதப்பட்டிருந்த அறையைத்
திறந்தேன். “ஆஹா... அது எத்தனை அற்புதமான அறை! அதில் தங்கையின் சின்னச்
சின்ன அசைவுகளும் அத்தனை நுணுக்கமாக அல்லவா செதுக்கப்பட்டிருந்தது.
அண்ணன்மேல் தங்கைகொள்ளும் அன்பும் பாசமும் இத்தனை அலாதியானவையா? தங்கையுடன்
பிறக்காத அத்தனை அண்ணன்களும் துரதிர்ஷ்டசாலிகள் என்ற மெய் உணர்ந்த கணம்
அது. தங்கையின் அருமை பெருமைகளைச் சொல்லிவிட்டு, கடைசியில் கஷ்டப்பட்டுச்
சம்பாதித்து கல்யாணம் பண்ணித் தர மட்டுமா அக்காவும் தங்கையும்? அந்த அறை
கேட்ட ஒற்றைக் கேள்வி... அக்காவையும் தங்கையையும் சுமையாக நினைக்கும்
அண்ணன் தம்பிகளின் மனதை உலுக்கும் ஓராயிரம் கேள்விக்குச் சமம்.
அடுத்ததாக `அம்மா' என எழுதப்பட்ட அறையைத்
திறந்தேன். “மன்னிக்க... அந்த அனுபவத்தை என்னால் எழுத்தில் கொண்டுவர
முடியவில்லை. அங்கு பார்த்த அன்பின் எடை இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த
எடையையும்விட கூடுதலானது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல
முடியும்.
அடுத்ததாக `அப்பா' என்ற அறையைத்
திறந்தேன், “காலம் காலமாக ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாக்களின் முகம்,
அன்பு அப்பாக்களின் முகம், ஆசை அப்பாக்களின் முகம் அங்கு இருந்ததை என்னால்
உணர முடிந்தது. செத்துப்போன என் அப்பாவை ஒரு கணம் கும்பிட்டுக்கொண்டேன்.
அவருக்காக நான் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் அவரைப் பற்றிய அத்தனை
சித்திரங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையும் அங்கே எனக்குள்
முளைத்தது.
இப்படியாக, நான் எல்லா உறவுகளின் அறையும்
திறந்துப் பார்க்கப் பார்க்க வியந்துபோனேன். `அட... இது எதையுமே நாம்
உணரவில்லையே... ரசிக்கவில்லையே! என்ன வாழ்க்கை வாழ்கிறோம்? பணம்
சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட இந்த வாழ்க்கை, எத்தனை மோசமானது!
ரசனை இல்லாதது' என்பதும் `அப்படி வாழும் மனிதர்கள் முதுகெலும்பு இல்லாத
மனிதர்கள்' என்பதும் விளங்கிற்று. அந்த நொடி முதல் இருக்கும் உறவுகளின்
மீது தீராத பற்றும், இல்லாத உறவுகளின் மீது ஏக்கமும் பிறந்தது.
அணிலாடும் முன்றிலைப் பார்த்த பரவசத்தில்,
அடுத்தடுத்த பெட்டிகளைப் பார்க்க பேராவல்கொண்டேன்; துள்ளிக் குதித்து
ஓடினேன். “ `பட்டாம்பூச்சி விற்பவன்', `நியூட்டனின் மூன்றாம் விதி',
`குழந்தைகள் நிறைந்த வீடு', `அனா ஆவன்னா', `என்னைச் சந்திக்க கனவில் வராதே'
எனத் தங்கத்தால் ஆனா குட்டிக் குட்டி அறைகள் இருந்தன. ஒவ்வோர் அறையையும்
திறக்கும்போதுதான் தெரிந்தது, மேலே மட்டும்தான் தங்க முலாம்
பூசப்பட்டிருக்கிறது என்ற உண்மை. உள்ளே அத்தனை வேலைப்பாடுகளும் மயிலறகால்
செய்யப்படிருந்தன. பள்ளிக்கூடக் காதலிகள் அங்கே
சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள். தன் மனதில் உள்ள அழுக்கை தூர்வாராமல்
கிணற்றைத் தூர்வாரும் அப்பாவின் தவறு அங்கே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கீழ் வீட்டுக்காரனைத் தொல்லை செய்யும் மேல் வீட்டுக்காரனுக்குப் பாடம்
எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது, தன்னை காலம் முழுக்க தீண்டியவளின் பிரிவை
எண்ணி அழும் தையல் மெஷின்கள் அங்கு இருந்தன. கிழிந்து தேய்ந்துபோன சைக்கிள்
டயர், தான் கடந்து வந்த பாதைகளை காற்றோடுப் பேசிக்கொண்டிருக்கும்
அதிசயத்தை அங்கே பார்க்க முடிந்தது.
பிறந்த வீட்டை துறந்து புகுந்த வீட்டிற்கு
போகும் பெண்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் தவித்தார்கள். பனித்துளிகள்,
புற்களின் மீது தூங்கிக்கொண்டிருந்தன. இன்னும் இத்தியாதி... இத்தியாதி...
அவற்றை எல்லாவற்றையும் ஒருவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
‘பேரன்பின் ஆதி ஊற்றில்’ நனைந்ததால் எனக்கு அன்பின் நடுக்கம் தாங்கவில்லை.
அந்த ரயிலிலிருந்து குதிக்க ஆயத்தமானேன். “என் ப்ரிய நண்பா... பிணத்தை
எரித்துவிட்டு சுடுகாட்டிலிருந்து கிளம்புகிறவர்களிடம் சொல்வதைப்போல்
சொல்கிறேன். ‘திரும்பிப் பார்க்காமல் முன்னே நடந்து போ' ” என்றது ஒரு
குரல். அந்தக் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் திரும்பிப் பார்க்காமல்
முன்னே சென்று குதித்தேன். அந்த ஓராயிரம் பாடல்களும் மீண்டும் ஒன்றன் பின்
ஒன்றாக ரயிலுக்குள் ஒலிக்கும் சத்தம் கேட்டது.